சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (28)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24அத்தியாயம் 25அத்தியாயம் 26 |அத்தியாயம் 27

1996diary - img01

அத்தியாயம் 28

ஆபிதீன்

*

26.09.1996 வியாழன் இரவு.

‘என்னா மூஞ்சிலாம் ‘ச்செஹ்ரா’வா இக்கிது , மாப்புள மாதிரி?’ என்றார் மொம்மதுகாக்கா – சாயந்தரம். கிண்டல் செய்கிறாரா? அல்லது அவரையும் கம்பெனி இந்த மாதத்துடன் வேலையை விட்டு நிறுத்திவிட்டதில் முகத்தில் ‘கஹர்’ இறங்கியதால் மற்றவர்கள் தேஜஸ் உள்ளவர்களாகத் தெரிகிறார்களா? தௌலத்காக்காவின் பின்புலத்தில் இத்தனைநாள் (20 வருடங்கள்!) முக்தார் அப்பாஸில் ஓட்டி வந்தவர் அவர். கொஞ்சம் வேலையும் செய்திருக்கலாம்! அவர் செய்துவந்த வேலை , கம்பெனியில் நடக்கிற அத்தனை விஷயங்களையும் மருமகன் தௌலத்காக்கவிடம் ஒப்படைப்பதுதான். மற்றநேரங்களில் , மனிதர்களின் சாமான் கிளம்புவதற்கும் மனுஷிகளின் ‘மாச’ப் பிரச்னைகளுக்கும் ஹோமியோபதி மருந்து கொடுத்துக்கொண்டிருப்பார் அவர் – ஃபோனில்,. ‘மாலிக் அல் மவுத்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற அலிமம்ஜாராலேயே இத்தனைநாள் அவரை அகற்ற முடியவில்லை. ‘உஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை’என்பார் மேனேஜர் மொயீன்சாஹிப்.

மொம்மதுகாக்கா, தௌலத்காக்காவின் தாய்மாமன். ஆனால் மருமகன் தன் கம்பெனியில் அவரை வைத்துக் கொள்ளததற்குக் கூட இதே தகுதி காரணமாக இருக்கலாம். மொம்மதுகாக்கா வேலை போனதற்கு கவலைப்படும் ரகமும் அல்ல. எல்லாமே அவருக்கு இலவசமாக கிடைத்து வந்திருக்கிறது. ஊரில் வாங்கிப்போட்டிருக்கிற வீடுகளிலிருந்து மட்டுமே மாதவருமானம் 20000த்திற்கும் மேலிருக்கும். பிள்ளைகள் அத்தனைபேரும் ஃபிரான்ஸுக்குப் போய்விட்டார்கள்…

அவரிடம் இந்தக் கரளைகள் பற்றிச் சொல்லி மருந்து கேட்கலாமா என்று நினைப்பு வந்தது, முன்பெல்லாம் சில வலிகளைப் போக்கியிருக்கிறார்தான். ஆனால் கடந்த ஒரு வருடமாக – இந்தமுறை துபாய் வந்ததிலிருந்து – ஒரு வலிக்கும் போய் நிற்கவில்லை. ஆரோக்கியம் எனும் செல்வம் கிடைத்திருக்கிறது. இது ரியாலத்தால் வந்ததா என்றுதான் இப்போது குழப்பம்.. ரியாலத்தே செய்யாத எத்தனையோ மனிதர்களுக்கு வெற்றிகள், செல்வங்கள் வருகின்றனவே.. அதிசய சம்பவங்கள் தன் வாழ்வில் நடக்காத மனிதர்களும்தான் உண்டா? அவர்கள் பார்க்கத் தவறியிருக்கலாம். ஆனால் நடக்கிறது. ரியாலத் செய்யாமல் இருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாமோ?

நடப்பதெல்லாம் சர்க்காரால்தான் என்று நான் நம்புவது சரிதானா? துவைத்த சட்டையும், ஜிப் மூடிய பேண்ட்டும், சுத்தமாகத் துடைத்த ஷூவுமாக மொம்மதுகாக்கா ஒருநாள் வந்ததற்குக் கூட சர்க்கார் அல்லது ரியாலத்துதான் காரணமா? நாமாக நம்மை ஏமாற்றிக் கொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? நம்மை ஏமாற்றிக்கொள்வதுதான் உயர்வதற்கு வழியா? அப்படியானால் ரியாலத் செய்து வருவதாக ஏமாற்றிக்கொள்ளலாம்.. அந்த கற்பனையின் வலிமையாவது, கேட்டால் உடனே துஆவைக் ‘கபுல்’ஆக்கி வைக்கிற அல்லாவை என்னுள் உண்டாக்கட்டும்.. கேட்டால் மறுக்கிற அல்லாவும், கேட்டுக்கேட்டு கேட்டுக்கேட்டு பின் கொடுக்கிற அல்லாவும் எனக்கு வேண்டாம்.. ஒரு வருடம் முயற்சித்தாகிவிட்டது.. Astral Bodyயில் மட்டும்தான் முகம் கரளைகள் இல்லாமல் இருக்கிறது. கற்பனையில் சரியாக நான் பார்க்கவில்லையோ என்னவோ…

நாளை காலை ‘SS’ பண்ணும்போது நன்றாக கவனிக்க வேண்டும். எனது Astral Bodyயாகத் தெரிவது நான்தானா என்றும் பார்க்கவேண்டும்.. ஆனால் நாளை செய்ய வேண்டுமா? இந்த பயிற்சிகளையெல்லாம் தொடர்வதா வேண்டாமா? இல்லையா என்னுள்ளே ஈஸ்வரன்?

‘நாயனே நாயனே நாயனே யென்றும்
மாயனே மாயனே மாயனே யென்றும்
தூயனே தூயனே தூயனே யென்றும்
நேயனே நேயனேயென்று முனைத்தேடி
கத்திக்கத்தித் தொண்டையுங் கட்டிச்செத்தேனே…’ – குணங்குடியப்பா

சர்க்காரிடம் கேட்கவும் பயமாக இருந்தது. திட்டுவார்களோ?

கரளையில்தான் அல்லா இருக்கிறான் போலும்! என்னைவிட மனசில்லை.. ஆனால் எனக்கு அசிங்கம் பிடுங்கித் தின்கிறதே.. யாரிடம் பேசினலும் அவர்கள் அதையே உற்றுப்பார்ப்பதுபோலத் தெரிவதில் நெளியவேண்டி இருக்கிறதே.. என் மேலேயே அருவருப்பு வந்தது. அந மர்கஜ் உல் வஹி.. அந மர்கஜ் உல் இல்ஹாம்.. அந மர்கஜ் உல் கரளை…? அல்லாவே.. மொம்மதுகாக்காவிடம் கேட்கலாம்தான். ஆனால் ஒருமுறை அவர் தன் நண்பருக்கு வந்த மூலத்தைக் குணப்படுத்திய விதத்தைச் சொன்னது ஞாபகம் வருகிறது.

‘தம்பி.. இந்த வியாதிக்கு இன்ன மருந்துதாண்டு கர்ரெக்டா சொல்ல முடியாது. ‘சிஸ்டம்’ பார்க்கனும். மீராஹூசைண்டு நம்ம கூட்டாளி ஒத்தரு.. இங்கெதான் ‘SM எலக்ரானிக்ஸ்’லெ சேல்ஸ் மானேஜரா இந்தாரு. அவருக்கு ‘பைல்ஸ்’. நம்மகிட்டெ வந்தாரு. ஒரு மருந்தைத் தட்டிவுட்டேன். அஞ்சு வருஷமா கஷ்டப்பட்டு இந்திக்கிறாரு , நம்மள்ட்டெ சொல்லாம! நம்ம மருந்தை ஒரு வேளைதான், ஒரே வேளைதான் சாப்புட்டாரு.. குளோஸ்! சிரிக்காதீங்க, வியாதி பொய்டுச்சிங்கறேன். பாக்குற நேரம்லாம் ‘காக்கா ஒங்களுக்கு நான் எப்பவும் துஆ கேட்டுக்கிட்ட்டிக்கிறேன்’ம்பாரு.. திடீர்ண்டு மறுபடியும் வந்துடிச்சி அவருக்கு. துடிச்சிட்டாரு. நானும் என்னென்னமோ மருந்து கொடுத்து பாக்குறேன், போவலே. நேரா ஒருநாளு அவர் ஃப்ளாட்டுக்கு போயி ‘காட்டுங்க பட்டறை’யைண்டேன். காட்டுனாரு.. மலதுவாரத்த பாத்ததும்தான் எனக்கு வேற ஒரு ஐடியா வந்திச்சி..’

‘காக்கா…’

‘ச்சூ.. பைல்ஸுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மருந்தைக் கொடுத்தேன்!’

‘அட!’

‘ஆமா. வியாதி பொய்டுச்சி அவருக்கு ஒரேயடியா!’ – மொம்மதுகாக்காவுக்கு என்னைவிட ஆச்சரியம்.

அவரிடமா கேட்பது?! சொல்லமுடியாது, ரியாலத் புண்ணியத்தில் அதிசயம் நடக்கலாம். சொன்னேன். ஒருவருடமாக நான் அனுபவித்து வரும் வேதனையைச் சொன்னேன்.. என்ன இது அசிங்கம், மருந்து உண்டா, அல்லது இங்கேயே ஆபரேஷன் பண்ணிவிடவா?

சாட்டையடி பட்டாற்போல திடுக்கிட்டார். என்னையே ஒருகணம் உற்றுப்பார்த்தார். ‘வெடைக்கிறீங்களா என்னயெ?’ என்று கோபமாகக் கேட்டார். நான் எதிர்பார்க்காத கேள்வி. ‘இல்லெ காக்கா..’ என்று மறுத்தேன்.

‘என்னடா முகத்துலெ ரெண்டு கட்டியோட போனாரு ஊருக்கு. திரும்பி வரும்போது சுத்தமா அது இருந்த அடையாளமே தெரியலே..ஆபரேஷன் பண்ணுன மாதிரியும் தெரியலே..நம்மள்ட்டெ நோவு, நொடிண்டு ஒருநாள்கூட வரமாட்டேங்குறாருண்டு நான் நெனைச்சிக்கிட்டிக்கிறேன். நீம்பரு என்னாண்டா நானும் நாக்கூர்காரன்தாங்குறதை மறந்துட்டு வெடைக்கிறியும்!’

அதையே மொயீன்சாஹிபிடமும் சொன்னார் ஹிந்தியில். அவரோ ‘பாகல் ஹோகயா க்யா?’ என்று கேட்டார் என்னைப் பார்த்து. பைத்தியமா? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நான் டிரைவர் ரஜப்-ஐப் பார்த்தேன் குழப்பமாக. ‘த்தாய் மகஜ் கராபேங்?’ (மூளை வீணாயிடிச்சா?) என்றான் அவன். யாருக்கு?

மொயீன்சாஹிப் அமைதியாக என் அருகே வந்தார். என் வலதுகையைப் பிடித்து , ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்துப் பிடித்து , நெற்றிப்பொட்டின் இருபுறங்களும் படுமாறு வைத்து ஓரிருமுறை அழுத்தி உருட்டினார்.

வழுவழுவென்றிருந்தது எந்தப் புடைப்பும் இல்லாமல்!

haz1996diary - img - final-part1-with symbol0

(முற்றும்)

‘ஹயாத்’ பாக்கி இருந்தால் ‘சூஃபி 1997’ பிறகு வரும், இன்ஷா அல்லாஹ்.

குறிப்புகள் :

ச்செஹ்ரா – பிரகாசம்
கஹர் – கருமை பூசிய, பீடை
மாலிக் அல் மவுத் – மரணம் தரும் முதலாளி
உஸ்கோ பீச்சே தர்வாஜா அச்சாஹை – அவனது பின்புலம் நல்லா இருக்கு. (தர்வாஜா – கதவு)
ரியாலத் – (‘SS’) பயிற்சி
துஆ – பிரார்த்தனை
கபுல் – நிறைவேறுதல்
மர்கஜ் – மையம்
அந மர்கஜ் உல் வஹி.. – நான் வஹியின் மையம் (வஹி – இறைச்செய்தி)
அந மர்கஜ் உல் இல்ஹாம். – நான் அறிவின் மையம் (இல்ஹாம் – உதிப்பு)
வெடைப்பது – கிண்டல் செய்வது.


ஆன்மீகச் சூழலில் என்னை இழுத்துவிட்ட ஹமீதுஜாஃபர் நாநாவுக்கும் நண்பர் நாகூர் ரூமிக்கும், இருபது வருடங்களுக்கு மேலாக டைரியில் பொத்திவைத்த விசயங்களை ‘மௌத்தாப் போய்ட்டீங்கன்னா என்னா செய்றது, சீக்கிரம் வெளியிடுங்க’ என்று ஆவலுடன் (மௌத்துக்குத்தான்!) நச்சரித்த சீர்காழி சாதிக்கிற்கும், தொடர்ந்து வாசித்த ஓரிரு எழுத்தாளர்களுக்கும் (இதில் பிரியத்திற்குரிய கவிஞர் தாஜ்-ம் உண்டு!) , நன்றி!


இந்தத் தொடரை என் இரு குருமார்களான  ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களுக்கும் இஜட். ஜபருல்லா நாநாவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். இறையருள் நிறைக!

 

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (27)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24அத்தியாயம் 25அத்தியாயம் 26

அத்தியாயம் 27

ஆபிதீன்

*

நேற்றுடன் 53 வாரம்! இடையில் ஒரேயொரு முறை வெள்ளி செஷனை – அதுவும் ஊரில் – தவறவிட்டிருக்கிறேன். ஒரு வருடம் போதாதா புது உயிராய் பிறக்க? நான் சாதித்ததுதான் என்ன? அரிப்பை அடக்க முடிந்திருக்கிறது.. வலது கையில் மணிக்கட்டுக்கு சற்றுமேல் அரித்தது. உடனே சொறியப் போனவன் உற்றுப்பார்த்தேன். உன் நீளம் என்ன என்று கேட்டேன். இதை அளக்க ஸ்கேல் தேவைப்படுமா அல்லது தையல்காரன் கழுத்தில் உள்ள ‘டேப்’ போல வேண்டுமா அல்லது இதுவே அளவுபார்க்கும் கருவிதானா? இதை வைத்துக் கோடு போட முடியுமா? இதை எரிக்க முடியுமா, புகைக்க முடியுமா? இதை சுருட்டு, சிகரெட் போல குடிக்க இயலுமா? அல்லது இது ‘டவல்’ போன்றதா? முகம் துடைக்கலாம். இல்லை, இது கண்ணாடி. முன்பக்கம் முகம் பார்க்க, உள்ளே கூலிங்கிளாஸ். அல்லது இது டீத்தூள். இதைப்போட்டு வடிகட்டினால் வரும் வண்ணம் என்ன? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வண்ணம். எல்லை இல்லை, அல்லது வடிகட்டினால் வருவது ராமர்பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல். ‘புரட்சியாகவும் தெரிகிறது, மிரட்சியாகவும் தெரிகிறது. ஆனால் பெட்ரோலாக இருந்தால் வறட்சி இருக்காது’ என்றார் கலைஞர். திரட்சியான பேச்சு இந்த அரிப்பு. இதை மோதிரமாக போட்டுக்கொள்ளலாமா? அஸ்மாவுக்கு 10 பவுன் இந்த வருடத்திற்குள் வாங்குவது இயலாது போலிருக்கிறது. இதை அனுப்பிவிட வேண்டியதுதான். எல்லா ஸாஃப்ட்வேர்களின் முக்கியமான லாஜிக்கும் இதுதான். இது எந்த மொழியோ ஆனால் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானது. இதன் வயதென்ன? நரைமுடி தெரியவே இல்லையே. ஆனால் முகத்திலோ மூவாயிரம் கோடி சுருக்கங்கள் தெரிகின்றன. கண்ணோ பளபளவென்று குழந்தையினுடையதைப்போல் இருக்கிறது. இதற்கு பிடித்த உணவு என்ன? இதுவே உணவுதானா? ‘ஜாலூர்புராட்டா’வுக்கு தொட்டுத் தின்றால் நன்றாக இருக்குமா? பார்க்க ஒரு மர நாற்காலிமாதிரிகூட இருக்கிறது. ஆனால் தட்டி வழிக்கலாம். அந்தக்கால சபராளிகள் கொண்டுவரும் மெத்தைக் கோரைப்பாய் மாதிரி… அல்லது முஸல்லாவாக ஆக்கி தொழலாம். இதைப் போர்த்திக்கொள்ளவும் செய்யலாம். ஸ்கூட்டரை மூட உபயோகிக்கலாம். மழைக்கோட்டு மாதிரி மாற்றிக்கொள்ளலாம். இது ஏதாவது படித்திருக்கிறதா? இஞ்சினியரா டாக்டரா? ஆணா பெண்ணா? தொட்டால் எப்படி இருக்கும்? நுங்குமாதிரியா அல்லது மூக்குப்பீ மாதிரியா? இதன் இனம், மொழி என்ன? மூத்திரம் , பீ, கொட்டாவி. தும்மல் சுகங்கள் இதற்கு உண்டா? இது ஒரு பானமா? கோடி வருடங்கள் பூமியில் புதைக்கப்பட்ட ஷாம்பெய்ன்? இதை எறும்பு மொய்ப்பதுண்டா? இதை ஃப்ரேம் செய்து மாட்ட இயலுமா? இதன் மதம் என்ன? இது பழமென்றால் கசப்பா இனிப்பா? இதற்கு ஒளி உண்டா? டார்ச்லைட் போல ஒளிருமா அல்லது சிம்னிவிளக்கு மாதிரியா? சலவைக்கல்லாக வீட்டிற்கு உபயோகிக்க முடியுமா அல்லது கூரை ஓடாகவா? மழையில் கரையுமா? தடியா , ஒல்லியா? திரவமா , திடப்பொருளா? நீரில் மிதக்கும் இலையா, இலையின் நரம்பா? புதுக்கவிஞன் பாஷையில் , அரிப்புக்கு அரிக்குமா?

அதற்கு அரித்துவிட்டது; நின்று விட்டது! நான் இடதுகையில் மணிக்கட்டுக்கு போகச்சொன்னேன். போனது. இடதுகால் பாதத்தில் எனக்கிருக்கும் மச்சத்திற்குப் பக்கத்தில் போய் அரி. அரித்தது!

ஒரேயொரு முறைதான் இதுவரை சொன்னபேச்சைக் கேட்டிருக்கிறது. ஆனால் , பெரும் அரிப்பு என் கட்டுக்கு உட்பட்டு நிற்கிறது. உடல் இன்பம்.. புணர்ச்சி! இதுவரை ஆயிரத்தொரு முறை முட்டிமைதுனம் செய்திருப்பேன் –
ரியாலத் இல்லையென்றால். இப்போது என்னமோ அதில் நாட்டம் செல்லவில்லை. எப்போதாவது கனவு வந்து கசிய வைக்கும். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. வெளியேறுவது அவசியம் என்றால் வெளியேற்றப்படத்தான் வேண்டும். ஆனால் கனவில் அஸ்மா வரமாட்டாள்! அவளைத்தவிர உறவுகள் அத்தனைபேரும் வந்திருக்கிறார்கள்- நான் புணர, இறந்த பாட்டி உட்பட! ஆசைப்பட்டு வரவழைத்தது ஒரே ஒரு ஆள்தான். நடிகை வி.தயாஸ்ரீ. சக்கைப்போடு! M.F. ஹூசைனுக்கு மாதுரி தீட்சித் போல எனக்கு வி.தயாஸ்ரீ. கஜகாமினி! காமி, நீ! மற்றபடி உடம்பின் முறுக்கலுக்குப் பதில்சொல்ல கை, குறியைத் தடவ நீளும்போது எதுவோ வந்து என்னை தட்டிவிடுகிறது. எது சர்க்கார்?

எனது கோபம் எங்கே போனது? நான் கோபப்படுகிறேன் என்று நினைக்கிற நினைப்பில் பறந்து விடுகிறது. கோபத்தை அடக்க்குவதற்கு வழி சொல்லித்தர , நான் படித்த படிப்பிற்கும் அதைக் கொடுத்த பல்கலைக்கழகத்திற்கும் தெரியவில்லை. இந்த ரியாலத் செய்துவிட்டது. தன் கம்ப்யூட்டரை என்னிடம் விற்ற ஹலால்தீன் தனது நண்பன் ஹாஜாவுக்கு அது பதினைந்துநாள் வேண்டும் என்றான். எனக்கு கோபம் தலைக்கேறியது. மிக வசதியானவேலையில் இங்கே உள்ள ஹாஜாவுக்கு – என்னிடம் அவன் நண்பன் கம்ப்யூட்டரை விற்றுவிட்டான் என்று தெரிந்தும் கேட்பதில் கூச்சம் இருக்காதுதான். தன்னிடம் ஏற்கனவே இருந்த கம்ப்யூட்டரை வேறு விற்றுவிட்டான். அதுபோல நாலு கம்ப்யூட்டர்களை வாங்குமளவு வசதி இருந்தும் இப்படி கேட்கிற புத்திக்கு துணைபோக ஹலால்தீனுக்கும் என்ன கேடு வந்துவிட்டது?

‘ராத்திரி வந்து எடுத்துக்க சொல்லவா நானா?’

‘எடுத்துக்க சொல்’ – நான் வெறுப்பில் சொல்லிவிட்டு அமர்ந்தேன். சற்றுநேரத்தில் என் கோபத்தையும் வெறுப்பையும் பார்த்து சிரிப்பு வந்தது. நான் ஹாஜாவை நினைத்தேன். ‘ஹாஜா.. உனக்கு இது தேவைப்படாது. நீ வேறு வாங்கிக்கொள். இது நான் onewayயில் ஊர்போனால் பிழைக்க உதவியாக இருக்கும் என்று வாங்கியிருக்கிறேன். இது எனக்குத் தேவை’. ஹாஜா அன்று வரவில்லை. அடுத்தநாள் காலையில் ஹலால்தீனிடமிருந்து ஃபோன் வந்தது. ஹாஜாவுக்கு நேத்து கடுமையான வயித்து வலியாம். அவன் வேறு கம்ப்யூட்டரை ஏற்பாடு பண்ணிட்டானாம். ஏன் கோபப்படவேண்டும் நான்?!

ரியாலத் செய்ய இடைஞ்சலாயிருக்கிறார்கள் என்று பெரிய முதலாளியின் ஸ்க்ரேப் மற்றும் அதன் ஆட்களின் மீது கோபம் இருந்தது.; இவர்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டார்களா? போனவாரம் நகர்ந்துவிட்டார்கள். கோபம் என்றால் ஆங்காரமாய் வெடித்துக் கிளம்ப வேண்டியதில்லை. உள்ளுக்குள் கசங்க வேண்டும், கனலும் நெருப்பாக. போதும்! நினைத்தால் நடக்கும். லைபீரிய பஞ்சத்தைப் போக்க முடியாதென்றாலும் கூலித்தொழிலாளர்கள் அதிகம் இருக்கிற சோனாப்பூர் பகுதிக்கு மட்டும் ஏன் ஏ.சி இல்லாத பஸ்களை இந்த அரசு விடுகிறது என்று நினைத்தால் அடுத்த நாள் 13-ஆம் நம்பர் பஸ்கள் ஏ.சி கொண்டை வைத்துக்கொண்டு ஒய்யாரம் காட்டுகின்றன.

விழுந்து கிடக்கிற பழங்களெல்லாம் நான் கிளையை உலுப்பியதால் என்று நினைக்கிறேனா? அப்படித்தான் இருக்கும். இல்லையென்றால் இத்தனைநாள் நினைத்தும் சம்பளத்தில் ஒரு திர்ஹம் கூட ஏறவில்லையே.. சம்பளம் கிடைப்பதுதான் இப்போதைக்கு அதிகம் என்றா? தவிர ஒரு திர்ஹம் ஏற்றத்தில் என்னதான் புதிதாக சாதித்துவிட முடியும்? நாவப்பட்டினம் டாக்டரை பார்க்கப்போகும் அஸ்மா அப்போது தஞ்சாவூர் டாக்டரை பார்க்கப்போவாள் – டாக்ஸியில். பரக்கத் என்பது பொருளாதார பலம் மட்டுமேதானா? சோம்பேறித்தனம் போயிருக்கிறது. ஒத்திப்போடும் குணம் அகன்றிருக்கிறது. திடீர் திடீர் என்று ஆரம்பித்து அதிகபட்சம் 40 பக்கங்களுக்குள் அற்பாயுசில் முடிந்து , பிறகு பார்க்கலாம் என்று கிறுக்குகிற குறுநாவல்கள் போல அல்லாமல் விடாமல் எழுதிய இந்த டைரி உதாரணம்.

துபாயின் காக்காக்கள் பற்றியும், அன்பழகனுக்கு பதில் சொல்லும் விதமாகவும் எழுதிய ‘கேண்மை’யும் பாதியில் இன்னும் இருக்க , இது மட்டும் என்னை இருக்கவிடமாட்டேன் என்கிறது. பழைய சீடர்கள் பதியத் தவறியதை ‘SS’ சீடர்கள் நீக்கவேண்டும் என்ற சர்க்காரின் ஆசை காரணமாக இருக்கலாம். சர்க்கார் ஆசைப்பட்டால் நடக்கும். பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கு செய்கிற முயற்சி கூட அப்படித்தான். இதில் யாருக்கு ஆசை குறைச்சல்? சொல்லப்போனால் இதை முக்கியமான ஒன்றாக நினைத்து ஃபோகஸ் செய்து வந்திருக்கிறேன். என் முயற்சியில் தானும் புகுந்துகொண்ட செல்லாப்பாவின் அனாவசிய பரபரப்பு கெடுக்கிறதோ? அல்லது அது கிடைத்துத்தான் என்ன புது கொம்பு முளைத்துவிடப்போகிறது என்று சர்க்கார் நினைக்கிறார்களா? வெளிநாட்டுப் பிழைப்பே அவர்களுக்குப் பிடிக்காது. பிறந்த மண்ணிலேயே நிமிர்ந்து வாழ்ந்து காட்டவேண்டும்தான். புகப்போகும் எந்த நாடும் எந்த நேரமும் அந்நியர்களை விரட்டி அடிக்க முடியும். தாய்நாடே முஸ்லீம்கள் என்று மிரட்டி விரட்டுவதற்கு துணைபோகும்போது அந்நிய நாடு அவலம் நிறைந்ததுதானா?

நான் ஊரில்தான் பிழைப்பேன் என்று சர்க்கார் ஒருமுறை சொல்லியிருக்கிறார்கள். தொழில்செய்து பிழைப்பேன் என்றுதான்! தொழில் என்றால்? பீடி சுருட்டு கடையா? ‘SS’ சீடனா, போனால் போகிறது, அதில் ஹோல்சேல் கடை! எனக்கு வியாபாரத் திறமை இருக்கிறது என்று எப்படி கண்டு கொண்டார்கள்? அவர்களின் கஃபூர்ஷா தெரு புதுவீட்டுக்குப் போகும்போது நான் ஏதாவது வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று அஸ்மா அரித்ததில் ஒரு வால்-கிளாக் வாங்கிக் கொடுத்தேன். அழகான அஜந்தா குவார்ட்ஸ். நாவப்பட்டினத்தில் வாங்கினேன். விலையுயர்ந்ததை வாங்கிக்கொடுக்க ஆசைதான். பஜாரிலேயே சீக்கோ, சிட்டிஸன் என்று கிடைத்தது. ஆனால் பண நெருக்கடி அப்போது. அலார்ம் & தேதி இல்லாத சாதாரண வால்-கிளாக்-ஐ அவர்கள் கையில் கொடுத்துவிட்டு ,’இந்தியாவில் போடுகிற டிசைன்கள்தான் எவ்வளவு அழகு’ என்று வியாபாரி மாதிரி பேசியது அவர்களுக்கு என்மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவேண்டும். டிசைன் அழகுதான். ஆனால் ஓடாது! அவர்கள் அடுத்தநாள் அதைத்திருப்பிக்கொடுத்து பழுது பார்த்துவரச் சொன்னார்கள். பண்ணிக்கொடுத்துவிட்டு சொன்னேன்..” ஒண்ணுமில்லே சர்க்கார்.. மைனர் ரிப்பேர்தான்’

‘என்னவாம்?’

‘முள்ளு மட்டும்தான் நகரலே.. சரிபண்ணிக் கொடுத்தாரு கடைக்காரரு!’

சர்க்கார் தன்னை மறந்து சிரித்தார்கள். நான் நல்ல விற்பனையாளனாகவும் இருப்பேன் என்கிற Similarity கிடைத்துவிட்டது! ஊரில்தான் பிழைப்பேன் போலும்.. அதற்கு முதலீட்டுக்கு வேண்டிய பரக்கத்திற்கு பயிற்சி உதவியிருக்கிறதா? கடைசியாக கொடுத்த இஸ்முவில் வருகிற ‘சுபுஹானல்’ பரக்கத்தைக் குறிக்குமாம். அதுபோல 17 முறை வரவேண்டும். பிறகு நோன்பு வைக்கவேண்டும். அதற்குள் இறந்துபோனால்? வாழ்வு அபத்தங்கள் நிறைந்தது என்றுதான் பெரும்பெரும் தத்துவங்கள் சொல்கின்றனவே.. இறந்துபோனால்? மவுத்தே பரக்கத்துதான்! வேறொரு வழி இருக்கிறது. 07.06 to 06.09.1996 கேஸட்டில் சொல்கிறார்கள் – மை தயாரிக்கச் சொல்லி.

வெள்ளெருகு செடியின் வடக்குப்பக்கம் ஓடுகிற வேரைப்பிடித்துப் பிடுங்கி கொட்டாங்கச்சியில் எரியவிடவேண்டும். திரண்டுவரும் கரியை பச்சை விளக்கெண்ணெயில் குழைத்து வைத்து ‘வேலை’ செய்ய வேண்டும். சர்க்காருக்குத்தான் அந்த ‘வேலை’ செய்யத்தெரியும். சொல்லியும் கொடுக்கமாட்டார்கள். ‘இதெல்லாம் ‘யோக சித்தி புருடாக்கள்’ பண்ணுகிற மந்திரவாதிகள் வேலை. ரியாலத்தை மட்டும் கரெக்டா பண்ணுங்க போதும்!’ – ‘S’.

என் ரியாலத்தில் என்ன குறை? ரியாலத் பண்ணுவதற்கு இதைவிட சிறந்த அறை, இடம், ஊரில் கூட கிடைக்காது. இதற்கே பரக்கத் கிடைக்கவில்லையென்றால்? பண்ணும் ஆள் சரியில்லையோ? இந்த இடமும் இந்த வருடம் முடியும்வரைதான். அதற்குப்பிறகு கம்பெனி இருந்தால் (இன்ஷா அல்லாஹ்!) தங்குமிடம் கம்பெனி கொடுக்காது. பழைய துபாயின் சத்திர வாழ்க்கை. அதில் ரியாலத் பண்ணுவதைப் பற்றி நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ஏன், ஜெப்பார்நானா செய்யவில்லையா? துபாயிலாவது ‘SS’ கற்பனையில் 4 Bodyகள்தான் இருக்கின்றன. சௌதியாக இருந்தால் Police Body என்ற ஒன்று Astral Bodyயின் அருகிலேயே துப்பாக்கியை தூக்கிவைத்துக்கொண்டு நிற்கும். ஊரில் உள்ளவர்களுக்கு RSS Body அல்லது ஜிஹாத் Body அருகில் நிற்பதுபோல! இல்லை, நான் நினைக்கும் முறை சரியில்லை. இது சரியில்லையென்றால் சரியாக எப்படி நினைப்பது என்று சொல்லித்தரப்படவேயில்லை என்றாகிறது. பதியவில்லையோ? யார் குற்றம்? ‘ரொம்ப பேரு அறுந்துபோற காரணம் இதுதான். தெரியுது; நன்மை இருக்குண்டு தெரியுது; ஆனா எங்கே Cut ஆவுதுண்டு தெரியமாட்டேங்குது. சொல்லிக்கொடுத்த பாடத்தை சரியா விளங்கிக்கலே. விளங்கியதை பழக்கத்துக்கு கொண்டு வர்றதுதான் கஷ்டம்.’ – சர்க்கார் குரல் கேட்கிறது.

‘வாஹிதுசாபு பைத்தியக்கார ஆஸ்பத்திரி’யில் டாக்டர் உட்பட பைத்தியம்..! ஊரில் இப்போது ஏகப்பட்ட ‘நபிகள்’ இருக்க இந்த ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் பாரபைத்தியம்.. அவர்களுக்கு பிரச்னைகள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. How to..?

**

25.09.1996

‘How to?’ என்பது புரிந்திருந்தால் இத்தனை சீடர்கள்தான் சர்க்காருக்கு கிடைத்திருப்பார்களா? பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் வாழ்க்கையா அல்லது புரிந்துகொள்ளவா? அதிகம் புரிந்த சீடர்களும் இருந்திருக்கிறார்கள்தான். கமலக்கண்ணன். அதனாலேயே அவர் தான் ஈஸாநபியின் வாரிசு என்று வியாபாரம் பண்ண ஆரம்பித்து அடிவாங்கி இறந்துபோனார். ஆனாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது சீடர் ஒருவர் இப்போது அதே கஃபூர்ஷா தெருவில் ஈஸாநபி படத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். அதற்கும் தினம் கூடும் கூட்டம் குறையவில்லை. அவர் சர்க்காரைப்போல வாழ்க்கையைப்பற்றிப் பேசுகிறாரா அல்லது கற்பனையின் அவசியத்தை வலியுறுத்துகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் எதையேனும் சொல்லி கூட்டம் சேர்க்கமுடியும் என்று தெரிகிறது.

‘எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் சரி, நாமதான் தீர்க்கணும். அந்த How to?ஐ மட்டும் புரிஞ்சிக்கனும். ‘How to?’வைத் தேடனும், இல்லே, ‘How to?’ தானா வரும். ஆனா அப்ப ரிலாக்ஸ் ஆயிருக்கனும்’ என்கிற சர்க்காருக்கு தன் சொந்த மருமகன் தாவுதுகுட்டி, சம்பாதிக்க சிங்கப்பூர் போவதை தடுக்க முடியவில்லை. போனவனும் மூன்றே மாதத்திற்குள் விசா/வேலை பிரச்னைகளில் ஓடி வந்ததையும் தடுக்க முடியவில்லை. 1 1/4 லட்சரூபாய் இதற்கு செலவானதாகக் கேள்வி. வட்டலப்பத்தின் கதியை முன்பே புரிந்துகொள்ளும் சர்க்காருக்கு இது எப்படி தெரியாமல் போனது? வாழ்க்கை இனிப்பானதல்ல போலும். அதனால்தான் வியாபார வெற்றிக்கு யோசனை சொல்லும் அவர்களால் ஒரு சிறிய வியாபாரத்தைக்கூட தொடங்கமுடியவில்லையோ? ‘செல்வந்தனாவது எப்படி?’ என்று புத்தகம் போட்டு செல்வந்தனானவன் கதைதான். எந்தக் கற்பனையாளன் அச்சாக ஒரு முன்னோடியின் செயலைச் செய்து சாதிக்கிறான்? இருந்த பழையதை எடுத்து புதுவடிவம் தர ஒரு சக்தி அவனுக்கு உதவுகிறது. ஆனால் அவன் அந்த சக்தி உதவ தன்னைத் தயாராக வைத்திருக்கவேண்டும்? அதற்குத்தான் ரியாலத்தும் ’ஜம்’மும்? இதனால் என் பேச்சு, நடை, எண்ணம் எல்லாம் மாறிதான் இருக்கிறது. Instant Enlightenmentன்போது உயிரின் தளத்தை உள்ளே உணர்ந்து மனது பெருமிதப்படத்தான் செய்கிறது. ஆனால் இப்படியே இருந்தால் வளர்ச்சி வந்துவிடுமா? இப்போதுள்ள மனநிலையும் வளர்ச்சிக்கு அறிகுறிதானா?

‘வளர்ச்சி இருக்குண்டு சொல்றீங்க. என் கண்ணுக்கு தெரியலையே.. ‘லங்கோடு’க்குள்ளெ வச்சிருக்கீங்களோ வளர்ச்சியை? அதான் தெரியாம இருக்கு!’ என்கிற சர்க்காரின் கிண்டல் (24.05.1996 கேஸட்) நியாயமல்ல. முதலில், நான் ஜட்டி போடுபவன். அப்புறம் அது சுருங்கியிருக்கிறது – விசா பிரச்னைகளுள்ள அரபுநாட்டு சம்பாத்தியத்தில். இந்தத் தொல்லை இல்லாத பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கு முயற்சி செய்வதும் நிறைவேற மாட்டேன் என்கிறது. இந்தியமண் என்னை இருக்கவைக்க ஆசைகொள்கிறது போலும். மண்ணுக்கு இருக்கும் ஆசை மனைவி மக்களுக்கு இருக்கிறதா? அவர்களின் ஆசைகள் வலிமையானவை. அவர்களின் ஆசை நிறைவேற என் எண்ணத்தைக் கூராக்கவேண்டும்! ரியாலத் செய்வது அதற்கு உதவுகிறதா? இந்தக்கேள்விதான் ஏன் வருகிறது? நான் சர்க்காரையே சந்தேகிக்கிறேனா? Ciritical Faculty.. ‘ரொம்பபேரை கெடுக்குறது இதுதான்.. ஒரு வேலையைச் செய்யச்சொன்னா அதுலெ நன்மை இல்லாம சர்க்கார் கொடுக்கமாட்டாஹா ..ஏதோ நன்மை இருக்குதுண்டு நினைக்கிறதே தப்பு. அப்ப, நன்மை இருக்குற காரணத்துனாலெதான் நீங்க செய்யிறீங்க..!. உங்களுக்கு கொஞ்சம்கூட புரியாத , தீமையா தெரியிற , காரியத்தைச் சொன்னா செய்யமாட்டீங்க.. அப்ப எனக்கும் உங்களுக்குமிடையிலே Critical Faculty குறுக்கே வருது.. அது வரக்கூடாது. Permission அல்ல அது’ – ‘S’ (17-24.05.1996 கேஸட்).

மூளையைக் கழற்றி எறி!

‘நம்ம ரூட்டுலெ உங்களுக்குண்டு ஒரு மூளை இருக்கக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடனும். நான் சொல்றதை ஏத்துக்கனும்; அதுதான் ஈஸி உங்களுக்கு ‘ – ‘S’

ஆனால், அதுதான் ஈஸி என்று புரிந்துகொள்ளும் அளவாவது மூளை இருக்கவேண்டும். அதுபோதும். ‘கிருத்துவமான’ எண்ணங்கள் வராது.

‘வ மக்ரூ மக்ரன் வ மக்கர்னா மக்ரன் வஹூம் லா யஷ்உரூன்’ * (27 : 50)

alquran chap27ver50

. ஆனால் கிருத்துவமான எண்ணங்களிலும் அல்லா இருக்கிறானே.. அது சிவப்பு வண்ண அல்லா. அதை ஆரஞ்சு வண்ணமாக்கி பிறகு பச்சையாக மாற்றும் பொறுப்பு நம் கையில் உள்ளது. எண்ணத்தில் மாற்றம் வேண்டும். எண்ணம்தான் நடத்தி வைக்கிறது. அது பயிற்சியால் கூர்மையானதா துன்பத்தைச் சகித்ததால் உண்டாவதா அல்லது எதையும் பொருட்படுத்தாமல் நாம் வாழவேண்டும் என்கிற தீர்மானத்தால் வந்ததா என்று கேள்விகேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கண்ணதாசனின் வரிகளை ஒருமுறை மேற்கோள் காட்டினார்கள் சர்க்கார்.. ‘ஒரு படத்துலெ நாகேஷ் படிக்கிறான் ஒரு பாட்டு. ‘பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே’ண்டு. எழுதுனவன் தெரிஞ்சி எழுதுனானோ தெரியாம எழுதுனானோ , உண்மை அது!’ என்று. உண்மைதான். வானத்தில் பறக்கும்போது அந்தப் பாட்டு வரும். பூமியில் இருக்கும்போது சந்தேகம்தான் வரும். Spritual Lineஐ சொல்லிக் கொடுக்ககூடிய ஒரு கல்லூரி கட்ட வேண்டும், எல்லா சீடர்களும் சேர்ந்து ஒரு பெரிய – நாவப்பட்டினம் ’மாணிக்காஸ்’ மாதிரி நூறு மடங்கு பெரிய – சூப்பர் மார்க்கெட் நடத்த வேண்டும் – பங்கு போட்டு, மனோதத்துவ வழியில் மனித நோய்களை குணப்படுத்தும் ஆஸ்பத்திரிகளை எல்லா பகுதிகளிலும் கட்டி, சேவை செய்யவேண்டும் என்கிற சர்க்காரின் ஆசைகள் பூமியில் இருப்பவையாக இருக்க வேண்டும். நடக்கவில்லை! உடலை அந்தரத்தில் நிறுத்திக் காட்டுகிறேன் நேரம் வரட்டும் என்று 25 வருடங்களுக்கு முன்பு கூறியதுமாதிரி – கீரியும் பாம்பும் கடைசிவரை சண்டை போடாது! கூட்டம் கலையாமல் நின்று கொண்டிருக்கிறதோ என்னவோ? சந்தேகம் கூடாது. மூளையை தூக்கிப் போடு! ‘சர்புன் நியமத்’ என்கிற பெரும் சர்ப்பம் கொட்டிவிடும். கொட்டட்டும். இறப்பது விஷத்தாலா எண்ணத்தாலா? எண்ணக் குதிரை தறிகெட்டு ஓடுகிறது. அதன் பிடிவாத குணம் நான் சிறுபிள்ளையில் பள்ளிக்குப் போக முரண்டு பிடித்ததை ஞாபகப்படுத்துகிறது. அப்போது பெரியம்மா மகள் பஸ்ரியா லாத்தாதான் கிண்டலாக பாடுவாள். தாய் சொல்லச்சொல்ல மகன் பதில் கொடுத்துக்கொண்டே இருப்பான்.

‘உண்டா திண்டா பள்ளிக்குப் போடா மவனே’
‘பள்ளியெல்லாம் பாம்பா கிடக்குது தாயே’
‘பாம்படிக்க மட்டைக்குப் போடா மவனே’
‘மட்டையெல்லாம் பீயா கிடக்குது தாயே’ என்று போகும் அந்தப் பாட்டு.

பீ கழுவ தண்ணிக்குப் போய் , அதெல்லாம் மீனாய் நிறைந்திருக்க , வலைக்குப் போனால் அது பிய்ந்து கிடக்கும்.

எல்லாவற்றுக்கும் பதில் இருக்கிறது!

**

26.09.1996

இன்றிலிருந்து , ‘தேரா’ போய் வர ’வேன்’ கம்பெனி கொடுக்காது என்று பெரிய முதலாளி சொல்லிவிட்டார். அவரவர் காசில்தான் போய்வரவேண்டும். செலவைக் குறைக்கிறாராம். ஆனால் அதே பெட்ரோல் செலவுக்கான பணத்தை பலுச்சி டிரைவர் எடுத்துக்கொள்வது பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. கராமாவிலிருந்த கம்பெனியை வாடகை அதிகமென்று இத்தனை தூரத்திலுள்ள அவீருக்கு கொண்டுவந்து , அதைவிட கூடுதலாக வாடகை கொடுத்து , ஆஃபீஸ் ஆட்கள் வர, போக ’வேனும்’ டிரைவரும் உண்டு பண்ணிய மூளை! கப்பமரைக்கார் வேறு இன்றுடன் வேலைக்கு வரமாட்டார். குடும்பத்தோடு போகிறார் – ஃபேமிலி விசாவை புதுப்பிக்க முதலாளி ஒத்துழைக்காததால். விடுமுறை என்றுதான் அனுப்புகிறார்கள். ஆனால் அவரது டிக்கெட் பணத்தை Staff Advanceல் போட்டு வைக்க உத்தரவு. அரசின் பொதுமன்னிப்பு காரணமாக அவரது மனைவியின் OverStay , பெரும் அபராதத்திலிருந்து தப்பித்தது. அபராதம் என்று போட்டால் ‘RSS’ என்று பல்லைக் கடிக்கும் கப்பமரைக்கார் ராம்களையும் லால்களையும் கெஞ்சத் தயங்க மாட்டார். அவர்கள்தான் பாப்ரிமஸ்ஜித் பிரச்சனையில் பட்டான்களால் உதைபட்டும் , மத வித்யாஸம் பார்க்காது, டிக்கெட் எடுக்கக்கூட வழியில்லாத ஆயிரமாயிரம் இந்தியர்களுக்கு – இம்மாத முடிவிற்குள் வெளியேற – உதவிக் கொண்டிருக்கிறார்கள். You Save more at Lal’s..!

*

இன்னும் குதிரை தறிகெட்டுதான் ஓடுகிறது , பதில் கிடைக்காமல். ‘அழுக்கைத் துடைத்தனைத் தனைத்துமடி மீதுவைத்தும் புழுக்கைக் குணமெனக்கு போவதிலை..’! அரும்பும் விஷயத்தின் வலிமையைப் பொறுத்து அது கிடைக்கும் கால அவகாசம் இருக்கிறது என்பார்கள் சர்க்கார்.

பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பெரிதாக இருக்கலாம்.. முகத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக இருக்கிற இரு கரளைகளும் பெரிதா?

சௌதியில் இருந்தபோது வலது நெற்றிப்பொட்டில் ஒரு கரளை உண்டானது. பருக்கள் ஏராளமாய் வந்துபோகும் பாழாய்ப்போன முகம்தான் எனக்கு. ஆனால் இந்தக் கரளை ஒரு திரண்ட முடிச்சாய் இறுகி கறுப்பாய் புடைத்துக்கொண்டு நிற்கும். OneWayல் ஊர்போனபோது அதை ஆபரேஷன் செய்து அகற்றினேன். துபாய்க்கு வந்த பிறகு அதே இடத்திலும் இதற்குத் துணையாக இடது நெற்றிப்பொட்டிலும் கரளைகள் உண்டானது. மூன்று வருடத்திற்கு முன்பு ஊர்போனபோது மறு ஆபரேஷன். அப்போதெல்லாம் சர்க்கார் வீட்டிற்கு எப்போதாவது போய் வருவதுதான். ஆபரேஷன் செய்து, அகற்றாத துணிக்கட்டுடன் ஒருமுறை போனபோதுதான் அவர்கள் கேட்டார்கள், என்ன இது என்று. சொன்னேன். ‘அடடா.. ஓதியே குணப்படுத்தியிருக்கலாமே இதை ‘ என்றார்கள். அப்படியும் செய்யலாம் போலிருக்கிறது என்று அன்றுதான் தெரிந்தது. ஆனால் நம்பிக்கை வரவில்லை. முக்தார் அப்பாஸில் விசா மாற்றி, மறுபடி துபாய் வந்தபோது அச்சாய் அதே இடத்தில் மறு கரளைகள்..

பிளேடால்கூட நானாக அறுத்திருக்கிறேன் ஒரு கோடு போல. இரத்தமாய் கொஞ்சநேரம் சிரித்துவிட்டு மூடிக்கொள்ளும் அருவருப்பான முகங்கள் அவைகளுக்கு. மற்றபடி துபாயில் ஆரோக்கியத்திற்கு பஞ்சமில்லை… உடம்பைக் குறைக்கிறேன் என்று அல்-ஐய்ன் ரவுண்ட்-அபௌட் வரை தினம் இரவில் வாக்கிங்.. போகவர 6 கி.மீ.. தினம் மர அவுலியாக்கள் இருவரைப் பார்த்துவருவதும் சுவாரஸ்யம். துபாயில் எங்கும் அவுலியாக்கள் கிடையாது.. எல்லா அரபுநாடுகளையும் போல தர்ஹாக்கள் இல்லாத , இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்காத நாடுதான். ஆனால் இதனால் வியாபாரம் அதிகமாகிறதென்றால் துபாய் சிரத்தை எடுத்துக்கொள்ளும். (மர) அவுலியாக்கள், புல்டோசரைக் கொண்டு இடிக்கச் சொன்னாலும் நிறுத்தி விடுகிறார்களாம் – பாகிஸ்தானிகள் சிலபேர் சொன்னார்கள்.

சரியாக அந்த பெரிய வட்டத்தில் ஒருவர். அவரின் வலதுபுறம் ஒருவர். வியாழக்கிழமை இரவுகளில் கொஞ்சம் பாகிஸ்தானிகள் கூட்டம் இருக்கும். பச்சைப்போர்வை, பாத்திஹா, ஊதுபத்தி எனும் வழக்கமான சூழ்நிலைகள்.. ’Creek’ இலும் கண்ட்ரிகிளப்-இலும் ஏதேனும் இரவில் ஆடிக்கொண்டிருக்கிற ஆங்கிலேயர்களைப் பார்ப்பதுபோலவே அதையும் பார்த்துவிட்டு தொப்பலான வியர்வையுடன் வருவேன். என் உடம்பு அத்தனை குறைந்தது கூட மர அவுலியாக்களின் பார்வையாக இருக்கலாம்! இந்த முறை ஊர்போனபோது சர்க்காரே அசந்து போனார்கள். ஆனால் அத்தனை இளைத்தது என்னமோ போலிருக்கிறது என்று சொன்னார்கள். தான் வாங்கிவைத்திருந்த சைக்கிளிங் மெஷினை பார்க்கச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் உபயோகிப்பதில்லையாம். அதுகூட என்னவோ போலிருந்ததோ என்னவோ..

அஸ்மாவுக்கும் என்னவோபோல்தான் இருந்தது. என் இளைப்பும் அந்த கரளைகளும்.. மறுமுறை அறுக்கப்போகிறேன் என்று சொன்னேன் அவளிடம். ஆனால் உம்மா மட்டும் ‘ஆவு.. ஹதாப்புலெ.. ’பொட்டு’ கிட்டெ இக்கிது வாப்பா.. பண்ணிடாதே..’ என்று வழக்கம்போல பதறினார்கள். பதறினால்தான் தாய்க்கும் மற்றவர்களுக்கு வித்யாஸம் தெரியும். எதற்கும் சர்க்காரிடம் கேட்டுக்கொள்ளலாம், இப்போதுதான் செஷனுக்கெல்லாம் எல்லாம் போகிற சீடனாயிற்றே என்று கேட்டால், ‘பேசாம..இதை தடவி வாங்க’ என்று பச்சை பாசிப்பருப்பை ஓதிக்கொடுத்தார்கள். ஒரு மாதத்தில் பாசிப்பருப்புதான் காணாமல் போயிற்று. பிறகுதான் ஆலிவ் எண்ணெய் கொண்டுவரச்சொன்னார்கள். ஓதிக்கொடுத்தார்கள். மூன்று வேளையும் தடவிவர வேண்டும். ‘இதெல்லாம் கூடத் தேவையில்லை.. ரியாலத்தை மட்டும் வுடாம , கரெக்டா செஞ்சிட்டுவாங்க போதும்’ என்று சொல்லியே கொடுத்தார்கள். நான் அன்றிலிருந்து மறக்காமல் தடவி வந்தேன். அது சிறிய பாட்டில். துபாய் வந்தவுடன் நான் செய்த முதல்வேளை குறைந்திருந்த அந்த ஆலிவ் எண்ணெயை ஒரு பெரிய பாட்டில் வாங்கி அதோடு கலந்துகொண்டதுதான்.

ஒரு வருடத்திற்கும் மேலாக தடவி, வாரத்தில் ஒருநாள் இதற்காக பத்துநிமிடம் ஃபோகஸ் செய்து வந்தும் கரளைகளில் துளியும் மாற்றமில்லை.. என் எண்ணத்தில் வலிமை இல்லையா அல்லது எண்ணுகிறமாதிரி எண்ணவில்லையா? முக்கோணத்தின் கீழ்க்கோட்டை சரியாக நீட்டவில்லையா அல்லது முக்கோணமே பொய்யா?

(தொடரும்)

குறிப்புகள் :

முஸல்லா – தொழுகைக்கான விரிப்பு
ரியாலத் – (‘SS’) பயிற்சி
oneway – Exit
பரக்கத் – வளம்
இஸ்மு – மந்திரம்
மவுத் – இறப்பு
‘S’ – சர்க்கார்
ஜம் – ஒரு பயிற்சி
லாத்தா – அக்கா
அவுலியா – இறைநேசர், ஞானிகள்
ஹதாப்புலெ – ’ஆ!’ என்று அதிர்ச்சியாக கூறுவது (அதாபு – தொந்தரவு)

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (26)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24அத்தியாயம் 25

அத்தியாயம் 26

ஆபிதீன்

1996diary - img0113.09.1996 வெள்ளி ‘செஷன்’ முடிந்து:

இந்த செஷனில் சர்க்காரின் 09-10.02.95 கேஸட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் கேட்கும்போது புதுசாகத்தான் இருக்கிறது. இதற்கு , ஏற்கனவே கேட்டது மனதில் பதியவில்லை என்று சொல்லலாமா? இந்த டைரியிலேயே அதை Feb 13 to 16 தேதி போட்ட பக்கத்தில் (அத்தியாயம் 03) குறித்திருக்கிறேன்தான் – முக்கியமானவைகளை. குறிக்காதது , சர்க்காரின் பிழைக்கத் தெரியாத தன்மையைச் சொல்லும் சம்பவம்.

சர்க்காரிடம் பெட்ரோமாக்ஸ் லைட் ஒருவர் வாங்கிப்போயிருக்கிறார். போனவர் உடனே திரும்பியிருக்கிறார், அதில் முக்கியமான ஒரு ‘ஸ்க்ரூ’ இல்லையென்று. வழியில்தான் விழுந்திருக்கும். சர்க்கார் , ஒரு எமெர்ஜென்ஸி லைட்டை அவர் கையில் கொடுத்துத் தேடுங்கள் என்று சொல்ல அந்த கந்தூரி கூட்டத்தில் கீழே கிடந்த ‘ஸ்க்ரூ’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அற்புதம்தான். ஆனால் அருமையான வாய்ப்பை சர்க்காரே வீணடித்துவிட்டார்கள். எமெர்ஜென்ஸி லைட்டைக் கொண்டுபோனதும் – ஊரில் கரண்ட் கட் ஏற்பட்டு இருளில் மூழ்க – அவர் அந்த லைட்டின் உதவியால் கண்டுபிடித்தார் என்றால் , ‘இருட்டை உணரும் கராமத்’ கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். சர்க்காரே ‘எவ்ளோ பெரிய முட்டாள்தனத்தை நானும் செஞ்சேன் பாரு! ஹந்திரி லைட்லெ ஊரே தகதகண்டு இக்கிம்போது எமெர்ஜென்ஸி லைட்டை கொடுத்து வுடுறேன் நான்!’ என்கிறார்கள். கேட்டுக்கொண்டிருந்துவிட்டு , ‘ஜம்’ செய்துவிட்டு, சாப்பிடுவதற்கு தந்துரொட்டியை வாங்கப்போனேன். திரும்ப அறைக்கு வந்து கதவைத் திறக்க சாவியைத் தேடினால் சாவியை ஹோட்டலில் விட்டு வந்திருக்கிறேன்! தவறை உணர்ந்து திரும்ப எடுக்கப்போகும்போது , ரொட்டி போடும் சாச்சா ரொட்டியை எடுத்துக்கொடுத்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார், ‘இதெல்லாம் எங்கே பிழைக்கப்போகிறது?’ என்று. அவர் வலதுகையில் , மணிக்கட்டிலிருந்து புஜம் வரை , தீயில் எரிந்த தோல் காய்ந்து உரிந்து கொண்டிருந்தது. நாலு நாளைக்கு முன்பு ஏற்பட்டது அவருக்கு – கேஸ் சிலிண்டர் வெடித்து. குதா கா சுக்ர்!

கடவுளின் கவனக்குறைவு.. அல்லது கவனக்குறைவு இல்லாமல் மனிதனால் இருக்க முடியாதா?

*

அஸ்மாவுக்கு ஃபோன் பண்ணுவதற்காக இன்று அவீரிலேயே இருந்துவிட்டேன். மஸ்தான்மரைக்கான் ரூமில் இருந்த டெலிஃபோன் வேறு பெயரில் இருந்தது. தெரியாதவர்கள் வந்து உபயோகித்துவிட்டு காசுகொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று அவன் கம்ப்யூட்டர் பூட்டு போட்டுவிட்டான் – வேறு எண்ணை உபயோகித்து. அனைவரும் கெஞ்சவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தான். கெஞ்சலாம்தான். ஆனால் ஒருமாதம் கழித்து கொடுக்கிற வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி பண்ணுவது தவறு என்று பட்டது. அந்தப் பணத்தை இப்போதே செலவு செய்தால்தான் ‘பரக்கத்’ என்றும் பட்டது. பரக்கத்திற்காகத்தான் Etisalat இருக்கிறது! டெலிஃபோன் கார்டு வாங்கினாலும் அங்கங்கே உள்ள பூத்-ல் நின்று நேரத்தை விரயம் செய்ய இயலாது. ஆஃபீஸில் ‘ஓசி’யில் பண்ணுவதெல்லாம் கனவாகிப் போய்விட்டது. புதிதாக வந்திருக்கிற ப்ரீபைட் கார்டு வாங்க நினைத்தேன் நான் . ‘0’ திறந்திருக்காவிட்டாலும் எந்த ஃபோனிலும் பேசுகிற நவீன வசதி. நவீனம் அவீருக்கு வரலாமோ? நகரத்திலேயே Etisalat ஆஃபீஸில்தான் கிடைக்கிறது இப்போது. வெளியில் விற்றால் அந்த ‘கோட்’ஐ சுரண்டி உபயோகித்துவிட்டு மறுபடியும் கோட்டிங் செய்துவிடுகிறார்களாம் துபாய் விஞ்ஞானிகள். குலாம்காக்கா, ‘வாங்கி வருகிறேன்’ என்று முந்தாநாள் சொன்னார். நேற்றுமாலை கேட்டேன். ‘அட மறந்துட்டேன் தம்பி..’. என்ன இது.. நாளை ஃபோன் பேசவேண்டுமே , உண்டியலில் அனுப்பிய பத்தாயிரம் ரூபாய் கிடைத்த செய்தி தெரிய.. அப்புறம்.. தௌஃபீக்கிடம் பிள்ளைகளுக்கு கடப்பாசியும், இங்கிலீஷ் டாஃபியும் கொடுத்தனுப்பியதைச் சொல்லவேண்டுமே.. மற்ற நாளிலோ கட்டணம் அதிகம்.. என்று கசங்கிய அடுத்த நொடியில் அவர், தான் உபயோகித்து வைத்திருந்த கார்டைக் கொடுத்தார். இன்று அந்த நம்பரை -அது தரும் குறிப்புகளுடன் அடிக்க – வரவேற்று , 48 திர்ஹம் இருக்கிறது என்றது. பிள்ளைகளிடமிருந்து முத்தங்கள் வாங்கித் தந்தது. கேட்டால் கிடைக்கும்! பிள்ளைகளின் குரலும் சர்க்காரின் குரலும் ரிலாக்சேஷன் கொடுக்க வல்லவை.

*

(70களின் ஆரம்பத்தில் ‘S’ பேசிய) ‘ரிலாக்சேஷன்’ கேஸட் :

‘பொம்பளைய பொறுத்தவரைக்கும் – வயசு எவ்வளவும் இருக்கலாம் – ஜெனரலா 40கூட இருக்கலாம். இஹலை எடுத்துக்குங்க.. இஹ வயசு என்னா? அல்லது, சரி, இஹ 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருப்பாஹா? நரை, சுருக்கம் இருந்திருக்காது. குரல்லேயும் குணத்துலேயும் மாறுதல் இருந்திருக்கும். அப்பொ உள்ள அறிவும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். இஹலை படுக்க வச்சி, நாம வேலை செஞ்சி, மயக்க நிலையை உண்டாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கி கொண்டு போறோம்..! ‘இப்ப உங்களுக்கு வயசு அம்பது, நீங்க காலத்தை மறக்குறீங்க.. சூழலை மறக்குறீங்க, உங்க வயசை மறக்குறீங்க.. பெத்த அனுபவத்தை மறக்குறீங்க’ண்டு suggstion கொடுத்துட்டே வரும்போது தன்னையே மறந்து ஆஹாசமா பறக்குற மாதிரி உள்ள சூழ்நிலையிலே வருவாஹா.. ‘நீங்க வுடுற ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு வயசு குறையும்.. கரெக்டா 25 வயசு ஆனவுடனே நேச்சுரலா மூச்சு வுட்டுக்கிட்டே இரிப்பீங்க, வயசு குறையாது’. இப்படி சொல்லி 5 நிமிஷத்துக்குப் பிறகு நான் கூப்பிடுவேன் – இன்ஷா அல்லாஹ், நான் செஞ்சிகாட்டுறேன், அதுக்குள்ள சூழ்நிலை திரளட்டும், நான் ப்ரூஃப் பண்ணிக்காட்டுறேன் – அப்போ அஹட கற்பனையிலெ அஹல்ற வயசு இருபத்தஞ்சாச்சி.. அந்த கற்பனையை கலைக்கிற எந்த நெகடிவ் எண்ணமும் பூறவுடாத அளவுக்கு நான் தடுத்துடுறேன், completely under my control.. அஹல்ட்டெ , ‘இப்ப பேரு என்னா?’ண்டு கேட்டா ‘சாதிக்நிஷா’ண்டு 25 வருஷத்துக்கு முன்னாலெ பேசுன குரல்லெ பேசுவாஹா! அப்போ அஹ போடுற கையெழுத்தும் அந்த வருஷத்துலே போட்டதுதான்! இதுலெ ஆண்டவன்ற நியமத்தைப் பாருங்க..இங்கெதான் நாம பிரமிச்சிப்போயி – அது என்னான்னே தெரியமாட்டேங்குது – இவ்வளவு தூரம் அட்வான்ஸ சயின்ஸ் போயிருக்கு, ‘மார்க்கம்’ பிச்சிப் பிச்சி உதறித்தள்ளியிருக்குது, சூஃபிசம் அப்படியே கரைச்சுதான் ஊத்துது….- அந்த ரேங்குக்கு மனுஷனை கொண்டுபோன உடனேயே – அது என்னாண்டு விளக்க முடியாது, ஆனா இது நடக்குறது உண்மை , நான் நடத்திக்காட்டுறேன், ஆனா காரணம் கேட்காதீங்க. அது எப்படீண்டு மட்டும் கேட்காதீங்க. How? ‘கைஃப்?’ண்டு கேட்கக்கூடாது. மார்க்கத்தைப்பத்தி சொல்லுவாங்க, ‘பீ கைர ச்சூவ்வ ச்சரா, இத்திபா கர்னா’ம்பாஹா..’ ‘இத்திபா கர்னா’ண்டா பின்பற்றுவதுண்டு அர்த்தம். நம்மள்ற ‘இஸ்மாயில் தம்பி உருது’!..ஆடு ஓடுதாஹை! ஏன், எவிடென்ஸ் கேட்காம பின்பற்றனும்? அல்லாஹு மௌஜுதுன் பி கைரி கைஃபியத்தின். அல்லாஹு Kh)லிகுன் பி கைரி கைஃபியத்தின் – அல்லாஹுத்தாலா இருக்கிறான் , எப்படி என்று இல்லாமல்! ‘எப்படி’ என்ற விளக்கத்திற்கு அப்பாற்பட்ட ..without ‘கைஃப்’. ‘கைஃபியத்’துண்டா ‘எப்படி?’ங்குறது. விளக்க இயலாதது. ஆண்டவன் பாக்குறான், without eyes; கண்களில்லாமல்.

காரணம் என்னாண்டு கேட்டா.. இதுக்கு கேள்வி கேட்குறது ஈஸி, பதில் சொல்லப்பட்டா புரிய முடியாது நம்மளாலெ. பாலுலெ நெய் கலந்திருக்குண்டு சொன்னா ‘எப்படி?’ண்டு கேட்டா என்னா சொல்றது? நீங்க நெய்யை பார்த்ததே கிடையாது. குழந்தையிலேர்ந்தே பாலைத்தான் குடிச்சி அனுபவப்பட்டிருக்கீங்க. உங்களாலெ நெய்யை நம்ப முடியாது. ‘நெய்’ண்டு சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்பீங்க. இதுக்குத்தான் அறிவுலெ தரத்தைப் பிரிச்சாங்க. ஐனுல் யக்கீன், ஹக்குல் யக்கீன், இல்முல் யக்கீன்.. நான் ப்ரூவ் பண்ணிக்காட்டும்போது அது ‘நெய்’ண்டு நல்லா தெரியும். அற்புதம் நிகழுதுண்டு நல்லா தெரியும். எப்படிண்டு மட்டும் தயவு செஞ்சி கேட்காதீங்க. எப்படி நான் கணக்குபோடுறேண்டு கேட்டா நான் என்னா சொல்லுவேன்? கால்குலேட்டரைத் தட்டுறேன். என் உள்ளம் சொல்லுது. அதை நான் சொல்றேன். ‘எப்படி மாப்பிள்ளைட்டெ – எட்டணா கூட கேட்டதாலே – வந்த சண்டையை சொன்னீங்க?’ண்டு கேட்டா அதுக்கும் அதே பதில்தான்! எனக்கு சொல்லத் தெரியாது. எப்படியோ சொல்றேன். அந்த எப்படியோவைத்தான் உங்களுக்கு நான் உண்டாக்கப்போறேன். உங்களுக்கும் அது வரும். வந்தவுடனே , உங்களை ‘(இதெல்லாம்) எப்படி செய்யிறா?’ண்டு ஒத்தவன் கேட்டா நான் சொன்னமாதிரிதான் நீங்களும் சொல்வீங்க : ‘எப்படீண்டு தெரியாதுப்பா! I cannot explain it!’.

உங்களை 25 வயசுக்கு முன்னாடி கூட்டிட்டு போன உடனே ஒரு பேப்பரைக் கொடுத்து கையெழுத்து போடச் சொன்னா 25 வருஷத்துக்கு முன்னாலெ போட்ட அதே கையெழுத்தை நீங்க போடுவீங்க! இப்ப ஆயிரம் ரூவா தர்றேன், அதே கையெழுத்தை இப்ப consciousஆ இங்கெ போடுங்க. முடியாது. சரி, உங்களுக்கு வயசு முப்பது. உங்களை முப்பத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாலெ கொண்டுபோனா என்னா இருக்கும் அங்கே? வாப்பாட துளிக்கு நான் உங்களை கொண்டுபோனா நீங்க எப்படி இருப்பீங்க அங்கே? அங்கே நீங்க இருக்குறீங்க அப்படீங்குறேன்! பொறக்குறதுக்கு முந்தி! நீங்க பொறக்குறதுக்கு முந்தி இருந்தீங்க! நீங்க ஆண்டவன்ட்டெ கேட்டு , நான் வர்றேண்டுதான் வந்திருக்கீங்க. ‘அவன்’ உங்களை அனுப்பலே.. புடிச்சி தள்ளிவுட்டுட்டாண்டு நெனைச்சுக்காதீங்க. உலகத்துக்கு போறேண்டு ஆசைப்பட்டு கேட்டு கெஞ்சிக் கதறுனீங்க அவன்ட்டெ.. அவன் சொன்னான், ‘வாணாம்ப்பா..ரொம்ப சிக்கல், responsibility அதிகம்’டு. ‘ம்ம்.. போவத்தான் செய்வேன்’டு வம்பு பண்ணுனீங்க. ‘இல்லாத உலகத்திலேயே நீ இரு..இல்லை என்ற பொருளுடைய உலகத்துலேயே இரு. இருக்கும்பொருள் – ஜடப்பொருள்லெ – மாறாதே கண்ணு’ண்டதுக்கு நீங்க காக்கா புடிச்சீங்க!. ‘சரி, தொலை. எங்கே போறா?’ ‘இந்தியாவுக்கு’ ‘மரமா போறியா மட்டையா போறியா தண்ணியா போறியா?’ ‘நான் உயிரினமா போறேன்’ ‘கழுதையா போறியா, மாடா போறியா, பண்டியா போறியா?’ ‘மனுஷனா போறேன்’, ‘மனுஷண்டா.. யார்ற மகனா போறா?’ ‘யஹ்யா மரைக்கார்ட மகனா போறேன்’டு கேட்டு வந்திருக்கீங்க. அது நெனைப்பு வந்துடும்! அது நெனைப்பு வந்தா நீங்க ஆண்டவனை பார்த்தது ஞாபகம் வரும். ஆண்டவண்ட்டெ கொடுத்த வாக்குறுதி நெனைப்பு வரும். நீங்க வாக்குறுதியை மீறும்போதெல்லாம் நாம மீறுறோம்டு தெரியும், அப்பத்தான் தெரியும் ,பொம்பளைட்ட படுக்குறது மூத்திரத்தை விட மட்டமானதுண்டு. அதெ (பேரின்பத்தை) சுவைச்சிப் பாக்கணும். எனக்கு நம்பிக்கை இருக்கு’ – ‘S’

‘மஃரிபத்’ ரேங்குக்குக்கு போன உடனேயா?’ – மீராமெய்தீன்

‘இப்ப நான் சொன்ன ரேங்க். அது மஹரிபத் ரேங்க்-ஓ கத்தரிக்காய் ரேங்க்-ஓ! அதைப்பற்றி உங்களுக்கு கவலை இல்லே. இதுக்கெல்லாம் ரிலாக்சேஷன் இல்லாம, கற்பனை இல்லாம , நடக்கவே நடக்காது. Impossible, Completely Impossible. சரி, அப்ப சரியா முப்பதாவது வயசுல உங்களை வைக்கிம்போது , தாயோட வயித்துலேர்ந்து வெளிவரும்போது அங்கே ஜனங்க கூடி நிண்டது, ஜனங்க உங்களை பார்த்து கொஞ்சுறது, நீங்க ‘வீல்’ண்டு கத்துறது, மேலே பட்ட ஜில்லாப்பு காத்து உட்பட உங்களுக்கு நெனைப்பு வரும்! ஏன் இப்ப நெனைப்பில்லேண்டு கேட்டா ‘போனவாரம் வண்ணான் கடையிலெ போட்ட சட்டை எத்தனைண்டே உங்களுக்கு ஞாபகம் இல்லே! பகல்லெ உண்ட கறி ஞாபகம் இருக்க மாட்டேங்குது..! நாமதான் கழுதை போறமாதிரி பாத்துக்கிட்டே போறோமே..! திரும்பிப்பாக்குறதே இல்லை! அல்லாஹுத்தாலா , முன்னாலே கண்ணு வச்சிட்டான்லெ?! சாதாரண மெட்டீரியல் லைஃப்… அது மறந்து போவுது. அப்ப, நீங்க வரம் கேட்டு வர்றீங்க! பல எல்லையைத்தாண்டி வரும்போது சில அறிவுகள்லாம் உங்களுக்கு கிடைக்கிது. உம்மாட்டெ பாலு குடிக்கிறது எப்படிண்டு யாரும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலே. சப்புறது, சூப்புறது, உறிஞ்சிறது வேற வேறயில்லெ? அப்ப குழந்தைக்கு யாரு சொல்லிக்கொடுத்தா? அது பழைய அறிவு. அவன் ஒரு சங்கத்தினுடைய மெம்பர். வந்த குழந்தை யஹ்யா மரைக்கார்ட குழந்தை அல்ல. துப்பறியும் இலாகாவுலேர்ந்து வந்திருக்கான் அந்த கள்ளப்பய – ‘குவாகுவா’ண்டு கத்திக்கிட்டு! பெரிய நிர்வாகம் அது. பெரிய சிஸ்டம், பெரிய சபை அது. அங்கேர்ந்து வேற ஆளா வெளிவந்து இந்த உலகக் காத்து பட்டவுடனே ‘எங்கேர்ந்து வந்தோம்’ங்குறது மறந்து பொய்டுது.. தன்னை மறக்குறான் அவன். எப்ப தன்னை மறக்குறானோ அப்ப mind, blankஆ ஆயிடுது. எப்போ blank ஆவுதோ உலகத்து அறிவுலாம் பூற ஆரம்பிக்கிது. இதனாலெதான் மனுஷக்குழந்தை நடக்குறதுக்கு பத்து மாசமா ஆவுது. இல்லை, பதினைஞ்சி வருஷம் கூட ஆவுது. மீன்குஞ்சு, முட்டையிலேர்ந்து வெளிவந்த உடனேயே நீஞ்சும். குருவியைப் பாருங்க.. தத்திதத்தி முட்டையிலேர்ந்து வெளியே வரும். ‘குப்’புண்டு பறக்கும். பறக்கும்போது fully developed குருவியா, தேனீயா பறக்கும். அதனுடைய சிஸ்டமும் பொறுப்பும் ரொம்ப சிம்பிள். நமக்கு.. ரொம்ப ரொம்ப complicated. அதனாலெ , இவன் அசைவுகள் உட்பட படிக்கனும். நடக்குற முறையைக்கூட படிச்சுக்கனும். இன்னும் சொல்லப்போனா சுவாசிக்கிறது உட்பட அவன் படிச்சுக்கனும்ங்குற வேலை இருக்கு. அந்த சூழ்நிலை வந்தவுடனே இந்த சூழ்நிலைக்கு அட்ஜஸ்ட் பண்ணுறான் பாருங்க அவன். நடக்க வேண்டியிருக்கு. காலை ஆட்டி ஆட்டி டிரைனிங் எடுத்துக்குறான் , இந்த பொடிப்பய. உம்மாக்காரஹ சொல்றாஹா, ‘நரி மிரட்டுது.. நாய் மிரட்டுது’ண்டு! வேற வேலை இல்லை பாருங்க, நரிக்கும் நாய்க்கும்!? அவன் சிரிக்கிறான் – தன் சக்ஸஸ்-ஐ பார்த்து. நரி மிரட்டுதாம்! ஒரு ‘ஷாக்’ வருது. பயந்து அழுவுறான். பேய் பிசாசுண்டு வாஹிதுசாபுட்ட ஓதிப்பாக்க வருவாஹா. காரணம் தெரியாது! இப்ப நம்ம உலகத்துலே தராதரம், repelling force, ஏற்றத்தாழ்வு, attracting force மாதிரி அந்த உலகத்துலேயும் உண்டு. அந்த பொடியன் நம்மளைப் பாக்குறான். ‘இவன் யாரு? நம்ம இனத்தவனா அல்லவா?’ண்டு. நம்ம இனத்தவண்டு தெரிஞ்சா பாசத்தோடு பார்ப்பான். இல்லேண்டா முகத்தை திருப்பிக்கிட்டு அழுவான், பகைவண்டு நெனைச்சிக்கிட்டு. அப்ப குழந்தைங்குறது நம்மள்ட்டெ உள்ள அறிவோட மிகப்பெரிய அறிவோடு வந்திக்கிது. அந்த அறிவை கெட்டுப்போகாம உலகத்துலெ யூஸ் பண்ணுற பாதைதான் ஞானம்ங்குறது. நாம என்னா செய்யிறோம்? அந்த அறிவை அப்படியே அழிச்சி மண்ணாக்கிட்டு, அந்த மெமரியை தரைமட்டமாக்கிப்புட்டு , ஷேக்ஸ்பியர் எடுத்த வாந்தி, பெர்னார்ட்ஷாவுடைய வாந்தி, ‘இஸ்மாயில் தம்பி’ எழுதின புத்தகம்.. ஹூம்ம்.. மூளை மண்ணாயிடுது!. இஞ்ஜினியர் ஆவுறான்! அட, இஞ்ஜினியர் Lineக்கே வித்து அங்கேதானப்பா இருக்கு! இஞ்ஜினியர் ஃபோர்ஸ் அங்கேர்ந்துதானேப்பா வருது! நீ மனம் வச்சா, Pastலெ போக உனக்கு துணிச்சல் இருந்தா, உலகத்துலே எத்தனை இஞ்ஜினியர் மூளை இருக்கோ எல்லா மூளையையும் காண்டாக்ட் பண்ண முடியுமே!

அப்ப, முப்பது வயசான உங்களை முப்பத்திரெண்டு வருஷத்துக்கு முந்தி கூட்டிட்டிப்போவும்போது தெரியும், நீங்க துளியா வெறும் தண்ணியா இல்லே.. உயிரணுக்கள் கோடிகோடி அணுவுலெ நீங்க இல்லே.. அதுலெ ஒரு அணுதானே வெளி வந்திருக்கு? ஒரு அணுவுலேர்ந்து வந்த நீங்கதானே? அந்த ஒரு அணுவுக்கு உயிர் இருந்திச்சி.. இயக்கம் இருந்திச்சி..அது உங்க வாப்பாட்டெ உள்ளது. அப்ப இதெ அஹ வாப்பாக்கு கொண்டு போங்க, பாட்டனாக்கு போங்க. இப்படியே ஆதம் லைஹிவஸ்ஸலாத்துக்குப் போவுது.. அதுக்குப் பிறகு எங்கே போவுது அபுபக்கரே?’

‘… …. …. ‘

‘ஆனா.. அப்படி சொல்லக்கூடாது. தாடிக்காரனுவ இக்கிறானுவ, பயமாயிருக்குது! அப்ப என்னா அர்த்தமாச்சிண்டு கேட்டா மேலே போகப்போகப்போக இதனுடைய ஜடத்தன்மை மாறி Pure உயிர், Pure ரூஹானியத் வர ஆரம்பிக்கிம். தெய்வீகத்தோட சொட்டு நீங்க! மனுஷனா இங்கெ வந்து இருக்கீங்க. தெய்வச்சொட்டுதான் நீங்க. எனவே , நீங்க தோல்வியடைஞ்சீங்க… அரக்கன்டு அர்த்தம்! யூஸ் பண்ணி வளர்ந்துடனும். வளர்ந்து காட்டணும். வளர்ந்துதான் தீரனும். சங்கடப்பட்டு உதவி கேக்குறீங்களா? ‘வா..கண்ணே..’ண்டு ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு கூப்புட்டுக்கிட்டிக்கிறான் ஆண்டவன். வெளிலேர்ந்தா கூப்புடுவான்? உள்ளேர்ந்து கூப்புடுவான். அப்ப நீங்க வேற அல்ல, நான் வேற அல்லண்டு புரிய ஆரம்பிக்கிம். கடல் வேறல்ல, தண்ணி வேறல்ல. தவக்களை வேறல்ல, பாம்பு வேறல்ல.. ஒரே வார்த்தையில சொன்னா.. ஆண் வேறல்ல, பெண் வேறல்லண்டு தெரிய ஆரம்பிக்கிம். ஒரு தாய் குழந்தையை தூக்கி முச்சம் வுடுறாவோ அதுக்கும் புருஷன் பொண்டாட்டி உறவுக்கும் ஒண்ணும் வித்யாசம் இல்லே. ரெண்டும் ஒண்ணுதான். இதுலே சில உணர்வுகள் ஏற்படுது, அதுலே இல்லே. அவ்வளவுதான். நான் ஒருதரம் ரமலான்லெ நோன்பு புடிச்சிக்கிட்டு பைத்தியம் புடிச்சி இருந்தேன், சிகரெட் குடிக்காம. (நோன்பு தொறந்ததும்) சிகரெட்டை முச்சம் வுட்டேன்! என் லாத்தா கேட்டாஹா ‘ , லெவை சாபு.. என்னா இது? நாம குடிக்கிற பொருளு..நாத்தப் பொருளு..!’. அஹலுக்கு நாத்தம். எனக்கு இது லைலா மஜ்னுலெ! நான் முச்சம் வுட்டது என்னாண்டு எனக்குலெ தெரியும்! வெளங்குதா? எதுக்கு நான் சொல்ல வர்றேன்? மெமரி பவர் டெவலப்மெண்ட்டுண்டு சொன்னா எந்த ரேங்க்குக்கு டெவலப் பண்ண நெனைக்கிறீங்களோ அந்த அளவுக்கு டெவலப் பண்ணலாம். பண்ணனும்.’ – ‘S’

**

‘உங்க Body, அமைப்பு, constituion… அதுவே அல்லாஹ்தாண்டு நான் சொல்றேன். அதாவது , இவன் இப்ப ப்யூர் ரஹ்மானியத்தா இப்ப இல்லே. காரணம் காட்ட முடியுமா? அழகா சொல்லப்போனா , வெளி அறிவை பெத்ததுதான் ஆபத்துக்குக்கு காரணம். அப்ப நீங்க மறுபடியும் குழந்தையா மாறுங்க. இப்ப தெரியும் உங்களுக்கு, ‘மீர் குத்பி’னுடைய Author , ‘பையத்’ வாங்கும்போது, (அவர்) அறிவு புகைமூட்டமா வெளிலே போனதை இப்ப நெனைச்சிப் பார்த்தா காரணம் உங்களுக்கு இப்ப புரியும். பெத்த அறிவை இழக்கனும்டு நான் சொல்றதும் , எந்த அறிவையும் பெறாதே நான் சொல்றதைத்தான் கேட்கனும்டு சொல்றதும், குர்-ஆனைக்கூட நீ தொடாதேண்டு சொல்றதுக்கும் பொருள் என்னாண்டு இப்பதான் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இந்த அறிவு அனுபவ ஓட்டத்துலேதான் வரும். நாம வச்சிக்கிட்டிக்கிற லாஜிக், லைஃப் இல்லைண்டு எப்ப தெரியும்? இந்த லாஜிக்-ஐ வச்சி மோதி , லைஃப் வீணாப்போன உடனேதான் தெரியும். நான் ஷரீஅத்-துதான் லைஃபுண்டு நெனைச்சிக்கிட்டிருந்தது , லைஃப்லெ தோத்தபிறகுதான் புரிஞ்சிச்சி. ஷரீஅத்-ங்குறது வெறும் திரை. துத்திப்புக்கு மேலே போர்த்துன வெறும் போர்வை. போர்வைகூட அல்ல, போர்வைக்கு மேலே உள்ள பூப்பின்னல்தான் அது. தோத்தபிறகுதான் புரிஞ்சிச்சி. முன்னாடியே புரிஞ்சிரிந்தா என் லைஃப் வேறேயா இருந்திருக்கும். அதை நெனைச்சி நான் வேதனைப்படலே. ஆண்டவன் ஒவ்வொரு ஆளுக்கும் அறிவை ஒவ்வொரு பக்கத்துலே கொடுப்பான். அட, கொலைகாரனுக்கு – செயலை செஞ்சிட்டு ஒளிஞ்சிக்கிட்டிருந்த காரணத்துனாலேயே – ஞானம் பொறந்திருக்கு! ‘தஹியாகலிபியா’ எத்தனையோ கொலை செஞ்சாஹலாம். கடைசி கொலை செய்யும்போது ஒரு வார்த்தை எதிரி சொல்ல, ‘டக்’குண்டு ஞானம் பொறந்துடிச்சி!’ – ‘S’

*

‘அலம் யஃனீலில்லதீன ஆமனூ அன் தஹ்ஷஅ குலூபுஹூம் லி திக்ரில்லாஹ்..’ . ஈமான் கொண்டவர்களுக்கு, ஆண்டவனை நம்பினவர்களுக்கு, அவங்க இதயம் பயப்படுறதுக்கு இன்னுமா நேரம் வரலை? நேரம் இன்னும் வரலை?..(1) – குர்-ஆன் ஓதிக்கொண்டிருந்த பெண்ணின் குரலில் உள்ள ரஹ்மானியத், ஒரு திருடரின் ‘மசாலா’வைத் தட்டிவிட , திருடர் வந்தபக்கம் பார்த்து திரும்பி ஓடினாராம் காட்டுக்கு. இந்த பழைய வரலாற்றைச் சொன்ன சர்க்கார் புதுசும் சொல்கிறார்கள். கோயம்புத்தூர் ‘அமீன் ஆட்டோ’வில் ஒரு பிராமணர். ‘ஆர்மிச்சர்’ஐ தவறாகப் போட்டிருக்கிறார். ‘ஐயா , கூடப்போட்டிருக்கீங்களே’ என்று வந்தவன் சொன்னானாம்.

‘அப்படிலாம் சொல்லாதீங்க. கடவுள் இங்கே இருக்கிறார்!’ – தன் நெஞ்சைத்தொட்டு சொன்னார் பிராமணர். கடவுளுக்கு நெருக்கமானவர்.

‘ஆமா..சரிதான். அங்கே இருக்காரு. இங்கேயும் இருக்காரு கடவுள். அந்த கடவுள், இந்த கடவுளை ஏமாத்தக்கூடாது’ என்றானாம் வியாபாரி.

*

‘Human Bodyங்குறது இறைவனுடைய ஒரு பகுதி. இதை ‘ஷரிஅத்’ ஒத்துக்கொள்ளூமோ ஒத்துக்கொள்ளாதோ.. உடல்லெ நாத்தம் வருதா, அதுக்கெல்லாம் காரணங்கள் வேறே. ‘பாக்கியத்சாலிஹாத்’துலெ நான் படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்திச்சி. இதெல்லாம் rareஆ இருக்குற காரணத்துனாலேயும் , விசித்திரமா இருக்கிற காரணத்துனாலேயும் , லைஃப்லெ அன்றாடம் நடக்குற காரியமா இல்லாததுனாலேயும் – நான் சொல்லும்போது – ‘சர்க்கார் சித்தரிச்சிப் பேசுறாஹா’ங்குற மாதிரி நீங்க நெனைக்க வாய்ப்பிருக்கு. இருந்தும்கூட நான் சொல்றேன்..

என் உஸ்தாது கறி வாங்கிக் கொடுத்தாஹா. அஹ வூட்டுலெ கொடுக்க போய்க்கிட்டிக்கிறேன். வழிலெ ஒரு பைத்தியம் வழிச்சிக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு வெளிக்கிருந்துக்கிட்டிக்கிது. நான் மனசுக்குள்ளேயே அவனை ஏசிக்கிட்டுப்போய் திரும்பிப் பாக்குறேன். பேண்ட பீயை எடுத்து சுவத்துலெ தடவிக்கிட்டிக்கிறான் அந்த ஆளு! அந்த ஆளை – இங்கிலீஷ்லெ ‘He’ண்டு சொல்லி தப்பிச்சிக்கிட்டு போய்டலாம் – தமிழ்லெ ‘அவன்’டு சொல்றதா ‘அவர்’ண்டு சொல்றதா ‘அவங்க’ண்டு சொல்றதாண்டு புரியலே.. திரும்பி வரும்போது பாக்குறேன், ஒரு கூட்டமே நிக்கிது அந்த இடத்துலெ. எல்லோரும் மோந்து மோந்து பாக்குறாங்க. நானும் போயி மோந்து பாத்தேன். சந்தனவாசம் அடிக்கிது! இதெல்லாம் உங்க உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டாத்தான் நம்பிக்கை வரும். இல்லேண்டா (நாகூர் ஆண்டவர் சம்பந்தமான) ‘கன்ஜுல் கறாமத்’ மாதிரியிருக்கும்! நான் உஸ்தாதுகளைக் கேட்டேன். புக்ஹாக்கள், சட்ட நிபுணர்கள்ட்டெ கேட்டேன். ‘ஹதா மஹாருன் ஜித்தன்!’ண்டாஹா. அப்படீண்டா , Definitely impossible. ‘என்னா ஹஜ்ரத் Impossible? பேளுறது Impossibleஆ? பேண்டதை தடவுறது Impossibleஆ? சந்தனவாசம் அடிச்சது Impossibleஆ? இல்லெ, நான் மோந்து பாத்தது Impossibleஆ?’ அப்படீண்டு கேட்டேன். ‘அதெல்லாம் இல்லேப்பா.. அவன் தடவுனது வேற இடமா இருந்திருக்கும். சந்தனம் வேற ஆளு தடவுனதா இருக்கும்; அந்த இடத்தை நீ மோந்து பாத்திருப்பா’ ‘என்னா ஹஜ்ரத்.. இல்லவே இல்லை.. நான் accurateஆ பார்த்தேன். சரி, நான் தப்பா மோந்தேன்,. மத்தவங்கள்லாம் மோந்தாங்களே..?!’ ‘ஆயிரம் பேரு தப்பு செய்யிறதுனாலே ஒரு தப்பு உண்மையா மாறிடாதுப்பா. பொய் உண்மையாகாது’ண்டுட்டாஹா’

*

‘மதரஸால இருந்த பிள்ளையிலுவல்லெ என்ன மாதிரி இந்த மாதிரி டேஸ்ட் உள்ள புள்ளையிலுவ ரொம்ப rare.. மங்கலம் ஹஜ்ரத்துண்டு ஒரு ஆளு இருந்தாஹா. கெட்டிக்கார ஆளு. ஆனா கிளாஸ் நடக்கும்போது என்னெ பார்க்கவே மாட்டாஹா. எனக்கோ அழுகையும் ஆத்திரமும் அடைச்சிக்கிட்டு வருது, நம்ம திறமையை காட்ட முடியலையேண்டு! ஒரு வாட்டி அஹள்ட்டெ கெட்டேன். ‘என்னா ஹஜ்ரத்.. என்னய பாக்கவே மாட்டீங்களா?’

‘ஏன், சலாம் சொல்றா வரும்போதும் போவும்போதும். பதில் சலாம் நானும் சொல்றேனே?’

‘அதுசரி.. பாடம் நடத்தும்போது..’

‘பார்த்து உன்னட்ட சொல்லவேண்டிய அவசியமே இல்லப்பா. ‘ஜத்து’ உன்னெட்ட இருக்கு’

‘எந்த ‘ஜத்து’? ‘ஜத்து’ண்டா ‘பாட்டன்’டுலெ அர்த்தம்?’

‘அதுவும் அர்த்தம். ‘மணி’ண்டும் ஒரு அர்த்தம் இருக்கு. ‘மணி’ண்டா விந்து. விலாயத்தோட ‘ஜத்து’ உன்னெட்ட இருக்கு’

‘நான் ஹராமுலெ பொறந்திருந்தா இருக்குமா அது சர்க்கார்?’

‘இருக்காது’

‘நான் ஹராமுல பொறக்கலேண்டு உங்களுக்கு எப்படி தெரியும்?’

‘நான் மதிப்பு கொடுக்கும்போது ‘வாணாம்’டுட்டு நீ இப்படி கேக்குறே பாத்தியா? இதே ‘ஜத்து’ண்டு ப்ரூவ் பண்ணுது!’

கேஸட் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ், அடுத்த டைரியில்!

**

21.09.1996

நேற்று வெள்ளி Sessionல் 31-05 to 07.06.1996 பேசிய கேஸட் கேட்டுக் கொண்டிருந்தேன். அன்று காலையில்தான் ஜெப்பார்நானா புதிய கேஸட்கள் என்று இரண்டு கேஸட்களைக் கொடுத்தார். இது ஒன்று. இன்னொன்று, 07.06 to 06.09.1996 பேசிய பேச்சு. மூன்று மாதத்தில் ஒரே கேஸட்! சர்க்கார் வாயை மூடிக்கொண்டு விட்டார்கள். சீடர்களின் வளர்ச்சியினால் இருக்கலாமா? அப்படி இருக்காது. முந்தைய கேஸட்டில் ஏகமாய் திட்டு. சுன்னி, புண்டை அதிகமாய் இடம்பெற்ற கேஸட் அதுவாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கோ, சீடர்களை ஏசுவதற்கோ.. ஒருகட்டத்தில் அலுப்பும்தான் வந்துவிடுகிறது..

‘உலகத்துல அட்வைஸ்-ஐ யாரும் கேட்கமாட்டாங்க.. நாம சொல்ற அட்வைஸ்-ஐ அவங்க அட்வைஸ்-ஆ மாத்தி அவங்க அறிவாக மாத்துனாதான் பிராக்டிகலா வரும். அதனாலெ , அட்வைஸ் பன்ற மாதிரி முட்டாள்தனம் உலகத்துலே எதுவும் கிடையாது. வேலைமெனக் கெட்டவன் செய்யிற வேலை. இல்லே, அவுலியாக்கள் செய்யிற வேலை. உதைபடுறதுக்கு பெஸ்ட் வழி அதுதான்!’ – ‘S’

உடல் சரியில்லாத உறவினரை பார்க்கச்சென்று அட்வைஸ் பண்ணிய ரவூஃபுக்கு கொடுக்கிற அட்வைஸ் மட்டும்தானா இது?

‘SS’ பயிற்சியின்போது அவனது Astral Body , சினிமாப்பாட்டை ஒரு நொடி – ஒரு நொடிதான் – கேட்கிறது. ‘இருட்டு நேரத்துலெ ஊசியைக் கீழே போட்டுட்டு தேடுண்டு சொன்னா தேடிக்கிட்டிக்கிம்போதே ஒரு பாட்டு சத்தம் கேட்குது. கவனம் பொய்டுமா?’ – சுளீர்!

என் Astral Body கூட ஒரு நாள் பாட்டு பாடியது..! (‘காமோஸ் க்யூங் கடேஹோ..?’ – ஹரிஹரன்)

*

‘ஒரு காரியத்தினுடைய பெரிய நஷ்டத்தை நினைச்சி , லாபத்தை அதிகமா நெனைச்சா (நல்ல) ரிஸல்ட் தானா வரும். ரியாலத், ஒரு ரொடீன் வொர்க் ஆகக்கூடாது. எமோஷனல் உணர்ச்சி கலந்துதான் செய்யனும்’ – ‘S”

*

புதிய இஸ்முகள் : (30.08.1996 கொடுத்தது)

சுபுஹானல் அஜீஜூல் கரீம் சுபுஹானல் ஃபத்தாஹில் மத்தீன்
சுபுஹானல் ஹன்னானில் மன்னான் சுபுஹானல் வதூதில் ஹக்
சுபுஹானல் மலிக்கில் மாலிக் சுபுஹானர் ரஜ்ஜாக்கில் முபீன்
யக் ஃபிர்ளி வர்ஹம்னி யா முஜீபத்தஃவாத்
யா முனீரல் ஆலமீன் யாஹக் யா முபீன் ( 31 Times / ‘ரியாலத்’ அதே)

*

‘நான் தூங்கினேன், நான் கனவு கண்டேன், நான் வழுக்கி வுழுந்துட்டேன், நான் காசை தவறவுட்டுட்டேன்..! இது நமக்கு சம்பந்தம் இல்லே. நாம தூங்கலே. தூக்கம் தானா நம்மை ஆட்கொள்ளுது. கனவு தானா வருது. தானா வழுக்குறதுனாலே வுழுவுறமாதிரி வருது. கைய வுட்டு காசு தானா தவறுது. அதையெல்லாம் நாம நாமண்டு சொல்றதுனாலே நாம எதையெல்லாம் செய்யலையோ அதையெல்லாம் நாம செய்யிறதா சொல்லிக்கிட்டிக்கிறோம். நாம சொல்றோமோ, ‘நான் வேர்த்துப்புட்டேன்’டு?!’ – ‘S’

*

‘புதிய இஸ்மு (30.08.1996) கொடுத்ததுதான் 06.09.1996 அன்றும். ஆனால் பயிற்சியில் மாற்றம். எண்ணிக்கை 41.

பயிற்சி : சென்ற Stageகளில் PBயுடன் , EB, IB merge ஆனது. இப்போது இல்லை. அதற்குப்பதிலாக PB கற்பனையில் இஸ்மு ஓதிவிட்டு படுத்ததும் AB 10 அடிக்கு உயரே நிற்பதாக கற்பனை பண்ண வேண்டும். AB, PBயின் நெற்றியிலிருந்து கால்வரை பார்த்து வரவர milky white colorல் இருக்கும் PB, Scarlet Redல் மாறிவரும் (Mixing white with scarlet Red). பிறகு மீண்டும் AB, PBயின் நெற்றியிலிருந்து பார்த்து கால்வரை வரும்போது PB, skyblue colorஆக மாறும். பிறகு PB, dark blueஆக மாறும். இங்கு ABயிலிருந்து PBக்கு Silver Chord Form ஆகும். பிறகு AB, தன் எதிரே உருவான Triangleஐ (Symbol) இஸ்மு ஓதிக்கொண்டே பார்த்து வந்தபிறகு PBயுடன் mergeஆகிறது. இப்போது PB மீண்டும் Milky white colorஆக மாறி இஸ்மு ஓதும் , பழையபடி உட்கார்ந்து. மற்றவை வழக்கம்போல’ . – கவுஸ்மெய்தீனின் கடிதம். 13.09.1996ல் கொடுத்த இஸ்முவையும் சேர்த்து எழுதியிருந்தார் ஜெப்பார்நானாவுக்கு.

சுபுஹானல் அஜீஜூல் கரீம் சுபுஹானல் ஃபத்தாஹில் மத்தீன்
சுபுஹானல் ஹன்னானில் மன்னான் சுபுஹானல் வதூதில் ஹக்
சுபுஹானல் மலிக்கில் மாலிக் சுபுஹானர் ரஜ்ஜாக்கில் முபீன்
சுபுஹானர் ரஹ்மானிர் ரஹீம்
இர்ஹம்னி யாமுஜீபத்தஃவாத் யா முனீரல் ஆலமீன் யாஹக் யா முபீன் ( 31 Times)

ஆனால் , இந்த இஸ்மு, பயிற்சிகளெல்லாம் அவருக்கு பத்தாது போலிருக்கிறது. David Copper Fieldன் மேஜிக் வீடியோ கேஸட்களும், Hypnotism, Mesmerism சம்பந்தப்பட்ட கேஸட்களும் – எத்தனை இருந்தாலும் – ஜெப்பார் நானாவை வாங்கிவரச் சொல்லியிருந்தார். பார்க்கவா, வித்தை காட்டவா? வரும் வித்தைகள் போதவில்லையா? இடையில் நான் அஸ்மாவுக்கு ஃ·போன் பண்ணும்போது அனீஸுக்கு அனலாகக் கொதிக்கிறது என்றாள். அதையே நினைத்துக்கொண்டு தூங்கும்போது எனக்கு ஜுரம் கடுமையாக வந்தது. இதுமாதிரி ஜுரம் வந்தால் நாலைந்துநாள் வாட்டும். ஒருவருடமாய் ஜுரமும் வரவில்லை. இன்று என்ன திடீரென்று? அடுத்தநாள் காலை அனீஸுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டால் அன்று இரவே அவனுக்கு தேவலையாம். நான் தாங்கக்கூடியவன். அன்று பகலுக்குள் என் காய்ச்சலும் ஓடிவிட்டது.

நான் வேர்த்துப்புட்டேன்…!

*

‘இவங்கள்லாம் புத்திசாலியா பொய்ட்டாக்கா நமக்கு ஒரு வேலையும் இருக்காது. நம்ம பொழைப்பும் நடக்காது. இதுங்க பாரபைத்தியமா இருக்குற வரைக்கும் நல்லதுதான். ஆனால் சில நேரத்துலெ புடிச்சி பிறாண்டி வுட்டுடுது! அதான் கஷ்டமா இருக்கு. ஆண்டவன் மனுஷனை படைச்சாங்குறதை விட பாரபைத்தியத்தை நிறைய படைச்சி மனுஷன் தலையிலெ போட்டுட்டான்ண்டு சொல்றதுதான் சரி. அதுகூட அல்ல, உண்மை என்னாண்டு கேட்டா, இவன் என்னா செய்யினும்டு தெரியாத காரணத்துனாலே எது எதுலாம் கண்ணுக்கு தெரியுதோ, எது எதுலாம் காதுக்குப் படுதோ, எது எதுலாம் இன்பமா தெரியுதோ எல்லாத்தையும்
தன்னுடையதாக்க அலையிறான்’ – ‘S’ ( 31-05 to 07.06.1996 கேஸட்)

*

‘Concentrationண்டா என்னா?’ – ‘S’

‘மனசை ஒண்ணுலேயே வச்சி சிதறாம நெனைக்கிறது’ – சீடர்

‘இது பண்டிக்கும் நாய்க்கும் கூடத்தான் இக்கிது. எந்த பயனுமில்லாத பொருளைப்பத்தி சிரத்தையாக நினைக்கிற குணம் வேணும். இது முடிஞ்சா ப்ராப்ளத்தை அனலைஸ் பண்ற Capacity வந்துடும்’ – ‘S’ ( 15-22.03.1996)

*

‘ஒரு காரியம் அடையிறதுக்கு முன்னாலே – அந்த காரியம் நாம அடையிறதுனாலே – கொடுக்குறவங்களுக்கு என்னா நன்மைண்டு பார்க்கனும். இல்லே, நாம அடையாம மத்தவங்க அடைஞ்சா -கொடுக்குற அவங்களுக்கு – நன்மை கிடைக்காதுண்டு ப்ரூஃப் பண்ணிக் காட்டனும். அப்ப அவங்கள்ட்டெ எவ்வளவு பெரிய நெகடிவ் ஃபோர்ஸ் இருந்தாலும் உடைஞ்சிடும்’

‘எதிர்காலத்தை நோக்கிக்கிட்டு presentஐ கோட்டை வுட்டுடாதீங்க’

(29.03 to 05.04.1996 கேஸட்)

*

‘ரியாலத்தை கரெக்டா செய்யிங்க. வேற ஒண்ணும் வேணாம். எது எது எப்ப எப்ப வரணுமோ அது அது அப்பப்ப வரும்.’

‘நான் எப்படி நினைக்கிறேனோ அப்படி இருந்தாத்தான் நான் எப்படி தூக்கமுடியுமோ அப்படி உங்களை தூக்க முடியும். இல்லே, நான் தூக்குறதா நெனைச்சிக்கிட்டிப்பேனே தவிர தூக்கியிருக்கமாட்டேன்’ – ‘S’ (05-24.05.1996 கேஸட்)

*

‘குண்டூசி கண்டுபுடிச்சவன் யாருண்டு தெரியுமா உங்களுக்கு? ஆணி, குந்தானி கண்டுபுடிச்சவன்? தெரியாது! ஆனா கடல்தண்ணி ‘ஹூதா'(நீலம்)ண்டு சொன்னவனுக்கு மட்டும் ‘டாக்டர்’ பட்டம் கொடுத்துடுவீங்க!’ – ‘S’

‘காலம்பூரா எல்லாத்தையும் பத்தி சொல்லிக்கிட்டிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிஞ்சதை பூரா, இல்லே , தெரிஞ்சதுண்டு நான் நினைச்சது. இத்தனை வருஷம் கழிச்சி அனலைஸ் பண்ணிப்பாக்கும்போது , தெரிஞ்சதுண்டு நான் நெனைச்சது மாறலே. அதனாலெ, நிச்சயம் தெரிஞ்சதுதான் அது. எத்தனையோ டெஸ்ட் வச்சிப்பாத்தும் மாறலே. ஆனா… யாருமே ஃபாலோ பண்ணலே!’ – ‘S’ (31/05 to 07.06.1996 கேஸட்)

ஏன் பண்ணவில்லை?

சர்க்காரே ஒருமுறை சொன்னதுபோல ‘பப்பானை’ அமுக்கிப் பார்த்துட்டு கார் வாங்குன சந்தோசத்தில்’ சும்மா இருந்து விடுகிறார்களா? காரை கண்டிப்பாக வாங்குகிறவர்களாகப் பார்த்து கையில் ‘பப்பானை’க் கொடுத்திருந்தால் அந்த ஏக்கம் வருமா? இப்போதுள்ள ‘உள்வட்டம்’தான் சர்க்கார் கடைசியாக உருவாக்கியது. சீடர்கள் கிட்டத்தட்ட இரண்டு வருட பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களால் ‘பப்பானை’க்கூட தொடமுடியவில்லை. தவறு அவர்கள் மேல் மட்டும்தானா? இதற்கு முன்பு சேர்ந்த சீடர்களின் நிலைதான் என்ன? அவர்கள்தான் எங்கே இப்போது? ஏன்? சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் கூட்டம் சர்க்காரின் காலடியில் விழுகிறது. எத்தனை உயர் அதிகாரிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள்! சர்க்கார் அவர்களை லட்சியம் பண்ணியது கிடையாது. ஆனால் அவர்கள் உழைத்து உருவாக்கும் கூட்டம் மட்டும் பெயர் சொல்லும்படியாக உருவாவதில்லை, உருவானதில்லை. பெரிய மினாராவைத் தூக்கி சின்னமினாரா பக்கத்தில் வைத்துவிடுவேன் என்ற வெறும் கற்பனையில் உருவானவர்கள்.

மினாரடி ஸ்னானம்?

(தொடரும்)

குறிப்புகள் : 

(1) – திருக்குர்ஆன். சூரா அல்ஹதீத், 16ஆம் வசனம் (57:16)

‘S’ – சர்க்கார்
கராமத் – அற்புதம்
கந்தூரி , ஹந்திரி – அவுலியாவின் நினைவு விழா
ஜம் – ஒரு பயிற்சி
குதா கா சுக்ர்! – கடவுளுக்கு நன்றி
பரக்கத் – வளம்
நியமத் – அருட்கொடை
மஃரிபத் – ஞானநிலையின் ஒரு படித்தரம்
ஆதம் அலைஹிவஸ்ஸலாம் – முதல் நபி/மனிதர்
ரூஹானியத் – இறைச்சக்தி
ரமலான் – நோன்பு பிடிக்கும் மாதம்
லாத்தா – அக்கா
ரஹ்மானியத் – நல்லசகதி
பையத் – குருவிடம் அனுமதி வாங்குதல்
ஷரீஅத் – மார்க்கச் சட்டம்
கன்ஜுல் கறாமத் – (கதைகள் சேர்க்கப்பட்டிருக்கும்) நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு
மதரஸா – அரபிப் பாடங்கள் கற்ப்பிக்க்ப்படும் பள்ளி
விலாயத் – அவுலியாக்களின் சக்தி
ஹராம் – விலக்கப்பட்டது
அவுலியா – இறைநேசர்
‘SS’ – Secret Symbol பயிற்சி
ரியாலத் – (‘SS’ ) பயிற்சி
இஸ்மு – மந்திரம்

 

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (25)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24|

அத்தியாயம் 25

ஆபிதீன்

*

06.09.1996 , வெள்ளி ‘செஷன்’ முடிந்து..

பேய்க்கு பயப்படும் வழக்கமெல்லாம் போயே போச்சு (எழுதும்போது தொடை நடுங்குகிறது?). இன்று பகல் தௌலத்காக்கா வீட்டு மீலாது சாப்பாடுக்குப் போனேன். தௌலத்காக்காவையும் நேராகப் பார்த்தேன். வியாழன் காலை ‘MKT’ ஆஃபீஸிலிருந்து ஒரு காக்கா ஃபோன் செய்து வெள்ளி மௌலூது & சாப்பாடுக்கு கூப்பிட்டபோது குழப்பமாகத்தான் இருந்தது. துபாயில் நாக்கூர்வாசிகள் சட்டரீதியாக கூடி பிஸாது பண்ண ‘MKT’ கொடுக்கும் மீலாது சாப்பாடும் கந்தூரி சாப்பாடும் முக்கியம். எவர்பிரைட் கம்பெனி ஆரம்பித்த வழக்கம். கம்பெனி முதலாளியின் மகன் ஆஸ்திரேலியாவில் MBA படித்துவிட்டு கம்பெனியை குழியில் மூடிக்கொண்டிருக்கிற நிலையில், இப்போது ‘MKT’ அழைப்பு பலபேருக்கு மிக முக்கியம். பழக்கத்தை நிறுத்தவும் முடியாது. அதற்கும் ஒரு பிஸாது வரும். ஆனால் தௌலத்காக்கா வியாபாரம் தெரிந்தவர். நபி பிறக்காவிட்டாலும் அதற்காக ஒரு மௌலூது ஓதக்கூடியவர். அநேகமாக இரண்டு மாதத்தில் வரும் கந்தூரி சாப்பாட்டில் , தன் ஃப்ளாட்டுக்கு முன், ஊரில் மறைந்துபோன ‘தொட்டிப்பந்தல்’ கூட வைத்து கவர்ந்திழுப்பார். அதை முதன்முதலாக சுற்றும் பாக்கியம் அல்லது இயக்கும் பாக்கியம் பெற ஷேக் முஹம்மது கூட வரக்கூடும். துபாய் எல்லா மதக்காரர்களுக்கும் , அவர்களின் எல்லா சடங்குகளுக்கும் ஆதரவு கொடுக்கக்கூடியது. சௌதியில் அரேபியன் பாலிஃபாப் கம்பெனியில் இருக்கும்போது நாக்கூரின் முதல் கும்பல் , விமரிசையாக மௌலூதுகள் நடத்தியதை கொரில்லா யுத்தத்தில் வெற்றிபெற்ற போராளிக் குழுக்கள் மாதிரிதான் சொல்லித் திரிவார்கள். மூடிய சட்டிக்குள் வேகுவதில் என்ன இருக்கு? துபாயில் , முத்தவாக்கள் ‘சீராணி’ எடுக்காமல் போனால்தான் தப்பு. சென்றவருடம், புதுக்கோட்டை செவுட்டு ஹஜ்ரத் ஒருவர் , தௌலத்காக்கா வீட்டுக்கு பக்கத்திலுள்ள பள்ளி ஜும்-ஆ முடிந்ததும் , ‘காக்கா வீட்டு விருந்திற்கு வந்து இருக்குகிற தமில் நண்பர்கள் ‘ என்றே குறிப்பிட்டார். பலபேருக்கு அப்போதுதான் ஜூம்ஆவில் கலந்துகொண்டமாதிரியே இருந்தது. மேல்மாடியில் நடக்கும் ‘தர்ஜுமா’க்குத்தான் அவர் அழைத்தார் அப்படி. நண்பர்கள் விருந்துக்கு போகுமுன்பே ‘தர்ஜுமா’வில் கலந்த நாக்கூர்வாசிகள் அமர்ந்திருந்தார்கள் – முதல் ‘சப்’பில். செஃப்-அல்-கலீஜ்’ன் பிரியாணி அப்படி. ஆம்பூர் பண்டாரிகள். தமிழ் மசாலா கலக்கத் தெரிந்தவர்கள். பிஸாது பண்ணமுடியாதது அது ஒன்றுதான். ஆனால் இம்முறை பிஸாதும் கூட்டத்தைப் போலவே கம்மியாகத்தான் இருந்தது. அல்-ஐய்ன், அபுதாபியிலிருந்து நிறைய பேர்கள் வரவில்லை. லேபர் செக்கிங் கடுமையாக இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கம்பெனி வியாபாரம்கூட அதலபாதாளத்தில் போகிறது. புல்கட்டு வாங்க வருகிற பட்டான்கள் தன் ‘கல்லிவல்லி’ விசாக்களுக்கு பயந்து அமுங்கிக் கொண்டார்கள். ஆனால் சாப்பாடு என்னவோ வேகமாகத்தான் காணாமல் போகிறது. நவம்பர் தேர்தலில் ஜெயிப்பதற்காக கிளிண்டன் தன்னை பலமான ஆளாகக் காட்ட ஈராக்கில் 27 missilesகளை ஏவியிருந்ததில் இந்தப்பகுதி ஸ்திரத்தன்மை குலைந்துவிடும் பயமாகக்கூட இருக்கலாம். சதாம் பொன்முட்டைகளை வாங்கிக்கொடுக்கும் வாத்து, துபாய்வாழ் நாக்கூர் தமிழர்கள் போல். நான் இலேசாக இருந்தேன். நான் வந்திருப்பதைப் பார்த்த தௌலத்காக்காவுக்கு முகத்தில் ஒருவிதப் பெருமிதம் தெரிந்தது. மறைத்துக்கொண்டார். எனக்கு (இறைச்சி) முள்ளைத் தூக்கிப் போட்ட உணர்ச்சி இல்லை. இது எனக்கு பயிற்சி. வெறுப்படைந்திருக்கும் ஒருவரை மாற்ற அல்லது நேரடியாகப் பார்க்க. பயமில்லை, விசா மாற்றுவதில் தொந்தரவு செய்வார் என்று. இவரைப்பற்றிய என் டென்சனைக் கழற்றிப்போட இந்த சடங்கு உதவட்டுமே.. ஆனால் சலாம் சொல்லவில்லை. இது எச்சரிக்கையோ அலட்சியமோ, ஆனால், வரும்போது மறக்காமல் அவர் பக்கத்தில் இருந்த அவருடைய அண்ணன் ஒலிகாக்காவிடம் ‘பொய்ட்டு வர்றேன்’ என்றேன்! குர்துகளுடனுள்ள ஈராக்கின் உள்நாட்டு சண்டையில் கிளிண்டன் தலையிட்டது தப்பு என்று தௌலத் காக்கா, ‘PBCo.’ காக்காவிடம் பேசிக்கொண்டிருந்தார் – என்னைப்பார்க்காத மாதிரி. ‘ Arabs must draw a lesson from what has happened and take warnings against over-dependance on the u.s., especially when its leaders show no respect for principles’ என்றார் அவர் பதிலாக. அட, Gulf News தலையங்கத்தில் வந்தது, இரண்டு நாளைக்கு முன்பு!

haz1996diary - img13 - dec10-11a-diary-b

*

10.09.1996

இரண்டு நாளைக்கு முன்பு ஊரிலிருந்து ஃபரீது ஃபோன் பண்ணினார் , விசிட்விசா எடுக்கச் சொல்லி. நானா மகள் கல்யாணத்திற்காக போய் 15 நாளில் திரும்பிவிடுவேன் என்று சொல்லிவிட்டுப் போனவர் – இன்னொரு 20 நாள் கூட இருந்து – தான் ‘தொதல்’ என்று அழைக்கபடுவதை நிரூபித்தார். துபாயில் இருந்திருந்தும் அதன் அடிக்கடி மாறும் சட்டங்களை யூகிக்காமல் சுறுசுறுப்பாக இல்லாமலிருந்தால் எப்படி? இப்போது துபாயில் விசிட்விசா புதுப்பிக்கப்படுவதில்லை. தவிர வந்தும் உடன் வேறு கம்பெனி மாற்றுவதும் கஷ்டம். சட்டம் நிஜமாகவே கடுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவர் வரத்தான் வேண்டும். துபாயில் புதுப்பிக்க முடியாவிட்டால் என்ன, ஷார்ஜாவில் எடுக்கலாம். ஹலால்தீன், மஸ்தான் மரைக்கான் மூலமாக அவர்கள் கம்பெனியில் முயற்சிக்கலாம் அநியாயமாக காசு விரயமாவதைத் தடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நழுவி விட்டார்கள். இன்று மாலை குடவுன் கணக்கைக் கொண்டுவரும் குலாம்காக்காவிடம் எடுக்கச்சொல்லிவிட வேண்டியதுதான். ஆனால் பண விஷயமாக அவரிடம் ஃபரீது ஃபோனில் பேசிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் நேற்று. இன்று குலாம்காக்கா வரும்போதே ஃபரீதுட்டேர்ந்து ஃபோன் வந்திச்சி என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவர் வருவதற்கு சரியாக ஒருநிமிடம் முன்பு நானும் ஃபரீதின் பாஸ்போர்ட் காப்பியை என் டிராயரில் இருந்து எடுத்தேன். அந்த ஜெராக்ஸை ஃபரீது தங்கியிருந்த ரூமில் இருந்து நான் எடுத்துவந்த அன்றுதான் ஃபரீதும் ·போன் பண்ணினார்!

*

காலையில் என் மேஜையில் இருந்த பைலட் பேனாவுக்கு ஆயுள் முடிந்துவிட்டது. நான் கப்பமரைக்காரிடம் கேட்டேன். ‘வேறு பேனா இக்கிதா நானா?’ என்று.

‘செகப்பு இக்கிது, ஹூதா இக்கிது, கறுப்பு இக்கிது.. எதுவேணும் உங்களுக்கு?’

‘ஏன் ஒவ்வொன்றிலும் ஒன்று கொடுத்தால் என்ன என்று நினைப்பு ஓடியது ஒருகணம். அடுத்த நிமிடத்தில் அவர் மூன்றையும் கொண்டுவந்து வைத்தார். செகப்பு இக்கிது, ஹூதா இக்கிது, கறுப்பு இக்கிது! துபாய் ஆஃபீஸில் ‘இக்கிது’ சொல்வதும் கேட்பதும் சுகம்தான். இது தெரியாமல் ஷார்ஜா தமிழ் சங்க நண்பர் ஒருவர் ஒருமுறை ‘வணக்கம் , வாழ்க! ஆபிதீனுடன் பேசமுடியுமா?’ என்று கேட்க , கப்பமரைக்கார் ‘இக்கிறாஹா.. தர்றேன்’ என்று சொல்லியதில் மயக்கமுற்றது தப்புதான். நினைப்பது நடக்கிறது என்றால் ‘இக்கிது’வைக்கூட மாற்றலாம். வேண்டாம், இக்கிட்டும்.

சென்ற (30.08.1996) வெள்ளி இரவு, என்னிடம் கொடுத்த புது இஸ்முக்களில் தான் குறித்துக்கொள்ளாதது ஒன்று இருக்கிறது என்று ஜெப்பார்நானா வந்தார். அவர் அணிந்திருந்த போலோ டி.ஷர்ட் மயக்கியது. அவர் சொன்ன விலை அதைவிட மயக்கியது. ஓடிப்போன யாஸ்மின் டெக்ஸ்டைல் கடையில் இருந்த சாமான்களை , கடன் கொடுத்த ஏமாந்தவர்கள் பட்டத்திற்குப் பாதியாக விற்றுக்கொண்டிருக்கும்போது வாங்கினாராம். இப்போது தீர்ந்துவிட்டது கடையும் அந்த ஸ்டாக்கும் என்றார். இந்த வெள்ளி காலை அந்த கடைக்குப் போனேன். கட்டிடத்தை இடித்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்திலுள்ள கோல்டன்கோஸ்ட்-ல் ஒரு நண்பர் வேலைபார்க்கிறார். அவரிடம் பக்கத்து கடையில் வந்த டி.ஷர்ட்டைப் பற்றிக் கேட்டேன். ‘எல்லாம் அள்ளிட்டானுவடா’ என்றார். ஆனால் ஒன்றே ஒன்று அவர் கடையில் இருக்கிறதாம். இடிந்த கடையில் இருந்து எடுத்ததுதான். காட்டினார். அச்சாய் ஜெப்பார்நானா போட்டிருந்த டி.ஷர்ட். விலை? எனக்காக போனால் போகிறதென்று அதே விலை என்றார். பக்கத்திலிருந்த இன்னொரு சேல்ஸ்மேன், ‘உங்க கூட்டாளிதானேங்க..பத்துரூவா வாங்கிக்குங்க, போதும்’ என்றார். அவர் சீனியர் சேல்ஸ்மேன். என் கூட்டாளி அல்ல! ஆனால் ஜெப்பார்நானாவின் எதிரி இப்போது. எவ்வளவு வேகமாகக் கையில் வீழ்கிறது! ஆனால்.. தௌஃபீக்-ஐ அவன் அரபி கேன்சல் பண்ணக்கூடாது என்று நினைத்தது மட்டும் ஏன் பலிக்கவில்லை? முந்தாநாள்தான் one-wayல் போனான். வந்து மூன்று மாதம் கூட முழுதாக ஆகவில்லை.

சட்டம், விசா கொடுப்பவர்களையே பயமுறுத்துகிறது.

அந்த அரபி நல்லவனாக இருந்ததால்தான் விசாவுக்கு வாங்கிய பணத்தில் கால்வாசியை திருப்பித்தர ஒத்துக்கொண்டான். தௌஃபீக் முகத்தில் வருத்தம் ஏதுமில்லை. வியாபாரம் பண்ணுபவர்களுக்கு ஒருவிதத் துணிச்சல் இருக்கத்தான் செய்கிறது. ‘கசிகாஜி’ பிரச்னையில் இரண்டுமுறை புருனேயிலிருந்து பரிதாபமாக ஓடிவந்த சிறுவன் அல்ல அவன். வாப்பாவின் கீழக்கரை மூளை காட்டிய வழியில் சிங்கப்பூர் சென்று , கம்ப்யூட்டர் பாகங்களை கடத்திக் கடத்தி தைரியம் வந்துவிட்டது போலும் அவனுக்கு. ‘அட..வுடுங்க நானா..அடுத்ததடவை பாத்துக்கலாம்..எது எப்படியும் போவட்டும். ஆனால் ஊருக்கு போவும்போது அதுவும் நாவப்பட்டினம் பீச் ஸ்டேசன்லேர்ந்து கடற்கரையைப் பார்த்துக்கிட்டே சுபுஹு நேரத்துலெ அப்படியே ஊருக்குள்ளே நுழையிற சுகமே தனி’ என்றான்.

சுகம்தான். திரும்பிவரும் தைரியம் உள்ளவர்களுக்கு சுகம். திரும்பவே முடியாதவர்களுக்கும் சுகமாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை. ஆனால் தௌஃபீக் முகத்தில் தெரிந்த தைரியம் ஏர்போர்ட்டில் இருந்த கடுமையான கூட்டத்தில் முக்கால்வாசிப் பேருக்கு இல்லை. எத்தனை கேன்சலேசன் கேசுகள்! ஷேக் முஹம்மதுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு இவர்களின் பதுவாக்கள்தான் காரணம் என்று , ஏற்றிவிடவந்த கும்பல் பேசிக்கொண்டிருந்தது. அவர், அடுத்த மன்னனாக முன்பு அறிவிக்கப்பட்டதும்கூட, அதற்கும் முன்பு ஷேக் ரசீதிற்கு மகனாகப் பிறந்ததும் கூட , பதுவாக்கள்தான் காரணமா?

எனக்கு  சிரிப்பு வந்தது. முடிவுகளை ஷேக்குகள் எடுக்கிறார்கள். ஷேக்குகளை யார் முடிவு செய்கிறார்கள்? சதாம்களை முடிவு செய்கிறவர்களா? அவசர அவசரமாக பெட்டிகளை கட்டிக்கொண்டு தாயகம் திரும்புகிற இத்தனை பேர்களின் முடிவுகள் எப்படி அமையும்? திரும்பவும் அவர்கள் ஊரில் பணம் அழுது இங்கேயே வருவார்கள். இவர்களை யார் முடிவு செய்கிறார்கள்? தௌஃபீக்கின் ஒரு பெட்டி கூட ஒரு ஊதிப்போன தொழுநோயாளியின் வயிறு போல் இருந்தது. அவசரத்தில் ‘ஜம்ஜம்’ உள்ள மஸாஃபி பாட்டில்கள் இரண்டை வேறு உள்ளே திணித்து , அவைகள் உடைந்து, அடியில் சொதசொதவென்றிருந்தது அந்த அட்டைப்பெட்டி . சாதாரணமாகவே சென்னை விமானநிலையத்தில் , அட்டைபெட்டியில் வரும் சாமான்களில் பாதி பிளேடுபக்கிரிகளால் பதம்பார்க்கப்பட்டிருக்கும். இந்த அட்டைப்பெட்டி இன்னும் வசதி. உள்ளே கைவிட்டு குடையும்போது ‘ஜம்ஜம்’ பட்டால் புனிதமும் கூட.

தௌஃபீக்கை அனுப்பிவிட்டு ஹலால்தீன் இடத்திற்கு வந்து படுக்கப்போகும்போது அந்த காக்கா ஊருக்கு ஃபோனில் சொல்லிக்கொண்டிருந்தார். digestive பிஸ்கட்களும் ‘ஜம்ஜம்’ தண்ணீரும் அனுப்பி வைத்திருக்கிறாராம். நன்றாகத்தானிருக்கும்! தௌஃபீக், நாங்கள் கொடுத்த கடிதங்களைக்கூட அந்த பாட்டில்கள் பக்கத்தில்தானே வைத்திருந்தாய்? அந்த விமானத்தில் போகிறவர்களில் எத்தனை பேரை நாடு தன் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிடும் என்று தெரியவில்லை. ஏழெட்டு நாட்களுக்கு முன்பு பம்பாயில் இறங்கியவர்கள் பங்காளிகள் என்று ஒரு விமானமே திரும்பி விட்டதாக செய்தி. பங்களாதேஷ், தன் நாட்டு பாஸ்போர்ட் இல்லாதவர்களை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டதாம். ஆனால் பாகிஸ்தான் மூன்று கப்பல்களை அனுப்பியிருக்கிறதாம், எந்த முஸ்லீமாக இருந்தாலும் வரட்டும் என்று. உண்மையா? தெரியவில்லை. ஆளாளுக்கு தன் கற்பனைத்திறனைக் காட்டினார்கள். இம்மிக்ரேசன் ஆஃபீஸில் முந்தாநாள் , போலீஸ்காரர்கள் மூன்றுபேரை அடித்துக்கொன்றுவிட்டார்கள் என்று டிரைவர் ரஜப் சொன்னான்.

‘மர்கஜ் அல் பலுச்’ என்று கப்பமரைக்கார் கிண்டல் செய்கிற , கிடங்கிலுள்ள பலுச்சி தொழிலாளிகளுக்கான அறையிலிருந்து அந்த செய்தி வந்தது. விசாரித்துப்பார்த்ததில் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன் காட்டுத்தனத்தைக் காட்டிய போலீஸை ஒரு பட்டான் கும்பல்தான் கொன்றுவிட்டது அடித்தே என்று தெரிந்தது. ஆனால் பத்திரிக்கையில் வரவில்லை. மக்கள் வீறுகொள்வது ‘மம்னு’. ‘செப்டம்பர் இறுதிக்குள்’ என்கிற கெடுவில் மாற்றமில்லை என்ற அரசாங்கச் செய்தி மட்டும் திரும்பித் திரும்பி வந்தது. விமான டிக்கெட்டிற்கு வழியில்லாதவர்கள் Boat-ல் போய்க்கொள்ளலாமாம். Boat-ல் இடம் கிடைக்காதவர்கள் நீந்திப்போகலாம். நீந்தத் தெரியாதவர்களுக்கு அக்டோபர் முதல்வாரம் நீச்சல் பயிற்சி அரசாங்கம் கொடுக்கும். பயிற்சியாளர்கள் அரபிகளாக மாற அந்த அவகாசம் போதும்.

**

12.09.1996

Relaxation (III Cassette). வருடம் 1975ஆக இருக்கலாம். சர்க்காரின் வேறு புதிய கேஸட்கள் இல்லை. இப்போதெல்லாம் செஷனில் பத்து நிமிடம் அவர்கள் பேசுவதே அரிதாம். புது இஸ்முக்கள் மட்டும் தேவைப்படும்போது கொடுக்கிறார்கள். சென்ற வெள்ளியில் இந்த கேஸட்டைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். என்ன அழகான ரிகார்டிங்.! ஹும்.. இந்தக் கால சீடர்களும் இருக்கிறார்களே.. நிச்சயமாக இவர்கள் அடுத்த பிறவியில் கொல்லன் உலையில்தான் இரும்பை அடித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டுக்கொண்டிருக்கும்போதே பளாரென்று அறை விழும். அப்புறம் குரல்வளையை பூட்ஸ்காலால் ஒருவர் மிதிப்பார். முழி பிதுங்கும்போதே தலையில் ஒரு குட்டு. இதை ஜெப்பார்நானாவிடம் சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே, ‘ஆமா.. இன்னமே சர்க்கார் பேச்சைக் கேப்பியா கேப்பியா’ண்டுதானே?’ என்றார். கடைசியாகக் கேட்ட கேஸட் மட்டும் பரவாயில்லை. தொடையில் அழுத்தித் திருவித்திருவி எடுக்கிற மாதிரி மட்டும் இருந்தது. மற்றபடி சத்தம் இல்லை. இவைகளைக் கேட்டுக் குறிப்பு எடுத்ததே பெரிய பயிற்சிதான். இமேஜினேசன்தான் உதவிற்று!

இனி ரிலாக்சேஷன்…

ரவூஃப் அப்படித்தான் கேஸட்டில் எழுதிக்கொடுத்தான். ஆனால் எல்லாமே வருகிறது. இப்போது எல்லாம் அவசியம்தான். ஈராக்கின் அமெரிக்க தளத்திற்கு F117- STEALTH Fighter Bombers வந்து கொண்டிருக்கின்றன – குவைத் வழியாக. ஓடிவரும் குர்து மக்களுக்கு ஈரான் 39000 தற்காலிக தங்குமிடங்களை அமைத்திருக்கிறது. 160000 தற்காலிகங்கள் இன்னும் அமைக்கப்பட இருக்கின்றன. எல்லாம் எதற்கு? அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி வில்லியம் பெர்ரி, வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கருதி கொடுத்த எச்சரிக்கைக்காக. ‘Iraq would very soon learn that we are not playing games’..

haz1996diary - img13 - dec10-11b-diary-b

எல்லா நாடுகளுக்கும் கற்றுக்கொடுப்பதுகூட ஆட்டம்தான். ஆட்டத்தின் சூட்சுமத்தை அலசிப்பார்க்கும் குணம் , நாம் கருவிகளில் ஒன்றாக இருக்கும் அந்தக் கட்டத்தில் வருமா? சென்ற யுத்தத்தின்போது ஓடிவந்து கொண்டிருந்தவர்களிடம் ரிலாக்சேஷன் கேஸட்டைக்கொடுத்து கேட்கச் சொன்னால் எப்படி இருந்திருக்கும்? அல்லது ‘SS’ பயிற்சியை ஒரு ரொட்டிக்கு ஆளாய்ப் பறக்கிற தருணங்களில் செய்யச் சொன்னால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் உலகின் போராட்டம் சரியான செய்திகளை சரியான நேரத்தில் கேட்காமல், கேட்டும் செய்யாமல் இருப்பதினால் அல்லவா வருகிறது? அது ஷைத்தானியத் என்றால் அது இல்லாமல்தான் ரஹ்மானியத் ஏது? இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு ஷைத்தானின் மலமாய் அலைவதால்தான் குளித்தல் தேவைப்படுகிறது. ஆனால் குளிக்கும் நோக்கம் மலத்தைக் களைவது மட்டுமா? இதுநாள் வராத புத்துணர்ச்சியை எல்லா குளியல்களும் கொடுப்பதில்லைதான். சர்க்கார் பேச்சு குற்றாலம். முப்பது வருடங்களுக்கு மேலாக கொட்டிக்கொண்டிருக்கிறது. அப்போதிருந்து குளித்து வந்திருந்தால் இன்றைய நான் எப்படி இருந்திருப்பேன்? ஏன், அப்போதைய சீடர்கள் இன்னும் அப்படியே கேட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். காரணம் என்ன? குளிக்கப்போன இடத்தில் ‘குப்பி’ அடிப்பது தப்பு! இதைச் சொன்னால் , ‘அப்போ மத்த நேரத்துல அடிக்கலாம்தானே?’ என்று கேட்பார்கள். இப்படி கேட்டுக்கொண்டே அடித்துக்கொண்டிருந்தால் எப்போது குளிப்பது? சர்க்காரின் சீடர்களில் சிலபேர் குப்பிக்கு புகழ் பெற்றவர்களாக இருந்த காரணத்தினாலேயே அந்த காலத்தில் சர்க்காரை வெறுக்கும் பழக்கம் அதிகமாகி இருந்தது எனக்கு. ‘கப்பியும் கயிறும் போல இணைந்தாலும் குப்பி கொடுக்காதவன் கூட்டாளியா?’ என்று பழமொழி உண்டாக்கிய ஊர். இப்போது குப்பி மேல் அனுதாபமே உண்டு, மூன்று Bodyகளும் சேரும்போது அப்படி தோன்றிற்று. ஒருநாள் துணுக்குற்றேன். இது என்ன அசிங்கம்? ரியாலத் செய்கிற நேரத்தில் இந்த எண்ணம் வருகிறதே என்று. என் இரண்டு வட்டங்களின் வண்ணமும் சிவப்புதானா? சர்க்காரிடம் கேட்க பயமாகவும் இருந்தது. ஆனால் அவர்களின் 23.02.1996 கேஸட் தெளிவு படுத்திவிட்டது. நான் நனைந்தது மழையில், மழையில் தெறிக்கிற துளியில் அல்ல. இரண்டும் ஒன்றல்ல. ஆனால் உடல்கள் ஒன்று. ஆணுமில்லை, பெண்ணுமில்லை.

பரமஹம்சரின் முலை எனக்கு முளைக்குமா? நானே அதில் பாலும் குடிப்பேனா? பாலும் நான்தானோ?

(தொடரும்)

குறிப்புகள்

மவுலூது – அவுலியா, நபி(ஸல்) மீது புகழ் பாடுதல்
பிஸாது – அவதூறு
முத்தவா – மார்க்க போலீஸ்!
சீராணி – பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
தர்ஜுமா – மொழிபெயர்ப்பு
சப் – வரிசை
கல்லிவல்லி – விட்டுத்தொலை, சட்டத்திற்கு புறம்பான , காலவதியான விசா வைத்திருப்பவரக்ள்
ஹூதா – நீலம்
கசிகாஜி – புருனேயில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை
சுபுஹு – அதிகாலை நேரம்
பதுவா – சாபம்
ஜம்ஜம் – மக்காவிலுள்ள புனிதக் கிணறு/ அதன் நீர்
மர்கஜ் அல் பலுச் – பலுச்சிகளின் மையம்
மம்னு – தடை
இஸ்மு – மந்திரம்
ஷைத்தானியத் – தீயசக்தி
ரஹ்மானியத் – நல்ல சக்தி
குப்பி – ஓரினப்புணர்ச்சி

« Older entries