நாஞ்சில்நாடன், ஜெயமோகன் உரை @ துபாய் (2012)

நன்றி : அமீரகத் தமிழ் மன்றம் , ஆசிப் மீரான், சென்ஷி


*

***

தொடர்புடைய பதிவுகள்:
துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

ஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)

நாஞ்சில் நாடனின் ‘ஒரு காலைக் காட்சி’யிலிருந்து….

Nanjil_Nadan_stories…. சிவப்பு மாறி மஞ்சள் விழுந்தது. சிவப்பு கண்டும், வேகமாய்க் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் அல்லது அலட்சியத்தில் விரைந்த செம்மாருதி ஒன்று, மஞ்சள் கண்டதும் தாமதிக்காமல் புறப்பட்ட நான்கு பால் கேன்கள் தொங்கிய சைக்கிளில் ‘கிர்ரீச்’ என்ற பிரேக்கின் இறுதிக்கட்டத்தில் மோதியது. ஆட்சேதமில்லை.

எழுந்த சைக்கிளின் பால்கேன்களில் இரண்டின் மூடி திறந்து, பள்ளம் நோக்கிய வெள்ளமாய் பால் சுதந்திரமாய் ஓடியது. ஓடும் வாக்கில் சிறு ரோட்டுப் பள்ளங்களில் தேங்கியது.

சைக்கிள் இருந்து சரிந்த உ.பி.க்கார பால் பையா எழுந்து மற்ற இரண்டு கேன்களையும் மீட்க முயலும்போது, மூடித் திறந்த கேன்கள் முற்றிலும் வடிகாலில் இருந்தன.

கண்மூடி முழிக்கும் அவகாசத்தில், குடிசையில் இருந்து வேகமாய் ஒரு கிழவி பாய்ந்து வந்தாள். சற்றே நிறுத்தம் கொண்டிருந்த போக்குவரத்து இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, ஓட்டமும் தள்ளாட்டமுமாய் வந்த கிழவியின் இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது.

குழந்தையின் உருவம் ஒரு வயதுபோலத் தோற்றம் தந்தாலும் பருவம் மூன்று வயதுக்குக் குறையாது. கிழவி சூல்கொள்ளும் பருவம் தாண்டி முப்பது ஆண்டுகளாவது இருக்க வேண்டும். எனவே அவள் குழந்தையாக இருக்க நியாயமில்லை. மகன் அல்லது மகள் குழந்தையாக இருக்கலாம். அல்லது உறவின் நயப்பு ஏதுமற்ற அண்டை அயல்வீட்டுப் பிள்ளையாகக் கூட இருக்கலாம். ஓடிவந்த கிழவி, பால் தேங்கிக் கிடந்த சிறு பள்ளம் ஒன்றின் பக்கத்தில் குனிந்தாள்.

இடது கையால் இடுப்பில் இருந்த பிள்ளையை வளைத்துப் பிடித்துக்கொண்டு, வலதுகையை அகப்பை போலக் குவித்து, பள்ளத்தில் கலங்கித் தேங்கிக் கிடந்த பாலை கோரிக்கோரி குழந்தையின் வாயில் விடலானாள்.

இயக்கம் கொள்ள ஆரம்பித்த வாகனங்கள் கிழவியையும் குழந்தையையும் பால் தேங்கிய பள்ளத்தையும் ஒரு போக்குவரத்துத் தீவுபோல் பாவித்துக்கொண்டு மேற்கொண்டு ஓடலாயின.

*

சிறுகதையை முழுதாக இங்கே வாசிக்கலாம்:

*
நன்றி : நாஞ்சில் நாடன், யுனைடட் ரைட்டர்ஸ்

நாஞ்சில் நாடனின் ‘கான் சாகிப்’

khan sahib cover1மும்பைக்கு 1972-ல் பிழைக்கப் போன நாஞ்சில் நாடனை திடீரென்றுதான் சந்திக்கிறார் கான் சாகிப். ‘இதில் அதிசயம் கொள்ள ஒன்றுமே இல்லை. பிரபஞ்ச வெளியில் ஏற்கனவே பெயரிடப்பட்ட கோள்களும், பின்பு காணப்பட்ட கோள்களும் இன்னும் அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றன. கோள்களும் ஒன்றையொன்று முட்டிக் கொள்வதில்லை. மோதிக் கொள்வதில்லை. உராய்ந்து கொள்வதும் இல்லை. ஒரு கோளின் ஓட்டுநர் எட்டிப் பார்த்து அடுத்த கோளின் ஓட்டுநரை, ‘தாய்ளி, லெப்ட் சிக்னல் போட்டுக்கிட்டு ரைட்ல திரும்பறான் பாரு” என வாழ்த்துவதும் இல்லை’ என்கிறார் நாஞ்சில்!

ஒருசமயம் ஏதோ ஒரு நாடகம் பார்த்துவிட்டு இருவரும் நள்ளிரவில் திரும்பும்போது நாஞ்சிலை கான் சாகிப் தன் ரூமிலேயே படுத்துக்கொள்ளச் சொல்கிறார்.

“இல்ல பாய், போயிருவேன்” – நாஞ்சில். அவர் இடம் ரொம்ப தூரம்.

“அரே சலோனா சாலா.. மை துஜே காண்ட் நை மாரேங்கா” என்கிறார் கான் சாகிப்.

அரைகுறை இந்தி தெரிந்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. அவ்வளவு அடி வாங்கியிருக்கிறேன்!  ‘அப்போது நான் புஷ்டியாக இருந்தேன். என் நண்பர் கான்சாகிபை பட்டாணிய இனம் என்று வேறு சொல்லியிருந்தார். எனது அச்சத்துக்கு அந்தரங்கமாய் ஆதாரம் இல்லை என்று சொல்ல இயலாது. நண்டுக்கு நாவூறாத நரி உண்டா?’ என்று நாஞ்சில் அடுத்து எழுதும்போது  இங்கே துபாய், ஷார்ஜாவிலுள்ள சில நண்பர்களை நினைத்து மேலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

சிரிப்பு மட்டுமே இல்லையே வாழ்க்கை?

கான் சாகிப் அடிக்கடி சொல்லும் ஒரு கவிதை வரியை நாஞ்சில் எழுதும்போது கண் கலங்கிவிடுகிறது.

எந்தக் கவிஞர் எழுதியதோ அறியேன், அந்த வரி இது :

யாவர் வீட்டு முற்றத்தில் நின்றும் கண்ணுக்குத் தெரியாத தடம் ஒன்று ஓடுகிறது கப்ருஸ்தானுக்கு.

ஒரு வரி போதும். கதையை இங்கே க்ளிக் செய்து வாசியுங்கள்.

ஒரத்தநாடு கார்த்திக்கின் களஞ்சியம் மூலமாக (பேசாமல் புத்தகத் திருவிழாவில் ஒரு பிடிஎஃப் ஸ்டால் போடலாம் இவர்) அற்புதமான சிறுகதைகள் அடங்கிய ‘கான் சாகிப்’ தொகுதியைப் பதிவிறக்கியும் வாசிக்கலாம். ஆனால், PDF-ல் உள்ள ஒரே சங்கடம் , குப்புறப்போட இயலாது. கவனமாகப் போடவும்!
*

நன்றி : நாஞ்சில் நாடன், விகடன் , தமிழினி, ஏர்வாடி S.i.சுல்தான்பாய்

*
‘கான் சாகிப்’ பற்றி காமராஜ்-ன் சிறு விமர்சனம் : பிரியமான மனிதர்களை நினைவுபடுத்துகிற எல்லாமே பிரியமானதாகவும் பொக்கிஷமாகவும் மாறும். அப்படி ஒரு தோல்பையை மாற்றிக் கையில் கொடுக்கிற சிறுகதையை படிக்கும் எல்லோரும் தங்களை உரசிப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் . முடிந்தால் அப்படியொரு கதையை எழுதவேண்டும் என்கிற ஏக்கத்தை உண்டுபண்ணும் கதை ’கான்சாஹிப்’.

ஆ. மாதவனின் கிருஷ்ணப் பருந்து – நாஞ்சில் நாடனின் ‘யாத்ரா’ விமர்சனம்

yathra1982cover34-36a

என் ‘குழந்தை‘ வெளியான அதே ‘யாத்ரா’ (1982) இதழில் அண்ணன் நாஞ்சில்நாடனின் இந்த விமர்சனம் வெளியாயிற்று. வெங்கட் சாமிநாதன் ஐயா கேட்டதற்காக விமர்சனத்தை அனுப்பியதாகவும் சிற்றிதழில் வெளியான அவருடைய முதல் கட்டுரை அதுவென்றும் துபாயில் சந்தித்தபோது நாஞ்சிலார் சொன்னதாக நினைவு. ‘ஒரேதரியா என் பின்னாலேயே அலையாதீங்க..’ என்று அஸ்மா என்னை விரட்டியதால் பழைய ‘ஹஜானா’வை இன்று கிளற ஆரம்பித்தபோது இது கிடைத்தது. பதிவிடுகிறேன் – அலையாதவர்கள் வாசிக்க.

பொக்கிஷமாய் நான் வைத்திருக்கும் ஒரு கையெழுத்து/கடிதம் அடுத்து வரும், இன்ஷா அல்லாஹ். யார் அந்த எழுத்தாளர்? யூகித்துக்கொண்டு இருங்கள்! – ஆபிதீன்

***

கிருஷ்ணப் பருந்து

நாஞ்சில் நாடன்

ஆ. மாதவனின் சிறுகதைகளில் எனக்கு ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சிறுகதையாசிரியர்கள் என்று யார் பட்டியல் போட்டாலும் அதில் அவர் பெயர் இருக்கும். வைப்பு முறை அவரவர் மனோலயங்களைப் பொறுத்து இருக்கும். இப்போது நினைத்துப் பார்க்கையில், ‘எட்டாவது நாள்’, ‘காளை’, ‘நாயனம்’, ‘புறா முட்டை’, கோமதி’ என்று நாலைந்து கதைகள் நெஞ்சில் நெருடுகின்றன. (தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடும்படியான இன்னொரு கோமதியும் உண்டு. அது கி.ராஜநாராயணனுடையது) திருவனந்தபுரத்து சாலைக்கடைத்தெருவும் அதன் உயிர் இயக்கங்களும் மாதவன் கதைகளில் பூச்சுமானங்கள், தற்குறிப்பேற்றங்கள் இன்றி அழகாக வெளிப்படும். இந்தக் கலை ஆ. மாதவனுக்கு ‘புணலும் மணலும்’ என்ற முதல் நாவலில் கை கொடுக்கவில்லை. ஒரு நாவலாசிரியனாக அதில் அவர் வெளிப்படவேயில்லை. இந்தப் பின்னணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அவரது இரண்டாவது நாவல் ‘கிருஷ்ணப் பருந்து’.

புத்தகத்தை எடுத்தவுடன் செவளையில் அறைவது அதன் முகப்பு அட்டை. இந்தியாவைப் போல் புத்தகங்களை இவ்வளவு ஆபாசமாகத் தோற்றுவிக்கும் தேசம் மற்றொன்று இருக்கும் என்றுதோன்றவில்லை என்கிறான் ஜே.ஜே. இது புத்தகத்தின் தயாரிப்புக்கு சொல்லப்பட்டதல்ல. தயாரிப்புக்கு மாத்திரம் என்று எடுத்துக்கொண்டால் இந்த அட்டை நல்ல எடுத்துக்காட்டு.

நாவலின் ஆரம்பத்தில், ஐம்பது ஐம்பத்திரண்டு வயதில் தாடியும் எளிமையும் பத்தியம்போல் சாப்பாடும் பற்றற்ற நலையுமாக நமக்கு அறிமுகமாகும் குருஸ்வாமி, புற உலகுக்கு சாமியப்பா, உள்ளுக்குள் குருஸ்வாமியாக இருக்கவும் முடியாமல் சாமியப்பாவாக மாறவும் முடியாத தத்தளிப்பு, இந்தத் தத்தளிப்பு நாவல் முழுவதும் நன்றாக வந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் குருஸ்வாமியின் வாழ்வில் பல நிகழ்வுகள் ஏற்பட்டுப் போயின. சிறு வயதில் அம்மாவின் இறப்பு, ஆடம்பரங்களும் அச்சிகளுமாய் ஆடித்தீர்த்த அப்பா, செவிலியாக வளர்த்த அம்மு அம்மையை பச்சை பச்சையாய் அப்பாவுடன் பார்த்த அருவருப்பு, முப்பது வயதில் சுப்புலக்ஷ்மியுடன் திருமணம், ஆறேழு வருஷம் அவளுடன் வாழ்வு, இரண்டு மூன்று பெற்று பிரசவ அறையிலேயே பறி கொடுத்தது, மூன்றாவது பிரசவத்தில் கூடவே போனது எல்லாமுமாக குருஸ்வாமியை துறவின்பால் செலுத்தியபோது  அங்கிருந்து திருப்பி உள்முகமாக அவரைச் செலுத்துவது பாலுணர்வு. ‘தன்னை யாராவது அழைக்க மாட்டார்களா என்ற தாக உறக்கத்தின் கனவும்’, ‘இனிமையான இசை லயம் மனதை நெருடும் போதெல்லாம் குருஸ்வாமி இனம் புரியாத ஒரு சல்லாப லயத்தில் அமிழ்ந்து போவதும்’ அதனால்தான்.

பள்ளிப் பருவத்தில் ‘பச்சை பச்சையாக பிறந்த மேனியில் அப்பாவின் நரைத்துப்போன நெஞ்சு ரோமத்தை வருடியவாறு , அப்பாவின் வெற்றிலைச் சாயம் படிந்த தொங்கும் உதட்டைக் கடித்தவாறு’ அம்மு அம்மையைப் பார்த்து, ‘அம்மு அம்மோவ் நீ சுத்த அமுக்க.. நீ எனக்கு வேண்டாம். ஆரும் என்னைத் தொடாண்டாம்’ என்று அருவருப்பில் அலறும் குருஸ்வாமி  ஏழாவது படிக்கும்போது ‘அம்மு அம்மையின் சாயல் இருக்கிறபடியால் சுகந்தாவை ‘லவ்’ செய்கிறான். ‘சுப்புலட்சுமியை மணந்த புது இரவுகளிலும் கூட பின்னணியில் ஊதுபத்தியாக மணத்தது அம்மு அம்மையும் அம்மு அம்மையின் சாயலைக் கொண்ட சுகந்தாவும் என்பது தெரியும்போது குருஸ்வாமியின் பாலுணர்வின் முளை கூடும் புள்ளி அம்மு அம்மை என்பது தெளிவாகிறது. இந்த ‘நினைவு விதைத்து விட்டுப் போன சூன்யப் பொறி’தான் வேறு வேறு இடங்களில் வேறு வேறு விதங்களில் தெறிக்கின்றது.

ராணியின் மீது பாலுணர்வின் படர்வு எப்போது ஏற்பட்டது என்று குருஸ்வாமிக்கே தெரியாது. ஆனால் ஏற்பட்டுவிட்டது என்பதை நாம் அனுமானிப்பதைப்போலவே வேலப்பனும் நுணுக்கமாக உணர்ந்து விடுகிறான். ராணிக்கும் கூட ‘குருஸ்வாமியின் தேவையின் அழுத்தம் என்னவென்று புரிய ஆரம்பித்தபோது வெளிச்சம் சுற்றுமெங்கும் நெருப்பாக எரிவதாகத் தோன்றியது. எத்தனையோ நாட்களின் அந்தப் புகையை பனி மூட்டமென்று எண்ணியிருந்ததை ஊதி எறிந்த எரியும் நெருப்பு…! இந்த நெருப்பை அணைக்காமலேயே நாவலை முடித்து விடுகிறார் மாதவன். குருஸ்வாமியின் உடலுறவுத் தேவை ஒரு ஆன்மிகத் தளத்தைச் சார்ந்தது என்றும் ராணி அதற்கொரு விலை கேட்பது லௌகீகத் தளத்தைச் சார்ந்தது என்றும் மாதவன் கருதுவது எனக்கு உடன்பாடாக இல்லை. ஆன்மீகத் தளத்தில் இருந்து படிப்படியாக இறங்கி வருவதை நாவலின் மற்றப் பகுதிகள் எல்லாம் சொல்கிறபோது ராணி கேட்கும் விலைக்கு குருஸ்வாமி8 அதிச்சி அடைவதற்கும் காரணமில்லை.

இனியொன்று, இந்த நாவலின் சின்னச் சின்னப் பாத்திரங்கள்.  இந்த நாவலின் வாழ்க்கைச் சாலை மண்ணில் இருந்தே துளிர்ப்படுவதால் பாத்திரங்களில் அதன் ஜீவ சத்துக்கள் காணக்கிடக்கின்றன. வேலப்பன், ராணி, பார்வதி, ரவி, வெங்கு பாகவதர் எல்லாவற்றிலும் மாதவன் தன் சாயத்தை ஏற்ற முயற்சிக்காமல் அவரவர் சொந்தச் சாயத்தோடு உலவவிட்டிருப்பது ஒரு வெற்றி என்றுதான் நினைக்கிறேன். குருஸ்வாமியை ஒரு பகைப்புலனாக வைத்துக்கொண்டு வேலைப்பனை பார்ப்போமானல் பிந்திய தலைமுறையின் மதிப்பீடுகள் மாறிவருவது துல்லியமாகத் தெரிவதைக் காணலாம்.

சாலைப்பின்னணி மாதவனுக்கு தன் காலத்தைப் பற்றிச் சிந்திக்க இந்த நாவலில் நிறைய இடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மாதவனின் படைப்புப் பயணத்தில் இந்த நாவல் ஒரு புதிய திருப்பம் என்கிறார் நகுலன். தமிழுக்கு சமீபத்தில் கிடைத்த அருமையான சேர்மானங்களில் ஒன்று இது என்று எனக்குத் தோன்றுகிறது.

***

நன்றி : ஆ. மாதவன்நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன்

« Older entries