‘Look with positive intention, speak with inner conviction, listen with intense attention. And you will move in the right direction. ENJOY A HAPPY n prosperous NEW HIJRI YEAR‘ என்று எஸ்.எம்.எஸ் வந்தது ஜபருல்லா நானாவிடமிருந்து, நேற்றிரவு . காலையில் பார்த்தால் , ‘கடன்’ வருகிறது – ஹத்தீப்நானாவிடமிருந்து. திட்டாதே தேவி, என் கடன் வலையேற்றுவதே!
**
கடன் – ஏ.ஹெச்.ஹத்தீப்
அன்றையிலிருந்துதான் ஸ்நேகா இப்படியிருக்கிறாள்.
அவளுக்கு வயது ஐந்து. நல்ல வளர்த்தியில் வயதைச் சற்றுக் கூட்டித்தான் சொல்ல வேண்டும். பார்ப்பவர்கள் யாரையும் சட்டெனக் கிள்ளத் தூண்டும் கொழுகொழு கன்னங்கள். துருதுருப் பார்வையிலிருந்த கும்மாளம் முற்றிலுமாக வற்றிவிட்டது. கன்னத்தில் குழி விழ அவள் சிரித்து ரொம்ப நாளாயிற்று.
நன்கு விடிவதற்குமுன்பே படுக்கையில் அன்னையின் காலைச் சுரண்டுவாள். “ஸ்கூலுக்கு நேரமாச்சு; எழுந்திரம்மா!” என்று எழுப்புவாள். அம்மா தூக்கத்தில் முனகினால், அவளது நெஞ்சில்மேல் ஏறி உட்கார்ந்து செல்லமாகச் சிணுங்குவாள்.
அந்த நாள் மலை ஏறிவிட்டது. இப்போது அதெல்லாமில்லை.
அம்மா ஊட்டிவிடும் காலைச் சிற்றுண்டியைத் தட்டாமல் சாப்பிட்டுவிட்டு, பொறுமையாகச் சீருடையணிந்துகொண்டு,தானே சாக்ஸையும் ஷூவையும் மாட்டியவாறே பள்ளிக்கூட பஸ் வருவதற்குமுன்பே வாசலில் காத்திருப்பாள். முரண்டோ பிடிவாதமோ அவளது அகராதியில் கிடையாது. இப்போதோ “ஸ்கூலுக்கு டயமாயிடுச்சம்மா” என்று எழுப்பினால்கூடத் திரும்பிப் படுத்துக் கொள்கிறாள்.
எல்லாம் அன்றையிலிருந்துதான்.
“என் கண்ணல்ல. பஸ் வேணாம். அம்மா கொண்டுபோய் விடட்டுமா?” என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள் சரோஜினி.
வாய் திறந்து ஒரு வார்த்தை? ஊஹும்!
அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் ஓடிப்போய்க் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமாரி பொழிபவள், இப்போது செயலற்று…உணர்வற்று…மரக்கட்டையாய்….
என்னவாயிற்று செல்லக் குழந்தை ஸ்நேகாவுக்கு?
கணேஷும் சரோஜினியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு டாக்டரிடம் ஓடினார்கள்.
அவர், குழந்தையை நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தார். இமையைப் பிதுக்கிச் சோதித்தார். ஸ்டதாஸ்கோப்பை நெஞ்சில் ஒத்தி மூச்சிழுக்கச் சொன்னார். நாடி பிடித்துப் பார்த்தவாறே, “குழந்தைக்கு என்ன செய்யுது?” என்று கேட்டார், கடைசியாக.
“அதான் தெரியலே டாக்டர். சரியா சாப்பிடமாட்டேங்கிறா.ஸ்கூல் போறதுக்கு அடம் பிடிக்கிறா. ராத்திரியெல்லாம் திடீர் திடீர்னு எழுந்து உட்கார்ந்துகிட்டு அழறா டாக்டர்” என்று விசும்பினாள் சரோஜினி.
“என்ன சொல்லி அழறா?”
“எதுவுமே சொல்லாமெ அவளோட அப்பாவைப் பார்த்து அழறா.ரொம்ப பயமாயிருக்கு டாக்டர்! ”
நீண்ட நேர மௌனத்துக்குப்பின், “குழந்தை அதிர்ச்சியடையும்படியா ஏதாவது நடந்ததா?”என்று கேட்டார் டாக்டர்.
அன்றைக்கு வீட்டில் நடந்ததை வெட்கத்தைவிட்டு, அவமானத்தை மறைத்து எப்படி விவரிப்பது?
அதற்காக டாக்டரிடம் உண்மையை மறைக்க முடியுமா?
“வீட்டிலே ஒரு கடன் தகராறு. குழந்தை அதயே பார்த்துக்கிட்டிருந்தா. அன்னையிலேருந்துதான் இப்படியாகிட்டா டாக்டர்.”
கணேஷையும் சரோஜினியையும் முறைத்துப் பார்த்து டாக்டர் நெடுமூச்செறிந்தார். “குழந்தையை பார்க், எக்ஸ்பிஷன், பீச்சுன்னு அழைச்சுக்கிட்டுப் போங்க. அன்பு செலுத்துங்க. குழந்தை பார்க்கும்படியா தகராறெல்லாம் பண்ணாதீங்க. படுக்கிறதுக்கு முன்னாடி இந்த மாத்திரையை தவறாமெ கொடுங்க. எல்லாம் சரியாயிடும்!” என்று கூறிவிட்டு தன் மேஜைமீதிருந்த பஸ்ஸரை அழுத்தினார்.
‘மற்றவர்கள் வர வேண்டும்; நீங்கள் போகலாம்’ என்ற வியாபார சமிக்ஞை. தொழில் யுக்தி. புனிதமான மருத்துவம்கூட ஓர் இரக்கமற்ற தொழிலாகிவிட்டதா?
மருத்துவரின் ஆலோசனையைத் தொடர்ந்து ஸ்நேகாவைக் கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி போன்ற கேளிக்கைகளும் வேடிக்கைகளும் நிறைந்த இடங்களுக்கு அழைத்துப் போவாள் சரோஜினி. பல நேரங்களில் சினிமாவுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போயும் ஸ்நேகாவிடம் பழைய சிரிப்பும் கலகலப்பும் திரும்பக் காணோம்.
வட்டிக்கடைக்காரர் அடியாட்களுடன் வந்து வீட்டிலுள்ள, அதிலும் ஸ்நேகா விரும்பிப் பார்க்கும் டி வியைக்கூட விடாமல், அனைத்துப் பொருட்களையும் ஒன்று விடாமல் பதைக்கப் பதைக்க அள்ளிச் சென்ற அந்தத் துர்ச்சம்பவத்திலிருந்துதான் அவள் இப்படிப் பிரமை பிடித்தவள் போலாகிவிட்டாள்.
சரோஜினி மரத்துப்போய் நிற்க, அவளது இடுப்பை இறுகப் பற்றியவாறே முகத்தை மட்டும் வெளியே நீட்டி நடப்பவற்றை உன்னிப்பாக மிரட்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் ஸ்நேகா.
“இன்னும் இரண்டு நாள் அவகாசம் கொடுங்க சார். உங்க பணத்தை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்திடறேன். ப்ளீஸ் சார் ” என்று கெஞ்சுகிறான் கணேஷ், காலைப் பிடிக்காத குறையாக.
முறைக்கிறான் முரட்டு மீசைக்காரன். கண்கள் சிவந்து தீ பறக்கிறது. “இன்னும் எத்தனை ரெண்டு நாள் அவகாசம் கொடுக்கிறது?”என்று வெறி பிடித்தவன் மாதிரி கர்ஜிக்கிறான் கடன்காரன்.
குழந்தை வெடவெடத்துப் போகிறாள். பயத்தில் முகம் வெளிறிவிட்டது.
“இது கடைசி சான்ஸ் சார்.” – அவமானத்தாலும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் காதில் விழுந்துவிடப் போகிறதே என்ற ஜாக்கிரதை உணர்வாலும் கணேஷின் குரல் சற்றே தாழ்ந்து ஒலித்தாலும் கல்லும் கரைகிறாற்போல் மன்றாடுகிறான்.
அவன் கல்லேதான். கரையக் காணோம்.
குழந்தையின் முகத்தில் அச்சத்தின் ரேகைகள்.
“முடியவே முடியாது”என்று குரைக்கிறான் அந்த முரடன். மேலும் பேசினாலோ அல்லது அவன் செய்வதைத் தடுத்து நிறுத்த முயன்றாலோ பளாரென்று கன்னத்தின் அறைந்து விடுவான் போலிருந்தது.
வாசலில் அக்கம்பக்கத்தாரின் தலைகள். எதிர்வீட்டு ஜன்னல்களில் நிழலுருவங்கள். யாரும் கணேஷுக்காக யாரும் இரக்கப்படக் காணோம்.
இத்தகைய காட்சிகள் அவர்களைப் பொறுத்தவரை புதிது இல்லையென்றாலும் மனச்சாட்சிகூடவா மரத்துப் போய்விட்டது? அவனுக்காகப் பரிந்து பேச இந்த உலகத்தில் ஒருவர்கூடவா இல்லை?
குழந்தையின் விழிகளில் ‘யாராவது துணைக்கு வரமாட்டாங்களா?’என்ற ஏக்கம். அம்மாகூடக் கையைப் பிசைந்துகொண்டு மௌனமாகத்தானே நிற்கிறாள்?
“இன்னும் ஒரேயொரு சந்தர்ப்பம் கொடுங்க சார் ”என்று கண்களில் நீர் மல்க கணேஷ் ஈனஸ்வரத்தில் முனகியதெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் வீணாயிற்று.
அந்த மீசைக்காரனுடன் வந்தவர்கள் அவனைவிட மூர்க்கத்தனமாகவும் கர்ணகொடூரமாகவும் இருந்தார்கள். அனைவரும் பனியன் அணிந்திருந்ததால் அடியாட்களா வேலையாட்களா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.
“என்னய்யா, சும்மா தண்டத்துக்கு நின்னுகிட்டு. தூக்குங்கய்யா எல்லாச் சாமான்களையும். ப்ரிட்ஜ், கிரைண்டர், சோபா எல்லாத்தையும் ஒண்ணு விடாமெ தூக்கி லாரியிலே ஏத்துங்கய்யா ”என்று அரக்கத்தனமாக உத்தரவிடுகிறான் மீசை.
இதற்கு முன்பு இப்படி ரசாபாசமாக இரண்டு மூன்று தடவை நடந்திருக்கின்றன. அப்போது ஒரு முறை சரோஜினி குறுக்கிட்டு, “இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே உங்க பணம் வீடு தேடி வரும். இந்த ஒரு வாட்டி கருணை காட்டுங்கய்யா”என்று விழிகளில் நீர் திரண்டு வர உருக்கமாக வேண்டியது வீண் போகவில்லை.
பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்களே? இறுதியாக பேயும் இரங்கிவிட்டது. மீசை சொன்னான்: “பொம்பளேன்னு விடறேன். சொன்ன மாதிரி ஒரு வாரத்திலே பணம் வந்து சேரலேன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.வாங்கடா!”
அந்தக் காட்சி இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. இப்போது எந்த முகத்தோடு மீண்டும் கெஞ்ச முடியும்? ஏதாவது பேசப் போய், “நீயும் ஒரு மனுஷியா?” என்று காறி முகத்தில் உமிழ்ந்துவிட்டால்?
இதோ ஒவ்வொரு பொருளாக லாரியில் ஏற்றுகிறார்கள். ஸ்நேகா ஆசை ஆசையாய் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருப்பாளே, அந்த டிவியும் லாரியில் அடைக்கலம். அதை ஏக்கத்தோடு பார்க்கிறாள் குழந்தை. அவள் ‘போகோவும் டாம் அண்ட் ஜெர்ரியும் ரசிக்கும் தொலைகாட்சிப் பெட்டி தலை குப்புறக் கிடக்கிறது.
சற்றைக்கெல்லாம் வீடே வெறிச்சோடிப் போகிறது.
அன்றிலிருந்துதான் ஸ்நேகா பித்துப் பிடித்தவள்போலாகிப் போகிறாள்.
மூன்றாண்டுகளுக்குமுன்னால் புக்ககத்திலிருந்து சரோஜினி தனிக்குடித்தனம் பெயர்ந்தபோது சகல ஐஷ்வர்யங்களுடந்தான் வந்தாள். வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக ஒரு லட்ச ரூபாய். முப்பது பவுன் நகைகள். ப்ரிட்ஜ், டிவி, கிரைண்டர் உட்பட குடும்பத்துக்குத் தேவையான அத்தனை சமான்களுடன் விடை பெற்றுக்கொண்டபோது, உடைந்த குரலில் அம்மா சொன்னாள்: “இந்த லட்ச ரூபாய்ப் பணமும் சாமான்களும் உன் வாழ்க்கையின் ஆதாரங்கள். பாதுகாத்துக்கொள்.”
“கணவன்தான் வாழ்க்கையின் ஆதாரம்”என்று அம்மா ஆசீர்வதித்து அனுப்பி வைப்பாள் என்று எதிர்பார்த்திருந்த சரோஜினிக்கு அப்போது மிகுந்த ஏமாற்றம். உள்ளம் உடைந்து போனாள். எனினும் காட்டிக் கொள்ளவில்லை. அம்மா உலகம் புரிந்தவள். அனுபவசாலி.என்ன நடக்கும் என்பதை மூன்றாண்டுகளுக்குமுன்னரே ஊகித்துக்கொண்ட புத்திசாலி. அவளது அறிவுரைகள் இப்போது உறைக்கின்றன.
கணேஷ் பெண் வீட்டில் பெருமையடிக்கும் டைப். திருமணமான புதிதில், நண்பனின் மாருதி காரை ஓசியில் எடுத்துக்கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தியதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிசயித்துப் போனதென்னவோ உண்மை. தனது சம்பளத்தை ஆஹா ஓஹோ என்று அவன் அளந்தபோது எல்லோருமே வாயைப் பிளந்துகொண்டு பார்த்தார்கள்.
சரோஜினிக்கு அப்போது பெருமையாகத்தான் இருந்தது.
இங்கே வந்தபிறகுதான் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்தன: கணேஷுக்கு ஒரு சாதாரணத் தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா வேலை. கல்யாணத் தரகர் அவிழ்த்துவிட்ட மாதிரி பங்களா பந்தாக்கள் எதுவுமில்லை. வெறும் ஆறாயிரம் ரூபாய் வருமானம். எல்லாச் செலவுகளும் அதற்குள்தான். அப்புறம்தான் வேறு சில பொல்லாத சகவாசங்களும் அவனுக்கு இருப்பது தெரிய வந்தது.
இடைவிடாத சிகரெட் பழக்கம். அவ்வப்போது குடிப்பானாம். சூது விளையாடுவானாம். நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு விபசார விடுதிக்குப் போகும் பழக்கம்கூட உண்டாம்.
இதற்கெல்லாம் பணம் ஏது? மாதக்கடைசியில் கடன். வட்டிக்கடன். அதுவும் கந்து வட்டிக்காரனிடன் மீட்டர் வட்டி. உருப்படுமா குடும்பம்?
இதற்கிடையில், ஐம்பதாயிரம் ரூபாய் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தது போக, மீதிப்பணமும் நகைகளும் இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிட்டன.
சரோஜினி ஆரம்பத்தில் விநயமாகச் சொல்லிப் பார்த்தாள். கெஞ்சிப் பார்த்தாள். திட்டிப் பார்த்தாள். ஆர்ப்பரித்தாள். கணேஷ் எதுக்கும் மசியக்காணோம்.
திடீரென்று ஒருநாள். போதையில் வீட்டுக்கு வந்த கணேஷ், “எனக்கு ஒரு உதவி செய். உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் தேவை. உங்க அம்மாவிடம் கேட்டு வாங்கிட்டு வா. கடனை அடைச்சுட்டு எல்லா சகவாசத்துக்கும் முழுக்குப் போட்டுடுறேன்”என்று ஒரு குண்டைத் தூக்கி சரோஜினியின் தலையில் போட்டான்.
சரோஜினிக்குத் தூக்கி வாரிப் போட்டது. இதென்ன அராஜகத்தனம்? அம்மா கூறிய அறிவுரையையெல்லாம் தூக்கிக் குப்பையில் எறிந்தாயிற்று. இப்போது அவளிடமே போய் நின்று,
‘வட்டி கட்டுவதற்குப் பணம் தேவை’ என்று சொன்னால், ‘செல்லமகள் சந்தோஷமாகக் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாள்’என்று நம்பிக்கொண்டிருப்பவள் மனமுடைந்து போய் விடமாட்டாளா? பெற்று ஆளாக்கியவளுக்கு இப்படியோர் அதிர்ச்சியைக் கொடுக்கலாமா?
“முடியவே முடியாது.”
“ஏன்? தரமாட்டாங்களா?”
“ஆமா. அவங்ககிட்ட பணம் கிடையாது.”
“அப்ப்டின்னா நீ உனக்குத் தெரிஞ்சவங்ககிட்டே போய்ப் பணம் தோது பண்ணிட்டு வா. ஒரு மாசத்திலே திருப்பி அடைச்சுடலாம்.”
“எப்படி?”
“எனக்கு அடுத்த மாசம் ப்ரமோஷன், இன்க்ரிமெண்டெல்லாம் கிடைக்கப் போகுது”என்று கோணலாகச் சிரித்தான். சிகரெட் புகை முகத்தை மறைத்தது.
ஒரு குடும்பப் பெண் வெளியே கையை நீட்டிக் கடன் வாங்குவதாவது? இதைவிட ஒரு கண்ணியமான பெண்ணுக்கு வேறென்ன சோதனை இருக்க முடியும்?
சரோஜினி மடேர் மடேரென்று சுவரில் மோதிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
வரவர உடல் துரும்பாக இளைத்துக்கொண்டு வந்தது ஸ்நேகாவுக்கு. விழிகளைச் சுற்றிக் கருவளையங்கள். முகத்தில் சதா வாட்டம். அநேகமாகப் பேசுவதை நிறுத்திவிட்டாள். நடையில் துள்ளல் இல்லை. ஸ்கூல் சீருடை தொளதொளத்துவிட்டது.
கன்னத்தில் தாரை தாரையாக நீர் வழிய நெடுமூச்செறிந்தாள் சரோஜினி.
அவமானத்தால் மனமுடைந்து போயிருந்தான் கணேஷ். தனது குடும்பத்தில் இப்படியெல்லாம் நடக்குமென்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் தனது போக்கும் தீய பழக்க வழக்கங்களுமே காரணம். அவற்றின் கோரப்பசிக்குத் தனது செல்லக்குழந்தையையே காவு கொடுக்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஓயாமல் வாட்டியது. ஸ்நேகாவின் வைத்திய செலவுக்குக்கூடப் பணமில்லாமல்… சே! என்ன வாழ்க்கை இது?
கணவனை உற்று நோக்கினாள் சரோஜினி. தாடையெல்லாம் முடி வளர்ந்து அவன் சோகத்தின் உச்சாணியில் உழல்வது புரிந்தது. சற்று நேரம் யோசித்தாள் அவள். அப்புறம் சொன்னாள்: “ஸ்நேகாவுக்கு எக்ஸாம் ஆரம்பமாகப் போகுது. அவளை ஸ்கூலில் போய் விட்டுட்டு, அங்கேயே இருந்து அவளை அழைச்சுட்டு வந்துடுங்க. இல்லாவிட்டால் அவ ஸ்கூல் போகமாட்டா. ”
ஸ்நேகாவைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வது கணேஷுக்குப் பெரும்பாடாக இருந்தது.
மாலை ஐந்து மணி.
ஸ்கூல் பஸ் வந்து வாசலில் நின்றது. பஸ்ஸிலிருந்து ஸ்லோ மோஷனில் இறங்கிய ஸ்நேகா, வீட்டுக்குள் நுழைந்ததும் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை. தூசும் ஒட்டடையுமாக இருளடைந்து கிடந்த வீடு பளிச்சென்று காட்சியளித்தது. சமையலறை வாசலில் ப்ரிட்ஜ். எப்போதும் போல கிரைண்டரில் மாவு அரைந்துகொண்டிருந்தது. அதே சோபா அதே இடத்தில்.
மரமேஜைமீது அதே வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியில் ‘போகோ’ஓடிக்கொண்டிருந்தது.
ஸ்நேகாவின் முகத்தில் குபீரென்று விளக்குப் போட்டாற்போல் ஒளி பாய்ந்தது. ‘ஹைய்யா’என்று கரகோஷம் செய்கிறாள். முகத்தில் பழைய வசீகரச் சிரிப்பு. விழிகளில் வெளிச்சம்.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சரோஜினி. பூரிப்பும் நிம்மதியும் அவளது இதயத்தை நிறைத்துக்கொண்டிருந்தன.
வீட்டுக்குக் கொடுத்திருந்த அட்வான்ஸ் இவ்வளவு அரிய சாதனை படைக்குமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. என்ன, இனிமேல் குறைந்த அட்வான்ஸில் இன்னொரு வீடு தேடி அலைய வேண்டும்.
அதனாலென்ன?
***
Published in “Devi” weekly 15.12.2010 issue.
நன்றி : ‘தேவி’, ஏ.ஹெச். ஹத்தீப் | E-Mail : hatheeb@gmail.com