’போக புத்தகம்’ நூலில் இருந்து..
நன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்
*
நேற்று ஒரு நண்பர் திடீரென்று அழைத்து, தான் அடைந்த அவமானங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் வாழ்க்கை அவமானங்களின் கூடை. அவருடன் வாழ மறுத்துப்போன அவர் மனைவி சொன்னதாக அவர் ஒன்று சொன்னார். எந்த மனிதனையும் வீழ்த்திவிடும் ஒரு சொல். நான் ஏண்டா இன்னும் உயிரோட இருக்கேன்?’ என்றார். அவர் என்னை அழைத்துப் பேசினதற்கு ஒரு காரணம் உண்டு. அவரைப்போலவே நான் இன்னுமொரு அவமானங்கள் நிரம்பி வழியும் கூடை என்பதே அது. ஆனால் பெரிய அவமானங்கள் இல்லை . பிறர் சிறிய அவமானங்கள் என்று கருதக்கூடியவையே எனக்குள் ஆறாத ரணங்களாக இன்னும் இருக்கின்றன.
டிவியில் சினிமா பார்க்க என்னையும் தன்னுடன் கூட்டிப் போன நண்பனின் அக்காவிடம், இவனைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியலியே. இவனை இனிமேல் கூட்டிட்டு வராதே’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சொன்னது, கார்க் கதவை இப்படி சத்தமாச் சாத்தக்கூடாது என்று பணக்கார நண்பன் முகம் சுளித்தது, வேலை நிமித்தமாகப் போன இடத்தில் பேருந்து இல்லாமலாகிவிட ஆட்டோ வரவழைத்த பெண் உயரதிகாரி பின்னால் வேறு ஆளே இல்லாதபோதும் என்னை முன் சீட்டில் டிரைவரோடு உட்காரப் பணித்தது (நான் மறுத்து 6கிமீ நடந்தே ஊருக்கு வந்தேன்) போன்ற சிறியதுபோலத் தோற்றமளிக்கும் நுட்பமான அவமானங்கள்.
இந்த அவமானங்களைச் செய்கிறவர்களைக் கவனித்திருக்கிறேன். தெரிந்தே பலர் செய்வார்கள். ஒரு வகையில் அவை உன் இடம் இது’ என்று நமக்கு சுட்டிக்காட்டுவது. சிலர் இயல்பாகவே அவர்களையும் அறியாமல் தங்கள் வர்க்கத்தால், சாதியால், பதவியால் இந்த அவமானங்களை மற்றவருக்குச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள். இது மாதிரி சமயங்களிலெல்லாம் ஏனோ நான் என் அப்பாவைத் தான் நினைத்துக்கொள்வேன். அவர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதுபோல. இப்படிப் பூஞ்சையாய் வளர்த்து என் னைத் தெருவில் விட்டாயே என்பதுபோல. தந்தை மகற்காற்றும் உதவி அவையில் முந்தி இருக்கச் செய்வது அல்லவா?
நான் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் அப்பாவிடம் கொட்டுவேன். அப்போதெல்லாம் அப்பா மிகுந்த பதற்றமும் துயரமும் அடைந்து இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். அது நேரடியாக என் வாழ்வு மட்டுமல்ல, அவர் வாழ்வும் ஒரு தோல்விதான் என்று சுட்டிக் காட்டும் செயல் என்பது இப்போது புரிகிறது. பின்னர் அவர் மனச் சிதைவில் விழுந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று உணர்கிறேன். நான் மெல்ல மெல்ல என் தோல்விகளால் அவரை உடைத்தேன். தன் மகன் இந்நேரம் யார் முன்னால் குறுகி நிற்கிறானோ என்ற பதற்றத்திலேயே அவர் கடைசிக் காலங்களில் இருந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் என் வீட்டுக்கு எதையோ விற்க வந்தார்கள். ஏதோ ஒரு வணிகப் படிப்பின் மாணவர்கள். அவர்களை களப் படிப்பு என்று கூறிப் பொருட்களை விற்க அனுப்புவது இங்கொரு வழக்கமாக உள்ளது. நான் மறுத்தேன். அவர்கள் விடாது வற்புறுத் திக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, வெளியே போங்கலே’ என்று கத்திவிட்டேன். அவர் கள் ஒருகணம் ஸ்தம்பித்து பிறகு, சாரி சார்’ என்று விலகிப் போனார்கள். மனைவி அருகில் வந்து என்னாச்சு’ என்றாள். உண்மையில் எனக்கே எனது எதிர்வினை அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் செய்தது சற்று அதிகம்தான். ஆனால் இளைஞர்கள். அவர்களுக்கு இவ்வளவு விற்றால்தான் மதிப் பெண் என்ற இலக்குகள் எல்லாம் உண்டு. எல்லாம் நான் அறிவேன். இருந்தாலும்….
நான் மிகுந்த குற்றமாய் உணர்ந்தேன் ஒரு கட்டத்தில் தாள முடியாது வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைத் தேடிப் போனேன். தபால் ஆபீஸ் அருகே உள்ள டீக்கடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். என்னைக் கண்டதும் சற்று மிரண்டார்கள். நான் வண்டியை நிறுத்தி, அந்தப் பொருளை வாங்கிக்கறேன் தம்பி’ என்றேன்.
இன்று காலை அவர்களில் ஒரு பையன் என்னைத் தேடி வந்தான். என்னைப் பார்த்ததும், பொருள் விக்க வரலை சார்’ என்றான் அவசரமாக . பிறகு தயங்கி, படிப்பு முடிஞ்சு போச்சு. ஊருக்குப் போறேன் சார். உங்ககிட்டே சொல்லிட்டுப் போணும்னு தோனுச்சு.’ நான் சற்று வியப்படைந்து அவனை உள்ளே வரச் சொன் னேன். ‘உன் ஊர் எங்கே?’
திருநெல்வேலிப் பக்கம் செய்துங்க நல்லூர் சார்.”
ஓ, எனக்கும் அங்கனக்குள்ளதான்.’
தெரியும் சார். பேச்சிலே கண்டுபிடிச்சேன். சற்று நேரம் மௌனம்.
அவன் திடீரென்று , அன்னிக்கு ஏன் சார் தேடி வந்தீங்க?’ என்றான்.
நான் சற்றுத் தடுமாறி, ‘உங்களை ரொம்பத் திட்டிட்டதுபோல தோனுச்சு.’
அவன் அதைக் கேட்காமல் கண்கள் தூரமாகி, எங்க அப்பா வும் இப்படித்தான் சார்’ என்றான். அவர் வாத்தியார். பள்ளிக் கூடத்திலே யாரையாவது அடிச்சிட்டா, ராத்திரிலாம் எழுந்து அழுதுகிட்டிருப்பாரு என்றவன், நீங்க பரவால்ல சார். இங்கே சில வீட்டுல நாயை ஏவி விட்டுடறாங்க.’
நான் மிகுந்த தர்ம சங்கடமாய் உணர்ந்தேன். மன்னிச்சுக்கோ தம்பி. ரொம்ப மோசமா நடந்துகிட்டேன் அன்னிக்கி.’
அவன், ‘ஐயோ சார்’ என்றான். பிறகு எழுந்து, வரேன் சார்.”
நான், இரு, உன்னியக் கொண்டுவிடறேன்’ என்று அவன் மறுக்க மறுக்க அவனை வண்டியில் ஏற்றி குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவிட்டேன். டீ சாப்பிடறியாடே.’
‘வேணாம் சார்.’
‘பரவால்ல சாப்பிடு.’
நாங்கள் டீ சாப்பிட்டோம். பஸ் வந்தது.
கூட்டமா இருக்கே. போயிடுவியா?” அவன், பரவால்லை சார்.’
ஊருக்குப் போக பைசா வச்சிருக்கியா?’
இருக்கு சார்.’
நான் தயங்கி, உங்க அப்பாவைக் கேட்டதாச் சொல்லு.’
அவன் புன்னகைத்து, அவரு செத்துப் போயிட்டாரு சார்’ என்றபடி பேருந்தில் தாவி ஏறிக்கொண்டான். ‘ஊருக்கு வந்தாக் கட்டாயம் வாங்க சார்.’
நான் ஏனோ மிகுந்த தளர்வாய் உணர்ந்தேன். சற்றுநேரம் அங் கேயே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன்.
வீடு வந்ததும் மனைவியிடம் அவசரமாக, கீர்த்தி எங்கே?’ என்றேன். அவள், ‘விளையாடப் போயிருக்கான்’ என்றாள். பின்பு நெருங்கி, என்ன, உன் மூத்த மகனை பஸ் ஏத்தி விட் டாச்சா?’ என்று கேட்டாள். நான், என்ன உளர்றே?’ அவள், ‘நான் உளறலை. நான் தான் உன் கண்ணைப் பார்த்தேனே. நீ கீர்த்தியை மட்டும் ஒருமாதிரி தலையை சாய்ச்சி, நாடியை உயர்த்திப் பார்ப்பே. அந்தப் பையன் பேசப் பேச, நீ அதேமாதிரி அவனைப் பார்த்தே’ என்றாள். நான் சற்றுநேரம் அசையாது அப்படியே நின்றிருந்தேன். பிறகு தலையை உலுக்கிக்கொண்டு, “ச்ச்ச்சே’ என்றேன். பிறகு கீர்த்தி நினைப்பும்தான். ஆனா அதைவிட அப்பாவோட நினைப்பு.
அவள் இன்னும் நெருங்கி, ஒன்னு தெரியுமா?” என்றாள். ‘என்ன?’ “நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். இன்னிக்கு அப்பாவோட திதி.’
*
Thanks to : Bogan Sankar