பர்ஸக் (மலையாளச் சிறுகதை) – வெள்ளியோடன்

தமிழில் : ஆர். முத்துமணி

*

பர்ஸக்

வெள்ளியோடன்

சுற்றுப்புறமிருந்து வரும் மந்திர ஒலிகளால் செவிக்கெட்டாமல் போகக்கூடியவையாக இருந்தன ஆயிசும்மாவின் விசும்பல்கள். துருக்கி பள்ளிவாசலின் பின்புறம், விசாலமும் வட்டவடிவமும் கொண்ட மத்தாஃப் இடங்களில், ஒரு இடத்தில் பெரிய தூண்களில் ஒன்றோடு சேர்த்து நிறுத்தியிருந்த வீல் செயரில் மார்பிள் பதித்த நிலத்திலிருந்து சாக்ஸ் அணிந்த கால்களுக்கு குளிர் பரவாமலிருக்க வீல் செயரின் ஃபுட் ஸ்டெப்பிலேயே கால்களை அழுத்தியபடி இருந்த ஆயிசும்மாவின் உதடுகளின் மெல்லிய விசும்பல்கள் என் காதுகளுக்கு எப்படி எட்டியது என்று இப்போதும் எனக்கு புரியவில்லை. பல தேசங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடமும் கஅபவுக்கு சுற்றுமாக வலம் வந்து கொண்டிருந்தனர். இஹ்ராம் வேஷம் (உடை) அணியாதவர்கள் அனைவரும் மூன்று அடுக்கு மாடியில் இருக்கும் மத்தாஃப் இடங்களில் தொழுகை நடத்துகிறார்கள். நடக்க இயலாதவர்களும் அப்படியே.

மதிய உணவுக்குப் பின் நேராக இங்கேதான் வந்தேன். கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கலாம். கடந்த நான்கு நாட்களாக இறை நம்பிக்கையின் இனிமையை மனசு நுகர்ந்து கொண்டிருக்கிறது. எனக்குள் இருக்கும் என்னை பூரணமாக ஒரு வெயிலுக்கு வெளியே உதரிவிட்டு உடலில்லாத ஆத்மாவின் தணியான பயணம். மனைவியின் நிர்பந்தம் என்னை உம்ரா செய்ய வைத்திருக்கிறது.

“மனம் சாந்தியடையட்டும்’ அவளுடன் கொஞ்சம் கோபம் தோன்றாமல் இருக்கவில்லை. அப்படி தோன்றுவதிலும் பெரிதாக வியப்பதற்கு எதுவுமில்லை. இறைவனோடு என்றும் முகம் திருப்பி நடப்பவன் தானே நான். அவள்அதற்கு நேர்மாறானவள். என்னுடன் ஒத்துப்போவதின் காரணம் என்னுடைய அன்புக்கு அவள் அடிபணிவதால் தான் என்று பலமுறை சொல்லி இருக்கிறாள்.

என் மேல் அளவற்ற அக்கறை இல்லாதவராக மாறி விடுகிறீர்களா?. கொஞ்சம் விளையாட்டாக அவள் கேட்டது நானும் அவளும் மட்டும் இருந்த தனியான நிமிடங்களில் தான். இயல்பு வாழ்க்கையின் கடைசியும் ஆத்மிய வாழ்க்கையின் துவக்கமும் சந்திக்கும் முத்தங்களுக்கு இடையே அது நிகழ்ந்திருக்கலாம். உதடுகள் விலகாத புன்னகையைத்தான் நான் அவளுக்கு பதிலாக அளித்தேன். மெல்லிய விசும்பல்கள் கேட்ட இடத்திற்கு முகம் திருப்பிய போது தான் அயிசும்மாவைப் பார்த்தேன். விசும்பல்கள் சுத்தமாக என் மனதை பாதித்திருக்கவில்லை. அதற்குக் காரணம் கஅபவுக்கு சுற்றிலுமாக பாப பாரங்களை இறக்கி வைத்த மனிதர்கள் அழுவதை வழக்கமாக பார்த்திருந்ததனால் தான். அப்படியும் எனக்கு அயிசும்மாவிடம் கேட்காமலிருக்க இயலவில்லை.

“தனியாகத்தான் வந்தீர்களா?’ இளம் பிங்க் நிறத்தில் உள்ள மக்கனாவும், தோளில் தொங்க விட்டிருக்கும் சின்ன தோல்பையின் மேலிருந்த விலாசமும் என்னை தமிழில் பேச தூண்டியது. குடும்பத்தினர் யாரும் கிடையாது. ஒரு குழுவினருடன் வந்தேன். அப்படியென்றால் அவர்கள் எங்கே? உம்ரா செய்யவும் சுற்றிப் பார்க்கவும் போயிருக்கிறார்கள். என்னைக் கூட்டிச் செல்ல இயலாது என்று கூறிவிட்டார்கள். வயது ஏறிவிட்டதல்லவா? காலையில் என்னை இங்கு கொண்டு வந்துவிட்டு விட்டனர். ஏத்திக்காஃபின் (தனிமை தியானத்தின்) கூலி கிடைக்குமல்லவா? அறுந்துவிழும் சத்தத் துண்டுகளாக இருந்தன அயிசும்மாவின் வார்த்தைகள். ஆயிஷா பள்ளிக்காவது போக வேண்டும் என்று நினைத்தேன். தூரத்தில் மனிதர்கள் கூட்டம் பொதிந்து நிற்கும் கருப்புக் கல்லை பார்த்தபடி அவர் சொன்னார்.

“அதற்கென்ன, போகலாமே நானிருக்கிறேன்’ என்னையறியாமல்தான் நான் அப்படி கூறினேன். எதிர்பாராத என் வாக்குகளைக் கேட்டு  பக்கம் திரும்பிய அயிசும்மாவின் கண்களில் வெளிச்சம் மின்னி மறைந்தது.

“முதல் உம்ரா முடிந்ததா?’.

அது முடிந்தது. ஆனால் தவாஃப் செய்தது இங்கிருந்து தான். கீழே கஅபக்கு அருகே போக முடியவில்லை.

“நாம் கஅபவுக்கு அருகே சென்று தவாஃப் செய்வோம். நான் உங்களை நடத்திக் கூட்டிச் செல்கிறேன். இங்கேயே இருக்கத்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். வரும் போது காணவில்லை என்றால் பிரச்சினையாகும். அதற்கு வழி இருக்கிறது. அயிசும்மாவின் கழுத்தில் நாடாவில் தொங்கிய அடையாள அட்டையிலிருந்து குழு அமீரின் நம்பருக்கு டயல் செய்தேன். அயிசும்மாவின் முகம் கஅபவுக்கு மேலே காணும் வெளிச்சமும் தூய்மையும் நிறைந்த ஆகாயம் போலே மின்னிக் கொண்டிருந்தது. கஅபவுக்கு மேலே வட்டமிட்டுப் பறக்கும் பேர் தெரியாத பறவைக் கூட்டங்களைப் போல அயிசும்மாவின் முகத்திலும் முதிர்ந்த வயதின் அடையாளமாக சில கருப்பு நிறப் புள்ளிகள் சிதறிக்கிடந்தன. நிறைந்திருந்த கண்கள் எவ்வளவு சீக்கிரமாக பாலைவனம் போல வறண்டு உலர்ந்து போயிற்று. மத்தாஃபிலிருந்து பார்த்தால் கஅபவுக்கு சுற்றும் முஹ்ரிமீன்கள் காணலாம். உலகத்தின் வெட்டி எடுத்த ஒரு பகுதி. பல பகுதிகளிலிருந்து வந்த வியர்த்து உலர்ந்து போன வயசான முகங்கள் தான் எங்கேயும். மரணத்தின் நூல் பாலத்திற்கு நடந்து ஏறும் முன்னர் தெய்வத்தின் அருள் கிடைத்த வீட்டுக்குச் சுற்றும் வட்டமிட வந்தவர்கள். கருப்புக் கல்லில் முத்தம் கொடுத்து, பாவங்களையெல்லாம் அதோடு சேர்த்து வைக்க தூரங்களை அறுத்து பயணித்து வந்த மனிதர்கள். நான் மெதுவாக அயிசும்மாவின் வீல் செயரை மத்தாஃபின் முதல் மாடியிலிருந்து கீழே இறக்கும் போது அவரது முகத்தில் தெரிந்தும் தெரியாத ஒரு கேள்விக்குறி இருந்தது. ஆயிஷாப்பள்ளிக்கு போகிறோம் என்று தெரிந்ததும் அயிசும்மாவின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது. என் இதயத்தில் அப்போது கொஞ்சமும் பாரம் இருக்கவில்லை. மனதுக்கும் உடலுக்கும் பாரமேதுமில்லாமல் காற்றில் பறந்துயரும் இலவம் பஞ்சுபோல.

நீங்கள் அழுதபடி பிரார்த்தனை செய்ய வேண்டும். கடவுள் தராமல் இருக்கமாட்டார். புறப்படும் போது அவள் சொன்னது நினைவில் வந்த வண்ணமிருந்தது. இன்றைய மருத்துவ வசதிகளின் எல்லைகள் முடிவுக்கு வந்த போது மிச்சமிருக்கும் எதிர்பார்ப்பின் தீவாக இருந்தது இந்த புனிதப் பயணம். நான் புனிதப் பயணம் போவது எனது சொந்தக் காரியம் நடப்பதற்காக இருக்கக் கூடாது என்பது தான் என் எண்ணம். என்னுள் இருக்கும் பிடிவாதக்காரன் முட்செடி குத்துவது போல வார்த்தைகளை கூர்மையாக்கி நடந்தான்.

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ப்ளீஸ். சிகிற்சை பலனளிக்காமல் போனது உங்களது இந்தப் பிடிவாத குணத்தால் தான்.’ அவள் அப்படி சொன்ன போது மனதில் வந்தது பெருமித உணர்வுதான்.

பிடிவாதக்காரன் என்ற பெருமை. இறை நம்பிக்கையின் வட்டத்துக்குள்ளே சுற்றிவரும் கணவனைத்தான் அவள் விரும்பியிருந்தாள் என்று பல நேரங்களில் அவளது வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிந்ததுண்டு. அயிசும்மா சத்தமாக ஜபம் செய்தது என்னை மத்தாஃபுக்கு வெளியேயான கரடுமுரடான நிலத்தில் கொண்டு வந்துவிட்டது. பையில் தொங்கவிட்டிருந்த செருப்பை அணிந்து கொண்டேன். ஹரம் பள்ளியுடயவும் மக்கா முனிசிபாலிட்டியுடையவும் எல்லையில் நிறுத்தியிருந்த டாக்சி ஒன்றில் நாங்கள் ஏறினோம்.

நபர் ஒன்றுக்கு ஐந்து ரியால் என்ற கணக்கில் ஆயிஷாப்பள்ளிக்கு கூட்டிச் சென்று இஹ்ரம் செய்து திருப்பிக் கொண்டுவந்து விடுவர்.

அயிசும்மா கேட்டார் மகனே; உனக்குத் தெரியுமா? ஆயிஷாப்பள்ளிக்கு அந்த பெயர் வரக் காரணம் என்ன என்று தெரியுமா?

எனக்குத் தெரியாது என்பதை ஒüõவு மறைவு இல்லாமல் நான் சம்மதித்தேன். “அப்படின்னா கேட்டுக்கோ’ அயிசும்மா ஆயிஷாப்பள்ளி பற்றய கதை சொல்லத் துவங்கினார்.

இறைதூதரின் மனைவியான ஆயிஷாம்மாவின் உம்ரா பாதி வழியில் முறிந்து போனது அவருக்கு தீடீரென்று மாதவிடாய் வந்ததனால்தான். சகோதரன் அப்துர் ரஹ்மானோடு சேர்ந்துதான் ஆயிசா தன்ஈம் என்ற அமைதியான இடத்தில் இரண்டாவது இஹ்ராம் செய்தது. வரலாற்றை நினைவுக்கு கொண்டு வருவதால்தான் பள்ளிக்கு அப் பெயர்.

ஹரமின் எல்லை தாண்டி ஆயிஷாப்பள்ளியின் வாசலை அடைய அதிக நேரம் தேவைப்படவில்லை. புதுமையின் முன்னேற்றத்தால் பழமையின் சின்னங்கள் முற்றிலுமாக மாறியிருந்தன. பள்ளிக்குச் சுற்றிலுமான சுவர் நிறைய அரபி காலிக்ராபிதான். ஆங்காங்கே சிறு வியாபாரிகள் இருக்கிறார்கள். தஸ்பீக்கள் (ஐபமாலைகள்) தான் அதிகம் விற்பனைக்கு இருக்கின்றன. உதடுகளில் விரியும் இறை துதியின் கணக்குகள் சேகரிக்க தஸ்பீஹ் வேண்டுமா உம்மா?

அதெல்லாம் வேண்டாம். கொடுப்பது எதற்குமே நான் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. தெய்வத்துடன் கணக்குகள் காட்ட அவசரப்படும் மனிதர்களுக்கிடையே கணக்கே தேவை இல்லை என்று நினைக்கும் உம்மா. மனதில் தோன்றும் மதிப்பின் கிராஃப் உயர்ந்து கொண்டே இருந்தது.

உம்ராவின் முதல் நிபந்தனை தான் இஹ்ராம். பெண்கள் முகமும் முன்கையும் தவிர உடல் முழுவதும் மறைக்க வேண்டும். ஆண்கள் தைக்கப்படாத ஒரு துணியை இடையில் கட்டிக் கொள்ள வேண்டும், மற்றொன்றை வலது தோள் மேலே மூடிக் கொள்ளலாம்.

பெண்களின் தொழுகை இடம் ஆயிஷாப்பள்ளியில் தனியாக இருந்தது. தமிழகத்தில் இருந்து வந்த வேறு ஒரு கூட்டத்தினருடன் அயிசும்மாவை அனுப்பும் போது மனது பதறியது.

தனியாக எதுவும் செய்து கொள்ள இயலாத உம்மா. அல்லாஹ்! வீல் செயர்கள் பள்ளிக்கு உள்ளே செல்லாது. சிறுபடிகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும்.

உயரம் குறைந்த வெள்ளை நிற இந்தோனேசியர்கள் தான் அதிகமும் பல நிறங்களிலான படங்களுடன் கூடிய இறுக்கமற்ற தளர்ந்த ஆடைகள் அணிந்த பெண்களுக்கிடையே ஆயிசும்மாவுடைய வீல் செயரை பெயர் தெரியாத யாரோ ஒரு பெண் தள்ளிச் செல்லும் காட்சியின் வேதனை நீர்குமிழி போல தோன்றி மறைந்து போனது.

வூளு செய்து வேகமாக புறப்பட்டேன். கையிலிருந்த துணியை தொப்புளோடு சேர்த்து இடையில் இருக்கக் கட்டினேன். வேறொரு துணி எடுத்து வலது தோளில் மூடிக் கொண்டேன். பள்ளி வாசலுக்கு உட்புறமுள்ள மிருதுவான பட்டுவிரிப்பில் நனைந்தப் பாதங்களை வைக்கும் போது, வரலாற்றின் வாசல்களை திறந்து ஆயிஷா வாசல்படியில் வந்த அமர்ந்திருக்கிறார். நபியின் அன்பின் பாதியை நுகர்ந்த மனைவி. குழந்தைப் பேரின்மையின் வேதனை ஆயிஷாவை எப்போதாவது பாதித்திருக்குமா? மனது சில இடுக்குகள் வழியாக ஆழ்ந்து இறங்க முயன்றது. என்னை வாழ்க்கையில் வரிந்து முறுக்கிய வேதனைகளோடு சரிசமமான  வேதனை அனுபவிப்பவர்களோடெல்லாம், இதயத்தில் ஒரு அனுதாபம் நிறம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் ஆயிஷாவுக்கு அப்படியான வேதனைகள் ஏதும் ஏற்பட்டிருக்காது. உலகத்துக்கே தாய் என்ற பட்டமல்லவா அவருக்கு கிடைத்திருப்பது.

ஆயிஷாவுடையவும் என்னுடையவும் வேதனைகள் ஒரே வழியில் ஒன்றுக்கொன்று காணாமல் வெகுதூரத்துக்கு பயணித்துக் கொண்டிருக்கலாம். இல்லை. என் வேதனைகளின் பயணம் இங்கு முடிந்துவிடும். மாதவிடாய்க்குப் பின் பதினான்காம் இரவில் நான் அவளுக்குத் தந்த பீஜங்களின் உயிர் மரித்திருக்காது. ஜோடியை சேர்த்துக் கொண்டு அது இப்போது மெதுவாக கர்ப்பப்பைக்குள் பயணித்துக் கொண்டிருக்கும். மக்காவுடையவும் மதீனாவுடையவும் களங்கமற்ற ஆகாயங்களுக்கு கீழிருந்து தொழுகை செய்தபின் ஊருக்கு திரும்புகையில் அவள் விசேஷங்களைக் கூறுவாள். சிந்தனைகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டுத்தான் தொழுகை செய்து முடித்தேன். உடலை மூடியிருந்த துணியின் ஒரு மூலையை கக்கத்தின் வழியாக இழுத்து பூணுôல் போலாக்கி பெண்களின் வாசலுக்கு அவசரமாக நடந்தேன். உடனிருக்கும் பெண்களிடம் சலசலவென்று ஏதோ பேசிக் கொண்டு ஆயிசும்மா வருகிறார். அறுவடை முடிந்த வயல் வெளிபோல பற்கள் இல்லாத ஈறு காட்டிச் சிரிக்கும் உதடுகள். வெள்ளையும் கருப்பும் சேர்ந்திருக்கும் மேல் புருவம்.

அயிசும்மாவின் வீல் செயரோடு சேர்ந்து நின்றபடியேதான் மனதில் முடிவு செய்தேன். உம்ராக்காக ஜஹ்காமில் நுழைகிறோம் என்று.

மகனே, இந்த நிமிடம் முதல் நமது தலையிலிருந்து முடி வெட்டிப் போடவோ நகம் வெட்டவோ கூடாது. மனதில் தப்பான எண்ணங்கள் எதுவும் வரக்கூடாது. அயிசும்மா சில நேரங்களில் என் குருவாக மாறிவிடுகிறார். வீல்செயரின் சக்கரங்கள் காத்தாடி மரத்துக்குக் கீழே காத்திருக்கும் காருக்குப் பக்கம் சென்றது. கார்சீட்டை சரித்துப் போட்டு சிறு இடைவேளை நேரங்களில் தூக்கத்தின் கடன்களை திருப்பிக் கொடுக்கும் ஓட்டுனரை மெதுவாக தட்டி எழுப்பினேன்.

சுற்றுப்புறம் எங்கும் மந்திரங்கள் முழங்கிற்று. லப்பைக் அல்லாஹம்ம லப்பைக் லப்பைக் லா ஷரீக லக லப்பைக் இன்னல் ஹம்த வன்னியாமத்த லகவல் முல்க் லாஷரீக லக்.

டாக்ஸியிலிருக்கும் முன்பின் தெரியாத இந்தோனேசியக்காரர்களுடையவும் என்னுடையவும் அயிசும்மாவுடையவும் உதடுகளில் ஒரே மந்திரம். ஆயிசும்மாவின் கைமேல் வந்து அமர்ந்த ஒரு கொசு என்னை நிம்மதியிழக்கச் செய்தது. வற்றிக் கொண்டிருக்கும் இரத்தத்திலிருந்து ஒரு துளி உறிஞ்சு குடிக்க கொசு முயற்சி யெடுப்பது கண்ட போது எனக்கு கோபம் வந்தது. அயிசும்மாவுடன் நானும் ஆரோக்யமுடைய டாக்ஸி ட்ரைவர் பட்டாணியும் இருக்கிறார். அப்படியிருந்தும் அயிசும்மாவின் மேல்தான் கொசு போய் அமர்ந்துள்ளது. எதிர்க்க திராணியில்லாதவர்களைத்தான் உலகத்தில் எங்கேயும் சுரண்ட முயல்வார்கள்.

நான் அதை அடிக்க கை ஓங்கியதும் அயிசும்மா பின்னுக்கு கை இழுத்ததும் கொசு பறந்து போனதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. “‘இங்கே இரத்தம் விழக்கூடாது மகனே. ஹரமுக்குக்ளே ஒரு உயிரினத்தையும் கொல்லக் கூடாது. அது பெரும் பாவம்”. ஒரு சன்னியாசினியைப் போல அயிசும்மா பேசினார். “”உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் இந்த ஹரமில் இறைவனின் தற்காப்புடன் இருக்கும்” அயிசும்மா மேலும் சொன்னாள்.

தன்யிமில் இருந்து அதிகம் தூரம் இல்லாததனால் விரைவாகவே டாக்ஸி ஹரம் பள்ளியை அடைந்தது. மலைகளால் சுற்றப்பட்ட ஒரு பள்ளத்திலிருக்கும் நகரம் தான் மக்கா. முஹம்மது நபி பிறந்ததும் வளர்ந்ததும் இந்த மண்ணில் தான். சிறுவனாக இருக்கும் போது அனாதையாக இருந்து பின்னர் இறை தூதராக மாற்றம் தந்த இடம். அன்பின் பன்னீர் புஷ்பங்களை சொரிந்த மனிதர்களே தத்துவங்களில் பெயரால் அவர்மேல் முள்ளாலான மாலைகள் சூட்டினர்.

முஹம்மது நபி பிறந்த வீடு நூலகமாக மாறியிருக்கிறது. அதற்கு நேராக இருந்த வீடு குரூரமாக விஷம் தடவிய வாளுடன் பின் தொடர்ந்திருந்த அபூஜஹலினுடையது.  அது கழிப்பிடமாக மாறியிருந்தது.

ஹரமுக்கு உள்ளே வரும்போதே சம்சம் நிறைத்த டப்பாக்கள். குளிரூட்டப்பட்டதும் அல்லாததும். குளிர்மையில்லாத சம்சம்தான் நான் அயிசும்மாவுக்கு வாங்கிக் கொடுத்தேன். என்னுடையவும் அயிசும்மாவுடையவும் செருப்புகள் சிறு பையில் திருகி கழுத்தில் இட்டுக் கொண்டேன்.

வீல்சேரில் இருக்கும் போது முதுகு வலி இருந்ததா என்று ஒரு சந்தேகம். அயிசும்மாவிடமிருந்து வெளிப்பட்ட ஒரு சிறிய முனங்கல் தான் எனக்கு அப்படியான ஒரு சந்தேகத்தைத் தந்தது. அங்கு சோம்பலுடன் சுற்றித்திரியும் ஒரு நாயை நான் அயிசும்மாவுக்குக் காட்டினேன். நாய்க்கு என்ன குறைச்சல்? சொர்க்கத்தில் கூட நாய் உண்டு. நாயும் கூட அல்லாஹ்வின் சிருஷ்டி தான் மகனே. எல்லா படைப்பினங்களையும் அல்லா நேசிக்கிறான். இஸ்லாமியர்களை மட்டுமல்ல. சகல மனிதர்களையும் சகல உயிரினங்களையும் கண்டு பயப்படுவதற்கு அல்லாஹ் ஒரு தீவிரவாதியல்ல. அன்பு தான். அன்பு மட்டும்தான். சிந்தனைகளை தூண்டிவிடுபவைகளாக அயிசும்மாவின் வார்த்தைகள் இருந்தன.

மக்காவின் நேரம் தெரியப்படுத்தும் பச்சை நிறமுள்ள மணிக்கூண்டுக்கு நேராக இருக்கும் நுழைவு வாயிலில் சென்றடைந்த போது ஒரு போலீஸ்காரர் சிரித்த படியே சொன்னார், “வீல் செயர் மம்நூ”. போலீஸ்காரரின் வார்த்தைகள் அயுசும்மாவுக்கு புரிந்தது. அதனால் தான் ஒரு தமாஷ் போல சிரித்தபடியே அயிசும்மா சொன்னார்:

இதுதான் மகனே நான் சொன்னது. இதற்கப்பால் போக வேண்டுமென்றால் நடந்தே ஆகவேண்டும். அவசரமாக போய்க் கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி நான் அயிசும்மாவை வீல்செயரிலிருந்து எழச் செய்தேன். தரையோடு அமர மறுக்கும் கால்கள். கைகளை என் தோளோடு சேர்த்துப் பிடித்தபோது கால்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது போல இருந்தது. தரையில் ஊன்றிய பாதங்கள் தள்ளாடித் தள்ளாடி முன்னுக்குச் சென்றது. கஅபவின் வாசம் தங்கியிருந்த மார்பிள் தரையில் காலை அழுத்தி வைக்கும் போது இந்த உலகில் காண இயலாத, தெய்வீகமான ஒரு சக்தி அயிசும்மாவின் கால்களுக்கு கிடைத்திருந்ததோ? முன்னால் மட்டும் பார்த்தபடி தவழ்ந்து செல்லும் மனிதர்கள். ஒவ்வொரு முறை சுற்றி வரும் போதும் நான் அயிசும்மாவை கஅபவுக்கு பக்கமாக நெருங்க வைத்துக் கொண்டே இருந்தேன். ஏழாவது சுற்று கடந்தவுடன் அயிசும்மாவின் இரண்டு கைகளும் கருப்புக் கல்லோடு சேர்த்து வைத்த போது அவருக்கு மட்டுமாக உருவான வெற்றிடத்தில் நின்றபடி கருப்பு கல்லில் உதடுகள் முத்தி சத்தமாக அழுது கொண்டிருந்தார். பிறந்து விழுந்த குழந்தையைப் போல. கஅபவின் கருப்பு கல்லிலிருந்து அயிசும்மாவை அழைத்துக் கொண்டுவர மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. தவாஃபின் தொழுகைக்கு வீல் செயரில் தான் போனார்கள்.

நினைவுகளின் தூரத்தில் அவளது முகம் மெதுமெதுவாக தெளிவு பெறத்துவங்கியது. இன்பெர்ட்டிலிட்டியின் எல்லா பரீட்சைகளையும் தாண்டித்தான் இகசி நிலையத்துக்கு வந்திருந்தோம். செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் நிலையம். அலோப்பதியும், ஆயுர்வேதமும், யுனானியும் ஆதிவாசிகளின் சிகிற்சை முறையும், முயற்சி செய்து, அதற்கு துணையாக என்பது போல மந்திரங்களும் தெய்வீகக் கடமைகளும் நிறைவேற்றப்பட்டது. மெதுவாக அவையெல்லாம் பலனில்லாமல் போன போதுதான் மிகவும் புதுமை நிறைந்த இன்ஃபெர்ட்டிலிட்டி க்ளினிக்கின் கண்ணாடிக்கதவுகள் கடந்து உள்ளே சென்றது. இகசி செய்வதற்கு டாக்டர் உபதேசித்தார்.

பரிசோதனைகூடத்தின்  உள்ளறைகளில் அம்மணமாக்கப்பட்ட மலட்டுத் தன்மை. சுற்றிலுமிருந்த நீல நிற வேஷமணிந்தவர்கள் மரணம் மூடிய அழகிகளை நினைவு படுத்தினர். கால்களை அகற்றி வைக்கச் சொன்னார்கள், பஞ்சாபியான டாக்டர் ரேஷ்மாவின் பாதி தமிழில் தரும் அறிவுரைகளை ஒரு குழந்தையைப் போல அனுசரித்தோம். ஒரு குழந்தைக்காக. மெதுவாக திறந்த யோனி வாசல் வழியே கண்ணாடி ட்யூபுக்குள் அண்டங்கள் ஒழுகி வந்தன.

பவுர்ணமியின் வெளிச்சமும் முழுமையும் பெற்ற அண்டங்கள். குழலுக்கு மேல் படிந்திருந்த யோனிநீர் நாப்கினால் துடைத்தெடுத்தனர். பாதி மயக்கத்திலிருந்தாள். ஒரு வசம் கூர்மையான டெஸ்ட்யூபுக்குள் அண்டங்களை செலுத்தினர். லாபின் முன்புறமுள்ள சோபாவில் கனவுகளுக்கு நிறம் கொடுத்துக் கொண்டிருந்த போது நர்ஸ் ஒரு குறிப்பு கொண்டு வந்து  தந்தார். எனது பீஜங்கள் எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். நம்பர் எழுதிய ப்ளாஸ்டிக் பாட்டிலுடன் அறையின் வாசல் திறந்து உள்ளே சென்றேன். தளம் கெட்டி நிற்கும் அவளது பெருமூச்சுக்களில் இருந்து பிரித்தெடுத்த இரதியின் மெல்லிய சுரங்களுடன், தனியாக மைதுணம் செய்து அதன் அனுபூதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் வந்து பீஜங்கள் தெறித்து விழுந்தன. வழுவழுப்பான திரவத்துக்குள் அது நீந்தித் திரிந்தன. ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் தனித்தும்.

பரிசோதனைகூடத்திலிருக்கும் நர்ஸின் கைகளில் மூடிய ப்ளாஸ்டிக் பாட்டில் கொடுக்கும் போது முகத்தை குனித்துக் கொண்டேன். வீல் செயரில் அவள் வெளியே வரும் போது அவளுக்கு சோர்வான முகம். ஆஸ்பிரேஷன் முடிந்தது. அவள் அமைதியாகச் சொன்னாள். இனி பீஜமும் அண்டமும் சேர்ந்து டெஸ்ட்யூபில் ஓய்வெடுக்கட்டும் எம்பிரியோகளாக.

“யா ஹாஜி’ ஒரு போலீஸ்காரரின் அழைப்புத்தான் என்னை ஆயிசும்மாவிடம் கொண்டு சென்றது. பின்னால் வருபவர்களுக்கு வழி விடவோ, கொஞ்சம் வேகமாக நடக்கச் சொல்லவோ தான் அவர் அப்படி அழைத்து, எல்லா ஆண்களுக்கும் ஒரே பெயர்தான் ஹாஜி. பெண்களுக்கு ஹாஜ்ஜா என்றும். ஒரே வேஷம். ஒரே மந்திரம். ஒரே திசை. பயங்கரமான ஒற்றுமை. சஃபாவின் பாகத்துக்கு நான் அயிசும்மாவை கூட்டிக் கொண்டு மெதுவாக நகர்ந்தேன்.

சஃபாவுக்குச் செல்ல அம்புக்குறி இட்டிருந்தார்கள். சஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே நடக்கவும் ஓடவும் வேண்டும். ஹாஜராவின் ஓட்டத்தினை நினைவுப்படுத்துதல். பாலைவனத்தின் வறட்சியில் தனிமையில் ஆன ஹாஜரா ஒரு துள்ளி தண்ணீருக்காக ஓடிப் பார்த்தார். அங்கும் இங்கும், கணவர் இப்ராஹிம் கடவுளின் பாதை தேடிப் போயிருக்கிறார். இஸ்மாயில் பிறந்து நாட்கள் அதிகம் ஆகியிருக்கவில்லை. ஆள் அரவமில்லை. எதற்காக இப்ராஹீம் தன்னையும் குழந்தையையும் பாலைவனத்தில் யாருமில்லா இடத்தில் தனிமையில் விட்டுச் சென்றார்?. கடவுளின் கட்டளையோ?

மகனே; நீ மிகவும் சோர்வடைந்திருக்கிறாய். இந்த மலைமேல் எப்படி நீ வில் சேரை தள்ளி ஏற்றுவாய்? அயிசும்மா சங்கடத்துடன் என் முகத்தைப் பார்த்தார்.

சிறிய ஒரு குன்று. மலையின் பிற பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்திருக் கிறார்கள். வெறும் அடையாளங்களாக பாக்கி நிற்கின்றன. இரண்டு குன்றுகளும் கான்க்ரீட் சுவர்களுக்கிடையேயும் கூரைக்கும் இடையே இருந்தது. பாதை குளிர் பதனப்படுத்தப்பட்டு இருந்தது. இரண்டு பக்கங்களிலாக சம்சம் குழாய்கள் அமைத்திருந்தார்கள். ஹாஜராவுக்கு இஸ்மாயிலின் காலடிகள் தந்த சம்சம். அப்பாவுக்கு மகனின் தண்ணீர் வெகுமதி.

வரலாற்றுக்கான பழிவாங்கல் என்பது போல ஆண்கள் ஓட வேண்டும். இரண்டு மலைகளுக்கு இடையே, பெண்கள் நடந்தால் போதுமானது. ஹாஜரா தனிமையில் ஓடியபோது இப்ராஹிம் எங்கேயோ போய் மறைந்தார். சயீயில் நடைக்கும் ஓட்டத்துக்கும் இடையேயான நடை ஓட்டம்தான் என்னுடையது. அயிசும்மா என்னை பார்த்து சிரித்தார். கண்ணாடி வளையல்கள் ஒன்றோடொன்று மோதி சலசலப்பது போன்ற சிரிப்பு.

ஆறு எம்பிரியோக்கள் பதனப்படுத்தப்பட்டு பரிசோதனைகூடத்தி  லிருப்பதாக சொன்ன போது அவளது முகத்தில் இருந்தது மரத்துப் போன சிரிப்பு.

“”நமது ஆறு குழந்தைகள்,” வேதனைப்படுத்தும் தமாஷாக நான் அவளது முகத்தைப் பார்த்து கூறினேன். நிறைந்து ஒழுகும் இயலாமை, இருட்டு மூடிய வயோதிக்கத்தை பற்றிய சிந்தனை இருவரையும் ஒரே போல வேட்டையாடிக் கொண்டிருக்கும் தனிமை. சர்வ தியாகங்களுக்கும் அவள் தயார். எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் மனதும் உடலும் அவளுடையது. உற்பத்தி என்ற தெய்வத்தின் அபாரமான கலையை பரிசோதித்து அறிய பரிசோதனைக்கூடத்தில் அவள் அம்மணமாக கிடந்தாள். சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் கரைந்து தீருவதை இயலாமையுடன் நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஏழு முறை நடந்த பின்னர் மர்வா குன்றுக்கு மேல் அயிசும்மாவின் வீல் சேரை உந்தி ஏற்றும்போது நான் முற்றிலும் சோர்ந்து போயிருந்தேன். இனி தலையிலிருந்து கொஞ்சம் முடி வெட்டணும். அப்போதுதான் இஹ்ராமில் இருந்து வெளியேற முடியும். நான் ரூமிலிருந்து முடி வெட்டிக் கொள்கிறேன் மகனே. அயிசும்மா அப்படிச் சொன்னது முடி மறைத்து வைக்கப்பட வேண்டியது என்னும் நம்பிக்கையால்தான். பாகிஸ்தானிகளும், இந்தோனேஷியாக்காரர்களும் வங்காளிகளுமான சில பெண்கள் அங்கிருந்த படியே தலையிலிருந்து மூன்று முடிகளை வெட்டி எறிகிறார்கள்.

நானும் நினைத்தேன் பார்பர் ஷாப்புக்குப் போய் தலை மொட்டை அடித்து விடலாமென்று. கருப்பு முடி அழகை வெட்டி எறியும் போது மனதின் அகம்பாவம் நீக்கம் செய்யப்படுகிறது.

ஹரமிலிருந்து வெளி வருவதற்கு முன்னே பாங்கு அழைத்தது. அயிசும்மாவின் வீல் சேரோடு சேர்ந்து நின்றபடிதான் நானும் தொழுகைக்கு நின்றது. எனக்கு பின்புறமாக அல்ஜீரியாவை சேர்ந்த சில பெண்களும் இருந்தார்கள். தொழுகையிலிருந்து வெளிவந்து அயிசும்மாவையும் அழைத்து வெளிவரத் தயாரெடுக்கும் போது தான் இமாம் மய்யத்து தொழுகைக்காக மைக் வழியாக அழைத்தது. வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் இமாமின் வார்த்தையின் முடிவிலிருந்து தான் புரிந்தது குழந்தை மையத்துகள் உண்டு என்று. பின்னர் திரும்பிப் போகத் தோன்றவில்லை. எனக்குத் தெரியாக குழந்தை மய்யத்துகளுக்ககாக நானும் ஜனாஸô தொழுகைக்கு நின்றேன். வெள்ளை உடுத்திய குழந்தை மய்யத்துகள் தான் அப்போது என் முன்னில் வந்து சேர்ந்தது.

ஜனாத்ராயா ஹோட்டலின் ஐந்தாம் மாடியில்தான் அயுசும்மாவின் அறை. எனது அறை 11வது மாடியிலும் குரூப் அமீரை அழைத்து அயிசும்மாவை அறையில் கொண்டு போய்விட்ட விபரம் சொன்னேன். அயிசும்மாவின் எந்தத் தேவைக்கும் என்னை அழைக்கலாம் என்றும் சொன்னேன். சொல்லிவிட்டு வெளியே வரும் போது காரணமில்லாமல் ஒரு வேதனை என்னை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

சில இடங்களுக்கு மனது தேவையில்லாமல் கொஞ்சமும் அனுமதி கோராமல் பறந்து போகின்றது, நினைவின் மேடையில் நடனம் புரியும் சில நிழல் உருவங்கள் ஆர்ட் எம்பிரியோக்கள். அந்த நிழல் உருவங்களின் நடனம் தான் என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது.

இறந்து கிடக்கும் நினைவுகளுக்கு யாரோ உயிர்மூச்சு கொடுத்த போது அது மறுபடியும் என் முன் அப்படியே இருக்கிறது. ஆனால் என் கைகள் இயங்காமல் போய்விடுகின்றன. என்னுடைய இயலாமை என்னுடைய சிறுமையை பறைசாற்று கிறது. மறுநாள் ஃபஜ்ர் தொழுகைக்கு ஹரமுக்கு  போகத்துவங்கும் போதுதான் அமீரின் ஃபோன் வந்தது. ஐந்தாவது மாடிக்கு செல்லப்பணித்தார்கள். அயிசும்மாவை கூட்டிச் செல்ல சொல்வதற்காக இருக்கலாம். சங்கத்தில் உள்ள ஆண்களெல்லாம் வெளியேயும், மக்கனாயிட்ட பெண்களெல்லாம் உள்ளேயும் நிற்கிறார்கள். அமீரிடம் நான் சுயமாக அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

அயிசும்மா இறந்து விட்டார். அவர் என் முகத்தைப் பார்த்துச் சொன்னார். “இங்கேயே மரணம் வேண்டும் என்பதுதான் என் வேண்டுதல்’ . நேற்று சமீயில் உள்ள நடத்தைக்கிடையே அயிசும்மா அப்படிச் சொன்னபோது நான் தலையை குனிந்த படி சொன்னேன்.

“‘ஒரு ஏழு வருடம் கூட நீங்கள் இருப்பீர்கள்”. அப்பொழுது அவர்கள் வாய்விட்டு சிரித்தார். “‘நாளை ஹீரா குகை உள்ள நூர்மலையும் ரசூலுக்கு அபயம் தந்த சவுர் மலையும் காணலாம்”. புறப்படும் போது ஞாபகப் படுத்தினேன்.

அதற்கெல்லாம் எனக்கு முடியாது மகனே. கொஞ்சமும் மகிழ்ச்சியற்ற புன்னகையை முகத்துக்கு கொண்டு வந்து கொண்டு அயிசும்மா கூறினார்.

பெண்கள் மய்யத்தை குளிப்பாட்டுகிறார்கள். ஃபஜ்ர் தொழுத உடன் கபரடக்கம் செய்ய வேண்டும். நீங்கள் தான் அனைத்திற்கும் வரவேண்டும்.

உம். நான் இருப்பேன். அயிசும்மா ஏதோ சொல்ல மிச்சம் வைத்து எங்கோ மறைந்து போனது போல இருந்தது.

போலீஸ் ஆம்புலன்ஸில் மய்யத்துடன் நானும் சேர்ந்து கொண்டேன். ஹரம் ஷரீபுக்குத்தான் மய்யத்தை கொண்டு போகிறோம்.  எம்பிரியோ டிரான்ஸ்ஃபெரிங் நடந்து பத்தாவது நாளில் தான் அவளுக்கு ரிசல்ட் தெரிய வேண்டியது இருந்தது. இரத்தம் பரிசோதித்துத்தான் அண்டவாஹினி குழலில் நேரிட்டு செலுத்திய கரு உடலுடன் பொருந்திவிட்டதா என்று பார்ப்பார்கள்.

ஆறு எம்பிரியோக்களில் மூன்று டெஸ்ட்யூபிலேயே மரித்துப் போனது. மிச்சமிருந்த மூன்றைத்தான் டாக்டர் உள்ளே செலுத்தினார். ஏதாவது ஒன்று ஒட்டிக் கொள்ளும். மனதில் நினைத்தேன். சூரிய உதயத்துக்கு முன்னாலேயே நர்ஸ் அறையில் வந்து இரத்தம் எடுத்துக் கொண்டாள். வினோதங்களிலிருந்தும் கேளிக்கைகளிலிருந்தும், சுயமாக மனம் மாறியிருந்த காலமிது. இருவரும் ஆழமாக அன்பு செலுத்தும் போதும் அலுப்பான தாம்பத்தியத்தின் மலை உச்சிகளில் மனது மரத்துப் போன நிலையில் நின்றது. தீவிர சக்தியுடைய மருந்துகளுடையவும் யந்திரங்களுடையவும் தாக்குதலை தாங்க இயலாமல் குழிக்குள்ளே சென்ற கண்களுடன் காலையையும் மாலையையும் திரைச்சீலையை நீக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ரிஸப்ஷனிலிருந்து ரிசல்ட் வாங்கும் போது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. ஒரு குழந்தைக்கான கடைசிப் பரீட்சை. நெகட்டீவ். ஆகாயத்திலிருக்கும் கண்ணுக்குத் தெரியாத பீடத்தை அடித்து நொறுக்க வேண்டும் என்றிருந்தது அந்த நேரம். எனக்கு மட்டும் மறுக்கப்படும் கனிகளை அம்பு செய்து விழச் செய்ய வேண்டும் என்றிருந்தது. முதல் மூன்று எம்பிரியோக்கள் லாபில் வைத்தே இறந்து போனது என்றால் மிச்சமிருக்கும் மூன்று அவளது அண்டவாஹினிக் குழலுக்கு மறுபக்கம் போகவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து காகித குப்பைகள் எடுத்து வீட்டுக்கு திரும்பும் போது நாங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. தெய்வத்துடனான கேலிச் சிரிப்பு என் முகத்தில் படர்ந்த போது அவளது கன்னங்களில் மஹாபாத்திரத்தின் வெற்றுத்தன்மை.

வேறு மய்யத்துகளுடன் சேர்த்துத்தான் அயிசும்மாவின் மய்யத்தும் இமாமுக்கு முன்பாக வைத்தது. இமாமுக்கு பெரும் போலீஸ் பந்தோபஸ்து உண்டு. அவருக்கென்று இருக்கும் தனி வாசல்வழியாகத்தான் இமாம் வருவதும் திரும்பிப் போவதும். முன்னாலும் பின்னாலும் போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் ஆம்புலன்ஸில் தான் அயிசும்மாவின் பூத உடல் கபரஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இறை தூதரில் முதல் மனைவி கதீஜாவை அடக்கியிருக்கும் மண், தூதர் என்பதற்கு சாட்சியாக இருந்த முதல் பெண் கதீஜா. இடுகாட்டுக்குள் தோண்டியிட்ட கபர் சமீபம் வரை ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அமீரும் குழுவினரும் மயானத்தின் வாசலுக்கு வெளியிலேயே நின்று கொண்டனர். கபரின் இரு சுவர்களை கைகளால் பிடித்து மெதுவாக நான் கபருக்குள் இறங்கினேன். அயிசும்மாவின் மய்யத்தை  கைகளில் வாங்கி மெல்ல நகர்ந்து கபருக்குள் மிருதுவாக கிடத்தினேன். கொஞ்சமும் வேதனையில்லாமல் கண்களிலிருந்து இற்று விழுந்த துள்ளிகள் அயிசும்மாவை மூடிக்கெட்டிய வெள்ளைத் துணிகளை நனைத்தன. ஒருவருக்கு மட்டும் சிரமத்துடன் கிடக்கும் படியான குழி. முகம் பார்க்கும் படி திருப்பி வைத்து மண்ணால் தலையணை செய்து தலையை அதில் சேர்த்து வைத்தேன். ஏகாந்தமான தனிமையான நெடும் பயணம். கடைசியாக நான் ஆகாயத்தைப் பார்த்தேன். அயிசும்மாவின் ஆன்மா இதையெல்லாம் பார்க்குமா? என்று தெரிந்து கொள்ள, பார்த்துக் கொண்டிருப்பார் என் கண்ணுக்கு தெரியாமலேயே. மண் இடத் தயாராகும் நிமிடம் மூன்றோ நான்கோ அரபிகள் ஒரு குழந்தையின் உடலுடன் அங்கே வந்தார்கள். மய்யத்து தொழுகைக்கு இடையில் அப்படி ஒரு மய்யத்தை நான் பார்க்கவில்லை. ஒருக்கால் நான் கவனித்திருக்காமல் இருந்திருப்பேன்.

இந்த குழந்தையையும் இந்த மய்யத்துடன் கிடத்த வேண்டும். துண்டு துண்டான ஆங்கிலத்தில் அவர் கூறினார். அந்த நாட்டினர் அப்படித்தான் இறந்து போன குழந்தைகளை தனியாக கபரில் கிடத்த மாட்டார்கள்.

குழந்தையின் மய்யத்தை நான் கைகளில் வாங்கினேன். குழந்தைகள் இல்லாத நான் ஒரு குழந்தையின் சடலத்தை கபரடக்கம் செய்கிறேன். என் கைகள் நடுங்கியபடியே இருந்தன. வாழ்க்கையின்  பாதி வழியில் உயிர் இழந்த குழந்தை. டெஸ்ட்யூபிலும் அண்டவாஹினி குழாயிலும் துடித்து இறந்த என் எம்ரியோக்களைப் போல. ஆயிசும்மாவின் மார்போடு சேர்ந்து குழந்தையை கிடத்தினேன். தாய்ப்பால் குடிக்க என்பது போல. வெள்ளை துணிகளிலிருந்து ஆயிசும்மாவின் கைகளை வெளியே எடுத்தேன். குழந்தையின் கைகளோடு சேர்த்து வைத்தேன். பாதம் முதல் தலைவரையிலான பாகங்களை பலகைகளால் அந்த கபரை மூடினேன். அயிசும்மாவையும் குழந்தையையும் இருட்டின் தனிமையில் விட்டுவிட்டு யாரோ நீட்டிய கைகளை பிடித்து நான் கபருக்கு வெளியே பூமிக்கு மேல் வந்தேன்.

மயானத்துக்கு வெளியே அமைதியை கலைத்தபடி அமீர் அழுத்தமான குரலில் சொன்னார்: அந்த அம்மா புண்ணியம் செய்தவள். அவர்களது பிரார்த்தனை களுக்கு எல்லாம் ஆண்டவன் பலன் கொடுத்திருக்கிறார். ஒன்றைத் தவிர.

அது என்ன? அந்த ஒன்று? நான் அமீரை தலையை சரித்துப் பார்த்தேன். ஒரு ஆயுட்காலம் முழுவதும் அவள் வேண்டியும் இறைவன் அவளுக்கு ஒரு குழந்தையை கொடுக்கவில்லை. குழந்தைகளை இவ்வளவு தூரத்துக்கு நேசித்த போதும் அந்த பிரார்த்தனைகளை கேட்கவில்லையென இறைவன் நடித்தான் போலும். ”யா அல்லாஹ்” என்ற எனது உச்சத்தில் உள்ள கதறல் கேட்டு அமீர் மவுனமானார். அம்மாவின் மார்பில் தாய்ப்பால் குடித்தபடி பர்ஸகில் நீண்ட உறக்கத்தில் ஏற்பட்ட அம்மாவுடையவும் குழந்தையுடையவும் சித்திரம் என் மனக்கண்ணில் நிரந்தரமாகிவிட்டது.

***

Thanks : Velliyodan Cps & Asif Meeran

*

பின்குறிப்பு : ‘ஆலம் அல் பர்ஜக்’ பற்றி எங்கள் ஹஜ்ரத் சொன்ன விளக்கம் வேறு. இந்த ‘பர்ஸக்’ பற்றி மௌலவிகள் சென்ஷியும் மஜீதும் இணையத்திலிருந்து திரட்டிய குறிப்புகள் இவை. இருவருக்கும் நன்றி. – AB

1.

Mentioned only three times in the Quran, and just once specifically as the barrier between the corporeal and ethereal, Barzakh is portrayed as a place in which, after death, the spirit is separated from the body – freed to contemplate the wrongdoing of its former life. Despite the gain of recognizance, it cannot utilize action.[9] The other two occurrences refer to Barzakh as an impenetrable barrier between fresh and salt water.[10][11] While fresh and salt water may intermingle, an ocean remains distinct from a river.

In hadith, Ibn al-Qayyim cites that, albeit not mentioned in the Quran, souls in Al-Barzakh would be grouped with others matching in purity or impurity.[12]

2

Barzakh (Arabic: برزخ, from Persian barzakh, “barrier, partition” is an Arabic word meaning “obstacle”, “hindrance”, “separation”, or “barrier”) designates a place between hell and heaven, where the soul resides after death, and experiences its own heaven or hell, until the resurrection on Qiyamah (Judgement Day).

கலைப்பொருள் – ஆன்டன் செக்காவ்

மொழியாக்கம்: வேங்கட சுப்புராய நாயகர் (‘A Work Of Art’ by Anton Chekhov) . மணல்வீடு இதழில் (எண்: 37-38) இடம்பெற்ற புகழ்பெற்ற சிறுகதை, நன்றியுடன் இங்கேயும்…
*

கலைப்பொருள் – ஆன்டன் செக்காவ்

பங்குசந்தைச் செய்திகள் வெளிவரும் ‘ஸ்டாக் எக்ஸ்சேஞ் நியூஸ்’ஸின் 223ஆம் இதழினால் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொருளை, தன் தாய்க்கு ஒரே மகனான சாஷா ஸ்மிர்நோவ் மிகக் கவனமாகத் தன் கக்கத்தில் தாங்கியபடி வந்தான். சோகமான முகத்துடன் இருந்த மருத்துவர் தோஷெல்தோவின் அலுவல் அறைக்குள் அவன் நுழைந்தான்.

“அட, தம்பியா வா! இன்று எப்படி? எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா?” என்று அவனை மருத்துவர் வரவேற்றார்.

கண்களைச் சிமிட்டிய சாஷா, தன் மார்பின்மீது கைகளை அழுத்தி, நடுக்கத்துடன் உணர்ச்சிவசப்பட்டு பேசினான்:

“டாக்டர், அம்மா உங்களை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள். உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். அந்த அம்மாவின் ஒரே பையன் நான். என் உயிரை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள்.அபாயகரமான நோயிலிருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே என் அம்மாவுக்கும் எனக்கும் தெரியவேயில்லை.”

“உளறாதே” என்று இடைமறித்த மருத்துவர், உள்ளூர மகிழ்ச்சியில் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே “என் இடத்தில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்” என்றார்.

“நான் என் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர், நீங்கள் செய்த சிகிச்சைக்கு எங்களால் பணம் செலுத்த முடியவில்லைதான் என்றாலும், அம்மாவும் நானும்,அதாவது அவரது ஒரே பிள்ளையான நான் உங்களை மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான். இதோ இந்தப் பொருளை எங்கள் சார்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு பழமையான வெண்கலக் கலைப்பொருள்; அற்புதமான கலை நயம், வேலைப்பாடு கொண்டது”.

“முடியாது. உண்மையாகத்தான் சொல்கிறேன். என்னால் இதனை…” எனப் புருவத்தை நெறித்தபடி மருத்துவர் மறுத்தார்.

“இல்லை. இல்லை நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்” என முணுமுணுத்தபடியே தான் கொண்டு வந்திருந்த பொருளைச் சுற்றியிருந்த தாளை பிரிக்கத் தொடங்கினான்.

“நீங்கள் முடியாது என்றால் அம்மாவுக்கும் எனக்கும் மனது புண்படும். இது ஒரு அருமையான பொருள். பழைய பொருள். வெண்கலத்தாலானது. அப்பா இறந்தவுடன் இது எங்களுக்குக் கிடைத்தது. இதனை விலை மதிப்பற்ற நினைவுப் பொருளாக நாங்கள் பாதுகாத்து வந்தோம். இது போன்ற பழைய வெண்கலப் பொருட்களை வாங்கி கலைப் பொருள் சேகரிப்பவர்களுக்கு விற்பதை என் அப்பா தொழிலாகச் செய்து வந்தார். இப்பொழுது அம்மாவும் நானும் அந்தத் தொழிலைப் பார்த்துக்கொள்கிறோம்…”

அப்பொருளைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்து முடித்த வுடன் அங்கிருந்த மேசை மீது அதனை எடுத்து வெற்றி கரமாக வைத்தான். மெழுகுவத்திகள் வைப்பதற் தென அழகாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட பழைய வெண்கலக் கொத்துவிளக்குத் தண்டு அது. அதன் பீடத்தில் இரண்டு பெண் உருவங்கள் பிறந்த மேனியாக காட்சியளித்தன. அவை எப்படி நின்றிருந்தன என்பதை விவரிக்குமளவு துணிச்சலோ, பாலுணர்வோ எனக்கு இல்லை. அந்த உருவங்கள் பசப்புகின்ற முறை யில் சிரித்துக்கொண்டிருந்தன. மெழுகுவத்திகளைத் தாங்க வேண்டிய வேலையை விடுத்து அவை அந்தப் பீடத் திலிருந்துத் தாவிக் குதித்து இந்த அறை முழுவதும் மோசமான காட்சியை உண்டாக்கக்கூடும் என்பதைப் போல் தோன்றியது. அதை நினைக்கும் மாத்திரத்திலேயே, இனிய வாசகரே, உங்களுக்கு வெட்கத்தால் கன்னம் சிவந்து போய்விடும்.

அந்தப் பரிசுப் பொருளை ஒரு முறை நோட்ட மிட்டவுடன், தன் காதின் பின் பகுதியை மருத்துவர் லேசாகச் சொறிந்துகொண்டார். தொண்டையை செருமிக்கொண்டு பெருமூச்சு விட்டார்.

“உண்மைதான். இது ஓர் அழகான கலைப்பொருள் தான். ஆனால், இதை நான் எப்படி வைக்க முடியும்? இது ரசனை என்று நீ சொல்ல முடியாது. அதாவது, கழுத்து தெரிய இறக்கி வெட்டப்பட்ட சட்டை ஒருபுறம் இருக்க, இது உண்மையில் எல்லை மீறிய…”

“எல்லை மீறிய என்றால், என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“உணர்வுகளைத் தூண்டும் அந்தப் பாம்புக் கூட இந்த அளவு பண்பாடு குறைவாக எதையும் நினைத்திருக்காது. மேசை மீது இத்தகைய சாதாரண அலங்காரப் பொருளை வைப்பதனால், இந்த வீடு முழுவதும் கெட்டு விடுவதாக நான் ஏன் நினைக்கவேண்டும்?”

“டாக்டர், தலை மீது ஏன் உங்களுக்கு இத்தகைய வினோதமான பார்வை இருக்கிறது?” சாஷாவின் மன வருத்தம் பேச்சில் எதிரொலித்தது.

“இது உத்வேகத்தை அளிக்கக்கூடிய வேலைப்பாடு உடையது. இதன் ஒட்டுமொத்த அழகையும் நேர்த்தியையும் பாருங்கள், அப்படியே பயபக்தி ஏற்பட்டு உங்கள் தொண்டை அடைக்கவில்லையா? இது போன்ற அழகை ரசிக்கும்போது இந்த பூமியில் உள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு மறந்து போகும். அதோ அந்த அசைவைப் பாருங்கள் டாக்டர். அந்தத் தோற்றத்தை, முகபாவத்தைப் பாருங்கள்.” என்று சாஷா சொல்லிக்கொண்டே போனான்.

“நான் அதை மிகவும் ரசிக்கிறேன், பாராட்டுகிறேன்,” என்று சுதாரித்துக்கொண்ட மருத்துவர், “ஆனால் ஒரு விஷயத்தை நீ மறந்துவிட்டாய். நான் ஒரு குடும்பத் தலைவன். இங்கு வந்து விளையாடப் போகும் என் சிறு பிள்ளைகளைப் பற்றியும் பெண்கள் பற்றியும் யோசித்துப்பார்” என்றார்.

“உண்மைதான். சாதாரண மக்களின் பார்வையில், இந்த மாபெரும் கலைப்படைப்பு வேறு மாதிரியாகத்தான் தெரியும். ஆனால், டாக்டர் நீங்கள் இவர்களை விட ஒருபடி மேலே நின்று பார்க்கவேண்டும். குறிப்பாக, அம்மாவும் நானும் நீங்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் மிகவும் வருத்தமடைவோம். நான் அம்மாவின் ஒரே மகன். நீங்கள்தான் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். எங்களிடம் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த பொக்கிஷத்தை உங்களுக்குத் தருகிறோம். இதனை ஜோடியாக தருமளவு எங்களிடம் இதேபோல் வேறு ஒன்று இல்லையே என்ற ஒரே குறைதான் எனக்கு இருக்கிறது” என்றான் சாஷா.

“நன்றி, தம்பி. அம்மாவை நான் மிகவும் கேட்டதாகச் சொல். ஆனால் என் இடத்தில் கொஞ்சம் இருந்து பார். இங்கு வரக்கூடிய குழந்தைகள், பெண்கள் பற்றி யோசித்துப் பார்… சரி, விடு, அது இங்கேயே இருக்கட்டும்! உன்னைச் சமாதானப்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன்” என்று மருத்துவர் கூறினார்.

“என்னைச் சமாதானம் செய்ய ஒன்றுமில்லை.” என சந்தோஷமாக சொன்ன சாஷா, “இதோ, இந்தப் பூச்செடியின் பக்கத்தில் இந்தக் கொத்து விளக்குத் தண்டை நீங்கள் வைக்கவேண்டும். என்ன, இது ஜோடியாக இல்லை! வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, சரி! போய் வருகிறேன் டாக்டர்!” என விடை பெற்றான்.

சாஷா சென்ற பிறகு, நீண்ட நேரம் அந்தக் கொத்து விளக்கையே உற்று நோக்கியபடி இருந்த மருத்துவர், காதின் பின்புறத்தைச் சொறிந்துகொண்டே யோசித்தார்.

“இது ஒரு அற்புதமான பொருள்தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதனை வாங்காமல் விட்டிருந்தால்தான் அவமானம். ஆனால், இதனை இங்கு வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹும்! பிரச்சனைதான்! யாரிடம் இதனைக் கொடுப்பது அல்லது தள்ளி விடுவது?” என யோசித்தார்.

நீண்ட நேர யோசனைக்குப் பின், அவருடைய சிறந்த நண்பரும் வழக்கறிஞருமான ஹர்தீன் நினைவுக்கு வந்தார், மருத்துவருக்கு நிறைய சட்ட உதவிகளைச் செய்தவர் அவர்.

” ஆம், இதுதான் சரியான தீர்வு” என மருத்துவர் முடிவெடுத்தார்.

‘நண்பர் என்ற முறையில் நான் தரும் பணத்தை ஏற்றுக்கொள்வது சங்கடமாக இருக்கும். ஆனால், இந்தப் பொருளை அன்பளிப்பாகத் தந்தால் அது முறையானதாக இருக்கும். ஆமாம், இந்தக் கொடூரமானப் பொருளை நேராக அவரிடம் கொண்டு போய் கொடுக்கவேண்டும். எப்படிப் பார்த்தாலும் அவர் திருமணமாகாதவர்தானே. வாழ்க்கையினை அப்படி ஒன்றும் பெரிதாகச் சட்டை செய்யாதவர்’ எனப் பலவாறு சிந்தித்தபடியே இருந்தார்.

இதற்கு மேல் காலம் தாழ்த்தாமல், தன் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு, அந்தக் கொத்து விளக்கை எடுத்துக்கொண்டு ஹர்தீன் வீட்டை நோக்கி விரைந்தார்.

அவர் வீட்டுக்குள் நுழைந்ததும், “வணக்கம்” என்றார் மருத்துவர். “நீ எனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். நீ பணம் எதுவும் பெற்றுக்கொள்ள மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இந்தச் சிறிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பாய் என நினைக்கிறேன். இதோ இதுதான். உண்மையிலேயே இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.” என்று அப்பொருளை வழக்கறிஞரிடம் மருத்துவர் வழங்கினார்.

அந்தச் சிறு அன்பளிப்பினைப் பார்த்ததும் வழக்கறிஞர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.

“ஆமாம் நிச்சயமாக! எப்படியெல்லாம் யோசிக் கிறார்கள். அருமை! அபாரம்! இது போன்ற பொக்கிஷம் உனக்கு எங்கு கிடைத்தது?” என்று உற்சாகத்தில் குதித்தார் வழக்கறிஞர்.

தன் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் தொட்டித் தீர்த்த பின், கதவின் பக்கம் பதட்டத்துடன் நோட்டமிட்டபடியே, “நல்ல பிள்ளையாக இதனை நீயே திரும்ப எடுத்துச்சென்று விடும். இதனை நான் வைத்துக்கொள்ள முடியாது” என வழக்கறிஞர் கூறினார்.

“ஏன்? என்ன காரணம்?” எனப் பதறினார் மருத்துவர்.

“எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான். என் அம்மாவோ வாடிக்கையாளரோ உள்ளே வர நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பார். என்னிடம் வேலை செய்பவர்களை எப்படி நான் ஏறிட்டுப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்.

“இல்லை , இல்லை , இதை நீ மறுக்க முடியாது! நீ சரியான பட்டிக்காட்டானாக இருக்கிறாய். இது ஒரு உத்வேகமான படைப்பு. அந்த அசைவைப் பார். அந்த முக பாவத்தைப் பார். இதற்கு மேல் ஏதாவது பிடிவாதம் பிடித்தால், நான் மிகவும் வருத்தமடைவேன்.” என்று  வேக வேகமாக மறுத்தார் மருத்துவர்.

“மேலே ஏதாவது வண்ணம் பூசி இருக்கலாம். இடையினை மறைக்க ஆடை இருந்தாலாவது பரவாயில்லை …” என வழக்கறிஞர் பொருமினார். ஆனால், இன்னும் வேகமாக அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, மருத்துவர் சாமார்த்தியமாக அந்த வீட்டைவிட்டு வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்தார். ஒரு வழியாக அந்த அன்பளிப்பினைக் கை கழுவியதில் அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.

நண்பர் போனதும், அவர் விட்டுச்சென்ற கொத்து விளக்கை ஹர்தீன் உற்று நோக்கினார். அதன் எல்லா பாகத்தையும் தொட்டுப் பார்த்த வழக்கறிஞர், மருத்துவரைப் போலவே இதனை என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டார்.

‘இது ஒரு அற்புதமான படைப்புதான். இதனை எடுத்துச் செல்லவிட்டிருந்தால் அவமானம்தான். ஆனால், இதை இங்கே வைத்துக்கொள்வது என்பது முறையாகாது. யாரிடமாவது இதைக் கொடுத்து விடுவதுதான் உத்தமம். ஆமாம், இன்று இரவு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு நிதி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொத்து விளக்குத் தண்டை அவனுக்கு அன்பளிப்பாக அளித்துவிடலாம். எப்படிப் பார்த்தாலும் அந்த ராஸ்கலுக்கு இது போன்ற பொருட்கள் பிடிக்கும்…’ என முடிவு செய்தார் வழக்கறிஞர்.

உடனடியாக அங்குப் புறப்பட்டுச் சென்றார். மிகுந்த கவனத்துடன் சுற்றப்பட்ட அந்தக் கொத்துவிளக்குத் தண்டு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு அன்பளிப் பாக அன்று மாலை அளிக்கப்பட்டது.

அன்று மாலை முழுவதும் அந்த நடிகரின் ஒப்பனை அறையில் இருந்த அன்பளிப்பினைப் பார்வையிட ஆண் பார்வையாளர்கள் மொய்த்தனர். அந்த ஒப்பனை அறை, ஆச்சரியத்தில் எழும்பிய உற்சாகமான ஆரவாரத்தாலும், குதிரை கனைப்பது போன்ற சிரிப்பொலியாலும் நிரம்பியிருந்தது. நடிகைகளில் யாராவது ஒருவர் உள்ளே வர கதவைத் தட்டினால், நடிகர் தன் காந்த குரலில், “தற்சமயம் வேண்டாம் டார்லிங், உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று சமாளித்துவிடுவார்.

நாடகம் முடிந்ததும் தன் தோள்களை வளைத்துக் கொண்டு, குழப்பத்தில் கைகளை உதறிக்கொண்டிருந்தார்.

“இந்தப் பாழாய் போன விகாரத்தை நான் எங்கு வைப்பது? நான் இருப்பதோ தனியார் விடுதியில், என்னைப் பார்க்க வரும் நடிகையை நினைத்துப் பார்க்கிறேன். சட்டென எடுத்து மேசைக்குள் போட்டு மூட இது ஒன்றும் புகைப்படம் இல்லை .!” எனப் புலம்பிக்கொண்டிருந்தார்.

அவரது உடைகளைக் களைய உதவி செய்து கொண்டிருந்த ஒப்பனைக்காரர், “ஏன் சார், இதை விற்றால் என்ன?” என்று கேட்டார். இந்தப் பகுதியில் இது மாதிரியான பழைய வெண்கலப் பொருட்களை வாங்கும் வயதான பெண் ஒருவர் இருக்கிறார். திருமதி. ஸ்மிர்நோவா என்று கேளுங்கள். எல்லோருக்கும் தெரியும்.” என அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

அவரது ஆலோசனைப்படியே நகைச்சுவை நடிகர் நடந்து கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, பித்தநீர் குறித்த சிந்தனையில் இருந்த மருத்துவர், நெற்றியில் ஒரு விரலை அழுத்தியபடி, தன் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தார். திடீரென கதவைத் திறந்துகொண்டு, சாஷா ஸ்மிர்நோவ் உள்ளே நுழைந்தான். உற்சாகமாகச் சிரித்தபடி வந்த அவன் முகம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிந்தது. அவன் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருள், செய்தித்தாளால் சுற்றப்பட்டு இருந்தது.

“டாக்டர்,” எனப்பேசத் தொடங்கும்போதே மூச்சு வாங்கியது. அப்படியே தொடர்ந்தான்.

“நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை உங்களால் நம்ப முடியாது. எப்படியோ உங்களுக்கு அன்று கொடுத்த கொத்து விளக்குத்தண்டுக்கு ஒரு ஜோடி கிடைத்துவிட்டது. அம்மாவுக்கு ரொம்ப திருப்தி. நான் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நீங்கள்தான் என்னைக் காப்பாற்றினீர்கள்…”

மிகவும் நன்றி விசுவாசத்துடன், அந்தக் கொத்து விளக்குத் தண்டை மருத்துவர் முன் சாஷா வைத்தான். வாயைப் பிளந்த மருத்துவர், ஏதோ சொல்ல முயன்று பார்த்தார். ஆனால், வார்த்தை எதுவும் வரவில்லை . வாயடைத்து நின்றார்.

(END)
*
குறிப்பு : இக்கதை முதன்முதலில் வெளிவந்த 1886-ஆம் ஆண்டிலேயே பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஆன்டன் செக்காவ் (1860-1904), ரஷ்ய இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவராவார். பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்த அவருடைய சிறுகதைகள், பல இளம் எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்துள்ளன. முதன் முதலில் 1886இல் எழுதப்பட்ட இக்கதை, 1967இல் வெளியான அவருடைய கதைகள் அடங்கிய பிரஞ்சு மொழியாக்கத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

*


நன்றி : வேங்கட சுப்புராய நாயகர்

நன்றி : ‘மணல்வீடு’ ஆசிரியர் மு. ஹரிகிருஷ்ணன்

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்

வைக்கம் அவர்களின் சிறுகதை ஒன்றைத்தாருங்கள்.வாசித்து கனநாளாச்சி’  என்று சொன்னார் வாழைச்சேனை அமர். ஞாபகம் வந்தது. மூக்கைத் தேடினேன். பஷீரின் மூக்கு. தமிழோவியம் / சமாச்சார் தளங்களில் இருந்த அவருடைய அழகான  மூக்கை யாரோ கடித்து எடுத்துவிட்டார்கள். எனவே எனது (பழைய) கூகுள் பக்கத்திலிருந்த மூக்கை எடுத்து இங்கே நுழைக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் கடித்த, மன்னிக்கவும், மொழிபெயர்த்த நாகூர்ரூமிக்கு நன்றி. மூலத்தைப் பார்க்காமலேயே மொழிபெயர்ப்பதில் இவர் முதன்மையானவர் (ஓய், எனக்கு யாசீன் ஓதுனதுக்கு பழி!) . அவரது பெயர்ப்பை உயிர்மை இதழும் வெளியிட்டிருந்தது (2004). சுட்டி இப்போது கிடைக்கவில்லை. உண்மையில் , பஷீரின் 21 கதைகள் என்று தலைப்பிட்டு 20 கதைகளுக்கான சுட்டிகளை  நண்பர் சிங்கமணியின் தமிழ்த்தொகுப்புகள் தளத்திலிருந்தும் (சகோதரர் ராம்பிரசாத்தின் அழியாச்சுடர்கள் தளம் போலவே இங்கும் நிறைய விசயங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்கிருந்து எடுத்தது / மொழிபெயர்ப்பாளர் யார் என்ற அவசியமான விபரங்களெல்லாம் இல்லை.) 21வது கதையாக ’மூக்கை’யும் சேர்க்கலாம் என்றால் அது காணோம்! அப்படியும் சொல்ல முடியாது. கீற்று தளத்தில் இப்போதும் இருக்கிறது. (ஆங்கிலம் வழி தமிழாக்கம் : கூத்தலிங்கம்).  எனக்கு ரூமியின் மொழிபெயர்ப்புதான் பிடிக்கிறது…  குளச்சல் மு. யூசுபின் மொழிபெயர்ப்புதான் மிகச் சிறந்தது என்கிறார்கள் நண்பர்கள். காலச்சுவடு வெளியீடு எனக்கு கிடைக்கவில்லையே, காசும் இல்லையே, என்ன செய்வேன்?  போகட்டும், ’மூக்கு’க்கு கீழே அவசியமான மற்ற அவயவங்களையும் சேர்த்திருக்கிறேன். அதெல்லாம் பார்க்க முடியாது  என்றால் பஷீரின் பூவன் பழத்தையாவது ருசியுங்கள் . நன்றி. – ஆபிதீன்

***

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு

வைக்கம் முஹம்மது பஷீர்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி

***

அதிர்ச்சியான செய்திதான். அதாவது, அறிவுஜீவிகள் மத்தியிலே மூக்கு ஒன்று விவாதப் பொருளாகிவிட்டது என்பது.

அந்த மூக்கைப் பற்றிய உண்மையான கதையை இங்கே நான் பதிவு செய்கிறேன்.

இந்த கதை ஆரம்பிக்கும்போது உலகப் பிரசித்தி பெற்ற அந்த மூக்கின் சொந்தக்காரனுக்கு இருபத்தி நான்கு வயது பூர்த்தியாகிவிட்டிருந்தது. அதற்கு முன் அவனை யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருபத்தி நான்காவது ஆண்டுக்கு ஏதேனும் சிறப்பு முக்கியத்துவம் இருக்கிறதா என்ன? யாருக்குத் தெரியும்? இந்த உலகின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் பல மாமனிதர்களுடைய வாழ்வில் இருபத்து நான்காவது ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்திருப்பது தெரியவரும். வரலாற்று மாணவர்களுக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதே இல்லை.

நம்முடைய கதையின் நாயகன் ஒரு சமையல்காரன். வேண்டுமானால் அடுப்பங்கரை வேலைக்காரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவன் ஒன்றும் சூட்டிகையானவனல்ல. அவனுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. அவனுடைய உலகம் அந்த சமயலறையினால் ஆனது. அதற்கு வெளியே நடப்பவற்றைப் பற்றி அவனுக்கு அக்கறை ஏதும் இல்லை. அதைப்பற்றி அவன் ஏன் கவலைப்பட வேண்டும்? திருப்தியாகச் சாப்பிடுவான். விரும்பிய அளவு மூக்குப்பொடியை உறிஞ்சுவான். தூங்குவான். வேலை பார்ப்பான். அவனுடயை அன்றாட அலுவல்கள் இந்த செயல்பாடுகளில் முடிந்து போயின.

ஒரு ஆண்டின் ஒரு மாதத்தின் பெயர் என்ன என்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நாள் வரும்போது அவனுடைய அம்மா வந்து அதை வாங்கிச் செல்வாள். மூக்குப்பொடி வேண்டுமென்றால் அந்த கிழவியே அதையும் அவனுக்கு வாங்கிக்கொடுப்பாள். ஒரு திருப்திகரமான வாழ்க்கையை அவன் வாழ்ந்தான். தனது இருபத்து நான்காம் வயது வரை. அதன் பிறகு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது.

அவனுடைய மூக்கு லேசாக நீளவாக்கில் வளர ஆரம்பித்தது. அவனுடைய வாயைக் கடந்து தாடை வரை அது சென்றது.

ஒவ்வொரு நாளும் அது நீண்டுகொண்டே சென்றது. அதை மறைக்கத்தான் முடியுமா என்ன? ஒரு மாதம்கூட ஆகியிருக்காது. தொப்புள்வரை அவனுடைய மூக்கு வளர்ந்துவிட்டது. அவனுக்கு ஏதாவது அசௌகரியமாக இருந்ததா என்றா கேட்கிறீர்கள்? கிடையவே கிடையாது. நிம்மதியாக அவனால் மூச்சுவிட முடிந்தது. மூக்குப்பிடிக்க மூக்குப்பொடியை இழுக்க முடிந்தது. பலவிதமான வாசனைகளை தரம்பிரித்து சொல்ல முடிந்தது. சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு அசௌகரியமும் அவனுக்கு இல்லை.

எனினும், இந்த மூக்கின் பொருட்டு, பாவம் அந்த ஏழை சமையல்காரன் வேலையை விட்டு நீக்கப்பட்டான்.

என்ன காரணம்?

“பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியனை திரும்பவும் அழைத்துக்கொள்” என்று முழங்கியபடி எந்த குழுவும் அவனுக்காக பரிந்துகொண்டு வரவில்லை. இந்த அநியாயத்தைப் பார்த்தும் அரசியல் கட்சிகள் தங்கள் கண்களை மூடிக்கொண்டன.

“அவனை ஏன் வேலையை விட்டு நீக்கினீர்கள்?” எந்த மனிதகுல காதலனும் இவ்விதமான கேள்விகளைக் கேட்டு முன்வரவில்லை.

பாவம் அந்த சமையல்காரன்!

தனக்கு ஏன் வேலை போனது என்று யாருமே அவனுக்கு சொல்லவேண்டியதில்லை. அவனுடைய வீட்டுக்காரர்கள் அவன் பொருட்டு நிம்மதியாக இருக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். நீளமூக்கனையும் அவனுடைய மூக்கையும் பார்ப்பதற்காக மக்கள் இரவு பகல் பாராமல் வந்தவண்ணமிருந்தனர். நிழல்படமெடுப்பவர்கள் வீட்டுக்காரர்களுக்கு தொல்லை கொடுத்தனர். பத்திரிகை நிருபர்கள் வேறு. இப்படி வந்து அவஸ்தைப்படுத்தியவர்களால் அது போதாதென்பதுபோல வீட்டிலிருந்து பல பொருள்கள் திருட்டும் போயின.

பணி நீக்கம் செய்யப்பட்ட சமையல்காரன் தனது தனிமையான குடிசையிலே உட்கார்ந்து யோசித்தான். அவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. அவனுடைய மூக்கு ரொம்ப பிரபலமடைந்துவிட்டது !

தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் அவனைக் காண வந்தார்கள். அவனுடைய நீண்ட மூக்கைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரலை வைத்தனர். சிலர் அவனுடைய மூக்கைத் தொட்டுப் பார்த்தனர். ஆனால் “இன்னிக்கி சாப்டியா?” “ஏன் இப்படி பலவீனமா இருக்கே?” என்றெல்லாம் யாருமே கேட்கவில்லை. குடிசையில் பணம் ஏதுமில்லை. ஒரு சின்ன மூக்குப்பொடி டப்பா வாங்கும் அளவுக்குக் கூட. பட்டினி போட்டு சாகடிக்க அவனென்ன காட்டு மிருகமா? அவன் முட்டாளாக இருக்கலாம். ஆனாலும் அவன் மனிதன். ஒரு நாள் அவன் தன் வயதான அம்மாவை தனியே அழைத்து காதில் கிசுகிசுத்தான் : “இந்த பயங்கரமானவர்களையெல்லாம் வெளியே தள்ளி கதவை மூடு”

அவன் சொன்னபடியே அவன் அம்மாவும் உடனே செய்தாள்.

அன்றிலிருந்து அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் நல்ல நேரம் உண்டானது. மகனுடைய மூக்கை தரிசிப்பதற்காக மக்கள் அம்மாவுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தனர்! இந்த ஊழலுக்கு எதிராக சில நியாயவாதிகள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் இந்த செயலின்மையை எதிர்த்து பலர் அரசை அழிக்க புரட்சிக் கழகங்களில் சேர்ந்தனர் !

நீளமூக்கனது வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அதிகமானது என்று மொட்டையாக ஏன் சொல்லவேண்டும்? ஆறு ஆண்டுகளில் அந்த ஏழை சமையல்காரன் ஒரு கோடீஸ்வரனாகிப் போனான்.

மூன்று முறை திரைப்படங்களில் அவன் நடித்தான். ‘மனித நீர்மூழ்கிக் கப்பல்’ என்ற அந்த டெக்னிகலர் படத்தைப் பார்ப்பதற்குத்தான் எவ்வளவு ரசிகர்கள்! நீளமூக்கனது உயர்ந்த குணங்களைப் பற்றி ஆறு கவிஞர்கள் காவியமெழுதினர் ! பிரபலமான ஒன்பது எழுத்தாளர்கள் அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.

அவனுடைய அரண்மனை போன்ற வீடும் பலர் வந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. யாரும் எந்த நேரத்திலும் அதற்குள் போகலாம். ஒரு வேளை சாப்பிடலாம். ஒரு இழுப்பு மூக்குப்பொடியும் பெற்றுக்கொள்ளலாம்!

அவனுக்கு இரண்டு காரியதரிசிகள் இருந்தனர். இரண்டு அழகான தேர்ந்த பெண்கள். இரண்டு பேருமே அவனைக் காதலித்தனர். மதித்து வணங்கினர். இரண்டு அழகான பெண்கள் ஒரே நேரத்தில் ஒரு ஆண்மகனைக் காதலித்தால் எப்போதுமே பிரச்சனைதான். நீளமூக்குக்காரனின் வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது.

அவர்கள் இருவர் மட்டுமின்றி அவனைப் பலரும் விரும்ப ஆரம்பித்தனர். தொப்புள்வரை தொடர்ந்த அந்த நீண்ட மூக்கு உன்னதத்தின் குறியீடாக பார்க்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி நீளமூக்கன் தனது கருத்துக்களைச் சொன்னான். பத்திரிக்கைகள் அவனுடைய கருத்துக்களைப் பிரசுரித்தன :

“மணிக்கு 10,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் விமானம் உருவாக்கப்பட்டது. நீளமூக்கர் அதைப்பற்றி இப்படிச் சொன்னார்..”.

“டாக்டர் பண்ட்ரோஸ் ·புராசிபுரோஸ் இறந்த மனிதன் ஒருவனை உயிர்ப்பித்தார். அதைப்பற்றிக் குறிப்பிடும்போது நீளமூக்கர் தனது உரையில் …”

உலகின் மிக உயரமான சிகரம் ஏறப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன் மக்கள் இப்படிக் கேட்டனர் : “நீளமூக்கர் அதைப்பற்றி என்ன சொல்கிறார்?”

நீளமூக்கன் ஒரு நடப்பைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்றால், ப்பூ… அது ஒன்னுமில்லாத விஷயம் என்றாகிப்போனது. எனவே எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் நீளமூக்கன் எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது ! ஓவியம், வாட்ச் வியாபாரம், மெஸ்மரிஸம், புகைப்படக்கலை, ஆன்மா, வெளியீட்டு நிறுவனங்கள், நாவல் எழுதுதல், இறப்புக்குப் பிறகான வாழ்க்கை, பத்திரிக்கைகளின் போக்கு, வேட்டையாடுதல் இப்படி.

இந்த சமயத்தில்தான் நீளமூக்கனைப் பிடிப்பதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஒன்றைப் பிடிப்பது — அதாவது உடல்ரீதியாக பிடிப்பது — என்பது ஒன்றும் புதிதல்ல. இந்த உலக வரலாற்றில் முக்கால்வாசி இப்படிப்பட்ட பிடிப்புகளையும் அதனால் ஏற்பட்ட வெற்றிகளையும் பற்றியதுதானே!

இந்த பிடித்தல் என்பது என்ன? தரிசாகக் கிடந்த ஒரு நிலத்தில் தென்னங்கன்றுகளை நடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்துக்கு நீரூற்றி அதை உரமிட்டு வளப்படுத்துகிறீர்கள். அதற்கு வேலி போடுகிறீர்கள். எதிர்பார்ப்பில் ஆண்டுகள் பல கழிந்து கன்று வளர்ந்து மரமாகி பலன் தர ஆரம்பிக்கிறது. அப்போது திடீரென்று உங்கள் தோட்டத்தை உங்களிடமிருந்து யாரோ பிடுங்கிக்கொள்கிறார்கள்.

எல்லாருக்கும் முதலில், நீளமூக்கனைப் பிடிப்பதற்கு அரசுதான் முயற்சி செய்தது. ஒரு நம்பிக்கை தந்திரத்தை அது கையாண்டது. ‘நீளமுக்கர்களின் தலைவன்’ என்று ஒரு பட்டத்தை அவனுக்கு வழங்கியது. ஒரு மெடலையும் பரிசாகக் கொடுத்தது. அந்த தங்க மெடலை அவன் கழுத்தில் ஜனாதிபதியே அணிவித்தார். அதன் பிறகு கைகுலுக்குவதற்கு பதிலாக, அவனுடைய நீண்ட மூக்கை லேசாக செல்லமாகக் கிள்ளினார். இது பத்திரிகையாளர்களால் படமாக்கப்பட்டு எல்லாத் திரையரங்குகளிலும் காண்பிக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் நாடு முழுவதிலும் இருந்த அரசியல் கட்சிகளும் ரொம்ப ஆர்வமாக முன்வந்தன. “மக்கள் போராட்டத்துக்கு தோழர் நீளமுக்கர்தான் தலைமை ஏற்று நடத்தவேண்டும்!” “தோழர் நீளமூக்கரேதான்!”

யாருடைய தோழர்? எதில் தோழர்? அட ஆண்டவனே! பாவம் அந்த நீளமூக்கன்!
நீளமூக்கன் ஒரு கட்சியில் சேரவேண்டும்! எந்த கட்சி? அப்போது நிறைய கட்சிகள் இருந்தன. எப்படி நீளமூக்கனால் ஒரே நேரத்தில் பல கட்சிகளில் சேர முடியும்?

அவனே சொன்னான் : “நான் ஏன் கட்சிகளில் சேரவேண்டும்? நானா? எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கிறது”

அதன்பின் அவனுடைய காரியதரிசிகளில் ஒருத்தி சொன்னாள் : “தோழர் நீளமூக்கர் என்னை விரும்பினால் என்னுடைய கட்சியில் சேரவேண்டும்”

அதற்கு நீளமூக்கன் எதுவும் சொல்லவில்லை.

“நான் எதாவது கட்சியில் சேரவேண்டுமா?” என்று இன்னொரு காரியதரிசினியைக் கேட்டான். அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துகொண்ட அவள், “ஏன் சேரவேண்டும்?” என்று பதில் சொன்னாள்.

அந்த நேரத்தில் ஒரு கட்சி இந்த முழக்கத்தோடு வந்தது : “எங்கள் கட்சி நீளமூக்கரின் கட்சி. நீளமூக்கரின் கட்சி மக்களின் கட்சி”

மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இதைக்கேட்டு கொதித்தெழுந்தனர். நீளமூக்கனின் காரியதரிசினிகளில் ஒருத்தியை வளைத்துப் போட்டு அவள் மூலமாக ஒரு அறிக்கை விட்டனர். “நீளமூக்கர் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். இதுநாள்வரை அவர் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருந்தார். தன்னுடைய நடிப்பில் என்னையும் ஒரு பகடைக்காயாக பயன்படுத்திவிட்டார். இப்போது ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அந்த நீளமான மூக்கு உண்மையில் ரப்பரால் ஆனது”

வாவ்! எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியானது. நீளமூக்கனின் நீளமூக்கு ரப்பரால் ஆனது!

அதன்பிறகு மக்கள் அமைதியாக இருப்பார்களா என்ன? கோபமாக இதற்கு எதிர்வினை செய்யமாட்டார்களா என்ன? தந்திகளும், தொலைபேசிகளும், கடிதங்களும் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்தன! ஜனாதிபதிக்கு நிம்மதியோ அமைதியோ இல்லாமல் போனது. “நீளமூக்கனின் ரப்பர் மூக்கு அழிந்து போகட்டும்! நீளமூக்குக் கட்சி ஒழிக! புரட்சி வாழ்க!”

நீளமூக்குக்கு எதிரான அரசியல் கட்சி இவ்விதமாக ஒரு அறிக்கைவிட்டதும் அதை எதிர்த்து எதிர்க்கட்சி அவனுடைய இன்னொரு காரியதரிசினி மூலமாக எதிர் அறிக்கை விட்டது : “அன்புள்ளம் கொண்ட நாட்டுமக்களே! குடிமக்களே! அவள் சொன்னது ஒரு பச்சைப்பொய். தோழர் நீளமூக்கர் அவளை காதலிக்கவில்லை. அதனால் அவள் இப்படி பழிவாங்குகிறாள். நீளமூக்கரின் புகழையும் செல்வத்தையும் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவளுடைய பேரவாவில் விளைந்த பொய் அது! அவளுடைய சகோதரர்களில் ஒருவர் எதிர்க்கட்சியில் இருக்கிறார். அந்த கட்சியின் உறுப்பினர்களின் உண்மையான நிறத்தை இப்போது காட்டுகிறேன். தோழர் நீளமூக்கரின் நம்பிக்கையான காரியதரிசினி நான்தான். அவருடைய மூக்கு ரப்பரால் ஆனதல்ல. எனது இதயம் உள்ளே துடித்துக்கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல அவருடைய மூக்கும் உண்மையானதே. இந்த மாதிரி எசகுபிசகான சூழ்நிலையில் தோழர் நீளமூக்கரை ஆதரிக்கும் கட்சி நீடூழி வாழட்டும்! மக்கள் முன்னேற்றத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த குறிக்கோளுமில்லை. புரட்சி நீடூழி வாழ்க!”

இப்போது என்ன செய்வது? மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது. நீளமூக்கனுக்கு எதிரான கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதியை குற்றம் சொல்ல ஆரம்பித்தார்கள் : “முட்டாள் அரசு! ‘நீளமூக்கர்களின் தலைவன்’ என்ற பட்டத்தை மக்களை ஏமாற்றிய ஒருவனுக்கு கொடுத்திருக்கிறார்கள்! தங்கமெடல் வேறு! இந்த ஏமாற்று வேலையில் ஜனாதிபதிக்கும் பங்கு உண்டு. தேசிய நலனுக்கு இதில் குந்தகம் ஏற்பட்டுள்ளது. தேசநலனை அவமதித்துவிட்டனர். ஜனாதிபதி ராஜினாமா செய்யவேண்டும். ரப்பர் மூக்கன் கொல்லப்பட வேண்டும்!”

இதற்கு ஜனாதிபதி கோபமாக எதிர்வினை செய்தார். ஒரு நாள் காலை ராணுவமும் டாங்கிகளும் நமது பாவப்பட்ட நீளமூக்கனின் வீட்டைச் சுற்றி வளைத்தது. அவனைக் கைது செய்து கூட்டிச்சென்றனர்.

கொஞ்ச காலத்துக்கு நீளமூக்கனைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை. அவனுடைய இருப்பை மக்கள் மறந்தும் போயினர். பிறகுதான் அணுகுண்டின் விளைவுகளைப் பற்றிய செய்தியுடன் புது செய்தி வந்தது. என்ன நடந்தது தெரியுமா? எல்லாவற்றையும் மக்கள் மறந்திருந்த அந்த சமயத்தில்தான் ஜனாதிபதியின் அந்த அறிக்கை வந்தது : “மார்ச் 9ஆம் தேதி நீளமூக்கர்களின் தலைவனின் வழக்கு நடைபெறும். 48 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவ நிபுணர்கள் அவரைப் பரிசோதிப்பார்கள். உலகின் அனைத்து பத்திரிக்கைகளின் கரஸ்பாண்டெண்டுகளும் அதில் கலந்துகொள்வர். நடப்பதனைத்தும் படமெடுக்கப்பட்டு உலகின் உடனடி பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்”

மக்கள் எப்போதுமே மக்கள்தான். அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. மாநகரத்துக்கு பெருமளவில் அவர்கள் வந்து சேர்ந்தனர். தங்கும் விடுதிகளை முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கான வாகனங்களுக்குத் தீ வைத்தனர். காவல் நிலையங்களை எரித்தனர். அரசு கட்டிடங்களை உடைத்து அழித்தனர். வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. நீளமூக்கனுக்கான இந்த போராட்டத்தில் பல ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டு தியாகிகளாயினர்.

மார்ச் 9. காலை பதினோறு மணி. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னிருந்த சதுரவடிவ இடம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. லௌடு ஸ்பீக்கர்கள் அலறின. “மக்கள் அமைதி காக்க வேண்டும். பரிசோதனை ஆரம்பித்து விட்டது”

ஜனாதிபதி மற்றும் அவரது காபினட் அமைச்சர்கள் முன்னிலையில் மருத்துவர் குழு கூடி நீளமூக்கனைச் சுற்றிவளைத்தது. ஒரு டாக்டர் அவனது மூக்குத் துவாரத்தினை மூடினார். உடனே அவன் தன் வாயை விரியத்திறந்தான். இன்னொரு டாக்டர் ஒரு ஊசியை எடுத்து அவன் மூக்கு நுனியில் குத்தினார். அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவனது மூக்கின் நுனியிலிருந்து ஒருதுளி ரத்தம் வந்தது.

டாக்டர்கள் தங்களது ஒருமித்த தீர்ப்பை வழங்கினர் : “இந்த நீளமூக்கு ரப்பரால் ஆனதல்ல. இது உண்மையானதுதான்.”

நீளமூக்கனது காரியதரிசினிகளில் ஒருத்தி அவனது மூக்கின் நுனியில் முத்தமிட்டாள்.

“தோழர் நீளமூக்கர் நீடூழி வாழ்க! நீளமூக்கர்களின் தலைவர் நீடூழி வாழ்க! நீளமூக்கரின் மக்கள் முன்னேற்றக் கழகம் நீடூழி வாழ்க !”

இந்த ஆரவாரமும் ஆனந்தமும் முடிந்தபோது, ஜனாதிபதி இன்னொரு தந்திரவேலை செய்ய நினைத்தார். பாராளுமன்ற உறுப்பினராக நீளமூக்கனைத் தேர்ந்தெடுத்தார் ! நீளமூக்கன் கதையின் முடிவு அதுதான்.

ஆனால் நீளமூக்கன் உறுப்பினராகாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைத் துவக்கின. “மந்திரிசபை ராஜினாமா செய்ய வேண்டும். பொய்மை எப்படி தொடர்கிறது என்று பாருங்கள்! மக்கள் சிந்தனையில் குழப்பம் உண்டாகாதா? பாவம் இந்த அறிவுஜீவிகள் என்ன செய்வார்கள்?” என்று முழங்கத் தொடங்கின.

***

— (மார்ச் 2004, உயிர்மை)

கதாசிரியரையும் கதையையும் பற்றிய குறிப்பு

அரசியல் விமர்சனம் செய்யும் கதைகளை சுவாரசியமாக, வெற்றிகரமான இலக்கியப் படைப்பாக உருவாக்குவது லேசான காரியமல்ல. ஜார்ஜ் ஆர்வெலின் மிருகப்பண்ணை (Animal Farm) நாவல் ஒரு நல்ல உதாரணம். இக்கதையில் இவ்விஷயம் பஷீருக்கு எவ்வளவு எளிதாகக் கூடிவந்திருக்கிறது ! இலக்கியக் குன்றின் மேலிட்ட விளக்கு பஷீர். இந்தக்கதையும் அப்படியே.

***

நாகூர் ரூமி

நன்றி : நாகூர் ரூமி

***

சுட்டிகள் :

எனது பஷீர் – சுகுமாரன்

பஷீர்: பூமியின் உரிமையாளர் – சுகுமாரன் / காலச்சுவடு

பஷீர் : மொழியின் புன்னகை – ஜெயமோகன் / காலச்சுவடு

கதைகளைத் தின்னும் ஆடு – எஸ். ராமகிருஷ்ணன்

பஷீரின் ‘மதிலுகள்’ – பிரவீன்குமார்

Mathilukal (Walls) (ml: മതിലുകള്‍) , directed by Adoor Gopalakrishnan Part 1

Mathilukal (Walls) (ml: മതിലുകള്‍) , directed by Adoor Gopalakrishnan Part 2

பஷீரின் சில சிறுகதைகள் :

இதயதேவி  (தமிழில் : சித்தார்த்)

தங்கம்  (தமிழில்: ஏ.எம்.சாலன் )

தேன் மாம்பழம்  (தமிழில்: சுகுமாரன் )

ஜென்ம தினம்  (தமிழில்: குளச்சல் மு. யூசுப் )

’சுரா’ மொழிபெயர்ப்பில்…

பழைய ஒரு சிறிய காதல் கதை  

வெள்ளப்பெருக்கு 

நீல வெளிச்சம் 

மந்திரப் பூனை

உமறு பாஷா யுத்த சரித்திரம்

கணையாழி , மார்ச் 2002 இதழிலிருந்து…

*

உமறு பாஷா யுத்த சரித்திரம்

ஹ.மு. நத்தர்சா

‘உமறு பாஷா’ என்னும் பெயர், நாயகத் தோழர் கலீபா உமர் காலக்கட்டத்தில் நடந்த யுத்த சரித்திரமோ என்ற மயக்கத்தைத் தந்தாலும், உண்மையில் இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் துருக்கிப் பேரரசுக்கும், இரஷ்யப் பேரரசுக்கும் இடையே தொடர்ந்து பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘ஒமர்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

விக்டோரியா காலத்தின் இடைப்பகுதியைச் சேர்ந்த ஜி.வி.எம்.ரைனால்ட்ஸ் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிக் குவித்திருப்பவர். இவருடைய நாவல்களின் தாக்கம் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களில் காணப்படுவதாக இலக்கியத் திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஆங்கிலத்தில் மூன்று பாகங்களாக வெளிவந்த இந்த பிரமாண்டமான வரலாற்று நூலை, தமிழில் நான்கு பாகங்களாக, பல்வேறு காலக்கட்டங்களில் மொழிபெயர்த்து , நூறாண்டுகளுக்கு முன்பே வெளியிட்டவர், நாகூர் மகாவித்வான் குலாம்காதிறு நாவலர். தமிழ், ஆங்கிலம், அரபி மொழிகளில் புலமைபெற்று விளங்கிய குலாம் காதிறு நாவலர் , கவிதை, உரைநடை, மொழியாக்கம் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் தன் முத்திரையைப அழுத்தமாகப் பதித்துள்ளார்.

வழக்கறிஞர் சரவனப்பெருமாள் ஐயரிடம் இவர் பெற்ற ஆங்கில அறிவின் பெருமித வெளிப்பாடாக அமைந்து, படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது, ‘உமறு பாஷா யுத்த சரித்திரம்’ என்னும் பிரம்மாண்டமான இவ்வரலாற்று நூல்.

இன்றைக்கும் சரித்திர சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடல்கள் தீபகற்பத்தைச் சேர்ந்த குரோஷியா நாட்டில் இருந்த கதைக்களம் தொடக்கம் பெறுகிறது.

அன்றைய குரோஷியா நாட்டின் சரிபாதி, ஆஸ்திரியா நாட்டின் அதிகாரத்திலும், மறுபாதி துருக்கிப் பேரரசின் பிடியிலும் சிக்கியிருந்த்போது நிகழ்ந்த சில சம்பவங்களைத் தீப்பொறியாக்கி, அத்தீ கொழிந்து விட்டு எரியத் தொடங்கியபோது ஆசிய ஐரோப்பா கண்டங்களுக்கிடையே இருந்த பல சிறுநாடுகளும், நகரங்களும் கருகிச் சாம்பலாகிய காட்சியை சரித்திரக் கதைக்கே உரிய சஸ்பென்ஸ் உத்தியுடன் உருக்கமாகச் சித்தரித்துள்ளார், ஆங்கில வரலாற்று நாவலாசிரியர் ரைனால்ட்ஸ். மூலநூலின் சுவாரஸ்யம் சிறிதும் கெடாத வகையில் மொழிபெயர்ப்பு நூல் என்று உணரமுடியாதபடி, தனக்கே உரிய கம்பீர நடையைக் கையாண்டு இவ் வரலாற்று நூலைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் குலாம் காதிறு நாவலரின் கைவண்ணம் பாராட்டத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், மத்திய ஆசியாவில் மிகப்பெரிய போர் மூண்டு, இரஷ்யப் பேரரசு ஒருபுறமும், பிரிட்டனையும் பிரான்சையும் கூட்டணி அமைத்துக்கொண்டு துருக்கிப் பேரரசு மறுபுறமும் நிகழ்த்திய சண்டையில் வடிந்த இரத்த வாடையை படிப்பவர் மனதிலும் படியச் செய்கிறது இம்மாபெரும் வரலாற்று நூல் என்பது ஒரு நெருடலான உண்மை.

மொழி பெயர்ப்பில் சித்து விளையாட்டு நிகழ்த்தியிருக்கிறார் நாவலர். ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது, பொருத்தமான இடங்களில் புதிய சொற்களை ஆய்வது, இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு வழக்குச் சொற்களை உரிய இடங்களில் கையாள்வது, வர்ணிக்கும் இடங்களில் தூய தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துவது என கதையின் நடையில் பல திருப்பங்களை தன் விருப்பத்தின் அடிப்படையில் கையாண்டுள்ளார்.

குரோஷியாவை ஆண்ட பான் என்னும் சர்வாதிகாரியால் வேண்டுமென்றே வம்புக்கிழுக்கப்பட்டு அவமானத்திற்கு ஆளாக்கப்பட்ட ஒரு சாதாரண சுதேச பட்டாள வீரனாகிய தியோடர் லட்டோஸ் என்ற போர் வீரன், தன்னை சவுக்கால் அடித்து துன்புறுத்திய சர்வாதிகாரியை குதிரையில் இருந்து இழுத்து நிலத்தில் புரட்டி அவமானப்படுத்தி, காவலர்களால் மரணதண்டனை நிறைவேறும் தருணத்தை விடுத்து, துருக்கிப் பேரரசிடம் ஒப்படைத்து, உமறுபாஷா என்ற ஒப்பற்ற வீரனாக உருமாறிய அற்புத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இப்புதினத்தில், ஏராளமான சக மனிதர்களின் காதல் கதைகளும் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் தொன்னூற்றி மூன்று அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கதையாசிரியரால் கையாளப்படும் சஸ்பென்ஸ் உத்தியே, அடுத்த அத்தியாயத்தை நோக்கி வாசகனை அடித்து விரட்டுகிறது என்பதும் சுவையான உண்மை.

இரஷ்யாவை ஆட்சி செய்த ஜார் மன்னரின் பரம்பரை, பதவி வெறிபிடித்து, ஒருவரையொருவர் நயவஞ்சகமாகக் கொன்று ஆட்சிக் கட்டில் ஏறிய கதையையும் நூலாசிரியர் பட்டியல் போட்டுக் காட்டத் தவறவில்லை.

பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நிலவிய ஜன்மப்பகை மறைந்து இருநாட்டைச் சார்ந்தவர்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வும், காதல் உணர்வும் அரும்பத் தொடங்கியது என்பதையும் நூலாசிரியர் சுவைபடச் சொல்லிக் காட்டியுள்ளார்.

துருக்கி ஒரு காலக்கட்டத்தில் ஐரோப்பிய – ஆசிய நாடுகளுக்கு ஒரு சவால் விடும் சக்தியாகத் திகழ்ந்தது என்பதற்கு இந்தப் பிரமாண்டமான நூல் ஒரு எடுத்துக்காட்டு!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் உலக வரலாற்றை சுவைபடத் திரும்பிப் பார்க்க விரும்பும் ஒவ்வொருவருக்கும், இந்த நூலை உரிமையுடன் பரிந்துரை செய்யலாம்.

*

நன்றி : ஹ.மு. நத்தர்சா , கணையாழி

*

உமறு பாஷா யுத்த சரித்திரம்
(விலை ரூ. 185 | பக்கம் 896)
நூல் கிடைக்குமிடம் :

கல்தச்சன் பதிப்பகம்
பு.எண்.21
மேயர் சிட்டிபாபு தெரு
திருவல்லிக்கேணி
சென்னை – 5

« Older entries