காலத்தை வென்ற கவிதைகள் – மகாகவியின் ’புள்ளி அளவில் ஒரு பூச்சி’

இனிவரும் நாட்களில் ஆபிதீன் பக்கங்களில் ’காலத்தை வென்ற கவிதைகள்’ என்ற தலைப்பில் ஈழத்தின் சிறந்த சில கவிதைகளை உங்களுக்குத் தரவிருக்கிறேன். இதோ மகாகவி என்ற ருத்ரமூர்த்தி அவர்களின் கவிதை. மஹாகவி இறந்து பல வருடங்கள் என்றாலும் அந்த மகத்தான கவிஞனின் கவிதைகள் இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டாலும் அதற்காக இரங்குவார் இன்று யாருமில்லை. ஒரு சிறு பூச்சியைக் கொன்றதற்காக வருந்தி அழும் கவிஞனின் உள்ளத்தைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. – எஸ்.எல்.எம். ஹனீபா

***

புள்ளி அளவில் ஒரு பூச்சி

மகாகவி

புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!

ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.

நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு

வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
“தாயே’ என அழுத
சத்தமும் கேட்கவில்லை.

கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.

காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.

மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!

காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.

***

நன்றி : ஹனிபாக்கா

***

மேலும் பார்க்க:

மகாகவியின் இன்னொரு கவிதை : தேரும் திங்களும்

மகாகவி பற்றி விக்கிப்பீடியா