சிவகாமியின் மரணம் – அசோகமித்திரன்

இந்தியா டுடே (மே 26, 1999) இதழில் வெளியானது.  பக்கங்களை தபாலில் அனுப்பிவைத்த நண்பர் தாஜ் , கதையை வியந்து இப்படி அந்தத் தாளில் எழுதியிருந்தார் :

*

சிவகாமியின் மரணம் – அசோகமித்திரன்

புத்தகத்தை வாங்கி இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இப்போதுதான் நான்காம் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. சிவகாமியின் மரணம் 29-5-1958.

புத்தகம் பைகிராப்ட்ஸ் சாலை நடைபாதை புத்தகக் கடை ஒன்றில் வாங்கியது. அந்த சாலையை இப் போது பாரதியார் சாலையாகப் பெயர் மாற்றியிருக்கிறது. முன்பும் பல கடை கள் இருந்தன. இப்போது பெரிய, பகட்டான கடைகள். நடைபாதை பாதியாகக் குறுகிவிட்டது. தரையில் புத்தகங்களைப் பரப்பி வைக்க அதிக இடம் இல்லை . பொதுவாகப் பழைய புத்தகக் கடைகளில் நின்றபடி நாம் வேண்டும் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்க முடியாது. இப்போது அந்தப் பழைய புத்தக் கடை முன்னால் உட்கார முடியாது. அச்சமெழுப்பும் போக்குவரத்தில் சில விநாடிகளுக்குள் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, மோட்டாரோ கூட இடித்துத் தள்ளி விடும். பழைய புத்தகங்கள் வாங்குவதை அநேகமாக நிறுத்திவிட்டதற்குக் கண், பார்வை மங்கி வருவது மட்டும் காரணமில்லை.

புத்தகம் ‘செயிண்ட் ஜோன். பெர்னார்ட் ஷா எழுதிய நாடகம். அதை அவர் 1924ல் எழுதி அடுத்த வருடம் நோபல் பரிசு பெற்றுவிட்டார். ஆனால் நான் வாங்கிய புத்தகம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அச்சிடப்பட்டது. பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகளுக்காக மலிவான தாளில் மலிவுப் பதிப்பாகப் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டது. யாரோ ஜான் – ஸ்மித் என்பவர் 1944ல் வாங்கியிருக்கிறார். இங்கிலாந்திலேயே வாங்கியிருக்கக் கூடும். அவருக்கு அந்த நாடகம் பிடிக்காமல் போயிருக்கலாம். ஜோன், பிரெஞ்சுக்காரர்கள் சார்பில் இங்கிலாந்துக்காரர்களோடு போரிட்டு வென்றவன். அப்படி இருந்தும் பிரான்சு நாட்டுப் பெரிய தலைகள் சேர்ந்து கொண்டு – அந்த பட்டிக்காட்டுப் பெண்ணை இங்கிலாந்துக்காரர்களுக்கே விற்று விட்டன. பதினேழு, பதினெட்டு வயதில் வெறும் கத்தியும் ஈட்டியும் வைத்துக் கொண்டு ஒரு படைக்குத் தலைமை தாங்கி வெற்றிகளை வாங்கித் தந்த அந்தப் பெண்ணை அவள் நாட்டுக்காரர்களே எதிரிகளிடம் விற்று விடுகிறார்கள்! இங்கிலாந்துக்காரர்கள் ரோஷமுடையவர்கள். பய பக்தி கொண்டவர்கள். நல்ல கிறிஸ்தவர்கள். அவர்கள் மானம் போகும் படியாக அவர்களைத் தோற்கடிக்கும் ஆற்றல் படைத்த இளம் பெண் சூனியக்காரியாகத்தான் இருக்க வேண்டும். சாத்தானின் கைக்கூலியாக இருக்க வேண்டும். கொளுத்து அவளை உயிரோடு! வேத முழக்கங்களுடன் அந்தப் பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண் உடல் கருகி ரத்த நாளங்கள் வெடித்துத் துடிதுடிக்கச் செத்தாள்.

ஜான் ஸ்மித்துக்கு ‘செயிண்ட் ஜோன்’ நாடகம் பிடிக்காமல் போனதற்கு இன்னும் கூடக் காரணங்கள் இருக்கலாம். இரண்டாம் உலக யுத்தத் தில் இங்கிலாந்துக்காரர்களும் பிரெஞ் சுக்காரர்களும் நேச நாடுகள் சேர்ந்து ஜெர்மனியோடு சண்டை போட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த ஆயிரமாண்டுப் பகையும் போட்டியும் எங்கே போய் விடும்?

ஜான் ஸ்மித் எறிந்துவிட்டுப் போன ‘செயிண்ட் ஜோன்’ புத்தகம் எஸ். ராதாகிருஷ்ணன் என்பவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. அவர் அதை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கி யிருக்கலாம். ஜான் ஸ்மித் பெயரை அடித்து விட்டுத் தன் பெயரை எழுதி இருக்கிறார். ஜான் ஸ்மித்தே அந்தப் புத்தகத்தை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்திருக்கலாம். ராதாகிருஷ்ணன் பெர்னார்ட் ஷா நாடகத்தைப் படித்து ரசிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஜான் ஸ்மித், ராதாகிருஷ்ணன் இரண்டு பேருமே யுத்தக் கைதிகளாக சிங்கப்பூரில் இருந்திருக்கலாம். ராதா கிருஷ்ணனுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்தில் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜான் ஸ்மித் யுத்தம் முடியும் வரை யுத்தக் கைதியாகவேதான் காலம் தள்ளியிருக்க வேண்டும். எஸ். ராதாகிருஷ்ணன் – இவர் இந்தியாவின் உப ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்தவரல்லவா? அந்த மனிதர் ‘செயிண்ட் ஜோன்’ நாடகத்தைப் படிக்கும் ரகமா? அவர் ஏதாவது பழைய புத்தகக் கடையில் வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் புத்தகங்களைப் பழைய புத்தகக் கடையில் போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் பெயர் உள்ள சாலையில் அவருடைய வீடு அவ்வளவு பெரியது. இந்த ராதாகிருஷ்ணன் பெயர் எழுதப்பட்ட பக்கத்தின் பின்புறத்தில்தான் ‘சிவகாமியின் மரணம் 29-5-1958* என்று இருந்தது. உண்மையில் இந்த மூன்று கையெழுத்துக்களில் மரணம் குறித்து எழுதியதுதான் பளிச்சென்று யார் கவனத்தையும் கவரக் கூடியதாக இருந்தது. ஆனால் அதைத்தான் இருபத்தைந்து வருடங்கள் பார்க்கத் தவறியிருக்கிறேன்.

நாடகத்தையாவது இன்னொரு முறை படித்து விடலாமா? ஜோனுடைய வாழ்க்கைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள இந்த நாடகம் போதாது. பெர்னார்ட் ஷா ஏனோ எல்லா நேரமும் தான் ஒரு அதி புத்திசாலி என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மனிதர்களைவிட மனிதக் குழுக்கள், சமூகம், சமூக அமைப்புகள் மீது அவர் கணிப்புகளும் கண்டுபிடிப்புகளும்தான் முக்கியம். அவரைப் போலவே அவருடைய பாத்திரங்களும் கெட்டிக்காரர்கள். கெட்டிக்காரர்களிடம் ஒரு சங்கடம், அவர்கள் வார்த்தைகளைப் பிறர் மீது அள்ளிக் கொட்டுவதுபோல அவர்கள் மீதே அவற்றை வாரி இறைத்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனதில் அவை ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த இரைச்சலில் சில உண்மைகள் அளையக் கிடைக்காமல் தவறி விடும். பெர்னார்ட் ஷா தன் நாடகங்களில் அவ்வப்போது வரலாற்று நாயகர்களைப் பாத்திரங்களாகப் பயன்படுத்திக் கொண்டாலும் அவர்களைக்கூட சமூகப் பிரதிநிதி களாக மாற்றி விடுவார். ஒரு வேளை அதுதான் சரியான பார்வையோ?

கடவுளின் காவலர்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்திக் கொல்லப்பட்ட அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணை 1920ஆம் ஆண்டில் தெய்வக் கிருபை பெற்றவள் என்று கடவுளின் காவலர்கள் அறிவித்துக் கொள்ளும் இன்னொரு கிறிஸ்தவ சபை அறிவித்தது. ஐநூறு ஆண்டுகள் முன்பு தெய்வ விரோதி, சூனியக்காரி, மதச் சத்ரு என்று சொல்லி உயிரோடு எரிக்கப்பட்ட அந்தப் பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண் திடீரென்று பத்திரிகைச் செய்திகளில் முதலிடம் பெற ஆரம்பித்தாள். புனித ஜோன் ஆனாள். உடனே அவள் பற்றி நூல்கள். நாடகங்கள். இங்கிலாந்தின் பங்குக்கு பெர்னார்ட்ஷா நாடகம் என்றால் அமெரிக்காவின் பங்குக்கு மாக்ஸ்வெல் ஆண்டர்சன் நாடகம். பேசாத் திரைப்படம் பேசத் தொடங்கியவுடன் உரத்த பின்னணி இசையுடன் மேலும் திரைப்படங்கள்…

எஸ்.ராதாகிருஷ்ணன் ‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடிய நாட்களில் ஜோன் பழைய செய்தியாகிவிட்டாள். அந்த நாளில் இன்ஸி என்ற பெயர் கொண்ட தொரு அமெரிக்க மனத்தத்துவ மருத்துவர் ஆண்கள் – பெண்கள் எல்லாமே நம்பக்கூடியவர்கள் அல்ல என்று புள்ளி விபரக் கணக்கு தந்தார். அவர் தன்னுடைய கூற்றை எல்லாக் காலத்துக்கும் விஸ்தரித்தார். மனிதரில் புனிதத் தன்மையே சாத்திய மில்லை . பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்குக்கூட.

ஆனால் எல்லாக் காலத்திலும் நிறையப் பெண்கள் பதினெட்டு, பத்தொன்பது வயதில் இறந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் எழுதப்பட்ட கதை, நாவல் என்று எதை எடுத்தாலும் இளையாள், சித்தி, சிற்றன்னையின் பிள்ளைகள் என்று நிகழ்ச்சிகள் போகும். சரத் சந்திரர் கதைகளில் முதல் மனைவி பூரண ஆயுள் பெற்றிருந்தாள் என்ற பேச்சே கிடையாது. பெண்களுக்குப் பத்து வயதிலும் பனிரண்டு வயதிலும் கல்யாணம். பதினைந்து வயதுக்குள் கையில் ஒரு குழந்தை. பத்துப் பதினைந்து நபர்கள் உடைய குடும்பத்தின் வீட்டு வேலை. மாமியார், நாத்தனார் மரபுக் கொடுமை. இந்த நிலையில் எப்படி ஒரு பெண் தீர்க்காயுள் கொண்டிருக்க முடியும்? இந்தப் பத்து வயதுக் கல்யாணம் இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளான பிறகு நல்ல வசதியுள்ளவர்கள் குடும்பங்களில் கூட நடந்திருக்கிறது. வாய் கிழிய ஊருக்கு உபதேசம் பண்ணுகிற அமைச்சர் ஒருவர் தன் பதினைந்து வயதுப் பெண்ணுக்குப் பல கோடி ரூபாய் செலவழித்துக் கல்யாணம் செய்வித்தார். ராஜகுடும்பத்தைச் சேர்ந்த அவர், ரயில்வே மந்திரி. தன் ஊர் ரயில் நிலையத்தைச் சலவைக்கல்லால் இழைத்து விட்டார். சென்னை ஆட்டோ ரிக்ஷாக்களில் மட்டும் தான் பெண்ணின் திருமண வயது 21. அந்த அமைச்சரைச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை.

சிவகாமி அற்பாயுளில்தான் போயிருக்க வேண்டும். இல்லாது போனால் அவளுடைய சாவை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்திருப்பார்களா? சுத்த சைவப் பெயர். தகப்பனார் பட்டை பட்டையாக விபூதி தரித்துக் கொண்டிருப்பார். அது ராதாகிருஷ்ணனாக இருக்க முடியாது. புத்தகம் மூன்றாவது கை மாறியிருக்கிறது. ‘செயிண்ட் ஜோன்’ போன்ற புத்தகங்களை யாராவது அடிக்கடி பார்க்கக் கூடிய இடத்தில் வைப்பார்களா? தினமும் பார்த்துப் படித்து ரசிக்கக்கூடிய புத்தகம் இல்லை அது.ஒரு முறை படித்து விட்டு எங்கோ மூலையில் பாது காப்பாக வைத்திருப்பார்கள். ஆதலால் இந்தப் புத்தகம் அந்த மூன்றாவது நபர் கையில் கிடைத்த ஓரிரு தினங்களுக்குள் சிவகாமியின் மரணம் நிகழ்ந்து விட்டது.

சிவகாமி, சிவகாமிநாதன். சிவகாம சுந்தரம், சிவகாமி நடராஜ சுந்தரம்… சிவகாமி என்று தொடங்குகிற பெயரை ஆண்களுக்குத்தான் நிறைய வைத்திருக்கிறார்கள். பெண்களுக்குப் பெயராக இரண்டாம் யுத்த காலத்தில் தான் இது அதிக அளவில் புழக்கத்துக்கு வந்தது. கல்கி எழுதி வந்த தொடர்கதையான ‘சிவகாமியின் சபதம் தான் இதற்குக் காரணம். பார்த்திபன், விக்கிரமன், குந்தவி, அருண்மொழி, நரசிம்மன், பரஞ் சோதி என இன்னும் சில பெயர்களும் குழந்தைகளுக்கு வைக்கக் கருதப்பட்டன. ‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சிவ காமி அது அச்சிடப்பட்ட ஆண்டில் கூடப் பிறந்திருக்கலாம். சிவகாமி இறந்தபோது பதினான்கு அல்லது பதினைந்து வயது. பதினைந்து வயது வளர்ந்த குழந்தையை இழக்க நேருவது எவ்வளவு கொடுமை? செயிண்ட் ஜோன் மரணம் போலவே. ஒரு வித்தியாசம். இந்த நாளில் யாரையும் உயிரோடு கொளுத்துவது இல்லை . அப்படியும் கூறுவதற்கில்லை. வெறும் பத்திரிகைச் செய்திகளின்படியே, தமிழ்நாட்டிலேயே ஓராண்டுக்கு எழுநூறு, எண்ணூறு பெண்கள் இந்தக் கதிக்கு ஆளாகிறார்கள். பட்டிக்காட்டுப் பெண். ஜோன் கொளுத்தப்பட்ட காலத்திற்கும் இப்போதைக்கும் உள்ள ஒரு வித்தியாசம், பெண்களைச் சூன்யக்காரி என்று பெயர் சூட்டிக் கொளுத்துவதில்லை .

‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்திலிருந்து மூன்று, நான்கு எண் பக்கங்களுடைய தாள்களைக் கிழித்தேன். சிவகாமியுடன் ராதாகிருஷ்ணன், ஜான் ஸ்மித் ஆகிய பெயர்களும் அகன்று விட்டன. இப்போது ‘செயிண்ட் ஜோன்’ நாடகத்தை என்னால் முறையாகப் படிக்க முடிந்தது.

***

ஓவியம் : எஸ். என். வெங்கட்ராமன்

‘ஆகா கான் மாளிகை’ (ஓரங்க நாடகம் ) – அசோகமித்திரன்

தட்டச்சு செய்து அனுப்பிய தாஜ்பாயின் குறிப்பு முதலில் (தர்மசங்கடம்தான், என்ன செய்வது?) :

நண்பர் அழகிய சிங்கரின் ‘நவீன விருட்சம்’ – 101 இதழில் (Jan’2017, அசோகமித்திரன் ஓர் ஓரங்க நாடகம் எழுதி இருக்கிறார். பெயர் ‘ஆகா கான் மாளிகை’ – அது காந்தியைப் பற்றியது.

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது, காந்தியுடன், கஸ்தூரிபாயும் கைது செய்யப்பட்டு, பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, சுவாசக் கோளாறால், அவதிப்பட்டு மரணம் கொள்ளும் தறுவாயில் கஸ்தூரிபாய் ! –

தாயைக் காண காந்தியின் மூத்தமகன் ஹரி, ‘ஆகா கான் மாளிகை’க்கு வருகிறார்.

ஹரி அங்கு வருகிற போது, காந்தி – கஸ்தூரிபாய் – ஹரி ஆகிய மூவருக்குமான உரையாடலை அசோகமித்திரன் ஓர் காட்சியாக மிக வலுவாக எழுதியுள்ளார்.

அசோகமித்திரன் இத்தனை கடுமையான மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தி எந்தவோர் ஆக்கத்தையும் இதற்கு முன் எழுதி – நான் வாசித்ததில்லை.

காந்தியின் அடுத்த மகனான தேவ்தாஸும் அம்மாவை காண வருகிறார். அந்த மகனிடமும் காந்தி நிகழ்த்தும் தர்க்கமும் சகஜமானதல்ல!

தாயைக் காண – ஹரி வந்திருந்த போதான நிகழ்வு – குறிப்பிடத் தகுந்த கடுமை  கொண்டதாக இருந்திருக்கிறது. நிஜ சம்பவமும் கூட , இத்தனைக்கு கடுமையானதாக இருதிருக்கும் என்றும் யூகிக்கிறேன்.

இந்த ஓரங்க நாடகம்தான் அசோகமித்திரன் எழுதிய கடைசி ஆக்கம். சின்னச் சின்ன வாக்கிய அசைவுகளிலும் – நிறைய அர்த்த பாவங்கள்!! இதனை ஜீவனோடு வாசிக்கத் தந்தமைக்கு, அசோகமித்திரனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

தாஜ்…

 

‘ஆகா கான் மாளிகை’ – அசோகமித்திரன்

(ஓரு பெரிய அறை. சுவரோரமாகத் தரையில் போட்ட படுக்கையில் ஒரு முதிய பெண்மணி படுத்திருக்கிறாள். அறை ஓரத்தில் ஒரு கிழவர் உட்கார்ந்திருக்கிறார். ஓர் இளைஞன் ஒரு நிக்கல் செம்பையும் தம்ளரும் கொண்டு வருகிறான்.)

இளைஞன்:
பாபுஜி, அம்மாவுடைய கஞ்சி.

பாபுஜி:
இப்போ அம்மாவுக்கு மட்டும்தானா?

இளைஞன்:
உங்களுடையது இன்னும் தயாராகலை.

பாபுஜி:
சரி, கொடு.

(பாபுஜி, தூங்கும் கஸ்தூர்பா அருகில் உட்கார்ந்து கொள்கிறார்)

பாபுஜி:
பா… பா…. என்னாயிற்று? பா!
(தோளைத் தொடுகிறார்.)
மறுபடியும் ஜுரம் போலிருக்கே…. பா! பா!

பா:
(திடுக்கிட்டு) என்ன?…. நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?

பாபுஜி:
இல்லை, இன்னும் தயாராகலை.

பா:
எனக்கு தலையை வலிக்கிறது. வலி தாங்க முடியவில்லை.

பாபுஜி:
நல்ல ஜுரம் அடிக்கிறதே? காலையிலே டாக்டர் வந்தாரே, அப்பவே சொல்லியிருக்கலாமே?

பா;
எல்லாம் சொல்லியாச்சு. அவர் ஆஸ்பத்திரிக்கு போகணும்றார். நான் முடியாதுன்னுட்டேன்.

பாபுஜி:
இப்போ ஏதாவது வேணுமா? எனக்கும் ஆஸ்பத்திரி விஷயம் பிடிக்கலே.

பா:
நாளைக்குப் பாத்துக்கலாம். (கஞ்சி பாத்திரத்தை வாங்கிக் கொண்டு, ஒரு நிமிஷம் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்கிறாள்.)

பாபுஜி:
சூடு ஆறிடப் போறது.

பா:
சூடு ஆறறதுக்குதான் இந்த ஜுரம்.

பாபுஜி:
முடிஞ்சவரை நம்பளும் உடம்பைப் பாத்துக்கணும்.

பா:
எனக்கும் சேர்த்துத்தான் நீங்க பாத்துக்கிறீங்களே. காலையில நல்ல பனி. அந்தப் பனீலே வாக்கிங்க்!

பாபுஜி:
சரியோ தப்போ அது பழக்கமாயிடுத்து. என் வாக்கிங்கைக் காவல் பாக்கிற போலீஸ்காரங்க ஓடி ஓடி வந்தாங்க. ஒரு சமயம் சிரிப்பா இருக்கு. உடனே வருத்தமாயும் இருக்கு.

(பா, சிறிது கஞ்சியை விழுங்குகிறாள்.)

பா:
கஞ்சி கசக்கிறது.

பாபுஜி:
இங்கே எங்கேயோ உப்பு வச்சிருந்ததே? எடுத்துத் தரட்டுமா?

பா:
உங்க உப்பு உங்க கிட்டேயே இருக்கட்டும்.

பாபுஜி:
உனக்கு ஹரி ஞாபகம் வந்துடுத்து.

பா:
எனக்கு மட்டும்தான் அவன் ஞாபகமா? உங்க அகங்காரம் அவனை வரவிடாம பண்ணறது. அவன் இங்கேதான் எங்கேயோ இருக்கானாம். இதை ஒரு ஆபிஸரே சொன்னார்.

பாபுஜி:
அவர் சொன்னா சொல்லட்டும். நாமா ஒண்ணும் கேக்கக் கூடாது. இது ஜெயில்.

பா:
இருக்கட்டுமே. ஜெயில்னா அம்மா பிள்ளை உறவு போயிடுமா?

(பாபுஜி பதில் சொல்லாமல் இருக்கிறார். பா, கஞ்சி முழுதும் குடித்து முடிக்கிறாள்… தள்ளாடி எழுந்து வேறோரு அறைக்குப் போகிறாள். அவள் திரும்பி வரும்போது தள்ளாடல் சிறிது குறைந்து இருக்கிறது.)

பாபுஜி:
நீ அகங்காரம்னு சொன்னது நிஜமா இருக்கலாம். என்னுடைய கடந்த காலம், நான் பிடிவாதம் பிடிச்சது, எல்லாம் எனக்கு உள்ளூர வெட்கமாயிருக்கு. பகவான் கிட்டே சொல்லலாம். உன்கிட்டே சொல்லலாம். வேறு யார்கிட்டே அது நல்லதைவிட விபரீதத்தைதான் ஏற்படுத்தும்.

(பாபுஜி எழுந்து நிற்கிறார். இளைஞன் உணவுத் தட்டு, லோட்டாவுடன் வருகிறான்.)

இளைஞன்:
பாபுஜி, உங்க சாப்பாடு.

பாபுஜி:
மூணு ரொட்டிதானே இருக்கு?

இளைஞன்:
இன்னும் அடுப்பிலே இருக்கு. நீங்க சாப்பிட ஆரம்பிங்க. நான் சூடா கொண்டு வர்றேன்… இது ஆறிடப் போறது.

பாபுஜி:
ஹே ராம்.

(இளைஞன் தட்டையும் லோட்டாவையும் பாபுஜியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் உள்ளே போய் ஒரு நிக்கல் தம்ளருடன் வருகிறான்.)

பாபுஜி:
(இளைஞன் போன பிறகு)
எப்போவோ ஆட்டு பாலுனு சொன்னேன். ஆனால் அதுலேதான் என் உயிர் இருப்பதாக நினைக்கிறார்கள்.

(பா, சட்டென திரும்புகிறாள்.)

பா:
அப்போ ஆட்டுப் பால் உங்களுக்குப் பிடிக்கலெ.

பாபுஜி:
அப்படிதான் வைச்சுக்கோயேன்.

பா:
அப்போ இன்னொரு பொய்.

பாபுஜி:
ஒத்துக் கொள்கிறேன். பகவான் சில பொறுப்புகளை எங்கிட்டே கொடுத்திருக்கிறார்.

பா:
பகவான் நேரிலே வந்து கொடுத்தாரா?

பாபுஜி:
பகவான் நேரிலே வரமாட்டார். ஆனால் அவருக்கு தெரிவிக்கத் தெரியும். இல்லைன்னா என்னோட நூத்துகணக்கான இல்லே, லட்சகணக்கானவங்க ஜெயில்லே இருப்பாங்களா? நாம இருக்கிறதும் ஜெயில்தான். நமக்கும் சரோஜினிக்கும், கட்டில் போடறேன்னாங்க. நான் தான் வேண்டாம்னுட்டேன்.

பா:
ஒங்களுக்கு வேண்டாம்னு சொன்னாப் போறாது! ஏன் எனக்கும் வேண்டாம்னீங்க? படுக்கைலேந்து எழுந்து நிக்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறேன், தெரியுமா?

பாபுஜி:
பார்த்தேன். இன்னிக்கு தான்ஸன் வருவான். அவன் கிட்டே ஒரு கட்டில் வேணும்னு சொல்லறேன்.

பா:
கொசுக்கு என்ன பண்ணப் போறீங்க?

பாபுஜி:
கொசுவலையும் கட்டித்தரச் சொல்றேன். இப்போ முடிஞ்சாக் கொஞ்சம் தூங்கு.

(பா – படுத்து கண்ணை மூடிக்கொள்ள, பாபுஜி உணவு அருந்துகிறார். மேடை மூலையில் பரிதாபகரமான தோற்றதுடன் ஒருவன் தோன்றுகிறான். அது ஹரிலால்.)

ஹரிலால்:
அம்மா, அம்மா, நீ செத்துப் போயிடாதேம்மா…!

(ஹரிலால் மறைந்து விடுகிறான். சிறிது நேர இடைவெளி – டாக்டர் பா – வைப் பரிசோதிக்கிறார்.)

டாக்டர்:
இரண்டு மார்பிலும் சளி அடைந்து கிடக்ககிறது. ஆபரேஷன் தியேட்டர்லே டூயூப் விட்டு எடுக்க முயற்சி செய்யலாம். அதுக் கூட முடியுமான்னு நிச்சயமா சொல்ல முடியாது. நாடி மிகவும் பலஹீனமா இருக்கு. எப்படியும் இவங்களை ஹாஸ்பிடல் கொண்டு போகணும். இந்த விஷயங்களிலே ஏதோ நினைச்சுண்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

பாபுஜி:
பா….! பா…!

பா:
(மிகுந்த சிரமத்துடன்) என்ன?

பாபுஜி:
டாக்டர் சொன்னது புரிஞ்சுதா?

(பா பதில் சொல்வதில்லை.)

பாபுஜி:
டாக்டர், என்ன மருந்தும் இங்கேயே கொடுத்துடுங்க. அவங்க விருப்பத்துக்கு மாறா ஹாஸ்பிடல் வேண்டாம்.

டாக்டர்:
இங்கே அதிகம் போனா ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கலாம். ஆனா, அவுங்க மூச்சு விடறதுக்கு இடமே இல்லாம இரண்டு மார்பிலும் ஃப்ளூட் அல்லது ஃபிளம் இருக்கு. சுவாசப்பை ரொம்ப சுருங்கிப் போயிடுத்து. இப்போ அவங்க ரொம்பக் கஷ்டப் பட்டுண்டுதான் பாத்ரூம் போறாங்க. அங்கே படுக்கையை விட்டு நகராமே எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணலாம்.

பாபுஜி:
எல்லாம் சரி, டாக்டர். ஆனா அவுங்க இங்கே என்னை விட்டுட்டு வருவாங்கன்னு தோணலை.

டாக்டர்:
அவுங்க உயிருக்கு ஆபத்து.

பாபுஜி:
நீங்களே கேட்டுப் பாருங்க.

டாக்டர்:
(கஸ்தூர்பாவிடம்) அம்மா, அவர் சரீங்கறார். ஆஸ்பிடல் போகலாமா?

பா:
பாபுஜியும் வருவாரா?

டாக்டர்:
இல்லேம்மா, அவர் கைதியில்லே? எதுக்கும் கமிஷனர் தாம்ஸனைக் கேக்கலாம். பாபுஜி உங்களுக்கு பிராப்ள்ம் ஏதாவது இருக்கா? பிபி எடுத்துடறேன்.

(மேடை இருளில் மூழ்கிறது)

ஒரு குரல்:
அம்மா…! அம்மா….!

பா – குரல்:
வந்துட்டயா, ஹரி! என் கண்ணே! ஏண்டா மூஞ்சியெல்லாம் என்னமோ மாதிரி இருக்கு?

பாபுஜியின் குரல்:
சாராயம். சாராயமே குடிச்சுண்டு இருந்தா மூச்சி இப்படித்தான் இருக்கும்.

ஹரியின் குரல்:
வாயை மூடுடா! நீ மஹாத்மாவா? என் அம்மா மஹாத்மா… வாயைத் திறக்காதே! கப்சிப்!

பாவின் குரல்:
அப்பாவோட சண்டை போடாதேடா, கண்ணா. மத்தப் பிள்ளைங்க அப்பாவோட சண்டைக்கு வராங்களா? கிட்ட வாடா, கண்ணா ஹரி. என்னாலே சரியா திரும்ப முடியலே. எழுந்திருக்க முடியலே.

ஹரியின் குரல்:
அம்மா, அப்படியே இரும்மா. நான் வறேன். உன்னை இந்த மாதிரி நோயாளியாக்கிட்டானே! இந்த மஹாத்மா! பெரிய மஹாத்மா!

(மேடையில் மீண்டும் வெளிச்சம். அழுக்கு உடையணிந்து கொண்டு, பா அருகில் ஹரி அழுது கொண்டு இருக்கிறான்.)

பா:
அழாதேடா, கண்ணா. எனக்கு கொள்ளி போடுவையா? நீ எங்கேன்னு மட்டும் அப்பாவுக்கு அப்பப்போ சொல்லிடுடா.

ஹரி:
என்னை போட விட மாட்டாம்மா. நான் முஸல்மான் ஆனவன் இல்லையா? அதோ அங்கே இருக்கானே, பெரிய மஹாத்மா. அவன் உனக்கும் போடுவான், எனக்கும் போடுவான். நாம எல்லோருக்கும் போடுவான்.

(ஹரி அழுது கொண்டே வெளியேறுகிறான். மீண்டும் இருள்.)

பாபுஜி குரல்:
நான் எவ்வளவு பாபம் செஞ்சிருக்கேன். எத்தனை ஆயிரக் கணக்கானவங்க என் பேச்சைக் கேட்டு உயிரை விட்டிருக்காங்க. மனைவி, குழந்தை, குடும்பம், தொழில், வருமானம் எல்லாத்தையும் துறந்திருக்காங்க. நான், இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறேன். யார்கிட்டே சொல்லப்போறேன்? பகவானே என்னை மன்னிப்பானா?

ஹரி குரல்:
மாட்டான். ஒரு போதும் மாட்டான்.

(மேடையில் வெளிச்சம்.)

பாபுஜி:
ஹரி, என்னை ஏன் சித்திரவதை செய்கிறாய்? நீ சீமைக்குப் போய் ஒரு வெள்ளைக்காரனாத் திரும்ப வேண்டாம்னு இன்னிக்கும் சொல்றேன்.

ஹரி:
உனக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம். ஒரு டிகிரி கூட வாங்காம நீ கடல் தாண்டிப் போகலாம், எல்லா தகுதிகளும் உள்ள நான் போகக் கூடாது. உன் கூட இருக்கிற சகாக்கள் கூட்டாளிகளெல்லாம் சீமைக்குப் போனவங்கதானே?

பாபுஜி:
நீ ஒருவனாவது முழு இந்தியனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். எனக்கு இன்னும் தெரியலைடா, இன்னொருவன் வாழ்க்கையை நான் தீர்மானிக்கக் கூடுமா, கூடாதான்னு. ஹரி நான் உள்ளுக்குள்ளே நிறைய சித்திரவதைப் படுகிறேன். இப்பொ பார், அம்மாவுக்கு வெள்ளைக்கார வைத்தியம். அது அம்மாவுக்கும் பிடிக்கலை, எனக்கும் பிடிக்கலை.

ஹரி:
நீ எக்கேடு கெட்டுப் போ. நீ எனக்கு அப்பன் இல்லே. நான் உனக்குப் பிள்ளை இல்லே.

(ஹரி போய் விடுகிறான்.)

பாபுஜி:
ஹரி, நீ மஹாப் பாபங்கள் செஞ்சிருக்கே. நான் மன்னிக்கணும்னு இல்லே. பகவான் மன்னிக்கட்டும்.

(பாபுஜி, ஒரு மூலையில் அடுக்கி வைத்திருந்த கடிதங்களை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.)

பாபுஜி:
பா, இன்னிக்கு தேவ்தாஸ் வரப் போறான்.

(பா, கண்ணை மூடிப் படுத்தபடி இருக்கிறாள். பாபுஜி அவள் அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறார்.)

பாபுஜி:
ஐயோ, நெருப்பா கொதிக்கறதே!

(ஒரு கணம் கலங்கி நிற்கிறார். அறை ஓரத்தில் இருந்த பெட்டி ராட்டையை எடுத்து நூல் நூற்கத் தொடங்குகிறார். தேவ்தாஸ் வருகிறார்.)

தேவ்தாஸ்:
அப்பா…!

பாபுஜி:
தேவ்தாஸ், வந்துட்டயா? எப்போ வந்தே? நான் ரொம்பக் கலங்கி இருக்கேண்டா.

தேவ்தாஸ்:
அப்பா, அம்மாவுக்கு ஒரு புது மருந்து கொண்டு வந்திருக்கேன். இது எந்தப் பிராணியையும் கொன்னு செஞ்சதில்லே. இது கொடுத்தா அம்மா நியூமோனியா போய்யிடும்.

பாபுஜி:
என்ன மருந்து?

தேவ்தாஸ்:
இப்போதைக்கு இதைப் பெனிசிலின்னு பெயர் வைச்சிருக்கா. எந்த விஷக் காச்சலும் போயிடும். இந்த மருந்து குடும்பத்துக்கு ஆண்டிபயாடிக்ஸ்னு பேர் வச்சிருக்காங்க.

பாபுஜி:
ஆண்டிபயாடிக்ஸ்னா உயிரினத்துக்கு எதிரின்னு அர்த்தம்.

தேவ்தாஸ்:
இல்லை பாபுஜி, இது விஷகிருமிக்கு எதிரி.

பாபுஜி:
ஊஹும் வேண்டாம். இந்த புது மருந்து அம்மாவுக்கு வேண்டாம்.

தேவ்தாஸ்:
அம்மா சரியாக வேண்டாமா? அம்மா பொழைக்க வேண்டாமா? இது என்ன பிடிவாதம்பா? அம்மா நிமோனியா இதுலே போயிடும்.

பாபுஜி:
வேண்டாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.

தேவ்தாஸ்:
அப்பா, நீங்க என்னையும் அண்ணா மாதிரி ஆக்கப் பாக்கறீங்க.

பாபுஜி:
என் கஸ்தூரியே போயிடப் போறா. நீ தாராளமா என்ன வேண்டுமானாலும் ஆகலாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.

(தேவ்தாஸ் மிகுந்த வெறுப்புடன் பாபுஜியைப் பார்க்கிறான். அம்மாவிடம் போகிறான்.)

தேவ்தாஸ்:
அம்மா! அம்மா! இதோ உன் தேவ்தாஸ் வந்திருக்கேன்மா. அம்மா! அம்மா!

(அம்மாவைக் குலுக்குகிறான். பா-வின் கையை தூக்கிக் கீழே விடுகிறான். உயிரற்ற கை அப்படியே விழுகிறது.)

**
குறிப்பு:
காந்தி சிறை வைக்கப்பட்ட அறையில், மேஜை – நாற்காலி – கட்டில் எதுவும் கிடையாது.

*


நன்றி : அழகியசிங்கர் (நவீன விருட்சம்) , தாஜ்

தொடர்புடைய சில சுட்டிகள் :
‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ அசோகமித்திரனின் முன்னுரை

கொடுத்த கடன் – அசோகமித்திரன்

மீரா தான்சேன் சந்திப்பு – அசோகமித்திரன்

‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அசோகமித்திரனின் தேர்வும் முன்னுரையும்

காப்பி செய்யத் தெரியாத கவிஞர் தாஜ் (ஹராமாம்!) –  நான் கேட்டேன் என்பதற்காகவே – இரண்டு நாளாக மீண்டும் தட்டச்சு செய்து இப்பொழுது அனுப்பியிருப்பது முழுமையான முன்னுரை (’ஆம்னிபஸ்’ தளத்தில் அ.மி-யின் முன்னுரை ஓரளவு இடம்பெற்றுள்ளது).  நன்றி நண்பரே நன்றி..  மதிப்பிற்குரிய அசோகமித்திரன் தேர்வில் இடம்பெற்ற சிறுகதைகளில்   -ஜெயந்தனின் ’பகல் உறவுகள்’ தவிர – மற்ற எல்லா கதைகளும் ’அழியாச் சுடர்கள்’ தளத்தில் உள்ளன. (அந்தக் கதையையும் எங்கேயாவது மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருப்பார்கள்!) நண்பர் ராமுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்ல வேண்டும்.  எல்லா கதைகளுக்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன் – கடைசியில் ,  முன்னுரையை படித்துவிட்டு கதைகளைப் படிக்கவேண்டும் என்பதற்காக. அப்போதும் படிக்கவில்லையென்றால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டி வரும். – ஆபிதீன்

***

taj3முன்னுரைக்கு முன்… நண்பர் தாஜ் :  ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – தொகுப்பாசிரியர் : அசோகமித்திரன். இந்த (2013) வருடத்திய சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. 1984-ம் வருடம் முதல் பதிப்பைக் கண்ட இந்த தொகுப்பு, இன்றைக்கு ஆறாம் பதிப்பைக் கண்டிருக்கிற நிலையில் இதனை வாங்கி இருக்கிறேன். வீட்டில் வந்து புத்தக அட்டையை கைகளில் வைத்தபடிக்கு யோசித்த போது,  இப்புத்தகம் என் சேமிப்பில் முன்னரே இருப்பதை அறிய வந்தேன். என்றாலும் ஆவலுடன் படிக்க தவறவில்லை. கிட்டத்தட்ட பெரும்பாலான கதைகள் ஏற்கனவே படிக்கப் பட்டிருந்தாலும் இன்றைக்கு அவைகள் புதிய வண்ணங்களைக் காட்டியதில் குதுகலமானேன். அசோகமித்திரனின் தேர்வு அப்படியானது! குற்றம் காணமுடியாத தேர்வும் கூட. சில நண்பர்கள் இந்த தேர்வில் மறுப்பட்ட கருத்தைக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. என்றாலும், அசோகமித்திரனின் தேர்வு, அவரது ஆய்வின், ரசனையின் பாற்பட்டது என்பதை யோசிக்க தலைப்படும்போது, நண்பர்கள் இத் தேர்வின் யதார்த்தை உணர்ந்தறிய வாய்ப்பிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் அசோகமித்திரன் அவர்களால் தேர்வான கதைகள் மொத்தம் பதினாறு. பெருமைக்குரிய அந்தப் படைப்பாளிகளையும் அவர்களது ஆக்கங்களையும் கீழே பட்டியலிடுகிறேன்.

மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி , மிலேச்சன் – அம்பை , நிழல்கள் – ஆதவன்,  எஸ்தர் – வண்ணநிலவன், உத்தியோக ரேகை – சார்வாகன், தொலைவு – இந்திரா பார்த்தசாரதி,  சண்டையும் சமாதானமும் – நீல.பத்மநாபன்,  நாயனம் –  ஆ.மாதவன், நகரம் – சுஜாதா, ஒரு வருடம் சென்றது – சா.கந்தசாமி, ஒரு ‘இந்நாட்டு மன்னர்’ – நாஞ்சில் நாடன், தனுமை – வண்ணதாசன், நாற்காலி – கி.ராஜநாராயணன், அந்நியர்கள் – ஆர்.சூடாமணி, பகல் உறவுகள் – ஜெயந்தன், காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்.

வாசகர்கள் கட்டாயம் ஒருதரம் அசோகமித்திரனின் பார்வை கொண்டிருக்கிற நேர்மையை அறியும் பொருட்டேனும் இத் தொகுப்பு கதைகளை கட்டாயம் வாசிக்க விருப்பம் கொள்ள வேண்டும்.   இங்கே பதியப்பட்டிருக்கிற அந்த தொகுப்பில் காணும் அசோகமித்திரனின் முன்னுரை எனும் நீள அகலம் கொண்ட தெளிவு, உங்களுக்கு இன்னுமான இன்னுமான பல தகவல்களை கூடுதலாக தருமென நினைக்கிறேன்.

– தாஜ் / 12/2/2013

***

ami-sol

‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ அசோகமித்திரனின் முன்னுரை

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுக்குப் பின் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்கு வளமூட்டிய படைப்பாளிகளும் கொண்ட தொகுப்பு ஒன்றை அளிக்கும் முயற்சி இது.

இந்த இருபதாண்டுகளின் தொடக்கத்தில்தான் அணு ஆயுத யுத்தம் வந்தேவிட்டது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த ஆபத்து தற்காலிகமாக விலகியது என்றாலும் உலக அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியோர் எளியோரை நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தும் நிலை நீடிக்கத்தான் செய்கிறது. புதுப்பார்வை பெற்ற இளைஞர் சமூதாயம் உலகின் மனச் சாட்சிக்கு நெருக்கடியை உண்டு பண்ணியது. ஆண்டாண்டு காலமாகப் பழக்க ரீதியில் கடைபிடிக்கப்பட்டு வந்த நெறி முறைகள், கொள்கைகள், கோட்பாடுகள் கடுமையான மறுபரிசீலனைக்கு ஆளாயின. பல ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. உலகம் ஒரு புதிய ஒழுங்குக்கு வழிதேடத் தொடங்கியது.

இலக்கியவாதிகள் தீர்க்கதரிசிகள் என்ற கூற்று வெகு சாதாரணமாக வெகுகாலமாக ஒப்புக்கொள்ளப்படும் ஒன்று. ஆனால் இலக்கியத்தின் தன்மை, அது காலத்துக்குச் சற்றுப் பின் தள்ளியிருப்பதுதான்.  ஒரு நிகழ்ச்சி அது நிகழ்ந்த உடனேயே இலக்கியமாகிவிடுவதில்லை. அதை ஊடுருவிப் பார்த்தறிய ஒரு குறைந்தபட்ச இடைவெளி தேவைப்படுகின்றது. தகவல் பரிமாற்றச் சாதனங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் எழுத்துத் துறையிலும் நிகழ்ச்சிகளின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே பரபரப்புச் சிறுகதைகளும் கவிதைகளும் (நாவல்களும்கூட) நிறையவே தோன்றிவிடுகின்றன. ஆனால் அந்த நிகழ்ச்சியின் பரபரப்பு அமுங்கும் போது அந்தப் படைப்புகளும் அமுங்கிப்போய் விடுகின்றன. பரபரப்பை மட்டும் முக்கியமாகக் கொள்ளாமல் பரிமாணத்தின் ஒவ்வொரு காலத்திய சூட்சுமங்களைக் கலையுணர்வோடு வடித்துத் தருபவை என்று எனக்கு உறுதியாகத் தோன்றும் கதைகளில் சிலவற்றை இத்தொகுப்பின் அமைப்புக் கட்டுத் திட்டங்களுக்கு இணங்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதே தொகுப்பு இன்னொருவர் தேர்வில் வேறு கதைகளையும் கதாசிரியர்களையும் கொண்டிருக்கக்கூடும் என்றும் உணர்கிறேன்.

தமிழ்ச் சிறுகதைத் துறையின் பின்னணியை ஓரளவு கூர்ந்து பார்த்தால் 1960 அளவில்கூட இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய எழுத்தில் பிரதானமாயிருந்த ரொமாண்டிஸமும் இலட்சியவாதமும் தொடர்ந்து இருந்து வந்ததை உணரலாம். அந்நாளில் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் அனைவருமே இந்திய சுதந்திரத்திற்கு முன்பு மக்களிடையே நிலவிய ஒரு குறிப்பிட்ட இலட்சிய வேகத்தை மேலும் பிரதிபலிப்பதாகவே எழுதினார்கள். சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய இலட்சிய வேகத்தில் மேற்கத்திய வாழ்க்கை முறையம்சங்கள் இங்கு அப்படியே ஏற்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நம் நாட்டுப் பண்பாட்டுச் சிறப்பும் சம்பிரதாய வாழ்க்கை நெறியும் வலியுறுத்தப்பட்டன. பழமையை அனுசரித்துப் போகும் இப்போக்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே மறுத்தவர்கள் இருந்தார்கள் எனினும், பொதுவாக மக்கள் உணர்வில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மறுப்பு வளர்ந்திருக்கவில்லை. மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்குப் பின் தமிழ் தமிழ் உரைநடையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு, தமிழ்ச் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோர் உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் முன்னேற்றப் போக்கை வடித்துத் தந்தார்கள். இவர்கள் பணியைத் தொடர்ந்து சம்பிரதாயக் கண்ணோட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற இயக்கம், இந்த நூற்றாண்டின் பின் பாதியின் துவக்கத்தில் தமிழ் வாசகர்களிடையே கணிசமான அளவு அறிமுகம் பெற்றது ஜெயகாந்தனால்.

ஜெயகாந்தனைப் போலவே இளம் வயதில் பிரபலமடைந்த தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால், ஜெயகாந்தன் சிறந்த கதைகள் மட்டுமல்லாமல் காலத்திற்குத் தேவையான கருத்துக்களை முன் வைத்தவர் என்றும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அவர் ஒதுக்கி விடுவதில்லை. தமிழ் எழுத்துலகில் யதார்த்த பூர்வமான சமுதாயமாற்றக் கருத்துக்கள் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெற வைத்ததில் ஜெயகாந்தனின் பங்கு கணிசமானது.

நவீன தமிழ் இலக்கியம் மக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது வெகுஜனப் பத்திரிகைகளால் என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில் நல்ல இலக்கியம் வளர இதே பத்திரிகைகள் முட்டுக்கட்டையாகவும் இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் இப்பத்திரிகைகள் இலட்சக்கணக்கான வாசகர்களைத் திருப்திப்படுத்துவதை முதற்கோளாகக் கொள்ள வேண்டியிருப்பதாலும் அதில் பெரும்பான்மையோர் தீவிர எழுத்துக்களை ஏற்கத் தயாரில்லை என்று நினைப்பதாலும் எளிமைப் படுத்தப்பட்ட எழுத்து, கருத்துக்களையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துகின்றன; விற்பனைப் போட்டாபோட்டியில் திருப்தியுடன் மட்டும் திருப்தியடையாமல் போதையூட்டுவது போலவும் கிளர்ச்சியூட்டுவது போலவும் பத்திரிகையை மாற்றிவிடவும் வேண்டி வருகிறது. இந்தப் போக்கில் முதலில் ஊனமுறுவது இலக்கியம்தான்.

இதில் உண்மையில்லை என்று இன்று யாரும் கூறிவிடுவதில்லை. ஆனால் வெகுகாலம் வரை பிரபலமடையும் எழுத்தே சிறப்பான எழுத்து என்ற எண்ணம் பல தமிழ்ப் பிரமுகர்களிடம் நிலவியது. இவர்கள் சமூக நிறுவனத்தின் தலைவர்களாகவும் இருந்ததால் தீவிர இலக்கியவாதிகள் புறக்கணிக்கப்படுவது இன்னும் கூர்மையடைந்திருந்தது. பத்திரிகை எழுத்து, தீவிர இலக்கியம் இவற்றின் வேறுபாடுகளை ஒரு சிறு வட்டம் வரையிலாவது நன்குணர்த்த அயராது பாடுப்பட்டவர்களில் க.நா.சுப்ரமணியன் மிகவும் முக்கியமானவர். துர்ப்பலமான எழுத்துத்துறையை ஆரம்ப முதலே வாழ்க்கைச் சாதனமாக ஏற்றுக்கொண்டதோடு, அத்துறையிலே மிகவும் துர்பலமான அம்சமாகிய தீவிர இலக்கியத்தையே அவர் சார்ந்திருந்தவர். நாவல், சிறுகதை, கவிதை முதலியன எழுதியதோடு விமர்சனக் கட்டுரைகளும் எழுதிவந்தார். முப்பது-நாற்பது-ஐம்பதுகளில் க.நா.சு.வுக்கு பாதகமான முறையில் அவருடைய விமர்சனக் கட்டுரைகளும் அவர் தீவிர இலக்கியம், பத்திரிகை இலக்கியம் என்று பாகுபாடு செய்து குறிப்பிட்டதும் அமைந்தாலும் அறுபதுகள் தொடக்கத்திலிருந்து தமிழ் வாசகர்-எழுத்தாளர் மத்தியில் இப்பாகுபாடு பற்றிய சிந்தனை பரவலாகத் தோன்ற ஆரம்பித்தது. இதன் ஒரு விளைவு பல சிறு பத்திரிகைகளின் தோற்றம்.

க.நா.சு.வே சிறு பத்திரிகள் நடத்தினார். ‘தாமரை’, ‘சரஸ்வதி’, ‘சாந்தி’, ‘கிராம ஊழியன்’ ஆகியவை அந்நாளைய வேறு சில குறிப்பிடத்தக்க சிறு பத்திரிகைகள். சி.சு.செல்லப்பா, ‘எழுத்து’ எனும் பத்திரிகையைப் புதுக்கவிதைக்கு ஒரு தளம் அமைத்துத் தருவதாக நடத்தினார். அறுபதுகளில் தோன்றிய சிறுபத்திரிகைகளில் முக்கியமானவை கணையாழி, தீபம், நடை, ஞானரதம், கண்ணதாசன், எழுபதுகளில் கசடதபற எனத் தொடங்கி பல பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டிவரும். அறுபதுக்கு முற்பட்ட சிறு பத்திரிகைகளுக்கும் இந்த இருபதாண்டுச் சிறு பத்திரிகைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு, முந்தைய பத்திரிகைகளும் அவற்றின் ஆசிரியர்களும் பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளும் அவை ஆதரிக்கும் எழுத்தும் போரிட்டு அகற்றக்கூடியதொன்று, அகற்றவேண்டியதொன்று எனச் செயல்பட்டார்கள். இன்றைய சிறு பத்திரிகைகள், பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளை இந்தக் காலக்கட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஏற்றிருப்பதையும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் தம்மட்டில் தீவிர இலக்கியப் பணிகளில் ஈடுபடுவதை ஓர் எதிர்வினையாகக் கொள்ளாமல் சுயமாகச் செய்யவேண்டிய பணியாக நினைப்பதையும் காண முடிகிறது.

அறுபதுகளில் தொடங்கிய சிறு பத்திரிகை இயக்கம் ஆரம்பத்தில் ஏளனத்துக்குரியதாகத்தான் பெருவாரிப் பத்திரிகைகள் தயாரித்திருந்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். சமயம் வாய்த்தபோது இச்சிறு பத்திரிகைகள் பற்றியும் அதில் ஈடுப்பட்டிருப்போர் பற்றியும் பெருவாரிப் பத்திரிகைகள் மிகவும் துச்சமாகக் கருத்து தெரிவித்திருக்கின்றன. ஆனால், சிறு பத்திரிகைகள் இயக்கம் பெருவாரிப் பத்திரிகைகளின் வாகர்களைக் காட்டிலும் முன்னதாக அப்பத்திரிகைகளின் எழுத்தாளர்களிடம் பாதிப்பு ஏற்படுத்தியது. சிறு பத்திரிகைக் கதைகளின் கரு, நடை, அபத்தம், சிற்சில மாற்றங்கள் பெருவாரிப் பத்திரிகைகளிலும் பயன்படுத்தப்பட்டன. உருவம் பொருத்தவரையில், இன்று தமிழில் வெளியாகும் கதைகளில் பெரும்பான்மை தீவிர எழுத்துச் சாயல் கொண்டுதான் படைக்கப்படுகின்றன. பிரசுரிக்கப்படுகின்றன. ஆனால் உள்ளடக்கம், நோக்கம், அழுத்தம், போன்ற அம்சங்களில் விளைவு சாதகமாக உள்ளது என்று கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் அடியெடுத்து வைத்திருக்கையில் இன்றைய தமிழ் பெருவாரிப் பத்திரிகைகளின் சிறுகதைகள் அனைத்திலும் அப்பத்திரிகைகளில் இடமே பெறாத தீவிர எழுத்தாளர்களின் சாயலைத் தவறாமல் காண முடிகிறது. சிறுகதையும் ஒரு தொழில் விஞ்ஞான நுட்பத் துறையாகக் கருதினால் இதர டெக்னாலஜித் துறைகளைப் போலச் சிறுகதைத் துறையும் ஒரு காலக்கட்டத்தின் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவிவிடும் தொழில்நுட்ப அம்சமாகிவிட்டது. ஓர் ஆரம்ப எழுத்தாளனின் முதல் படைப்பில்கூட குறைந்தபட்சத் தேர்ச்சியும் திறமையும் காண முடிகிறது. நல்ல கதை, நன்கு எழுதப்பட்ட கதை, என இனங்கண்டுபிடிப்பது கடினமாவதுடன் அத்தியாவசியமும் ஆகிறது.

புதுக் கதாசிரியர்களை அவர்கள் பொதுத்தன்மை குறித்து விவாதித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் தமிழில் அதிகம் வெளிவரவில்லை; பல்கலைக்கழங்களில் புது இலக்கியம் பாடமாகக் கற்பிக்கத் தொடங்கியும் புதுநோக்குடன் வெவ்வேறு காலகட்ட எழுத்துக்கள் பற்றிச் சுலபமாகவும் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் அபிப்ராயங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரையில் க.நா.சு. தற்காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடம் ஒரு பொதுச் சரடு காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்திய சுதந்திற்கு முந்திய எழுத்தாளர்களிடம் இருந்த இலட்சியவாதம் இப்போது மறைந்துபோனதோடு மட்டுமல்லாமல் ஒருவித நம்பிக்கையின்மையும் இடம் பெற்றிருப்பதை உணர முடிகிறது என்றார் அவர். இன்று இன்னும் சில கருத்துக்களும் கூற இயலும். எல்லாப் பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாக அன்னியர் ஆதிக்கச் சுமை தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களின் ஆத்மாவை அன்று அழுத்தியது. பிரச்சனைகளுக்கு அவற்றினூடே தீர்வு காண இயலுவதாக இன்றைய தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன. ஒரு பொது எதிரியை மனதில் வைத்து இயங்கியதால் தம் சமுதாயத்தினுள் உள்ள வேறுபாடுகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் அன்று அதிகம் பெரிதுபடுத்தப் படவில்லை. ஆனால் இன்றைய சிறுகதைகள் இவ்விஷயங்கள் குறித்துப் பகிரங்கமாக விவாதிக்கக் தயங்குவதில்லை. பிராந்திய வாழ்க்கை நுணுக்கமாகவும் விவரமாகவும் பிரதிபலிக்கப்படுகிறது. மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஓர் எளிதான, கைக்கெட்டும் தொலைவிலுள்ள சர்வ வியாதி நிவாரணியாக விநியோகிக்கப்படுவதில்லை. பெண்கள் சம்பிரதாயக் கூட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பலவித பரிமாணங்கள் கொண்ட நபர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இப்போக்குகளைப் பெருவாரி விற்பனையுடைய பத்திரிகைகளில்கூட இன்று காணலாம்.

சிறு பத்திரிகைகளுடன் சில நூல் பிரசுரங்களும் கடந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டுபண்ணின. இவற்றில் முதலானதும் முக்கியமானதும் ‘குருசேஷத்திரம்’ ஆகும். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு நாடகம் ஆக மொத்தம் சுமார் நானூறு பக்கங்கள் கொண்ட இந்நூலை 1967-ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் வசிக்கும் நகுலன் என்ற எழுத்தாளர் தொகுத்து வெளியிட்டார். அதே ஆண்டில்தான் இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு சென்னையில் நடந்தது. தமிழ் மொழிக்கு வளமூட்டும் இவ்விரு நிகழ்ச்சிகளில் எது முதன்மையிடம் பெறும் என்று கூறுவது கடினம் என நினைக்கும் அளவுக்கு ‘குருசேஷத்திரம்’ பிரசுரமானது தீவிர இலக்கிய அன்பர்களிடம் சலசலப்பு ஏற்படுத்தியது. இந்நூலில் பங்கு பெற்றவர்கள் அநேகமாக அனைவரும் பெருவாரிப் பத்திரிகைகளில் இடம்பெறாதவர்கள். ‘குருசேஷத்திரம்’ வெளியானபோது இவர்களில் ஓரிருவரே நூல் வடிவத்தில் பிரசுரமானவர்களாக இருந்தார்கள். இருப்பினும் அந்தக்காலக் கட்டத்தின் புதுத்தமிழ் எழுத்தின் உன்னத எடுத்துக்காட்டாக ‘குருசேஷத்திரம்’ அமைந்திருந்தது. பிற்காலத்தில் பல பரிசோதனைப் பிரசுர முயற்சிகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கியது. முழுக்க ஒரு தனிநபரின் முயற்சியும் தேர்வுமான ‘குருசேஷத்திரம்’ நவீன தமிழ் எழுத்தின் ஒரு மைல் கல்லாக நிலைபெற்றது.

‘குருசேஷத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருசேஷத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்த்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்கு முன்னோடியாகவும் அமைந்தது.

அரசியல் கலப்பற்ற எழுத்து சாத்தியமா? சம்பிரதாய இலக்கியப் பார்வைகளில் அரசியல் தனியாகக் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சோவியத் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பொதுவுடமைக் கருத்துகளும் கோட்பாடுகளும் கவனம் பெறத் தொடங்கின.  தமிழ் எழுத்தாளர்களிடமும் ‘நீங்கள் எந்தப்பக்கம்?’ என்றதொரு வினா ஐம்பதாண்டுகளாகவே நிலவி வருவதாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் சில சிறுகதையாசிரியர்கள் வெளிப்படையாகவே தமது கட்சி அரசியல் உறவுகளை அறிவித்துக் கொண்டனர். இலக்கிய விமரிசனத் துறையிலும் எழுத்தாளர்கள் அவர்களின் கட்சிக் கண்ணோட்டத்திலும், அவர்கள் எழுத்து தெரிவிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியின் அடிப்படையிலும் போற்றப்பட்டனர், அல்லது கண்டனம் தெரிவிக்கப்பட்டனர். பெருவாரிப் பத்திரிகைகள் இச்சர்ச்சையில் ஈடுபடாத நிலையிலும் சிறு பத்திரிகைகள் அணிவகுத்துக் கொண்டு தீவிர விவாதங்கள் நடத்திக் கொண்டன. இவ்விவாதங்கள் நேரடியாகச் சிறந்த எழுத்தாளர்களையோ படைப்பாளிகளையோ சாத்தியமாக்காத போதிலும் தமிழ்ச் சிறுகதைகளின் தளத்தையும் எழுத்தாளர் கவனத்திற்குப் பல புதிய நுட்பங்களையும் சேர்த்துக் கொடுத்தன. அதே நேரத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பரிச்சயம், தொழில் நுட்ப விவரங்களைக் கதைகளில் பொருத்தி வைப்பதைச் சாத்தியமாக்கிற்று. பாட்டாளி மக்கள், கிராமவாசிகளின் வாழ்க்கை நுட்பங்கள் இடம் பெறத் தொடங்கியது. போலவே இயந்திர நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள்; உயர்மட்டவாசிகள், கதாப்பாத்திரங்களாகி அவர்கள் மூலம் அதுவரை வாசகர்களுக்கு அறிமுகமாகாத பரிமாணங்கள் எடுத்தளிக்கப்பட்டன.

இந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் பிற இந்திய மொழிகளில் நிறையவே மொழிபெயர்ப்புகள் மூலம் படிக்கக் கிடைத்திருக்கின்றன. ‘இண்டியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ்’ வெளியீடான ‘இண்டியன் ஹொரைஜன்ஸ்’ காலாண்டுப் பத்திரிகையில் பல தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் மற்றும் அராபிய மொழிகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இங்கிலாந்து பென்குவின் நிறுவனத்தாரின் ‘நியூரைட்டிங் இன் இந்தியா’ தொகுப்பு நூலில் மூன்று தமிழ்ச் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. பல தேசிய தினப் பத்திரிகைகளும் வார மாத இதழ்களும் ஆங்கில மொழி பெயர்ப்பில் பல தமிழ்ச் சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. பல அயல் நாடுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் தகவலும் இந்த இருபது ஆண்டுகளில்தான் அதிகம் தெரிய வந்திருக்கிறது. இது பரஸ்பரம் மக்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மட்டுமின்றி, தமிழ்ச் சிறுகதை உலக இலக்கிய அரங்குகளில் மதிக்கத் தக்கதொரு இடம் பெற்றிருப்பதையும் குறிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி இத்தொகுப்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை இயங்கிய தளத்தை, அதன் உயர்ந்த நிலையில், பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி. இதுவே எக்காலத்துக்குமான தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பாகாது. ஆனால் அப்படி ஒரு தொகுப்பு தயாரிக்கப்படுமாயின் அதில் இத்தொகுப்பின் பல கதைகள் இடம் பெறுவது உறுதி.

pts-as-1

அசோகமித்திரன் செப்டம்பர் 19, 1980

*

வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்

முதல் பதிப்பு 1984 ,  ஆறாம் பதிப்பு 2010

***

அசோகமித்திரன் தேர்வு செய்த சிறுகதைகள்

மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி

மிலேச்சன் – அம்பை

நிழல்கள் – ஆதவன்

எஸ்தர் – வண்ணநிலவன்

உத்தியோக ரேகை – சார்வாகன்

தொலைவு – இந்திரா பார்த்தசாரதி

சண்டையும் சமாதானமும் – நீல.பத்மநாபன்

நாயனம் –  ஆ.மாதவன்

நகரம் – சுஜாதா

ஒரு வருடம் சென்றது – சா.கந்தசாமி

ஒரு ‘இந்நாட்டு மன்னர்’ – நாஞ்சில் நாடன்

தனுமை – வண்ணதாசன்

நாற்காலி – கி.ராஜநாராயணன்

அந்நியர்கள் – ஆர்.சூடாமணி

பகல் உறவுகள் – ஜெயந்தன்

காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்

***

நன்றி: நேஷனல் புக் டிரஸ்ட், அசோகமித்திரன், தட்டச்சு செய்த நண்பர் தாஜ், அழியாச்சுடர்கள் , சிறுகதைகள்.காம்

கொடுத்த கடன் – அசோகமித்திரன்

என் அப்பா இறந்த போதுதான் அவர் ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. இதுகூட நேரிடையாகத் தெரியவில்லை. என் அப்பாவும் குறிப்பு ஏதும் எழுதி வைக்கவில்லை. ஆனால் குமாரசுவாமி என்பவர் அப்பாவிடம் எண்ணூறு ரூபாய் வாங்கியிருந்தார் என்று அம்மாவுக்குத் தெரியும். நான் குமாரசுவாமியைத் தேடிப்போனேன். அவர் ஐதராபாத்தின் அன்றைய விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். “நீ எப்படி வந்தாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“சைக்கிளில் வந்தேன்.”

“அப்பா செத்துப் போய்விட்டார் என்று தெரிந்து மிகவும் வருத்தமாயிருந்தது. நான் இந்த வாரம் வரலாமென்று இருந்தேன்.”

“நீங்கள் அப்பாவிடம் பணம் வாங்கியிருக்கிறீர்களாம்.”

“ஆமாம். ஆனால் திருப்பிக் கொடுத்து விட்டேனே!”

“எண்ணூறு ரூபாயையுமா?”

“ஆமாம். நான் கணக்கு வைத்திருக்கிறேன்.”

குமாரசுவாமி உள்ளே போய் ஒரு டைரி கொண்டு வந்தார். அதில் கடைசியில் ஒரு பக்கத்தில் என் அப்பா பெயர் எழுதி வரிசையாகத் தேதி போட்டுப் பணம் குறித்திருந்தார்.

“நான் பாக்கி இல்லை. ஆரோக்கியசாமிதான் இன்னும் தர வேண்டும் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.”

“யார் அது அரோக்கியசாமி?”

“எனக்குத் தெரியாது. உங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே இருக்கிறார் என்று நினைக்கிறேன்.”

என் அம்மா நம்பவில்லை. நான் கணக்கைப் பார்த்ததாகச் சொன்னேன்.

“அது அப்பா எழுதினதா?”

“இல்லை. அது குமாரசுவாமி டைரி.”

குமாரசுவாமி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் துக்கம் விசாரித்தார். வேறு வீடு பார்த்துத் தருவதாகச் சொன்னார். அதையும் அவர் திறம்பட அவருடைய நண்பர் மூலம் பூர்த்தி செய்தார். புத்தம் புது வீடு. முதல் மழைக்கு ஒழுகினாலும் உடனே சரி செய்யப்பட்டது. கிணற்றில் நன்கு இனிக்கும் தண்ணீர்.

ஆரோக்கியசாமி யார்? அம்மாவுக்கும் தெரியவில்லை. எங்கள் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வருவார். அவரை அம்மாவுக்குப் பிடிக்காது. அவர் வந்தால் ஒரு வேளையாயாவது சாப்பிடாமல் போகமாட்டார். அம்மா ‘சனீசுவரன் வந்துடுத்து, சனீசுவரன் வந்துடுத்து’ என்று முணுமுணுத்துக் கொள்வாள். அப்பா செத்தது தெரியாமல் அவர் ஒருநாள் வந்தபோது அவருக்கு நம்ப முடியவில்லை. “அவருக்கு இப்போ சாவில்லையே!” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

“உங்களுக்கு பணம் ஏதாவது கொடுத்திருந்தாரா?”

“இல்லையேம்மா, அவர்தான் எங்கிட்டே அப்பப்போ பத்து, இருபது வாங்கிப்பார். கொடுத்துடுவார். இன்னியத் தேதிக்கு நானும் அவருக்குத் தர வேண்டாம். அவரும் எனக்குத் தர வேண்டாம்.”

“யார்யாருக்கு கொடுத்திருக்கிறாரோ?”

“ஆமாம்மா…. அவர் மோதிரத்தைக் கொடுத்து ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். அவன் வீட்டு முன்னாலே போலீஸ் கத்திண்டிருந்தது.”

“யார் அரோக்கியசாமி?”

“உங்களுக்குத் தெரியாது. அவர் ஒருத்தர்தான் இந்த ஊரிலே நம்ப பாஷை பேசி, நகை பண்ணுவார்.”

“ஆச்சாரியா?”

“ஆமாம். ஆனால் கிறிஸ்துவர்.”

“இப்படிப் பணம் கொடுத்ததை ஏன் எங்கிட்டே சொல்லலே?”

ஜோசியர் பதில் கூறவில்லை. ஆனால் சிறிது பொறுத்து அவர் பேசினார். “உங்க வீட்டுக்காரர் உபகாரி. எல்லாம் சின்னச் சின்ன தொகைதான். மோதிரம் ஒண்ணரைப் பவுன் போல. அதை உடனே அடகு வைச்சு அரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். மோதிரத்தை அவரா மீட்டுட்டார். ஆனா ஆரோக்கியசாமி பணம் அப்படியே நிக்கறது.”

ஜோசியர் அழுத்தம் திருத்தமாகப் பேசினார். “நான் ஆரோக்கியசாமியை உங்களை வந்துப் பார்க்கச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

“நாம எப்போ காலி பண்ணணும்?”

“சனிக்கிழமை வண்டிக்குச் சொல்லியிருக்கு” நான் சொன்னேன்.

“அதுக்குள்ளே ஆரோக்கியசாமி வந்தாத் தேவலை.”

“அம்மா பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்தார். “அம்மா, நான்தான் ஆரோக்கியசாமி” என்றார்.

“நீங்க அவருக்குப் பணம் தரணுமாமே?”

“அம்பது ரூபாய் தரணும்.”

“இப்போ கொண்டு வந்திருக்கீங்களா?”

“இல்லேம்மா. இரண்டு ஜோடி வளையல் செய்து முடிக்கணும். அதைச் செஞ்சா கூலி கிடைக்கும். உடனே கொடுத்துடுவேன்.”

“எப்ப முடியும்?”

“எப்படியும் பதினைஞ்சு நாளாகும்.”

“நாங்க வீட்டைக் காலி பண்ணிடுவோமே!”

“அதனாலே என்னமா! நான் கொண்டுவந்து கொடுத்துடறேன்.”

ஆரோக்கியசாமி மிகவும் உறுதியாகப் பேசினார். அவர் பணம் தர வேண்டுமென்று ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம்.

நாங்கள் வேறு வீடு போய் ஒரு மாதமாயிற்று. ஆரோக்கியசாமி வரவில்லை. ஜோசியர் மட்டும் இடம் விசாரித்துக் கொண்டு வந்தார். சிறிது அத்வானமான இடம்தான். இருந்த சாதத்தை  அவருக்கு இலையில் போட்டு இருந்த மோரை அவருக்கு அம்மா ஊற்றினார்.

நாங்கள் வீடு மாறின போதே குமாரசுவாமி சொன்னார்: “நான் வாரம் பத்து நாளைக்கு ஒரு முறை வந்து விசாரிக்கிறேன். இங்கே வீட்டுக்கு யாராவது வந்து போகிற மாதிரிதான் நல்லது. மனிதர்கள் யாருமில்லை என்பது போலத் தோன்றிவிட்டால் அவ்வளவு பத்திரம் இல்லை.”

குமாரசுவாமிக்கு சைக்கிள் உண்டு. அவர் எங்கள் புது ஜாகைக்கு வர ஒரு கால்மணி நேரம் சைக்கிளை மிதிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் ஜோசியருக்கு சைக்கிள் விடத் தெரியாது. பஸ்ஸில் வந்து போக ஆறணாவாவது ஆகும். மேலும் ஜோதிட நுணுக்கங்களை அப்பாவிடம் விவாதிக்கலாம். அப்பா இல்லாத போது அவர் ஏன் வர வேண்டும்? அவரும் அப்போதைக்கு அப்போது கிடைக்கும் பணத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும்.

ஆரோக்கியசாமியிடம் சொல்வதாக வாக்களித்து விட்டு ஜோசியர் போய் விட்டார். ஆரோக்கியசாமி வரவில்லை.

நாங்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருந்தோம். ஆரோக்கியசாமி வரவில்லை. நான் ஒரு விடுமுறை நாளன்று சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். நாங்கள் முன்பு இருந்த தெருவிலேயே ஒரு வீட்டின் பின்பகுதியில் அவர் இடம் என்று விசாரித்துக் கொண்டு போனேன். வீடு பூட்டியிருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை அவர் கோயிலுக்குப் போயிருக்கலாமல்லவா?

“ஏண்டா, யாரையாவது விசாரிக்கக்கூடாதா?”

“விசாரிச்சுண்டுதாம்மா…. அவர் வீட்டுக்குப் போனேன்…”

அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இரு நாட்கள் கழித்து அதிகாலையிலேயே கிளம்பி ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். இந்த முறை முன் வீட்டுக்காரரிடம் ஆரோக்கியசாமி வீடு பூட்டியே இருப்பது பற்றிக் கேட்டேன்.

“நீ சின்னப் பையன் இதெல்லாம் வேண்டாம்.”

“அவர் எங்க அப்பாகிட்டேந்து பணம் வாங்கியிருக்கார். எங்க அப்பா செத்துப்போயிட்டார்.”

“உங்க பணம் வராது.”

“ஏன்?”

“அந்த மனுஷன் இருந்த தங்கத்தை எல்லாம் சுருட்டிண்டு எங்கேயோ போயிட்டான்.”

“அவர் வீட்டிலே வேறே யாரும் இல்லையா?”

“எல்லாம் உண்டு. அவன் இன்னொரு அம்மாளை இழுத்துண்டு எங்கேயோ ஓடிப் போயிட்டானாம். அவன் வீட்டிலே ஒண்ணுமே இல்லை. இருந்த ஒண்ணு இரண்டு பாத்திரத்தையும் அவனுடைய சம்சாரம் தூக்கிண்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இங்கே வாடகை நாலு மாசமா நிக்கறது.”

அவர் இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு போனார். அவர்தான் வீட்டுக்காரராக இருக்க வேண்டும்.

என் அம்மா கடுமையான சாபங்களை எங்கேயிருக்கிறார் என்று தெரியாத ஆரோக்கியசாமி மீது வீசினார். ஆரோக்கியசாமி அப்பாவுடைய அன்புக்குப் பாத்திரமாக இருந்திருக்க வேண்டும். இல்லாது போனால் கையில் பணமில்லாத போது கை மோதிரத்தை அடகுவைத்து அப்பா பணம் கொடுத்திருப்பாரா?

நாட்கள் போகப் போக எல்லாமே மறந்து போய் விட்டது. நாங்கள் இருந்த வீட்டுக்குச் சரியான எண்ணோ, அங்கே தெரு ஒன்றும் முறையான பெயர் கொண்டும் இல்லாததால் ‘துர்க்காபாய் வீட்டருகில்’ என்று தபால்காரரே சொல்லி அதைத்தான் எங்கள் முகவரியாக வைத்துக் கொண்டிருந்தோம். துர்காபாய் என்பது ஒரு பெரிய ஜமீந்தாரிணி.

எங்கள் வீட்டுக்கு ஐந்தாறு மைல் தூரத்தில் ஒரு ஜமீந்தாரின் வயலில் ஆளுயரப் புல்வகை ஒன்று வளர்த்து வந்தார்கள். மிகவும் திட்டமாக அறுத்து இருபது கட்டுகள் கட்டி வைத்திருப்பார்கள். சரியான நேரத்துக்குப் போனால் ஒரு கட்டு வாங்கிவரலாம். கட்டு அரைரூபாய்.

நான் அன்று காத்திருந்து அந்தப் புல்கட்டை வாங்கி சைக்கிள் பின்னால் கட்டி வந்தேன். வீட்டுக்கு வந்தவுடனேயே அம்மா, “உன்னைத் தபாலாபீசுல கூப்பிட்டாளாம். உடனே போ.” என்றார்.

அது ஒரு மைல் தள்ளியுள்ள இடம். நான் அங்கு போவதற்குள் இரண்டு மணியாகிவிட்டது. எங்கள் தபால்காரனைக் காணோம்.

நான் காத்திருந்தேன். மூன்று மணிக்கு அவர் வந்தார். “உங்கப்பா பேருக்கு மணியாடர் வந்திருக்கு. நீ அப்பா செத்துட்டார்னியே” என்றார்.

“என்னது?”

அந்த மனிதன் மணியார்டரைக் காட்டினார். அதில் என் அப்பா பெயர் எழுதி, முன்னால் மிஸஸ் என்றிருந்தது. நான் காண்பித்தேன்.

தபால்காரர் மிகவும் வருந்தினார். என்னைத் தமிழில் கையெழுத்திடச் சொன்னார். அறுபது ரூபாய் கொடுத்து ஒரு சிறு சீட்டை அந்தப் படிவத்திலிருந்து கிழித்துக் கொடுத்தார். நான் பணத்தையும் அந்தச் சீட்டையும் வீட்டுக்கு எடுத்து வந்தேன். அந்தச் சீட்டை வைத்துக் கொண்டு, அது என்னதென்று புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.

ஒரு மூலையில் ‘ஆ’ என்று எழுத்து தெரிந்தது. திரும்பத் திரும்பப் பார்த்ததில் புரிய ஆரம்பித்தது. அது நாக்பூரிலிருந்து வந்திருந்தது. பணத்தை அனுப்பியவர் ஆரோக்கியசாமி.

அவருக்கு எப்படி எங்கள் முகவரி கிடைத்தது என்று எனக்கு இன்னும் தெரியாது. பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே என்றும் தோன்றியது.

***

நன்றி: அசோகமித்திரன், விஜயபாரதம் (தீபாவளி மலர், 2010)

*

அசோகமித்திரன்: மேலும் சில குறிப்புகள் – தாஜ்

திரு. அசோகமித்திரன் என்றால் எனக்கும் ஆபிதீனுக்கும் ரொம்ப இஷ்டம். அவரது சிறுகதைகளும், நாவல்களும் எங்களை அப்படியோர் ஈர்ப்பிற்கு இலக்காக்கியிருக்கிறது. அவர் எழுத்தின் மீது எனக்காவது கடுகத்தனை விமர்சனம் உண்டு. ஆபிதீனுக்கு அதுவும் கிடையாது. அவருக்கு, அவர் great! அவ்வளவுதான்.

இணையத்தில் மட்டுமே இலக்கியம் தேடும் வாசகர்கள், அனேகமாக இந்தக் கதையினை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் வந்த இந்தக் கதையை எவர் ஒருவரும் பதிவேற்றாவிட்டாலும், இணையத்தில் தெரியத் தொடங்கிவிடுகிற காலமாக இருக்கிறது! இப்படியே, இன்னும் கொஞ்சம் காலம் போனால், படைப்பாளி எழுத உத்தேசித்திருக்கும் படைப்பும் கூட – எழுத்தில் அமர்வதற்கு முன்னமேயே – இணையத்தில் வாசிக்க கிடைக்கலாம்; வியப்பதற்கில்லை! கம்யூட்டரை முன்வைத்து காலம் நம்மைப்பார்த்து பரிகசிக்கத் துவங்கிவிட்டது.

அசோகமித்திரனின் சிறுகதை யுக்தி, இலக்கிய மூர்த்திகள் பலரை மலைக்கவைப்பது. ஆனால், புதிதாகத் அவரது கதைகளைத் தேடும் வாசகர்களுக்கு அது எடுபடாது. ஏழாவது படிக்கும் மாணவன், ஆர்வக்கோளாறால் எழுத முயன்றதாகவே தெரியும்! அவரது நடை உப்புசப்பற்று படும். இளம் வாசகர்கள், அவரது கதை சார்ந்த நுட்பத்தைப் புரிந்து விளங்கிக் கொள்ள ஜீவிதமான வாசிப்புகளோடு பல படிகளையும் தாண்டி வரவேண்டும்.

ஊசியில் நூல் கோர்ப்பது போல் அசோகமித்திரன் எழுதும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏழாவது படிக்கும் மாணவனின் ஏனோதானோ அல்ல. வித்தகம் அது. அலங்காரமற்ற, தாண்டிக்குதிக்காத அவரது நடை ஆழ்ந்த யோசனைகளுக்குரியது. இந்தக் கதையிலும் அவர் ஊசியில் நூல் கோர்த்திருக்கிறார். அந்த இலக்கிய வித்தைகளை, நீங்கள் கதையை படிக்கும் போது அறியமுடியும். என்றாலும், சூட்சுமம் கொண்டு அவர் புதைத்திருக்கும் தகவல்களை அத்தனை சீக்கிரம் கதையில் கண்டறிந்துவிட இயலாது. கொஞ்சத்திற்கு இடறும்; ஆனாலும் முடியும். முயன்றால் எந்த கதவும் திறக்கும். எட்டாத கனி உண்டா உலகில்?

*

1. அசோகமித்திரனின் எத்தனையோ சிறுகதைகளில் காணும் அவரது இளமைக்கால ஹைதராபாத்தும் அதன் புறச்சூழல்களும் இதிலும் காட்சியாகிறது. தட்டாது அவரது இளமைக் காலமும் பேசப்படுகிறது.

2. அரைரூபாய்க்கும் ஆறணாவுக்கும் மதிப்பிருந்த காலம் குறித்து மீண்டும் இதில் வியக்க சொல்லப்படுகிறது!

3. குடும்பத் தலைவன் இறந்து போன தருணங்கள் என்பது அவரது மனைவியும், பிள்ளைகளும் சஞ்சலம் கொள்ளவேண்டிய நேரம். ஆனால், அவரது குடும்பம் பணத்தை முன் நிறுத்தி, பரிதவிப்பு கொள்கிறது. குடும்பத் தலைவனின் இறப்பு இரண்டாம் பட்சம் மூன்றாம் பட்சமாக போகிறது இங்கே! அந்த அளவிற்கு  குடும்ப வறுமை பேசப்படுகிறது.

4. சக மனிதர்களின் ஏமாற்றும் புரட்டும் மட்டுமல்ல, வியக்கவைக்கும் மனித நேர்மையும் இந்தக் கதையில் பிரதானமாக பேசப்பட்டிருக்கிறது.

5. ஜோசியம் மறைமுக கேலிக்கு உள்ளாகிறது.

– இந்தக் கதையின் ஓட்டத்தில் காணும் இத்தனையையும் தடங்கள் இல்லாமல் சராசரி வாசகர்கள் பின்தொடர்ந்து விட முடியும். சூட்சுமக் கட்டுக்குள் இருக்கிற செய்திகளுத்தான்  கொஞ்சம் முயலவேண்டும். அதனையும் கண்டறிந்தால்தான், இந்தக் கதையினை முழுமையாக நீங்கள் உள்வாங்கிக் கொண்டதாக ஆகும்!

*

பையனின் அப்பா, இறப்பதற்கு முன்னால் குமாரசுவாமிக்கும் ஆரோக்கியசாமிக்கும் கடன் கொடுத்திருக்கிறார். குமாரசுவாமி இந்து; ஆரோக்கியசாமி கிருஸ்துவர். குமாரசுவாமி கடன் பெற்றதாக அறியப்படுத்தப்படுவது பெரிய தொகை! ஆரோக்கியசாமி பெற்ற கடனோ சிறிய தொகை. கதைவழியே குமாரசுவாமி, ஏர்போர்ட்டில் வேலை. பெரிய வேலையில் அவர் இருந்தாலும், பெற்ற கடனை ஏமாற்றிவிடுவதாகவே உணர்த்தப்படுகிறது ஆரோக்கியசாமி, நடத்தையில் பிசகானவனாக இருந்தாலும் வாங்கியப் பணத்தை காலம் கடந்தேனும் திருப்பித் தந்துவிடுகிறார்!

கதையோட்டத்தில் குமாரசுவாமியை குறிப்பிடும் போதெல்லாம் ‘சுவாமி’ ‘சுவாமி’ என்று உயர்வு பொங்க குறிப்பிடுவதையும், ஆரோக்கியசாமியை கதை முழுமைக்கும் ‘சாமி’ ‘சாமி’ என்று  உயர்ச்சி அற்று விளிப்பதையும் நாம் கவனமேற்பது சரியாக இருக்கும்.

இந்தக் கதையில் இன்னொரு சூட்சும சங்கதியாய் ஜோசியரும் குமாரசுவாமியும் முன் நிறுத்தப்படுகிறார்கள்! அவர்களைக் கொண்டு பையனின் அம்மா கேள்விகுறியாக்கப்படுவதாகவே தோன்றுகிறது. கவன வாசிப்பு கொள்ளும் வாசகர்கள் அதனைக் கண்டறிந்து சொன்னால் தேவலாம். பெண்பித்தனாகப் பேசப்படும் ஆரோக்கியசாமி, ‘பையனின் அம்மா கேள்விக்குறி ஆக்கப்படும்’ வட்டத்திற்குள் வராததையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த படைப்பாளியின் எந்தவொரு படைப்பும், இதனால்தான் மதிப்பு கொள்கிறது. நிஜங்கள் எத்தனைக்கு சுட்டாலும் அதை அவர்கள் மறைப்பது இல்லை. சில நேரங்களில் அவர்களின் பேனா, அவர்களையும் மீறி நிஜங்களை கவனமாய் பதிவுக்குள் பொதித்துவிடும்! பின்னர் படைப்பாளியே அதை ‘எடிட்’ செய்ய நினைத்தாலும் அவனில் வாழும் படைப்பு சார்ந்த நெறி, அதற்கு இடம் தராது! (ஆபிதீன் பற்றி தாஜ் எழுதிய வரிகள் இங்கே நீக்கப்படுகின்றன! – ஆபிதீன்)

*

1999-ம் ஆண்டுவாக்கில் ‘இந்தியா டுடே’ இதழில் அசோகமித்திரன் எழுதிய கதையொன்று என்னை மிகவும் கவந்தது. அந்தக் கதை, அவரது ஏராளமான கதைகளைப் போன்று ஹைதராபாத்தை களமாக கொண்டு, அவரது இளமைப் பருவத்தை பேசுகிற கதைதான்! என்றாலும் அது ஏதோ ஒரு கோணத்தில் என்னில் உட்கார்ந்து விட்டது! மொகலாயச் சக்கரவர்த்தியான அக்பரது சபையில், இசை வித்தகராக விளங்கிய ‘தான்சேன்’ பற்றிய இந்தி சினிமா காண, சின்ன வயசு அசோகமித்திரனும் அவரது தமக்கையும் தியேட்டருக்கு சென்று காணுவதும், அந்த சினிமாவையொட்டிய பிற நிகழ்வுகளுமான கதை அது.

அதைப் படித்த சில மாதங்களில் சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவில் வைத்து அசோகமித்திரனை சந்தித்தேன். ஓடிச் சென்று அவரது கரத்தை இறுக்கமாகப் பற்றி கொண்டேன். நான் இத்தனை அழுத்தமாக கரத்தைப் பற்றுவதற்கான காரணம் அவருக்கு விளங்கவில்லை. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்த எனக்கும் உடனே காரணத்தைச் சொல்ல முடியவில்லை. அவரது கரத்தை அப்படி அழுத்தி இறுகப் பிடித்ததிருந்ததில் நிச்சயம் அவருக்கு வலியெடுத்திருக்கும். இன்னும் சற்று அழுத்தமாக பிடித்திருந்தால், அவரது கரமேகூட முறிவு கண்டிருக்கும்! அத்தனைக்கு ஒல்லியில்தான் இருந்தது அவரது கரமும்!

‘இந்தியா டுடே’ இதழில் நான் வாசித்துத் திளைத்த, அவரது கதையின் பெயரை ஒருவழியாக கூறி, சகஜத்திற்கு வந்து, பேசி முறையான சந்தோஷத்தை திரும்பவும் வெளிப்படுத்தினேன். அவர் திகைத்து நின்றார்! அது எனக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த மாதத்தில் அந்த ‘இந்தியா டு டே’ யில் அவரது இன்னொரு கதை வெளிவந்திருந்தது. அதுவும், நான் வியந்த முந்தைய கதையொட்டிய அதே வீச்சு! அதை வாசித்து முடித்த நாழியில் சிலிர்த்தேன்!

*

‘சக்கரவர்த்தி’ என்கிற அழகியசிங்கர் என் நண்பர். ‘நவீன விருட்சம்’ என்கிற சிற்றிதழின் ஆசிரியரும் கூட. அவர், தனது சிறுகதைகளை அசோகமித்திரனின் பாணியில் எழுதுவதாக நினைத்து எழுதிக் கொண்டிருப்பவர்! நவீன விருட்சம்’ இதழ் தோறும் அவரது கதை கட்டாயம்! அந்த இதழின் ஆரம்பகால சந்தாதாரர் நான். அவரது அத்தனைக் கதைகளையும் நட்புக்கு பணிந்து வாசிப்பவன். இன்றைய தேதிவரை அவரது கதை ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை என்பது வேறு செய்தி!. அசோகமித்திரன் பாணியை இன்னும் அவர் விடுவதாக இல்லை. அப்படித்தான் எழுதிக் கொண்டு வருகிறார். சரியாகச் சொன்னால், அவர் அந்தப் பாணியினை விடவேண்டிய அவசியமும் இல்லை. அசோகமித்திரன் மாதிரி எழுதுவதாக, அவர்நினைத்துக் கொண்டு எழுதினால் ஆயிற்றா?

எனக்கும் அசோகமித்திரன் பாணியில் ஒன்றை எழுதிப்பார்க்கணும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. ஆனால் அவரது படைப்பின் மந்திரம் பிடிபடுவதே இல்லை. இத்தனைக் காலம் அவரைப் படித்து என்ன செய்ய? நொந்தபடி, மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்ப் பேசும் ஆங்கில படம்’ என்ற ஒரு சிறுகதை எழுதினேன். அது அசோகமித்திரனை மனதில் நிறுத்திக் கொண்டு எழுதியதுதான். அந்தக் கதை நன்றாக இருப்பதாக அழகிய சிங்கரும் சொன்னார். அவரது இணையத் தளத்திலும், பின்னர் தனது இதழான நவீன விருட்சத்திலும் பதிவேற்றினார்! நேரில் சந்தித்த போதும் என்னைப் பாராட்டினார்! அந்தக் கதையை நன்றாக எழுதியிருப்பதாக நான் நினைத்தது போக, அழகிய சிங்கரின் பாரட்டுதலுக்குப் பிறகு குழம்ப ஆரம்பித்துவிட்டேன்.

*

திரு. அசோகமித்திரனைப் பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே போகலாம். ‘கணையாழி’ ஆசிரியராக இருந்து அவர் சாதித்த சாதனைகளை, பல இளம் எழுத்தாளர்களை அதன் வழியே ஆசீர்வதித்ததை, நவ கவிதைகளை பெண் வாசகர்களிடம் கொண்டு சேர்த்து பரவலாக்கியதை சொல்லிக் கொண்டே போகலாம். தவிர, கீர்த்திக் கொண்ட ஆங்கில எழுத்தாளர்களை / அவர்களது ஆக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு எத்திவைத்ததையும் சொல்லி வியக்கலாம். எளிமையான மனிதர். கோலமும் அப்படிதான்! ஒத்துழைக்கும் உடம்பு வேறு!

*

‘விஜயபாரதம்’ என்கிற இதழில் இந்தக் கதை வெளிவந்தது. அந்த இதழின் சென்ற தீபாவளி மலரில் விசேசமாக பிரசுரித்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ். சார்ந்த… பாரதிய ஜனதா சார்ந்த… இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனா சார்ந்த… இந்துத்துவா புகழ்பாடும் இதழ் அது! இருந்தும்… என்ன செய்ய? அதன் ஆசிரியர் கவனம், போதாததாக இருக்கிறது! ஓர் வேதக்காரனின் நேர்மையை மெச்சும்படிக்கு அசோகமித்திரன் எழுதிருப்பதை அந்த இதழ் ஆசிரியர் கவனிக்க தவறியிருக்கிறார்! அவரது, மேலிடப் பார்வையில், இந்திய சிறுபான்மையினர்களில் நேர்மை கொண்டவர்களும் உண்டா என்ன?

சீனாவரை போய் கல்வி கற்கச் சொன்ன ஓர் மதத்தின் வழி வந்த மக்களாகிய நாம், ‘விஜயபாரதம்’ வரை போய் பார்க்கலாம். தப்பில்லை! அந்த இதழ் , சிறுபான்மைச் சமூகத்தார்களின் இரத்தம் சூடாகிற அளவில் பல செய்திகளை வெளியிடுவதும் உண்மை. ஆக, நம்மவர்கள் எழுச்சி பெற விஜயபாரதம் வாசிப்பது ஓர் எளிய வழி! தவிர, நம்ம மணவாடு விஞ்ஞான மேதை, அணுகுண்டு வித்தகர், ஜனாப் அப்துல் கலாம் பாய், சூஃபி மனம் பெற்றவராக பாரத ரிஷிகளையும், மஹான்களையும் வியந்து வியாக்கியானம் செய்பவராக, அதனைக் குறித்து எழுதுபவராக விஜயபாரத திண்ணையில்தான் ஜாகை!

விஜபாரதத்திற்கு சந்தா செலுத்த எண்ணம் கொள்பவர்கள் என்னை அணுகலாம். ஆண்டு சந்தா (மலர் உட்பட) 250 ரூபாய். இரண்டாண்டு சந்தா (மலர் உட்பட) 475 ரூபாய். ஐந்தாண்டு சந்தா (மலர் உட்பட) 1000 ரூபாய். கமிஷன் தனி!

தாஜ் | satajdeen@gmail.com

« Older entries