இந்தியா டுடே (மே 26, 1999) இதழில் வெளியானது. பக்கங்களை தபாலில் அனுப்பிவைத்த நண்பர் தாஜ் , கதையை வியந்து இப்படி அந்தத் தாளில் எழுதியிருந்தார் :
*
சிவகாமியின் மரணம் – அசோகமித்திரன்
புத்தகத்தை வாங்கி இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இப்போதுதான் நான்காம் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. சிவகாமியின் மரணம் 29-5-1958.
புத்தகம் பைகிராப்ட்ஸ் சாலை நடைபாதை புத்தகக் கடை ஒன்றில் வாங்கியது. அந்த சாலையை இப் போது பாரதியார் சாலையாகப் பெயர் மாற்றியிருக்கிறது. முன்பும் பல கடை கள் இருந்தன. இப்போது பெரிய, பகட்டான கடைகள். நடைபாதை பாதியாகக் குறுகிவிட்டது. தரையில் புத்தகங்களைப் பரப்பி வைக்க அதிக இடம் இல்லை . பொதுவாகப் பழைய புத்தகக் கடைகளில் நின்றபடி நாம் வேண்டும் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்க முடியாது. இப்போது அந்தப் பழைய புத்தக் கடை முன்னால் உட்கார முடியாது. அச்சமெழுப்பும் போக்குவரத்தில் சில விநாடிகளுக்குள் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, மோட்டாரோ கூட இடித்துத் தள்ளி விடும். பழைய புத்தகங்கள் வாங்குவதை அநேகமாக நிறுத்திவிட்டதற்குக் கண், பார்வை மங்கி வருவது மட்டும் காரணமில்லை.
புத்தகம் ‘செயிண்ட் ஜோன். பெர்னார்ட் ஷா எழுதிய நாடகம். அதை அவர் 1924ல் எழுதி அடுத்த வருடம் நோபல் பரிசு பெற்றுவிட்டார். ஆனால் நான் வாங்கிய புத்தகம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அச்சிடப்பட்டது. பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகளுக்காக மலிவான தாளில் மலிவுப் பதிப்பாகப் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டது. யாரோ ஜான் – ஸ்மித் என்பவர் 1944ல் வாங்கியிருக்கிறார். இங்கிலாந்திலேயே வாங்கியிருக்கக் கூடும். அவருக்கு அந்த நாடகம் பிடிக்காமல் போயிருக்கலாம். ஜோன், பிரெஞ்சுக்காரர்கள் சார்பில் இங்கிலாந்துக்காரர்களோடு போரிட்டு வென்றவன். அப்படி இருந்தும் பிரான்சு நாட்டுப் பெரிய தலைகள் சேர்ந்து கொண்டு – அந்த பட்டிக்காட்டுப் பெண்ணை இங்கிலாந்துக்காரர்களுக்கே விற்று விட்டன. பதினேழு, பதினெட்டு வயதில் வெறும் கத்தியும் ஈட்டியும் வைத்துக் கொண்டு ஒரு படைக்குத் தலைமை தாங்கி வெற்றிகளை வாங்கித் தந்த அந்தப் பெண்ணை அவள் நாட்டுக்காரர்களே எதிரிகளிடம் விற்று விடுகிறார்கள்! இங்கிலாந்துக்காரர்கள் ரோஷமுடையவர்கள். பய பக்தி கொண்டவர்கள். நல்ல கிறிஸ்தவர்கள். அவர்கள் மானம் போகும் படியாக அவர்களைத் தோற்கடிக்கும் ஆற்றல் படைத்த இளம் பெண் சூனியக்காரியாகத்தான் இருக்க வேண்டும். சாத்தானின் கைக்கூலியாக இருக்க வேண்டும். கொளுத்து அவளை உயிரோடு! வேத முழக்கங்களுடன் அந்தப் பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண் உடல் கருகி ரத்த நாளங்கள் வெடித்துத் துடிதுடிக்கச் செத்தாள்.
ஜான் ஸ்மித்துக்கு ‘செயிண்ட் ஜோன்’ நாடகம் பிடிக்காமல் போனதற்கு இன்னும் கூடக் காரணங்கள் இருக்கலாம். இரண்டாம் உலக யுத்தத் தில் இங்கிலாந்துக்காரர்களும் பிரெஞ் சுக்காரர்களும் நேச நாடுகள் சேர்ந்து ஜெர்மனியோடு சண்டை போட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த ஆயிரமாண்டுப் பகையும் போட்டியும் எங்கே போய் விடும்?
ஜான் ஸ்மித் எறிந்துவிட்டுப் போன ‘செயிண்ட் ஜோன்’ புத்தகம் எஸ். ராதாகிருஷ்ணன் என்பவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. அவர் அதை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கி யிருக்கலாம். ஜான் ஸ்மித் பெயரை அடித்து விட்டுத் தன் பெயரை எழுதி இருக்கிறார். ஜான் ஸ்மித்தே அந்தப் புத்தகத்தை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்திருக்கலாம். ராதாகிருஷ்ணன் பெர்னார்ட் ஷா நாடகத்தைப் படித்து ரசிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஜான் ஸ்மித், ராதாகிருஷ்ணன் இரண்டு பேருமே யுத்தக் கைதிகளாக சிங்கப்பூரில் இருந்திருக்கலாம். ராதா கிருஷ்ணனுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்தில் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜான் ஸ்மித் யுத்தம் முடியும் வரை யுத்தக் கைதியாகவேதான் காலம் தள்ளியிருக்க வேண்டும். எஸ். ராதாகிருஷ்ணன் – இவர் இந்தியாவின் உப ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்தவரல்லவா? அந்த மனிதர் ‘செயிண்ட் ஜோன்’ நாடகத்தைப் படிக்கும் ரகமா? அவர் ஏதாவது பழைய புத்தகக் கடையில் வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் புத்தகங்களைப் பழைய புத்தகக் கடையில் போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் பெயர் உள்ள சாலையில் அவருடைய வீடு அவ்வளவு பெரியது. இந்த ராதாகிருஷ்ணன் பெயர் எழுதப்பட்ட பக்கத்தின் பின்புறத்தில்தான் ‘சிவகாமியின் மரணம் 29-5-1958* என்று இருந்தது. உண்மையில் இந்த மூன்று கையெழுத்துக்களில் மரணம் குறித்து எழுதியதுதான் பளிச்சென்று யார் கவனத்தையும் கவரக் கூடியதாக இருந்தது. ஆனால் அதைத்தான் இருபத்தைந்து வருடங்கள் பார்க்கத் தவறியிருக்கிறேன்.
நாடகத்தையாவது இன்னொரு முறை படித்து விடலாமா? ஜோனுடைய வாழ்க்கைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள இந்த நாடகம் போதாது. பெர்னார்ட் ஷா ஏனோ எல்லா நேரமும் தான் ஒரு அதி புத்திசாலி என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மனிதர்களைவிட மனிதக் குழுக்கள், சமூகம், சமூக அமைப்புகள் மீது அவர் கணிப்புகளும் கண்டுபிடிப்புகளும்தான் முக்கியம். அவரைப் போலவே அவருடைய பாத்திரங்களும் கெட்டிக்காரர்கள். கெட்டிக்காரர்களிடம் ஒரு சங்கடம், அவர்கள் வார்த்தைகளைப் பிறர் மீது அள்ளிக் கொட்டுவதுபோல அவர்கள் மீதே அவற்றை வாரி இறைத்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனதில் அவை ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த இரைச்சலில் சில உண்மைகள் அளையக் கிடைக்காமல் தவறி விடும். பெர்னார்ட் ஷா தன் நாடகங்களில் அவ்வப்போது வரலாற்று நாயகர்களைப் பாத்திரங்களாகப் பயன்படுத்திக் கொண்டாலும் அவர்களைக்கூட சமூகப் பிரதிநிதி களாக மாற்றி விடுவார். ஒரு வேளை அதுதான் சரியான பார்வையோ?
கடவுளின் காவலர்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்திக் கொல்லப்பட்ட அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணை 1920ஆம் ஆண்டில் தெய்வக் கிருபை பெற்றவள் என்று கடவுளின் காவலர்கள் அறிவித்துக் கொள்ளும் இன்னொரு கிறிஸ்தவ சபை அறிவித்தது. ஐநூறு ஆண்டுகள் முன்பு தெய்வ விரோதி, சூனியக்காரி, மதச் சத்ரு என்று சொல்லி உயிரோடு எரிக்கப்பட்ட அந்தப் பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண் திடீரென்று பத்திரிகைச் செய்திகளில் முதலிடம் பெற ஆரம்பித்தாள். புனித ஜோன் ஆனாள். உடனே அவள் பற்றி நூல்கள். நாடகங்கள். இங்கிலாந்தின் பங்குக்கு பெர்னார்ட்ஷா நாடகம் என்றால் அமெரிக்காவின் பங்குக்கு மாக்ஸ்வெல் ஆண்டர்சன் நாடகம். பேசாத் திரைப்படம் பேசத் தொடங்கியவுடன் உரத்த பின்னணி இசையுடன் மேலும் திரைப்படங்கள்…
எஸ்.ராதாகிருஷ்ணன் ‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடிய நாட்களில் ஜோன் பழைய செய்தியாகிவிட்டாள். அந்த நாளில் இன்ஸி என்ற பெயர் கொண்ட தொரு அமெரிக்க மனத்தத்துவ மருத்துவர் ஆண்கள் – பெண்கள் எல்லாமே நம்பக்கூடியவர்கள் அல்ல என்று புள்ளி விபரக் கணக்கு தந்தார். அவர் தன்னுடைய கூற்றை எல்லாக் காலத்துக்கும் விஸ்தரித்தார். மனிதரில் புனிதத் தன்மையே சாத்திய மில்லை . பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்குக்கூட.
ஆனால் எல்லாக் காலத்திலும் நிறையப் பெண்கள் பதினெட்டு, பத்தொன்பது வயதில் இறந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் எழுதப்பட்ட கதை, நாவல் என்று எதை எடுத்தாலும் இளையாள், சித்தி, சிற்றன்னையின் பிள்ளைகள் என்று நிகழ்ச்சிகள் போகும். சரத் சந்திரர் கதைகளில் முதல் மனைவி பூரண ஆயுள் பெற்றிருந்தாள் என்ற பேச்சே கிடையாது. பெண்களுக்குப் பத்து வயதிலும் பனிரண்டு வயதிலும் கல்யாணம். பதினைந்து வயதுக்குள் கையில் ஒரு குழந்தை. பத்துப் பதினைந்து நபர்கள் உடைய குடும்பத்தின் வீட்டு வேலை. மாமியார், நாத்தனார் மரபுக் கொடுமை. இந்த நிலையில் எப்படி ஒரு பெண் தீர்க்காயுள் கொண்டிருக்க முடியும்? இந்தப் பத்து வயதுக் கல்யாணம் இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளான பிறகு நல்ல வசதியுள்ளவர்கள் குடும்பங்களில் கூட நடந்திருக்கிறது. வாய் கிழிய ஊருக்கு உபதேசம் பண்ணுகிற அமைச்சர் ஒருவர் தன் பதினைந்து வயதுப் பெண்ணுக்குப் பல கோடி ரூபாய் செலவழித்துக் கல்யாணம் செய்வித்தார். ராஜகுடும்பத்தைச் சேர்ந்த அவர், ரயில்வே மந்திரி. தன் ஊர் ரயில் நிலையத்தைச் சலவைக்கல்லால் இழைத்து விட்டார். சென்னை ஆட்டோ ரிக்ஷாக்களில் மட்டும் தான் பெண்ணின் திருமண வயது 21. அந்த அமைச்சரைச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை.
சிவகாமி அற்பாயுளில்தான் போயிருக்க வேண்டும். இல்லாது போனால் அவளுடைய சாவை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்திருப்பார்களா? சுத்த சைவப் பெயர். தகப்பனார் பட்டை பட்டையாக விபூதி தரித்துக் கொண்டிருப்பார். அது ராதாகிருஷ்ணனாக இருக்க முடியாது. புத்தகம் மூன்றாவது கை மாறியிருக்கிறது. ‘செயிண்ட் ஜோன்’ போன்ற புத்தகங்களை யாராவது அடிக்கடி பார்க்கக் கூடிய இடத்தில் வைப்பார்களா? தினமும் பார்த்துப் படித்து ரசிக்கக்கூடிய புத்தகம் இல்லை அது.ஒரு முறை படித்து விட்டு எங்கோ மூலையில் பாது காப்பாக வைத்திருப்பார்கள். ஆதலால் இந்தப் புத்தகம் அந்த மூன்றாவது நபர் கையில் கிடைத்த ஓரிரு தினங்களுக்குள் சிவகாமியின் மரணம் நிகழ்ந்து விட்டது.
சிவகாமி, சிவகாமிநாதன். சிவகாம சுந்தரம், சிவகாமி நடராஜ சுந்தரம்… சிவகாமி என்று தொடங்குகிற பெயரை ஆண்களுக்குத்தான் நிறைய வைத்திருக்கிறார்கள். பெண்களுக்குப் பெயராக இரண்டாம் யுத்த காலத்தில் தான் இது அதிக அளவில் புழக்கத்துக்கு வந்தது. கல்கி எழுதி வந்த தொடர்கதையான ‘சிவகாமியின் சபதம் தான் இதற்குக் காரணம். பார்த்திபன், விக்கிரமன், குந்தவி, அருண்மொழி, நரசிம்மன், பரஞ் சோதி என இன்னும் சில பெயர்களும் குழந்தைகளுக்கு வைக்கக் கருதப்பட்டன. ‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சிவ காமி அது அச்சிடப்பட்ட ஆண்டில் கூடப் பிறந்திருக்கலாம். சிவகாமி இறந்தபோது பதினான்கு அல்லது பதினைந்து வயது. பதினைந்து வயது வளர்ந்த குழந்தையை இழக்க நேருவது எவ்வளவு கொடுமை? செயிண்ட் ஜோன் மரணம் போலவே. ஒரு வித்தியாசம். இந்த நாளில் யாரையும் உயிரோடு கொளுத்துவது இல்லை . அப்படியும் கூறுவதற்கில்லை. வெறும் பத்திரிகைச் செய்திகளின்படியே, தமிழ்நாட்டிலேயே ஓராண்டுக்கு எழுநூறு, எண்ணூறு பெண்கள் இந்தக் கதிக்கு ஆளாகிறார்கள். பட்டிக்காட்டுப் பெண். ஜோன் கொளுத்தப்பட்ட காலத்திற்கும் இப்போதைக்கும் உள்ள ஒரு வித்தியாசம், பெண்களைச் சூன்யக்காரி என்று பெயர் சூட்டிக் கொளுத்துவதில்லை .
‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்திலிருந்து மூன்று, நான்கு எண் பக்கங்களுடைய தாள்களைக் கிழித்தேன். சிவகாமியுடன் ராதாகிருஷ்ணன், ஜான் ஸ்மித் ஆகிய பெயர்களும் அகன்று விட்டன. இப்போது ‘செயிண்ட் ஜோன்’ நாடகத்தை என்னால் முறையாகப் படிக்க முடிந்தது.
***
ஓவியம் : எஸ். என். வெங்கட்ராமன்