ஈன்ற பொழுது (சிறுகதை) – ஜே. ஷாஜஹான்

ஈன்ற பொழுது – ஜே. ஷாஜஹான்

சுந்தரேசன் கிட்டத்தட்ட சலிப்படைந்தே விட்டான். இந்த ஊருக்குள் யாருக்கும் கையில் இருக்கும் தெளிவான முகவரியைச் சொல்லியும் இடம் சொல்லத் தெரியவில்லை. ஒருவன் வடக்கிற்கும், மற்றொருவன் தெற்கிற்குமாய் அலையவைப்பது மிகவும் சங்கடப்படுத்தியது. இனிமேல் யாரிடமும் கேட்க வேண்டாம் என்பது போல் கடைசியாய் அந்த டீக்கடைக்காரர் காட்டிய வழியில் நடக்கலானான்.

“இந்நேரத்திற்குள் அப்பாவிற்கு நான் வந்தது தெரிந்திருக்குமோ? இருக்காது. அப்படியே என்னைத் தேடினாலும் இங்கே வந்ததாகத் தெரிய நியாயமே இல்லை” என்று நினைத்துக்கொண்டான்.

நல்ல உயரமும், உயரத்திற்கேற்ற உடல்வாகும் கொண்ட 17 வயது இளைஞன் சுந்தரேசன். கொஞ்சம் பளபளப்பான கருப்பு அவன் நிறம் பார்ப்பதற்குச் சிகப்பைவிட அழகாகக் காட்டி நிற்குமே, அந்தக் கருப்பு: பளஸ்டூ படித்துக்கொண்டிருக்கிறான். திடீரென அவன் இப்படிக் கிளம்பி வந்ததற்கு தெய்வானைப் பாட்டியும் ஒரு காரணம் என நினைத்துக்கொண்டான்.

பாட்டி இவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மாவைத் திட்டிக்கொண்டுதானிருக்கிறாள். “சண்டாளி. அவ உருப்படமாட்டா உங்களை விட்டுட்டுப் போனதுக்கு என்னென்ன கஷ்டமெல்லாம் அனுபவிக்கறாளோ?” என்பாள்.

அப்பா அந்தக்காலத்திலேயே நல்ல குடிகாரர்தான் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அம்மாவை, தாத்தாவை சமயங்களில் குழந்தைகளைக்கூட அடித்திருக்கிறார். பாட்டி அதையும் சொல்லி அழுவாள்.

அப்பாவின் குடிவெறியில் அடி உதையும், அதே குடிவெறியில் மணிமணியாய் மூன்று பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டாள் அம்மா. அதில் மூத்தவள் உமா, அடுத்தவன் சுந்தரேசன், கடைசியாய் சாரதா. இவர்களுடன் பட்டினியும், பசியுமாய் அழுது வடிந்து கொண்டிருந்த அம்மா ஒரு நாள் சாரதாவைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். வெளியேறியவள் யாரோ டிரைவர் ஒருவருடன் குடும்பம் நடத்துவதாய்த் தெரிய வரவே ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.

“அலை பாஞ்சாடீ, மனசுல வச்சுட்டிருந்தே நேரம் பார்த்து கிளம்பிட்டா! போனா என்ன? என் பிள்ளைக்கு கல்யாணமாகலையா? இல்ல இன்னும் ரெண்டு பெத்துக்கலையா? நல்ல வேளை உமாவும், சுந்தரும் பள்ளிக்கூடம் போய்ட்டு மதியச் சாப்பாட்டுக்கு என் வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவ பள்ளிக்கூடத்திலேயும் வந்து தேடியிருந்திருக்காளே! இந்தப் பிள்ளைகளையும் இழந்திடாம கடவுள்தான் காப்பாத்தினான்!” என்று வாடிக்கையாய் பாட்டி புலம்ப ஆரம்பித்தாள்.

அவனின் அம்மா இப்படிக் கிளம்பிப்போனது ஊர் முழுவதும் தெரிந்ததுதான். இருந்தும், மாதம் ஒரு முறையாவது இதனைப் பாட்டி யாரிடமாவது சொல்லிக்காட்டுவாள், வேலையற்ற கிழடுகள் சிலரும் தூபமிட்டு ஆரம்பித்து வைத்து வேடிக்கை பார்ப்பார்கள்.

எப்படித்தான் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் அம்மாவின் முகம் மட்டும் சுந்தருக்கு நினைவிற்கு வருவதேயில்லை. அம்மா கிளம்பிப் போகையில் சுந்தருக்கு ஐந்து வயதும், உமாவிற்கு எட்டு வயதும்தான். ஆயினும் உமா மட்டும் அம்மாவின் முகம், செய்கை, பேச்சு இவையெல்லாம் இப்படி, இப்படி’ என்று செய்து காட்டுவாள். ‘சுந்தரைப் பாத்தா அம்மாவைப் பார்க்க வேண்டாம்” என்று அடிக்கடி கூறுவாள்

இவன் கால் சட்டை போட்டுக்கொண்டிருந்த காலம் வரையில் தலையை மேல் நோக்கி வாரி நடு உச்சி எடுத்து, கண்ணாடியைக் கையில் கந்து, ‘பாருடா சுந்தர், இப்படித்தான் இருக்கும் நம்ம அம்மா!’ என்பாள்.

சுந்தருக்கு அப்பொழுதெல்லாம் ரொம்பப் பெருமையா இருக்கும். இதெல்லாம் சித்திக்கு தெரிஞ்சா கொன்னுடும்’ என்கிற பயமும் அந்தக் காலம்வரை இருந்தது. ஆனால் அம்மா மீது இனந்தெரியாத வெறுப்பு வந்தது. ஏனோ தெரியவில்லை, உமா மட்டும் அம்மாவை பாட்டியிடமோ சித்தியிடமோ விட்டுக்கொடுக்கமாட்டாள்.

நண்பர்களின் வீட்டிற்குப்போகிற சந்தர்ப்பங்களிலெல்லாம், சுந்தர் சொல்லாமலேயே சுந்தரின் அம்மா பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இதனால் அம்மாவின்மீது மேலும் வெறுப்புணர்வு ஏற்பட்டது.

ஆனால் உமா மட்டும், அம்மாவை நீ பார்த்து பேசினா இப்படிச் சொல்ல மாட்ட. அம்மா நம்மைத்தேடி வந்ததுக்காக, அது ஓடிப்போன இரண்டு வருஷம் கழித்து அப்பா, சித்தி, அத்தை இன்னும் யாராரிட்டயோ நல்ல அடிவாங்குச்சு என்பாள். இதெல்லாம் எப்படி உமாவுக்குத் தெரியும் என்பது கூட சுந்தருக்கு தெரியாது.

அப்பா இன்னும் குடியை விடவில்லை. ஆனால் அம்மா தந்த அதிர்ச்சி வைத்தியத்திற்குப் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போனது. உமா மட்டுமில்லை என்றால், தான் கூட எங்காவது போய்விடலாம் என்று சுந்தர் நினைப்பான். உமாதான் சுந்தருக்கு அக்கா, அம்மா, நண்பன். இது ஒன்றின் இழப்பைப் பிறிதொன்றில் சரிக்கட்டுகிற விஷயமாய்ப் படவில்லை. அம்மா இருந்திருந்தால் கூட உமாதான் இவனுக்கு பிடித்தமான உறவாக இருந்திருப்பாள் என்று அடிக்கடி நண்பர்களிடம் சுந்தர் கூறுவதுண்டு. உமா எதிலும் தெளிவு, தீர்க்கம் கொண்டவள்.

கடைசியாக “வையாபுரி சந்துக்கு” வந்தடைந்தது குறித்து மிகுந்த சந்தோஷம் கொண்டான். இதன் பழைய பெயர் வையாபுரிச் செட்டியார் சந்து, அல்லது ‘வையாபுரி பிள்ளைத்தெரு’ என்றிருந்திருக்கும் வரிசையாக கதவிலக்கங்களைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தான்

24,25,26,27, – மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தது முன் பகுதி ஒட்டுக் கட்டிடம், கதவருகே சென்றான்.

‘சார்?’ என்றான். இந்த ‘சார்’ யாருக்கு? அந்த டிரைவருக்கா அல்லது இங்கிருக்கும் வேறு யாருக்குமா? இப்படியே திரும்பிவிடலாம் என்று தோன்றியது சுந்தருக்கு. வாழ்வில் முதல் முதலாய் இத்தனைப் பதட்டத்திற்குள்ளானான்.

‘சரி திரும்பி விடலாம்’ என்று நினைக்கையில், பதினைந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ‘யார் வேணும்?’ என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தாள்.

”மிஸஸ் அகிலா வீடு இது தானுங்களே” மென்று முழுங்கிக் கேட்டான்.

‘வாங்க’ என்று சொல்லிவிட்டு கதவை முழுவதுமாய்த் திறந்துவைத்துவிட்டு உள்ளே போனாள். போகுமுன் உஷ்ணமாய் ஒருமுறை முறைத்துவிட்டுப் போனாள்.

உலகத்தில் எந்த மகனும் தன்னைப் பெற்றவளை இப்படி மூன்றாம் மனுஷன் மாதிரி பார்க்கிற அவலத்தை அனுபவித்திருக்க மாட்டான் என நினைத்துக் கொண்டான். இப்படியே கூட திரும்பிவிடலாம்; வேகமாய் தெருவைக் கடக்கும்வரை ஓடிக் கூடப்போய் விடலாம். மிஞ்சிப்போனால் பைத்தியம் என்று நினைப்பார்கள்; நினைத்துவிட்டுப்போகட்டும்.

அதற்குள் கம்பீரமாய் ஒரு பெண் வந்தாள். பார்த்தவுடன் தெரிந்து விட்டது இவள்தான் ‘அம்மா’ என்று! வீட்டில் இவளின் புகைப்படமோ, கல்யாணப்படமோ இல்லாது சிதைத்துப் போட்டிருந்தார் அப்பா. ஆனால் நடுவகிடு பிரித்து, “இப்படித்தாண்டா இருக்கும் அம்மா’! என்று உமா சொல்வது நிஜம்தான் என்று நினைத்துக்கொண்டான்.

“நீங்க?” அந்தப் பெண் புரியாமல் கேட்டாள்.

“நான் திருச்சில இருந்து வாரேன். சுந்தரேசன்” என்றான்.

”சுந்தர் தனுஷ்கோடி பேரன் சுந்தர்!”

“ம்ம்”

ஆனந்தம் கலந்த அதிர்ச்சியில் அவளுக்கு கண்கள் கலங்குவது தெரிந்தது. தனுஷ்கோடி பேரன் என்றால்தான் சகல உறவினர்களுக்கும் தெரியும். தாத்தா அவ்வளவு பிரபலம் அவர் இறந்த பின்னர் அவரின் சொத்துக்களை விற்றுத்தான் குடும்பம் சீர்பட்டிருக்கிறது.

“வாப்பா சுந்தர் வா, உள்ளே வா”

“சாரதா, அவன்தாம்மா நம்ம சுந்தர். உன் அண்ணன் சுந்தர்” சொல்லிவிட்டு சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து தேம்பினாள் சாரதாவும் அவளருகே வந்து உட்கார்ந்தாள், சுந்தரையே பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா அழுவதைப் பார்த்து சாரதாவும் அழுதாள் இவர்கள் இருவரும் அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தருக்கு இது அவஸ்தையாகப்பட்டது. ஏதோ நினைத்துக்கொண்டவள்போல புடவைத்தலைப்பால் கண்களைத் துடைத்துவிட்டுக் கேட்டாள்.

“எப்படிப்பா இருக்க? என்ன பண்றே? உமா என்ன செய்றா? அவுங்க எப்படி?”

ஒட்டு மொத்தமாய்க் கேட்டாள். தனது வீட்டுச் சொந்தங்கள்கூட அறுந்து போய்விட்டதால் எதையும் விசாரித்து அறிந்து கொள்ள முடியவில்லை என்றாள்.

“என்ன ஏதுன்னே தெரிஞ்சுக்க முடியாதப்ப, நினைச்சுட்டிருக்கிறது மட்டும் என்ன பிரயோசனம்னு விட்டுருவேன் சுந்தர் ஆனா நினைக்காமலும் இருக்க முடியலை. இருந்தும் தேடி வந்தியே, உங்காலிலே விழணும்பா!” என்றாள்.

சாரதாவுக்கும், உமாவுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகப்பட்டது. நளநீளமான அந்த விரல்கள் உமாவுக்கு இருப்பதைப் போன்றுதான் சாரதாவுக்கும்.

“உமாவைக் கூட்டிட்டு வந்திருக்காலாமே? அவ எப்படி வரமுடியும்? அவங்களுக்குத் தெரிஞ்சதுன்னா போச்சே. எனக்கு வேணும்பா. வேணும். பிஞ்சுகளை தவிக்க விட்டுட்டு இப்படி ஓடிவந்தேனே பட்டினியோ, வாழ்வோ, சாவோன்னு என் குழந்தைங்க கூட்டு மாட்டாம இப்படி வந்தேனில்ல. எனக்கு இன்னும் வேணும்!”

சுந்தர் எதுவும் பேசவில்லை . சாரதா, உள்ளே போய் காப்பி கலந்து வந்து சுந்தரிடம் தந்தாள். வேண்டாம் என்று மறுப்பதற்கான வார்த்தைகள்கூட அனாவசியமாகப்பட்டது. சுந்தர் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான்.

தெளிவான கண்கள், அந்த மூக்கு, உதடு எல்லாம் சுந்தருக்குப்போலத்தான்.

”சுந்தர், உமாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

”அடுத்த மாதம் 7-ம் தேதிதான் கல்யாணம். மாப்பிள்ளை ஒரு பிரைவேட் கம்பெனியில் கிளார்க்கு. நல்ல மாதிரி. உங்களுக்கு பத்திரிகை கொடுக்கணும்னு அக்கா ரொம்பப் பிரியப்பட்டது. அதான் அலமு சித்திட்ட போய், உங்க அட்ரஸ் வாங்கிட்டுப் பார்க்க வந்தேன்” பேசிக் கொண்டே கைப்பையிலிருந்து முனைகளில் மஞ்சள் தடவிய பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொடுத்தான். வாங்கிப் பார்த்து மீண்டும் அழுதாள். ஆனால் இந்த முறை சாரதா அழவில்லை. சுந்தரின் அருகே வந்து நின்று “என்ன பண்றீங்கண்ணே ?” என்றாள் சாரதா. “ப்ளஸ்டூ” என்றான்.

கொஞ்சநேரத்தில் “அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ஒரு பையன் வந்தான். அம்மா, அவனையும் அழைத்து “இவன்தான் சுந்தர்” என்றாள். கொஞ்சமாய் சிரித்து, “வாங்கண்ணே” என்று சொல்லிவிட்டுப் மலங்கமலங்க விழித்தான்.

“கடைசிப்பையன். சுவாமிநாதன். எட்டாம் வகப்பு படிக்கிறான்” என்றாள் அம்மா.

இப்பொழுதுதான் அழுவதை முழுவதுமாக நிறுத்தியிருந்தாள் அம்மா.  இன்னும் கொஞ்சநேரம் இருந்து சுவாமிநாதனின் அப்பாவைப் பார்த்துவிட்டுப் போகச் சொன்னாள். அவர் பார்த்தால் சந்தோஷப்படுவார் என்றாள்.

“இல்ல. நேத்து ராத்திரியே கிளம்பி வந்துட்டேன் இப்பக் கிளம்பினாத்தான் ராத்திரிக்குள்ள திருச்சி போக முடியும்” என்று மறுத்துவிட்டான் சுந்தர். போக, அவனுக்கு அந்த டிரைவரைப் பார்க்க வேண்டுமென்று தோன்றவில்லை.

சாரதா, சுவாமிநாதன், அம்மா மூவரும் எடுத்துக்கொண்டிருந்த போட்டோ ஒன்றை கொண்டு வந்து தந்தாள் சாரதா. தனது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டும் தந்தாள். எதற்கு இரண்டு என்று சுந்தருக்குப் புரியவில்லை .

“அக்கா கல்யாணத்துக்கு, நானும் சுவாமியும் வர்றோம் நம்ம சொந்தங்கள் யாரையும் எனக்குத் தெரியாது; என்னை அவங்களுக்கும் தெரியாது. ஆனா அக்காவ நான் நேரில் பார்க்க நீங்க ஏற்பாடு செய்யணும் அடிக்கடி வந்து போங்கண்ணே !” என்றாள் சாரதா.

புறப்படும்முன்னர் அம்மா மீண்டும் அழலானாள். சுந்தரை அழைத்து கன்னத்தில், நெற்றியில், உச்சியில் முத்தமிட்டாள்.

சுந்தர் பஸ் ஸ்டாண்டை நெருங்கிய போது, சுவாமிநாதன் சின்ன பிளாஸ்டிக் கவரில் கேக்குகளும், இனிப்பும் கொண்டு வந்தான்.

“சாரதாக்கா கொடுத்துவுட்டாங்க. போனதும் உமாக்காட்ட சொல்லிக் கடிதம் போடச் சென்னாங்க! வாரேண்ணே ‘ தெளிவான முகவரி எழுதிய துண்டுச் சீட்டையும் கொடுத்துவிட்டு ஓடிப்போனான்.

வீட்டுக்குள் நுழையும்போது இரவு கொடூர அமைதி கொண்டிருந்தது. கதவைத் தட்டியவுடன் உமா ஓடிவந்து திறந்தாள். செருப்பை உதறிவிட்டு, முகங்கழுவி சமையலறைக்குப் போனான். சாப்பாடு போட்டு வைத்துவிட்டு, வெளியே போய் எட்டிப் பார்த்துவிட்டு வந்தாள் உமா. பாட்டி திண்ணையில் இல்லை. எல்லோரும் உள்ளே தூங்குகிறார்கள்.

“என்னடா சுந்தர், அம்மாவைப் பாத்தியா?”

“ம்”

ஆறு மணி நேர பஸ் பிரயாணம் முழுவதிலும் தீர்மானம் செய் கொண்டான். உமாவிடம் சொல்லும்போது, தான் அழுது விடக்கூடாது என்று.

உமா அடிக்கடி சொல்வாள். ”எதுக்குமே, எப்பவுமே அழக்கூடாகப் சுந்து கம்பீரம்தாண்டா ஆண்பிள்ளைக்கு அழகு. இதோ என்னை எடுத்துக்க. நான் அழணும்னா எத்தனை தடவ அழுதிருக்கலாம். மூன்றாம் வகுப்பு படிக்கிறப்பவே விட்டுப்போன அம்மா, சித்தியால நின்னுபோன காலேஜ் படிப்பு, நமக்கெல்லாம் பிரியமான தாத்தா இறந்தது, இப்படியே ஒவ்வொண்ணையா நினைச்சு அழுதிட்டிருக்கலாம் எல்லாத்தையுமே நாம ‘டைஜஸ்ட்’ பண்ணித்தாண்டா ஆகணும் அடிபட்டு மரத்துப்போன பின்னால ஏத்துக்கறத விட, நாமே வலிய வந்து ஏத்துக்கப் பழகிட்டா பிரச்சனை பாதி குறைஞ்சிடும்” என்பாள்.

கள்ளமில்லாத அம்மா. அதே கம்பீரத்தில் ஒளிரும் சாரதா. எளிமையான, இனிமையான குடும்பச் சூழல் சாரதாவும், சாமிநாதனும் கூட சுந்தரை, உமாவைப்பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தது. தெரிந்து கொண்டவுடன் ‘அண்ணா ‘ என்று ஒட்டிக் கொண்டது பற்றி உமாவிடம் சொன்னான்.

அம்மாவிடம் வளர்ந்திருந்தால் உமா இன்னும் அதிக ஆளுமை உடையவளாய் ஆகியிருப்பாள் என்று நினைத்துக் கொண்டான்.

சாப்பிட முடியவில்லை. சாரதா தந்த போட்டோ, இனிப்பு ஆகியவற்றை உமாவிடம் தந்தான். பஸ் பிடித்துப்போனது, வீடு தேடி அலைந்தது ஆகியவற்றைக் கூறினான் எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்துவிட்டு உமா கேட்டாள் “சுந்து, இப்ப சொல்லுடா, அம்மாவ உனக்குப் பிடிச்சுருக்கா, இல்லியா?”

“நாம பள்ளிக்கூடம் போயிட்டதாலதான் அம்மா சாரதாவ மட்டும் கூப்பிட்டுக் கொண்டு போனாங்களா. உமா?”

“ஆமாண்டா . ஏன்?”

சங்கர் சிறிது நேரம் உமாவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பேசினான்.

“எனக்கு ஒண்ணு தோணுது உமா. அன்னைக்கு நாம இரண்டு பேரும்கூட பள்ளிக்கூடம் போகாம இருந்திருக்கலாம்!” சுந்தர் உடைந்துவிடாமல் திடமாய்ச் சொல்லி முடித்ததும் வழக்கத்திற்கு மாறாக, உமா சுந்தரின் மடியில் முகம் புதைத்து நெடுநேரம் விம்மி விம்மி அழுதாள்.

*

நன்றி : ஷாஜஹான், மாதவராஜ், சென்ஷி

தொடர்புடைய பதிவுகள் :

தோழர் ஷாஜஹான் உரை

பேச்சும், எழுத்தும் வேறு வேறாய்…. – மாதவராஜ்
காட்டாறு – umakanishkar