கடற்காகமும் காயல் சுபுஹானும்

’கனவுப் பிரியன்’ முஹம்மது யூசுப்-ன் இரண்டாம் நாவலான கடற்காகம் பற்றி நண்பர் அ.மு.நெருடா மிகச்சிறப்பாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார் . பிரியத்திற்குரிய நூருல் அமீன்பாய் உள்பட பலரும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எல்லாவற்றையும் தொகுத்து அதையே மூன்றாவது நாவலாகக் கொண்டுவரும் திட்டம் தம்பி யூசுபிற்கு உண்டு என்று நன்றாக அறிவேன். அது இருக்கட்டும், இப்போது பிரபல புகைப்படக் கலைஞர் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களின் நிக்கான் பார்வையை இங்கே பகிர்கிறேன். நன்றி. – AB

*

“நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்” –(21: 30) அல் குர் ஆன்…

கடற்காகம் முன்னுரையில் இப்படித்தான் தொடங்குகிறார் முஹம்மது யூசுப் .
எதோ தண்ணீர் பிரச்சனையை தான் எழுதி இருப்பார் என நினைத்தேன் .

டெல்மாதீவு அபுதாபிக்கு சொந்தமானது தானே ? ஆமாண்ணே முன்னே அது ஈரானை சேர்ந்து இருந்திச்சி .. அதை பற்றியும் எழுதி இருக்கேன்

ஈரானில் கிருஸ்துவர்கள் இருக்காங்களா? ஆமா அதை பற்றியும் எழுதி இருக்கேன் ,

MSF அமைப்பு அப்படின்னா என்ன ? ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்

Man Made Disaster அப்படின்னா? ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்.

இப்படி நான் எதைக் கேட்டாலும் ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்னுதான் கடந்த எட்டு மாசமா சொல்லிகிட்டே இருந்தார். எதை எங்கே கோர்க்கப்போறார்.புரியாமல் மண்டையை பிச்சிகிட்டு இருந்தேன்.

கடற்காகம் கடல் பற்றி சொல்கிறது,கடலாடிகள் பற்றி சொல்கிறது,கரைமடிகள் பற்றி சொல்கிறது,கபட நாடகம் பற்றிச் சொல்கிறது, காதல் சொல்கிறது .காமம் சொல்கின்றது.கவிதை சொல்கிறது ,திருட்டு பற்றி சொல்கின்றது, திருந்தச் சொல்கிறது, சரித்திரம் சொல்கின்றது, ,நினைவுகளை சொல்கின்றது,மருத்துவம் சொல்கிறது .மருத்துவர் ,மருத்துவ உபகரணங்கள் பற்றி சொல்கிறது. யுத்தம் சொல்கிறது,பறவைகளின் இதமான சத்தமும் சொல்கிறது, . மரணம் ,ஜனனம் சொல்கிறது,சூது ,சூன்யம் , அழகியல் ,கோபம்,தாபம்.பரிவு,பாசம் நேசம் ,வெட்கம்,துக்கம்,மதம் ,மார்க்கம் கூடவே விரசம் கலக்காத சரசமும் சொல்கிறது .

இணையம் புத்தன் தருவையில் தொடங்கி அபுதாபி,டெல்மா தீவு ,பெசன்ட் நகர் கடற்க்கரை ,தூத்துக்குடி,ராமநாதபுரம் ,கீழக்கரை,பெரியப் பட்டினம் ,ஈரான் ,பாலஸ்தீன் என உலகெல்லாம் பறந்து வரலாற்றினையும் உலக அரசியல் பற்றியும் சொல்கிறது இறுதியாக சிரியாவின் அலீப்போ நகரின் Al Quds மருத்துவமனையில் “இவங்க எல்லாம் ஏன் முஸ்லீமா பிறந்தாங்க சத்யா?.முஸ்லீமா பெறக்குறது என்ன அவ்வளவு குற்றமா? இல்லே இந்த மண்ணுலே பெட்ரோல் கிடைகிறது இவுங்க செஞ்ச தப்பா….? என்று நம்முள் இறங்குகிறது .

தாரிக்,சத்யா,அய்டா,முவாசின்,சமீரா,மர்வான்,செல்வராஜ்,அன்வர் ராஜா ,சுல்தானா,அலவிக்குட்டி , காசர்கோடு ஹமீது,டேனி,எஸ்தர் என மறக்க முடியாத பாத்திரங்கள்.

ஒரு சிறிய தீவில் நடக்கும் சம்பவங்களில் ஒருவருக்கொருவர் பேசிகொண்டிருக்கும் போதே சுவையாக உலக அரசியல் சொல்கிறார். ஷியா பிரிவு எப்படி தோன்றியது என்பதையும்,இஸ்லாமியர்களை பிரிக்க நடந்த ( நடந்து கொண்டிருக்கும்) சதிகள் பற்றியும் ,Haarp எனும் அதி நவீன வானிலை ஆயுதம் பற்றியும்.

சவக்காடு ஹமீது தாரிக்கிடம் “நபி நூஹுவோட காலத்துலே வந்த பிரளயம் பத்தி அல் குர் ஆன் பேசுது. இந்துக்களின் யுகத்தில் கலியுகம் என்பது நூஹு நபியின் வெள்ளப்பிரளய காலத்தில் துவங்குது.அவர்கள் அதை ஜலப் பிரளயவான் நீர் பெருக்குன்னு குறிப்பிடுவாங்க.’மனு’ மனித குலத்தின் வழிகாட்டியாகவும் , நிகரற்றவராகவும் இருந்தார் .அனைத்துமனித குலத்தின் தந்தையாகவும், மனித ஜீவராசிகளின் வாழ்கையை முறைப்படுத்தும் சட்டங்களைத் தோற்றுவிப்பவாரகவும் இருந்தார் (ரிக்வேதம் 1-13-4 ) ன்னு அவுங்க வேதம் கூறுது “மனித இனம் முழுமையாக அழிந்து போய் விட்டது . ஏழு பிரபலமான ரிஷிகளளாகிய வணக்கஸ்தர்களை தவிர எழு ரிஷிகளும் ஒரு கப்பலில் ஏறி உலகளாவிய அந்த அழிவில் இருந்து தப்பினர் .விஷ்ணு அக்கப்பலை செலுத்தினார் .இன்னொரு மகத்தான மனிதரும் அந்த அழிவில் இருந்து தப்பித்தார் அவர் “மனு”வாகும்ன்னு மார்க்கண்டேய புராணத்திலும் இந்த சம்பவம் வருது “ என சொல்லும் போது பிரான்ஸ் நாட்டின் அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த படகும் மனிதர்களுமே நினைவுக்கு வந்தார்கள்.

தாரிக்கும் ஜானுவும் கொஞ்சி குலவும் நேரம்
“துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்”
என்ற பாடல் நினைவுக்கு வந்தது .

டேனியல், எஸ்தர் இடையே நடக்கும் சம்பாஷனைகளில் வரிகளில் யூசுபை மறந்தேன் சுஜாதா நினைவுக்கு வந்தார் .சிறந்த சொல்லாடல் .

எத்தனை முறை முயன்றாலும் தவிர்க்க இயலாத் நிழல் போல் எப்போதும் தொடரும்,கடலில் அழிந்து போன நகரின் மிச்சம் போன்றது நினைவின் வடுக்கள். என்பதைப்போல அருமையான நிறைய உவமானங்கள் . செறிவான

நடை . நிறைந்த தகவல்களோடு சிறப்பாய் நகர்கிறது நாவல் .

யோவ் ..எங்கே போய் இவ்வளவு தகவல் சேகரித்தீர். வாழ்த்துக்கள் நண்பா .

என் போன்ற தகவல் கொண்டாடிகளுக்கு பெரும் பொக்கிஷம். தமிழ் இலக்கிய உலகத்தில் சிறப்பான இடம் இந்த ”கடற்காகம்” நாவலுக்கு உண்டு . மீண்டும் வாழ்த்துக்கள் முஹம்மது யூசுப் .

என்றென்றும் அன்புடன்

சுபான்

*

தொடர்புடைய காணொளி : யூசுப் ஏற்புரை (@ ஷார்ஜா புத்தகத் திருவிழா – 2019)

மாடசாமி மைனி (சிறுகதை) – முஹம்மது யூசுப்

‘ஒட்டக மனிதர்கள்’ சிறுகதைத் தொகுதியில் இருந்து பிரபல நாவலாசிரியர் முஹம்மது யூசுப் (அப்படித்தான் போடச் சொன்னார்!) எழுதிய சிறந்த சிறுகதை, நன்றியுடன்…

*

மாடசாமி மைனி – முஹம்மது யூசுப்

அண்ணா நகரில் இலவச தையல் மெஷின் வழங்கும் விழா நடந்த நான்காவது நாள், அறிமுகம் இல்லாத டூ வீலர் சீட் கவர் தைக்கும் கடைக்காரனை அழைத்துக் கொண்டு, நண்பன் கூறினான் என்ற ஒரே காரணத்திற்காக டூவிபுரம் சென்றான் ரவி.

“ அது வேற தையல் மெஷின், சீட் கவர் தைக்கிறது வேற தையல் மெஷின், தெரியும்ல “ என்றான் சீட் கவர் தைக்கும் கடைக்காரன் வண்டியை ஓட்டியபடி கூற

“ தெரியும் தெரியும், விக்கப்போற மாடசாமி யாருன்னு எனக்கே தெரியாது. மொதல்ல அவனைப் போய் பார்ப்போம். அப்புறமா முடிவு பண்ணலாம். அவன் என்ன தையல் மெஷின் விக்கிறதா சொன்னான்னு “

“ இல்ல, எனக்கு நிறைய வேலை கிடக்குது. எல்லாத்தையும் விட்டுட்டு வாரேன் “

“ நாங்க மட்டும் என்ன ஊர் சுத்திட்டா திரியுறோம். ஃப்ரண்டு போன் செஞ்சு மாடசாமிக்கு ஹெல்ப் பண்ணுன்னு சொன்னான். அதான் உங்களை கூட்டிட்டு போறேன். உங்களுக்கு இஷ்டமில்லைன்னா வேற ஆளை கூட்டிட்டு போவேன் “ என்று ரவி கொஞ்சம் காட்டமாக கூறியதும் எதிராளியிடம் இருந்து சத்தத்தைக் காணோம்.

மாடசாமி என்பவரிடம் இலவசமாக கிடைத்த இரண்டு புதிய சீட் கவர் தைக்க உதவும் தையல் மெஷின் இருப்பதாகவும் அதை விற்று தந்தால் பெரிய உதவியாக இருக்கும் என கூறியதாக ரவியின் நண்பன் கூற “ சரி உதவி செய்யலாமே “ என்ற நோக்கில் பாத்திமா சீட்கவர் வொர்க்ஸ் சாஜஹானை அழைத்துக் கொண்டு மாடசாமியைத் தேடி டூவிபுரம் எட்டாவது தெருவில் நுழைந்து, கண்ணில் பட்ட பலசரக்கு கடை வாசலில் வண்டியை நிறுத்தி

“ இங்க தையல்காரர் மாடசாமி வீடு எங்க இருக்கு “ என கேட்க

“ இங்க இருந்து அஞ்சாவது வீடு “ என்றார் கத்திரிக்காயை தராசில் இட்ட வண்ணம் கடைக்காரர்.

அஞ்சாவது வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி வாசல் கதவருகில்  சென்று காலிங் பெல்லைத் தேடியபடி “ மாடசாமி அண்ணே மாடசாமி அண்ணே “ என்றான் ரவி சற்று சத்தமாக

உள்ளே இருந்து ஒரு பெண் வந்தார். “ என்ன வேணும் “

“ மாடசாமி அண்ணன பாக்கணும் “

“ நான் தான் மாடசாமி சொல்லுங்க “ என்றார் அந்த பெண்.

திரு திருவென முழித்து விட்டு “ தையல் மெஷின் விக்கனும்ன்னு கணேஷ் கிட்ட சொன்னதா கணேஷ் சொன்னான். அதான் ஆளை கூட்டிட்டு வந்தேன். இவரு சாஜஹான், ரெக்சீன் சீட் கடை வச்சிருக்கார் “

“ ஒ   நான் தான் சொன்னேன், கணேஷ்க்கு  நீங்க என்ன வேணும் “

“ என் ஃபிரண்டு “

“ உள்ளே வாங்க “ என்றவர் வெளியே வந்து மெயின் கேட்டை திறந்து அழைத்துச் சென்றார் மாடசாமி என்ற அந்த பெண்.

வீட்டின் உள்ளே முதல் அறையில் நான்கைந்து பெண்கள் அமர்ந்து போலியோ சூ  செய்து கொண்டிருந்தார்கள். சாம்பிளுக்கு சிறிதும் பெரிதுமாக போலியோ சூ நான்கைந்து ஓரமாக செய்து வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த அறையின் உள்ளே கவர் வைத்து மூடி இருந்த மெஷினை பிரித்துக் காண்பித்தார். மெஷினை சுற்றுலாவுக்கு வந்தவன் போல வளைத்து வளைத்து பார்த்து விட்டு “என்ன விலை “ என்றான் சாஜஹான்

“ நீங்களே சொல்லுங்க. புது மெஷின் வாரண்டி கார்டு எல்லாம் இருக்கு  “ என்றாள்(!) மாடசாமி

“ ஆறாயிரம் ரூபான்னா ரெண்டையும் எடுத்துக்கிறேன் “

“ ஆறாயிரமா. அநியாயத்துக்கு இப்படி கேக்குற “ இடைமறித்தான் ரவி.

“ அவுங்களே சும்மா இருக்காங்க. நீ ஏன் துள்ளுற. ஓசியில இலவசமாக கிடைச்சது தானே “ என்றான் அவன் சற்று காட்டமாக

“ அதல்லாம் நீ சொல்ல வேண்டாம். புதுசு பனிரெண்டாயிரம் ரூபா, கொஞ்சமும் கூசாம பாதி விலைக்கு கேக்குற. அவுங்க ஏதோ அவசரம்ன்னு தான் மெஷின் விக்கிறாங்க “ என்றான்

“ வர்றப்போ ஆளே தெரியாதுன்னு சொன்ன, இப்போ அவசரத்துக்கு விக்கிறாங்கன்னு எல்லாம் பேசுற. சரி உனக்கு கமிஷன் எல்லாம் தர முடியாது, பத்தாயிரம்ன்னா எடுத்துக்கிறேன் “

“ கமிஷனா, நான் உன்கிட்ட கேக்கவே இல்லையே, என்னங்க பத்தாயிரம்ன்னா சம்மதமா “ என்று கேட்க

நாங்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மாடசாமி “ வண்டி வச்சி நீங்க தான் எடுத்திட்டு போகனும். வண்டி கூலி எல்லாம் தரமாட்டேன். சம்மதம்ன்னா முழு பணத்தை கொடுத்திட்டு எடுத்திட்டுப் போங்க “

“ சரி நீ இங்க நில்லு. ATM ல பணத்தை எடுத்திட்டு, வண்டி புடிச்சிட்டு வாரேன் “ என்று சாஜஹான் கிளம்ப “ உக்காருங்க “ என்று இருக்கையை காட்டி மாடசாமி உள்ளே சென்று விட, ஆவல் வந்தவனாக வீட்டின் முதல் அறைக்கு மீண்டும் வந்து போலியோ சூ செய்வதை வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

சற்று நேரத்தில் உள்ளே இருந்து வந்த மாடசாமி “ இந்தாங்க. ஐநூறு ரூபா. இவ்வளவு தான் என்னால தர முடியும் “ என பணத்தை நீட்டினாள்.

“ எதுக்கு “ என்றான் ஆச்சர்யத்துடன்

“ மிஷின் விக்க ஆள் கூட்டிட்டு வந்ததுக்கு கமிஷன் “

“ ஆளாளுக்கு கமிஷன் கமிஷன் ன்னு கொல்லுறீங்களே, நான் கணேஷ் சொன்னான்னு தான் வந்தேன். பணம் எல்லாம் வேணாம் “

ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துவிட்டு “ நிஜமாவே வேணாமா “

“ வேற ஒரு உதவி வேணும் “

“ அதானே பாத்தேன், போலியோ சூ பிரீயா வேணும்ன்னு சொல்லிராதீங்க. அது விலை ஜாஸ்தி “

“ அதெல்லாம் இல்ல, உங்க பேரு உண்மையிலே மாடசாமியா. அதை சொன்னா போதும் “

சற்று அமைதி நிலவியது.

“ எங்க அப்பாவுக்கு நான் அஞ்சாவது பொண்ணு. பையன் பொறப்பான்னு எதிர் பார்த்தார். இல்லைன்னு தெரிஞ்சதும் மாடசாமின்னு குல தெய்வம் பேரை வச்சிட்டார் “

“ நெசமாவா “

தலை ஆட்டி சுவற்றில் இருந்த ஒரு போட்டோவை காட்ட, அதில் ஒரு சாமி படத்தின் கீழ் “ பன்னி மாடசாமி துணை “ என்று எழுதி இருந்தது.

“ நல்ல வேளை முழு பேரையும் வைக்கல “ என்றான் மெதுவான குரலில்

“ என் முழு பேரும் அது தான் “ என்றதும்

“ ஆத்தி…….” என்ற வண்ணம் ஜெர்க் ஆகி நிற்கவும் வெளியே சென்றிருந்த சாஜஹான் வண்டி உடன் வரவும் சரியாக இருந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு சர்ஜிகல் கடையில் வைத்து திருநெல்வேலியில் பிசியோதெரபி சாதனங்கள் செய்யும் நபர் ஒருவர் போலியோ சூ நான்கைந்து வேண்டும் எனக் கூற அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் மாடசாமியின் வீடு சென்று அங்கே அவரை அறிமுகம் செய்து விட்டு வந்தான்.

இரண்டு மாதம் கழித்து மாலை நேரத்தில் தெற்கு புது தெரு பஜாரில் சுடிதாரில் சைக்கிளில் கடந்து சென்ற மாடசாமியை நிறுத்தி “ என்ன இந்த பக்கம், டீ குடிக்கீங்களா “ என கேட்க அவளும் சம்மதித்தாள்.

“ இங்க உளுந்த வடை நல்லா இருக்கும். சாப்பிடுறீங்களா “

அவள் தலையாட்ட அவனுக்கும் சேர்த்து இரண்டு தட்டு எடுத்து உளுந்தவடை சட்னி சகிதம் டீக்கடையில் ஓரம் கட்டினார்கள்.

அவள் மாடசாமி என்ற பெயருக்கு ஏற்றார் போல சுற்றிலும் ஆண்களாக இருக்கிறார்களே என்ற எண்ணம் எல்லாம் இன்றி சர்வ சாதாரணமாக உளுந்தவடையை வெளுத்து கட்டி டீ குடித்து விட்டு “ உங்க மொபைல் நம்பர் கொடுங்க “ என்றாள்

ஒரு பெண் கேட்டாள், மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அவன் வளர்க்கப் படவில்லை என்பதால் வேக வேகமாக நம்பரை கூறினான். சைக்கிளில் ஏறி கிளம்பும் முன் “ நீங்க கூட்டிட்டு வந்த அந்த திருநெல்வேலி ஆள் அன்னைக்கு பத்து போலியோ சூ வாங்கிட்டு போனார். ரொம்ப தேங்க்ஸ். பார்ப்போம் பை  “ என்ற வண்ணம் செல்ல ரவி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மாடசாமி நெடு நெடுவென வளர்ந்திருந்தாள். சுடிதார் அவளுக்கு அவ்வளவு அழகாக இல்லை. அவள் உயரத்திற்கு அது வாசலில் தொங்கும் திரைச்சீலை போல இருந்தது. மாநிறம், தெற்றுப்பல் மூன்றும் அவள் வாயை எப்பொழுதும் மூட விடாமல் தடுத்த வண்ணம் இருந்தது.

என்ன வயதிருக்கும் தெரியாது..?, கல்யாணம் ஆகி விட்டதா தெரியாது…?,  என்ன படித்திருப்பாள் தெரியாது..? மாடசாமி என பெயர் வைத்துக் கொண்டு படிக்கும் காலங்களில் என்னென்ன அவஸ்தைகளை சந்தித்திருப்பாள் நிறைய எண்ணங்கள் தொடர்ச்சியாக படர படர அவள் தொலைவில் தெரு வளைவை தாண்டி கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் கழித்து இரவு எட்டு மணிக்கு போன் வந்தது மாடசாமியிடம் இருந்து “ வீட்டுக்கு வா “ என்று.

என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு அவள் வீடு சென்றான்.

வீட்டின் முன் அறையில், தோல் வெட்டும் நீண்ட டேபிள் மீது புதிய சூ இருந்தது.

“ இந்தா போட்டு பாரு “

“ எனக்கா “

“ ஆமா உனக்குத்தான் “

ஆசை ஆசையாய் வாங்கி அணிந்து பார்த்தான். சர்வ கச்சிதமாய் இருந்தது. சரியான அளவுடன் ஜாக்கெட் தைத்த டெய்லரை பார்ப்பது போல ஆச்சர்யத்துடன் அவளை பார்த்து “ எப்படி என் செருப்பு அளவு கூட தெரியாம இவ்வளவு கரெக்ட்டா சூ செஞ்சிருக்கீங்க “

“ கண்ணு அளக்காததா கை அளக்க போகுது “ என்றாள் தொழில் சுத்தத்துடன்.

“ எவ்வளவு “

“ ஏன் நீதான் எல்லாம் ப்ரீயா செய்வியா, நாங்க செய்ய மாட்டோமா “ என்றாள்.

அதன் பின் தீபாவளி, பொங்கல், புதுவருடம், பிறந்த நாள், இடை இடையே ரோட்டில் காணும் போது என அவர்கள் டீ குடிக்க, ஐஸ் கிரீம் திங்க என விருப்பம் போலக் காரணங்கள் தோன்றின.

பேசும் போதெல்லாம் அதிகம் வாதம் செய்தாள். ஆண்களை விட பெண்கள் எல்லா வகையிலும் உசத்தி என்றாள். முகத்தை நேருக்கு நேர் பார்த்து கணீர் குரலில் பேசினாள். ஒரு நாள் “ மெதுவா பேசுங்க “ என கூறிய ஐஸ்கிரீம் கடைக்காரனிடம் “ நாங்க ஒன்னும் மைக் போட்டு கத்தி பேசலை. மெதுவாதான் பேசிட்டு இருக்கோம் “ என்று சண்டைக்குச் சென்றாள். அன்றைய தினம் அவன் கம்மியாய் அடிவாங்கியது அவன் பாக்கியம். யாரைக்கண்டும் அவளிடம் பயம் இல்லை.

உழைப்பாளி அவளிடம் ஒரு பெண்ணுக்கான நளினம் எல்லாம் துளியும் இல்லை. அவள் தலையில் குடும்பம் நடத்தும் பொறுப்பும், பணம் தரும் தொழிலும் ஒப்படைக்கப் பட்டதால் அவள் தேவைகளை முன்னோக்கியே இருந்தாள். அதை தடுக்கும் எல்லா தடைகளையும் தகர்த்தெறியும் வெறிபிடித்த முரட்டுத்தனம் இயற்கையாகவே அவள் மீது படிந்திருந்தது.

திடீர் என ஒருநாள் ரோட்டில் கண்டு எஸ்தர் என்ற பெயரில் திருமண பத்திரிகை நீட்டினாள். “ இது யாரு எஸ்தர் “

“ நான் தான் “

“ இது எப்போ “

“ அதெல்லாம் கேக்காத, என்ன இழவோ செய்றாங்க எங்க வீட்டுல, கல்யாணத்துக்கு வந்திரு “

சரி என்று கூறி கல்யாணத்திற்கு புதியம்புத்தூர் சென்றிருந்தான். முதலில் கோயிலில் வைத்து தாலி கட்டினார்கள். பின் வீட்டில் வைத்து பாதர் இன்னொரு முறை திருமணம் செய்து வைத்தார். பந்தி இலையில் ஓடுவது சாம்பாரா ரசமா என்ற கவலையில், நடந்து எல்லாம் ரவியின் நினைவில் நில்லாமல் போனது.

கணவர் குடித்திருக்க மகனின் முதல் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி அழைத்திருந்தாள்.

பிள்ளை பெற்ற வகைக்கு புசு புசுவென சற்று எடை கூடி இருந்தாள் மாடசாமி என்ற எஸ்தர்.

இது வரை வாங்க போங்க என்று அவளை அழைத்து வந்த ரவி வேறு வழியின்றி கூட்டத்தின் நடுவில் “ மைனி ( அண்ணி ) “ என அழைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டான்.

சேலையில் வளைய வந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரவியை சட்டென அவள் திரும்பி பார்க்க அவன் பார்வையை தரைக்குத் தாழ்த்தினான்.

பிறந்த நாளுக்கு வந்திருந்த ஆட்கள் கூட்டம் குறைந்ததும் பாயாசம் கொண்டு வந்து கையில் திணித்து விட்டு “ என்ன, அப்படி வளைச்சு வளைச்சு என்னையே பார்த்திட்டு இருந்த, என்ன விஷயம் “

“ ஒண்ணுமில்ல “ என்று குனிந்து கொண்டான்.

சிரித்தாள்

“ ஏன் சிரிக்கீங்க “

“ வெக்கப்படுற ஆம்பளைய கண்டா சிரிப்பு வராம என்ன செய்யும். சரி சொல்லு எதுக்கு என்னையே பார்த்திட்டு இருந்த “

“ ம்ம், ஆளு சதை போட்டு முன்ன விட அழகா இருக்கீங்க “

“ அட கருமம். முத்துன காய் நான், என்னை போய் ரசிச்சியாக்கும். சீக்கிரமா உனக்கு ஏத்த மாதிரி தண்டியும் தரமும் பாத்து எவளையாவது கல்யாணம் பண்ணு. வக்கட்டையா எவளையாவது கட்டுனன்னு வச்சிக்க மண்டைய பொளந்திருவேன் “  என ஆசிர்வாதம் செய்தாள் அந்த வேதக்காரி.

இரண்டு வருடம் ஆனது அவள் வாக்குத்தத்தம் பலிக்க.

ரவியுடைய திருமணத்திற்கு குழந்தையுடன் வந்திருந்த அவள் மேடையில் அவன் கையைப் பிடித்து சிறிது நேரம் பேசினாள் மாமனார் பார்வையால் ரவி மீது அம்பு விடுவதை பற்றிய கவலை இன்றி.

கிளம்பும் போது “ பிரியாணி சூப்பரா இருந்தது, ஒரு ஹெல்ப் பண்ணுவியா “

“ என்ன “

“ சாப்பாடு மிச்சம் ஆச்சுன்னு அண்டால நிரப்பி வீட்டுக்கு தூக்கிட்டு போகாம எனக்கு போன் பண்ணுனா, நான் TTC டிப்போ பக்கத்துல இருக்கிற முதியோர் இல்லத்துக்கு கொண்டு போய் கொடுத்திருவேன். இந்த மாதிரி பிரியாணி எல்லாம் அவுங்க சாப்பிட்டிருக்க மாட்டாங்க “

“ இப்போமே கொண்டு போறீங்களா “

“ நெசமாவால……கொஞ்சம் பொறு என் பிள்ளைய யார்கிட்டயாவது கொடுத்திட்டு வாரேன். டிவிஎஸ் சாம்ப்ல தான் வந்திருக்கேன். சட்டியில கொடுத்தா அப்படியே போய் டெலிவரி பண்ணிட்டு வந்திருவேன் “

“ கொஞ்சம் நில்லுங்க, மாப்ள இங்க வா. இவுங்க என்ன கேக்காங்களோ அதை கொடு. யாராவது ஏதாவது சொன்னா நான் சொன்னதாச் சொல்லு  “ என ரவி, நண்பனை கை காட்ட சந்தோசம் தாளாமல் அவனுடன் சென்று கொண்டிருந்தாள் மாடசாமி.

கிமு, கிபி போலத்தான் எல்லோர் வாழ்வும்.

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என எந்த பாகுபாடும் இன்றி பழைய நினைவுகள் எல்லாம் மறந்து நான் எங்க இருக்கேன் என்று மட்டுமே கேட்காத குறை.

திருமணத்திற்கு பின் மாடசாமி எல்லாம் ரவியின் மூளை செல்லில் இருந்து அழிக்கப்பட்ட பண்டைய வரலாற்றுச் செய்தி ஆனது.

நீண்ட காலங்கள் கழித்து மாதாகோவில் திருவிழாவில் மகனுடன் டெல்லி அப்பளம் வாங்க சென்ற இடத்தில் அவளை மீண்டும் சந்தித்தான்.

“ எல எப்படி இருக்க……..உன் பையனா இது. உன் பேர் என்னது தங்கம் “ என அவனை மடியில் வாங்கி கொஞ்ச ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் கூட்ட நெருக்கம் தாளாமல் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து சென்றார்கள்.

அவள் மடியில் எடுத்து கொஞ்சிய மகன் இப்பொழுது ஆறடி உயரம். காலம், கோடைகாலத்து ஆற்று நீர் போல நின்று நிதானமாக நிலம் படிந்து ஊர்ந்து செல்கிறது.

வருடத்திற்கு ஒரு முறையாவது ரவி இரத்த தானம் செய்து விடுவது வாடிக்கை. இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி எல்லாம் தொட்டுப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற சுய நலம் தான் காரணம்.

ஒரு ஞாயிறு காலை இரத்த தானம் செய்யலாம் என்று அந்த தனியார் மருத்துவமனை சென்றிருந்தான். வாசலில் நின்றிருந்த ஆள் “ பிளட் டொனேட் பண்ண வந்தீங்களா “

“ ஆமா “ என்றான் ஆச்சர்யத்துடன்

“ O பாசிடிவ் தான “

“ ஆமா “ என்றான் மேலும் ஆச்சர்யத்துடன்

“ வாட்ஸ் அப்ல வர்றதா சொன்ன ஆள் நீங்க தானா, உள்ள வாங்க “ என அவசரப்பட்டார்.

“ இல்ல, நான் தற்செயலா பிளட் கொடுக்கலாம்ன்னு வந்தேன் “

“ ஒரு மணிக்கு சர்ஜெரி. இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. ரெண்டு பாட்டில் பிளட் வேணும். ஒரு ஆள் கிடைச்சிட்டார். இன்னொரு ஆளைத் தேடிகிட்டு இருந்தோம். ஞாயிற்று கிழமை அதனால யாரையும் சட்டுன்னு காண்ட்டக்ட் பண்ண முடியல. வாட்ஸ் அப் எல்லா குரூப்லயும் சொல்லி, என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தோம். நல்ல வேளை நீங்களா வந்தீங்க. கொடுப்பீங்கல்ல “

“ அதுக்கு தான் வந்தேன் “ என்று கூறி இரத்தம் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்ததும்

“ சார், இவருக்கு ஜூஸ் வாங்கி கொடுங்க “ என ரவியை அழைத்துச் சென்றவர் யாரிடமோ கூற

“ சரி “ என்ற வண்ணம் ரவியை நோக்கி வந்தவரை இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போலத் தோன்றி யோசிக்க  “ அடடா இது மாடசாமி வீட்டுக்காரர் ஆச்சே “ என்று நினைவு வந்து  “ பேஷன்ட் யாரு சார் “ என்றான் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

அவருக்கு அவனை நினைவில்லை.

“ என் மனைவி தான் “ என்றார்.

“ என்ன செய்து அவுங்களுக்கு “

“ யுட்ரஸ் ரிமூவ் பண்ணுறாங்க. ஆபரேசன் தியேட்டருக்கு கூட்டிட்டு போயாச்சு  “

“ ஒ…….அப்படியா “

“ ஜூஸ் நான் போய் குடிச்சிக்கிறேன், நீங்க ஹாஸ்பிட்டல இருங்க “

“ இல்ல நீங்க இரத்தம் கொடுத்திருக்கீங்க “ என இழுத்தார்

“ இதுல என்ன இருக்கு, பரவாயில்ல உங்க மனைவி பேரு என்ன “

“ எஸ்தர் “ என்றார் அவனுடைய அந்தக் கேள்வியை விரும்பாமல்

“ அவுங்களுக்காக ஜெபம் பண்ணுங்க, நான் வாரேன் “ என்ற வண்ணம் பெறுமூச்சு விட்டபடி நிறைய சிந்தனைகளுடன் வண்டியை கிளப்பி நேராக சிரோன் ஜூஸ் பார்க் சென்று ஜன்னல் ஓர சீட் பிடித்து “ பெரிய சைஸ் மாதுளை ஜூஸ் ஒன்னு ஐஸ், சீனி போடாம “ என்று ஆர்டர் செய்து விட்டு மொபைலில் முகநூலில் வந்த நோடிபிகேசனை பார்க்கத் துவங்கினான்.

“ பொம்பளைன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா, அதெல்லாம் இல்ல ஆம்பிளைங்க எங்கள விட எந்த விதத்துல உசத்தி சொல்லு “ என்று ஒரு பெண்ணின் குரல் லேசான விளக்கு வெளிச்சத்தில் கேட்க

“ ஹலோ மெதுவா பேசுங்க “ என்றான் ஐஸ்கிரீம் கடைக்காரன்.

“ நாங்க ஒன்னும் மைக் போட்டு கத்தி பேசலை. மெதுவாதான் பேசிட்டு இருக்கோம் “ என சண்டை இழுத்தது அந்த பெண் குரல்.

*

நன்றி : முஹம்மது யூசுப்
*
தொடர்புடைய பதிவுகள் :
புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்!’ – முஹம்மது யூசுப்

“ சான் ராத் “ – கனவுப் பிரியன்

‘புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்!’ – முஹம்மது யூசுப்

சென்ற வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெற்ற ‘மணல் பூத்த காடு’ விமர்சனக் கூட்டத்தில் நாவலாசிரியர் யூசுஃபின் ஏற்புரை , முகநூலிலிருந்து நன்றியுடன்…

உலக வரைபடத்தின் மூலை முடுக்கு எல்லாம் செல்ல விருப்பமா ஒரு நூலகம் செல் – எனும் டெஸ்கார்டெஸ் அவர்களின் வாக்கியத்தோடு ஆரம்பம் செய்கிறேன்.

நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரியங்கள் கலந்த வணக்கம்.

சமகால எழுத்துலகின் ஜாம்பாவன்களாகக் கருதப்படும் ஜெயமோகன், சாரு, எஸ்.ரா போன்ற என்ற எந்த ஒருவரின் ஆதரவும், பின்புலமும் (வட்டத்திலும்) இல்லாத,

கனவுப் ப்ரியன் என்ற பெயரில் இரண்டு சிறுகதைத் தொகுப்பு எழுதி,

முஹம்மது யூசுஃப் என சமகால எழுத்துலகிற்கு அறிமுகமே இல்லாத புதுப் பெயராக மாற்றிக் கொண்ட பின்பும்,

முழுக்க இஸ்லாமிய நாடான சவூதி பற்றிப் பேசும் 445 பக்கம் கொண்ட தடிமனான இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த யாவரும் பதிப்பகத்திற்கும்,

சென்னை புத்தக கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்தில் அதிகமாக விற்ற இரண்டாவது புத்தகம் என்ற பெருமையைத் தந்த, தொடர்ந்து வாசித்து கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறியவனாக ஏற்புரையை ஆரம்பம் செய்கிறேன்.

“ லவ்லல் இக்திலாபு லஹலக்கல் உலமா “ என்கிறது அரபுப் பழமொழி.

கேள்விகள் இல்லை (கருத்து வேற்றுமை) என்றால் அங்கு அறிஞர்கள் இல்லை.

இந்த மணல் பூத்த காடு நாவலே கேள்வியில் இருந்து பிறந்தது தான். அதனால் இந்த ஏற்புரையை “ நாவலில் என்ன எழுத வேண்டும்..? / நாவலை எப்படி எழுத வேண்டும் / இந்த நாவலை ஏன் எழுத வேண்டும் என மூன்று பிரிவாக பேசலாம் என எண்ணியுள்ளேன்.
என்ன எழுத வேண்டும்

ஒரு நாள் அதிகாலை 6 மணிக்கு எனது பணி நிமித்தம் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து போன் வந்தது.

அதிகாலை ஒரு பெண்ணிடம் இருந்து போன் என்றதும் ஏதோ அவசரம் என்பதைப் புரிந்தவனாக வேகமாக போன் அட்டெண்ட் செய்தேன்.

“ என் குழந்தைக்கு சுகமில்ல, நேத்து டாக்டர்கிட்ட போய் காட்டிட்டு வந்தோம். காது வலின்னு மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்த அப்புறமும் குழந்தை அழுகிறாள் அதுவும் பயந்த மாதிரி உடம்பை உதறி திடீர் திடீர்ன்னு வீறிட்டு அழுகிறாள். ஊருக்கு போன் செய்து அம்மாவிடம் கேட்டேன். அங்க ஏதாவது பள்ளிவாசல் கூட்டிட்டு போய் ஓதி காட்டச் சொல்லு சரியாயிரும்ன்னு சொன்னாங்க. ஊருல (இந்தியால) இருக்கிற மாதிரி இந்த ஊருல ஓதிக் காட்ட எந்த பள்ளிவாசல் போகனும்னு தெரியல. எங்க போகனும் “

“ இங்க அப்படி யாரும் ஓத மாட்டாங்க பள்ளிவாசல்ல “

“ ஏன் இந்தியாலேயே ஓதுறாங்க. இது அரபு நாடு இங்க ஓத மாட்டாங்களா “

“ இல்ல “

“ அதான் ஏன், உங்களுக்கு உண்மையிலே தெரியுமா தெரியாதா “

“ உண்மையிலே ஓத மாட்டாங்க “

“ குழந்தை நைட் முழுக்கத் தூங்கல. நாங்களும் தான். பாப்பாவ பாக்க கஷ்டமா இருக்கு. வேலைக்குப் போக மனசில்ல “

“ ம்ம்….ஒன்னு செய். உன் புருசனை என்னோட ரூமுக்கு வரச் சொல் “

பத்து நிமிடத்தில் அவளது கணவன் என்னுடைய பிளாட் வந்து நின்றான்.

அவன் வண்டியில் ஏறியதும் “ எங்க போகனும் , அந்த ஆள் எங்க இருக்கார் “

“ நான் தான் அந்த ஆளு. நேரா வீட்டுக்குப் போ “

“ நீயா “

“ ஆமா”

அவள் வீடு சென்று ஒலு செய்து “ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். ஹதம்து பில்லாஹில் அலீயில் அலீம் வபி ஹக்கி ஹாத்திமி சுலைமான் இப்னு தாவுது அலைஹிஸ்ஸலாம் “ என்றபடி ஓத ஆரம்பித்தேன்.

மறுநாள் மதியம் எனது அலுவலகம் வந்த அவளின் கணவர் கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் உடன் “ உங்க கிட்ட பேசனுமே. கீழப் போய் பேசலாமா “ என்றதும் இருவரும் அருகில் இருக்கும் காபி ஷாப் சென்றோம்.
காபி வரும் முன்னே அவரது கேள்வி ஆரம்பம் ஆகி விட்டது. “ ஏன் இங்க உள்ள பள்ளிவாசல்ல ஓதுறது இல்ல “

“ அது அவுங்களின் சித்தாந்தம் “

“ அது என்ன சித்தாந்தம் “

“ வஹாபியிசத்துல இது கூடாதுன்னு சொல்லுவாங்க “

“ அது என்ன வஹாபியிசம்….? என கேள்விகளாகத் தொடுத்தவர்.

“ என்னென்னமோ எழுதுறீங்க. இதை எழுதுங்கங்க “ என்ற அந்தச் சொல், கோவில்பட்டி எழுத்தாளர் உதய சங்கர் அவர்கள் கூறிய “ இனி நீ நாவல் எழுது..? “ என்பதற்கும் “ என்ன எழுத வேண்டும் “ எனும் தேடலுக்கும் பதிலாக இருந்தது.

இனி எப்படி எழுத வேண்டும்…

“ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்று நாவல்களில் ஒரு வகைமை உண்டு. ஆர்ட் வேறு கிராப்ட் வேறு. இது இரண்டையும் ஓரளவுக்கு வாசிக்க தகுந்தாற்ப் போல சேர்த்து கொடுப்பது தான் டாகுமென்ட்ரி பிக்சன்.

ஐந்தும் ஆறும் இருந்தால் அறியாதவளும் கறி சமைப்பாள் – என்பது வட்டாரப் பழமொழி.

முதல் ஐந்து – எண்ணெய், கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, சிறுபருப்பு – தாளிப்பதற்காக, பின்னம் உள்ள ஆறு – காய்கறிக்கு காய்கறி மாறுபடும்.

1.இஸ்லாமிய வரலாறு இடங்கள்

  1. பிரிட்டனின் சதியால் உண்டான வஹாபிய அரசியல்
  2. நாத் எனும் பாடல் முறை அது வழியாக கூறும் சூஃபியிசம்
  3. வளைகுடா பற்றிய சினிமாக்கள்
  4. ஈராக், சூடான், எகிப்து, ஜோர்டான், ஏமன், குவைத், பஹ்ரைன் இத்தனை நாடுகளின் எல்கையைத் தொட்டு நிற்கும் பல்வேறு அரேபிய ஊர்கள்.
  5. சுபைதா எனும் சிறுமி மூலம் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கதைகள்.
  6. 30 வித விதமான மருத்துவக் கருவிகள்
  7. மறந்து போன கடிதப் போக்குவரத்துகள்
  8. அல் குர்ஆன், ஹதீஸ், அரபிப் பழமொழிகள்
  9. அயல்வாசிகளின் ஒரே மாதிரியான சைக்கிளிங்க் வாழ்வு முறை
  10. அனீஸ் என்பவனின் வேலை சார்ந்த பயணம்.

கிறிஸ்மஸ் ட்ரீ போல தோழப்பா எனும் ஒருவர் கூறும் வஹாபிய வரலாறு மேலை நாடுகளின் அரசியல் எனும் நேர் கம்பில் மற்ற பத்து பாகங்களையும் சின்ன சின்னதாய் கிளைக் கதைகள் கொண்டு டாக்குமென்ட்ரி ஃபிக்சன் எனும் வகைமையில் நாவல் உண்டாக்கப்பட்டது.

முன்னுரையில் “ இது நடையாடி ஒருவனின் கால்களால் எழுதப்பட்ட கதை. உங்களுக்கு பயணங்கள் விருப்பமா, தகவல் கொண்டாடியா, புதிய செய்திகளின் மீது ஆர்வமா அப்படியானால் இந்த எழுத்து உங்களுக்கானது “ என்ற அறிமுகத்துடன் “ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்ற வகையில் தான் இந்த நாவல் உள்ளது என உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

கூடவே ஒரு வீடியோ டீசர். அதிலும் ஒரு பூனை மட்டுமே வரும். மற்ற எல்லாமே இடங்கள் சார்ந்த படங்கள் தான் அந்த வீடியோவில் உண்டு. அதிலும் இது பயணம் சார்ந்த கதை என முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது.

ஆக இது கிற்ஸ்மஸ் ட்ரீ என்றுச் சொல்லித்தான் உங்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.

கிற்ஸ்மஸ் ட்ரீயை மரம் அல்ல என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.

இதுவரை நீங்கள் எப்போதும் வாசிக்கும் உங்களுக்குப் பழக்கப்பட்ட / தேடிய வேப்பமரம் அல்ல இது என்பதை வேண்டுமால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஜோர்டான் நாட்டு பெட்ரா சென்றவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா…..?

நன்றி.

நாவலின் முதல் பாகத்தில் நான் எழுதி இருக்கும் பெட்ரா பற்றிய வர்ணனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுபவர்கள் இங்கே இருக்கிறீர்களா..?

நன்றி.

நான் பெட்ராவே சென்றதில்லை. அங்கு செல்லாமலே, இதுவரை நான் பூனையை வளர்க்காமலே, நண்பன், சுபைதா என்ற பெண் குழந்தை உடன் மதின் சாலே ஒட்டக பயணம் செல்லாமலே, தோழப்பா, ஜலால் சாச்சா, ஷேக் பாய், முஜிப், சித்ரா ஸ்ரீனிவாசன் என புனைவைத் தெளித்த எனக்கு முழு நாவலையும் கதையாக எழுதுவது என்பது பெரிய காரியம் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் புனைவு எழுத நல்ல கற்பனை வளம், அழகிய மொழி கையாளுதல், சிறந்த சொற்கள் இருந்தால் போதும்.

“ டாக்கு ஃபிக்சன் “ எழுத நிறைய உழைக்கனும்.

சித்ரா எனும் கதாபாத்திரம் ஒரு நாவலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காக நிறைய தேர்வு செய்து அதிலிருந்து தபுல ராஜா என்ற தமிழ் வார்த்தை இருந்ததால் “ யே இப்னு இஹ்சான் “ நாவலைத் தேர்ந்து எடுத்து 157 பக்க பிடிஃப்பை முழுமையாக வாசித்து அந்த நாவல் பற்றிய ஒரு வரி ஒரே ஒரு வரி இந்த நாவலில் வந்துள்ளது.

இந்த நாவலுக்காக பார்த்த சினிமா, வாசித்த புத்தகங்கள், தேடிய தகவல்கள் என நாவலுக்கு உண்மையாக இருந்திருக்கிறேன்.

ஏன் இவ்வளவு மெனக்கெடனும் அதற்கான அவசியம் என்ன, என்ற கேள்வி வருகிறது. இனி, ஏன் இப்படி எழுத வேண்டும்..

இத்தனை வருட கால பாரம்பரியத் தமிழ் எழுத்துப் பரப்பில், ஆயிரகணக்கான எழுத்தாளர்கள் கொண்ட தமிழ் எழுத்துலகில் சவூதியைப் பற்றி இதுவரை மூன்று நாவல்கள் தான் வந்துள்ளன.

புன்யாமின்னின் “ ஆடு ஜீவிதம் “ அதுவும் நேரடி நாவல் கிடையாது.

ஆக, மீரான் மைதீனின் எழுதிய “ அஜ்னபி “க்குப் பின்
முஹம்மது யூசுபின் “ மணல் பூத்த காடு “ மட்டும் தான் மீதம் இருக்கு.

ஏன் யாரும் எழுதல..?

பயணக் கட்டுரை புகழ் இதயம் பேசுகிறது மணியன் உலகத்தின் பல இடங்கள் பற்றி எழுதினார்.

சாதுர்யமாக இந்த மண்ணைத் தவிர்த்து விட்டார். ஏன்..?

தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளில் ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரேபியா அரசு உத்தரவு – என்ற பெயரில் போட்டோவுடன் கூடிய செய்தி வந்து விடுகிறது.

எங்க நடந்துச்சு. அது தெரியல ஆனா இன்னும் இருக்கு பாஸ் – அப்படியா நீங்க பாத்திருக்கீங்களா -இல்ல அங்க ஒருத்தர் சொன்னார்…… இது ஏன் நிகழ்த்தப்படுகிறது ஆதாரம் இல்லாமலே.

விஸ்வரூபம் படத்தில் கமலஹாசன் படத்தின் இறுதியில் வில்லனின் மகனை படிக்க அனுப்பிவிட்டதாகக் கூறுவார்.

அதாவது முட்டாத் துலுக்கங்களா போய் படிங்க என்பார் தீவிரவாதத்தைத் தடுக்க அவதரித்த ISS எனும் உளவுப்பிரிவின் MI 5 க்கு உதவும் இந்திய உளவுத் துறை அதிகாரி.

பலரூபங்களில் உருவாக்கப்படும் இஸ்லாமியர்கள் பற்றிய பொது கட்டமைப்பு.

நம்ம ஆளு அதுக்கும் மேல தமிழ் நாட்டுல மட்டும் 56 இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கு.

நோன்பு காலம் வரப்போகிறது 8 ரகாஅத் 20 ரகாஅத்-ன்னு அடிச்சிக்குவான்.

“ ஹுப்புல் வதன் மினல் ஈமான் “ – ன்னு நபிகள் பெருமான் சொல்லி இருக்காங்க. அதாவது சொந்த நாட்டை நேசிப்பது ஈமானைப் போன்றது. ஈமான் என்பது உயிருக்குச் சமமானது.

அரசியல் கட்சி வரும் போகும். சொந்த நாட்டின் மீது அக்கறை இல்லையா பற்று வரலையா போய் சாவு உன்ன யாரு உயிரோட இருக்கச் சொன்னாங்க என்பது தான் அந்த வாக்கியத்தின் கொச்சை மொழி.

நீண்ட வருடங்களுக்குப் பின் RSS ஊர்வலம் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்ததும் நடந்தது. நினைவிருக்கலாம் பலருக்கும். RSS ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க என்று கேட்டதற்கு அதே நாளில் தாம்பரத்தில் ஓர் இஸ்லாமிய இயக்கம் மாநாடு நடத்த அனுமதி வழங்கியதை காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

நாகர் கோவிலில் பொன்னார் எந்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் நிற்கிறார். மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் பெரும்பான்மை மக்களை கோபத்திற்கு ஆளாக்குது

கோவையில் பாருகை வெட்டியது யார். போலிஸ் ரெக்கார்ட்களின் அதிக இஸ்லாமிய பெயர்கள் சேர்ந்தது புட்ற்றீசல் போல புதிய புதிய இயக்கங்கள் வந்த பின் தான்.

டிசம்பர் 6 ஊர் முழுக்க சுவர் விளம்பரம் பாபரி மஸ்ஜிதை மீட்போம்ன்னு. பெருநாள் என்றும் பாராமல் அன்றும் கூட கருப்பு உடை அணியும் இஸ்லாமிய ஒரு கூட்டம். ஒவ்வொரு கோயிலிலும் போலிஸ் பந்தோபஸ்து. அதை காரணம் காட்டி கோயில் வரும் பக்தர்களை பரிசோதிக்கும் காவல்துறை. ஏன் என்று கேட்டால் கிடைக்கும் குண்டு வைத்துவிடுவார்கள் என்ற பதில். எரிச்சல் வருமா வராதா கோயில் வந்தவனுக்கு.

பிஜேபி எப்படி ராமர் கோவிலை கட்டாதோ அதை மாதிரி தான் இதுவும்.

இஸ்லாமிய புதிய புதிய இயக்கங்கள் பெருநாளின் நாட்களை ( ரமலான் 4 நாள் வேறு வேறு நாட்களில் கொண்டாடுகின்றன) அதீகரிப்பதில் மக்களை பிளவு படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

சிப்பாய் கலகம் தொட்டு இன்றைய வினாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் வரை இந்து- முஸ்லீம் மட்டும் சண்டை போட்டபடி உள்ளார்கள். எங்கே இவர்கள் ஒற்றுமை ஆகிவிடுவார்களோ என்று யாருக்கோ பயம்.

யார் அந்த யாருக்கோ அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்ன என்பதை இந்த நாவலில் சொல்ல முயற்சித்து உள்ளேன்.

சென்ற வாரம் கூட முகனூலில் சண்டையில் நிஷா மன்சூர் கமேண்டில் யூசுஃப் மணல் பூத்த காட்டில் விரிவாக எழுதி உள்ளார் வாசிக்கவும்ன்னு சொல்லி இருந்தார்.

ஆக, என்னோட வேலை நான் செய்து விட்டதாகத் தான் கருதுகிறேன்.

ஊடகத்தின் “ நுண்ணிய அரசியல் கட்டமைப்பு “ வழியாக / வன்முறை வளர்த்தெடுக்க நினைக்கும் இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக இந்த நூலின் தரவுகளை தாராளமாக நீங்கள் முன் வைக்கலாம். அதில் அதற்கான தகவல்கள் உள்ளன.

வீட்டு கல்யாணம், வியாதி, படிப்பு, நடுத்தர மக்களின் தேவையை நிறைய பூர்த்தி செய்வது இந்த வளைகுடா மண் தான். தைரியமா போ அந்த மண்ணுக்கு – அப்படின்னு நம்பிக்கை கொடுக்கிறது இந்த நாவல்

அதுக்காக இவ்வளவு தகவல் தேவையா அப்படின்னு நிறைய பேர் கேட்கிறார்கள்.

நண்பர் இங்கே குறிப்பிட்டார் “ 23 F “ சீட்டில் அமர்ந்திருந்தான். அப்படின்னு இருக்கு. பிளைட்டில் இருந்தான்னு சொன்னா போதாதா 23 F வரைக்கும் எழுதனுமா என்று.

“ A-B-C——D-E-F ” F ன்னா என்ன அர்த்தம் ஜன்னலோர சீட். ஜன்னலோர சீட்ட யார் விரும்புவா பயணப்படுபவன் தான்.

ஏர் போர்ட் உள்ளே நுழைஞ்சதும் போர்டிங்கில் உள்ளவன் டிக்கெட் தருபவன் எதிரே நிற்பவனின் முகபாவத்தை வைத்தே முடிவு செய்து விடுவான். “ இந்த ஆளு மொத தடவையா பாரின் செல்கிறான் இவனுக்கு ஒன்னும் தெரியாது. கடைசியில உள்ள வரிசையில் சீட் புக் செய்தால் போதும் “ என்று.

அனீஸ் போன்ற இதுவரை வெளி நாடு செல்லாத பயந்தாங்கொள்ளிக்கு ஜன்னலோர சீட் எனும் பயணம் விதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அவன் விரும்பி பயணம் செய்யவில்லை. கடன் எனும் நிர்பந்தம் அவனை தனியாக அந்த நாடு முழுக்க பயணிக்க வைக்கிறது.

உங்களுக்குத் தகவலாக தெரிவதை சற்று உள்வாங்கி உற்று நோக்குங்கள் அதன் பின்னால் ஒரு கதை இருக்கும்

வாசகன் போலவே அவனும் புதிது புதிதாக ஒவ்வொரு செய்தியும் தகவலும் கேட்டு பார்த்து படித்து அறிந்தபடி கடந்து செல்கிறான்.

அவனுக்குள்ளும் தோழப்பா சொல்வது சரிதானா என்ற கேள்வி எழுந்தபடி உள்ளது.

கேள்விகள் தொடர்ந்தபடி உள்ளன. தகவல்களும் தான்.

புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம். எங்க போகப் போது.

இப்போதைய சமூகத்தின் தேவை நல்லிணக்கம்.

நன்றி வணக்கம்.

**

தொடர்புடைய பதிவு :
“ சான் ராத் ” – கனவுப் பிரியன்