கஸல் – 04
பாடியவர் குலாம் அலி
பாடலாரிரியர்: மஸ்ரூர் அன்வர்
குலாம் அலியோடு எங்களுக்கான உறவு ரொம்ப அலாதியானது. இவர் குரல் ஜக்ஜித் சிங் மாதிரியான கம்பீரக்குரல் அல்ல. பங்கஜ் உதாஸ் மாதிரியான வெள்ளியைச் சுண்டின மாதிரி கணீர்க்குரலல்ல. இவர் ஒரு தனி ரகம். இப்படித்தான் பாடுவார் என்று இவரைப்பற்றிச் சொல்லிவிடவே முடியாது.
எல்பி ரெகார்டில் வேறு வழியில்லாமல் ஒரு வட்டத்துக்குள் பாடியிருப்பார். ஆனால் கச்சேரி என்று வந்துவிட்டால் இவர் அவிழ்த்துவிட்ட காளை மாதிரி. ஒரே பாட்டுதான். ஆனால் கச்சேரிக்குக் கச்சேரி இவர் அதில் செய்யும் நகாசு வேலைகள், தாவல்கள் அற்புதமானவை. ஆன்மாவை நெகிழ வைப்பவை.
அடிப்படை மெட்டு அப்படியே இருக்கும். ஆனால் இவர் அதில் சும்மா சிலம்பமெடுத்து விளையாடுவார். வேண்டுமானல் ’ஹங்காமா ஹை க்யூன்’ என்ற பாடலை இரண்டு வேறுவேறு கான்சர்ட்டுகளில் இவர் பாடுவதைக் கேட்டுப்பாருங்கள். நான் சொல்வதன் உண்மை புரியும்.
குலாம் அலி என்றால் எனக்கும் ஆபிதீனுக்கும் மட்டுமல்ல, மர்ஹூம் ஜஃபருல்லாஹ் நானாவுக்கும் உயிர். நள்ளிரவில் நாகூர் நிஜாம் நானாவின் கேசட் செண்டரின் ஸ்பீக்கரில் ’ஜின்கெ ஹோண்டோன்’ என்ற குலாம் அலியின் பாடலைக்கேட்டுவிட்டு ஜஃபருல்லாஹ் நானா அழுதார். (எனக்காவது கொஞ்சம் உர்து தெரியும். உர்து என்று ஒரு மொழி இருப்பதே ஜஃபருல்லாஹ் நானாவுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது.)
அழும்படியாக அந்தப் பாட்டில் ஏதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜஃபருல்லாஹ் நானா அழுதார். நான் அப்போது உடனிருந்தேன். எனவே கஜலைப்பொறுத்தவரை அது எங்கள் மூவரின் ஆன்மாவோடு தொடர்பு கொண்டது. அதிலும் குலாம் அலி எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்.
நிகாஹ் படத்தில் வரும் ’சுப்கே சுப்கே ராத் தின்’ என்ற பாடல் உலகப்புகழ் பெற்றது. ஆனால் அதில் உண்மையான குலாம் அலியை தரிசிக்க முடியாது.
எல்பி ரெகார்டில் அவர் வாமனன். கச்சேரியில்தான் அவரது விஸ்வரூபம் தெரியும்! யாராவது விசிலடித்தால் கடுப்பாகிவிடுவார்! (அந்த லிங்க்கைத்தான் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்).
ஆள் கொஞ்சம் லொள்ளுதான்! பாகிஸ்தான்காரரான இவர் இந்தியாவுக்கு வந்தபோது ஒரு பத்திரிக்கை இவரைப் பேட்டி எடுத்தது.
இங்கே ஜக்ஜித் சிங், பங்கஜ் உதாஸ், அனூப் ஜலோட்டா போன்றோர் கஸல் பாடுகிறார்களே அவர்களைப்பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்டபோது, ‘அவர்களெல்லாம் நன்றாகத்தான் பாடுகிறார்கள். ஆனால் கஸல் என்பது வேறு’ (கஸல் அவுர் குச் சீஸ் ஹை) என்றார்! ஆனால் அப்படிச் சொல்வதற்குரிய தகுதி உள்ளவர்தான்!
ஒருமுறை முந்தயை இசைஞானியும் இன்றையை ’நெகிழ்வு’மான (’லூஸ்’ என்பதன் மேலோட்டமான தமிழாக்கம்!) இளையராஜா பவ்யமாக குலாம் அலியிடம் கேட்ட ஒரு வேண்டுகோளை (உங்களைப் புகழ்ந்து பேசவா அல்லது பாடவா என்று கேட்டிருக்கலாம்) குலாம் அலி சட்டென்று புறக்கணித்தார்! சரி பாடலுக்குள் செல்வோமா?
தொகையறா
தில் கி ச்சோட்டோன் நெ கபீ / சேன் ஸே ரெஹ்னெ ந தியா
இதயத்தின் காயங்கள் (எனை) எப்போதுமே / அமைதியில் இருக்க விடவில்லை
ஜப் ச்சலீ சர்த் ஹவா / மேனெ துஜெ யாத் கியா
எப்போதெல்லாம் குளிர்காற்று வீசியதோ / அப்போதெல்லாம் உன் நினைவு வந்தது!
இஸ்கெ ரோனா நஹீ க்யூன் தும்னெ கியா தில் பர்பாத்
நீ ஏன் (என்) இதயத்தைக்கொன்றாய் என்பதால் நான் அழவில்லை
இஸ்கா கம் ஹை கெ பஹுத் தேர் மெ பர்பாத் கியா
ரொம்ப தாமதமாகக்கொன்றிருக்கிறாய் என்பதுதான் வருத்தமே!
பல்லவி
ஹம் கொ கிஸ்கெ கம்னெ மாரா / யாருடைய துக்கம் என்னைக் கொன்றது?
எ கஹானீ பிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
கிஸ்னெ தோடா தில் ஹமாரா / யார் என் இதயத்தை உடைத்தது?
எ கஹானீ பிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
தில்கெ லுட்னே கா சபப் பூச்சோ ந சப்கே சாம்னே
இதயம் திருடப்பட்ட காரணத்தை எல்லாருக்கும் முன் வைத்துக்கேட்காதே
நாம் ஆயேகா தும்ஹாரா எ கஹானீ ஃபிர் சஹீ
உன் பெயர் வந்துவிடும், அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
நஃப்ரதோன்கி தீரு காகர் தோஸ்தோன் கி ஷெஹ்ர் மெ
நண்பர்களின் நகரத்தில் வெறுப்பின் அம்புகளை வாங்கிக்கொண்டு
ஹம்னெ கிஸ்கிஸ் கோ புகாரா / நான் யார் யாரையெல்லாமோ அழைத்தேன்
எ கஹானி ஃபிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
க்யா பதாயேன் ப்யார் கி பாஸி வஃபா கி ராஹ் மேன் / நம்பிக்கையின் பாதையில் காதல் விளையாட்டு பற்றி நான் (உனக்கு) என்ன சொல்வேன்
கோன் ஜீத்தா கோன் ஹாரா எ கஹானி ஃபிர் சஹீ / யார் வென்றார், யார் தோற்றார் அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
பாடலுக்கான இணைப்பு:
https://www.youtube.com/watch?v=VqZIkfVptHg
*
**
நன்றி : நாகூர் ரூமி