“Life is an endless prayer” – Basheer

*
Thanks : M A Rahman & Rafeeq Rasheed

“ஹர ஹர சிங்கிடி முங்கன்!” – பஷீர்

’குளச்சல்’-ன்  மொழிபெயர்ப்பு கையில் கிடைத்தபிறகு இங்கே பதிவிடுவேன். அதுவரை சிரிக்க.. :

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8962

முஹம்மது பஷீரைக் கிள்ளவேண்டும் போலிருக்கிறது…!

’பெருசு’ன்னு வெடைக்கிறாஹா புள்ளே +லெ என்னெ’ என்றதற்கு ‘சரியா அத பாக்கலெ போலக்கிது, பேயனுவ..’ என்றாள் அஸ்மா. என் பிறந்த தேதியை (13/3/1958) சொல்கிறாளாம் . அஸ்மாவும் ஆபிதீனும் இணைந்தால் ஆபாசம்தான். பஷீரும் ஃபாபியும் இணைந்தாலோ பரிகாசம். சுத்த வெஜிடேரியன்.  றெக்கை கட்டிப் பறக்கிறது பஷீரின் இந்த குறுநாவலில். ‘திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது. அதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப் பார்க்கலாம்’ என்று ஆரம்பிக்கிறார் தலைவர். எல்லா ஊரிலும் இதே கதைதான் போலிருக்கிறது [கண்டிப்பாக இலங்கையில் 🙂 ] இந்தக் கதையை நம்ம சென்ஷிக்கு சிபாரிசு செய்தது யார் தெரியுமா? மலையாளம் வாசிக்கத் தெரிந்த அவர் மனைவி. அவருடைய மந்திரம் நீடூழி வாழ்க!. ’சுரா’வின் மொழியாக்கம் பிடித்திருந்தது. வேறு வழியும் இல்லையே.. எல்லாத்துக்குமா சுகுமாரனை நாட இயலும்? கிடைப்பதை வைத்து கிளர்ச்சியடைவோம். கொட்டிக்கிடக்கும் lekhabooks.com-லிருந்து ‘நூற்றியொரு நாக்குகள்’ முதல் பக்கத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் (’Stop Copying the Copyrighted material!’ என்று அந்த இணையதளம் ரொம்பவே பயமுறுத்துகிறது). மீதி பகுதிகளை தயவுசெய்து அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள். மஜீத்பாய், டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியாவது   ராஜன் ராதாமணாளனாவது ரகளைக்கு என்றுமே ராஜரிஷி பஷீர்தான்.  – ஆபிதீன்

***

நூற்றியொரு நாக்குகள்

வைக்கம் முஹம்மது பஷீர்

தமிழில் : சுரா

ஓவியம் : ஜோஷ்

நூற்றியொரு நாக்குகள் என்று சொன்னால் பெண் என்று அர்த்தம். ஆதிகாலம் தொட்டே பெண்களை இப்படித்தான் அழைத்து வந்திருக்கிறார்கள். இது என்னுடைய கண்டுபிடிப்பு என்று நான் கூறவில்லை. இது எல்லா கணவர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு சமாச்சாரமே என்ற முன்னுரையுடன் நாம் மெதுவாக கதைக்குள் நுழைவோம்.

 “முதல்ல பார்த்தது நான்தான்” என்று வேண்டு மானால் இந்தக் கதைக்குப் பெயரிடலாம். ஆனால் பெயரில் என்ன இருக்கிறது? கதை நன்றாக இருந்தால் போதுமல்லவா? அதற்காக இது ஒரு நல்ல கதை என்று நானே கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. கதை ஒரு பெண்ணிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. பெண் என்றால் நூற்றியொரு நாக்கி- அதாவது என்னுடைய மனைவி!

ஒரு நாள் என்னுடைய அக்னி சாட்சியும், குழந்தைப் பருவத்தில் இருந்த என் மகளும், நானும் ஒரு விருந்து நிமித்தமாக ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தோம். கம்பீரமாக நான் முன்னால் நடந்து செல்ல, நடுவில் மகள், பிறகு என் மனைவி… நாங்கள் நடந்து சென்ற வழி மிக மிக அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அப்போதுதான் தணிந்து கொண்டிருந்தது. மனைவியும் மகளும் “சல சல”வென பேசிக் கொண்டே வந்தனர். என் காதுகளுக்குள் அவர்களின் பேச்சு எதுவுமே நுழையவில்லை. அது என்னுடைய தவறு என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது.

அதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப் பார்க்கலாம். தலையணை மந்திரம் போன்ற ஓயாத சத்தத்தின் விளைவாக இப்படியொரு காரியம் நடந்துவிட்டது. அதோடு நின்றால் பரவாயில்லை. காலப்போக்கில் நான் ஒரு ஹென்பெக்ட் கணவனாகவே மாறிவிட்டேன். ஹென்பெக்ட் கணவனாக இல்லாத ஒரு மனிதன்கூட இந்த உலகத்தில் இதுவரை பிறந்ததே இல்லை. கடவுள் ஒரு ஆணைப் படைப்பதே அவனை ஒரு ஹென்பெக்ட் கணவனாக ஆக்குவதற்குத்தான். விருந்து, திருமணம், மரணம், பிரசங்கம் போன்ற விஷயங்களுக்கு நான் பொதுவாகப் போவதில்லை. அப்படியென்றால் இந்த விருந்துக்குப் போவதை நான் பெரிதாக நினைக்கவில்லை என்று அர்த்தம். மதராஸ், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் இருந்து நான் சில நல்ல புடவைகளும், ப்ளவுஸும் மகளுக்கு சில உடுப்புகளும் கொண்டு வந்திருந்தேன். இவற்றையெல்லாம் உலகத்திற்குக் காட்ட வேண்டுமே! அதற்காக இப்படி ஒரு பயணம்!

சாதாரணமாக ஒரு கணவன் தன் மனைவியுடன் வெளியே செல்லும்போது, கணவன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பான்? எல்லாருக்குமே இது தெரிந்த விஷயம்தான். உலகத்திலேயே தோன்றிய முதல் பெண்ணைப் பற்றியோ இல்லாவிட்டால் அண்டவெளியைப் பற்றியோ இருக்கும். சரி… நான் முதல் பெண்ணைப் பற்றியும் அண்டவெளியைப் பற்றியும் சிந்தித்தேன்.

படைப்பின் ஆரம்பம்.

ஆதியில் தெய்வம் மட்டுமே இருந்தது. அதற்குப் பிறகு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போய்விட்டன. அப்படி இருக்கிறபோது தெய்வத்திற்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. உடனே சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், ஆகாயத்தையும், பூமியையும், கிரகங்களையும், அண்டவெளியையும், இன்ன பிற விஷயங்களையும் தெய்வம் படைக்கத் தொடங்கியது. நீரிலும், நிலத்திலும், ஆகாயத்திலும் வாழ்கிற- நகர்கிற உயிரினங்களை அது படைத்தது. அதற்குப் பிறகுகூட  எந்தவித பிரச்சினையும் இல்லாமலேயே எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போயின. சம்பவங்கள். இவ்வாறு நடந்து கொண்டிருக்க, தெய்வம் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து சிரித்தது.

சிரிப்பு கொஞ்சம் சத்தமாகவே வந்தது. இந்தச் சிரிப்பு உலகமெங்கும் எதிரொலித்தது. பூமியிலும் மற்ற இடங்களிலும் இருந்த உயிரினங்கள் பயந்து நடுங்கின. சம்பவம் என்னவென்றால் தெய்வம் பெண்ணைப் படைக்கப் போகிறது!

தெய்வம் முதலில் படைத்தது பெண்ணைத்தான்; ஆணை அல்ல.

சரி… நான் சொன்னது மாதிரி தெய்வம் அழகியான ஏவாளைப் படைக்கிறது. அவள்தான் உலகத்தின் முதல் பெண். அவளுக்கு நூற்றியொரு நாக்குகள். ஒரு நாக்கு வாயில். மற்ற நூறு நாக்குகளும் கழுத்தைச் சுற்றிலும் இருந்தன. இந்த ஏவாளை தெய்வம் ஏதன் தோட்டத்தில் வசிக்கச் செய்தது. இவள் எந்தவித காரணமும் இல்லாமல் சிரிப்பாள். அழுவாள். மனதிற்குத் தோன்றியபடியெல்லாம் பேசுவாள். விளைவு- மற்ற உயிரினங்களுக்கும், தெய்வத்திற்கும் இது ஒரு பெரிய தலைவலி ஆகிவிட்டது. இப்போது என்ன செய்வது? இவளை யாரிடம் பிடித்துக்கொடுப்பது?

அப்படித்தான் தெய்வம் ஆதாம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பாவப்பட்ட ஆணைப் படைக்கிறது. அவன்தான் உலகத்தின் முதல் ஆண். இவனுடைய வாயில் ஒரு சிறிய நாக்கு. கழுத்தைச் சுற்றிலும் ப்ளாங்க். ஒன்றுமே இல்லை. இந்த ஆதாமிடம் ஏவாள் தன்னுடைய நூற்றியொரு நாக்குகளைக் கொண்டும் பேசினாள். அவ்வளவுதான்- ஆதாம் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான். அவன் மயங்கிக் கிடந்த வேளையில் தெய்வம் சில மாய்மால வேலைகளால் ஏவாளின் கழுத்தைச் சுற்றிலும் இருந்த நாக்குகளை இல்லாமல் செய்யவில்லை. மாறாக, யாருக்குமே தெரியாதது மாதிரி செய்துவிட்டது. ஆதாம் கண்களைத் திறந்து பார்த்தபோது, ஏவாளின் கழுத்தில் இருந்த நூறு நாக்குகளையும் காணவில்லை.

இருந்தாலும், ஆதாமால் அதை மறக்க முடியுமா?

இந்த ஏவாளுக்கும், பாவப்பட்ட ஆதாமுக்கும் பிறந்த மக்களின், மக்களின், மக்களின் மக்கள்தாம் நாம் என்று சிந்தித்தவாறு, நான் மெதுவாகச் சிரித்தேன். அப்போது ஏவாளின் மகளின், மகளின் மகளான என்னுடைய மனைவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:

என்ன, நீங்க மட்டும் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க?”

நான் கேட்டேன்:

“ஒரு கணவன் இலேசா சிரிக்கக்கூடாதா? அதுக்குக் கூடவா சுதந்திரம் இல்ல? ஒரு சங்கம் கட்டாயம் இங்கு வேணும்னு நினைக்கிறேன். கணவன்களைப்போல இப்படி ஆட்டி வைக்கப்படுகிற ஒரு மக்கள் பிரிவு இந்த பூமியிலேயே இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல. எங்களுக்கு சிரிக்கக்கூட சுதந்திரம் இல்லைன்னா எப்படி?”

***

 

ஆயிரத்தொரு நாக்குகளுடன் அஸ்மா போல் தொடர்ந்து சிரிக்க :  http://www.lekhabooks.com/short-stories/103-nootriyoru-nakkugal.html

***

மேலும் பார்க்க : பஷீரின் ‘பூவன்பழம்

**

நன்றி : lekhabooks, ’சுரா’

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்

வைக்கம் அவர்களின் சிறுகதை ஒன்றைத்தாருங்கள்.வாசித்து கனநாளாச்சி’  என்று சொன்னார் வாழைச்சேனை அமர். ஞாபகம் வந்தது. மூக்கைத் தேடினேன். பஷீரின் மூக்கு. தமிழோவியம் / சமாச்சார் தளங்களில் இருந்த அவருடைய அழகான  மூக்கை யாரோ கடித்து எடுத்துவிட்டார்கள். எனவே எனது (பழைய) கூகுள் பக்கத்திலிருந்த மூக்கை எடுத்து இங்கே நுழைக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் கடித்த, மன்னிக்கவும், மொழிபெயர்த்த நாகூர்ரூமிக்கு நன்றி. மூலத்தைப் பார்க்காமலேயே மொழிபெயர்ப்பதில் இவர் முதன்மையானவர் (ஓய், எனக்கு யாசீன் ஓதுனதுக்கு பழி!) . அவரது பெயர்ப்பை உயிர்மை இதழும் வெளியிட்டிருந்தது (2004). சுட்டி இப்போது கிடைக்கவில்லை. உண்மையில் , பஷீரின் 21 கதைகள் என்று தலைப்பிட்டு 20 கதைகளுக்கான சுட்டிகளை  நண்பர் சிங்கமணியின் தமிழ்த்தொகுப்புகள் தளத்திலிருந்தும் (சகோதரர் ராம்பிரசாத்தின் அழியாச்சுடர்கள் தளம் போலவே இங்கும் நிறைய விசயங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்கிருந்து எடுத்தது / மொழிபெயர்ப்பாளர் யார் என்ற அவசியமான விபரங்களெல்லாம் இல்லை.) 21வது கதையாக ’மூக்கை’யும் சேர்க்கலாம் என்றால் அது காணோம்! அப்படியும் சொல்ல முடியாது. கீற்று தளத்தில் இப்போதும் இருக்கிறது. (ஆங்கிலம் வழி தமிழாக்கம் : கூத்தலிங்கம்).  எனக்கு ரூமியின் மொழிபெயர்ப்புதான் பிடிக்கிறது…  குளச்சல் மு. யூசுபின் மொழிபெயர்ப்புதான் மிகச் சிறந்தது என்கிறார்கள் நண்பர்கள். காலச்சுவடு வெளியீடு எனக்கு கிடைக்கவில்லையே, காசும் இல்லையே, என்ன செய்வேன்?  போகட்டும், ’மூக்கு’க்கு கீழே அவசியமான மற்ற அவயவங்களையும் சேர்த்திருக்கிறேன். அதெல்லாம் பார்க்க முடியாது  என்றால் பஷீரின் பூவன் பழத்தையாவது ருசியுங்கள் . நன்றி. – ஆபிதீன்

***

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு

வைக்கம் முஹம்மது பஷீர்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி

***

அதிர்ச்சியான செய்திதான். அதாவது, அறிவுஜீவிகள் மத்தியிலே மூக்கு ஒன்று விவாதப் பொருளாகிவிட்டது என்பது.

அந்த மூக்கைப் பற்றிய உண்மையான கதையை இங்கே நான் பதிவு செய்கிறேன்.

இந்த கதை ஆரம்பிக்கும்போது உலகப் பிரசித்தி பெற்ற அந்த மூக்கின் சொந்தக்காரனுக்கு இருபத்தி நான்கு வயது பூர்த்தியாகிவிட்டிருந்தது. அதற்கு முன் அவனை யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருபத்தி நான்காவது ஆண்டுக்கு ஏதேனும் சிறப்பு முக்கியத்துவம் இருக்கிறதா என்ன? யாருக்குத் தெரியும்? இந்த உலகின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் பல மாமனிதர்களுடைய வாழ்வில் இருபத்து நான்காவது ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்திருப்பது தெரியவரும். வரலாற்று மாணவர்களுக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதே இல்லை.

நம்முடைய கதையின் நாயகன் ஒரு சமையல்காரன். வேண்டுமானால் அடுப்பங்கரை வேலைக்காரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவன் ஒன்றும் சூட்டிகையானவனல்ல. அவனுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. அவனுடைய உலகம் அந்த சமயலறையினால் ஆனது. அதற்கு வெளியே நடப்பவற்றைப் பற்றி அவனுக்கு அக்கறை ஏதும் இல்லை. அதைப்பற்றி அவன் ஏன் கவலைப்பட வேண்டும்? திருப்தியாகச் சாப்பிடுவான். விரும்பிய அளவு மூக்குப்பொடியை உறிஞ்சுவான். தூங்குவான். வேலை பார்ப்பான். அவனுடயை அன்றாட அலுவல்கள் இந்த செயல்பாடுகளில் முடிந்து போயின.

ஒரு ஆண்டின் ஒரு மாதத்தின் பெயர் என்ன என்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நாள் வரும்போது அவனுடைய அம்மா வந்து அதை வாங்கிச் செல்வாள். மூக்குப்பொடி வேண்டுமென்றால் அந்த கிழவியே அதையும் அவனுக்கு வாங்கிக்கொடுப்பாள். ஒரு திருப்திகரமான வாழ்க்கையை அவன் வாழ்ந்தான். தனது இருபத்து நான்காம் வயது வரை. அதன் பிறகு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது.

அவனுடைய மூக்கு லேசாக நீளவாக்கில் வளர ஆரம்பித்தது. அவனுடைய வாயைக் கடந்து தாடை வரை அது சென்றது.

ஒவ்வொரு நாளும் அது நீண்டுகொண்டே சென்றது. அதை மறைக்கத்தான் முடியுமா என்ன? ஒரு மாதம்கூட ஆகியிருக்காது. தொப்புள்வரை அவனுடைய மூக்கு வளர்ந்துவிட்டது. அவனுக்கு ஏதாவது அசௌகரியமாக இருந்ததா என்றா கேட்கிறீர்கள்? கிடையவே கிடையாது. நிம்மதியாக அவனால் மூச்சுவிட முடிந்தது. மூக்குப்பிடிக்க மூக்குப்பொடியை இழுக்க முடிந்தது. பலவிதமான வாசனைகளை தரம்பிரித்து சொல்ல முடிந்தது. சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு அசௌகரியமும் அவனுக்கு இல்லை.

எனினும், இந்த மூக்கின் பொருட்டு, பாவம் அந்த ஏழை சமையல்காரன் வேலையை விட்டு நீக்கப்பட்டான்.

என்ன காரணம்?

“பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியனை திரும்பவும் அழைத்துக்கொள்” என்று முழங்கியபடி எந்த குழுவும் அவனுக்காக பரிந்துகொண்டு வரவில்லை. இந்த அநியாயத்தைப் பார்த்தும் அரசியல் கட்சிகள் தங்கள் கண்களை மூடிக்கொண்டன.

“அவனை ஏன் வேலையை விட்டு நீக்கினீர்கள்?” எந்த மனிதகுல காதலனும் இவ்விதமான கேள்விகளைக் கேட்டு முன்வரவில்லை.

பாவம் அந்த சமையல்காரன்!

தனக்கு ஏன் வேலை போனது என்று யாருமே அவனுக்கு சொல்லவேண்டியதில்லை. அவனுடைய வீட்டுக்காரர்கள் அவன் பொருட்டு நிம்மதியாக இருக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். நீளமூக்கனையும் அவனுடைய மூக்கையும் பார்ப்பதற்காக மக்கள் இரவு பகல் பாராமல் வந்தவண்ணமிருந்தனர். நிழல்படமெடுப்பவர்கள் வீட்டுக்காரர்களுக்கு தொல்லை கொடுத்தனர். பத்திரிகை நிருபர்கள் வேறு. இப்படி வந்து அவஸ்தைப்படுத்தியவர்களால் அது போதாதென்பதுபோல வீட்டிலிருந்து பல பொருள்கள் திருட்டும் போயின.

பணி நீக்கம் செய்யப்பட்ட சமையல்காரன் தனது தனிமையான குடிசையிலே உட்கார்ந்து யோசித்தான். அவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. அவனுடைய மூக்கு ரொம்ப பிரபலமடைந்துவிட்டது !

தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் அவனைக் காண வந்தார்கள். அவனுடைய நீண்ட மூக்கைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரலை வைத்தனர். சிலர் அவனுடைய மூக்கைத் தொட்டுப் பார்த்தனர். ஆனால் “இன்னிக்கி சாப்டியா?” “ஏன் இப்படி பலவீனமா இருக்கே?” என்றெல்லாம் யாருமே கேட்கவில்லை. குடிசையில் பணம் ஏதுமில்லை. ஒரு சின்ன மூக்குப்பொடி டப்பா வாங்கும் அளவுக்குக் கூட. பட்டினி போட்டு சாகடிக்க அவனென்ன காட்டு மிருகமா? அவன் முட்டாளாக இருக்கலாம். ஆனாலும் அவன் மனிதன். ஒரு நாள் அவன் தன் வயதான அம்மாவை தனியே அழைத்து காதில் கிசுகிசுத்தான் : “இந்த பயங்கரமானவர்களையெல்லாம் வெளியே தள்ளி கதவை மூடு”

அவன் சொன்னபடியே அவன் அம்மாவும் உடனே செய்தாள்.

அன்றிலிருந்து அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் நல்ல நேரம் உண்டானது. மகனுடைய மூக்கை தரிசிப்பதற்காக மக்கள் அம்மாவுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தனர்! இந்த ஊழலுக்கு எதிராக சில நியாயவாதிகள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் இந்த செயலின்மையை எதிர்த்து பலர் அரசை அழிக்க புரட்சிக் கழகங்களில் சேர்ந்தனர் !

நீளமூக்கனது வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அதிகமானது என்று மொட்டையாக ஏன் சொல்லவேண்டும்? ஆறு ஆண்டுகளில் அந்த ஏழை சமையல்காரன் ஒரு கோடீஸ்வரனாகிப் போனான்.

மூன்று முறை திரைப்படங்களில் அவன் நடித்தான். ‘மனித நீர்மூழ்கிக் கப்பல்’ என்ற அந்த டெக்னிகலர் படத்தைப் பார்ப்பதற்குத்தான் எவ்வளவு ரசிகர்கள்! நீளமூக்கனது உயர்ந்த குணங்களைப் பற்றி ஆறு கவிஞர்கள் காவியமெழுதினர் ! பிரபலமான ஒன்பது எழுத்தாளர்கள் அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.

அவனுடைய அரண்மனை போன்ற வீடும் பலர் வந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. யாரும் எந்த நேரத்திலும் அதற்குள் போகலாம். ஒரு வேளை சாப்பிடலாம். ஒரு இழுப்பு மூக்குப்பொடியும் பெற்றுக்கொள்ளலாம்!

அவனுக்கு இரண்டு காரியதரிசிகள் இருந்தனர். இரண்டு அழகான தேர்ந்த பெண்கள். இரண்டு பேருமே அவனைக் காதலித்தனர். மதித்து வணங்கினர். இரண்டு அழகான பெண்கள் ஒரே நேரத்தில் ஒரு ஆண்மகனைக் காதலித்தால் எப்போதுமே பிரச்சனைதான். நீளமூக்குக்காரனின் வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது.

அவர்கள் இருவர் மட்டுமின்றி அவனைப் பலரும் விரும்ப ஆரம்பித்தனர். தொப்புள்வரை தொடர்ந்த அந்த நீண்ட மூக்கு உன்னதத்தின் குறியீடாக பார்க்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி நீளமூக்கன் தனது கருத்துக்களைச் சொன்னான். பத்திரிக்கைகள் அவனுடைய கருத்துக்களைப் பிரசுரித்தன :

“மணிக்கு 10,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் விமானம் உருவாக்கப்பட்டது. நீளமூக்கர் அதைப்பற்றி இப்படிச் சொன்னார்..”.

“டாக்டர் பண்ட்ரோஸ் ·புராசிபுரோஸ் இறந்த மனிதன் ஒருவனை உயிர்ப்பித்தார். அதைப்பற்றிக் குறிப்பிடும்போது நீளமூக்கர் தனது உரையில் …”

உலகின் மிக உயரமான சிகரம் ஏறப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன் மக்கள் இப்படிக் கேட்டனர் : “நீளமூக்கர் அதைப்பற்றி என்ன சொல்கிறார்?”

நீளமூக்கன் ஒரு நடப்பைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்றால், ப்பூ… அது ஒன்னுமில்லாத விஷயம் என்றாகிப்போனது. எனவே எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் நீளமூக்கன் எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது ! ஓவியம், வாட்ச் வியாபாரம், மெஸ்மரிஸம், புகைப்படக்கலை, ஆன்மா, வெளியீட்டு நிறுவனங்கள், நாவல் எழுதுதல், இறப்புக்குப் பிறகான வாழ்க்கை, பத்திரிக்கைகளின் போக்கு, வேட்டையாடுதல் இப்படி.

இந்த சமயத்தில்தான் நீளமூக்கனைப் பிடிப்பதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஒன்றைப் பிடிப்பது — அதாவது உடல்ரீதியாக பிடிப்பது — என்பது ஒன்றும் புதிதல்ல. இந்த உலக வரலாற்றில் முக்கால்வாசி இப்படிப்பட்ட பிடிப்புகளையும் அதனால் ஏற்பட்ட வெற்றிகளையும் பற்றியதுதானே!

இந்த பிடித்தல் என்பது என்ன? தரிசாகக் கிடந்த ஒரு நிலத்தில் தென்னங்கன்றுகளை நடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்துக்கு நீரூற்றி அதை உரமிட்டு வளப்படுத்துகிறீர்கள். அதற்கு வேலி போடுகிறீர்கள். எதிர்பார்ப்பில் ஆண்டுகள் பல கழிந்து கன்று வளர்ந்து மரமாகி பலன் தர ஆரம்பிக்கிறது. அப்போது திடீரென்று உங்கள் தோட்டத்தை உங்களிடமிருந்து யாரோ பிடுங்கிக்கொள்கிறார்கள்.

எல்லாருக்கும் முதலில், நீளமூக்கனைப் பிடிப்பதற்கு அரசுதான் முயற்சி செய்தது. ஒரு நம்பிக்கை தந்திரத்தை அது கையாண்டது. ‘நீளமுக்கர்களின் தலைவன்’ என்று ஒரு பட்டத்தை அவனுக்கு வழங்கியது. ஒரு மெடலையும் பரிசாகக் கொடுத்தது. அந்த தங்க மெடலை அவன் கழுத்தில் ஜனாதிபதியே அணிவித்தார். அதன் பிறகு கைகுலுக்குவதற்கு பதிலாக, அவனுடைய நீண்ட மூக்கை லேசாக செல்லமாகக் கிள்ளினார். இது பத்திரிகையாளர்களால் படமாக்கப்பட்டு எல்லாத் திரையரங்குகளிலும் காண்பிக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் நாடு முழுவதிலும் இருந்த அரசியல் கட்சிகளும் ரொம்ப ஆர்வமாக முன்வந்தன. “மக்கள் போராட்டத்துக்கு தோழர் நீளமுக்கர்தான் தலைமை ஏற்று நடத்தவேண்டும்!” “தோழர் நீளமூக்கரேதான்!”

யாருடைய தோழர்? எதில் தோழர்? அட ஆண்டவனே! பாவம் அந்த நீளமூக்கன்!
நீளமூக்கன் ஒரு கட்சியில் சேரவேண்டும்! எந்த கட்சி? அப்போது நிறைய கட்சிகள் இருந்தன. எப்படி நீளமூக்கனால் ஒரே நேரத்தில் பல கட்சிகளில் சேர முடியும்?

அவனே சொன்னான் : “நான் ஏன் கட்சிகளில் சேரவேண்டும்? நானா? எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கிறது”

அதன்பின் அவனுடைய காரியதரிசிகளில் ஒருத்தி சொன்னாள் : “தோழர் நீளமூக்கர் என்னை விரும்பினால் என்னுடைய கட்சியில் சேரவேண்டும்”

அதற்கு நீளமூக்கன் எதுவும் சொல்லவில்லை.

“நான் எதாவது கட்சியில் சேரவேண்டுமா?” என்று இன்னொரு காரியதரிசினியைக் கேட்டான். அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துகொண்ட அவள், “ஏன் சேரவேண்டும்?” என்று பதில் சொன்னாள்.

அந்த நேரத்தில் ஒரு கட்சி இந்த முழக்கத்தோடு வந்தது : “எங்கள் கட்சி நீளமூக்கரின் கட்சி. நீளமூக்கரின் கட்சி மக்களின் கட்சி”

மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இதைக்கேட்டு கொதித்தெழுந்தனர். நீளமூக்கனின் காரியதரிசினிகளில் ஒருத்தியை வளைத்துப் போட்டு அவள் மூலமாக ஒரு அறிக்கை விட்டனர். “நீளமூக்கர் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். இதுநாள்வரை அவர் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருந்தார். தன்னுடைய நடிப்பில் என்னையும் ஒரு பகடைக்காயாக பயன்படுத்திவிட்டார். இப்போது ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அந்த நீளமான மூக்கு உண்மையில் ரப்பரால் ஆனது”

வாவ்! எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியானது. நீளமூக்கனின் நீளமூக்கு ரப்பரால் ஆனது!

அதன்பிறகு மக்கள் அமைதியாக இருப்பார்களா என்ன? கோபமாக இதற்கு எதிர்வினை செய்யமாட்டார்களா என்ன? தந்திகளும், தொலைபேசிகளும், கடிதங்களும் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்தன! ஜனாதிபதிக்கு நிம்மதியோ அமைதியோ இல்லாமல் போனது. “நீளமூக்கனின் ரப்பர் மூக்கு அழிந்து போகட்டும்! நீளமூக்குக் கட்சி ஒழிக! புரட்சி வாழ்க!”

நீளமூக்குக்கு எதிரான அரசியல் கட்சி இவ்விதமாக ஒரு அறிக்கைவிட்டதும் அதை எதிர்த்து எதிர்க்கட்சி அவனுடைய இன்னொரு காரியதரிசினி மூலமாக எதிர் அறிக்கை விட்டது : “அன்புள்ளம் கொண்ட நாட்டுமக்களே! குடிமக்களே! அவள் சொன்னது ஒரு பச்சைப்பொய். தோழர் நீளமூக்கர் அவளை காதலிக்கவில்லை. அதனால் அவள் இப்படி பழிவாங்குகிறாள். நீளமூக்கரின் புகழையும் செல்வத்தையும் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவளுடைய பேரவாவில் விளைந்த பொய் அது! அவளுடைய சகோதரர்களில் ஒருவர் எதிர்க்கட்சியில் இருக்கிறார். அந்த கட்சியின் உறுப்பினர்களின் உண்மையான நிறத்தை இப்போது காட்டுகிறேன். தோழர் நீளமூக்கரின் நம்பிக்கையான காரியதரிசினி நான்தான். அவருடைய மூக்கு ரப்பரால் ஆனதல்ல. எனது இதயம் உள்ளே துடித்துக்கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல அவருடைய மூக்கும் உண்மையானதே. இந்த மாதிரி எசகுபிசகான சூழ்நிலையில் தோழர் நீளமூக்கரை ஆதரிக்கும் கட்சி நீடூழி வாழட்டும்! மக்கள் முன்னேற்றத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த குறிக்கோளுமில்லை. புரட்சி நீடூழி வாழ்க!”

இப்போது என்ன செய்வது? மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது. நீளமூக்கனுக்கு எதிரான கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதியை குற்றம் சொல்ல ஆரம்பித்தார்கள் : “முட்டாள் அரசு! ‘நீளமூக்கர்களின் தலைவன்’ என்ற பட்டத்தை மக்களை ஏமாற்றிய ஒருவனுக்கு கொடுத்திருக்கிறார்கள்! தங்கமெடல் வேறு! இந்த ஏமாற்று வேலையில் ஜனாதிபதிக்கும் பங்கு உண்டு. தேசிய நலனுக்கு இதில் குந்தகம் ஏற்பட்டுள்ளது. தேசநலனை அவமதித்துவிட்டனர். ஜனாதிபதி ராஜினாமா செய்யவேண்டும். ரப்பர் மூக்கன் கொல்லப்பட வேண்டும்!”

இதற்கு ஜனாதிபதி கோபமாக எதிர்வினை செய்தார். ஒரு நாள் காலை ராணுவமும் டாங்கிகளும் நமது பாவப்பட்ட நீளமூக்கனின் வீட்டைச் சுற்றி வளைத்தது. அவனைக் கைது செய்து கூட்டிச்சென்றனர்.

கொஞ்ச காலத்துக்கு நீளமூக்கனைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை. அவனுடைய இருப்பை மக்கள் மறந்தும் போயினர். பிறகுதான் அணுகுண்டின் விளைவுகளைப் பற்றிய செய்தியுடன் புது செய்தி வந்தது. என்ன நடந்தது தெரியுமா? எல்லாவற்றையும் மக்கள் மறந்திருந்த அந்த சமயத்தில்தான் ஜனாதிபதியின் அந்த அறிக்கை வந்தது : “மார்ச் 9ஆம் தேதி நீளமூக்கர்களின் தலைவனின் வழக்கு நடைபெறும். 48 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவ நிபுணர்கள் அவரைப் பரிசோதிப்பார்கள். உலகின் அனைத்து பத்திரிக்கைகளின் கரஸ்பாண்டெண்டுகளும் அதில் கலந்துகொள்வர். நடப்பதனைத்தும் படமெடுக்கப்பட்டு உலகின் உடனடி பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்”

மக்கள் எப்போதுமே மக்கள்தான். அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. மாநகரத்துக்கு பெருமளவில் அவர்கள் வந்து சேர்ந்தனர். தங்கும் விடுதிகளை முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கான வாகனங்களுக்குத் தீ வைத்தனர். காவல் நிலையங்களை எரித்தனர். அரசு கட்டிடங்களை உடைத்து அழித்தனர். வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. நீளமூக்கனுக்கான இந்த போராட்டத்தில் பல ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டு தியாகிகளாயினர்.

மார்ச் 9. காலை பதினோறு மணி. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னிருந்த சதுரவடிவ இடம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. லௌடு ஸ்பீக்கர்கள் அலறின. “மக்கள் அமைதி காக்க வேண்டும். பரிசோதனை ஆரம்பித்து விட்டது”

ஜனாதிபதி மற்றும் அவரது காபினட் அமைச்சர்கள் முன்னிலையில் மருத்துவர் குழு கூடி நீளமூக்கனைச் சுற்றிவளைத்தது. ஒரு டாக்டர் அவனது மூக்குத் துவாரத்தினை மூடினார். உடனே அவன் தன் வாயை விரியத்திறந்தான். இன்னொரு டாக்டர் ஒரு ஊசியை எடுத்து அவன் மூக்கு நுனியில் குத்தினார். அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவனது மூக்கின் நுனியிலிருந்து ஒருதுளி ரத்தம் வந்தது.

டாக்டர்கள் தங்களது ஒருமித்த தீர்ப்பை வழங்கினர் : “இந்த நீளமூக்கு ரப்பரால் ஆனதல்ல. இது உண்மையானதுதான்.”

நீளமூக்கனது காரியதரிசினிகளில் ஒருத்தி அவனது மூக்கின் நுனியில் முத்தமிட்டாள்.

“தோழர் நீளமூக்கர் நீடூழி வாழ்க! நீளமூக்கர்களின் தலைவர் நீடூழி வாழ்க! நீளமூக்கரின் மக்கள் முன்னேற்றக் கழகம் நீடூழி வாழ்க !”

இந்த ஆரவாரமும் ஆனந்தமும் முடிந்தபோது, ஜனாதிபதி இன்னொரு தந்திரவேலை செய்ய நினைத்தார். பாராளுமன்ற உறுப்பினராக நீளமூக்கனைத் தேர்ந்தெடுத்தார் ! நீளமூக்கன் கதையின் முடிவு அதுதான்.

ஆனால் நீளமூக்கன் உறுப்பினராகாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைத் துவக்கின. “மந்திரிசபை ராஜினாமா செய்ய வேண்டும். பொய்மை எப்படி தொடர்கிறது என்று பாருங்கள்! மக்கள் சிந்தனையில் குழப்பம் உண்டாகாதா? பாவம் இந்த அறிவுஜீவிகள் என்ன செய்வார்கள்?” என்று முழங்கத் தொடங்கின.

***

— (மார்ச் 2004, உயிர்மை)

கதாசிரியரையும் கதையையும் பற்றிய குறிப்பு

அரசியல் விமர்சனம் செய்யும் கதைகளை சுவாரசியமாக, வெற்றிகரமான இலக்கியப் படைப்பாக உருவாக்குவது லேசான காரியமல்ல. ஜார்ஜ் ஆர்வெலின் மிருகப்பண்ணை (Animal Farm) நாவல் ஒரு நல்ல உதாரணம். இக்கதையில் இவ்விஷயம் பஷீருக்கு எவ்வளவு எளிதாகக் கூடிவந்திருக்கிறது ! இலக்கியக் குன்றின் மேலிட்ட விளக்கு பஷீர். இந்தக்கதையும் அப்படியே.

***

நாகூர் ரூமி

நன்றி : நாகூர் ரூமி

***

சுட்டிகள் :

எனது பஷீர் – சுகுமாரன்

பஷீர்: பூமியின் உரிமையாளர் – சுகுமாரன் / காலச்சுவடு

பஷீர் : மொழியின் புன்னகை – ஜெயமோகன் / காலச்சுவடு

கதைகளைத் தின்னும் ஆடு – எஸ். ராமகிருஷ்ணன்

பஷீரின் ‘மதிலுகள்’ – பிரவீன்குமார்

Mathilukal (Walls) (ml: മതിലുകള്‍) , directed by Adoor Gopalakrishnan Part 1

Mathilukal (Walls) (ml: മതിലുകള്‍) , directed by Adoor Gopalakrishnan Part 2

பஷீரின் சில சிறுகதைகள் :

இதயதேவி  (தமிழில் : சித்தார்த்)

தங்கம்  (தமிழில்: ஏ.எம்.சாலன் )

தேன் மாம்பழம்  (தமிழில்: சுகுமாரன் )

ஜென்ம தினம்  (தமிழில்: குளச்சல் மு. யூசுப் )

’சுரா’ மொழிபெயர்ப்பில்…

பழைய ஒரு சிறிய காதல் கதை  

வெள்ளப்பெருக்கு 

நீல வெளிச்சம் 

மந்திரப் பூனை

« Older entries