பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

கல்கி இதழில், ஏப்ரல் 1964-இல் வெளியான சிறுகதை இது. காலச்சுவடு பதிப்பகத்திற்காக கவிஞர் சுகுமாரன் பதிப்பித்த முழுத்தொகுப்பில் கிடைத்தது. நன்றியுடன் பகிர்கிறேன். – AB

**

thi janakiraman - tamilwiki 2

பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

… ‘என் தாயாருக்கு நீங்கள் அனுப்பிய அனுதாபச் செய்தி கிடைத்தது. ‘நிறைந்த சங்கீத அறிவுடன், ரசிக சிரோமணியாகத் திகழ்ந்தார் தங்கள் கணவர் ஸ்ரீபலராமன். பயமின்றியும் பாரபட்சமின்றியும் அவர் சங்கீத விமர்சனம் செய்து வந்ததே, சங்கீதமே மூச்சாக அவர் வாழ்ந்த லட்சிய நோக்குக்குச் சான்றாகும். அவர் மறைவைச் செவியுற்று இசையுலகம் துயரில் ஆழ்ந்து கிடக்கிறது. அன்புக் கணவரைப் பிரிந்து துயரெனும் இருளில் தவிக்கும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபத்தை எங்கள் பிருங்கி சங்கீத சபை தெரிவித்துக்கொள்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள்.

அம்மா அதைப் படித்துவிட்டுச் சிறிது நேரம் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். “நன்றி, என்று ஒரு வார்த்தை பதில் எழுதிப் போட்டுவிடட்டுமா?” என்று கேட்டேன். “இத்தனை தப்பு இருக்கிற கடுதாசுக்கு விவரமாகத்தான் எழுதிப் போடேன்” என்று சொல்லிப் போய்விட்டாள். போய் முன்வாசல் படியில் நின்று, “இந்தக் கடுதாசு உனக்கு சரியாகப்படறதா?” என்று கேட்டாள்.

மறுபடியும் படித்து, ஒவ்வொரு வார்த்தையாக எடை போட்டுப் பார்த்தேன். அநேகமாக எல்லாமே தவறு என்று தோன்றிற்று. அம்மாவிடம் அதைச் சொல்லியும்விட்டேன். “அப்படீன்னா பொய்யைக் கழுத்தை முறிச்சுப் போடு” என்று சொல்லிவிட்டு வாசற்படி இறங்கிப் போனாள்.

மறுபடியும் உங்கள் கடிதத்தைப் படித்தேன். அப்பாவின் கெட்டிக்காரத்தனத்தை நினைத்துச் சிரிப்பு வந்தது. முரட்டு ரசிகர்களான பிருங்கி சபையார் கண்ணில் மண்ணைப் போட்டு விட்டாரே என்று தோன்றிற்று. அப்பா ரசிகரும் இல்லை. சிரோமணியுமில்லை. பயந்து பயந்துதான் பொழுதைப் போக்கினார் அவர். அவருடைய லட்சியம் சங்கீதமல்ல. பக்ஷ்யம்தான். காலட்சேப பாகவதர்கள் அடுக்குகிற ஏழு ஸ்வரங்களுக்குச் சுத்தம், சாதாரணம், அந்தரம், சதுச்ருதி, த்ரிச்ருதி, ஷ்ட்ச்ருதி, கோமளம், தீவிரம் என்றெல்லாம் அடைமொழிகளுடன் வேறுபாடுகள் இருப்பதுபோல் ஒவ்வொரு சுவைக்கும் பன்னிரண்டு வகைகள் உண்டு என்று அவர் கட்சி. உண்டி வகைகளை உண்பதுதான் அவருடைய பரம புருஷார்த்தம். அம்மாவுக்கும் அவருக்கும் இடையே எந்தவித அன்பும் மலர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இருந்தால் மொட்டிலேயே கருகியிருக்க வேண்டும். துயரெனும் இருளில் அம்மாவோ நாங்களோ தட்டித் தடவி நடக்கவில்லை. நான் மனையியலையும் சங்கீதத்தையும் விசேஷ பாடமாக எடுத்துக்கொண்டு ஆனர்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். என் தம்பி கெமிஸ்டாக ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். நானும் அவனும் வில்லி பார்லாவில் குடியிருக்கிறோம். அம்மா – கோரேகானில் அன்புக் கணவரோடு – இந்த நாள் கணவரோடு – சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அப்பாவின் மனைவியாக அல்ல. போலீஸ்காரர்கள் வந்து அவரைப் பைத்திய ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய்ச் சேர்த்த பிறகுதான் அம்மாவுக்கு ஆறுதல் கிடைத்தது. மூன்று வருஷங்கள் கழித்துச் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டுவிட்டாள்.

மாதா பிதா பாவம் மக்கள் தலையிலே என்பார்கள். அந்தப் பாவத்தை என் அப்பா தன் தலையில் சுமந்துகொண்டு அலைந்தார். கடைசியில் அது அவர் தலைக்குள் இருப்பதையே பாதித்துவிட்டது. அவருடைய பிதா (என் தாத்தா) செய்த பாவம் பிள்ளைக்குச் சங்கீதம் கற்பிக்க முயன்றது. மாதா (என் பாட்டி) செய்த பாவம் அதைத் தடுத்து நிறுத்தாமல் போனது. அதனால் சிலவேளை அப்பாவை நினைக்கும்போது வருத்தமாயிருக்கும்.

தாத்தாவுக்கு மூன்று பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகளும் திவ்வியமாகப் பாடுவார்களாம். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா, சங்கீதத்திலும் கரை கண்டவர். கரையைக் கண்டுவிட்டாலும் எப்போதும் அதிலேயே நீந்திக் கொண்டிருப்பாராம். பிள்ளைகள் பாடுவதைப் பார்த்து உடம்பே வெடிக்கும்போல் பூரித்துக் கொண்டிருப்பாராம். தக்க வயது வந்ததும் சங்கீத இலக்கண இலக்கியங்களையெல்லாம் கரைத்துப் புகட்டிவிடுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாராம். ஆனால் அவர் இதயமே வெடிக்கிற சம்பவம் நிகழ்ந்தது. அந்த முதல் இரண்டு பிள்ளைகளும் ஒரு சாதாரண ஆற்றில் நீந்தப் போய், உயிரை ஆற்றிடம் தந்து, உடம்பாக எங்கோ அகப்பட்டார்களாம். தாத்தாவுக்குத் துயரம் தாங்கவில்லை. தம் சங்கீத சொத்தை அவர் இனி மேல் யாருக்கு எழுதி வைப்பார்? மூன்றாவது பிள்ளைக்குத்தானே? வேறு வாரிசு ஏது? எனவே, என்னுடைய அப்பாவுக்கு ஏழு வயதிலிருந்தே சங்கீதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். வாழ்வில் அநித்தியத்தை எண்ணி, சங்கீத இலக்கண சாஸ்திரங்கள் வரலாற்று நூல்கள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகப் பாடம் சொன்னார். என் அப்பாவுக்குப் பாட்டு வராவிட்டாலும் கடம் நன்றாக வரும். எத்தனை பெரிய புத்தகமானாலும் கடம் போட்டுவிடுவார். கேட்ட இடத்தில் தலையில் பிரம்ம தண்டத்தை வைத்தாற்போல் கடகடவென்று ஒப்பிப்பார். பாடத்தான் வரவில்லை. தாத்தா அவரை அடியோ அடி என்று அடித்தார். உள்ளங்கை என்ன, முஷ்டி என்ன, பாக்குவெட்டி என்ன, புத்தகம் என்ன, டம்ளர் என்ன, டபரா என்ன- இப்படிப் பல ஆயுதங்களை அவர் மீது கண்ணை மூடிக்கொண்டு பிரயோகம் செய்வார். இப்படி வெகு காலம் வரையில் இந்த சிட்சை நடந்தது. இதற்கிடையில் என் அப்பாவுக்குக் கல்யாணமும் நடந்தது. ஆனால் இசைப் பயிற்சியும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. அதனுடைய பிரிக்க முடியாத அங்கமான வசவுகளும் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தன. எத்தனை பொழிந்தும் விளைச்சலில்லை. கட்டாந்தரையில் எப்படி முளைக்கும்? அப்பா சங்கீத சாஸ்திரங்களை நெட்டுருப் போட்டதனைத்தும் பாத்தியில் எருவாகக் குவிந்திருந்தது. ஆனால் பாத்தி கருங்கல். பாட்டு வரவில்லை. தாத்தா அடிக்கடி பெருமூச்சுவிட்டு ஓய ஆரம்பித்தார். “அட, பாஷாங்க சனியனே!” என்று அடிக்கடி பிள்ளையை ஒரு புதுமுறையில் விரக்தியுடன் திட்ட ஆரம்பித்தாராம். “நீ எங்கேடா இங்கே வந்து பிறந்தே?” என்று பெருமூச்சு விடுவாராம்.

இதை என் அம்மா கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சின்னப் பெண். சாந்தி கல்யாணம் ஆகவில்லை. ஆகாவிட்டாலும் புருஷன் வீட்டுக்குப் பெண்ணை ஒரு மாசம் கொண்டுவிடுவதும் அழைத்துப் போவதும் அந்தக் காலத்து வழக்கம். “பாஷாங்க சனியனே!” என்றால் என்ன என்று அவளுக்கு அப்பொழுது புரியவில்லை. பாஷாணம் என்பதை அப்படித் தவறிச் சொல்கிறாரோ என்று தோன்றுமாம். கடைசியில் ஒரு நாள், “பாஷாங்க ராக ராக்ஷசப் பயலே ஒழி” என்று ஆசீர்வாதத்துடன் சங்கீதப் பயிற்சிக்கு மங்களம் பாடி முடித்துவிட்டாராம் தாத்தா.

தாத்தா பிறகு அதிக காலம் ஜீவித்திருக்கவில்லை. ஒருநாள் இகவாழ்வை நீத்தார். நீக்கும்போது அவரால் பாட முடியவில்லை. பிள்ளையைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாராம்.

அவர் போனதும் என் அப்பா ‘கூகூ’ என்று பச்சைக் குழந்தை மாதிரி அழுதாராம். தம் தந்தையார் கடைசியில் பார்த்துப் பார்த்துப் பேச முடியாமல் கண்ணீர் விட்டதன் அர்த்தத்தை ஆராய முனைந்தார். கண்டுபிடித்துவிட்டார். “என் கோட்டையெல்லாம் தகர்ந்துவிட்டதே” என்றுதான் அவர் வெம்பியிருக்க வேண்டும் என்று அப்பாவுக்குப் புரிந்துவிட்டது. அந்தக் கணமே, இனி வேலைக்குப் போவதில்லை, சங்கீதத்துக்கே உழைப்பது என்று தீர்மானம் செய்துவிட்டார்.

சங்கீதத்தைப் பற்றியே பேச ஆரம்பித்தார் என் தந்தை. வீட்டில் பேசுவார். வெளியில் பேசுவார். ஹோட்டலில் பேசுவார். ரயிலடியில் பேசுவார். நண்பர்களோடு பேசுவார். சங்கீதக் கச்சேரிக்கு யாராவது நிர்பந்தமாகக் கூப்பிட்டுப் போனால், வெளியே உட்கார்ந்து சங்கீதத்தைப் பற்றிப் பேசிவிட்டு வந்துவிடுவார். அதனால் அவரைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தார்கள். ‘வலமோ இடமோ போகட்டும். மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி’ என்று சங்கீத வித்துவான்கள் ஓடி ஒளிந்தார்கள். அதற்காக அவருக்கு நண்பர்களில்லாமல் போய்விடுவார்களா? அவரைப்போலவே நாலு பேர்கள் சேர்ந்து கொண்டார்கள். காசுள்ள ஆசாமி என்றால் விடுவார்களா? அவரோடேயே சாப்பாட்டுக்கும் வந்துவிடுவார்கள். இரண்டு கறி, கூட்டுகள், பிட்ளை, ஆமவடை, பாயஸம் இப்படி அம்மா சாப்பாடு பண்ணிப் போடுவாள். அந்தச் சிரமங்களைக் கூட அவள் சட்டை செய்யவில்லை. கூடத்திலிருந்து அப்பா பேசுகிற மாவு மிஷின் குரலையும் நண்பர்களின் குரலையும் தான் அவளால் சகிக்க முடியவில்லை. சில சமயம் குஷி தாங்காமல் அப்பா பாடிக்கூடக் காட்ட ஆரம்பித்துவிடுவார். அம்மாவின் முகத்தில் அப்போது ஒரு பேயறைந்த கிலி வந்து படர்வதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். நண்பர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அப்பாவுக்கு நாலு கறியில்லாமல் சாப்பிடத் தெரியாது. அப்பளத்தைச் சுட்டால் பிடிக்காது. காலையில் இட்டிலி அல்லது பொங்கல் காப்பி, எட்டு மணிக்கு ஒரு காப்பி, பத்து மணிக்கு இரண்டு பிஸ்கட் காப்பி, பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு, இரண்டு மணிக்குக் காப்பி, நான்கு மணிக்கு டிபன் காப்பி, ஆறு மணிக்குக் காப்பி, எட்டு மணிக்குச் சாப்பாடு, பத்து மணிக்கு டீ, பன்னிரண்டு மணிக்கு ஓமப்பொடி, கீமப் பொடியோடு இஞ்சி இடித்த கொத்தமல்லிக் காப்பி. நடுநடுவே ஹோட்டல் டிபன் வேறு. எப்படி இந்த மாதிரி சாப்பிட முடிகிறதென்று அம்மா பயந்து போய்விட்டாள். வர வர அந்தப் பயம் எப்படி இனிமேல் இத்தனையும் பண்ணிப் போடப் போகிறோம் என்ற மலைப்பாக மாறிவிட்டது. ஏனென்றால், அப்பாவின் சொத்து எப்பொழுதும் குட்டிபோட்டுக் கொண்டேயிருக்கிற பணக்காரச் சொத்து இல்லை. தாத்தாவின் பிராவிடண்ட் பணம், ஊரிலிருந்த வீடு, சாப்பாட்டு நிலம் – எல்லாம் இந்தச் சாப்பாட்டிலேயே கரைந்து போய்விட்டன.

இப்போது சங்கீத வித்தவான்களுக்கு அப்பா கடிதம் எழுத ஆரம்பித்தார். உங்களைப்போல் பாடுகிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று ஒரு நூறு பேருக்குக் கடுதாசு போட்டுவிட்டார். சிலர் நன்றி தெரிவிக்க நேரிலேயே வந்தார்கள். சிலரிடம் இவரே போனார். எதற்கு? கடன் வாங்க. ஓர் இருபது பேரிடம் பலித்தது. ஆனால் அதற்குள் சங்கீதக்காரர்களுக்கு அடிக்கடி கூடிப் பேசுகிற சந்தர்ப்பங்கள் இருப்பதால், “எனக்கு மட்டும் எழுதியிருக்கிறார்” என்று அவர்கள் குடுமியில் அப்பா சுற்றியிருந்த பூ வாடிவிட்டது. பயந்து கொண்டிருந்தவர்கள் இப்போது சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாலுகறி, கூட்டு பச்சடி, ஒரு கறியாகவும் வற்றல் குழம்பாகவும் குறைந்துவிட்டன.

“என்னடீ! உங்க அப்பாவாத்துச் சமையல் மாதிரி ஆயிட்டுது!” என்று ஆரம்பித்தார் அப்பா.

உண்மையில் அம்மா இப்போது அவள் அப்பா அம்மா வீட்டிலிருந்து தான் சாமான் சஜ்ஜாவெல்லாம் வரவழைத்துக் கொண்டிருந்தாள். அதுதான் எத்தனை நாட்கள் நடக்கும்? அவள் அப்பா அம்மா மட்டும் என்ன சிரஞ்சீவிகளா? அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். அம்மாவின் அண்ணன் தம்பிகள் சும்மா இருந்தால் அவர்களுடைய மனைவிகள் சும்மா இருப்பார்களோ?

“உங்க அப்பன் மாதிரின்னு நெனச்சிண்டியோன்னேன்” என்று அம்மாவைப் பார்த்து அடிக்கடி குத்தி நெருடிக்கொண்டேயிருப்பார் அப்பா.

“உங்கப்பாவுக்கு நானும் அவர் மாதிரி பணம் பணம்னு பறக்காம இருக்கேனேன்னு குறை! பணம்னு சம்பாதிக்காவிட்டாலும் வரவா போறவா குறைச்சல் இல்லை. பத்து பணக்காரனுக்குச் சமமா காய்தா பண்றானே மாப்பிள்ளை அப்படீன்னு வேறே ஆதங்கம். செத்துப் போகிற வரைக்கும் திரிசமனும் ஜாடையுமா இதைச் சொல்லிக் காமிச்சிண்டேயிருந்தார். இப்பதான் அவர் ஆத்மா சாந்தியடைஞ்சிருக்கும். இப்பதான் நிஜமாவே நான் இல்லாமல் கஷ்டப்படறேனோல்லியோ?’ என்றார் அப்பா ஒரு நாள். அதைக் கேட்டு அம்மா பிழிந்து பிழிந்து அழுதாள். வெகுநாட்கள் பொறுத்துக் கொண்டேயிருந்தாள். கடைசியில் ஒரு நாள் திடீரென்று ஆவேசம் வந்தாற்போல் ஒரு கூச்சல் போட்டாளே பார்ப்போம். “போரும், அப்பாவைப் பத்தி இனிமே பேச வாண்டாம்!’ என்று பீறின அந்தக் கூச்சல் ஏழு வீட்டுக்குக் கேட்டது. அப்பா அப்படியே வெலவெலவென்று தொய்ந்து போனார். சற்று நேரம் பேசாமல் நின்றார். பிறகு வாசல் பக்கம் போய்விட்டார் அவர்.

அம்மா இப்போது சாதாரண மனுஷியாகிவிட்டாள். இதுவரை பார்யா தர்மம், ஸ்திரீ தர்மம், இல்லாள் கடமை என்று புத்தகங்களில் எழுதியிருக்கும் பெண்மணி மாதிரி இருந்தாள். இப்போது திடீரென்று நினைத்துக்கொண்டு சாதாரண மனுஷியாகிவிட்டாள்.

அப்போதுதான் விஜயராகவன் அப்பாவுக்குச் சிநேகிதம் ஆனார். அப்பா மாதிரி அவர் அழுக்காக இருக்க மாட்டார். அழுக்கு வேட்டி கட்ட மாட்டார். சுருக்கு சுருக்கென்று பேச மாட்டார். சும்மாச் சும்மா தின்றுகொண்டேயிருக்க மாட்டார். சிநேகிதமாயிருந்தார். அவர் ஒரு நாள் கூடத்தில் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்கள் எத்தனை நாட்கள் சார், இப்படியே இருக்கப் போறேள்? ஏதாவது சம்பாதிக்க வழி பண்ணிக்க வேண்டாமா?”

“எனக்கு என்னய்யா, இப்ப குறை? நான் சந்தோஷமாகத்தான் இருக்கேன்.”

“சம்பாத்தியம் ..?’

“அதுதானே? நான் உண்மைக்காகப் பாடுபடறேன் இந்த மாதிரி மனுஷாள்ளாம் பட்டினி கிடந்துதான் செத்துப் போயிருக்கா. கலையோட சரித்திரத்தை எடுத்துப் பார்த்தீர்னா தெரியும்.”

“கலியாணத்தைப் பண்ணிண்டு, ஒரு குடும்பத்தை உண்டாக்கிப் பிட்டு -”

“அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவாளுக்கு இதையெல்லாம் தாங்கிக்கிற பலமில்லேன்னா நான் என்ன செய்யகிறது?”

“நீ வாழ்ந்தே” என்றாள் உள்ளே காப்பி போட்டுக் கொண்டிருந்த அம்மா. இருபது பலம் காப்பிப் பொடியை அன்று காலையில்தான் விஜயராகவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தார்.

“கடனுக்கு லாயர் நோட்டீஸ் நாலஞ்சு பேர்கிட்டேயிருந்து வந்துட்டுதே.”

“வரட்டுமே. இருந்தால்தானே கொடுப்பேன் . . .”

“கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சி பண்ண வாண்டாமா?”

“திருப்பித் தரும் யோசனையோடு நான் வாங்கலியே விஜயராகவன்! பணம் வாங்கினால் திருப்பிக் கொடுத்துடணும் என்கிற நேர்மை எல்லாம் பாமர மனுஷாளுக்கு ஏற்பட்ட சட்டமில்லையோ?”

“உவா” என்று உள்ளே குமட்டினாள் அம்மா.

“பெரிய கலைஞர்கள், மேதாவிகள் எல்லாம்தான் இதெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லுகிற வழக்கம்.”

“அப்படி இங்கே ஒண்ணும் இல்லேன்னு சொல்றீமாக்கும்! ஒப்புக்காட்டா என்னய்யா? நான் கலைஞன் இல்லேன்னு ஆயிடுமா?” என்றார் அப்பா.

“இதைக் கொண்டு மாமாகிட்ட கொடுத்துட்டு வா” என்று காப்பியைக் கொடுத்தாள் அம்மா. கொடுத்துவிட்டு வந்தேன்.

“ஐயோ, ரதீ! சர்க்கரையே போடலியே!” என்று அப்பாவின் குரல் கத்திற்று. சர்க்கரை டப்பாவை எடுத்ததும், “வைடீ, கீழே!” என்று உருட்டி விழித்தாள் அம்மா. உடனே கூடத்து நிலையண்டை போய் நின்று கொண்டாள். “கலைஞருக்குச் சர்க்கரை என்னத்துக்கு?” என்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். இதைச் சொல்லச் சிரிப்பானேன் என்று குழம்பிய எனக்கு அந்தச் சிரிப்பைக் கேட்டு நடுநிசியில் இருட்டின நிசப்தத்தில் ஏதோ உறுமலைக் கேட்பதுபோல் இருந்தது. அம்மா உள்ளே போய்விட்டாள்.

ஒரு நாள் நான் சமையல் அறைக்கு அப்பால் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தேன். விஜயராகவ மாமாவோடு அம்மா கூடத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அரை மணி கழித்து அப்பாவின் குரல் கேட்டது. அம்மா உள்ளே வந்தாள்.

“கழுகுக்கு மூக்கிலே வேர்க்கிறாப்பல இருக்கே இது?” என்று அப்பாவின் குரல் கேட்டது.

“என்ன?” – விஜயராகவ மாமாவின் குரல்.

“நான் இல்லாத சமயம் பார்த்தே வறீமேன்னேன்?”

“வந்தா என்ன?”

“வந்தா என்னவா! . . . கெட் ஔட்.” – அப்பாவின் குரல். அம்மா நிலையண்டை விரைந்தாள். நானும் போய் நின்றேன். விஜயராகவ மாமா நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. அப்பாவையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். மரவட்டையையோ, எட்டுக்கால் பூச்சியையோ பார்க்கிற மாதிரி இருந்தது. அப்பா அம்மாவைப் பார்த்தார். விறுவிறுவென்று செருப்பைக்கூட மாட்டிக் கொள்ளாமல் வாசலில் இறங்கிப் போய்விட்டார். விஜயராகவ மாமா படத்தில் எழுதின சமுத்திர அலை மாதிரி உட்கார்ந்திருந்தார். ஐந்து நிமிஷங்கள் கழித்துச் சமுத்திர அலை அசைந்தது. எழுந்து வெளியே போய்விட்டது.

ஆறு மணிக்கு அப்பா வந்தார். சமையல் அறைக்கு வந்தார். “ஓகோ நான் வருவேன்னு தெரிஞ்சு போயிட்டுதாக்கும்?” என்று பொதுவாகச் சுவரைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.

“இந்தக் கிறுக்குப் பேச்செல்லாம் வாண்டாம். இன்னிக்கு ரண்டிலே ஒண்ணு தீரணும்” என்றாள் அம்மா.

“அப்படியா? . . . என்னத்துக்கு விஜயராகவன் வெறுமனே நான் இல்லாதபோது வர்றான்?”

“என்னத்துக்கா? சொல்லட்டுமா?” – என்று ஒரே ஒரு வாய்க்கடையால் சிரித்தாள் அம்மா.

“பயமுறுத்தறியே.”

“அது உங்க வேலைன்னா. நான் பாடகன் இல்லை. உங்களைக் கண்டு பயப்படறதுக்கு. நீங்கதான் இப்ப பயப்படப் போறேள்.”

“சும்மா மிரட்டாதே. அவன் எதுக்கு வரான் அதைச் சொல்லு, கிடக்கட்டும்.”

“பாஷாங்க ராகத்துக்கு வேற ஸ்வரம் எதுக்கு வரும்?”

” – “

“எதுக்கு வரும்னு கேட்டால் சொல்லுங்களேன்.” அப்பா நிமிர்ந்து ஒரு நிமிஷம் பார்த்தார். பார்த்துக்கொண்டேயிருந்தார்.

“சொல்லுங்களேன்.”

“ரக்திக்கு” என்று மெதுவாகச் சொன்னார் அப்பா.

“இப்ப புரிஞ்சுதா? அந்நிய ஸ்வரம் எதுக்கு வரும்? ராகத்துக்கு ரக்தி கொடுக்க வரும். அதை இன்னும் போஷிக்க வரும். இப்ப நாலு மாசமா குடும்ப போஷணை விஜயராகவன்னாலேதான் நடக்கிறது. நாலு மாசமா நீங்க திங்கிற அரிசி, குடிக்கிற காப்பியெல்லாம் அவன் வாங்கிப் போட்டுதுன்னேன். இத்தனை சாஸ்திரம் படிச்சும் வீட்டிலே இருக்கிற ராகமே புரியலெ” என்று அம்மா தோளில் கன்னத்தை இடித்துக்கொண்டாள்

அப்பா முகத்திலும் தலையிலும் ஓங்கி ஓங்கிப் போட்டுக்கொண்டார். நான் தடுக்கப் போனேன். “நில்லு” என்று அதட்டினாள் அம்மா. அப்பா நோக நோகப் போட்டு கொண்டுவிட்டு, “நீ உன் பொண்ணு எல்லாம் பாஷாங்கம் தாண்டி, கிராதகி” என்று பல்லைக் கடித்துவிட்டு மறுபடியும் வாசலுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. “பாஷாங்க ராகம் பாடாதேள். குடும்பத்துக்குக் கெடுதல் – கெடுதல்” என்று வாசலில் நின்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டியைக் கிழித்தும் கொள்ளத் தொடங்கிவிட்டார். தற்செயலாக வடக்கேயிருந்து வந்திருந்த அப்பாவின் அத்தான் வீட்டில் இருக்கிற நிலைமையைப் பார்த்தார். அவரை வடக்கே தாம் வேலை பார்க்கிற ஊருக்கே அழைத்துப் போய்விட்டார். மந்திரவாதிகளைக் கூப்பிட்டுப் பார்த்துப் பயனில்லாமல் பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார். அப்பாவுக்குத் தெளியவில்லையாம். பைத்திய ஆஸ்பத்திரியிலேயே ஐந்து வருடங்கள் இருந்து அவர் அங்கேயே இறந்துவிட்டதாகத் தெரிந்தது. அப்பாவின் அத்தானுக்கு அவர் மேல் மிகவும் பிரியம். அத்தை பிள்ளைகள் அப்படித்தானிருப்பார்கள். அவர்தான் பத்திரிகைக்கு – அவர் காலமான செய்தியைக் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. எங்களுக்குக்கூட அப்படித்தான் சேதி தெரிந்தது. நீங்கள் போட்ட அனுதாபக் கடுதாசு எங்கெங்கோ சுற்றித் தாறுமாறாக முத்திரை வாங்கிக் கொண்டு முந்தாநாள்தான் வந்தது. அப்பாவை அவர் அத்தான் அழைத்துப்போன அடுத்த மாசமே நாங்கள் பம்பாய் வந்துவிட்டோம்.
இத்தனை நீளமாகக் கடுதாசி எழுதினதற்கு மன்னிக்க வேண்டும். மேதைக்கும் பைத்தியத்துக்கும் இடையே உள்ள வரம்புக் கோடு மிக மெல்லியது என்று சொல்லுகிறது வழக்கம். ஆனால் கோடே இல்லாத மாதிரி நீங்கள் குழம்பிவிட்டதால் அம்மாவின் உத்தரவுப்படி எழுதினேன்.

பெற்ற அப்பாவைப் பற்றி இத்தனை கேவலமாக எழுதக்கூடாது. என்ன செய்கிறது? வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த அப்பாவிடம் நானும் தம்பியும் பட்ட வேதனை..

இப்படிக்குத் தங்கள்,

ரதிபதிப்ரியா

பின்குறிப்பு: அம்மா கோரேகானிலிருந்து இன்று காலை வந்தாள். இந்தப் பதிலைக் காட்டினேன். அவளும் இரண்டு வார்த்தை எழுத விரும்புகிறாள்.

நமஸ்காரம்… குழந்தை சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் பலராமனுக்குச் சித்தம் கலங்குவதற்கு முன்னால் ஒன்று நடந்தது. என்மேல் அவ்வளவு சந்தேகப்பட்டுக் கோபமும் கலக்கமுமாகப் போனவர் சாப்பாட்டுக்கு மட்டும் வேளா வேளைக்கு வந்துகொண்டிருந்தார். பிறகுதான் நான் எழுதி அவருடைய அத்தானை வரவழைத்தேன் . . குழந்தை சொன்னது ரொம்ப சரி. என் மாமனார் செய்த பாபத்தை அவர் தலையில் சுமந்து கொண்டு அலைந்தார். அதற்கு நாங்கள் எவ்வாறு பிணையாக முடியும்?

தங்கள்,

விஜயா விஜயராகவன்.

**
நன்றி : கல்கி, சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம்

வாசகர் பார்வை : ‘தங்ஙள் அமீர்’

மறைந்த உயிர் நண்பர் தாஜ் (எழுதும்போதே கண்ணீர் வருகிறது எனக்கு) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பான ‘தங்ஙள் அமீர்’ பற்றி சகோதரர் முஹம்மது சுஹைப் முகநூலில் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளரா என்று ஆச்சரியப்படும் சுஹைப், யாரென்றே தெரியாமற் போனாரே தாஜ் என்று உருகுகிறார்.

பதிவில் கண்ட மறுமொழிகளையும் கீழே இணைத்திருக்கிறேன். – AB
*

தமிழில் இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இருந்தார் என்றே ரொம்ப நாட்களுக்குப் பிறகு… எனக்கு இந்தப் புத்தகம் பார்த்துதான் தெரியும்.

சீர்காழியைச் சேர்ந்த தாஜ் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை .மிகச்சமீபமாகத்தான் இவர் நம்மை விட்டும் மறைந்தார் என்ற தகவல் கூட அருமை நண்பர் நிஷா மன்சூர் சொல்லித்தான் தெரியும்.

இப்படித்தான் சிலர் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்து போகின்றனர்.

அவரது அடர்த்தியான எழுத்துக்களைக் கொண்ட ’தங்ஙள்அமீர்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை ..வாசிக்கும் போது இவர் இருக்கும் போது இவரை அறியாமற் போனோமே என்ற வருத்தமே மேலோங்கியது.

சிறுகதை என்ற இலக்கணத்தையும் மீறிய சற்றே பெரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது…நாலோ…ஐந்தோ கதைகள்தான் உள்ளன.

பொதுவாக… தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து எங்கள் பக்கம்…அல்லது குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததான கதைகளையே நான் பெரிதும் வாசித்துள்ளேன். ஆனால்…முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கிறார்களே…இல்லையா…?

கீழ்த் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை…மிக நேர்த்தியாக .எனதுமுதல்திருமணம்… பெருநாள்காலை..போன்ற கதைகளில் மிக விரிவாக சித்தரிக்கிறார்….

தொகுப்பின் தலைப்புக் கதையான ’தங்ஙள் அமீர்’ கதை முழுக்க சவூதி அரேபியா தம்மாம் மற்றும் ரியாத் நகர்களில் நடக்கிறது…இந்த இரண்டு ஊர்களிலுமே நான் பணி செய்தவன் என்பதால் இக்கதையும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது…

இந்தியாவிலிருந்து மாந்ரீகம் செய்யும் ஒரு கேரளத் தங்ஙள் மும்பை வந்த ஒரு அரபியின் அழைப்பை ஏற்று அவன் காதலிக்கும் ஒரு பெண்னை மாந்த்ரீக சக்தியால் அவனோடு சேர்த்து வைக்கும் பொருட்டு அவனோடு ரியாத் சென்று… அது முடியாத காரணத்தால் எங்கே அந்த அரபி தன்னை நாடு திரும்ப அனுமதிக்க மாட்டானோ…?என்ற அச்சத்தில் கேரள முஸ்லிம்களிடம் தஞ்சமடைய…அவர்கள் தங்களது செல்வாக்கை பய்படுத்தி தங்ஙளை இந்தியாவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் செயலை…மிக அற்புதமாக சித்தரிக்கிறது கதை.

சவூதிக்கு ஒரு முதலாளியிடம் வேலை செய்ய வந்து அந்த முதலாளியின் அராஜகம்…பிடிக்காததால்…அவனை விட்டும் தப்பி…வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்து…நாலைந்து ஆண்டுகள் உழைத்த பொருளோடு ..இறுதியாக இந்தியத் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து பிறகு தூதுவரகம் வழங்கும் தற்காலிக பாஸ்போர்ட்டில் தாய்நாடு திரும்பிய பலரது கதைகளை நான் அங்கிருக்கும் போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

தங்ஙள் கதையும் அம்மாதிரியானதுதான். என்ன வழக்கமான கூலித் தொழிலாளியாக இல்லாமல் சற்று மேல் மட்ட கதையாக இது சொல்லப்படுகிறது

“எனது முதல் திருமணம் “கதை தாஜ் சிறுவயதாக இருந்த போது… விளைச்சல் இல்லாத தென்னை மரத்துக்கு திருமணம் செய்து வைத்தால்…விளைச்சல் பெருகும்..என்ற பாரம்பர்ய கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையையொட்டி….அந்த தென்னை மரத்துக்கு தாஜையே திருமணம் செய்து வைத்த கலகலப்பான நிகழ்வை… அங்குள்ள முஸ்லிம்களின் பேச்சு நடையில் சித்தரித்துள்ளார்..

பெருநாள் காலை’யும் அதே மாதிரியான ஒரு முஸ்லிம்கள் வாழ்வியல் சித்தரிப்புதான்.

இறந்தவன் குறிப்புக்கள்’ மிகவும் அடர்த்தியான இலக்கியச் சொல்லாடல்கள் மிகுந்த கதை.இப்படியான எழுத்துக்களை எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் கூட…இருந்திருக்கிறார்களா..? என்று என்னை வியக்க வைத்த ஒரு நிரூபணம் .

தாஜ் பத்திரிக்கைகளில் எழுதியவரா…? என்று தெரியவில்லை.

எனக்குத்தான் தனிப்பட தெரியாமல் போனாரா…? அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா….? என்பதும் தெரியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். யாரென்றே தெரியாமற் போனது ஒரு இலக்கிய சோகம்.

*

Thanks to : K S Mohammed Shuaib

*

மறுமொழிகள் :

Firthouse Rajakumaaren Nazeer : ஒரு சிறந்த இலக்கிய வாசகர் கவிஞர் ,எழுத்தாளர் தாஜ் அவர்களைத் தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக இருக்கு ஜி !

நிஷா மன்சூர் : பெரும் சோகம் இது. தமிழ்ச் சூழலில் படைப்புகளை விட படைப்பாளிகளின் பாலிடிக்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது

Slm Hanifa : எனக்கு பத்துவருடங்களுக்கு முன்னரே அறிமுகமானார்.. ஆபிதீன் பக்கங்களை அவர் எழுத்துக்கள் அலங்கரித்தன.. தளம் சிற்றிதழ் அவரின் படைப்புகளை பிரசுரித்தது.. தமிழ்சினிமாவின் பின்னணியில் அசோகமித்திரன் எழுதியதைவிடவும் இவரின் எழுத்து உன்னதமானது.. ஆனாலும் இவரைப்பலரும்கண்டுகொள்ளவில்லை… மரணத்திற்கு முதல் நாளும் இவரோடு பேசினேன் … அனாரின் கவிதைகள் பற்றிய இவரின் பார்வை எத்துணை சிறப்பானது தம்பி..

Mohamed Sabry : இவர் அறிமுகமானவர்தான். கட்டாயம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை. அவர் மரணச் செய்தி கேட்டதும் மிகவும் கவலையாக இருந்தது. அண்மையில்தான் தங்ஙள் அமீர் வாசித்தேன்.

Meeran Mitheen : நல்ல நேசமுள்ள அன்பாளராக இருந்தார்.

Kannan Sundaram : சுரா நடத்திய காலத்திலிருந்தே காலச்சுவடில் பங்களித்துள்ளார். அதிகம் எழுதுபவர் அல்ல.

நசிஹா நேசன் : முகநூல் நண்பராக இருந்தவர்…முன்னர் சில நேரங்களில் முகநூல் உள்டப்பி மூலம் பேசியதுண்டு காகா….

Moulasha Moulasha (பிறைநதிபுரத்தான்)  : 2002-3 களில் திண்ணை இணைய தளத்தில் அடிக்கடி கட்டுரை கவிதை எழுதுவார். அவ்வப்போது நானும் எழுதும்போது நன்பரானோம். அடிக்கடி மெயில் மூலம் ஊக்கம் தருவார். சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இரண்டு முறை வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் போன் மூலம் தொடர்பு கொள்வதுண்டு எழுத நிறைய விஷயங்கள் இருந்தன அவரிடம். எதிர்பாரா மரணம் – ஒரு படைப்பாளியை பறித்துக் கொண்டது.

Rasool Mohideen ; ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகம். இன்று ஐயாயிரம் முஸ்லிம் எழுத்தாளர்கள் உயிர் வாழக் கூடும். மாவட்டம், சாதி, இஸம், முற்போக்கு லாபி, குழு மனோபாவம் அழுத்துகிறது.இப்போதைக்கு முகநூல் இணைக்கிறது.

தாஜ்  குறுநாவல்கள் – காலச்சுவடு

காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக, பிரியத்திற்குரிய நண்பர் தாஜ்  எழுதிய ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு ‘தங்ஙள் அமீர்’ , 2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவருகிறது.

பிறப்புக்கும் முன்னாலேயே நம் மேல்தோல்களிலும் இருதயத்திற்குள்ளேயும் ‘இறக்கியருளப்படும்’ அநாமதேயச் சுவடுகள் ஒவ்வொருவரையும் எப்படி வளைத்து நெளித்து உருளவிடுகிறது என்பதை நயமாகவும் நகைச்சுவையோடும் சற்றே அதிர்ச்சி மதிப்பீட்டோடும் சொல்லும் குறுநாவல்கள் இவை என்று சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் தாஜ்!

அட்டை வடிவமைப்பு : ரஷ்மி.

*
தாஜ் முன்னுரை :

இந்தத் தொகுப்பைப் பற்றி, வாசிக்கும் நீங்கள் சொல்லும் தருணம் இது. மேலாக நான் ஏதேனும் சொல்லனுமென்றால்…

முதலில், என் மூத்த படைப்பாளிகள் அத்தனைப் பேர்களுக்கும் இந்த முயற்சியை முன்னிறுத்தி நெகிழ்வோடு நன்றி சொல்லனும். நன்றி! குறிப்பாய் பெரியவர் தி.ஜாவுக்கும், என் மீது அன்பு பாராட்டிய சு.ரா. அவர்களுக்கும்! அந்தக் கீர்த்திகள் செப்பனிட்டப் பாதையில்தான் இப்படி ‘எழுதுகிற பேர்வழி’யென வலியில்லாமல் நடந்து இருக்கிறேன்.

இதில் காணும் ஐந்து குறுநாவல்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திக்கைப் பிடித்து பயணித்து இருப்பவை. இவற்றில் ஓரிரண்டில் எங்கள் மண்ணின்- ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட – கீழத்தஞ்சை வட்டார – இஸ்லாமிய ராவுத்தர் குடும்பங்களில் பேசுகிற – என் மனமொன்றிய வட்டார மொழியை மகிழ்ச்சியோடு பிணைத்திருக்கிறேன். இதற்கு முன் இன்னொருவர் காணாத ரசனை இதுவெனவும் கருதுகிறேன்! மற்றப்படிக்கு நான் எதிர்கொண்ட கதாபாத்திரங்களின் நிறைவின்மை அல்லது நிறைவை நீங்கள்தான் சொல்லனும்.

நவீன இலக்கியத்தினை ஒருவிதக் காதலோடு நான் ஒன்றுவதற்கு காரணமான மறைந்த என் நண்பர் கூத்தாநல்லூர் ஹாஜா அலி, நண்பர்கள் ஆபிதீன், நாகூர் ரூமி, முகம்மது சாதிக் மற்றும் என் அன்பிற்குரிய திரு. கண்ணன், அண்ணன் களந்தை பீர்முகம்மது அவர்களுக்கும் என் நன்றிகள்.

80 – களில்பஞ்சம் பிழைக்கப் போன சௌதியில், நவீன இலக்கியத்தின் மேல் காதலானேன். என் மூத்தப் படைபாளிகள் பலரின் ஆக்கங்களை அங்கே வைத்துதான் வாசித்தேன். அப்படி வாசிக்கவும், உள்வாங்கிக் கொள்ளவும் உறுதுணையாக இருந்த ‘ரஸ்தனூரா- அராம்கோ கேம்’பிற்கும் நன்றிகள்! இன்னும் நான் நன்றி சொல்லனும் என்றால் அது என் மனைவி குழந்தைகளுக்கென்றே இருக்கும். அவர்கள் எனக்கு அவ்வப்போது சுதந்திரமான ஓர் இருப்பை வழங்கியிராவிடில் இந்தத் தொகுப்பே எனக்கு சாத்தியமாகி இருக்காது.

*

நன்றி : தாஜ் (https://www.facebook.com/tajdeen.sa)

‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்

‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே…! என்று தோன்றியதில் கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB
***

Jun 10, 2016

uyirthtlam - vazhaippazam1
அல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா? ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’

—————————

Jun 8, 2016
எனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம்? ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு!

குத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ? ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’!
—————————

Jun 7, 2016
கவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது! ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்!

பெரிதாக்கிப் பார்க்க : https://www.facebook.com/photo.php?fbid=1060605434009199&set=a.1060605417342534.1073745566.100001792565524&type=3&theater

—————————

Jun 5, 2016

நாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி!

—————————

Jun 2, 2016
bonding – Meghdut Sen

bonding - Meghdut Sen

—————————

Apr 26, 2016
உயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக!’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.

—————————
Jun 1, 2016

காலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் !
—————————
Apr 17, 2016
ஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி!
—————————

Apr 17, 2016
இன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்!’ எனறு சொல்லுமாம்!)
—————————

Dec 1, 2015

காலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
https://abedheen.wordpress.com/2015/12/01/uyirththalam-kalachuvadu/

————-
Oct 12, 2014
ஃபேஸ்புக்கில் போகன் சங்கர்

ஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.

ஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்

நான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்

—————————

Friday, December 2, 2011
ஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்

—————————

Monday, July 28, 2008
ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! – தாஜ்
*

ஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்!

« Older entries