ஜானகிராமனின் யாசீன்

‘யாசீன்…அல்-குர்ஆனில் ஹகீம்’ அல்ல, முஹமது யாசீன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மும்தாஜ் யாசீன். 1978ஆம் ஆண்டின் பரிசுக்குரியவராக, தமிழின் பெரும் படைப்பாளியான தி. ஜானகிராமன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ( செம்மலர் /Dec 78ல் கதை வெளியாகியிருக்கிறது. அந்த மாதச் சிறந்த சிறுகதையென தேர்ந்தெடுத்தவர் திரு.இனியவன்) . பூமணி போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்ற தொகுப்பிலிருந்து யாசீன்-ஐ தான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாக ஜானகிராமன் இப்படிச் சொல்கிறார் :

‘சொந்த, ஆனால் நான் புதிதாக கண்டுபிடித்து விடாத , தரங்களை வைத்துக் கொண்டு பார்க்கையில் (இந்தப் பன்னிரண்டு கதைகளில்) எனக்கு மிகப் பிடித்த கதை மும்தாஜ் யாசீன் எழுதிய ‘பசி’ என்னும் கதை. மற்ற கதைகளும் எனக்கு உவப்பாக இருந்தாலும் மும்தாஜ் யாசீனின் கதை மிகவும் என்னை கவர்ந்ததற்குக் காரணம் அவர் தன் அனுபவத்தை சுயானுபவ உணர்வுடன் எனக்கும் ஏற்படுத்தியதுதான். அடக்கம், தொனி, தெளிவு, சூசனை ஆகிய பல அம்சங்களில் , மூளிப்படாமல், வெற்றியாக உருவான கதை. தேவர் கண்களிலும் கடைசியில் நீர் வராமல் இல்லை. ஆனால் அதையும் அவர் சமாளித்திருக்கிறார். அதாவது மும்தாஜ் யாசீன் சமாளித்திருக்கிறார். எல்லா கதைகளையும் நான் மனசாரப் பாராட்டுகிறேன். ஆனால் என்னுடைய விசேஷப் பாராட்டுக்குரியவர் மும்தாஜ் யாசீன்’

‘1978ஆம் வருடம் முஸ்லீம்களுக்கு பிரச்சனையில்லா வருடம் போலும்’ என்று, மும்தாஜ் யாசினின் கதைக்களன் குறித்து எனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தாலும் , ‘சொல்லாட்சியில் ஒரு நயம், நடை ஒட்டம் – எதைப் பார்த்தாலும் தேர்ந்த கையாகத் தெரிகிறது’ என்று ஜானகிராமனே தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு என் வாயைப் பொத்திக்கொள்வதல்லவா முறை?

‘பன்னிரண்டு கதைகளும் நானும்’ என்ற தன் முன்னுரையில் தி.ஜானகிராமன் எழுதியவற்றிலிருந்து சுவாரஸ்யமான சில பகுதிகளை இங்கே பதிகிறேன் (‘பசி’ சிறுகதை கடைசியில் இருக்கிறது). ஜானகிராமனுக்கு தன் அடக்கம் கூட நையாண்டிக்குரியதுதான்!

ஜானகிராமன்:

‘Judge not , that ye be not judged’. எனக்குப் பயம். பிறர் என்னை ஜட்ஜ் பண்ணுவார்களே என்று இல்லை. அவர்கள் என்னை ஜட்ஜ் பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. படைப்பு எழுத்தாளர்களை தரம் பிரிப்பது, எடைபோடுவது – இது எனக்கு சிரமமான வேலை. நான் அடிக்கடி சொல்லி எனக்கே அலுத்துப்போன ஒரு செய்தியை மீண்டும் இங்கு சொல்கிறேன். சிருஷ்டியின் ரகசியமே ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டிருப்பதுதான். ஒரு முகம் போல ஒரு முகம் இல்லை. ஒரு குரல் போல ஒரு குரல் இல்லை. ஒரு இலை போல ஒரு இலை இல்லை. வெகு சூட்சுமமாக, மிக மிக நுண்ணியதாக ஒரு இலை இன்னொரு இலையிலிருந்து வேறுபட்டுத்தானிருக்கும். அப்படி வேறுபடுவது அதன் உரிமை. அதன் தனித்துவம். இயந்திரங்கள் உற்பத்தி சாமான்களைப் பற்றிக்கூட எனக்கு இப்படி ஒரு சந்தேகம் உண்டு (நல்லவேளையாக அது சந்தேக நிலையில்தான் இருக்கிறது).

விமர்சனக் கட்டுரை எழுதுவது எனக்குப் பாடாக இருக்கிறது. நான் விமர்சகன் இல்லை. விமர்சனக்கலை மிகப்பெரிய விஞ்ஞானக் கலை. ஆராய்ச்சிக் கலை. நிறைய படிப்பு வேண்டும். ஆழ்ந்து அலசும் கூர்மை வேண்டும்; தெளிவு வேண்டும். 5, 10 ஆண்டுகளில் கூட இலக்கியம் வளர்கிற வளர்ச்சி தெரிய வேண்டும். இலக்கிய வரலாறு, உளவியல், இலக்கணம் – எல்லாம் தெரிய வேண்டும். ஒரு நாவலில் எத்தனை செட்டியார்கள் வருகிறார்கள், எத்தனை ஐய்யர்கள், எத்தனை சேர்வைகள், தேவர்கள், அம்பலக்காரர்கள் வருகிறார்கள், எத்தனை ஷானாக்கல், ஜானாக்கள் என்றெல்லாம் எண்ணி, கட்டம், பத்திகள் போட்டு வகைப்படுத்துவது முதல் கதை மாந்தர்கள், எந்த சமுதாய-பொருளாதார- கொள்கை வாதங்களை அறிந்தோ அறியாமலோ சேர்ந்திருக்கிறார்கள் என்று கணிப்பதுவரை பல திறமைகள் வேண்டும். ரொம்ப சிரமசாத்தியமான வேலை. எனக்கு இயல்பாகவும் பயிற்சியாலும் இந்தத் திறமை ஏதும் இல்லை. இருக்கிற ஒரே தகுதி கண்ணும் காதும் கொண்டிருப்பதுதான். இலக்கிய சிருஷ்டிகளை ஒரு ரசிகன் என்ற முறையில்தான் படிக்கிறேன். இசை நிகழ்ச்சிகளையும் அப்படியேதான் கேட்கிறேன். ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்குக்கூட பயமாக இருக்கிறது. உதாரணமாக பாபநாசன் சிவன் போன்ற இசை அறிஞர்கள் வனவாசம் போன பிறகு கடந்த 15, 20 வருடங்களாக, தமிழ் சினிமாவில் ஒரு புதிய சங்கீதம் பிறந்து வளர்ந்திருக்கிறது. எல்லா ராகங்களும் ஒரே ராகம் போலவும், மேடைப் பேச்சுகளையே தட்டிக் கொட்டி பாட்டாக நீட்டியது போலவும் என் காதுக்கு ஒலிக்கிறது. இதைப் பலகோடி மக்கள் ரசிக்கிறார்கள். பாடம் பண்ணி முணுமுணுக்கிறார்கள். மக்கள் கலையாக வளர்ந்துள்ள இந்தக் கலையை என்னால் கேட்டு அனுபவிக்கத் திறமை இல்லாததால், என் ரசிகத் தன்மையிலும் வளர்ச்சியிலும் காலத்தோடு ஒட்டலிலும் எனக்கே சந்தேகம் வந்திருக்கிறது. வேகமாக முன்னேறும் மக்களோடு ஈடு கொடுத்து நடக்க முடியாத நொண்டியாக , கடைப்படாதவனாக ஆகிவிட்ட பயமும் ஆட்டுகிறது.

…. ….

நான் கதையில் காணத் துடிக்கிற அம்சம் Timelessness. கதை ஒரு குறிப்பிட்ட இடத்தில், காலத்தில்தான் நடக்கிறது. ஒரு சூழ்நிலையில், ஒரு சரித்திர கட்டத்தில்தான் நடக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அந்தக் குறிப்பிட்ட காலத்திலிருந்தும் குறிப்பிட்ட இடம், சூழ்நிலையிலிருந்தும் விடுபட்டும் நிற்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக சலித்துப்போன உவமை வேண்டுமானால் தாமரை இலைத் தண்ணீர் என்று சொல்லலாம். பலாப்பழத்தை கை நிறைய சதும்ப எண்ணெய் தடவிக்கொண்டுதான் நறுக்கி சுளை எடுக்க வேண்டும். கதையின் காலமும் இடமும் பிசுக்பிசுக்கென்று அளவுமீறி நினைவில் ஒட்டிக் கொண்டிருப்பதால் எண்ணெய் இல்லாத கை நினைவுக்கு வருகிறது. நானே இப்படிப் பல பிசுக்குக்கதைகள் எழுதியிருப்பதால் ஒரு அனுபவ ஞானத்தால் இதைச் சொல்கிறேன்.

நான் சங்கீதக் கச்சேரிகள் நிறைய கேட்பதுண்டு. இதில் பல அனுபவங்கள். ஒரு அனுபவம் ஒரு இரக்க உணர்ச்சி. சில பேர் ராகம் பாடுவார்கள். விஸ்தாரமாக பாடிக்கொண்டே மேலே மேலே போவார்கள். கடைசியில் ரொம்பவும் பறந்து போய் எங்கே எப்படி இறங்குவது என்று தெரியாமல் சுற்றிச்சுற்றி வந்து, கடைசியில் எங்கோ போய் காயம் பாடுவது போல் விழுந்து விடுவார்கள். சிலபேர் ஆரம்பத்திலேயே ஏதாவது செய்வார்கள். ராமேச்வரம் போக சென்ட்ரல் ஸ்டேசனுக்குப் போய் , பிறகு ஓகோ என்று நினைவு வந்து எழும்பூருக்கு வந்து ரயில் பிடிப்பதுபோல இன்னொரு அனுபவம்; முடிக்கும்போது ஒரு ஸ்வரப் பிரஸ்தாரத்தை தாளக்கட்டோடு தயார் செய்துகொண்டு , கரீஸநித, ரீஸாநிதப, ஸநீதபம, கமாபதப, மபாதநித என்று ஆர்ப்பாட்டம் அமளிகள் செய்தெல்லாம் முடிப்பார்கள். சிறுகதையிலும் இந்த அமளி, கண்ணீர்கள், குறியீடுகள் முதலியவற்றால் ஏற்படுவதுண்டு. இந்த ரகளையில்லாமல் சற்றுமுன்பே அமைதியாக முடித்திருக்கலாமே என்று சில சமயம் தோன்றுவதுண்டு. நானே இப்படிப் பல அமளிகள் செய்திருப்பதால் சொந்த அனுபவத்தில் இதைச் சொன்னேன்.

எதுவும் Contrived ஆகத் தோன்றும்போது திறமை தென்படலாம். சாதனை தென்படலாம். சுயானுபூதியின் நிர்மயமான உணர்வு ஒன்று உண்மையாக இருப்பதன் ஒலி காதில் விழுவதில்லை. நைந்த பழமைகளைச் சாடினாலும், தனிப்பட்ட முறையிலோ, சமூக அளவிலோ இயங்கும் வஞ்சம் பொய்மைகளையும், மௌட்யங்களையும் உதறினாலும், புதிய நெறிகளை, தைர்யங்களை வரவேற்றாலும் எதைச் செய்தாலும் உண்மையின், சுயானுபூதியின் ஆதாரமான சுருதியை விட்டு விலகாமல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் முக்கியத் தேவை. நிர்ப்பந்தம் என்று சொல்லக் காரணம் சில குரல்கள் இயல்பாகவே சுருதியில் இழைகின்றன. பல குரல்கள் சாதகத்தால் அதைச் சாதிக்க வேண்டியிருக்கிறது. வலது, இடது, மையம், ஓரம் என்றெல்லாம் சொல்லி இந்த நிர்ப்பந்தத்திலிருந்து தப்புவதற்கில்லை. உத்தியிலோ, சொல்வளத்தாலோ, நடையிலோ, விஷயங்களிலோ எந்தப் புதுமை செய்தாலும், எந்தத் திறமைகளைச் செய்தாலும் இந்த சுயானுபூதியின், எதையும் தன்னுடைய அனுபவமாக ஆக்கிக் கொண்ட சாதனையின் ஒலி கேட்காதபோது, அந்தத் திறமைகள் செயற்கையாகக் கேட்கின்றன. ஒட்ட வைத்த கைகால்களாகத் தோன்றுகின்றன.’

– தி. ஜானகிராமன்/ புதுடெல்லி

***

பசி
செம்மலர் – டிசம்பர் – 1978
மும்தாஜ் யாசீன்

அந்தக் கைகளுக்குத்தான் அப்படியொரு பக்குவம் கூடி வருகிறதோ; இல்லை பதார்த்தங்களுக்குத்தான் சர்மாவின் கைகள் பட்டால்தான் ருசியைக் காட்டுவோம் என்ற பிடிவாதம் இருக்கிறதோ தெரியவில்லை. மனுஷனின் ‘மணீஸ் கபே’யின் அப்படி ஒரு ருசி. வாரி அணைத்துக் கொள்கிற மாதிரி , வாசனை கடைக்குச் சற்று எட்டத்திலிருந்தே மூக்கை அரிக்கும்.

ஆறுமுகத்தேவர் தினமும் அந்தப் பக்கமாகத்தான் வீட்டுக்குப் போக வேண்டும். மடியில் கனமிருக்கும் சில சமயங்களில் முந்தைய ருசியின் எச்சங்களாக ஆசை துளிர்ப்பதுண்டு. தோசையின் இதமான முறுகலுடன் நெய்யின் வாசனையும் நாக்கில் புருபுருக்கும். அவருக்குப் பிடித்தமான ‘அயிட்டம்’ அது. ஆனால் அடுத்த கணமே விரட்டியடித்து விடுவார். நண்டும் சிண்டுமாகப் பிள்ளைகளைப் பெற்று , அதுகள் தெருப்பலகாரத்திற்கே ஏங்கிக் கிடக்கும்போது தின்று கழித்த தனக்குத் தோன்றும் ‘சின்னப் புத்தியை’ மானசீகமாகச் செருப்பால் அடித்துக் கொள்வார்.

‘ஒரு நாளைக்கு அதுகளை அழைச்சு வந்து திங்க வைக்கனும்’

அந்த ஒருநாள் இன்னும் வரவில்லை. இங்குதான் பத்து வருமானம் வருவதற்குள் பதினைந்து செலவுகள் எதிர் நிற்கிறதே! அதுவும் முன்பு போல அவர் என்ன வியாபாரமா செய்கிறார்? மாட்டுத் தரகு, குலத்தின் எவனோ, எப்பொழுதோ செய்த தொழில்; இப்பொழுது ஆறுமுகத் தேவரே என் புரவலன் என்று ஒட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறது. தரித்திரம், மாட்டின் பல்லைப் பிரித்து, சுழியைக் காட்டி, வயசைச் சொல்லி, கொடுப்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் நடையாக நடந்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ ‘நொள்ளைப் பணம்’தான். அதில் வயிற்றைக் கழுவுவதா? குதிர் போல நிற்கும் பெண்களை நினைப்பதா?

ஆயிற்று, மூத்தவள் ‘உட்கார்ந்து’ நான்கு வருஷம். ஒற்றைக்கல் மூக்குத்திக்கூட இன்னும் வழியில்லை. அதற்குள் சின்னவள்.

‘ம்ம்..மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போவான்?’

பாரத்தை இறக்கிவைத்து சிறிது இளைப்பாறிக் கொண்டாலும் மீண்டும் சுமக்க நேரிடும்போது…

‘யோவ் தேவரே… உம்மைத்தான்… நில்லுமய்யா…’

ஹோட்டலிலிருந்து படியிறங்கிய வடிவேலு ஆசாரி, அவரை அழைத்தவாறு ஓடிவந்தார். பூசினாற் போன்ற உடம்பு, சிறு ஓட்டத்தில் குலுங்கியது.

‘என்னய்யா ரெண்டு நாளில் தர்றேன்னு சொன்னீரு, இப்ப பாக்காத மாதிரி போறீரு..’

‘கெடைக்க வேண்டிய எடத்தில கொஞ்சம் தடங்கல். வேற ஒண்ணும் இல்லை. நானே இதைச் சொல்ல வரணும்னு..’

‘ஆமா..நல்லா வந்தீரு..உம்மை மாதிரி நாலு பேருக்குக் கொடுத்தா அப்புறம் நானும் ஓடு எடுக்க வேண்டியதுதான். முடியலைன்னா சொல்லும், விட்டுடறேன். எத்தனையோ செலவிலே இது ஒண்ணு. என்னை ஏன் அலைய வைக்கிறீர்?’

பிசாசுக்குட்டி குரல்வளையில் வாய் வைத்து, வலுவுடன் இழுத்து நாராகக் கிழிக்கிற மாதிரி இருந்தது தேவருக்கு. ‘கேவலம் இருநூறு ரூபாய்க் காசுக்கு என்ன பேச்சுப் பேசுகிறான்? புதுக்காசுத் திமிர்! மாற்று ஜாதிக்காரனிடம் , அதுவும் இந்த ‘சின்னப் பயலிடம்’ கடன்பட்டது எவ்வளவு தப்பாகி விட்டது? நடுத்தெருவில் இப்படி அம்மணமாய்..’

இதயம் புழுவாகத் துடித்தது.

வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவுடன் அவருக்காகவே காத்திருந்ததைப் போல விசாலம் ஆரம்பித்தாள்.

‘பார்த்தீங்களா… இந்த பிரபுக் கடன்காரனை? சாம்பார் நல்லா இல்லேன்னு சொல்லி தட்டை விசிறி எறிஞ்சுட்டுப் போறான்’

விழிகளை நெருப்பாக்கி உருட்டிப் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல், தேவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவருடைய வயிற்றெரிச்சல் அவருக்கு.

விசாலமும் அவரைப் பின் தொடர்ந்தாள்.

‘வரவர அவனது அட்டகாசம் அதிகாப் போச்சு. ஏண்டா இப்படிச் செய்யறேன்னு ஒரு நாளாச்சும் கேட்கறீங்களா?’

வருஷத்திற்கு ஒன்றாகப் பெத்து அலுத்துப் போன அவளுக்கு எதையாவது மென்றுகொண்டிருக்க வேண்டும். சுமக்க முடியாத பாரத்தை, தானே தூக்கியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிற மாதிரி, சதா சர்வமும் ஒரு அலுப்பு. அதற்கு தேவரா காரணம்? இல்லை அவர் பெற்றதுகளா?

இரண்டும்தான். முதல் இரண்டும் ‘பெட்டை’யாயிற்றே என்று மூன்றாவதுக்குக் கொடுத்த செல்லம், இப்பொழுது அவனை ‘தறுதலையாக்கி’ திரிய விட்டிருக்கிறது.படிப்பும் இல்லை. எங்கோ வேலை செய்து, பேருக்கு ஏதோ அம்மாவிடம் கொடுத்து, தின்று, வீட்டில் ரகளை செய்து, பின் கொஞ்ச நாட்களுக்கு வராமலிருந்து போகும் அவனை – தான் பெற்றவைகளில் ஒன்றில்லை என்று தேவர் நினைக்க ஆரம்பித்து சில மாதங்களாகி விட்டன.

திரும்பத் திரும்ப அவனைப் பற்றியே பேசினால்…?

முகம் அலம்பிக்கொண்டிருந்த ஆறுமுகத் தேவர் ‘தூ’வென்று துப்பினார்.

‘அவன்தான் உன் மூஞ்சி மாதிரி இருக்கானே, நான் ஏண்டி கேக்கப் போறேன்?’

‘தேவர் மகன் தேவருக்கு இப்பவாச்சும் இந்த மூஞ்சியைப் பத்தி தெரிஞ்சுதே… அதைச் சொல்லனும்’

‘இப்பவாச்சும் என்றால்?..இத்தனை ராத்திரிகளுக்குப் பிறகு என்று அர்த்தம்! தேவரின் தன்மானம் அவரைச் சுட்டது.

‘ஆமாம்; பேரழகிங்கிற நெனைப்புலதான் தினமும்..’ என்று ஆரம்பித்தவர், எதிரே மூத்த பெண் நிற்பதைக் கண்டதும் ‘சும்மாயிருடி..அப்புறம் வாய்ல ஏதாவது வந்துடப் போவுது’ என்று சொல்லிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

இரண்டே அறைகளுள்ள அந்த வீட்டில், சமையலறையில் சும்மா உட்கார்ந்திருந்தால், அப்பாவை அங்கு சாப்பிடச் செய்தால் இருவருக்கும் இடையே மேலும் வாக்குவாதம் வலுக்கும் என்று நினைத்த மூத்த பெண் விஜயா, அவர் இருந்த அறையிலேயே சாப்பாட்டுத் தட்டை கொண்டு வந்து வைத்தாள். மட்ட ரகமான அரிசி சாதத்தின் வாசனையும், பருப்போடு ஒட்டாத கத்தரிக்காய் சாம்பாரின் நெடியும் முகத்தில் அடித்தன. அப்போது இந்த வாசனையைப் பார்த்துத்தான் மகன் தட்டை வீசிவிட்டுப் போயிருப்பானோ என்று தேவர் நினைத்தார். ‘ம்ம்…நாக்கு தடிக்கும் வயசு, அவனைச் சொல்லியும் குத்தமில்லே…’

‘எல்லாம் என் தலையெழுத்து. அப்பன் கிட்டேயும், புள்ளெகிட்டேயும் மாரடிக்கணும்னு எழுதியிருக்கு’. கண்களில் நிறைந்த நீர் கீழே விழுவதற்கு சகுனம் பார்க்க விசாலம் பின்னும் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள்.

தேவருக்கு தலை உச்சி எரிந்தது.

அந்த வெறியில் தன்னை நோக்கி ஓடிவந்த கடைசிப் பையனுக்கு ஒரு காரணமும் இல்லாமல் முதுகில் ஒரு அடி கொடுத்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட அது, பாதையை மாற்றிக்கொண்டு அம்மாவிடம் ஓடியது. அழுதபடி ஓடிவரும் பிள்ளையைக் கண்டதும் ‘இடையில் இது என்ன சனியன்’ என்று இழுத்து வைத்து அவளும் ‘சாத்த’ ஆரம்பித்தாள்.

தேவருக்கு என்னமோ தன்னைப் பாவித்தபடியே அவள் குழந்தையை அடிக்கிறமாதிரி தோன்றியது. சாப்பிடுவதை நிறுத்தி, ‘உனக்கு அந்த அளவுக்குக் கொழுத்துப் போச்சாடி’ என்று சத்தமாகக் கேட்டார்.

‘ஆமாம்..நீங்க கொண்டுவந்து கொட்டும் பட்சணங்களைத் தின்னு கொழுத்துத்தான் போச்சு..’ விசும்பலுக்கிடையே அவருக்கு இணையான சத்ததுதுடன் விசாலம் பதில் கூறியபோது, கையை உதறிக்கொண்டு தேவர் அவள் மேல் முரட்டுப் பாய்ச்சலாகப் பாய்ந்தார். அவளது தலைமயிரை கையில் சுருட்டிக்கொண்டு ஓங்கி ஓங்கி அடித்தார். ‘விடுங்கப்பா..விடுங்கப்பா..’ என்று மூத்த பெண்கள் இரண்டும் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சின. ‘சின்னதுகள்’ மூன்றும் ஒன்றையொன்று நெருங்கியபடி சற்று எட்டத்திலிருந்துகொண்டு அழத் தொடங்கின. அம்மாவை அடிக்கிறார் என்பதற்காகவா? அல்லது தங்கள் பக்கம் அவர் கவனம் திரும்பினால் என்ன செய்வது என்ற பயமா? தெரியவில்லை.

ஒவ்வொரு அடிக்கும் விசாலத்தின் சுருதி ஏறியதே தவிர குறையவில்லை. அடிபட்டுச் சாவது என்று தீர்மானம் செய்துவிட்டவளைப் போல பிடிவாதமாக எதிர்த்துப் பேசினாள்.

கடைசியில் அவரே பணிந்து போகவேண்டியதாயிற்று.

‘இந்த வீட்டில் என்றைக்குத்தான் எழவு விழுமோ? முதலில் நான் சாகனும். அப்பத்தெரியும் சங்கதி…’

சட்டையைப் போட்டுக்கொண்டு, அதே கோபத்துடன் தேவர் வெளியே புறப்பட்டார்.

ரோட்டில் வெயில் பொசுக்கியது.

செருப்பில்லாத காலில் அதன் உக்கிரம் பாய்வதையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து வந்து, வண்டிப்பேட்டையில் வழக்கமாக தான் அமரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டார். அவருடைய தொழில் கேந்திரம் அது. அங்கு தெரிந்த முகங்களும் அதிகம்.

மனம் இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.

‘என்ன தேவரே சாப்பிட்டாச்சா?’ புண்ணாக்கு மூட்டை ஏற்றிய வண்டிக்காரன் – தெரிந்தவன் – கேட்டான்.

‘ம்..ஆச்சு.’ ஆறுமுகத்தேவர் சுரத்தில்லாமல் பதில் சொன்னார்.

‘அப்ப சரி..வண்டியைக் கொஞ்சம் பாத்துக்குங்க, சாயாக் குடிச்சுட்டு வந்திடுறேன்’

தேவர் அதற்கு ஒத்துகொண்டதும் , வண்டிக்காரன் டீக்கடைப்பக்கம் போனான்.

ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு வண்டிக்கு அருகில் வந்தார். புதிய முகத்தைக் கண்டு மாடு சீறிற்று. கழுத்து மணியின் ‘க்ளிங்’ சத்தம். தேவர் வண்டியிலேறி உட்கார்ந்து கொண்டார். நரைத்துப் பீடிப் புகையால் பழுப்பேறிய மீசையை கைகள் வருடின.

நடுரோட்டில் தன்னை நிற்கவைத்துக் கடன் பாக்கியைக் கேட்ட ‘சின்னப் பயலையும்’ , வீட்டில் தன்னை அவமானப் படுத்துகிற மாதிரி நடந்துகொண்ட ‘சிறுக்கி’யையும் நினைக்க நினைக்க அவருக்கு ஆத்திரமாக வந்தது. தன்னுடைய அப்பன் – பாட்டன் இருந்த இருப்பென்ன, தன் நிலை இப்படி ஆயிற்றே என்று ஒருகணம் கலங்கினார். பின்பு அதை ஈடுகட்டுகிற மாதிரி தன்னுடைய வசந்த காலங்களையும் நினைத்துக் கொண்டார்.

இத்தனை வருடமாக வாழ்ந்த வாழ்க்கை, இன்றைய ஒருநாளில் அஸ்தமித்துப்போன மாதிரி இருந்தது அவருக்கு. ‘பெண்டாட்டியென்ன? பிள்ளைகளென்ன? என்று அவர்கள் மீதுள்ள ஆதிக்கத்தை உதறிவிட்டு எங்காவது ஓடிப்போனால் என்ன என்று தோன்றிற்று.

‘நன்றியில்லாத ஜன்மங்கள்..என்ன உழைச்சும் பயன்?’

சில தினங்களுக்காவது தான் வீட்டிற்குப் போகாமலிருந்தால்தான் தன்னுடைய அருமை அவளுக்குப் புரியும் என்று நினைத்துக் கொண்டார்.

கொஞ்சநேரத்தில் வண்டிக்காரனும் சாப்பிட்டுவிட்டு வந்தான். மாட்டுக் கயிற்றை அவனிடம் கொடுத்துவிட்டு, தேவர் வண்டியிலிருந்து இறங்கினார். இறங்கும்போது வயிற்றை இழுத்துப் பிடித்தது பசி.

‘தேவர் கிட்டெ சொல்லித்தான் நல்ல மாடா ஒண்ணு வாங்கனும்’

‘ம்.. அதுக்கென்ன? வாங்கிட்டாப் போச்சு’

சிறிதுநேரம் வண்டியைப் பார்த்துக்கொண்டிருந்ததற்காக அவன் நன்றி கூறும் விதத்தில் சொல்லிப் போகும் ஆசை வார்த்தைகளும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதாக தான் செய்யும் பாவனையும் வெறும் வேஷங்கள் என்று தேவருக்குத் தோன்றியது. உலகத்தில் எல்லாமே இதுபோன்ற வேஷங்கள்தானா? வயிறும் மனமும் நிறைகிற மாதிரி அமைந்துவிடுகிற நாளின் இரவுகளின் பக்கத்தில் படுத்துக்கொள்ளும் மனைவி, வாய்க்கு ருசியாக வாங்கிக்கொண்டு போனால் சுற்றிவரும் குழந்தைகள் – அத்தனையும் வேஷம் கட்டி ஆடுபவைதானா?

பசியேப்பம் திரட்சியாக வந்து வாயை அடைத்தது. நெஞ்சுக்குக் கீழே தீ மூட்டி வைத்திருப்பதைப் போலிருந்தது.

மடியைப் பிரித்துப் பார்த்தார். இரண்டு ரூபாயும் சில்லறையும் இருந்தன. இன்று காலை வருமானம் அவ்வளவுதான். மதியம் சண்டையால் விசாலத்திடம் கொடுக்கவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. ‘அதுவும் நல்லதிற்குத்தான். இன்னிக்கு ஒரு ராத்திரியாச்சும் பட்டினி கெடந்தாத்தான் புத்தி வரும்.’

மடியிலிருக்கும் பணத்தை முடித்து வைத்துவிட்டு தன்னால் பசியோடு இருக்கமுடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அதனால் மறுயோசனையே செய்யாமல், மணீஸ் கபேயை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சாப்பாட்டு நேரம் கடந்திருந்ததால் ஓட்டலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. போனவுடன் இலையை விரித்து வைத்தார்கள்.

வெங்காய சாம்பாரின் வாசனை, நெய்யுடன் சேர்ந்து தொண்டையில் பாகாக இறங்கியது. இதுபோல சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று!

அடுத்து ஒரு கவளம்; பின்னும் ஒன்று.

தண்ணீர் குடிக்க அண்ணாந்தபோது நெஞ்சை இருளக்கிவிட்டு ‘பளிச்’ சென்று என்னவோ மின்னியது. அதன் வெளிச்சமும் வேகமும்…

சாப்பாட்டிலிருந்து கையை உதறி வாசலுக்கு ஓடிவந்து பார்த்தார்.

அங்கே அவளுடைய மூத்த பெண் விஜயா , கையில் டிபன்கேரியருடன் நின்று கொண்டிருந்தாள். துணைக்கு மூன்றாவது தங்கை.

‘சாப்பாடு கொடுத்துட்டு, அப்படியே ராத்திரிக்கு அரிசி வாங்க பணம் கேக்கச்சொல்லி அம்மா அனுப்பிச்சது’

தேவர், அவளது கரங்களில் அழுக்குப் பையின் உள்ளே இருக்கும் நசுங்கிய அலுமினிய டிபன் தூக்கைப் பார்த்தார். குஷ்டரோகி மஞ்சள் தேய்த்துக் குளித்த மாதிரி , சாம்பாரின் உப்புக் கரைசலில் மங்கிய பாத்திரம்.

‘இங்கே ஏன் வந்தீங்க?’ எனக் கேட்பாரோ என்று நினைத்து விஜயா சொன்னாள். ‘பேட்டைக்குத்தான் போய்க்கிட்டிருந்தோம். நீங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இங்கேயே நின்னுட்டோம்..’

முகத்திலடித்தாற்போலிருந்தது தேவருக்கு. குழந்தைகளின் பெருந்தன்மையைக் கண்டதும் மனத்துள், தன்னுடைய வைராக்கியமெல்லாம் எங்கோ பறப்பதை உணர்ந்தார். அதற்கு ஏற்றமாதிரி ‘நீங்க போய் சாப்பிடுங்கப்பா’ என்று மகள் சொன்னதும் , அதுகளுக்கு முன், தான் குற்றவாளியாக பிடிபட்டிருப்பதைப் போன்று உள்ளம் குறுகியது. என்னதான் உதறினாலும் பிடித்த பிடியை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்கும் ஜீவன்கள். ‘நீங்க என்ன சாப்பிட்டாலும் சரி; எங்களுக்கு வெந்த கஞ்சிக்காவது வழி பண்ணிடுங்கோ’ என்று கெஞ்சும் பார்வை.

பாதையில் போன இளைஞன் ஒருத்தன் , விஜயாவையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு சென்றான். அவனுடைய பசி அது.

மடியில் எட்டணாவும் சில்லறையும் இருந்தன.

பிரித்த மடியை மடிக்காமலும், மகளிடம் ‘இப்போது பணமில்லை’ என்று சொல்ல முடியாமலும் சில நொடிகள் வீணாயின. சிறிது நேரம் கழித்து ‘சரி..நீ போம்மா. சாயங்காலம் நானே அரிசி வாங்கி வீட்டுக்குக் கொண்டு வரேன்’ என்றார்.

பதில் எதுவும் பேசாமல் விஜயா புறப்பட்டாள். கடைக்கு முன்பு வீசிய பலகார வாசனையை கடைசியில் ஒருமுறை நன்றாக இழுத்து வயிற்றில் இறக்கிக்கொண்டு சின்னதும் அவளுக்குப் பின்னால் நடந்தது.

உள்ளே கடையில் சுத்தம் செய்பவன், மற்றைவைகளோடு அவரது இலையையும் எடுத்துப் போட்டு , வெளியே இருந்த எச்சில் தொட்டியில் கொண்டு வந்து கொட்டினான்

எங்கிருந்தோ நாய்கள் ஓடிவந்து, தொட்டியை நெருங்கி சண்டையிட்டன. ஒன்றின் மேல் ஒன்று உறுமலுடன் பாய்ந்து கடித்துக் குதறிக் கொண்டன. அப்போது அவற்றுள் வலிமை மிக்க நாயொன்று தொட்டியின் விளிம்பில் தாவி ஏறிக்கொண்டு மற்றதுகளை விரட்டியது. அந்நாயின் மடி தொங்கி, மார்புக் காம்பு தரையில் மோதியது. அது விரட்டியடிக்கும் நாய்களுள் சில அதனுடைய குட்டிகளாகவும் இருக்கக்கூடும். பிடுங்கித் தின்னும் பசிவெறியில் இதையெல்லாமா பார்க்க முடியும்?

தேவரின் கண்களில் நீர் நிறைந்தது. தானும் அப்படியொரு பிராணிதானோ? மனம் தன்னைப் பழிப்பதைத் தவிர்ப்பதற்காக, எப்போதோ செத்துப்போன தன் பாட்டன் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்க ஆரம்பித்தார் அவர்.

***

நன்றி : மும்தாஜ் யாசீன், இலக்கியச் சிந்தனை (1978) , வானதி பதிப்பகம்.

குறிப்பு : மும்தாஜ் யாசீனின் தற்போதைய முகவரி தெரிந்ததும் தெரியப்படுத்துகிறேன். அதுவரை , அவருடைய 1978 -ஆம் வருட முகவரி (அப்போது அவர் வயது 27) !.

மும்தாஜ் யாசீன்
இளநிலை உதவியாளர்
தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம்
விழுப்புரம் – 605602

***

தொடர்புடைய சுட்டிகள் :

நினைவு – மும்தாஜ் யாசீன் சிறுகதை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=100071612&format=html

பத்துசெட்டி – தி. ஜானகிராமன் சிறுகதை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10105191&format=html

தி. ஜானகிராமன் / அழியா நினைவுகள் – தாஜ் கட்டுரை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60705311&edition_id=20070531&format=html

குறிப்பு : ‘ஏன் எழுதுகிறேன்’ என்று (‘எழுத்து’ சிற்றிதழில்) ஜானகிராமன் எழுதிய அற்புதமான கட்டுரையை ‘திண்ணை’யில் தேடி வாசித்துக் கொள்க!. நான் தேடினால் , ‘நீயெல்லாம் ஏன் எழுதுறே?’ என்று ஜானகிராமன் கேட்கிறார் 🙂