சகோதரி ஸ்ரீவித்யாவுக்கு…..

சகோதரர் ஹத்தீப் சாஹிபின் ‘தமிழினத் துரோகம்’ கட்டுரைக்கு சகோதரி ஸ்ரீவித்யா ஆற்றிய எதிர்வினையையும் சேர்த்தே பதிந்திருந்தேன். ஸ்ரீவித்யாவுக்கான பதிலாக ஹத்தீப் சாஹிப் எனக்கு அனுப்பிய மெயில் கீழே வருவது. சாபு, நீங்க அந்த பதிவிலேயே பின்னூட்டமிட்டிருக்கலாமே…  சரி, எதிர்வினைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே… என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! இதற்கும் எதிர்வினையாற்ற நினைப்பவர்கள் நேராக ஹதீப் சாஹிபிற்கே மின்னஞ்சல் அனுப்பலாம். முகவரி : hatheeb@gmail.com  . என்னை விட்டுடுங்க சார், அடுத்து நான் திக்குவல்லை கமாலின் கதையை பதிய வேண்டும். 

***

 நீலகிரி மாவட்டம், கூடலூர், சகோதரி ஸ்ரீவித்யாவுக்கு…..

Hatheeb02‘விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் தனித்தனி இனத்தவர்கள்’ என்ற எதார்த்தத்தை வெளிப்படையாகக் கூறுபவர்களின் தமிழ்ப்பற்றை யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை-நீங்கள் உட்பட. தமிழகத்துத் தமிழர்களின் மொழிப்பற்றையும் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதையும் தொடர்பு படுத்துவது அறியாமை. கனடா,இலண்டன், ஸ்வீடன் போன்ற உல்லாசபுரிகளில் வசிப்பவர்களால் ‘ஈழத்தமிழனைக் காப்பாற்று’ என்று சிங்கள அரசிடம்தான் கோரிக்கைகள் வைக்கப்பட்டனவே தவிர விடுதலைப் புலிகளிடமல்ல என்பதைச் சகோதரி உணர்ச்சி வசப்படாமல் புரிந்துகொள்ள வேண்டும்.எனது ஊடகத் தொடர்பைச் சந்தேகிப்பதைத் தவிர்த்து, செல்வநாயகம் காலத்திலிருந்து இந்தப் பிரச்னையின் பரிணாமத்தைக் கூர்ந்து நோக்க வேண்டும்.புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கென்றே தனி ஈழத்துப் பிரச்னையைக் கையிலெடுப்பதை உண்மையான இந்தியர்கள் ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்.புலிகள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்திருக்கும் என்பது திரிபு. புலிகளால்தான் தமிழினம் அழிந்துகொண்டிருக்கிறது என்பதே நிஜம்.

‘நாட்டைப் பிரித்துக் கொடு’ என்று கர்ஜிப்பதற்குப் பதிலாக, மக்களைப்பிரிவுபடுத்தும், பிளவுபடுத்தும் அரசியல் சாசன ஷரத்துக்களை நீக்க வலியுறுத்தக் கோருவதும் அதற்காகப் போராடுவதுமே ஜனநாயகத்தில் ஏற்புடையவை. இந்திய சுதந்திரம் வாளேந்தி வாங்கப்பட்டதல்ல. ஈழத்தமிழர்கள் இந்தியர்களின் வழியையும் வாழ்வையும் பின்பற்றியிருக்க வேண்டும்.

‘போர் நிறுத்தம் என்றாலே மீண்டும் போர் வரும்’ என்று பொருள். அதனால் தான் இலங்கை அரசு இம்முறை புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை.

நூறுகோடி மக்களின் மகத்தான தலைவனைக் கொன்று குவித்தவர்களை நிச்சயமாகப் பூஜிக்க முடியாது. ராஜிவ் படுகொலையை விடுதலைப்புலிகளைத் தவிர வேறு யாரும் ஆதரிக்கவோ மெச்சவோ முடியாது. கையேந்திகளுக்கும் தேசத்துரோகிகளுக்கும் வேண்டுமானால் பிரபாகரன் பிரம்மாவாகத் திகழலாம். ராஜிவ் காந்தியை ‘மக்கள் தலைவன்’ என்று வர்ணிப்பதில் தயக்கம் ஏதுமில்லை. ‘சிங்கள அரசு புத்த அரசா?’ என்று கேட்டு பிரபாகரனை ‘அரக்கக் குணம் படைத்தவர்’ என்று நீங்கள் ஆமோதிக்கிறீர்கள். புலிகள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடை செய்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

மீண்டும் உங்களுக்குப் புரியும்படிச் சொல்கிறேன்: எமது கட்டுரை நிச்சயமாக மதம் பார்க்காமல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு நல்கியே வரையப்பட்டிருக்கிறது.

அன்புடன்

ஏ.ஹெச்.ஹத்தீப்

E- Mail : hatheeb@gmail.com

தமிழினத் துரோகம் – ஏ.ஹெச். ஹத்தீப்

தமிழினத் துரோகம்

 – ஏ.ஹெச். ஹத்தீப்

சமநிலைச் சமுதாயம் – மார்ச் 2009 இதழிலிருந்து..

இலங்கைப் பிரச்னையை அலசும்போது அங்கே நிரந்தர அமைதியை நிறுவும் ராஜீவ் காந்தியின் நெடுநோக்கு முயற்சியையோ அல்லது அவரது கோரப் படுகொலையையோ தூரத் தள்ளிவைத்துவிட்டுத் தமிழீழ விவகாரத்தைப் புரிந்து கொள்ள முனைவது முற்றிலும் அரைவேக்காட்டுத்தனம்.

இலங்கையின் பாதுகாப்பு என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கும் நலனுக்கும் அச்சுறுத்தல் தருகிற எந்த நடவடிக்கையையும் தகர்க்கும் நோக்கில் அமைதிப்படையொன்றை அங்கே அனுப்பினார் ராஜீவ்.

சதாமிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தனது தேசத்தையே அமெரிக்காவுக்கு பலிகொடுத்து குவைத்திய முட்டாள்தனத்தைப் போன்று இலங்கை அரசும் ஏடாகூடம் செய்து விடக்கூடாதென்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் இந்தியா எடுத்த முயற்சியைத் துரதிர்ஷ்டவசமாக் சிங்களவர்களும், விடுதலைப் புலிகளும் ஒருசேர எதிர்த்த கொடுமையை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.

உலகமே எதிர்த்தாலும் தனது தாயகத்தைக் காப்பாற்றுவது ஒன்றே உயர்க் கர்மம் என்றெண்ணியதைத் தவிர வேறெந்தக் குற்றமும் ராஜீவ் செய்யவில்லை. அதுவும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசித்த பின்னரே காரியத்தில் குதித்தார் இந்தியப் பிரதமர்.

அந்தக் கொடூரமான கொலைப்பழியைத் தூக்கி தி.மு.க மீது போட்டுவிட்டு அரசியல் ஆதாயம் தேடியவர்கள் இங்கே உண்டு. அவர்களுக்குத் துணை போனவர்கள் இங்கே உண்டு. பிரபாகரன் குற்றவாளி என்று நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை மேடை போட்டுக் கேலி செய்தவர்கள் இங்கே உண்டு. அதனால்தான் இந்தியாவை இளிச்சவாயன் என்று நினைப்பவர்களுக்கு இங்கே பஞ்சமில்லாமல் போயிற்று.

அந்தக் காலகட்டத்தில், இலங்கைக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது, இராணுவ அணிவகுப்பின்போது ஒரு சிங்கள வெறியன் துப்பாக்கி பேனட்டால் கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டான். அந்தத் துர்ச்சம்பவம், சிங்கள இனம் இந்தியா மீது கடும் கோபம் கொண்டிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான அடையாளம். நல்லவேளையாக அவர் உயிர் தப்பினார்.

ஆனால் ஒரு தமிழ் மனிதவெடிகுண்டிலிருந்துதான் அவரை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அதுவும் இந்தியாவில்; தமிழகத்தில். தமிழுக்கும் தமிழினத்துக்கும் அன்றைக்குக் கிடைத்த அவப் பெயரை இன்றளவும் நீக்க முடியவில்லை.

ஒரு தேசத்தின் பிரதமரை வெடிகுண்டு வைத்துக் கொல்வது தீரச்செயல் என்று வியந்த புண்ணியவான்கள் வாழ்ந்த புனிதபூமி இது. நாட்டுக்காக உயிர்த்தியாகம் புரிந்த ராஜீவைப் புகழ்ந்தால், மரணத்தைக் கட்டித் தழுவிய தணுவை என்னவென்று பாராட்டுவது? என்று குறுக்குக் கேள்வி எழுப்பிய தேசாபிமானிகள் நிறைந்த நாடு இது.

சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் போர் நிறுத்தம் நீடித்த சமயத்தில், திடீரென்று கொழும்புவில் தோன்றிய மாவீரன் பிரபாகரனிடத்தில் ஒரு வருத்தம் தெரிவிக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில், ‘ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது பற்றி இப்போது நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று ஓர் இந்திய செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ‘அது முடிந்து போன கதை. இப்போது அதைப்பற்றிய கேள்வி தேவையில்லை’ என்று நெருப்பைக் கக்குவதைப் போல் வெறுப்பை உமிழ்ந்தார், பிரபாகரன்.

நூறு கோடி மக்களின் தலைவனின் கோரப்படுகொலைக்காக ஒரு விழுக்காடுகூட வேதனை தெரிவிக்காத அவரது அரக்கக் குணத்தை எண்ணி இந்தியத் தலைவர்கள் பொங்கி எழுந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும். தேச விசுவாசத்திற்கும் தேச துரோகத்திற்குமிடையே இங்கேதான் வித்தியாசம் வெளிப்படுகிறது.

தனது தளபதிகளில் பலபேரை பிரபாகரன் கொன்றிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லீம்களை வெவ்வேறு இடத்திற்குத் துரத்தியடித்திருக்கிறார். அவர்களது வழிபாட்டு இடங்களை உருத்தெரியாமல் நொறுக்கியிருக்கிறார். லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியிருக்கிறார். என்ன அக்கிரமம் செய்தாலும் அபாரம் என்று கை தட்டுகிற கோமாளித்தனங்களாலேயே இன்றைக்கு அவரொரு கொடுங்கோலனாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.

ஈழத் தமிழ் மக்களை முற்றிலுமாக காப்பாற்ற வேண்டுமென்ற நிஜமான சிந்தனை இருக்குமேயானால் , ஐக்கிய நாடுகள் சபை அறைகூவல் விடுக்கத் தேவையில்லை. அமெரிக்கா அலற வேண்டியதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் இயற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் தீ குளிப்புச் சம்பவங்கள், மனிதச் சங்கிலிகள், பேரூந்து எரிப்புகள், உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் எதுவும் எதுவும் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குரலில் வேலுப்பிள்ளை பிரபாகரா! என் ஈழத்துச் சொந்தங்களைக் காப்பாற்று! என்று பிரார்த்தித்தால், அதற்கு அவர் செவி மடுத்தால் போதும்; தமிழர்களுக்காக இங்கே யாரும் ஒப்பாரி வைக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

கண்ணீர் சிந்தவேண்டிய கட்டாயமெல்லாம் தமிழர்களைக் காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஊக்கப்படுத்தியதால்தான், இந்தப் பிரச்னையில் வானத்துக்கும் பூமிக்கும் எம்பிக் குதிக்கிற யாராவது ஒருவர், முதலில் பிரபாகரனைப் போர் நிறுத்தம் செய்ய அறிவுறுத்தியதுண்டா? ஐ. நா.சபையால் தீவிரவாதிகள் என்று பிரகனப்படுத்தப்பட்ட ஒரு கும்பலை எதிர்த்து, மக்களால் நிறுவப்பட்ட ஓர் ஆட்சி யுத்தம் புரிந்தால், குறுக்கே நின்று தடுத்து நிறுத்து என்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பது என்ன வகை ஜனநாயகம்? காஸா பகுதியில் இதே நிலை வியாபித்திருந்தபோது முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியான கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ ஏன் இந்த ஜனநாயகம் பேசப்படவில்லை?

அப்பேர்ப்பட்ட இலங்கையின் தேவக்குமாரனுக்காகத் தமிழகமே இப்போது திரண்டு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசத் தலைவனை வெடிகுண்டு வைத்துத் தகர்ந்த பிரபாகரனின் பெயரைத் தங்களது குழந்தைகளுக்கு சூட்டி அழகு பார்க்கிறது. எப்போதாவது ஒருநாள் தனது தீவிரவாதக் கொள்கையையும், பரிவாரங்களையும் காப்பாற்ற இந்தியக் கரங்களால் மட்டுமே முடியும் என்று எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காத ஒரு போராளிக்காகச் சகோதர இந்தியத் தமிழர்களைப் பகைத்துக் கொள்கிற காட்டுமிராண்டித்தனம் இங்கே தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நேற்றுவரை போற்றியவர்களால் இந்தியத் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன. நாளைக்கு பாராட்டப்போகிற அரசியல் நண்பர்களின் உருவபொம்மைகள் சிதைக்கப்படுகின்றன.

இங்குதான் இந்தியத் தமிழினத்தைப் பற்றி ஒன்றுமே புரியமாட்டேனெங்கிறது.

ஈழத்து அப்பாவித் தமிழ் மக்கள் எவ்விதக் குறையுமின்றிக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் இந்தியாவிலிலுள்ள எவரும் மாற்றுக் கருத்து கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை, ஏன்? ஐ. நாவும் அமெரிக்காவும் கூட அதற்காக குரல் கொடுக்கின்றன. ஜனாதிபதி பிரதிபா பட்டீல், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விடுதலைப் புலிகளால் தனது கணவரை இழந்து தாலியைத் துறந்த சோனியா காந்தி உள்ளிட்ட மத்தியத் தலைவர்களிலிருந்து, திராவிடக் கழகத் தலைவர் வீரமணி உட்பட அனைவரும் தமிழர் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், மத்திய அரசு லட்சுமணன் கோட்டைத் தாண்டுகிற விஷயத்தில் மட்டும் சற்றுத் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. அதுகூட தேசத்தின் நன்மையைக் கருதியே என்பதைச் சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும். அப்படியானால் தமிழகத் தலைவர்களுக்குப் புரியவில்லையா? அல்லது புரியாதவர்கள் போன்று மத்திய மாநிலை அரசுகளைச் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்ற தீய நோக்கத்துடன் ஆர்ப்பரிக்கிறார்களா? அதற்கு இந்த தருணத்தைத் தேர்ந்தெடுத்தற்கு ஒருவேளை வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இருக்கலாமோ?

அப்படியானால் அழுவது, கதறுவது, ஒப்பாரி வைப்பது அனைத்துமே அரசியல்தானா? அல்லல்படும் ஈழத்தமிழனுக்காக இல்லையா?

சுமார் ஓராண்டு காலமாகவே தமிழகத்து அரசியலில் அணிகள் மாறத் துவங்கிவிட்டன.. ஐந்தாண்டுகளாக எதிராளியாக இருந்தவர்களுடன் இப்போது கை கோர்த்து நடக்கவேண்டிய நிர்ப்பந்தம். காங்கிரசுடனோ தி.மு.கவுடனோ கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான இரத்தத்தைச் சூடாக்கும் கொள்கை முரண்பாடுகள் எதுவும் தோன்றிவிடவில்லை. மக்களிடம் கூறுவதற்குக் கைவசம் இருப்பதெல்லாம் இலங்கைப் பிரச்சனை மட்டுமே. எல்லாத் துருவங்களையும் ஒன்றிணைக்கிற சக்தி இப்போதைக்கு அது ஒன்றுதான்.

அதனால்தானோ என்னவோ இந்த விவகாரத்தில் தமிழக எதிர்நிலை தலைவர்களின் பாஷைகள் அறவே தெளிவாக இல்லை. செல்வி ஜெயலலிதாவைத் தவிர இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பேசும் செந்தமிழ் மொழியிலேயே நரேந்திரமோடியின் இரத்தவாடை வீசுகிறது. இப்போதைய தமிழகத்து அரசியல்வாதிகளின் வார்த்தைகளில் நிதானமோ தமிழ்ப்பண்போ வெளிப்படவில்லை. பாரதி பாடினானே, ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று. அந்த இன்பமுமில்லை; தேனுமில்லை. அமிலத்தில் மட்டுமே தோய்த்தெடுக்கப்பட்ட வெறும் வர்க்க வெறி மட்டுமே வெளிப்படுகிறது.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஈழத்துப் பிரச்னையில் பாரதீய ஜனதாவை ஒதுக்கிவைக்க வேண்டியதில்லை என்று அறிவுரை கூறுகிறார் ஒரு செய்தியாளர். இதுபோன்ற அற்புதமான யோசனைகளை மீடியாக்காரர்கள் வெளிப்படுத்தப் போய்த்தான் நாடு வெகு வேகமாக சீரழிந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியின் கொள்கை காரணமாகவே பா.ஜ.க. தள்ளியே நிற்கிறது என்பதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல், குழம்பிப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகைகாரர்கள்.

இலங்கையில் கொல்லப்படுபவர்கள் ஒருவேளை கிருஸ்தவர்களாக இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு அவர்களைக் கைத்தூக்கிவிட்டிருக்கும்’ என்று வெடிக்கிறார் தமிழகத்துப் பெருந்தலைவர்களில் ஒருவரான ராமதாஸ். இந்தியப் பேரரசில் அங்கம் வகித்துக் கொண்டே ஆரோக்கியமோ, சுகாதாரமோ இல்லாத சொற்களால் மத்திய அரசை அர்ச்சிக்கிறார் அவர்.

தமிழ்த் தேசிய கட்சியிலிருந்து காங்கிரஸூக்குத் தாவி, அங்கேயும் நிரந்தரமாகக் காலம் தள்ளாமல் தனிக்கட்சி துவங்கி, அதிலும் தங்காமல் இப்போது ஈழத்துப் போராளிகளுக்காகத் தனி ஆவர்த்தனம் வாசிப்பது நெடுமாறன் போன்ற அரசியல் துறவிகளுக்கு வேண்டுமானால் சரியாகப் படலாம். பாஸ்போர்ட்டே இல்லாமல் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்குச் சென்று கள்ளத்தனமாக பிரபாகரனைச் சந்தித்துவிட்டு வந்த வை.கோ கூட நெடுமாறன் ரகம்தான். அவர்களுடன் சேர்ந்துகொண்டு திருமாவளவன், ராமதாஸ் போன்றோர் கூட ஈழத்துத் தமிழர்களின் வேதனையைத் தடுப்பதற்குப் பதிலாக நிலைமையை மிகவும் மோசமடையவே செய்யும்.

இவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

விடுதலைப்புலிகள் வேறு; ஈழத்துத் தமிழர்கள் வேறு, ஒன்றோடு ஒன்றைப் போட்டுப் பின்னிக் கொள்வதாலேயே ஈழத்தமிழர்கள் மிகவும் ஆபத்தான இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஓர் அன்னிய அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் நடைபெறுகிற போராகக் கருதாமல் இனப்படுகொலை என்று வர்ணம் பூசி எவ்விதப் பயனுமில்லை.

இங்கே தலைவர்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒவ்வொரு வினாடியும் அங்கே எண்ணற்ற தமிழன் உயிர் துறக்கிறான். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மறுத்து, வேறு திசையில் கவனத்தைத் திருப்புவதுதான் தமிழனத் துரோகம்.

***

ஏப்ரல் 2009ல் வாசகி ஸ்ரீவித்யாவின் எதிர்வினை :

மார்ச் 2009 இதழில் ஏ.ஹெச். ஹத்தீப் எழுதிய கட்டுரை வாசித்தேன். ‘விடுதலைப் புலிகள் வேறு, ஈழத் தமிழர்கள் வேறு. இதைப் புரிந்து கொள்ள மறுப்பது தமிழனத் துரோகம்’ என்று எழுதியிருப்பதை தமிழுணர்வு உள்ள யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகெங்கிலும் (கனடா, லண்டன், ஸ்வீடன் உட்பட) ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் திரண்டு புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, தனி ஈழத்துக்கான தாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் களத்தில் உள்ளனர். இவர்கள் இல்லையெனில் இலங்கையில் தமிழினமே அழிந்திருக்கும். நண்பர் செய்தி ஊடகங்களிலிருந்து விலகியே இருக்கிறாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. 80களிலிருந்தே உலகளாவிய ஊடகங்கள் பலவும் சிங்களே அரசின் இனவெறியை, பயங்கரவாத நடவடிக்கைகளைப் பதிவு செய்து வருகின்றன. இலங்கை அரசியலமைப்பில் தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வழியே இல்லை. ஏனெனில், ‘சிங்கள பவுத்தர் மட்டுமே அதிபராக முடியும்’ என்கிறது அவர்கள் சட்டம். இந்நிலையில் அறவழிப் போராட்டங்கள் நடத்தில் அவை கடுமையான வன்முறையால் ஒடுக்கப்பட்ட பிறகே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் எடுக்க நேரிட்டது. இதுதான் இலங்கையின் அரச பயங்கரவாத வரலாறு. புலிகள் தற்போதும் போர் நிறுத்தத்திற்கு தயார் என் இம்மாதத் துவக்கத்தில் அறிவித்தும் சிங்கள அரசுதான் அதனை ஏற்கவில்லை. முன்பும் பலமுறை அமைதிக்கான நோர்வே முயற்சி உட்பட அனைத்தும் சிங்கள அரசாலேயே மீறப்பட்டன. சிங்கள அரசின் நோக்கம் தமிழின அழிப்பே. புலிகள் மீதான வெறுப்பால் நண்பர் ராஜீவ் காந்தியை மகத்தான் மக்கள் தலைவராகக் காட்ட முற்படுகிறார். இந்திய, சிங்கள் ராணுவக் கொடூரங்களை அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. ‘பிரபாகரன் அரக்க குணம் படைத்தவர்’ என்கிறார். அப்படியென்றால் சிங்கள அரசு அன்பே உருவான புத்த அரசா? ஈழ மக்கள் 30 ஆண்டுகளுக்க்கும் மேலாக அவலங்களைச் சந்தித்து வருகின்றனர். ஆனால், பாவம் தமிழ் பேசுபவர்களிடையே சிலருக்கு இது புரியவில்லை. மதம் குறுக்கிட்டு விடுகிறது. பாலஸ்தீன மக்களைப் போலவே வதைகளுக்கு ஆளாகும் ஈழத் தமிழர் அனாதையாக உள்ளனர். புலிகள் தவிர அவர்களைப் பாதுகாக்க யாருமில்லை என்பதே நிதர்சனம். ஈழ மக்களுக்காகப் பேசிவரும் தமிழகத் தலைவர்களிடம் நரேந்திரமோடியின் இரத்தவாடை வீசுவதாக கூறுகிறார். நரேந்திர மோடிக்கு விருந்தளித்தும் நட்பு பாராட்டுவதும் ஜெயலலிதா என்பதை நினைவுபடுத்துகிறேன். இன்றளவும் ஒரு சிங்களப் பெண்ணையாவது புலிகள் துன்புறுத்தியதில்லை. இதனைப் புரிந்து கொள்ளும் மாண்பு பலரிடம் இல்லை. ‘முழுக்க முழுக்க மக்கள் போராட்டம் என்பதைக் கொச்சைப்படுத்து முன், இரத்தவாடை வீசும் இலங்கை வரலாற்றை ஊன்றிப் படிக்குமாறு நண்பரைக் கேட்டுக் கொள்கிறேன்.

 – ஸ்ரீவித்யா, கூடலூர், நீலகிரி மாவட்டம்.

**

நன்றி : ஏ.ஹெச். ஹத்தீப், ஸ்ரீவித்யா, சமநிலைச் சமுதாயம்.

**

ஒரே ஒரு சுட்டி : http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_20.html

இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு

மறக்கவியலாத ‘முஸல்(மான்) வேட்டை’யை ‘விவாதிக்கும்’ சமயம் கண்டிப்பாக இதுவல்ல. எனவே இந்தப் பதிவு. மக்கள் தொலைக்காட்சியின் (15/2/2009) ‘சங்கப்பலகை’யில் , மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் திரு புரூஸ் ஃபெயினுடன் தோழர் தியாகு நடத்திய உரையாடல். அந்த அமெரிக்கர் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவதால் ‘ம.தொ.கா’ தந்த தமிழாக்கத்தைப் பதிகிறேன். தகவல் பிழையிருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்துகிறேன். நன்றி.

**

brucefein_4wp

இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு

தியாகு : சங்கப்பலகை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரு புரூஸ் ஃபெய்ன் அவர்களே !

புரூஸ் ஃபெய்ன் : என்னை அழைத்தமைக்காக மிகவும் நன்றி!

சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் எதிராக நீங்கள் தொடுக்க எண்ணியிருந்த இனக் கொலை வழக்கு பற்றி எங்கள் நேயர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். தமிழர்களுக்கு உதவும் பொருட்டு நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி குறித்து நாம் பேச வேண்டும். நீங்கள் விடைதர வேண்டிய முதல்வினா , சட்டவகையிலும் அரசியல் வகையிலும் ‘இனக்கொலை’ என்ற சொல்லுக்கு நீங்கள் தரும் இலக்கணம் அல்லது வரையறை என்ன?

இனக்கொலை என்றால் என்ன என்பதை சட்டவகையில் விளக்குவதற்கு இரு ஆவணங்கள் உள்ளன. முதலாவதாக , 1948ஆம் ஆண்டின் இனக்கொலை தொடர்பான உடன்படிக்கை. அது ஒரு ஒப்பந்தம். 1994ல் அமெரிக்கா இதற்கு…  இஸ்ரேல் ஸ்ரீலங்கா ஆகிய அரசுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இதில் இனக்கொலை என்பதற்கான பொது இலக்கணம் உள்ளது. இந்த உடன்படிக்கையின்படி ஒவ்வொருநாடும் இனப்படுகொலைக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும். இனக்கொலையை தண்டிக்க வேண்டும். கோத்தபய, பொன்சேகா ஆகியோரை கூண்டிலேற்றும்படி நாம் அமெரிக்க அரசைக் கூறுகிறோம் என்பதால் அமெரிக்க நாட்டின் சட்ட நடைமுறையை தெரிந்து கொள்வோம். இனக்கொலை என்பது ஒரு மக்கள் இனத்தை அம்மக்களின் இனம், இனக்குழு, மதம் அல்லது தேசீய இனத்தைக் காரணமாக வைத்து முழுமையாகவோ பெருமளவிலோ அழிக்க முயல்வதாகும். இதற்காகவே நீதியியலுக்கு புறம்பாக கொலை செய்தல், சித்திரவதை, காணமல் போகச் செய்தல் ஆகிய வழிகளிலோ பட்டினி போடுதல் , மருந்து கிடைக்காமல் செய்தல் , உறைவிடம் கிடைக்காமல் செய்தல் , ஓயாமல் புலம்பெயரச் செய்தல் , தலைக்குமேல் கூரையின்றி திறந்தவெளியிலும் மரத்தடியிலும் வசிக்கச் செய்தல் போன்றவழிகளிலோ மக்களைத் திட்டமிட்டு ஒழித்துக் கட்ட முயல்வதாகும். இனக்கொலை என்பதற்கான இந்த விளக்கத்தின் அடிப்படையில் கால வரிசைப்படியான ஒரு நிகழ்ச்சித் தொகுப்பை வரைந்துள்ளோம். இலங்கையில் 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சே வகையறா ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடந்தவற்றை இதில் பட்டியலிட்டுள்ளோம். இந்தக்  காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முதல் 6 பேர்வரை கொல்லப்பட்டுள்ளார்கள், அல்லது காணாமல் போயுள்ளார்கள். அந்த நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனக்கொலை நடைபெறாத நாளே இல்லையெனலாம். இந்த கொலைபாதகச் செயல்களுக்கும் தமிழ்ப் புலிகளுடன் நடைபெறும் போருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம். இவ்வாறு கொல்லப்படுபவர்களெல்லாம் எப்படிப் பார்த்தாலும் போர்க்களத்திற்கு அப்பாற்பட்ட சாமான்ய குடிமக்களே. வகுப்பறைகளிலும் தேவாலயங்களிலும் கோயில்களிலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களிலும் இருந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கொலைகளை எதை தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையென்று விளக்க வழியில்லை.

இவ்வகையிலான கொலைகளை போர்நடத்துவதன் ஒரு பகுதியென்று சொல்ல முடியாதா?

முடியவே முடியாது.  வேறு ஒரு நாட்டில் நடந்த இனக்கொலை பற்றிச் சொல்வதானால் சூடான் நாட்டின் அதிபர் பஷீர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனக்கொலை குற்றம் சுமத்தப்பட்டபொழுது அவர் இப்படித்தான் தன்னைக் காத்துக் கொள்ள வாதிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராகவே போர்புரிவதாக அவர் சொன்னார். வழக்கு தொடுத்தவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு என்று சாக்கு சொல்லி இனக்கொலை செய்வதே உண்மையான உள்நோக்கம் என்று எடுத்துக் காட்டினார்கள். பயங்கரவாதம் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இது ஒரு சிறந்த முன்னுதாரணம். நான் தொடுக்கிற வழக்கிலும் இந்த வாதம் , இந்த சமாதானம் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஊதியாக நம்புகிறோம்.

இந்த வழக்கிற்கு முன்னுதாரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.

கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட இனக்கொலை பொறுப்புச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் முதல்வழக்காக நம் வழக்கு அமையும். இனக்கொலை என்பது அன்றாடம் நிகழக்கூடிய வாடிக்கையான குற்றமன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மிகச்சிலரே இக்குற்றம் புரிய வாய்ப்புள்ளது. மிகச்சிலரே இந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கின்றனர். இனம், மதம் போன்ற காரணங்களுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படும்போதே இந்த வழக்கிற்கான தேவை வருகின்றது. நாம் தொடுக்கவிருக்கின்ற வழக்கு ஒரு முன்னோடியாக அமையும். கோத்தபய ராஜபக்சே ஒரு அமெரிக்க குடிமகன். சரத் பொன்சேகா அமெரிக்காவின் ‘பச்சை அட்டை’ வைத்திருப்பவர். அமெரிக்க குடிமக்கள் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறையாக இருக்கும். அமெரிக்க நீதிமன்றங்களின் மேலுரிமைக்கு இவர்களை உட்பட்டவர்களாக்குவது இதுவே. ஸ்ரீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சேயும் இனக்கொலை குற்றவாளிதான் என்று கருதுகிறோம். ஆனால் இப்போதைக்கு நாம் அவர்மீது வழக்குத் தொடர விரும்பவில்லை. ஏனென்றால் அவர் அமெரிக்க குடிமகன் அல்லர். செய்நுட்ப வகையில் அவர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும் என்றாலும் கூட அவருக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்பதால் விட்டுவிடுகிறோம்.

இந்த வழக்குகளின் தனித்துவம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை இருவகைகளில் வேறுபட்டதாகும். முதலாவதாக மற்றநாடுகளில் இனப்படுகொலை என்பது வழக்கத்திற்கு மாறான வழக்கத்திற்கு மாறான ஒரு பிறழ்வாகவே நடைபெற்று வருகிறது. அது காலத்தின் பொதுவான போக்கிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தது. எடுத்துக்காட்டாக ஹிட்லருக்கு முந்திய ஜெர்மனியில் யூதர்கள் மற்றநாடுகளைக் காட்டிலும் சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்திருந்தார்கள். ஆகவே 60 லட்சம் யூதர்கள் ஜெர்மனியில் இனப்படுகொலைக்கு ஆளானது ஒரு விதிவிலக்காக நிகழ்ந்தது. ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இனப்படுகொலை வித்துக்கள் பொதிந்திருப்பதை நாம் கண்டுபிடித்தோம். ஸ்ரீலங்கா என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் மகாவம்சத்தின் கதைகளும் தர்மபாலாவின் போதனைகளும் இனக்கொலைக்கே வழிகாட்டுபவையாக உள்ளன. சிங்கள பௌத்தர்களின் இயேசு கிருஸ்துவும் மோசஸ¤ம் நபிகள் நாயகமும் எல்லாமே இந்த தர்மபாலாதான். அவரது கருத்துக்கள் இலங்கைத்தீவின் இனத்தூய்மையை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருநாளும் பௌத்த பிக்குகள் மக்களிடையே சிங்கள பௌத்த வெறியை ஊட்டி வளர்க்கிறார்கள். இவ்வாறு , இனப்படுகொலை வழிபாட்டுக்கு உரியதாக்கப் படுகிறது. ஆகவேதான் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுவதற்கு ஒருவகையில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் பங்காளியாக ஆகிறார்கள். இது முதலாவது தனித்தன்மை. இரண்டாவதாக , இதற்கு முன் நடைபெற்றுள்ள இனப்படுகொலைகளைப் பார்த்தால் மிகக் குறுகிற காலத்திற்குள்  பெருந்தொகையினர் கொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.  ஜெர்மனியில் குறுகியகாலத்திற்குள் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இங்கே இனப்படுகொலை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் ஐந்தாறு பேர் கொல்லப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இப்படியே பல்லாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. 1982, 1983ல் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் பத்தாயிரக்கணக்கான இல்லங்களும் கடைகளும் அழிக்கப்பட்டதுமான நிகழ்வுகளும் உண்டு. இந்த நீண்ட இனப்படுகொலையின் தொடர்ச்சியாகத்தான் ராஜபக்சே அரசாங்கத்தின் இனக்கொலை குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுதான் இப்போது நடைபெறும் இனப்படுகொலையின் பின்னணி .  இந்த ஆட்சியின் கடந்த மூன்றாண்டு காலத்தில் கொலை , சித்திரவதை , ஆள்கடத்தல் போன்றவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிகளோடு வந்து சுட்டுத் தள்ளுவதும் வெள்ளை ஊர்தியில் கடத்திச் செல்வதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவ்விதம் கடத்திச் செல்லப்படுபவர்கள் திரும்பி வருவதே இல்லை. இது புதுவிதமான இனப்படுகொலை. ஆனால் கொடுமையில் மற்ற இனப்படுகொலைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல. இதுவும் கொடிய குற்றமே. குறிப்பாகச் சொன்னால் இது பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் நீட்டித்து விடுகிறது.

நீங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர என்ணியுள்ளீர்கள். இதற்கு உறுதியான சான்றுகள் தேவைப்படுமே..நீங்கள் எவ்வாறு அவற்றை திரட்டப் போகிறீர்கள்?

உண்மைதான். வழக்கு விசாரணை என்று வரும்போது முழுமையான சான்றுகள் தேவைப்படும். நாம் இன்னும் அந்தக் கட்டத்திற்கு வரவில்லை. குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு நாம் தொகுத்துள்ள சான்றுகளிலேயே சில வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக , ராஜபக்சே, பொன்சேகா படையினரால் திரிகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தகப்பனார் அளித்துள்ள வாக்குமூலம் நம்மிடம் உண்டு. அவர் இப்போது இலங்கையில் உள்ளார். இனப்படுகொலை வழக்கிற்கான அறிக்கையை அடுத்தவாரம் வெளியிடுவோம். மேலும் பலர் சாட்சியமளிப்பதற்கு முன்வருமாறு ஊக்கப்படுத்துவோம். ராஜபக்சே அரசாங்கத்தின் அத்துமீறலை கண்டித்துப் பேசுகின்றவர்கள் யாரானாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையம் ஆனாலும் , படையினரை குற்றம் சொல்கின்றவர் ஆனாலும்…. எல்லாவற்றையும் மறுதலிப்பதும் திருப்பி அடிப்பதும்தான்  ராஜபக்சேயின் வழக்கமாக உள்ளது. எல்லோரையும் அவர்கள் புலிகள் என்கிறார்கள். நாங்களெல்லாம் வெள்ளைப் புலிகளாம். அவரது பரப்புரை எவ்வளவு நச்சுத்தன்மை கொண்டது என்பதை அறிந்துள்ளோம். சாட்சியம் அளிப்பதற்கு எவ்வளவு துணிச்சல் தேவைப்படுகிறது என்பதும் புரிகிறது. என்றாலும் அவர்களையெல்லாம் அமெரிக்கா வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்படி ஊக்கப்படுத்துவோம். கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்றவர் ஆனாலும் இதே தமிழ்நாட்டில் அகதி முகாமில் இருப்பவரானாலும் வேறு இடங்களின் வாழ்ந்து வருகின்றவர் ஆனாலும் அவர்கள் தைரியமாக முன்வந்து சாட்சியம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இனக்கொலை குற்றவாளிகள் தங்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்களையெல்லாம் கொன்று போடுவோம் என்ற அச்சுறுத்தல் நிலைதான் உள்ளது. சட்டத்தில் சுற்றுச் சான்று என்ற ஒன்று உள்ளது. அந்த அடிப்படையிலும் இனக்கொலை குற்றச்சாட்டை மெய்ப்பிக்க முடியும். நேரடிச் சான்று கிடைக்காதபோது சுற்றுச்சான்றை அடிப்படையாக வைத்து குற்றத்தீர்ப்பை வழங்கலாம். சாட்சிகள் கொல்லப்படும் ஆபத்து இருப்பதாகச் சொல்லி விளக்கமளிக்க முடிந்தால் சுற்றுச் சான்றே முக்கியமானதாகிவிடும். ஏனென்றால் நமக்குத் தெரிந்ததுதான் , இலங்கையில் எல்லாச் செய்திகளும் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. தமிழ் பகுதிகளிலிருந்து உண்மை அறிய வழியேதுமில்லை. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் , அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் , மனிதாபிமான உதவி அமைப்புகள் எதுவும் இப்பொழுது அங்கே இல்லை. எல்லாவற்றையும் அரசு வெளியே அனுப்பி விட்டது. கண்காணிப்புக் குழு எதுவும் இல்லாத நிலையில் அங்கே நடக்கிற உண்மை நிலைகளை அறிய வழியில்லை. எல்லா தகவல் வழிகளையும் அடைத்துவிட்டு அரசு அங்கே என்ன செய்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஏதோ கெட்டது நடக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு உங்களுக்கு அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்று நினைக்கிறேன். அல்லது அரசியலால் வழக்கு தொடர வேண்டும்.

வேறு பல நாடுகளைப் போலவே அமெரிக்காவில் கூட அரசுதான் குற்றவழக்கு தொடரமுடியும். ஆகவே நாங்கள் அரசின் நீதித்துறையிடமிருந்தும் அயலுறவு துறையிடமிருந்தும் ஒப்புதல் வாங்க வேண்டியிருக்கும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊக்கமும்கூட தேவைப்படுகிறது. இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட அமெரிக்க குடிமகன் மீது நடவடிக்கை எடுக்க அரசின் ஒத்துழைப்பைப் பெற்றாக வேண்டும். ஸ்லோபோதான் மிலோஸ்விக் (Slobodan Milosevic) , பஷீர்  …  போன்றவர்கள் மீது  இனக்கொலைக் குற்றத்திற்கான வழக்கு தொடுக்கிறோம். ஆனால் குற்றவாளி அமெரிக்க குடிமகனாக இருக்கும்போது அலட்சியமாக இருந்து விடுகிறோம். அமெரிக்காவில் இன்னொரு வழியிலும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். தனிப்பட்டவர்கள், திரிகோணமலையில் கொல்லப்பட்ட ஐவரின் குடும்பத்தினர் அல்லது, பாதிக்கப்பட்ட  எவரும் இழப்பீடு கூறி உரிமையியல் வழக்கு தொடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவில் இல்லையென்றாலும் குற்றம் புரிந்தவர் அமெரிக்கராக இல்லாத போதும் கொடுமை நிகழ்ந்த இடம் அமெரிக்காவில் இல்லையென்றாலும் இவ்வாறு உரிமையியல் வழக்கு தொடர முடியும். இதற்கு அரசிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை.  நாம் நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாம். முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யலாம். ராஜபக்சே மீதும் பொன்சேகா மீதும் வழக்கு தொடரலாம். கலிபோர்னியாவில் இருக்கும் அவர்கள் வீட்டை விட்டு இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கலாம்.

ஆகவே இரண்டு வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறீர்கள். குற்றவியல், உரிமையியல் இருவகையிலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம், அப்படித்தானே?

ஆமாம், அப்படித்தான்.

நீங்கள் இதற்காக நீண்ட நாட்களாய் உழைத்துள்ளீர்கள். அரும்பாடுபட்டு ஏராளமான ஆவணங்களைச் சேகரித்து உள்ளீர்கள். ஆயிரம் பக்கத்திற்கு மேல் வரக்கூடிய இந்த ஆவணங்களை எப்போது அரசிடம் தரப்போகிறீர்கள்? அல்லது ஏற்கனவே தந்து விட்டீர்களா?

அடுத்த வாரம் தந்து விடுவோம். அதனை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். இதனை மூன்று நான்கு மாதங்களாக தயாரித்து வருகிறோம். இனக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை நீட்டிப்பதற்கான மிக விரிவான சான்றாக அது அமையும். இது 1948லிருந்து ஆரம்பமாகும். தமிழ் மக்களின் வாக்குரிமை குறைப்பு, குடியுரிமை குறைப்பு ஆகியவற்றிலிருந்து இது ஆரம்பமாகிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் சட்டக் கண்ணோட்டத்திலும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு இது மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக அமையும் என்று நம்புகிறோம். இன அழிப்புக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு தமிழனின் கையிலும் இந்த ஆவணம் இருக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு அடிப்படையான இனச்சிக்கல் தீர்வதற்கு உங்கள் முயற்சி எவ்வகையில் பயன்படும் என்று நினைக்கிறீர்கள்?

இவ்வழக்கு தொடுப்பது மட்டுமே இனச்சிக்கலுக்கு தீர்வாகி விடாது என்பதை நன்கு அறிவோம். இதனால் அவர்கள் எதையும் கைவிடப் போவதில்லை. உண்மை நிலவரத்துக்கு ஏற்ப செயலுக்கு உகந்த ஒரு இலக்கையே  நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். சர்வதேசிய சமுதாயத்தையோ வேறு ஒரு நாட்டையோ ஐநா அமைப்பையோ அணுகுவதால் இப்போது எந்தப் பயனுமில்லை. எத்தனையோ ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்கள் இந்த துயரத்தை உலகுக்கு உணர்த்துவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். அது எவர் செவியையும் எட்டவில்லை.  ஆகவே இந்த இனக்கொலை வழக்கை மக்களுக்கு அறிவூட்டும் கல்விப்பணியாகவும் கருதுகிறோம். கோத்தபய ,ராஜபக்சே , பொன்சேகா ஆகிய மூவரையும் தண்டிப்பதற்காக மட்டுமே நாம் இதைச் செய்யவில்லை. சர்வதேச சமுதாயம் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கும் சிங்கள பவுத்த இனவெறி மனப்போக்கு எப்படி இயங்குகிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் இந்த இனக்கொலை வழக்கு துணை செய்யும். இந்தோனேஷியவிலிருந்து கிழக்கு திமோரும் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியாவும் செர்பியாவிலிருந்து கொசோவாவும் பிரிந்து சென்றது போன்ற ஒரு தீர்வு ஏன் தேவைப்படுகிறது என்பதை இது விளங்கச் செய்வதற்கான அடித்தளமாக இவ்வழக்கு அமையும். இவையெல்லாம் அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவை. இங்கு ஓயாமல் நிகழும் இனப்படுகொலையைப் பார்த்து இதயம் வெடிக்கிறது. கொத்து குண்டுகள் வீசப்படுகின்றன. தினமும் பத்து பதினைந்து பேர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அகதி முகாம்களின் மீது குண்டு வீசப்படுகின்றன. அதே நேரத்தில் நாம் உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் உடனே நின்று விடப்போவதில்லை. இலங்கையிடம் பெட்ரோல் இல்லை. அணு ஆயுதங்களும் இல்லை. அமெரிக்காவின் கவனத்தைக் கவரக்கூடிய எதுவும் இல்லை. அதன் கவனமெல்லாம் இப்போது காஸாவிலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திலும் குவிந்துள்ளது. யுரேனியம் அணு ஆயுதங்கள் ஆகியவற்றைப் பற்றித்தான் அதற்குக் கவலை. ஈராக், ஆ·ப்கானிஸ்தான் அதற்கு முக்கியம். எப்படியானாலும் ஸ்ரீலங்காவிற்கு அதனால் முதல் முக்கியத்துவம் தர முடியாது. ஆகவேதான் நமது பணியை செய்வதற்கு ஒரு ஆயத்த காலம் தேவைப்படுகிறது. இந்த முயற்சியிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.

தியாகு : நன்றி திரு ·பெய்ன் அவர்களே! எங்களுக்கு நீங்கள் தந்த அறிவு வெளிச்சத்திற்காக நன்றி. கோத்தபய, பொன்சேகா ஆகியோரை இனக்கொலை குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றி அவர்களின் உண்மை நோக்கத்தை உலகின் பார்வையில் தோலுரித்துக் காட்ட நீங்கள் மேற்கொண்ட பாடுகளுக்காக உலகத் தமிழர் சார்பில் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டதிற்கு இது பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம். நன்றி.

புரூஸ் ·பெய்ன்: நன்றி!

***

நன்றி : மக்கள் தொ.கா, தியாகு, திரு. புரூஸ் ·பெய்ன்

**

* ‘முஸல்(மான்) வேட்டை’ – சேரனின் ஒரு கட்டுரை

**
தொடர்புடைய சில சுட்டிகள்:

1 லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் : தமிழ் | ஆங்கிலம்

2. ‘ஈழம், இனி தடுப்புமுகாம் – அகதிமுகாம் வடிவத்தில் ?’ – நாகார்ஜூனன்

3. நண்பர் H. பீர்முஹம்மது அனுப்பிய ஒரு சுட்டி (வீடியோ) :

குருதிமழை…!

ஜபருல்லா நானா நேற்று அனுப்பிய குறுஞ்செய்தி :

குருதிமழை…!
………………………

குருதியில் குளித்து
செத்துக் கொண்டிருக்கும்
இலங்கைத் தமிழர்களுக்கு
குரல் கொடுக்க
தமிழ்நாட்டில்
ஏற்பாடு செய்திருந்த
மனிதநேய சங்கிலி…
மழையில் கரைந்து
மறைந்து போனது…!