ஷிப்லி கதை – சூஃபி வழி

sufi_vazhi_1-500x500_0நண்பர் நாகூர் ரூமி எழுதிய ‘சூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்’ நூலில் என்னை சிரிக்கவைத்த பகுதி இது. சிரிப்பதும் சூஃபிஸ வழிகளில்தான் ஒன்றுதான் என்பதை சிந்தித்துத் தெரிந்து கொள்க. ‘தாதா கஞ்செ பக்‌ஷ்’ (பொக்கிஷங்களைக் கொடுப்பவர்) என்று லாஹூர் மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட ஞானி அல் ஹூஜ்விரி எழுதிய ‘கஷ்ஃபுல் மஹ்ஜூப்’ (திரைகளுக்கு அப்பால்) என்ற நூலிலிருந்து நண்பர் எடுத்திருக்கிறார். சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸூக்கு நன்றி.
***

ஒருநாள் ஷிப்லி முறைப்படி உடல் சுத்தம் செய்துகொண்டு பள்ளிவாசலுக்குள் நுழைய இருந்தார். “ரொம்ப சுத்தமாக இருக்கிறோம் என்ற அகந்தையில் என் வீட்டுக்குள் நுழைகிறாயா?” என்று அவருக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. உடனே அவர் திரும்பிச் செல்ல எத்தனித்தார்.

“என் வீட்டுக்கு வந்துவிட்டு உள்ளே வராமல்  என்னை அவமதிக்குமாறு திரும்பிப் போகிறாயா? எங்கே போவாய்?” என்றது குரல்.

ஷிப்லி உரத்த குரலில் சப்தமிட்டு முறையிட்டார்.

“என்னைத் திட்டுகிறாயா?” என்றது குரல்.

ஷிப்லி அமைதியாக இருந்தார்.

“நான் தரும் கஷ்டங்களை சகித்துக்கொள்வதுபோல நடிக்கிறாயா?” என்றது குரல்.

அதற்குமேல் ஷிப்லியால் சும்மா இருக்க முடியவில்லை:

“இறைவா, என்னை உன்னிடமிருந்து காப்பாற்றும்படி உன்னை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரார்த்தித்தார்!
***

அவ்வளவுதான் கதை. இறைவா, நாகூர் ரூமியிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக!