சால்வடார் டாலியின் ஓவியங்கள் – பிரம்மராஜன்

பிரம்மராஜனின் மீட்சி இதழ் 28-இல் இருந்து, நன்றியுடன்..

பெரும் பயப்பதியும், காரண அறிவும் பிணைந்து நம்மை இயக்குகிற இந்த இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நமக்கு அர்த்தத்தை அளிக்க வேண்டுமானால் அது ஸர்ரியலிஸத்தின் மூலமாகவே அதிகமாய் சாத்தியப்படும். வேறு எந்தவித கோணத்திலும், ஆய்வு முறைமையிலும் பிடிபடாத பல உறுத்தும் உண்மைகள் – ஹிரோஷிமா, வியத்நாம், கம்பூச்சியா, டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், பெர்ஷிங் IIs ஏவுகணைகள்- இவை யாவும் ஸர்ரியலிஸ வெளிப்பாட்டில் நமது பிரக்ஞையில் கச்சிதமாகப் பதிவாகின்றன. ஸர்ரியலிஸ ஓவிய இயக்கத்தில் டாலியின் பங்கு தனித்துவமானது இருபதாம் நூற்றாண்டின் இரட்டை நிகழ்போக்குகளான Sexம், paranoiaவும் டாலியின் உலகத்திலும் நமது உலகத்திலும் ஒரே மாதிரி இயங்குகின்றன. மற்றொரு ஸர்ரியலிஸ ஓவியரான Max Ernst மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் William Burroughs ஆகிய இருவரிடமிருந்தும் டாலி வேறுபடுகிறார். முந்திய இருவரும் தமது தனித்துவ உலகங்களின் நிழல்களில் சமைந்துவிடும்போது டாலி தனது ஓவிய வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறார்.

ஃபிராய்டிஸ யுகத்தின் தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் டாலி. இருபதாம் நூற்றாண்டு ஸ்வயத்தினுடைய (Peyche)வினோத வியாபக உலகினை, தொலைபேசிகள், குழையும் கைக்கடிகாரங்கள், பொறிக்கப்பட்ட முட்டைகள். கடற்கரைகள் போன்ற சாதாரண உலகின் படிமங்களைக் கொண்டு சித்தரிக்கிறார். டாலியின் ஓவியங்களில் நடக்கும் ‘நிகழ்ச்சிகளுக்கும் நமது நடைமுறை யதார்த்தத்தின் நிகழ்ச்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என்று சொல்ல முடியும். டாலியின் ஓவியங்களின் பிரதான குணம் என்று சொல்லப்படக் கூடியது அவற்றின் hallucinatory naturalism of the Renaissance. இதற்கு மேற்பட்டு டாலி புகைப்படத் தன்மையான யதார்த்தத்தையும், குறிப்பிட்ட ஒருவித திரைப்பட வெளிப்பாட்டு முறையையும் உத்திகளாகப் பயன்படுத்துகினர். இந்த உத்திகள், பார்வையாளனை அவனுடைய வசதிக்கு ஏற்ப மிக நெருக்கமாக ஓவியங்களுடன் தொடர்புபடுத்துகின்றன.

பிற ஸர்ரியலிய ஓவியர்களான Max Ernat, Rene Magritte. Tanguy ஆகியோர் சம்பிரதாய விவரணை வெளியைப் (Traditional Narrative Space) பயன்படுத்தினார்கள். இவ் விதமான விவரணை வெளி, ஓவியத்தின் காட்சிப் பொருளை முன்பார்வை கொண்டதாகவும் (Frontal) பொதுப்படுத்தப்பட்ட கால அமைப்பை உடையதாகவும் ஆக்குகிறது. மாறாக டாலி தனது ஓவியங்களை, திரைப்படத்தில் ஒரு Frameலிருந்து மற்றொரு Frameக்கு கடந்து செல்வது மாதிரியான உணர்வைத் தரும்படி ஆக்கியிருக்கிறார். டாலியின் ஓவிய உலகில் நம்மை அமைதியில்லாமல் துன்புறுத்தும் வெளிச்சம், சூரியனைச் சார்ந்தது என்பதை விட மின் ஒளியைச் சார்ந்தது என்பது சரியாக இருக்கும். மேலும் டாலியின் ஓவியங்கள், சென்டிமென்டலிஸத்தைத் தவிர்த்த அழகான நியூஸ் ரீல்களாக நமது மண்டைகளில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களின் இயக்கமற்ற Stillகளைப் போலிருக்கின்றன. முழு மனிதனையே தனது சித்திரங்களில் படைக்கும் டாலியின் ஒவிய வளர்ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1.The classic Freudian Phase.
2. The Metamorphic phase. (A Poly-perverse Period) .
3. The Religious Phase.
4. The Nuclear Phase.

1968ம் ஆண்டு டாலி கூறிய வார்த்தைகள் ஒய்வற்று ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன !
“The Specialized Sciences of our times are concentrating on the study of the three constants of life: the Sexual instinct, the sentiment of death, and the anguish of space – time.”
*
மீட்சி முகப்பு அட்டை ஓவியம் : டாலியின் ‘Geopoliticus’ Child Watching the Birth of a New Man. 1943 Reynolds – Morse Collection, Cleveland, Ohio.

*

நன்றி : பிரம்மராஜன்

*

மேலும் :
சால்வடார் டாலி – பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து…  –  நன்றி : யுவன் பிரபாகரன்

புனிதமானது பூமி – ஸியட்டில்

செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் (Chief Seattle ) எழுதியதாக கூறப்படும் இந்த பதில் , பிரம்மராஜனின் ‘மீட்சி’யில் வெளிவந்தது –  சுகுமாரனின் மொழிபெயர்ப்பில். ஆங்கில வடிவம் (Original ?) இங்கே. என்னிடமுள்ள ‘திசைகளும் தடங்களும்’ நூலில் ஏனோ இது இடம் பெறவில்லை. அவருடைய மற்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம்; தெரியவில்லை. ‘சமீபத்தில் படித்து வியந்த அருமையான ஆக்கம் இது. வார்த்தைகளில் நின்று அர்த்தத்தில் தாவும் இந்த கலைப் பூரணத்தை நான் மட்டும் ரசிக்க மனம் இடம் தரவில்லை. அதனாலேயே உனக்கு அனுப்புகிறேன். ‘மீட்சி’யால் கிடைத்த கொடை’ எனும் குறிப்புடன் கவிஞர் தாஜ் தன் நண்பர் ஒருவருக்கு – இருபது வருடங்களுக்கு முன்பு – அனுப்பிவைத்தது, நல்வாய்ப்பாக  இன்று என் கையில் சிக்கியது. இடுகிறேன். புகழ்பெற்ற இந்த பதில் – புதூர் இராசவேலின் மொழிபெயர்ப்பில் – புதிய கலாச்சாரம் இதழிலும் இப்போது கிடைக்கிறது. கூகுள் தயவில் மற்ற தளங்களிலும் இருக்கலாம். தேடுங்கள். ‘மீட்சி‘க்காக எங்கும் அலையலாம் ; தவறில்லை!

‘1854-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ், பரந்த செவ்விந்திய நிலப்பகுதி ஒன்றை விலைக்கு வாங்கும் உத்தேசத்தை செவ்வியந்தியத் தலைவனான ஸியட்டிலின் முன் வைத்தார். ஸியட்டில், ஜனாதிபதிக்கு வழங்கிய பதிலின் மொழிபெயர்ப்பு இது. …. வருடங்கள் கடந்து விட்டன. இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் மனிதன் துண்டிக்கப்பட்டு வரும் நமது நிகழ்காலத்துக்கு ஸியட்டிலின் சொற்கள் முன்னைவிட வெகுவாகப் பொருந்துகின்றன’ என்கிறார் சுகுமாரன்.

**

thechief

புனிதமானது பூமி

ஸியட்டில்

மொழிபெயர்ப்பு : சுகுமாரன்

**

உங்களால் ஆகாயத்தையும், மண்ணின் வெதுவெதுப்பையும் எப்படி வாங்கவும், விற்கவும் முடியும்? இந்த எண்னமே எங்களுக்கு விரோதமானது.

காற்றின் புத்துணர்வும், நீரின் பிரகாசமும் எங்களுக்கு உரிமையானதல்ல என்னும்போது உங்களால் எப்படி அவற்றை வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு இடமும் என்னுடைய மக்களுக்குப் புனிதமானது. மின்னுகிற ஒவ்வொரு பைன் மர ஊசியிலையும் ஒவ்வொரு மணற்கரையும், இருண்ட வனங்களில் விழும் மூடுபனியின் ஒவ்வொரு துளியும், தெளிவாகக் கீச்சிடும் ஒவ்வொரு பூச்சியும் என்னுடைய மக்களின் நினைவிலும், அனுபவத்திலும் புனிதமானவை. மரங்களின் வளர்ச்சியில் ஊறும் உயிர்ச்சாரத்தில் சிவப்பு மனிதனின் நினைவுகள் கரைந்திருக்கின்றன.

நட்சந்திரங்களுக்கு இடையில் நடந்து போகும் பொழுது வெள்ளைக்காரனின் முன்னோர்கள், தங்களுடைய பிறந்த மண்ணை மறந்து போகிறார்கள். எங்களுடைய மூதாதையர்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை. ஏனெனில், சிவப்பு மனிதனுக்கு பூமியே தாய். நாங்கள் பூமியின் ஒரு பகுதி; பூமி எங்களுடைய ஒரு பகுதி. வாசனைப்பூக்கள் எங்களுடைய சகோதரிகள்; மானும், குதிரையும், பருந்தும் எங்களுடைய சகோதரர்கள். பாறைச் சிகரங்களும், புல்வெளிகளில் ஊற்றெடுக்கும் சுனைகளும், குதிரையின் உடல் வெப்பமும், மனிதனும் – எல்லாம் ஒரே குடும்பம்.

எனவே, வாஷிங்டன் பேரதிகாரி எங்களுடைய நிலத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தபோது, அவர் எங்களிடம் அதிகப்படியாகக் கோருகிறார். நாங்கள் வசதியாக வாழ எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பேரதிகாரியால் அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் எங்கள் தந்தையும், நாங்கள் அவருடைய பிள்ளைகளும் ஆவோம். எனவே நிலத்தை வாங்குவதற்கான உங்கள் யோசனையை நாங்கள் கவனிக்கலம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதானது.

நதிகள் எங்களுடைய சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. நதிகள் எங்களுடைய படகுகளைச் சுமக்கின்றன. எங்களுடைய குழந்தைகளை ஊட்டி வளர்க்கின்றன. நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்க நேர்ந்தால், நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். நதிகள் எங்களுடைய மற்றும் உங்களுடைய சகோதரர்கள். எந்த ஒரு சகோதரனுக்கும் வழங்கும் கருணையை நீங்கள் நதிகளுக்கும் வழங்கியே தீரவேண்டும்.

வெள்ளைக்காரர்களுக்கு எங்களுடைய வழிகள் புரியாது என்று எங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஒரு நிலப்பகுதி வேறு எந்தப்பொருளையும் போலத்தான்.ஏனெனின் இரவில் வந்து நிலத்திலிருந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்துப் போகிறவன் அவன். அவனுக்கு நிலம் சகோதரனல்ல; எதிரி. வெற்றி கொண்டதும் அதைக் கைவிட்டுப் போகிறான். தகப்பனின் இடுகாட்டை அவன் பின்னொதுக்கிவிட்டுப் போகிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தைத் தட்டிப் பறிக்கிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தகப்பனின் இடுகாடும் பிள்ளைகளின் பிறப்புரிமையும் மறக்கப்படுகின்றன. அழகிய முத்துக்களைப் போலவோ, செம்மறி ஆட்டைப்போலவோ வாங்கவும், பறித்துக்கொள்ளவும் கூடிய பொருட்களாகத்தான் அவன் தன்னுடைய தாயையும், நிலத்தையும், சகோதரனையும், ஆகாயத்தையும் கருதுகிறான். அவனுடைய வேட்கை பூமியின் ஈரம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு அதைப் பாலைவனமாக விட்டெறிகிறது.

எனக்குத் தெரியாது. எங்களுடைய வழிகள் உங்கள் வழிகளிலிருந்து வேறானவை. உங்கள் நகரங்களின் தோற்றம் சிவப்பு மனிதனின் கண்களை நோகச் செய்கிறது. ஏனெனில் சிவப்பு மனிதன் காட்டுமனிதனாக இருப்பதால் புரிந்து கொள்வதில்லை.

வெள்ளைக்காரர்களின் நகரங்களில் அமைதியான இடங்களே இல்லை. வசந்தகாலத்தின் இலைகள் கீழே விழும் முணுமுணுப்பு அல்லது வண்டின் சிறகொலியோ இல்லை. ஒரு காட்டுமனிதன் என்பதால் எனக்கு இது புரியவில்லை. குளம்படி ஓசைகள் காதுகளை அவமானப்படுத்துகின்றன. இரவில் குளக்கரைகளில் சுவர்க்கோழிகளின் புலம்பலோ, தவளைகளின் விவாதமோ கேட்காமலிருந்தால் அங்கே வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? நான் ஒரு சிவப்பு மனிதன். எனக்கு இது புரியவில்லை. குளத்தின் முகத்தில் வீசும் காற்றின் மெல்லிய ஓசையும், மத்தியான மழையில் கழுவப்பட்டு வரும் அதன் வாசனையும், பைன் மரங்களிடமிருந்து பெற்ற நறுமணமுமே ஒரு செவ்வியந்தியனுக்குப் பிரியமானவை.

சிவப்புமனிதனுக்கு காற்று விலைமதிப்பில்லாதது. எல்லாப் பொருட்களும் அதைப் பங்கிட்டுக் கொள்கின்றன. மிருகமும், மரமும், மனிதனும் ஒரே காற்றைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். வெள்ளை மனிதன் தான் சுவாசிக்கும் காற்றைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. நீண்டகாலமாகச் செத்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைப்போல துர்நாற்றத்தைப் பரப்பி அவன் அதிலேயே மரத்துப் போகிறான். உங்களுக்கு எங்களுடைய நிலத்தை விற்க நேர்ந்தால் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் : காற்று விலைமதிப்பில்லாதது. ஏனெனில் தன்னைச் சார்ந்திருக்கிற எல்லாவற்றுக்கும் தனது ஆன்மாவைப் பங்கிட்டுத் தருகிறது. சுவாசிக்க முதல் மூச்சைத் தந்த காற்றிலிருந்துதான் எங்களுடைய மூதாதை கடைசிப் பெருமூச்சையும் உள்ளிழுத்தார். உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தை விற்க நேர்ந்தால், இதை எப்பொழுதும் பரிசுத்தமானதாக நீங்கள் காப்பாற்ற வேண்டும். எங்கோ புல்வெளிகளில் மலர்ந்த பூக்களால் நறுமணமாக்கப்பட்ட காற்றை; வெள்ளைக்காரனும் அனுபவிக்கப் போகும் அந்த நிலத்தை.

அப்படியென்றால், எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் விருப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன். வெள்ளை மனிதன் தன்னுடைய சகோதரர்களைக் காப்பாற்றுவதுபோல இந்த நிலத்திலுள்ள விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும்.

நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.

விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.

எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்.

நண்பனைப்போல உரையாடிக்கொண்டு கடவுளுடன் கூட நடக்கும் வெள்ளை மனிதனும் இந்தப் பொது நியதில்லை விலக்கானவல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எல்லோரும் சகோதரர்களே. நாம் சந்திப்போம். எங்களுக்குத் தெரியும் : நமது கடவுள் ஒரே கடவுள் என்பதை வெள்ளை மனிதனும் ஒரு நாள் கண்டடைவான். நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்: எங்களுடைய நிலத்தைச் சொந்தமாக்க விரும்புவதுபோலத்தான் கடவுளையும் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். ஆனால் அது உங்களால் முடியாது. அவர் மனிதனின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளையனுக்கும் சமத்துவமானது. இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பில்லாதது. பூமியை நோகச் செய்வது அதைப் படைத்தவரின் மீது கொட்டும் நிந்தனை. வெள்ளை மனிதனும் இந்த பூமியில் இல்லாமற் போவான். ஒருவேளை வேறு எந்த இனத்துக்கும் முன்பாகவே , உங்களுடைய படுக்கையும் மலினமாகும். உங்களுடைய குப்பையில் கிடந்து நீங்களும் ஒருநாள் மூச்சுத் திணறுவீர்கள்.

இந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதன் மீதும் உங்களுக்கு அதிகாரம் வழங்கிய, ஏதோ பிரத்தியேக காரணங்களால் உங்களை இந்த நிலத்திற்கு கொண்டு வந்தவரின் வலிமையால் , வெந்து சாம்பலாகும்போதும் நீங்கள் பிரகாசிக்கலாம். எல்லா எருமைகளும் கசாப்புச் செய்யப்பட்டதும், காட்டுக்குதிரைகள் அடக்கப்பட்டதும், கானகத்தின் ரகசிய மூலைகள் மனிதனின் பிரவேசத்தால் கனத்ததும், வளமான குன்றுகளின் காட்சி பேசும் கம்பிகளால் மூடப்பட்டதும் எப்போது என்று எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அந்த நியதி எங்களுக்குப் புதிரானது. அடர்ந்த காடுகள் எங்கே? அழிந்து போயின. கழுகுகள் எங்கே? அழிந்து போயின. வாழ்தலின் முடிவு, பிழைத்திருத்தலின் ஆரம்பம்.

**

நன்றி : சுகுமாரன், பிரம்மராஜன் (மீட்சி)