ரமலான் சிந்தனைகள் – நூருல் அமீன்

noorulameen-fb

“எத்தனை விவேகம் கைவந்த பின்னும் நம் கீழ்மை நம்மை விட்டு போகவில்லையே” என மகத்தான அறிஞர்கள் எல்லாம் வருந்தியிருக்கிறார்கள். ஏன் இத்தகைய மனோநிலைக்கு ஓரளவு நாமே நமக்கு ஆதாரமாக இருக்கின்றோம். இந்த நிலை ஏன்?

அறிவு என்பது நம்மை பாவ காரியங்களை விட்டும் காப்பாற்றாது. பாவம் செய்யும் போது மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் வழியைத் தான் சொல்லிக் கொடுக்கும். ஞானம் என்பது தான் நம்மை நேர்வழியில் செலுத்தும். அது என்ன ஞானம்?.

ஞானம் என்பது மூளையிலிருந்து வரும் ஆளை வளைத்துப் போடும் அறிவுப் பூர்வமான கருத்துகள் அல்ல. அது இதயத்தை சென்றடைந்து இறையச்சத்தை உண்டாக்கும் அறிவு. இறைவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என குர்ஆனில் கூறும் அறிவைத் தான் ஞானம் என குறிப்பிடப்படுகின்றேன். உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அறிந்தவனும் நான் தான் அதனால் அவனுக்கு அதிகமாக அஞ்சுபவனும் நான் தான் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களே அந்த அறிவு தான் ஞானம். அதை அடைவதுதான் ஆன்மீகத்தின் முந்திய பகுதியாக கருதப்படுகின்றது.

அந்த ஞானத்திற்கு தடையாய் இருப்பதே உலக வாழ்வில் நாம் கற்று தேர்ந்த, மூளையால் மட்டுமே சேகரித்த, இதயத்தை தொடாத பல வகை அறிவுகளும் அதனால் தன்னை பெரிதாக விளங்கும் ஆணவமும் அகம்பாவமும் தான். எது சரி எது தவறு என எச்சரிக்கும் மனசாட்சி என்பதெல்லாம் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற ஆணவத்தினால் வலுவிழந்து போய் விடுவதால் மனம் என்பது வெறும் இச்சைகளின் பால் அழைக்கும் கருவியாக மட்டுமே செயல்படுகின்றது.

மனோஇச்சைகளை பற்றிய படிப்பினையூட்டும் இந்த குதிரை கதையை படியுங்கள். ஒரு குதிரையொன்று இருந்தது. அது எப்போது சாணம் போட்டாலும் அங்கே நின்று அதை முகர்ந்த பின்னர் தான் மீண்டும் வண்டியை இழுக்கும், பிரியமான குதிரை என்பதால் அதை பொறுத்து பொறுத்து பார்த்த குதிரை வண்டிக்காரன் ஒரு நாள் வேறு வழியில்லாமல் சாட்டையை எடுத்தான். எப்போதெல்லாம் சாணத்தை முகர குனிகிறதோ அப்போதெல்லாம் ஒரு அடி கொடுத்தான். சில முறை அடிகள் வாங்கியவுடன் குதிரை சாணத்தை முகறுவதை நிறுத்தியது. சிறிது தூரம் இப்படி ஒழுங்காக சென்ற குதிரையை பார்த்த வண்டிக்காரனுக்கு தன் பிரியமான குதிரை மீது இரக்கம் வந்தது அதனால், “என் செல்லம் உன்னை அடிச்சிட்டேன்ல, இனிமே அடிக்க மாட்டேன்”என குதிரையை கொஞ்சியவனாய் சாட்டையை விட்டெறிந்தான். குதிரைக்கு அவன் கூறியது விளங்கியாதோ இல்லையோ அவன் கையில் இப்போது சாட்டை இல்லை என்பது மட்டும் விளங்கியது. அவ்வளவு தான் குதிரை அந்த வண்டியை அப்படியே திருப்பி பின் சென்றது இது வரை எந்த இடத்திலெல்லாம் சாணத்தை முகராமல் வந்ததோ அத்தனையும் சேர்த்து வைத்து முகர்ந்தது. குதிரைவண்டிக்காரன் கைசேதத்துடன் செய்வதறியாமல் திகைத்து நின்றான். மனதின் மிருக இச்சைகளை கட்டுபாடின்றி விட்டால் ஒரு பாவத்தையும் அது விட்டு வைக்காது என்பதுடன் இது வரை செய்யாமல் கட்டுபடுத்தி வைத்த அனைத்து பாவங்களையும் செய்ய வைத்துவிடும் என்பதை விளக்கும் கதையிது.
ரமலான் முடிந்தவுடன் நமது குதிரை நமக்கு பிரியமான பாவ சாணங்களை முகர துவங்கிவிடும் என்பதற்கு நாமே நமக்கு சாட்சியாய் இருக்கின்றோம். அதே நேரத்தில் பாவம் செய்வதை விட்டு நிரந்தமாக மீள வேண்டும் என்ற ஆசையும் நமக்கு இல்லாமல் இல்லை.

ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாக வாழும் இந்த இரட்டைநிலையிலிருந்து மீள வழி என்ன?

நாமாக நல்லவர்களாய் இருக்க முடியாது. நாமாக மனோ இச்சைகளை ஜெயிக்க முடியாது. எந்த நன்மையையும் சுயமாக செய்யவோ, இல்லை எந்த பாவத்தை விட்டும் சுயமாக தப்பிக்கவோ முடியாது இறைவனின் கருணை இருந்தாலே தவிர. இந்த நம் பலகீன நிலையை உளப்பூர்வமாக உணர்ந்து “யாஅல்லாஹ்! நானாகவே நான் இல்லை ஒவ்வொரு வினாடியும் உன் ரஹ்மத்தான கருணையால் இருக்கின்றேன்” என அல்லாஹ்விடம் தன்னை(நப்ஸை) ஒப்படைத்து அல்லாஹ்வைக் கொண்டு வாழும் நிலையை நோக்கி நமக்கு வழி நடத்துகிறது பெருமானாரின் இந்த பிரார்த்தனை:

“இறைவா உன் கருணையில் ஆதரவு வைக்கின்றேன். கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம் என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் துஆ கேட்பவர்களாக இருந்தார்கள். (அபுதாவுது, அஹ்மது)

சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் கற்றுத் தரட்டுமா? (அது) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பது தான்” என பெருமானார் கற்றுத் தந்துள்ளார்கள் ( புகாரி).

தினமும் 700 முறை “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் நப்ஸ், ஷெய்தானின் தீங்கை விட்டுஅல்லாஹ் பாதுகாப்பான் என என் சங்கைக்குரிய ஷெய்கு ஃபைஜிஷாஹ் நூரி அவர்கள் எங்களுக்கு கற்று தந்தார்கள்.

இறைவனின் எல்லை இல்லா ரஹ்மத்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் இந்த ரமலானில் “இறைவா உன் ரஹ்மத்தில் ஆதரவு வைக்கின்றேன். கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம் என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என்ற பெருமானாரின் துவாவுடன் தினமும் 700 முறை “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என ஓதி நப்ஸ், ஷெய்தானுடைய தீங்கை விட்டு பாதுகாப்பு பெற இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் செய்வானாக!

*
நன்றி : நூருல் அமீன்
http://onameen.blogspot.com/
https://www.facebook.com/noorul.ameen.7355

Abdel Rab Idris

Thanks to Ashroff & Salehvideo
*

வெற்றிலைக் கொடிகள் பயிரிடும் இறைவன் – முபாரக் கவிதை

mubarak-abed-wp1
வெற்றிலைக் கொடிகள் பயிரிடும் இறைவன்
கவிஞர் முபாரக்
————————
எல்லோருக்கும் என ஓர் இறைவன்
அவனைப் பற்றிச் சொல்வதற்கு
எல்லாருக்கும் உண்மையாக
மனப்பூர்வமாக ஏதாவது இருக்குமா
எனத்தெரியவில்லை
ஆனால்
எனது உம்மம்மாவுக்கு என
ஓர் இறைவன் இருக்கிறான்
அவன் நிச்சயமாக இருக்கிறான்
யாருக்காகவும் அவன் இருக்கிறானோ இல்லையோ
அவளுக்காக அவன் இருக்கிறான்
அவளுக்கான வெற்றிலைகள்
பயிரிடப்படும் இடங்களில் தேவையான
மிதமான மழையை அவனே பொழிவிக்கிறான்
மிதமான வெப்பத்தையும் அவன் பார்த்துக் கொள்கிறான்
அவனைப் பற்றிச் சொல்வதற்கு
அவளிடம் எப்போதும் ஏதாவது இருந்து கொண்டேயிருக்கும்
அவளது சொற்களில்
அவன் நமக்கு அருகில் வருவது போலவே இருக்கும்
அவளது இறைவனைப் பற்றிய நினைவுகள் இல்லாது
அவளது ஒரு நாளும் தொடங்குவதுமில்லை முடிவதுமில்லை
*
எப்போதும்
நடுவீட்டில் நடுநாயகமாக அமர்ந்திருப்பாள்
அது
அர்ஷில் அமர்ந்திருப்பதைப் போலவே இருக்கும்
எப்போதும்
அவளது இதயத்தில் அரியணையிட்டு
அவளது இறைவன் அமர்ந்திருப்பான்
கால்நீட்டி அமர்ந்து
பேரக்குழந்தைகளுக்கு கதைகள்
சொல்லத்தொடங்கினால்
பெரும்பாலும் இறைத்தூதர்களைப் பற்றிய
கதைகளாகவே இருக்கும்
அப்போது அவர்கள் உயிர்பெற்று நமக்குள் நடமாடத்தொடங்குவார்கள்
அப்போது அவளது கதைகளைக் கேட்பதற்கு
வாசலுக்கு வானவர்கள் வரத்தொடங்குவார்கள்
*
அவளை நோக்கி ஏவப்படும்
கோபங்களையும் அவமதிப்புகளையும்
ஏச்சுக்களை எல்லாம் தனது
தஸ்பீஹ் மணியை இடைவிடாது
எண்ணுவதன் மூலம் கடந்து செல்வாள்
*
பயணம் செல்லும் முன்
விடைபெறுவதற்காகச் சந்திக்கையில்
வெற்றிலை வாசத்தோடு
நெற்றியிலொரு முத்தமும்
கைப்பைக்குள்ளிருந்து எடுத்த
கசங்கிய வெற்றிலையில்
நூறு ரூபாய்த்தாளைச் சுற்றித்தருவாள்
நீண்ட ஆயுளையும் நிலையான செல்வத்தையும்
நமக்குத் தரச்சொல்லி
அவளது இறைவனுக்கு உத்தரவிடுவாள்
நம் வாழ்வு மாறும் வசதிகள் மாறும்
ஊர் மாறும் உறவுகள் மாறும் உலகம் மாறும்
எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும்
அவளது ஆசீர்வாதமும் பிரார்த்தனைகளும்
நூறு ரூபாய் அருளும்
வெற்றிலை வாசமும் மாறவே இல்லை
தடைபட்டதும் இல்லை
*
தன் நினைவு முழுதும் தனது இறைவன் மட்டுமே இருந்தால் போதும் என நினைத்துவிட்டாள் போலும்
கொஞ்சம் கொஞ்சமாக
தனது கதைகளை மறக்கிறாள்
மனிதர்களை மறக்கிறாள்
உறவுகளை மறக்கிறாள்
உலகத்தோடு அவளைப் பிணைக்கும்
கண்ணிகளை அறுக்கிறாள்
இறைவைனின் நினைவோடு மட்டுமே
மிஞ்ச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்
*
ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்
சோலைவனமான சொர்க்கத்தில்
கஸ்தூரியின் வாசமடிக்கும் என
யாரோ சொல்லியிருக்கிறார்கள்
*
உம்மம்மாவின் சொர்க்கச் சோலைகளில்
பேரீச்சை மரங்களைச் சுற்றிலும்
அவளுக்குப் பிடித்த வெற்றிலைக் கொடிகள் படரவிட்டு
அவளது இறைவன் காத்திருப்பான் என்றே நினைக்கிறேன்
என்னிடம் கேட்டால்
நானும் வெற்றிலைக் கொடிகள் படர்ந்திருக்கும்
சொர்க்கத்திற்கே செல்லவே விரும்புவேன்
அங்கேதான்
அவளிடம் பயணம் சொல்லிவிட்டு
விடைபெற வேண்டிய அவசியம் இருக்காது.
**
நன்றி : முபாரக்
*
Read also :
உப்பூறிய நெல்லிக்காய் – முபாரக்

திருவிளையாடல் (கவிதை ) – க. மோகனரங்கன்

நெஞ்சு வெடித்துச்
சாகப் போகுமுன்
அவன் கேட்டான்
‘என் தெய்வமே
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?’
காதில் விழாததுபோல
பாவ்னை செய்த கடவுள்
கடமையே கண்ணாக
தனது அடுத்த
அற்புதத்தை நிகழ்த்த
புதியதொரு
பூஞ்சையான இதயத்தை
தேடத் துவங்கினார்.
*
’கல்லாப் பிழை’ நூலிலிருந்து…

mohan-6
நன்றி : க. மோகனரங்கன் & செல்வராஜ் ஜெகதீசன்

« Older entries