அப்பாவின் நாற்காலி – ‘பரிவை’ சே.குமார்

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் (2019) இரண்டாம் பரிசு பெற்றவரான சகோதரர் பரிவை.சே.குமாரிடம் எப்படி இவ்வளவு நன்றாக ‘வீராப்பு’ கதையை எழுதினீர்கள் என்று கேட்டார்களாம். அமீரக வாசிப்பாளர் குழுமத்தைச் சேர்ந்தவர்களைப் போல எழுதுவதில்லை என்று முதலிலேயே முடிவெடுத்தேன், வெற்றி பெற்றேன் என்று சரியாகச் சொல்லியிருக்கிறார். அதானே, எதற்கு சிறுகதை உருவம் பற்றி சி.சு.செல்லப்பா (இவரா? அண்டார்ட்டிகாவில் வசிக்கும் ஆங்கில எழுத்தாளர்) சொல்வதைப் படித்துவிட்டு பிறகு எழுத உட்கார வேண்டும்? அவரவருக்கு வாய்த்தது அவரவருக்கு. எல்லோரும் எழுதுவோம்! வாழ்த்துகள் குமார்.

அன்புத் தம்பியும் வாட்ஸப் கம்பியுமான ஆசிப்மீரான் கொடுத்த குமாரின் கதைகளிலிருந்து ஒன்றை இங்கே பகிர்கிறேன். சுவாரஸ்யத்திற்காக ‘பந்தயம்’ கதையைப் போடலாம் என்று நினைத்தேன், அதில் வரும் ‘எனக்கு பந்தயத்தப் பத்தி தெரியாதா… அடியே நாங்கெல்லாம் வீம்புக்கு வெசங்குடிக்கிறவனுங்க பரம்பர… யாரப்பாத்து என்ன பேசுறே…? ’ என்ற வடிவேல் பாணி வசனத்தை அப்படி ரசித்தேன். ஆனால் முடிவு ’ச்சொப்’ என்றிருந்தது. எனவே மனம் கனக்கச் செய்யும் ’அப்பாவின் நாற்காலி’யைத் தேர்ந்தெடுத்தேன். சிறந்த நூறு கதைகளை என்னிடம் தந்தால் சீதேவி வாப்பா வரும் கதையை மட்டும் தேர்ந்தெடுக்கும் ’வாப்பா பைத்தியம்’ நான். ஆபிதீனை விடுங்கள், எளிமையான சம்பவங்களை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து, அதைச் சிறப்பாகக் கோர்த்து தனக்கே உரிய பாணியில் சிறுகதைகளாகத் தருவதில் தனக்கென ஒருபாணியை உருவாக்கி இருக்கிறார் குமார் என்று கடுமையாகப் பாராட்டும் ஆசிபை நம்புங்கள்.

ஏற்கனவே 2011-ல் இந்தக் கதையை தன் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் குமார். இருந்தாலும் இங்கேயும் இருக்கட்டும். நன்றி.

*

அப்பாவின் நாற்காலி – ‘பரிவை’ சே.குமார்

திண்ணையில் கிடக்குதே இந்த மர நாற்காலி இதுதான் அப்பாவின் சிம்மாசனம். இதில் அமர்ந்திருக்கும் போது அவரது மிடுக்கு மிகவும் அழகாக இருக்கும். பெரும்பாலான பொழுதுகளை இதில்தான் கழிப்பார். காலையில் குளித்து முருகனை வணங்கி நெற்றி நிறைய விபூதி பூசி அதன் மீது அழகாக குங்குமம் வைத்து நாற்காலியில் வந்து அமர்ந்துவிடுவார். மணியக்கார சோமு சித்தப்பா தினமும் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கும் பேப்பரைப் படிப்பது, அம்மா கொடுக்கும் காபியைக் குடிப்பது எல்லாமே இதில் அமர்ந்தபடிதான். விவசாய காலங்களில்தான் இந்த நாற்காலிக்கு அதிக ஓய்வு கிடைக்கும் மற்ற நாட்களிலெல்லாம் அவரை மட்டுமே அதிகம் சுமக்கும்.

நானும் என் தங்கையும் பள்ளியில் படிக்கும் காலத்தில் அப்பாவின் இருக்கையாக இருந்து ஒரு இரும்பு நாற்காலி. அந்த நாற்காலியின் பின்னே நானும் தங்கையும் ஊக்கால் எங்கள் பெயரை எழுதி வைத்திருப்போம். அதில் அமர்ந்து ஓம் முருகா சுருட்டுப் பிடித்தபடி அவர் வயதொத்தவர்களிடம் மணிக்கணக்கில் ஊர்க்கதைகள் பேசுவார். சில கதைகளைப் பேசும் போது நாங்கள் அருகில் இருந்தால் ஒன்றும் சொல்லமாட்டார். பொண்டு பிள்ளை கதைகள் என்றால் இங்க உங்களுக்கு என்னடா வேலை… உள்ள போங்க… போய்ப் படிங்க… வாய் பார்த்துக்கிட்டு இருக்காம… என்று விரட்டுவார்.

அம்மாவிடமும் அப்பத்தாவிடமும் எங்களுக்கு இருந்த நெருக்கம் ஏனோ அப்பாவிடமும் ஐயாவிடமும் இல்லை. மரியாதை என்பதைவிட அவர்கள் இருவரும் வைத்திருந்த முரட்டு மீசையே காரணம்… பார்க்கும் போதே பயம் வரும்… பேசும் போது மீசையை லாவகமாக விலக்கி விடும் அப்பாவை பார்க்கும் போது நாட்டாமை விஜயகுமாரைப் போல் இருப்பார்… அந்த லாவகம் எல்லாருக்கும் வருவதில்லை.

நான் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போதுன்னு நினைக்கிறேன் சரியா ஞாபகமில்லை வயலில் நின்ற வைரம் பாய்ந்த வேல மரத்தை வெட்டி அதில்தான் இந்த நாற்காலியை செய்தார். அதுவும் அவரது நண்பரும், மர வேலையில் கெட்டிக்காரரான சின்னப்ப மாமாதான் செய்தார். அவர் கால்களை ரெடி பண்ணும் போது இத நல்லாச் சீவுடா… அதை அப்படி பண்ணுடான்னு நச்சரிச்சுக்கிட்டே இருப்பாரு. அப்பல்லாம் சின்னப்ப மாமா, ‘மாப்ளே, உங்கப்பனை விட்டாலே அழகா ஆசாரி வேல பாத்திருவான் போல… எனக்கே தொழில் சொல்லித்தாரான் பாரு… இப்படி நமைச்சல் கொடுத்தா மத்தவனுங்க பாதியில போட்டுட்டுப் போயிடுவானுங்கன்னுதான் என்னையக் கூப்பிட்டிருக்கான்’னு சொல்லிச் சிரிப்பாங்க.

‘ஆமா, இவரு பெரிய டவுசரு… அரைகுறை வேலைக்காரனுக்கு சொல்லித்தான் தரணும். இங்க அப்படியே போட்டுடுட்டுப் போனியன்னா வீட்டுல என் தங்கச்சி சோறு போடாதுடி’ என்று பதிலடி கொடுப்பார்.

அப்பாகிட்ட எனக்குப் பிடிச்ச குணம் என்னன்னா உழைக்கிறவனுக்கு அவன் கேக்கிறதை விட அதிகமா பணம் கொடுக்கிறதுதான்… அதுவும் அவர் மனசுக்குப் பிடிச்ச மாதிரி வேலையை முடிச்சிக் கொடுத்துட்டா… கணக்கே பாக்கமாட்டாரு… யாராவது இப்படி நீங்க கொடுத்தா மத்தவங்ககிட்டயும் எதிர்பார்ப்பாங்கன்னு சொன்னா, அவன் இன்னைக்கு பார்த்த வேலைய ரெண்டு நாள்… மூணு நாள் இழுத்துப் பாத்திருந்த இதவிடக் கூடக் கிடைக்கும்தானே. அதனால ஏமாத்தாம உழைக்கிறவன் திங்கிறதுல தப்பேயில்லை எனப் பதில் சொல்வார்.

நாற்காலி செய்த அன்றும் அப்படித்தான் சின்னப்ப மாமா கடைசி வரை இருந்து, பொறுமையாய்… அழகாச் செய்து முடித்தார். அப்பாவுக்கு நாற்காலியைப் பார்த்து அவ்வளவு சந்தோஷம்… மீசையை கையால் ஒதுக்கிய போது அவர் உதட்டில் மகிழ்ச்சிப் புன்னகை.

‘நீதான்டா வேலைக்காரன்… அவ்வளவு நல்லா இருக்குடா… எவ்வளவுடா வேணும் உனக்கு..’ என மகிழ்வோடு கேட்டார். ஆனால் மாமா ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்’ என பணம் வாங்க மறுத்தார்.

‘இங்க பாரு நட்பு வேற… தொழில் வேற… இன்னைக்கு வேற எடத்துக்குப் போயிருந்தா பணம் வாங்காம வருவியா… உன்னைய நம்பி வீட்டுல நாலு ஜீவன் இருக்கு மறந்துடாதே’ ன்னு சொல்லி அவர் மறுக்க மறுக்க அவர் வாங்கும் சம்பளத்தைவிட கூடுதலாய் பணத்தை பாக்கெட்டில் திணித்து விட்டு, அம்மாவிடம் சொல்லி கடலை கொஞ்சம் கொடுத்து விடச் சொன்னார்.

அடுத்த ரெண்டு மூணு நாள்ல ஊருக்குள்ள பெயிண்டருன்னு சொல்லிக்கிற இளங்கோ மாமா வந்து அதுக்கு பாலீஸ் தடவி கருகருன்னு ஆக்கிட்டுப் போனாரு. அதுக்கப்புறம் அந்த நாற்காலியில்தான் அப்பா அமர்வது வழக்கம். அதுவும் குடும்பப் பிரச்சினை என்று வருபவர்கள் அவரது நாற்காலிக்கு முன்னர் திண்ணையில் அமர, நாற்காலியில் அமர்ந்து ஓம் முருகா சுருட்டைப் பிடித்தபடி அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை கூர்ந்து கேட்டு தீர்ப்பு வழங்குவார்.

எங்கள் பகுதியில் யார் வீட்டில் பிரச்சினை என்றாலும் அப்பாவிடம்தான் வருவார்கள். சும்மா நாட்டாமைக் கணக்காத் தீர்ப்பு சொல்வாரு. அதிகம் அம்பேத்கார் காலனியில உள்ள பொம்பளைங்கதான் வருவாங்க… உட்காராம நின்னுக்கிட்டே இருப்பாங்க. அப்பல்லாம் அப்பா ஆம்பளைங்கிறதால மரியாதை போலன்னு நினைப்பேன். ஏன்னா எங்களுக்கு உக்காந்து சோறு போடுற அம்மா, அப்பா சாப்பிடுறப்போ நின்னுக்கிட்டேதான் சோறு போடுவாங்க… அவரு தட்டுல கை கழுவி எந்திரிக்கிற வரைக்கும் உட்கார மாட்டாங்க.. அதுமாதிரி நிக்கிறாங்கன்னு நினைச்சுப்பேன்.

அவங்க சொல்ற பிரச்சினைகள்ல பெரும்பாலும் குடிச்சிட்டு போட்டு அடிக்கிறான்… கூத்தியா வச்சிருக்கான்… சாப்பாட்டுக்கு பணமே தரமாட்டேங்கிறாங்கிற கதைகள்தான் அதிகம் இருக்கும். தீர்ப்பு சொல்றதோட மட்டுமில்லாம சாமிக்கண்ணு இங்க வாடான்னு என்னையக் கூப்பிட்டு என்னோட எடவார எடுத்தான்னு சொல்லி அதுல இருந்து பணமெடுத்துக் கொடுத்து இந்தா தாயி புள்ளைகளுக்கு எதாவது வாங்கி ஆக்கிப் போடுன்னு கொடுப்பாரு. அதனால அந்த மக்களுக்கு அப்பாதான் கருண மகாராஜா. அவங்க கை எடுத்துக் கும்பிடும்போது கண்ணீர் கன்னத்தில் இறங்குவதைப் பார்த்திருக்கிறேன்…’எதுக்கு அழறே… எல்லாம் சரியாகும்.. சரியாகாம எங்க போகப்போவுது…’ என ஆறுதல் சொல்வார்.

ஒரு தடவை ஏதோ பிரச்சினையின்னு எங்க தோட்டத்துல வேலை செய்யிற மாரியண்ணனும் சோனையண்ணனும் வந்திருந்தாங்க. அப்பாகிட்ட பிரச்சினையை சொல்லிட்டு துண்டையெடுத்துக் கக்கத்துல வச்சி அதோட ஒரு தலைப்பை எடுத்து வாயைப் பொத்திக்கிட்டு வாசல்ல நின்னாக, எனக்கு ஒண்ணும் புரியலை. அப்பாகிட்ட கேக்கமுடியாது, அம்மாகிட்ட கேட்டப்போ, அவங்க கீழ்சாதி, நம்ம வீட்டுக்கு வந்தா தீட்டுன்னு சொன்னாங்க… என்னம்மா தீட்டு தோட்டத்துக்கு போறப்பல்லாம் மாரியண்ணன் எளநீ வெட்டித்தருது. அதைதான் அப்பாவும் , நாமும் குடிக்கிறோம். அது மட்டும் தீட்டில்லையான்னு கேட்டதுக்கு உனக்குத் தெரியாது பெரிய இவனாட்டம் பேசாதேன்னு வாயை அடைச்சிட்டாங்க. நானும் அதுக்கு அப்புறம் பேசலை. அப்பாவோட தீர்ப்பு அவங்களுக்கு சரியின்னு பட்டதும் ரொம்ப நன்றி சாமின்னு சொல்லிட்டு பொயிட்டாங்க.

எல்லாரும் சாப்பிட உக்காந்தப்போ ‘ஓ மகன் என்னமோ ஒங்கிட்ட கேட்டானே என்ன கேட்டான்’ அப்படின்னு அம்மாகிட்ட கேட்டாரு. அம்மா ஒண்ணுமில்லேன்னு சொல்ல, ‘சும்மா சொல்லு, என்ன பிராது கொண்டாந்தவங்க உக்காராம நிக்கிறாங்கன்னுதானே கேட்டாரு…. எளநீ கிளநீன்னு எல்லாம் வசனம் பேசுனாரே’ என்றதும் உங்களுக்கு பாம்புக்காதுன்னு சொல்லி அம்மா சிரிச்சாங்க.

பாம்புக்கு காது இருக்கான்னு எனக்குத் தெரியாது. அவரின் பார்வை மட்டும் பயத்தைக் கொடுத்தது. ‘போச்சுடி உனக்கு இன்னைக்கு பூஜை இருக்கு’ன்னு மெதுவாக என் காதைக் கடித்தாள் தங்கை புஷ்பா. அவளை முறைத்தாலும் எதற்கும் முன்னெச்சரிக்கையாக அவரின் கைக்கெட்டாத தூரத்தில் தள்ளி அமர்ந்து கொண்டேன்.

‘இதெல்லாம் வழிவழியா வர்ற வரைமுறைகள்… நாமளா கேக்குறோம்… அவங்களாக் கொடுக்குறாங்க… இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது. காலம் போகப் போகத்தெரியும். அவங்க நம்ம வீட்டுக்குள்ள வரமாட்டாங்க… குடியானவங்க யாரு போனாலும் ஐயர்மாருங்க வீட்டுக்குள்ள விடமாட்டங்க… நமக்கு இவங்க கீழ் சாதி, ஐயருமாருக்கு நாம எல்லாரும் கீழ் சாதி… விடு… உனக்கு எதுக்கு இதெல்லாம்ன்னு பொதுவாப் பேசினாலும் எனக்கு இந்த சாதிக் கட்டுப்பாடுகள் சுத்தமாக பிடிக்கவில்லை.

திருவிழா வேலைகளை எல்லாம் அவர்கள் பார்க்க, அலங்கரித்த அம்மன் பள்ளக்கில் வரும் போது அவர்கள் தெருப்பக்கமே திரும்பாமல் வருவதைப் பார்க்கும் போதெல்லாம் மனிதன் தான் சாதிப் போர்வையை போர்த்தியிருக்கான்னா… தெய்வத்துக்குமான்னு நினைப்பு வரும். என்ன செய்ய பழமையில் ஊறிய ஊரில் சிறுவனான நான் என்ன செய்ய முடியும்… வேடிக்கைதானே பார்க்க முடியும்… அதைத்தான் செய்தேன்.

ஆனா இப்ப அப்படியில்லை… சாதியாவது மதமாவது… எங்க ஊரு மாரியாத்தா இப்பல்லாம் பள்ளக்குல எல்லா வீதிக்கும் போய்வருது. விழாவுக்கு வார ஐயரு எங்க வீட்லயும் காபி சாப்பிடுறாரு… இந்த மாற்றம் எங்க ஊருக்குள்ள வர எத்தனையோ வருடங்கள் வீழ்த்தப்பட்டிருக்கு என்றாலும் மாற்றம் மகிழ்வைத் தருகிறது.

எங்க வீட்ல எங்க அப்பாவுட்டு பொருள்கள் எல்லாமே அப்பா என்ற அடைமொழியோடதான் இருக்கும். தண்ணி குடிக்க தம்ளரை எடுத்தா அப்பா டம்ளரை எடுக்காதேன்னு அம்மா திட்டுவாங்க. சாப்பிட தட்டை எடுத்துக்கிட்டு வந்து உக்கார்ந்தா எத்தனை தடவையிடா சொல்றது உங்க அப்பமுட்டு தட்டை எடுக்காதேன்னு அவனுக்குத் தெரிஞ்சா குதிச்சி எறிஞ்சிருவான் என அப்பத்தா தலையில கொட்டும். அட்லஸ் சைக்கிளுக்குப் பேரு அப்பா சைக்கிள், மான் மார்க் குடைக்குப் பேரு அப்பா குடை… சங்கு மார்க் கைலிக்குப் பேரு அப்பா கைலி… இப்படி அவர் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அப்பா பொருட்கள்… அந்த வரிசையில் மர நாற்காலியும் அப்பா சேராயாயிருச்சு.

அப்பா இல்லாதப்ப அதுல உட்கார்ந்து படிக்க எனக்கும் என் தங்கைக்கும் போட்டியே நடக்கும். அப்பா சேர்ல உக்காந்தாலே எனக்கு யானை பலம் வந்த மாதிரி ஒரு நினைப்பு வரும் . இல்லாத மீசை இருக்க மாதிரி தடவி விடச் சொல்லும். யாராவது பசங்களை பிடிச்சாந்து அவரு மாதிரி கனச்சுக்கிட்டு தீர்ப்பு சொல்லிப் பாக்கச் சொல்லும். அவருக்கு வயசானாலும் அந்த நாற்காலி அப்படியே இருந்துச்சு. அப்பாவும் மிடுக்கு குறையாமல் அதுல உக்காந்து இருப்பாரு.

சில வருஷத்துக்கு முன்னால உடம்பு சரியில்லாம இருந்தப்ப இதுல உக்காந்து வாசலை வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தாரு. அவரைப் பாக்க களத்தூர்ல இருந்து புஷ்பா புள்ளைங்களோட வந்திருந்தா. அம்மா, நான், சித்ரா, புஷ்பா எல்லாரும் சந்தோஷமாப் பேசிக்கிட்டு இருந்தோம். பசங்களெல்லாம் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. அப்ப திண்ணையில இருந்து ‘ஏவ்வ்…’ன்னு ஒரு சத்தம், என்னமோ ஏதோன்னு போயிப்பாத்தா நாற்காலியில அமர்ந்தபடி அப்பாவோட உயிர் போயிடுச்சு… எல்லாரும் கதறுறாங்க… சொந்த பந்தமெல்லாம் வந்து கட்டி உருளுதுக… எல்லாச் சாதிக்காரனும் வாசல்ல காத்துக்கிடக்குறானுங்க… ஆளாளுக்கு ஒரு வேலையை எடுத்துப் பாக்குறாங்க… எப்புடி மனுசன்… இப்படியா சாவாரு… என பொம்பளைங்க எல்லாரும் சொல்லிக்கிட்டு கேதம் கேட்டுட்டுப் போனாங்க…

மறுநாள் அவருக்கு புடிச்ச நாற்காலியிலயே வச்சி எல்லாக் காரியமும் பண்ணி அடக்கம் பண்ணிட்டு வந்தோம். வெறுமையைச் சுமந்த வீடு அமைதியாய் இருந்தது. இழப்பின் வலி எங்கும் நிரம்பியிருந்தது. அம்மாதான் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்தாள். அடிக்கடி ‘ஏஞ்சாமி… என்னைய தவிக்க விட்டுட்டியளே’ன்னு குரலெடுத்து ஒப்பாரி வச்சா.

அப்பா எப்பவும் அமர்ந்திருக்கும் அந்தத் திண்ணையப் பாக்கிறப்போ கலையிழந்து இருந்துச்சு. அப்பா இல்லாம அனாதையாக் கிடந்த நாற்காலிய பார்க்கிறப்போ மனசு ரொம்ப வலிச்சிச்சு… சுருட்டுப் புகையோட அவர் அதுல உட்கார்ந்திருக்க தோரணை மனசுக்குள்ள வந்து போக, குபுக்கென கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அநாதையாய்க் கிடந்த நாற்காலியைப் பார்க்கும் போது அப்பாவின் இழப்பு எங்களைவிட அதைத்தான் அதிகம் பாதிச்சிருக்குங்கிறதை உணர முடிந்தது.

அந்தப் பக்கமா போனா… நாற்காலியை கண்டிப்பா பாக்கச் சொல்லும்… அப்ப அதுல அப்பா உட்காந்திருக்க மாதிரியே தோணும். ரோட்ல போறவங்ககூட அதைப் பார்த்துட்டு இந்தச் சேரப்பாக்கயில ஐயா உக்காந்திருக்க மாதிரியே தோணுது தம்பி. மனுசன் இது மேல உக்காந்திருக்கிற அழகே தனிதான் போங்கன்னு சொல்லுவாங்க.

அம்மா இருக்கும் வரை நாற்காலியைத் தொடச்சுத் தொடச்சு வச்சுபாங்க… அதுக்குப் பக்கத்துலதான் மதிய நேரத்துல படுத்திருப்பாங்க. ஏதோ அப்பா வந்து அதுல அமர்ந்திருக்க மாதிரியும் அவரோட காலடியில இவங்க படுத்திருக்க மாதிரியும் நினைச்சுக்குவாங்க போல.

கணவனை இழந்த மனைவியும்… மனைவியை இழந்த கணவனும் வெளியில சிரிச்சிப் பேசினாலும் மனசளவுல எல்லாத்தையும் இழந்துதான் வாழ்றாங்க… பெரும்பாலானவர்களுக்கு இழப்புக்குப் பின்னான வாழ்க்கை எப்போதும் இனிப்பதில்லை… எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் ஞாபகச் சுவடுகள் பதிந்து மனசுக்குள் எழும்பிக் கொண்டே இருக்கும்… இழப்புக்குப் பின் வாழ்தல் வரமல்ல… வலி.

சின்ன வயசுல அப்பாவோட நாற்காலியில உக்கார தங்கையுடன் சண்டை போட்ட நான் அவர் மறைவுக்குப் பின்னால ஏனோ அதில் உக்கார நினைக்கலை… அது எனக்கு அப்பாவாத்தான் தெரிஞ்சது.

கால மாற்றத்துல அந்த நாற்காலி திண்ணையின் ஒரு மூலைக்குப் போனாலும்… என்னோட பேரப் பிள்ளைங்க யாராவது அதுமேல ஏறிக்குதிச்சு விளையாண்டா… அடேய் அது தாத்தாவோட நாற்காலி… ரொம்பப் பழசு… உடைஞ்சிடப் போகுது…. கீழ இறங்குன்னு சத்தம் போடுறதை மட்டும் என்னால் நிறுத்த முடியலை.

தாத்தாவைப் போட்டோவில் பார்த்த அவர்களுக்கு அந்த நாற்காலியின் வாசம் தெரிவதில்லை… அவர்களின் ஆட்டம் தொடரத்தான் செய்கிறது… என் கத்தலும்தான்.

*

நன்றி : ‘பரிவை’ சே. குமார், ஆசிப் மீரான்