பாலஸ்தீன மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது – அ. முத்துக்கிருஷ்ணன் நேர்காணல்

’சமநிலைச் சமுதாயம்’ இதழில் (May 2011) வெளிவந்திருந்த நேர்காணல் ’பழனிபாபா’  தளத்தில்  ஜூலை2011-ல் வெளிவந்துள்ளது. சுட்டி : http://www.palanibaba.in/2011/07/blog-post_4158.html . ’பாலஸ்தீனப் பயண அனுபவங்கள்’ என்ற தலைப்பில் நண்பர்அருள்மொழியின் தளத்திலும் இருக்கிறது.  கீழே பதிவிட்டிருப்பது ‘சமநிலைச்சமுதாயம்’ இதழில் வெளிவந்த நேர்காணலின் இமேஜ் கோப்புகள். ‘ஆபிதீன் பக்கங்களில் அவசியம் ஏற்று’ என்று அனுப்பிவைத்த ஹனீபாக்காவுக்கு  நன்றிகள்.

***


 

***

நன்றி : ’சமநிலைச் சமுதாயம்’ , அ.முத்துக்கிருஷ்ணன், எஸ்.எல்.எம். ஹனிபா காக்கா

***

தொடர்புடையவை :

கார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலி : கனன்றெரியும் கோடுகள்

மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்

அப்துல் வஹ்ஹாப் பாகவி – ஜே.எம்.சாலி

பொங்கட்டும் ஆன்மீகம், பொங்கலோடு. அப்படியே ஒரு ‘போர்ட்ரைட்’டோடும்…!

எங்கள் ஹஜ்ரத் பற்றிய ஜே.எம்.சாலியின் கட்டுரை – நான் வரைந்த ஓவியத்துடன் – சமநிலைச் சமுதாயம் இதழில் வந்திருக்கிறது. மகிழ்ச்சி. ‘ச.ச’வுக்கு தேங்க்ஸ். அந்த ஆறு பக்க கட்டுரையில் கடைசியாக ஒரே ஒரு சின்ன வரி – ‘ஓவியம் : ஆபிதீன்’ அல்லது, ‘ஆபிதீன் பக்கங்களிலிருந்து எடுத்தது’ என்று இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். வராது; அது எனது நஸீபு.  அவர்களைக் குறைசொல்லவும் கூடாதுதான். ஆபிதீன் பக்கங்களில் நுழைப்பதற்காக ஜெராக்ஸை ஸ்கேன் செய்தபோது என் பெயர் தேவையில்லை என்று அப்போது முடிவெடுத்தது நான்தான். இதனால் , ஓவியத்தின் கீழுள்ள ஹஜ்ரத்தின் கையெழுத்தும் இடம்பெறாது போய்விட்டது. இந்த ஓவியத்தைத்தான் ஹஜ்ரத்தின் சீடர்கள் அத்தனைபேரும் சிறு அட்டையாக வைத்திருப்பார்கள். ஹஜ்ரத்திற்கு பிடித்த ஓவியமும் இதுதான். சில சீடர்கள் , இங்கே இடம்பெற்றுள்ள ஓவியத்தை பிரிண்ட் செய்து அவர்களின் வீடுகளில் வைத்திருப்பதை அறிவேன். அவர்களுக்காக ஒரிஜினல் ஜெராக்ஸை முழுதாக – 600 dpi-ல் – விரைவில் இடுகிறேன், இன்ஷா அல்லாஹ். அதென்ன ‘ஒரிஜினல் ஜெராக்ஸ் என்றால்… ஒரிஜினல் ஓவியம் ஹஜ்ரத்தின் வீட்டில்தான் இருக்கிறது என்று அர்த்தம் (இப்போது யார்கையில் மாட்டியிருக்கிறது என்று தெரியவில்லை). எனது ஒவிய குரு ஆழி.ராமசாமி சார் ஸ்டைலில் ஒன்று புள்ளிகளாகவும், மற்றொன்று குறுக்குக்கோடுகள் கொண்டதாகவும் இரண்டு போர்ட்ரைட்கள் வரைந்து ஹஜ்ரத்திடம் கொடுத்து, கையெழுத்து வாங்கி, உடனே ஜெராக்ஸ் எடுத்துவிட்டு (எச்சரிக்கை!) திருப்பிக் கொடுத்துவிட்டேன் , 1990-ம் வருடம் . அந்த ஜெராக்ஸ்-ல் இருந்து எடுத்த காப்பிகள்தான் எல்லா சீடர்களிடமும் இப்போது உள்ளது. ஒரிஜினல் ஓவியத்தை ஒரு ‘ப்ரோமைட்’ பிரிண்ட் போட்டு நெகடிவ்வும் எடுத்துவைத்தால் நன்றாக இருக்குமே என்று ஹஜ்ரத்திடம்  கேட்டேன் ஒருநாள்.

‘ஆஹா, அந்த வேலையெல்லாம் வாணாம். இன்னோனு வரைஞ்சிக்குங்க!’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்கள்!

ஹஜ்ரத் அவர்களை இதுவரை ஏழெட்டு முறை வரைந்திருக்கிறேன். நாகூர் ரூமி போன்ற முக்கிய சீடர்கள் சிலரிடம் வண்ணத்தில் வரைந்தது இருக்கிறது. அவர்களைக் கெஞ்சி, ஸ்கேன் செய்து இங்கே இட வேண்டும். இதில் ஒரு தமாஷ் உண்டு. கலர்பென்சில் கொண்டு வெளிர்நிறத்தில் வரைந்த ஹஜ்ரத்தின் ஓவியம் நண்பன் நாகூர்ரூமி வீட்டில் – ஹாலில் – இருக்கிறது. பெருமையாக ஒருநாள் ‘இத கிட்ட போய் பார்த்தா நல்ல டீடய்ல் தெரியும்’ என்றேன் ரூமியிடம். ‘அதயும் ட்ராயிங் கீழேயே எழுதிவச்சிடுமேங்!’ என்றார் வாத்தியார். இவருடைய புகழ்பெற்ற  ‘அடுத்தவினாடி’ நூலுக்காக தனியாக வேறொன்று வரைந்து கொடுத்தேன். வாத்தியாருக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் வாத்தியாரின் வாத்தியார் ஜபருல்லா நானாவுக்கு பிடிக்கவில்லை. நிராகரித்து விட்டார் (காஃபிர்!). எனவே அங்கேயும் இதே ஓவியம்தான்.

ஹஜ்ரத்தின் ஆசை அது!

‘கூட்டாளிவளோடு மியாந்தெரு பக்கம் போவும்போது பாப்பேன். நீங்க சின்னப்புள்ள. உங்கவூட்டு வாசல் திண்ணையில உக்காந்து – வரைஞ்சிக்கிட்டிருப்பீங்க என்னமோ.. இந்த புள்ளைங்க எல்லாம் நம்மட்ட வந்தா நல்லாயிக்கிமேண்டு ஆசைப்பட்டேன். இப்ப வந்துட்டீங்க!’ என்றார்கள் ஹஜ்ரத் – நான் அவர்களின் சீடர்கள் குழுவில் இணைந்தபோது.

சொந்தக் கதை போகட்டும், ஜே.எம். சாலி அவர்களின் கட்டுரை , ‘நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை‘ என்ற வரியுடன் அழுத்தந் திருத்தமாக ஆரம்பிக்கிறது. எனி அப்ஜெக்சன்? அநேகமாக , எதிர்ப்புக்குரல் தமிழகத்தின் தக்கலையிலிருந்தும் இலங்கை ஓட்டமாவடியிலிருந்தும் சீக்கிரம் வரக்கூடும். எதிர்பார்க்கிறேன்!

ஆபிதீன்

***

ஆன்மீக எழுத்தாளர் நாகூர் அப்துல் வஹ்ஹாப் பாகவி

இலக்கிய இதழ் முன்னோடிகள் (64) – ஜே.எம். சாலி
சமநிலைச் சமுதாயம் (அக்டோபர் 2010 இதழ்) / பக்.38 – 43

*

நாகூர் தந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி. உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பபட்ட பேரறிஞர் கஸ்ஸாலியின் அறிவுக் கருவூலகமாகப் போற்றப்படும் ‘இஹ்யா உலூமித்தீன்’ வாழ்வியல் நூலை, அரபு மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957-இல் தொடங்கினார்.

*

நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை. அந்த நன்னகர் தந்த முன்னோடிகளின் பேரணியை நாடறியும். ‘நக்கீரர்’ குலாம் காதிறு நாவலர், ஆரிஃப் நாவலர், சித்தி ஜூனைதா பேகம், புலவர் ஆபிதீன்,  நீதிபதி மு.மு. இஸ்மாயில் முதலானோர் நாகூர் தந்த மூத்த தலைமுறை முன்னோடிகள்.

நமது தலைமுறையைச் சேர்ந்த முன்னணி படைப்பாளிகளின் பட்டியலும் பரவலானது. அவர்களுள் ஆன்மீக மெஞ்ஞானத்துறை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தடம் பதித்தவர் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி காதிரி.

எஸ். அப்துல் வஹ்ஹாப், நாகூரில் 8.10.1933இல் பிறந்தார். பெற்றோர் கே. எஸ். முஹம்மது கவுஸ் – செல்ல நாச்சியார் தம்பதியர். உள்ளூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், வேலூர் பாக்கியாத்துஸ் சாலிஹாத் கல்லூரியில் சேர்ந்து அரபுமொழி கற்றார். அங்கு மாணவராக இருந்த காலத்தில் எழுத்துத்துறையில் அடியெடுத்து வைத்தார்.

சில புனைப்பெயர்களையும் சூட்டிக்கொண்டார். விந்தியன். எஸ்.யே.பி முதலான பெயர்களில் அன்றைய தமிழ் வார மாத இதழ்களில் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். குறிப்பாக மணிவிளக்கு மாத இதழில் தொடர்ந்து அவருடைய கட்டுரைகள் இடம்பெற்று வந்தன.

‘பாகவி’ பட்டம் பெற்ற பிறகு எஸ்.அப்துல் வஹ்ஹாப் அரபு நூல்களை மொழிபெயர்க்கும் பணியில் முனைப்பாக ஈடுபடத் தொடங்கினார். ஞானமேதை அறிவுலகச் செம்மல் இமாம் கஸ்ஸாலி அவர்களின் மெய்ஞ்ஞானப் படைப்புகளில் ஏற்பட்ட ஈர்ப்பினால் அந்த மேதையின் அரபிமொழி நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957இல் தொடங்கினார்.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் வரலாற்றை உலகறியும். ஹிஜ்ரி 450ஆம் ஆண்டு தூஸ் நகரில் பிறந்து கல்வியாளராக விளங்கி, பின்னர் ஆன்மீக வித்தகரானார். 55 ஆம் வயதில் ஹிஜ்ரி 505-இல் உலகைத் துறந்த அவர்களின் சாதனை அரிய சரித்திரம்.

இமாம் அவர்களின் ‘பிதாயதுல்ஹிதாயா’ நூலை ‘நேர்வழியின் ஆரம்பம்’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான் கீழக்கரை ச.மு. செய்யிது முகம்மது ஆலிம் புலவர். 1913 இல் வெளிவந்த அந்த நூல், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் ஒட்டுமொத்த நூல்களையும் படித்துப் பயன்பெறும் ஆர்வம் வாசகர்களிடையே மேலோங்கியது. பல எழுத்தாளர்கள் கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்தார்கள். ஆயினும், இமாம் அவர்களின் படைப்புகள் பரவலாக நமது தலைமுறை வாசகர்களுக்கு எட்டவும் கிட்டவும் பாலம் அமைத்தவர் நாகூர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களே ஆவார்.

கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பேரறிவுப் பெட்டகமாகப் போற்றப்படும் ‘இஹ்யா உலூமித்தீன்’ தமிழ் மொழிப்பெயர்ப்பு வரிசையில் முதல் வெளியீடாக ‘பாவமன்னிப்பு’ நூலை 1957இல் வழங்கினார் அப்துல் வஹ்ஹாப் பாகவி.

நாயகத்தின் நற்பண்புகள்

அடுத்து வந்த நூல்களில் ஒன்று, ‘நாயகத்தின் நற்பண்புகள்’. “இமாம் கஸ்ஸாலி அவர்களின் ‘அக்லாகுன் நபி’ என்ற நூலின் விரிவான தமிழாக்கம் ‘நாயகத்தின் நற்பண்புகள்’ என்ற பெயர் தாங்கியிருக்கிறது. இந்நூலில் இமாம் கஸ்ஸாலி அவர்கள் பெருமானாரைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் கொடுக்கிறார். சமுதாயத்திற்கு இது பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். இதை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் ஆழ்ந்த நன்றி. – இஸ்லாமிய ஊழியன் எஸ். அப்துல் வஹ்ஹாப் , நாகூர்'”

நான்கே வரிகளின் முன்னுரை எழுதப்பட்ட இந்த 75 பக்க நூலை 1959 நவம்பர் மாதம் ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டது எம்.ஆர். எம். அப்துற்-றஹீம் அவர்களின் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகம். எஸ். அப்துல் வஹ்ஹாப் அவர்களின் இனிய எளிய தமிழ்நடை வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அண்ணல் நபிகாளின் அரிய பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் அவர் எடுத்துரைக்கும் முறை இயல்பானது. ஒரு சில வரிகள்:

‘உணவுக்காக அவர்கள அதிக நேரத்தை வீணாக்குவதில்லை. சில சமயங்களில் மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னால் அவரகள் சாப்பிட்டு முடித்து விடுவார்கள். செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வரிந்துக்கட்டிக்கொண்டு அவர்கள் மனைவியருக்கு ஒத்தாசை புரிவதும் உண்டு. சில சமயங்களின் இறைச்சியைத் துண்டுபோட்டுக் கொடுப்பார்கள். திருத்தூதர் அவர்களுக்கு இயற்கையிலே வெட்க மனப்பான்மை அதிகமாக இருந்தது. அவர்கள் யாரையும் நேர்ப்பட ஊடுருவிப் பார்த்தது கிடையாது. ஏழை-பணக்கரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருடைய விருந்தையும் ஏற்றுக்கொள்வார்கள். அன்பளிப்பை நிராகரிக்க மாட்டார்கள். சிறிதளவு அமுதமானாலும் முயலின் தொடைக்கறியானாலும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை, அது அன்பளிப்பாக இருக்க வேண்டும். தர்மமாக கொடுக்கப்படும் எதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏழை எளியோரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர்களின் அழைப்புக்குச் செவிமடுத்தார்கள்”.

நூல் பட்டியல்

மௌலவி எஸ்.அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்த அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ தமிழ்ப் பிரதிகளை, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் பதிப்புப் பரப்பியது. அந்த நூல்களின் பட்டியல் வெகுநீளமானது. பாவ மன்னிப்பு, நாயகத்தின் நற்பண்புகள், நாவின் விபரீதங்கள், விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும், இம்மையும் மறுமையும், இறைச் சிந்தனை, இறையச்சம், இறைதிருப்தி, இறையாதரவு, இறை நம்பிக்கை, இறைவணக்கம், சிந்தனையின் சிறப்பு, பொறுமையாயிரு, கோபம் வேண்டாம், உளத் தூய்மை, பொருளீட்டும் முறை, அறிவு எனும் அருள், அறிவோ அருட்பேறோ, அறிவும் தெளிவும், பொறாமை கொள்ளாதே, புறம் பேசாதே, திருமணம், திருந்துங்கள் திருத்துங்கள், நல்லெண்ணம், உள்ளத்தின் விந்தைகள், ஏகத்துவம், பயணத்தின் பயன், செல்வமும் வாழ்வும், நோன்பின் மாண்பு, இமாம் கஸ்ஸாலியின் கடிதங்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

இவற்றுள் 1962 இல் முதல் பதிப்பாக வெளிவந்த ‘இறைநம்பிக்கை’ அடுத்தடுத்து பல பதிப்புகளைக் கண்டது. அந்த நூலுக்கு 12.7.1962 இல் எஸ். அப்துல் வஹ்ஹாப் அவர்கள் எழுதிய முன்னுரை வரிகள் வருமாறு:

“இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதிய அத்தவக்குல் என்னும் நூல் இறைநம்பிக்கை என்னும் பெயரைத் தாங்கித் தமிழுக்கு வந்திருக்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளின் ஒன்று இறை நம்பிக்கை. இது ஆழம் காணமுடியாத பெருங்கடல் என்பது இமாமவர்களின் கருத்து. இது குறித்து அவர்கள் கொடுக்கும் விளக்கம் வாசகர்களின் உள்ளத்தில் குழப்பத்தைத் தூவிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அத்தௌஹீத் என்பது அதன் பெயர். இது தனிப்பட்டதொரு நூலாக இருந்தாலும், இமாமவர்களின் கருத்தோட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இறைநம்பிக்கை என்னும் நூலுக்கு அது ஒரு முன்னுரை என்றே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. இந்த நூலின் விரிவான தமிழாக்கம் ஏகத்துவம் என்ற பெயரில் வந்திருக்கிறது.

இமாமவர்களின் ஏகத்துவத்தைத் தொடர்ந்து தவக்குல் பற்றி எழுதியிருக்கிறார்கள். எனவே அத்தவக்குல் என்ற மூலநூலின் கருத்துக்களை இப்படியொரு நூலாகத் தயாரித்து உங்களுக்குக் கொடுப்பது குறித்து நான் பெருமகிழ்வு அடைகிறேன்.

பக்தர்களின் பாதை

இறைவணக்கம், பக்தர்களின் பாதை, தர்க்கத்துக்கு அப்பால் ஆகிய நூல்களும் பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றவை. பக்தர்களின்  பாதை 1970 இல் முதற்பதிப்பாக வந்தது. 266 பக்கங்களைக் கொண்ட நூலுக்கு யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வரைந்த பதிப்புரை மறக்க முடியாதது; அந்த வாசகங்கள்:

“இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள், உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவார். ஒரு கட்டிடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பதைப் போன்று கனவு கண்டு நடுவே உள்ள தூண் வீண்தானே என்று கனவிலே நினைத்து விழித்தெழுந்ததும் தாம் ஐந்தாவது மத்ஹபை ஏற்படுத்த எண்ணியதும் வீண் என்பதை இறைவன் அக்கனவின் மூலம் தமக்கு உணர்த்தியிருப்பதாக உணர்ந்து அம்முயற்சிகளை அவர்கள் கைவிட்டனர். அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை 40 வால்யூம்களில் எழுதியிருப்பதாக கூறப்பட்டிருப்பினும் அவற்றில் ஒன்றேனும் தற்போது காணக்கிடைக்காதன் காரணமாக அது ஐயுறப்படுகிறது. எனினும் அவர்கள் குர்-ஆன், ஹதீஸ் ஆகியவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து, தித்திக்கும் தேன்பாகாக நமக்கு ஆக்கித்தந்திருக்கும் ‘இஹ்யா உலூமித்தீன்’ என்ற அவர்களின் இணணயில் பெருநூல் அவர்களை இறவா வரம்பெற்ற புகழுயருவினராக ஆக்கியுள்ளது. உலகிலுள்ள எல்லா அறிவியல் நூல்களும் அழிந்து போய்விடினும் அவற்றை ‘இஹ்யா’விலிருந்து உண்டுபண்ணிவிடலாம் என்ற ஒரு பழமொழியே ஏற்படும் வண்ணம் சிறப்புற்றும் விளங்கும் அச்சீரிய நூலின் சாற்றைப் பிழிந்தெடுத்து அதிலே வகைவகையான இன்னும் பல ருசிகளையும் சேர்த்து தந்தாற்போன்று ‘மின்ஹாஜுல் ஆபிதீன்’ என்ற இந்த ‘பக்தர்களின் பாதை’ அமைந்துள்ளது. இமாம் அவர்களின் இறுதி நூலாகிய இது , இமாம் அவர்கள் இவ்வுலக மக்களுக்கு இறுதியாக விட்டுச்சென்ற ‘வஸிய்யத்’ போன்று விளங்குகிறது.

இறையண்மையைப் பெறுவதற்கு எவ்வாறு பக்திப்பாதையில் அடியெடுத்து வைப்பது என்பதை அழகாக இந்நூலில் எடுத்துரைக்கும் இமாம் அவர்கள், நம் கைப்பிடித்து  வாழ்வின் இணையற்ற இறுதி லட்சியமாகிய அம்மகோன்னத உச்சத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்வது போன்று அமைந்துள்ளது இந்நூல். ஒன்பது உள்தலைப்புகளில் வரையப்பட்ட பக்தர்களின் பாதையில் இடம் பெற்ற ‘இடையிலே ஓர் எச்சரிக்கை’ வழங்கும் சிந்தனை :

“உங்கள் உறுப்புகளின் தக்வா மலர வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். அதனை அவற்றில் எப்படி மலர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். அவற்றில் அடுத்துவரும் இந்தப் பயிற்சிக்குரிய முக்கியத்துவத்தை நீங்கள் ஆழமாக உணரவேண்டும் என்பதற்காக அவற்றை இங்கே மற்றொரு கோணத்திலிருந்து விளக்கப் போகிறேன். மேலே இடம்பெற்ற உறுப்புகளில் உங்களுக்குப் பயிற்சியும் கட்டுப்பாடும் ஏற்படவேண்டும், அவற்றை முறைப்படி பண்படுத்தாத எவருக்கும் ஆத்மீகத்துறையில் வெற்றி கிடைக்க முடியாது.

கண்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். அந்தக் கட்டுப்பாட்டுக்குள் காதுகள் அடங்கிவிடும். கண்ணுக்கும் காதுக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. இந்த இரண்டும் சேர்ந்து உள்ளத்துக்குச் செய்தியனுப்புகின்றன. மனிதனின் உள்ளத்திற்குச் செல்கிற செய்திகளில் பெரும்பாலானவை கண்ணையோ காதையோ வழியாகக்கொண்டுதான் பிரயாணம் செய்கின்றன.

ஆத்மீகம் என்பது உள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. அது தெளிவாக இருக்க வேண்டும் என்றால் வெளியிலிருந்து அதற்குச் செல்லும் செய்திகள் தெளிவாக இருக்க வேண்டும். பெரும்பான்மையாக உள்ளத்தில் தோன்றும் கோளாறுகள் அனைத்தும் கண்களாலேயே உருவாகின்றன.

“ஒரு மனிதனால் தன் பார்வையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவனுடைய உள்ளத்திற்கு மதிப்பு கிடையாது’ என்று அலி (ரலி) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மனிதனின் புலன்கள் அத்தனையும் அவனது உள்ளத்துக்குத்தான் செய்தியனுப்புகின்றன. என்றாலும் பார்வையின் விழியில் உள்ளத்துக்குச் செல்லும் செய்திகள் வலிமையும் வேகமும் கொண்டவை’ . இதுபோன்ற ஆழ்ந்த சிந்தனைக் களஞ்சியமாக அமைந்துள்ளது ‘பக்தர்களின் பாதை’ நூல்.

தர்க்கத்துக்கு அப்பால்

எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி எழுதிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ நூலை 1984 மார்ச் மாதம் நாகப்பட்டினம் ஹுசைன் ஹோல்டிங்ஸ் நிலையம் வெளியிட்டது. பேரறிஞர் இம்மாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ஞானக் கருவூலத்திலிருந்து கிடைத்திருக்கும் இந்த நூல், அறிவுப்பசி கொண்டவர்களுக்கு நல்லதொரு நம்பிக்கை எனும் பதிப்புரையுடன் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு, இரண்டு பத்திகளில் பாகவி வரைந்த முன்னுரை:

“ஹுஜ்ஜத்துல் இஸ்லாம், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் கலாம்’ என்ற நூலிலிருந்து விரிந்து வந்திருக்கும் இந்நூல், திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் காணப்படுகிற மூலத்தத்துவக் கருத்துக்களைப் பாமரர்கள் எப்படியும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறது.

இந்த மூல நூலில் ஒரு சிறு பகுதி இறைவனைப் பற்றிச் சில வினாக்கள் என்ற பெயரில் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது. என்றாலும், தர்க்கத்துக்கு அப்பால் எனும் இந்நூல், மூலநூல் முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு ஞானத்துறையில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் பலரது நூல்களை ஆதாரங்களாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. வாசகர்களுக்கு சிறிதும் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டிருந்தாலும் இந்த நூல் முழுவதும் இமாம் கஸ்ஸாலி பேசுவதுபோலவே அமைந்திருக்கிறது. தர்க்கத்துக்கு அப்பாற் பட்ட அறிவுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த நூல் நல்வழி காட்டும் என்று எண்ணுகிறேன்.

உள்ளத்தையும் நாவையும் படைத்து முன்னதன் மூலத்துக்குப் பின்னதை மொழிபெயர்ப்பாக்கிய இறைவனே அனைத்துப் புகழுக்கும் உரியவன். தன் பெயர்களாலும் குணங்களாலும் அடியார்களுக்குத் தோற்றமளிக்கும் அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். மூலத்தத்துவ தர்க்கத்துக்கு கட்டுப்படாதவன். மூலத்தத்துவத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவன்.

மனித இதயங்களைத் தன் இரண்டு விரல்களுக்கிடையில் நிறுத்திவைத்து, தான் விரும்பியபடி எல்லாம் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் அவன், அருகிலிருப்பவர் அனைவரிலும் மிக அருகில் இருப்பவன். தெளிவு படைத்தவர்களுக்கு பிடரி நரம்பைவிட நெருங்கியிருக்கும் அவன் மார்க்கத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளாத பாமரர்களுக்கு மிகமிகத் தூரத்தில் இருக்கிறான்.

கற்பனைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட இறைவன் தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான். அவன் கூற்றுக்குப் பெருமானார் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். நபித்தோழர்களும் அவர்களை அடுத்து வந்த அறிஞர்களும் விரிவுரை அளித்திருக்கிறார்கள். இறைவனைப் பற்றிய சிந்தனை இஸ்லாத்தில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவை”

வழிகாட்டும் நன்னூலான ‘தர்க்கத்துக்கு அப்பால்’, இவ்வாறு தொடங்கி பரந்து விரிந்து செல்கிறது.

தனி நூல்கள்

மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி அவர்கள், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களுடன் பல தனி நூல்களையும் எழுதியுள்ளார்.

மகனுக்கு, மௌலானா ரூமியின் தத்துவம், அரேபியாவில் சிலநாள், இறைவனைப் பற்றிய சில வினாக்கள், ஏகத்துவமும் எதிர்வாதமும், தனிமை ஒரு விளக்கம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

‘இமாம் ஜாபர்சாதிக்’ அவர் வரைந்த வரலாற்று நூல். முதல் பதிப்பாக 209 பக்கங்களுடன் 165இல் இந்த நூலை வெளியிட்டு விற்பனை செய்வதில் சிரமங்களள எதிர்நோக்கியதாக எழுதியுள்ளார் அப்துல் வஹாப் பாகவி.

‘மகனுக்கு’ குறிப்பிடத்தக்க நூல். அலி (ரலி) அவர்கள் தமது புதல்வருக்கு எழுதிய கடிதங்களையும் கருத்துகளையும் ஆதாரமாகக் கொண்டு தமிழுக்கு தந்திருக்கும் முதல் அறிவு நூல் எனும் முகப்பு வரிகளுடன் 1963 ஆகஸ்ட் மாதம் முதல் பதிப்பாக வெளிவந்தது.

நெகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை இரண்டு பக்க முன்னுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நாகூர் பாகவியார். அதன் ஒரு பகுதி :

“மனிதனை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். உண்மை தனக்குத் தெரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டவன் ஒருவன். உண்மை தனக்கு தெரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாதவன் மற்றொருவன். உண்மை தனக்கு தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டவன் மூன்றாமவன். உண்மை தனக்கு தெரியவில்லை என்பதையே தெரிந்து கொள்ளாதவன் நான்காமவன்”

“காலுக்குச் செருப்பு இல்லையே என்று நான் கவலைப்பட்டேன், காலே இல்லாத மனிதனைப் பார்க்கும்வரை”

இப்படி வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளி இறைத்த அலியார் கஅபா எனும் தேவாலயத்தினுள் பிறந்தார்கள். ஏறத்தாழ பத்துவயதில் இஸ்லாத்தைத் தழுவிய அவர்கள் முதன்முதலில் இஸ்லாத்திற்கு வந்த சிறுவர் என்று பாராட்டப்பட்டிருக்கிறார்கள். பெருமானர் மீது பேரன்பு கொண்டிருந்த அலியார் இஸ்லாத்தின் முன்னேற்றத்துக்குத் தமது வாழ்வையே அர்ப்பணித்தார்கள். பெருமானார் மக்காவை விட்டு மதினாவுக்குப் புறப்பட்ட நேரத்தில் அலியார் செய்த தியாகம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

தமது இறுதிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோதுதான் அவர்களின் சிந்தனைத்திறனும் செயல்திறனும் தெளிவாக வெளிப்பட்டன. ஏறக்குறைய 5 ஆண்டுகள்தான் அவர்கள் ஆட்சி புரிந்தார்கள் என்றாலும், அந்த இடைக்காலத்தில் இஸ்லாமிய உலகத்திற்கு அவர்கள் செய்த அறிவுப்பணி அளவிடற்கரியது. அவர்கள் எழுதிய கடிதங்களும், பேசிய பேச்சுக்களும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை. உங்கள் கரத்திலிருக்கும் இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது”

இந்நூல் அலி(ரலி) தமது புதல்வருக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் வரைந்த அரிய அனுபவ உபதேச நல்லுரையாக அமைந்துள்ளது.

கட்டுரைகள்

மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி மணிவிளக்கு இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார். மக்கா யாத்திரை என்ற தலைப்பில் ஐரோப்பியப் பயனியின் அனுபவ வடிவில் அவர் எழுதிய கட்டுரைத் தொடர் , வாசகர்களின் வரவேற்பை பெற்றது. அதுவே பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

‘அரேபியாவில் சில நாள்’ கட்டுரைகளிலும் வாசகர் கடிதங்களிலும் கருத்து முரண்பாடுகள் இருந்ததால் உடனுக்குடன் உரிய விளக்கங்களுடன் பதில் எழுதி வந்தார் அப்துல் வஹ்ஹாப் பாகவி.

மணிவிளக்கு இதழில் 1987 ஜனவரி-பிப்ரவரி இதழ்களில் கடிதமும் கருத்தும் பகுதியில் -14 பக்கங்களில் – ‘அல்லாஹ் எங்கே இருக்கிறான்?’ எனும் தலைப்பில் அவர் எழுதிய விளக்கம் வாசகர்களைக் கவர்ந்ததது. மறக்க முடியாத அந்த விளக்கக் கடிதத்தின் ஒரு பகுதி :

‘இறைவன் எங்கும் நிறைந்தவன் அல்லன்’ என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. கடிதம் எழுதிய வாசகர் தம் கருத்துக்குத் தர்க்க ரீதியாக ஆதாரமும் காட்டியிருக்கிறார். அவர் எடுத்த எடுப்பிலேயே தம் கருத்தை இப்படிச் சொல்கிறார்.

இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது இஸ்லாத்திற்கு எதிரான கருத்து. இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வோர் இரவிலும் இறைவன் கீழ்வானத்திற்கு இறங்கிவருகிறான் என்று நபிக்கருத்துக்கு அர்த்தமே கிடையாது.

அதாவது இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது உண்மையானால் அவன் உலகத்தில் எல்லா இடங்களிலும் இருப்பதோடு, மேல்வானத்திலும் கீழ்வானத்திலும் இருக்க வேண்டும். அப்படி மேல்வானத்திலும் கீழ்வானத்திலும் இருக்கிற இறைவனைப் பற்றி கீழ்வானத்திற்கு இறங்கி வருகிறான் என்று பெருமானார் கூறியிருப்பதில் அர்த்தம் இருக்க முடியும். எனவே இந்த நபி கருத்துக்கு அர்த்தம் தரவேண்டும் என்றால் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற கருத்து மறுக்கப்பட வேண்டும். இதுதான் நம் வாசகரின் கருத்து.

உண்மையில், இந்தக் கருத்து முற்றிலும் தர்க்க ரீதியானதுதான். ஆனால், அவர் ஏன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. அக்டோபர் இதழில் அல்-கலாம் எழுதிய ‘இறை நெருக்கம்’ என்ற அந்தக் கட்டுரையை அவர் முழுமையாக படிக்கவில்லை; அல்லது படித்ததைப் புரிந்துகொள்ளவில்லை. எனவே, மேற்குறிப்பிட்ட நபிமொழிக்கு அவர் இப்படி பொருள் கொடுத்திருக்கிறார்:

சூரியின் மேற்கு திசையில் மறைந்ததும் இறைவன் ஏழாவது வானத்தில் அமைக்கப்பட்டிருக்கிற ‘அர்ஷ்’ எனும் சிம்மாசனத்திலிருந்து புறப்பட்டு தன் கல்யாண குணங்களையும் , மலக்குகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அல்லது அவற்றையும் அவர்களையும் ஏழாவது வானத்திலேயே விட்டுவிட்டு கீழ்வானத்துக்கு இறங்கி வருகிறான். பொழுது விடிந்ததும் ஏழாம் வானத்தை நோக்கி ஏறிச்சென்று, அர்ஷ் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறான்.

என் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். பெருமானாரின் கருத்தை இப்படித் தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் அவர் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற அறிவை ஏற்க மறுப்பதில் எப்படி வியப்பு இருக்க முடியும்?

இந்தக் கட்டத்தில் நான் எழுதிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ என்ற நூலிலிருந்து ஒரு சிறிய பகுதியை உங்களுக்கு முன்னால் எடுத்து வைப்பது நல்லது என்று எண்ணுகிறேன்.

இந்த நூல் இல்ஜாமுல் அவாம் என்ற பெயரில் இமாம் கஸ்ஸாலி(ரஹ்)  அவர்கள் எழுதிய அரபி நூலை அடிப்படையாகக் கொண்டது.

மேலிருந்து கீழே இறங்குவதும் , கீழிருந்து மேலே ஏறுவதும் இறைத்தன்மைக்குக் கொஞ்சமும் பொருந்தாதவை. மேலே கீழே என்று குறிப்பிட்டு கூற முடியாதவாறு எங்கும் நிறைந்த இறைவன் எப்படி கீழே இறங்க முடியும்?”

இவ்வாறு அந்த நெடிய கடிதம் தொடர்கிறது…

அங்கீகாரம்

ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கிய அப்துல் வஹ்ஹாப், அறுபது வயதை எட்டிய நிலையில் எழுத்துப் பணியை நிறுத்திக்கொண்டு ஞான, ஆன்மீகப் பணியில் இறங்கினார்.

5-ஏ, தலைமாட்டுத் தெரு, நாகூர் முகவரியை உறைவிடமாகக் கொண்டு தம்மை நாடி வருவோர்க்கு ஆன்மீக ஆலோசனை சிகிச்சைகளை வழங்கி வந்தார்.

மௌலவி அப்துல் வஹாப் பாகவி அவர்கள் இறைநாட்டப்படி 9.9.2002 அன்று இவ்வுலகைத் துறந்தார்.

அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களும், சுய சிந்தனைப் பதிவுகளான மற்ற நூல்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு விரிவான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெற்றுள்ளது அவருக்கு சிறப்பு அங்கீகாரம்.

அரிய எழுத்துச் செல்வராகத் தடம்பதித்த நமது தலைமுறை முன்னோடிகளில் ஒருவராக விளங்குகிறார் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி.

பிறந்து வளர்ந்த நாகூருக்கு மட்டுமின்றி, பரந்த தமிழ்கூறும் நல்லுலகுக்கும் புகழ் சேர்த்தவர் நமது பாகவியார் என்பதை யாரால் மறுக்க முடியும்?

**

நன்றி : ஜே.எம். சாலி , சமநிலைச் சமுதாயம், நண்பன் ஹமீது (துரை)

செந்தமிழ்: சிறந்த தாய் – ஏ.ஹெச்.ஹத்தீப்

‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் (Nov’09) வெளியான கட்டுரை…

***

adhimoolam-a

செந்தமிழ்: சிறந்த தாய்

ஏ.ஹெச்.ஹத்தீப்

தமிழனால் தமிழுக்குப் பிரச்னையா அல்லது தமிழால் தமிழனுக்குப் பிரச்னையா என்பது மோனலிஸாவின் புன்னகை மாதிரி; அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து ஒரு முதுமொழிக்குத் தன் குழந்தைகள் செய்யும் அடாவடித்தனத்தைவிட வேறு சோதனை எதுவும் இருக்க முடியாது.  செம்மொழி என அடையாளமிடுவது, அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும் பண்பையையுமே பொறுத்து அமைகிறது. தொன்மை, ஒழுக்கம், நேசபாவம் போன்ற அணிகலங்களுடன் தனது இனத்தையும் அணைத்துச்செல்லும் மனப்பாங்கு ஆகியவைதான் செந்தமிழனின் அடையாளங்கள் என்று வானளாவ யாராவது புகழ்ந்தால் தமிழால் தமிழன் செம்மையாகச் செப்பனிடப்பட்டிருக்கிறான் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஆனால் நிலைமை அப்படியில்லை. ‘என் தமிழ்’ என்று இறுமாப்பும் பெருமிதமும் கொள்வதற்கு எந்தத் தமிழனும் எந்தத் தமிழனையும் விடமாட்டான் போலிருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது. சரியான இலக்கணமோ நெடிய வரலாறோ இல்லாத மொழி பேசும் மக்கள்கூட தனது தாய்மொழிக்குப் புகழ் சேர்க்கிறார்கள். கிரேக்கம், சீனா, அரபி, ஆங்கிலம், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய செம்மொழி சார்ந்த மக்கள் அப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செந்தமிழ் மட்டுமே தனது மக்களைச் சீராகச் செதுக்கவில்லையோ என்ற ஐயமும் அச்சமும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.

‘தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார்’ என்று மேடைகளில் வீராவேசம் பொங்க உரையாற்றுகிற சில தீவிரத்தமிழர்கள், “உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்?”என்று தீப்பந்தம் ஏந்தலாம்-அதுவே ஆதாரம் என்று உணராமல்.தர்க்க சாஸ்திரத்தின் துணையோடு விவாதம் புரிபவர்கள் வேண்டுமென்றே நிஜத்தைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழை வளர்ப்பதற்கும் பரவச்செய்வதற்கும் வாய் வலிக்கக் கத்துவதற்குப் பதிலாக அன்பொழுக அறைகூவல் விடுக்கலாம். அதை விடுத்துவிட்டுப் புறக்கணிப்பதற்கும் பகிஷ்கரிப்பதற்கும் தமிழொன்றும் ‘தவறிப் பிறந்த குழந்தையல்ல’. கிரேக்கம் இந்த உலகத்துக்கு அரிய அறிவாற்றலை வழங்கியதுபோல், சீனா ஒழுக்கத்தின் உன்னதத்தையும் உழைப்பின் மகத்துவத்தையும் உணர்த்தியதுபோல் தமிழ் தனது மக்களைச் சிறப்பாகச் செப்பனிடவில்லை என்று கூறுபவர்கள், நம்மிடையே மலிந்து கிடக்கும் மனக்கசப்பையும் தீவிர விரோதப்போக்கையும் தெளிவாக உணர்ந்திருப்பார்கள் போலும். அவர்களது வாதத்தை மறுப்பதற்குத் தமிழனிடம் வேறென்ன ஆதாரம் இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பெருமைக்கும் போற்றுதலுக்கும் முற்றிலும் தகுதி படைத்த தமிழனுக்கு இந்த இழிநிலை யாரால் வந்தது என்ற அமிலப்பரிசோதனையில் இறங்கினால், நிச்சயம் அரசியல்வாதிகளின் முகங்கள்தான் நிழலாடுகிறது. ‘அன அரப்’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அராபியர்கள் கூறும்போது, ‘நாங்கள் உலகத்தை ஆளப் பிறந்தவர்கள்’என்ற ஆணவம் தொனிக்கும்.’அரபுக்காரன் மடையன்’ என்று அங்கே பிழைப்புத் தேடிச் சென்றவர்கள், ஆற்றாமையில் பிதற்றுவதையெல்லாம் ஆதாரங்களாக ஏற்க முடியாது. ஆங்கிலேயர்கள் உலகத்துக்கே நாகரிகம் போதித்தவர்கள். ஆங்கிலம் இந்தத் தேசத்தை ஆளவில்லையெனில் ரொம்பப்பேர் மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலம் நம்மைச் செம்மைப்படுத்தியதை நினைவு கூர்வதற்காகச் சொல்லப்பட்டதை வைத்துக்கோண்டு வெள்ளையன் நம்மை ஆண்டதை நியாயப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

வீரியத்திலும் சரி; ஆளுமையிலும் சரி; தமிழ் பிற எம்மொழிக்கும் சளைத்ததோ இளைத்ததோ அல்ல. ஆனால் தமிழர்கள் மற்றவர்களால் அடி படுகிறர்கள். அடிமைப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சிதறுகிறார்கள். தமிழனின் இயல்புகளை விளக்குவதற்காக ஒரு பிரசித்தமான தவளைக்கதை சொல்வது நீண்டநாளைய தமிழ் மரபு. ஒரு தமிழன் சொல்வான். ஆயிரம் தமிழன் சற்றும் லஜ்ஜையின்றிச் சிரிப்பான். மேலே ஏற முடியாமல் ஒருவன் காலை இன்னொருவன் கீழே இருந்து இழுப்பது உலகத்துக்கு நாகரீகம் கற்றுத் தந்த தமிழனின் பரம்பரைக்குணம் மாதிரிச் சித்தரிக்கப்படும். எந்த தமிழறிஞனும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டான். ஏனெனில் அதுதான் தமிழ்ப்பற்று.இது உலகலாவிய நித்யக்காட்சி.

மராட்டியர்கள் தனது மொழியால் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தேசியத்தையே துறக்கத் தயாராக இருப்பதைச் சமீபகாலமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். மளையாளிகள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் வேறொரு நாட்டவர்கள்போல் நடந்துகொள்வது தெரியும். “நீங்கள் எந்த நாடு” என்று கேட்கப்பட்டால், பதில்: “ஞானு மலையாளியாக்கும்.” இந்தி பேசுபவர்கள், இந்தி பேசாதவர்களை இந்தியர்கள் என்றே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தமிழன் மட்டும்தான் தங்களுக்கிடையில் தமிழல்லாத வேறொரு பொருளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துத் தங்களைப் பல்வேறு கூறுகளாக்கிக் கொள்கிறான். ‘இல்லை’என்று மறுப்பவர்களுக்கு யதார்த்தம் புரியவில்லை என்றே அர்த்தம்.

பதச்சோற்றைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை: தமிழ் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர், உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு விரும்புகிறது. தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரமோ தகுதியோ இல்லை என்றுரைப்பது, வானத்தை நோக்கிக் காறித் துப்புவதற்குச் சமம். இ.பி.கோ. 302 பிரிவின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல அது. கலைஞரின் அறிவிப்பில் சுயநலம் இருக்கலாம். அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி கலந்திருக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தனது அரசியல் எதிரிகளைப் புறந்தள்ளுகிற ராஜத்தந்திரத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பதற்கில்லை.இதே இழிகாரியத்தைத் தமிழகத்தை ஆண்ட எல்லோரும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஏதோ கடல் கடந்த நாடு ஒன்றில், கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க்குழு ஒன்றுதான் மாநாட்டை நடத்த வேண்டுமென்று சத்தமிடுவதும் சட்டமிடுவதும் ஏற்புடையதல்ல. தமிழகத்துத் தமிழர்களை அன்னியராக்கும் இத்தகைய எதிர்ப்பும் ஆட்சேபனையும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; கேலிக்குரியதும்கூட.

“இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் சாகக் கிடக்கிறார்கள். மலேசியாவில் தமிழினம் ஒடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகிக் கிடக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் உலகத் தமிழ் மாநாடு ஒரு கேடா?”என்ற பாணியில் விலாசித் தள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் விசனத்திலும் அக்கறையிலும் அரசியல் கலப்பு இல்லையென்றால் ஆட்சேபனை எதுவுமில்லை. மரத்தமிழன் வைகோவும் அதே உச்சஸ்தாயில் “ம.தி.மு.க.வும் புறக்கணிக்கிறது” என்று கத்துகிறார்கள். ஏற்கனவே கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டதால் மருத்துவர் ராமதாஸ் மட்டும் வாயைத் திறக்கவில்லை. இந்த விஷயத்தில் இடதுசாரிகள் தேவலாம்.ஆனால் மாநாட்டை தமிழக அரசியல் கட்சிகள் பகிஷ்கரிப்பதாலும் தடுத்து நிறுத்துவதாலும் அல்லல்படும் உலகத் தமிழர்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடப்போகிறார்கள் என்பதை அவர்கள் விளக்கத் தவறிவிட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு கிடைப்பதற்கும் சமவாய்ப்பு அளிப்பதற்கும் அந்த அரசைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ராஜபக்க்ஷேயைக் கொடுங்கோலன் என்றும் இனத்துரோகி என்றும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் காறி உமிழ்ந்துவிட்டு ஈழத்தமிழர்களுக்கு எப்படி நன்மை செய்ய முடிமென்று தோன்றவில்லை. தமிழகம் வருகை புரிகின்ற மலேசிய எழுத்தாளர் குழுவினர், “நாங்கள் சமமரியாதையுடன் நடத்தப்படுகிறோம். மலேசிய அரசு எங்களிடம் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை” என்று பிரமாண வாக்குமூலம் அளித்த பின்னரும் அதை ஒரு பிரச்னையாக்குவது மலேசியத் தமிழர்களுக்கு நாம் உதவுகிறோம் என்ற போர்வையில் அவர்களது இருண்ட எதிர்காலத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொண்டிருக்கிறோம் எனப் பொருள். அமெரிக்காவிலாகட்டும் அல்லது ஐரோப்பாவிலாகட்டும் தமிழர்கள் நிம்மதியாகவும் செழிப்பாகவும் வாழ்கிறார்கள் என்பது தெள்ளிய புள்ளிவிவரங்கள். தவிர, தமிழினத்தின் செயற்கையான துயரத்திற்காகத் தமிழக இனத்தலைவர்கள் தங்களது கொண்டாட்டங்களை நிறுத்திக்கொண்டதாகவோ அல்லது தத்தமது ஆதரவாளர்களுக்கு அவ்வாறு அறைகூவல் விடுத்ததாகவோ தெரியவில்லை. ஆக, செம்மொழி மாநாட்டை ரத்து செய்யக்கோரும் கோரிக்கைக்குப் பின்னால் புலன்களுக்குப் புலப்படாத வேறு ஏதோ காரணமிருக்கிறது. ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் மட்டுமே மாநாட்டை நடத்தத் தகுதி படைத்தது’ என்று வேண்டுமென்றே பிடிவாதம் பிடிப்பதிலிருந்து இதை உணர முடிகிறது.

தமிழுக்கு மகுடம் சூட்டும் இத்தகைய விழாக்களின்போது குழாயடிச் சண்டையைத் தவிர்ப்பதும், நிகழ்வுகளில் உளச்சுத்தியோடு பங்கேற்பதும் தமிழ் தமது சமுதாயத்தை நன்கு செம்மைப்படுத்தியிருக்கிறது என்பதற்கான சான்றுகள். தங்களது மொழி மாநாடு நடந்தால்-அவர்கள் கன்னடத்துக்காரர்களோ தெலுங்குக்காரர்களோ அல்லது இந்திக்காரர்களோ- அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று திரளும்போது, தமிழனுக்கு மட்டும் அந்தக் கொடுப்பினை ஏன் கிடைக்க மாட்டேனென்கிறது?ஒருவேளை மற்றவர்களைக் காட்டிலும் தமிழன் மட்டும் தமிழின்பால் பற்றற்றவனோ?

தமிழ் ஒரு தாய். அவள் பல குழந்தைகளை ஈன்றெடுத்திருக்கலாம். அவர்களுக்குள் கருத்துமோதல்களும் சச்சரவுகளும் தவிர்க்க முடியாதவை. என்றாலும் அன்னையைக் கொண்டாடுவதிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்குவது எப்படிச் சாத்தியம்? குழந்தைகள் புரியும் தவறுகளுக்கு தாயின் வளர்ப்பு சரியில்லை என்று இக்காலமும் எதிர்காலமும் பழிக்காதா?

தமிழ் செம்மொழி என்றால் தனது குழந்தைகளையும் செம்மைப்படுத்தட்டும்.

***

நன்றி : சமநிலைச் சமுதாயம் ,  ஏ.ஹெச்.ஹத்தீப்

ஐயத்திற்கப்பால்… – ஏ.ஹெச்.ஹத்தீப்

dear abedheen,

although actually this article was written 3 months ago, when the
subject was alive and hot, now only published (‘samanilai samuthaayam’ October 2009 ). our readers, i hope, will enjoy even now.

anbudan

 hatheeb

***

ஐயத்திற்கப்பால்…

ஏ.ஹெச்.ஹத்தீப்

“தகவலறியும் சட்டத்தின்கீழ் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்” என்று மக்களவை நிலைக்குழு அறிக்கை வெளியிட்டதுமே அலறிப் புடைத்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது வேறு யாருமல்ல; இந்தியாவின் உச்ச நீதிமன்றம்தான். அத்தோடு நிற்காமல், நிலைக்குழுவின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேசத்தின் உச்சநீதிமன்றமே வழக்குத் தொடுத்திருப்பது ஓர் உச்சப்பட்ச யுத்த சாகஸம். சமுதாயத்திலும் அரசியலிலும் படிந்து கிடக்கும் அழுக்குகளைச் சுத்திகரிக்கும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த உச்சநீதிமன்றம் இதுபோன்ற சர்ச்சைகளிலும் ஏன் தன்னை ஏடுபடுத்திக் கொள்கிறது என்பதற்கு விடை தெரியவில்லை. தவிர, நீதிப் பரிபாலன அமைப்பே முற்றிலுமாகச் செயலிழந்து விட்டாற்போல், ‘நீதிமன்றங்களின் நண்பர்’ என்ற முறையில் தங்களுக்கு உதவிட மூத்த அரசியல் சாசன நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனுக்கு ‘என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்!’ என அபயக்குரல் வேறு கொடுத்திருக்கிறது.

இத்தகைய அரிய,அதிசயிக்கத்தக்க நடைமுறைகளால் சமுதாயத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் தேவையற்ற ஐயங்களையும் நாட்டின் உயரமைப்பான உச்ச நீதிமன்றமே கணிசமாக உற்பத்தி செய்திருக்கிறது என்று சொல்வது மிகையல்ல. தேசத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒருபடிமேலே போய், “நிலைக்குழுவின் ஆணைக்கு நீதிபதிகள் அடிபணிய வேண்டியதில்லை” என்று வேறு மத்திய அரசுக்கெதிராகப் புலன்களுக்குப் புலப்படாத யுத்தமொன்றைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். தகவல் அறியும் சட்டத்தின்கீழ் எந்த ஓர் இந்திய குடிமகனும் எந்த ஒரு துறையிலிருந்தும் விவரங்கள் பெற முடியுமென்று சட்டம் இயற்றிய பின்னர் “ அந்தச் சட்டம் எனக்கு மட்டும் பொருந்தாது” என்று யார் கூறினாலும் சந்தேகவலையில் சிக்கிக்கொள்ளப் போவது உறுதி. அதிலும் தேசத்தின் ஆத்மாவான நீதிமன்றங்கள் இவ்விஷயத்தில் முரண்டு பிடிப்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. நீதியரசர்கள்மீது ஐயம் கொள்ளலாகாது என்பது வேறு; சந்தேகத்துக்கு இடந்தராமல் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டியதில்லை.

இதெல்லாம் ஆறு மாதங்களுக்குமுன் நிகழ்ந்த பழங்கதை என்றாலும், “லஞ்ச ஊழல் புரியும் நீதிபதிகள் தண்டனை பெறும் சட்டம் வரும்” என்று புதிய மத்திய சட்ட அமைச்சர் எதிர்த்தாக்குதல் தொடுத்தபிறகுதான் விஷயத்தின் ஆழமும் அகலமும் விழிகளை விரிய வைக்கின்றன.

நீதியரசர்கள் அனைவரும் மாசுபடாத ‘நுனிப்புல் பனித்துளி’ என்று போற்றிப் புகழ்ந்த காலம் ஒன்று இருந்தது.அதை மீண்டும் நினைவு கூர்வதோ நினைவு கூறும்படியான சம்பிதாயங்களை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ கிராமத்திலுள்ள இரட்டைத் தம்ளர்முறையைப் பாதுகாப்பது போன்றது.  இந்தியாவில் இப்போது நடைமுறையிலுள்ள பெரும்பாலான சட்டங்கள், தங்களுக்குப் பிடிக்காத மக்கள்மீது பாய்வதற்காக வெள்ளையர்களால் தீட்டப்பட்டவை. நீதிபதிகளும் சுதந்திரத்துக்குமுன்பாக எப்படி இருந்தார்களோ, எவ்வாறு இயங்கினார்களோ ஏறத்தாழ அப்படித்தான் இப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ‘விக்’ மட்டும் அணிவதில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஊரைக் காலி செய்துவிட்டுப் போகும்போது வெள்ளைக்கார விரோதிகள் நம்மிடம் விட்டுச் சென்ற ஷைத்தானியப் பிரச்னைகள்-  ‘வெள்ளையன்’ என்கிற நிறவெறி, ‘ஆண்டான்’ என்கிற அதிகாரத் துவேஷம், ‘படித்தவன்’ என்கிற மமதை போன்ற தீமைகளுடன், நீதியரசர்களைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் வினோத வழிபாட்டுமுறையும் தனது சீதனமாக விட்டுச் சென்றுள்ளனர்.சொர்க்கத்திலிருந்து பொத்துக்கொண்டு குதித்த ‘தேவப்புத்திரர்கள்’ என்று நீதிபதிகளுக்கு பிரிட்டிஷார் குத்திய ராஜ முத்திரை இன்றுவரை இடிபாடுகளுக்கோ இடர்ப்பாடுகளுக்கோ இரையாகாமல் பொக்கிஷம்போல் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது குறித்து ஆட்சேபணையோ எதிர்ப்போ ஏதுமில்லை என்றாலும் அவர்கள் வேறொரு கோளத்திலிருந்து வந்தவர்கள் என்பதைப்போல் நடந்துகொள்வதோ நடத்தப்படுவதோ இப்போதைக்கு ஏற்புடையதா என்ற கேள்வியில் ஓரளவுக்கு நியாயம் இல்லாமலில்லை. நீதிபதிகள் இந்தியச் சமுதாயத்திலிருந்தும், இந்தியச் சூழலிருந்தும் ‘தனித்தவர்கள்’ என்பதற்கு அடையாளமாக அவர்களது ஜாகைகள்கூட ஒரு தீவு போன்ற பகுதியில் அமைவது வழக்கம். தனது சமுதாயக் கடைநிலை ஊழியன் எத்தனை கொடுங்கோலனாக விளங்கினாலும் சரி; அவன்மீது இந்திய வமிசத்தின் சுட்டுவிரல்கூடப் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக் காலத்தில் பல அநியாயச் சட்டங்கள் அரங்கேறின.

அதெல்லாம் தொலைந்துபோன கடந்த காலம்.
வெள்ளையர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, அவர்களது குணங்களையும் செயற்பாடுகளையும் தத்தெடுத்துக் கொள்வது அவலத்திலும் அவலம். நம்மவர்களுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தபோதே அவசரத்தின் அவசியம் உணர்ந்து ஒப்பனையைச் சரியாக முடிக்காமல் வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர். ஆண்டதற்கு அடையாளமாக இங்கேயே விட்டுச் சென்ற  அவர்களது ஒப்பனை இன்றைய  சூழலுக்கும், இன்றைய தேசத்துக்கும், இன்றைய சமுதாயத்துக்கும் முற்றிலும் வித்தியாசமானவை; வினோதமானவை; அக்காலத்திய பழக்க வழக்கங்களோ மனோபாவங்களோ செயற்பாடுகளோ இப்போது ஒப்பிடுகையில் நிச்சயம் முரண்படுகின்றன.அதற்கேற்ப எல்லாவற்றையுமே, நீதித்துறை உட்பட அனைத்தையுமே  மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. மாற்றம் என்பதை எண்ணி அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. எந்தப் பொருளுக்கும் காலத்துக்குப் பொருந்துகிறாற்போல் ஒரு புதிய வார்ப்பு அளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு புதிய வடிவம் வழங்கவேண்டியுள்ளது. ஒரு புதிய பரிணாமத்துக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அதைக் கண்டு ஒளிவதோ மிரள்வதோ நீதிதேவதையுடைய கற்பின்மீது வெகுஜனங்களுக்கு ஐயத்தைத் தோற்றுவிக்கக்கூடும். நீதிப்பரிபாலன அமைப்பின் புனிதத்தின்பால் அது களங்கம் ஏற்படுத்திவிட்டால் அப்புறம் மொத்த தேசமும் நிர்க்கதியாகிப் போகும் என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்குமிடையே திடீரென்று சலசலப்பு ஏற்பட்டுவிட்டாற்போல் தோன்றினாலும் ‘யார் பெரியவன்’ என்ற குழாயடிச் சண்டை 1984ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. என்றைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம், “ இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது. அவர் ஆறாண்டுகாலத்துக்கு மக்களவைக்குள் நுழைவதற்கே தகுதியற்றவர்” என்றதொரு விநோதமான தீர்ப்பை வழங்கிற்றோ அன்றையிலிருந்தே இரு வர்க்கத்தினரும் உச்சிமயிரைப் பிடித்துக்கொண்டு சண்டையிடுகின்ற மனோபாவத்தை தங்களுக்குள்ளே உருவாக்கி வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இன்றைக்கு நீதிபதி பாலகிருஷ்ணன் பேசும் அதே உச்சஸ்தயில் அன்றைக்கு நீதியரசர் கிருஷ்ணய்யர்,  “ மேல்முறையீட்டு மனுதாரர் திருமதி இந்திரா காந்தி மக்களவை உறுப்பினர் என்பதைவிட ஓர் அரசாங்கத் தலைவர் என்பதாலேயே உச்சநீதிமன்றம் அதிகக் கவலைக்கொள்ள வேண்டியிருக்கிறது ” என்றுரைத்தார். ‘அவர் பிரதமராக இல்லாவிடில் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படவேண்டிவரே!’ என்பதுபோல் இருந்தது அவரது கருத்து. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்டவிதம், மூத்த வழக்கறிஞர்களும் தீவிர காங்கிரஸ்காரர்களுமான சித்தார்த்த சங்கர் ரே, ஏ.ஆர்.ஆந்துலே, சி.சுப்பிரமணியன், மோகன் குமாரமங்கலம்  போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். அதனாலேயே, இந்திராவுக்குப் பதிலாக வேறொரு பிரதமரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் ‘கருணை’யுடன் வழங்கப்பட்ட வெறும் 20 நாட்கள் தடையுத்தரவு அவகாசத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி, உடனடியாக நாடாளுமன்றத்தைக்கூட்டி, ‘ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோரது தேர்வு விஷயத்தில் இந்திய நீதிமன்றங்கள் மூக்கை நுழைக்க முடியாது’ என்றதொரு சட்ட உட்பிரிவை உருவாக்கி நீதிமன்றங்களின் கடைவாய்ப் பற்களை வெடுக்கென்று பிடுங்கினார் இந்திரா.அந்த யுத்தியைப் பிரயோகித்திராவிட்டால் அவர் அன்றைக்கே கரைந்து காணாமல் போயிருப்பார். ஆக,ஆதிமோதலுக்கு முக்கியக் காரணம் நீதிமன்றங்களே!

அதைத் தொடர்ந்துதான் ஆட்சியாளர்களும் நீதியரசர்களும் ஒருவரையொருவர் ‘உர்’ரென்று பார்த்துக் கொள்ளத் துவங்கினர். இங்கே இந்திரா காந்தி செய்தது சரியா தவறா என்பதல்ல கேள்வி. தவறே செய்யாத அரசியல்வாதிகளுக்கு மகாத்மா என்று முத்திரையிடுவது இந்தத் தேசத்தின் வழக்கம். ‘மகாத்மா’ என்று அழைக்கப்படாத அரசியல்வாதிகள் அனைவரும் லஞ்சம் வாங்குவதற்கும் ஊழல் புரிவதற்கும் லைசன்ஸ் பெற்றுவிட்டார்கள் எனப்பொருள்.  இயல்பே தவறு புரிவது என்றாகிவிட்டபிறகு அவர்களைப்பற்றி விசனப்படுவதற்கும் வியப்புத் தெரிவிப்பதற்கும் பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை. இந்திய அரசியல்வாதிகளில் யாரேனும் திடீரென்று மனம் திருந்திப் ‘புனிதர்’களாகும்போது ஒட்டுமொத்தச் சமுதாயமும் கையெடுத்துக் கும்பிடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியொரு பொற்காலம் வருமென்று நம்புவதற்குரிய அறிகுறி எதுவும் தென்படக் காணோம். எனவே அவர்கள் தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்கள். மனம் புழுங்குவதில் பலனில்லை.

ஆனால் நீதிபதிகள் அப்படியா?

அவர்களை நம்பித்தான் இந்த நாடே இருக்கிறது. அரசியல்வாதிகளாலும் அதிகார வர்க்கத்தினராலும்  பாதிக்கும்போதெல்லாம் வெகுஜனங்களுக்குமுன்னுள்ள இரண்டே வழிகள்: ஒன்று நீதிமன்றத்தை நாடுவது; அல்லது இறைவனிடத்தில் முறையிடுவது. இப்போது நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்கின் எண்ணிக்கையைக் கூர்ந்து கவனிக்கையில் நீதிபதிகளிடம் நியாயம் கிடைக்கும் என்பதைக் காட்டிலும் கடவுளிடம் கருணை பிறக்கும் என்பது மிகவும் மலிவாகிக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் சந்தேகத்திற்கும் சலனத்திற்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்மென்று மொத்த மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் 3 கோடி வழக்குகளை அவர்களிடம் சமர்ப்பித்துவிட்டு, நீதி கிடைக்கும் என்ற தளராத நம்பிக்கையில் வாழ்க்கையின் இறுதி நாட்களைஎண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன்பே உயர்நீதிமன்ற வளாகம் துரு பிடிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த உச்சநீதிமன்றம் 10 கட்டளைகள் அடங்கியதொரு  வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. நீதிபதிகள் ‘பசுமை’ குறையாமல் இருந்திருப்பார்களேயானால் உச்சநீதிமன்றம் திடீரென்று நடத்தை விதிமுறைகளை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதை நியாயப்படுத்துகிற வகையில் பல சம்பவங்கள்: தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரே நீதித்துறையின் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி தான் ஃபோனில் மிரட்டப்பட்டதாகக்கூறி அழுத அதிர்ச்சிச் சம்பவம்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர்மீது முறைகேடு புரிந்த, கையூட்டுப் பெற்ற பல கொடுமையான குற்றச்சாட்டுக்கள்; ஒரு நீதிபதி அதையெல்லாம் தாண்டி இந்திய குடியரசுத் தலைவருக்கே சம்மன் அனுப்பிய கோமாளித்தனம்-இப்படி எத்தனையோ! இதெல்லாம் நீதிமன்றங்களுக்குள்ளும் ஊழல் பெருச்சாலிகள் நுழைந்துவிட்டார்கள் என்பதற்கும், நீதிபதிகளுக்குள்ளும் பலவீனர்கள் காணப்படுகிறார்கள் என்பதற்கும் ஆதாரங்கள்!

என்றாலும் அவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது. தவறிழைத்த, குற்றம் புரிந்த நிதியரசர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றாக வேண்டும். இவ்வளவு கடினமான சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் உலாவரும் அவர்கள், தங்களதுமீது தூசு படாமல் பாதுகாத்துக் கொள்வது எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது; நெருக்கடியும் கட்டாயமும் ஏற்பட்டால் அக்னிப் பிரவேசம் செய்வதற்குகூட அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் ‘சீசரின் மனைவி’ என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏனெனில், காவல்துறையின் கடைநிலை அதிகாரியிலிருந்து அரசியல் மாளிகையின் உச்சித் தளத்தில் வீற்றிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைச்சர்ப் பெருந்தகைகள்வரை அத்தனை பேரும் அலட்சியமாகப் புரிகிற அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தட்டிக் கேட்பதற்கு 115 கோடி அப்பாவி மக்களுக்கு இருக்கிற ஒரே போக்கிடம்-

நீதிமன்றங்கள்தான்!

எனவே, ‘இவர்கள் யார் நமக்கு உத்தரவு போட?’என்று கேள்வி கேட்கிற சாக்கில் தங்களை அசுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

**

நன்றி : ‘சமநிலைச் சமுதாயம்’, ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

« Older entries