யு.ஆர். அனந்தமூர்த்தி நேர்காணல் – (சுபமங்களா – Sep’1993)

Thanks to : Subamangala
*

குறிப்பு : யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘அவஸ்தை’ நாவலில்  இணைக்கப்பட்டிருந்த இந்தப் பேட்டியின் முக்கியமான பகுதியை நண்பர் சாதிக் அனுப்பிவைத்திருந்தார் – சுபமங்களாவின் இணையதளத்திலிருந்து முழுப் பேட்டியையும் எடுத்து இங்கே பகிருங்கள் நாநா என்ற வேண்டுகோளுடன். அதை Google Drive’s OCR உதவியுடன் மல்லுக்கட்டி (இமேஜ் அப்படி) செய்திருக்கிறேன். பேட்டி கண்டவர் மறைந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள்தான் என்று நினைக்கிறேன். ’சுபமங்களா’வே ஒரு உருவமாகப் போயிருப்பதற்கும் வாய்ப்புண்டு! – AB

*

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மிகப் பெரிய வளாகத்திற்குள் உள்ள விருந்தினர் விடுதியில் அமர்ந்திருக்கிறோம். அருகில் தமிழவனும், சாகித்ய அகாடமியின் பிராந்தியச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தியும் இருக்கின்றனர். வசீகரமான முகத்துடனும் (உங்களுக்கு படத்தில் நடிக்க ஏதும் அழைப்பு வரவில்லையா?) அதற்கு மேலும் அழகு செய்யும் தாடியுடனும் எதிரே அமர்ந்திருப்பவர் கன்னட நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்பாளி – டாக்டர். யூ. ஆர். அனந்தமூர்த்தி. பல்கலைக்கழகப் பேராசிரியர். கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராக இருந்தவர். தொடர்ந்து கர்நாடகத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தபோது சிறுபான்மையினருக்காகப் பரிந்து பேசியவர் ‘கன்னடம் கட்டாயப் பாடம்’ என்ற கோகக் தீர்மானம் வந்தபோது அதை எதிர்த்து அவரவர் தாய் மொழியில்தான் கல்வி இருக்க வேண்டும் என்று போராடியவர். பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைக்க எதிர்ப்பு வந்தபோது சிலை வைக்க ஆதரவு தெரிவித்தவர், சம்ஸ்காரா, அவஸ்தே, பாரதிபுரா என்ற முக்கியமான நாவல்களை எழுதியவர், அவர் நாவல் சம்ஸ்காரா படமாக்கப்பட்டு பல எதிர்ப்புகளை சந்தித்தது. அதுபோன்றே அவர் எழுதிய கடஸ்ரத்தாவும். அரசியலிலும் தீவிரமாக  ஈடுபட்டவர், லோகியாவின் சோஷலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டு என்கிறார். ‘இந்தியாவின் மையம் டெல்லி இல்லை, ஒவ்வொரு மாநிலமும்தான்’ என்று அழுத்தமாகக் கூறுகிறவர். சமீபத்தில் சாகித்யஅகாடமி யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதுவரை சாகித்ய அகாடமி பரிசைப் பெறாதவர்.

கன்னட இலக்கியம், அரசியல், சமூகம் பற்றி தன் தெளிவான கருத்துக்களை அழகான ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்தார். இரண்டு மணி நேரம் நீண்ட இந்த நேர்காணலில் சலிப்புறாமல் அவர் அளித்த பதில்களைப் படியுங்கள்.

***

* வழக்கமான முன்னுரையாக உங்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி உங்கள் இளமைக் காலம் பற்றிதான்.

* மெலிகே என்ற சின்ன, கர்நாடக மலை நாட்டுப் பின் ஒரு கிராமத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா கேரளத்தில் வாழ்ந்தவர். ஒரு புரோகிதர். அங்கிருந்து இங்கு குடியேறியவர் என் தந்தை. சுயமாகவே கல்வி கற்றவர். அவருக்கு வான நூல், சோதிடம் எல்லாம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியவர். மிக வைதிகமான பிராமணக் குடும்பத்தில் அவர் பிறந்தவராக இருந்தாலும் திறந்த மனமுடையவராகவும்  நவீன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும் இருந்தார். என் சாதியை விட்டு நான் செய்து கொண்ட கலப்புத் திருமணத்தையும் (என் மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்) பின்னால் மனசார ஏற்றுக்கொண்டவர். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கு மாற காலகட்டத்தில் அவருடைய கூட்டும் எனக்கு பெரும் அஸ்திவாரமாக இருந்தது. நான் படித்தது அருகில் உள்ள தீர்த்த ஹள்ளி, அது ஒரு சிறு நகரம். ஒரு நாள் அந்த நகரில் பொழுதைக் கழித்தால் பல நாற்றாண்டுகளைக் கடந்த உணர்வை அடையலாம். பழமையும் புதுமையும் நிறைந்த ஊர். ‘பகவத்கீதை என்கிற அவ்வளவு நீளமான விரிவுரை நெருக்கடியான போர்க்களத்தில் எப்படி நிகழ்ந்திருக்க முடியும். அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்” என்று கேட்கும் ஆசிரியர் பள்ளியில் உண்டு. சீனிவாச ஜோயி என்ற நண்பர் – அந்தக் காலத்திலேயே டைனமோ வைத்து  பி.பி.சி. கேட்டு ஆங்கில மொழியில் பாண்டித்யம் பெற்றவர் – அவர். பெர்னாட்ஷா நாடகங்களைப் பற்றியும், இங்கர் சாலைப் பற்றியும் சொல்வார். அதே நேரம், அங்கு பழமைக்கொள்கைகளும் இருந்தன. என் தந்தை அப்போது ஒரு மடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு ஆரிய சமாஜத்துக்காரர் – மடத்திற்கு வந்து அங்குள்ள சம்ஸ்கிருத பண்டிதர்களிடம் சவால் விடுவார். எல்லா இரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று அவர் கூறுவதை சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் மறுப்பார்கள். உடனே எனக்கு கலிலியோவின் காலத்தில் வாழ்வதாக உணர்வு வரும். அந்தக் கால கிட்டத்தில்தான் நிலப் பிரபுத்துவம் தோற்றுப் போய் சோஷலிசக் கருத்துக்கள் விதையூன்றுவதையும் என்னால் உணர முடிந்தது.

* உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி -ஆரம்பமாகிறது?

* ஆரம்பத்தில் தாங்கள் எல்லாம் காந்தியத்தினால் ஈர்க்கப்பட்டோம். பின்னர் லோகியாவின் சோஷலிசக் கருத்துகள் எங்களைக் கவர்ந்தன.தீர்த்தஹள்ளியிலிருந்து ஷிமோகாவிற்கு வந்தபோது அங்கே ராயிஸ்டுகள் (எம். என். ராயைப் பின்பற்றுபவர்கள்), கம்யூனிஸ்டுகள் எல்லாருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் விவாதங்களை காது கொடுத்துக் கேட்பேன், ஷிமோகாவில் இலக்கியத்திற்கும் அரசியலாக்கும் ஒரு இணைப்பு உண்டு. அரசியல் என்பது அன்றாட கட்சி அரசியல் அல்ல. தத்துவம் சார்ந்த அரசியல். ‘இந்தியா இப்படி எல்லாம் இருக்க வேண்டும்’ என்று கனவு கான்கிற அரசியல். அவர்களுடன் சேர்ந்து நானும் ’கனவுகள்’ கண்டேன். பின்னர் தான் இங்கிலாந்து சென்று படித்தேன்.

* சாதாரண குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு இங்கிலாந்து சென்று எப்படிப் படிக்க முடிந்தது?

* என் தாத்தாவின் கொள்கைப்படித்தான். “சமூகத்திற்காகத் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்டவனுக்கு , சமுதாயத்திலிருந்து உயிர் வாழ உதவி கேட்க உரிமை இருக்கிறது. பிராமணனுடைய தத்துவமே ‘பிச்சையிடுங்கள்’ (பவதி பிக்ஷாம் தேவி) என்பதுதான்” என்று கூறுவார். (சிரிப்புடன்) அந்தத் தத்துவத்தை நான் கடைபிடித்தேன். பலர் உதவியாலும், ஸ்காலர்ஷிப் உதவியாலும் படிக்க முடிந்தது.

* இப்போது உங்களை நீங்கள் ‘லோஹியாயைட்’ என்று கூறிக் கொள்வீர்களா?

* இப்போது என்னால் அப்படிக் கூற முடியாது. பல விஷயங்களில் நான் கருத்து மாறுபட்டிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் நான் ஒரு ஜனநாயக சோஷலிசவாதி என்று கூறிக் கொள்வேன். ஆனால் லோகியா ஒரு மகத்தான சிந்தனையாளர். சுயமான, உண்மையான சிந்தனையாளர் என்று இந்தியாவில் காந்தியடிகளைத்தான் கூற முடியும். நேரு கூட அல்ல. காந்தியின் அடுத்தகட்ட விரிவாக்க சிந்தனையாளர் என்று நான் லோகியாவைக் கூறுவேன், ஆனால் அவர் தோல்வியடைந்தவர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

* ஆனால் நாத்திகரான லோகியா எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பே ராமாயண மாநாடுகளை நடத்தினார்? மதத்தைப் பற்றிய அவர் கருத்து என்ன?

* மதத்திற்கு நான்கு செயற்பாடுகள் இருக்கின்றன என அவர் நினைத்தார். ஒன்று, ஒரு தேசத்திற்கு அன்னியர்களால் படையெடுப்பு பயம் ஏற்படும்போது, எதிரிகளைத் தாக்க மக்களைத் திரட்ட மதம் அவசியமாகிறது. ரஷ்யாவை ஹிட்லர் தாக்கியவுடன் ஸ்டாலின் ரஷ்ய வைதிகத் திருச்சபையை பயன்படுத்தினார். இரண்டு, பணக்காரர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க மதம் பயன்படுத்தப்படுகிறது. மூன்று, சமூக ஒழுக்கக் கோட்பாடுகளையும், மதிப்புகளையும் பரவலாக்க மதம் பயன்படுகிறது. நான்கு, யோகமுறைகள், மற்றும் மனமுனைப்பு பயிற்சிகளால் வாழ்க்கைபற்றியும், மரணத்தைப்பற்றியும் உள்ளார்ந்து சிந்திக்க மதம் வழிவகுக்கிறது. மதத்தை முற்றிலுமாக நிராகரிக்காமல் விமரிசனபூர்வமாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்பது அவர் கருத்து, சங்கரர் கூறியதை ராமானுஜர் ஏற்கவில்லை , ராமானுஜர் கூறியதை ஆனந்ததீர்த்தர் ஏற்கவில்லை. வேதத்தின் சில விளக்கங்களை வீரசைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து மதத்தை மறுத்துத் தோன்றியதே பெளத்தமும், ஜைனமும். ஆனால் இன்றைக்கு உள்ள கேடு என்னவென்றால், அந்த விமரிசனப் பார்வையும், விவாதங்களும் மறைந்துபோய், மதம் ‘வழிபாட்டுப் பொருள்’ ஆகிவிட்டது என்பதுதான்.

* இப்போது ஓங்கியுள்ள இந்துத்துவக் குரல் பற்றி – உங்கள் எண்ணம் என்ன?

* மதத்தின் உயர்ந்த வடிவமே ஆன்மிகம். ஆன்மிகம் தன்வயப்பட்டது. ரமணரும், ராமகிருஷ்ணரும் மதவாதிகள் அல்ல, ஆன்மிக முனிவர்கள், இந்துத்துவம் என்பதற்கும் இந்த ஆன்மிகத்திற்கும் சம்பந்தமேயில்லை. ஆழமாக மதத்தில் ஈடுபட்டவன் மதவாதியாக இருக்க மாட்டான். அத்வானி போன்றவர்களின் எண்ணமெல்லாம் இந்தியாவை இஸ்ரேல் ஆக்குவதுதான். இஸ்ரேல் நமக்கு முன்னுதாரணம் அல்ல.

• உங்களுடைய இலக்கிய வாழ்க்கை எப்போது தொடங்குகிறது?

* தொடக்கம் என்பதே இல்லை. எப்போதுமே அந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். முதலில் கவிதைகள்தான் எழுத ஆரம்பித்தேன். பின்னர் சிறுகதைகள் எழுதினேன்.. நான் ஹானர்ஸ் படிக்கும்போதே ஒரு சிறுகதைத் தொகுதி வெளியிட்டேன். அந்த தொகுப்பே நவ்யா’ இயக்கத்தின் குரலாக இருந்தது என்று பாராட்டப்பட்டது. பின்னர் தோன்றிய நவீன இயக்கத்திலும் (Modernist) பங்கு கொண்டேன்.

* ஆங்கில இலக்கிய ஆசிரியர் யாரேனும் உங்கள் எழுத்தில் செல்வாக்கு செலுத்தியதுண்டா?

* பல ஆசிரியர்கள். ஷெல்லி, கீட்ஸ், வொர்ட்ஸ்வொர்த் போன்ற ரொமான்டிக் கவிஞர்கள். டி ஹெச். லாரன்ஸ் போன்ற நாவலாசிரியர்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் இவர்கள் எனக்குள் செல்வாக்கு இழந்து போக, வேறு ஒரு ஆசிரியரைத் தேடிப் போவேன், இதுவே பக்குவமடைவதற்கான வழிமுறை என்றும் நினைக்கிறேன்.

* உங்களுடைய பிரசித்தபெற்ற நாவலான ‘சம்ஸ்காரா’ எப்படி உருவானது?

* உண்மையைச் சொன்னால், அந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டது ஆங்கிலத்தில்தான். எங்கள் அக்ரஹாரத்தில் ‘தரங்கிணி’ என்ற கையெழுத்துப்பத்திரிகை நடத்தினோம். அதில் கன்னடம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் விஷயங்கள் வரும். இங்க்மார் பெர்க்மாலுடைய Seventh Seal அப்போதுதான் பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதன் அடிப்படையில் நம் நாட்டைப் பற்றி நினைக்கும்போது இது பல நூற்றாண்டுகளின், பண்பாடுகளின், தத்துவங்களின் கலவை என்பது புலனாயிற்று. எங்கள் கிராமத்தில் இருந்த இறுக்கமான வைதிகத்தனம் எனக்குப் பல கேள்விகள் எழுப்பின. கிராமத்தில் அப்போது ப்ளேக் நோய் பரவி இருந்தது. அதற்கு ஊசி போட வந்த மருத்துவர்கள் ஹரிஜனச் சேரிக்குள் போகமாட்டார்கள். அதனால் அங்கு பலர் இறக்கும்படியாக ஆயிற்று. இந்த நிகழ்ச்சிக்குக் கிராமத்துப் பெரியவர்கள், ‘மகாத்மாகாந்தி – அவர்களை ஆலயத்திற்குள் போகர் சொன்னதால்தான் அவர்களுக்கு இந்தக் கொடுமை ஏற்பட்டது’ என்று விளக்கம் கூறிக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக ஒரு சம்பவம். மிக அழகான ஒரு ஹரிஜனப் பெண் அந்தச் சேரியில் இருந்தாள். அவளுக்கும் அக்ரஹாரத்தில் இருந்த ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கிராமத்திலும் அதைப் பற்றிய வம்பு பேசுவார்கள். வம்பு பேச்சுக்களை நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லையென்றால் நீங்கள் சிறந்த நாவலாசிரியர் ஆக முடியாது. அவளுக்கு ஏற்பட்ட “தொடுதல்’ என்ற செயல் அவளுக்கு ஓர் உணர்வை தட்டி எழுப்பி இருக்க வேண்டும். ஹரிஜனச் சேரியில் பலர் பிளேக் நோயால் இறந்து கொண்டிருந்தபோது, அவள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாள். அவளுடைய பாலியல் – உணர்வு அவளுக்கு சாத்திரங்களால் மறுக்கப்பட்ட விடுதலையை கொடுத்ததாக நான் நினைத்தேன். இதை அடிப்படையாக வைத்து ‘தரங்கிணி’யில் எமுதிய கதைதான் பின்னர் ‘சம்ஸ்காரா’ நாவலாக விரிவடைந்தது.

* அது பிரசுரிக்கப்பட்டபோது எப்படி வரவேற்பு இருந்தது?

* நாவல் வெளிவந்தபோது வைதிகம் பெரும் கோபம் கொண்டது. அது படமாக வந்தவுடன் அந்தக் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அதை தடைசெய்ய முயன்றார்கள். தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர்தான் அது தடைசெய்யப்படக் கூடாது என்று பாராளுமன்றத்தில் பேசினார். எனது கிராமத்தில் அது சில தனிப்பட்ட அக்ரஹாரத்து மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஷிமோகாவில் அது மாத்வ பிராமணர்களுக்கு எதிரான நாவல் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெங்களூரின் அது பிராமணர்களுக்கு எதிரான நாவல் என்று கருதப்பட்டது. வி.எஸ். நைபால் அதைப்  படித்தவுடன் அது இந்துமதத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தார். எரிக்சன் போன்ற தத்துவ ஆசிரியர்கள் அதை படித்தபோது, அது நடுத்தர வயது நெருக்கடியைப் பற்றிக் கூறுகிறது என்று சொன்னார். அது மிகவும் யதார்த்தமான. அதேநேரம் மிகவும் பூடகமான நாவல் என்றே கூறலாம்.

• பொதுவாக கர்நாடகத்தில் பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றமும் பாதிப்பும் எப்படி இருந்திருக்கிறது?

* தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றியபோதே அது கர்நாடகத்திலும் தோன்றியது. ஆனால் அது வேலை வாய்ப்புக்கான இயக்கமாகவே இருந்தது. இங்கு கர்நாடக பிராமணர்கள்தான் இட ஒதுக்கீட்டிற்காக முதலில் போராடினார்கள். எல்லா வேலை வாய்ப்புக்களையும் தமிழ்நாட்டு பிராமணர்கள் பறித்துக்கொண்டு போய் விடுகிறார்கள் என்று அதற்கு எதிராக கர்நாடக பிராமணர்கள் கிளர்ச்சி செய்தனர். சமஸ்தானத்தில் திவானாக இருந்து ஆட்சி செய்ததெல்லாம் சேஷாத்ரி அய்யர் போன்ற திறமைமிக்க தமிழ்நாட்டு பிராமணர்கள். அதனால் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலெல்லாம் தமிழ்நாட்டு பிராமணர்களே இருந்தனர். கர்நாடக பிராமணர்களுக்குப் பதவி அளிக்கப்பட்டபோது, பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றி தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டனர். அவர்கள் ஹரிஜனங்களுக்குப் பதவி அளிப்பதை மறுத்தபோது, ஹரிஜனங்கள் இடஒதுக்கீடு கோரி கிளர்ச்சி செய்தனர். இது தொடர்ந்து வருகிற போராட்டம். இந்தப் போராட்டம் தொடர்ந்து வருவதனால்தான் எல்லோருக்குமே சமவேலை வாய்ப்புக் கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.

• வேலை வாய்ப்புகள் என்பது தவிர, பிராமணிய மதிப்பீடுகளுக்கு எதிரான இயக்கமாக  அது மாறவில்லையா?

* அப்படிக் கூறமுடியாது. பிராமண மதிப்பீடுகள் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமான மதிப்பீடுகள் இல்லை . முழு இந்து இனமும் அதில் பங்கு கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில்) கல்வி பரவப்பரவ பிராமணரல்லாதாரும் தங்கள் வாழ்க்கை நிலையை பிராமணியமாக மாற்றிக் கொள்கின்றனர். இதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு அங்கு தோன்றவில்லை, வேலை வாய்ப்புகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடத்து கொண்டிருந்தாலும் கூட, பிராமணிய மதிப்புகளுக்கு மாறான வாழ்க்கைமுறை அங்கு தோன்றவில்லை.

* அப்படி ஒரு மாற்று வாழ்க்கை எங்கிருந்து தோன்றமுடியும் என்று நினைக்கிறீர்கள்.

* அது தோன்றுவதென்றால், தலித்துகளிடமிருந்துதான் தோன்ற வேண்டும். ஏனென்றால் பிராமணரல்லாதாரும் கூட இந்த -அமைப்பு முறையின் பங்குதாரர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் தலித்துகளோ இந்த அமைப்புமுறையின் பங்காளிகளாக எப்போதும் இருந்ததில்லை , .

* தலித் இலக்கியம் கர்நாடகத்தில் எப்படி இருக்கிறது?

* மிகச் சிறந்ததாக இருக்கிறது. புதிதாக இருக்கிறது. பரவலாக இருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் சமுதாயத்தைப் பற்றி வேறு ஒரு பார்வையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

* தலித் இலக்கியம் தலித்துக்களால்தான் படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கர்நாடக தலித் இலக்கியத்தில் மேலோங்கி இருக்கிறதா?

* நான் மிகக் கடமையுணர்வுடன் தலித்துக்கள் பற்றி எழுதலாம். ஆனால் சில விஷயங்களை வெறும் கற்பனையால் மட்டுமே நெருங்க முடியாது, வாழ்ந்து பார்க்கும்போது ஏற்படும் அனுபவங்களை கற்பனையால் தொட முடியுமா? ஆனால் கொள்கை அளவில் பார்க்கப் போனால் கற்பனை என்பது ஒரு பரகாய பிரவேசம்தான். (பிறர் உடலில் நுழைந்து கொள்ளுதல்) அந்த அடிப்படையில் தலித் எழுத்துக்களை தலித்துக்களே எழுத வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்காது. அப்படிப் பார்க்கும்போது மிகச் சிறந்த தலித் இலக்கியம் சிவராம் காரந்திடமிருந்துதான் வந்திருக்கிறது. சோமன துடி என்ற நாவல்,

* சிவராம் காரந்த் எழுதும்போது அது தலித் இலக்கியம் என்று எழுதப்பட்டதா?

* அப்போது அந்த வார்த்தை இல்லை. இன்றைக்குசிறு -அது தலித் இலக்கியமாகத்தான் பார்க்கப்படுகிறது. நான் பள்ளிப் பையனாக இருந்தபோது சோமனதுடியைப் படித்தபோதுதான் தலித்திற்கு அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று எனக்குத் தெரிய வந்தது.  இன்றைய தலித் எழுத்துக்களுக்கெல்லாம் பின்னணி அந்த நாவல்தான் என்று சொல்ல வேண்டும்.

* நீங்கள் உங்களை ஒரு மாடர்னிஸ்ட் (நவீனத்துவவாதி) என்று கூறுகிறீர்கள். இன்றைய இலக்கியத்தில் நவீனத்துவம் எது என்று குறிப்பிடுவீர்களா?

* விடுதலை இயக்க காலத்தில் சில படைப்பாளர்கள் -அன்றைக்கு நிலவிய இருண்மையை அபார சொல் ஆட்சியுடன் படைக்க முற்பட்டனர். அப்போது அது கன்னடத்தில் நவீனத்துவம் என்று பெயர் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் தேசிய அபிலாஷைகளில் இருந்த அளவுக்கதிகமான ஈடுபாடும் எதிர்பார்ப்புகளும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்தியபோது இந்த இருண்மை (disillusionument) வலுப்பட்டது. சொல் அலங்காரத்தின் ஆளுமையில் சந்தேகம் கொண்ட கோபாலகிருஷ்ண அடிகா, ஏ.கே. ராமானுஜன் போன்றவர்கள் அலங்காரத்தைக் கைவிட்டு உண்மையை எழுதத் துணிந்தனர். இதன் மூலம் புதிய நடைக்கு வழிகோலப்பட்டது. உள்ளடக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டது, இந்தியத் தலைமையிலும், இந்திய இலக்கியங்களிலும் சொல் அலங்காரங்களிலும் மக்கள் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்தபோது, ‘இவைகளெல்லாம் போற்றுதற்குரிய பெரிய விஷயமல்ல’ என்ற யதார்த்தத்தை நவீனத்வம் முன்வைத்தது. புத்தரும் வயிற்றுப் போக்கினால் காலமானார். பெரும் யோகிகளும் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்ளத்தான் வேண்டும்’ என்பன போன்ற சின்னச்சின்ன உண்மைகள் அந்த இயக்கத்தின் பெரும் சக்தியாக இருந்தது. ’புனிதத்தன்மையை விலக்குதல்’ என்பதுதான் அதன் அடிச்சரமாக இருந்தது. இதைத்தான் ‘நவ்யா இயக்கம் என்று கர்நாடகத்தில் அழைக்கிறோம்.

* பண்டாயா என்பது என்ன?

* பண்டாயா என்பது முற்போக்கு எண்ணங்களை மீட்டுருவாக்கம் செய்யவந்த இயக்கம். கன்னடத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய வசனக்கார இலக்கியம் கீழ்ச்சாதி என்று கருதப்பட்டவர்களாலேயே படைக்கப்பட்டது. வசனக்கார் இலக்கியம் என்பது உரைநடை இலக்கியமல்ல. ஒரு கவிதை வடிவம். வீரசைவ சித்தர்கள் படைத்தது. தமிழில் தேவாரம் போல், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் இலக்கியம் உயர்ஜாதியினர் கையில் போயிற்று. குவெம்பு (கே.வி. புட்டப்பா) என்ற மிகச் சிறந்த எழுத்தாளர் பிராமணரல்லாதார் வட்டத்திலிருந்து தோன்றியவுடன் பெரும் எழுச்சியே ஏற்பட்டது. எல்லா பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களும் புதுப்புது அனுபவங்களைப் பற்றி புதிய நடையில், புதிய மொழியில் எழுதத் துவங்கினர். இந்த எழுச்சியின் முகிழ்ந்த காலமே பண்டாயா இயக்கத்தின் காலம்,

* ஆனால் இப்படித் தோன்றிய படைப்புகளின் இலக்கிய மதிப்புகளும் தரமும் எப்படி இருந்தன?

* அதிர்ஷ்டவசமாக கர்நாடகத்தில் எந்த இலக்கிய இயக்கமும் இலக்கிய மதிப்புகளையும், தரத்தையும் இழந்துவிடவில்லை. பண்டாயா படைப்புகளும் இலக்கியத்தரத்தை இழந்து வெறும் பிரச்சாரமாகப் போய்விடவில்லை. தலித் எழுத்தாளர் தேவலூர் மகாதேவ தனது கோபங்களை பரிவு உணர்வுகளாக மாற்றிக் கொண்டார். அந்தப் பரிவு உணர்வுகளே அவர் எழுத்தில் சிறந்த இலக்கியமாகப் பரிணமித்தது. பல பரிசோதனை முயற்சிகளும் நடத்தப்பட்டன. இன்னொன்று. இவை எப்போதும் அரசியல் ஆக்கப்படவில்லை . அதாவது அரசியல் கட்சிகளின் பின்னாலோ, தலைவர்களின் பின்னாலோ செல்லவில்லை.

* கர்நாடகப் பல்கலைக் கழகங்கள் கன்னட இலக்கியத்தின் வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பினை கூறுங்கள். இதனைக் கூறும்போது தமிழ்நாட்டில் இல்லாத ஒன்று கர்நாடகத்திற்குக் கிடைத்திருப்பதாக நான் கருதுகிறேன்.

* கன்னட இலக்கிய மறுமலர்ச்சி ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடமிருந்துதான் வந்தது என்று நான் கூறுவேன், பி.எம்.ஸ்ரீ என்றழைக்கப்பட்ட ஸ்ரீகண்டையா ஆங்கில ரொமான்டிக் கவிதைகளை கன்னடத்தில் ‘இங்கிலீஷ் கீதகளு’ என்ற பெயரில் வெளியிட்டார். அது மிக முக்கியமானதொரு மைல் கல்லாக இருந்தது. அவருடைய கவிதை நயம், லயம் எல்லாமே புதுப்புது எழுத்தாளர்களை உனக்குவித்தது. அதை ஒட்டி பல ஆங்கிலப் பேராசிரியர்கள் கன்னடத்தில் எழுத ஆரம்பித்தனர். -அதோடு பண்டைய கன்னட பண்டிட்களுக்கும், புதிய கன்னட ஆசிரியர்களுக்கும் ஒரு சண்டை . இருந்தது. இந்த இருவரையும் எதிர்த்து கல்லூரி ஆசிரியர்கள் புதிய கன்னட மொழிக்காகப் பரிந்து பேசினார்கள். இந்த மூன்று வித போக்குகளும் நிலவ புதிய போக்குகளுக்கு கர்நாடக பல்கலைக்கழகங்கள் முக்கிய தளமாக அமைந்தன. கோவிந்த பை என்ற கவிஞர் எதுகை மோனைகளை விட்டு கவிதைகள் எழுதியவுடன். ‘எதுகை மோனையையே விட்டுவிட்ட இவர்கள் வாழ்க்கையில் எதைத்தான் விடமாட்டார்கள்’ என்று கோபமாகப் பேசினார்கள்.

• Free Verse என்பது அங்கு பிரதானப் போக்காக இருக்கிறதா?’

* மூன்றுவித கவிதைகள் பிரதானப் போக்கை வகிக்கின்றன, பாடுவதற்கான கவிதைகள், படிப்பதற்கான கவிதைகள், Poety for Chanting – (உச்சாடனம் செய்ய) கம்பார் போன்றவர்களின் கவிதைகள் Chanting வகையைச் சார்ந்தன. இந்த Chanting முறையில் கவிதை ஒரு Magical Quality-ஐ அடைகிறது. பாரம்பரியக் கவிதைகள் முற்றிலும் இல்லாமல் இல்லை.

* புரியாமல் பூடகமாக கவிதைகள் – எழுதப்படுகின்றன. ‘புரிதல் தன்மை இல்லாமல் இருக்கிறது. ஆனால் இவையே கவிதையின் சிறப்பு என்று கூறப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

* அது சரியான கருத்து இல்லை . ஆரம்பத்தில் கவிதையைப் படிக்கும் போது புரிவதற்கு சில தடைகள் இருக்கலாம். ஆனால் அந்த தடைகளைக் கடந்த பிறகு அந்த கவிதை உங்கள் அறிவிற்குப் புலப்பட வேண்டும், குழந்தைப் பேற்றிற்கு ஒரு செவிலித்தாயின் துணை தேவை என்பது போல, புரிந்துகொள்ள சில பயிற்சிகளும், கருவிகளும் தேவைப்படுகின்றன. ஆனால் அதன் பிறகும் அது புரியவில்லை என்றால் அது பலமற்றது. பொதுவாக கவிஞரின் உள்ள வெளிப்பாடு உடனடியாக வாசகனின் உள்ளத்தோடு இணைந்து விட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அப்படி இல்லையென்றால் புரியாமல் எழுதுவது என்பதே ஒரு ‘சமய வழிபாட்டுத் தன்மையாக (Cult) மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

• Cult என்றவுடன் இதையும் கேட்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் ஏன், ஆந்திரத்திலும் கூட சில நடிகர்களை ஏற்றி வணங்கும் வழிபாடும், அவர்கள் வழியாகவே உலகைப் பார்ப்பதுமான ஒரு Cult இருக்கிறறே. இதற்கு சமூகதளத்தில் உள்ள ஆதாரம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

* மக்களிடம் கற்பனையைத் தேடும் பெரும் பசி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தன் அன்றாட வருமானத்தில் பாதியை வரிசையில் நின்று திரைப்படக் கற்பனைகளுக்குக் கொடுக்க சாதாரண இந்தியன் தயாராக இருக்கிறான். அதைப் போலவே மதத்தை நோக்கியும் பெரும்பசி இருக்கிறது. – சினிமாவைப் போலவே பயனில்லாத பாபாக்களின் பின்னால் போகவும் அவன் தயாராக இருக்கிறான். கற்பனைகளுக்கான இந்த தேடலையும், பசியையும் தான் பெரிதும் வரவேற்கிறேன். ஆனால் அது எந்தவிதத்தில் நிறைவேற்றப்படுகிறது என்பதில்தான் எனக்கு உடன்பாடில்லை. அதே போலத்தான்  தலைவர்கள் மீது நம் மக்கள் வைத்துள்ள பேரன்பு.  மக்களிடம் உள்ள இந்த அபரிமிதமான ஆற்றல் தேசத்தைக் கட்டும் பணிக்கு பலனளிக்கவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். இவைகளை நாம் விமரிசனம் செய்யும்போதே மக்களுக்குள்ள இந்த அபரிமிதமான ‘பசி’யைக் குறைகூறவே கூடாது. உணவை விட இந்த ‘கற்பனையை பெரிதாக நேசிக்கும் பல கோடி இந்திய மக்களுக்கு நீங்களும் நானும் என்ன செய்து விட்டோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படித்தான் இந்த விஷயத்தை நான் பார்க்கிறேன்.

* பொருளாதார கலாச்சார ரீதியாக பலவித நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய சமுதாயத்திலிருந்து மாபெரும் இலக்கியங்கள் தோன்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

* சிறந்த கலைப்படைப்புகளும், இலக்கியங்களும் பொருளாதார ரீதியில் பின்னடைந்ததாகவும் பண்பாட்டில் செழுமையாகவும் உள்ள ஒரு சமுதாயத்திலிருந்துதான் வரமுடியும். உதாரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யா. அப்படிப்பட்ட சமூகம் தான் டால்ஸ்டாயையும், தாஸ்தாயெவெஸ்கியையும் படைக்க முடியும். லத்தீன் அமெரிக்க தேசங்கள் இன்றைய உதாரணங்கள், நம்மைப் போலவே அவர்களும் பொருளாதார பின்னடைவும், பண்பாட்டுச் செழுமையும் உள்ளவர்கள். உலக அளவில் வைத்து எண்ணக்கூடிய தரமான மாபெரும் இலக்கியம் தம்மாலும் படைக்க முடியும். ஆனால் தாம் தவறவிடுகிறோம்.

* டி வி போன்ற ஊடகங்களி லும், மற்றும் பல துறைகளிலும் இந்தி ஆதிக்கம் செலுத்தும்போது, ‘தேசிய ஒருமைப்பாடு’ என்பது பொருள் உள்ள சொல் என்று நினைக்கிறீர்களா?

* மையத்திலிருந்து ஆட்சி மாநிலங்களுக்குப் பிரித்துவிடப்படவில்லையென்றால் நாடு துண்டாடப்படும். மையம் (Centre) என்பது நம் அரசியல் சட்டத்திலேயே இல்லை. இந்தியாவின் மையம் எல்லா மாநிலங்களுமே.. டெல்லி அல்ல, நமது நாட்டின் சிறப்பே அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது. இந்தப் பன்முகத்தன்மையைக் கைவிட்டுவிட்டால், நாம் ஒன்றாக இருக்க முடியாது. மற்றவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தமிழ் என்ற மொழி இருப்பதும், மணிபுரி என்ற மொழி இருப்பதும் எவ்வளவு அற்புதமான விஷயங்கள். ’துளு மொழியைப் பொறுத்தவரை நாம் ஒருவித ஆதிக்கத்தைக் கொண்டுள்ளோம்’ என கன்னட மக்களிடம் நான் சொல்லுவேன். அதேபோல மராத்திய மொழியின் ஆதிபத்தியமும், கொங்கணி மொழியின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. எல்லா மொழிகளும் எல்லாப் பண்பாடுகளும் இங்கு தங்கு தடையின்றி வளர வேண்டும், இந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஒரு பண்பாடாக நான் நினைக்கிறேன். அத்வானி போன்றவர்கள் அதை குறுக்கி ஒரு குழுவாக ஆக்க நினைப்பதை நாம் எதிர்க்கிறோம். பி.ஜே.பி. போன்ற கட்சிகள் இந்து மதத்தை வெறும் அரசியலாக மட்டுமே குறுக்குவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுப்பதும், இந்தி மொழிமீதோ, அதன் இலக்கியங்கள்மீதோ நமக்கு வெறுப்பில்லை. ஆனால் ஒரு மொழி இன்னொரு மொழியை நகர்த்தி விட்டு அந்த இடத்தில் ஆதிக்கம் செய்ய நினைப்பது மிகத் தவறு

• அப்படியிருக்க சாகித்ய அகாடமி போன்ற அரங்கங்களில் நடத்தப்படும் விவாதங்களில் கூட தமிழில் பேசினால் மறுக்கப்படுவதும் இந்தியில் பேச வற்புறுத்துவதும் தடை பெறுகிறதே!

* அம்மாதிரி கருத்தரங்கங்களில் ஆங்கிலத்தில் பேசலாம். இந்தி சரளமாகத் தெரியும் என்றால் இந்தியில் பேசலாம். இரண்டு மொழிகளும் தெரியாது என்றால் என் தாய் மொழியிலேயே பேச எனக்கு உரிமை வேண்டும். மற்றவர்களுக்கு அதை மொழிபெயர்க்க தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும், நாம் உத்திரப் பிரதேசத்திற்குப் போனால் புழக்கத்துக்குத் தேவையான இந்தி கற்றுக்கொண்டு விடுகிறோம். கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் புழக்கத்திற்குத் தேவையான தமிழ் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இது எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் நடைமுறையில் நடக்கிறது. இந்த நடைமுறைதான் கைக்கொள்ளப்பட வேண்டும். இன்னொரு விஷயம்: பாரிஸ் போன்ற நகரங்களில் இலக்கிய அரங்கங்களில் ஜேம்ஸ் ஜாய்ஸைப் பற்றி அயர்லாந்துக்காரர்கள் பேசுவதை விட அதிகாரபூர்வமாகப் பேசக்கூடிய ஃபிரெஞ்சு பேராசிரியர்கள் இருப்பார்கள். இங்கு பாரதியைப் பற்றி அதிகாரதொனியுடன் பேசக்கூடிய தமிழ் மொழி அல்லாத பிறமொழி பேராசிரியர்கள் யாராவது இருக்கிறார்களா? காரணம் நாம் இந்திய இலக்கியங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை. இரண்டாந்தர மூன்றாந்தர ஐரோப்பிய இலக்கிய ஆசிரியர்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதில் நிபுணர்களாக இருக்கிறோம். மற்ற இந்திய மொழியிலுள்ள முதல்தர இலக்கிய ஆசிரியர்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

* இப்படி பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டில் தேசிய இலக்கியம், அல்லது தேசிய நாடகம், அல்லது தேசிய சினிமா என்பதன் பொருள் என்ன? அப்படி ஒன்று இருக்கமுடியுமா?

* கன்னடக் கவிஞர் பேந்த்ரேயின் கவிதைகளைப் படிக்கும்போது அவர் ஐந்தாறு மைல் சுற்றளவுள்ள பிரதேசத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும்தான் பாடியிருக்கிறார் என்று தெரிகிறது. வில்லியம் ஃபாக்னரின் நாவலை எடுத்துக் கொண்டால், அமெரிக்கத் தென்பகுதி மட்டுமே அவைகளில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் பேந்த்ரேயும், ஃபாக்னரும் உலகத்தைப் பற்றித்தான் எழுதினார்கள். ஒரு தமிழ் கிராமத்தைப் பற்றி எழுதும்போதே இந்தியாவைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் எழுதியதாக ஆகிவிட முடியும். ‘பதேர் பாஞ்சாலி’ என்ற நாவல் ஒரு சின்ன வங்காள கிராமத்தில் நடைபெறலாம். ஆனால் அது உலகில் எந்த மூலையிலும், வறுமை சூழ்நிலையில் வளர்ந்து கொண்டிருக்கும் சிறுவனைப் பற்றிய கதைதான். கலாச்சார ரீதியில் நமக்கு ஒரு தனித்துவம் இல்லையென்றால், நாம் உலகளாவிய படைப்பைத் தரமுடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

* சில நேரங்களில், குறிப்பாகத் தமிழ் மொழியில் மூன்றாந்தர நாலாந்தர எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஏதேனும் நிர்ப்பந்தம் இருக்கிறதா?

* எனக்குத் தெரியாது. நான் சமீபத்தில்தான் சாகித்ய அகாடமியின் தலைவராக ஆகியிருக்கிறேன்.

* உங்கள் காலத்தில் இப்படி நிர்பந்தங்கள் ஏற்படுமேயானால் நீங்கள் அதை எப்படித் தவிர்க்கப் போகிறீர்கள்?

* நான் மட்டுமே இதைத் தவிர்க்க வேண்டுமென்பதல்ல. எல்லா உறுப்பினர்களுமே இதைத் தவிர்த்தாக வேண்டும். ஒன்று நிச்சயம் சொல்வேன். ‘இந்த நூலுக்குத்தான் பரிசு கொடுக்க வேண்டும்’ என்று என் மூலம் எந்த நிர்பந்தமும் இருக்காது. என்னை யாரும் நிர்பந்திக்கவும் முடியாது. கேரளத்தில் எந்த அரசியல்வாதியின் நிர்பந்தங்களுக்கும் ஆளாகாமல், ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நான்கு ஆண்டுகள் இருந்தேன். ஆனால் சட்டதிட்டங்களுக்குள்ளும் சில குறைகள் இருக்கின்றன. முதலாவதாக – ஒரு பரிசளிப்பு என்பது சலுகையாகக் கருதப்படக் கூடாது. இரண்டாவது – தொடர்ந்து யாரும் ஐந்தாண்டுகளுக்குப் பதவியில் இருக்கவும் கூடாது. அதனால்தான் ஒரு நடுவர் குழு அமைப்பது என்று தீர்மானித்துள்ளோம். செயற்குழு உறுப்பினர் ஒரு அமைப்பாளர் மட்டுமே. அவர் ஓட்டளிக்க முடியாது. இந்த மூன்று நடுவர்கள்தான் நூலைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தவறான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் அவர்களைத்தான் நீங்கள் சாடவேண்டும்.

* இந்த மூன்று நடுவர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே அறிவிப்பீர்களா?

* நிச்சயமாக அறிவிப்போம். அதுமட்டுமல்ல. புத்தகங்களின் இறுதிப்பட்டியலும் (Short List) அறிவிக்கப்படும். ஆனால் நல்ல புத்தகங்கள் இரண்டில் ஒன்றிற்கு பரிசு கொடுக்கப்பட்டால், இதைவிட அது நல்ல புத்தகம் என்றோ , இதுதான் நல்ல புத்தகம் என்றோ விமரிசனங்கள் வரலாம். அது தவிர்க்க முடியாது. எது மிக நல்ல புத்தகம், எது சுமாரான நல்ல புத்தகம் என்பதற்கு சாகித்ய அகாடமியும் எந்த தற்சான்றும் கொடுக்க முடியாது. ஆனால் மோசமான புத்தகத்துக்கு இந்த பரிசு போகாது என்று உறுதி அளிக்க முடியும்.

• இந்த மூன்று தடுவர்களையும் சரியான நபர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமே!

* இலக்கிய ரீதியாகவும், நேர்மையான விமரிசன நோக்கமுள்ளவர்களையே தேர்ந்தெடுப்போம் என்ற உறுதியும் எங்களால் தரமுடியும். அதுமட்டுமல்ல. எழுத்தாளர்கள் இது குறித்து விவாதித்து எங்களுக்கு யோசனைகள் சொன்னால் அதையும் நாங்கள் கவனிக்கிறோம்.

* அண்மையில் காலமான ஏ. கே. ராமானுஜனுடன் உங்களுக்குள்ள தொடர்பு என்ன?

* அவர் எனக்கு ரொம்ப முக்கியமானவர், என் ‘சம்ஸ்காரா’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பதால் மட்டுமல்ல, மனிதனாகவும், எழுத்தாளனாகவும், தமிழ் இலக்கியத்தின் செழுமையான பாரம்பரியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவராகவும் பங்கு வகிக்கிறார். ‘மாபெரும் பாரம்பரியங்கள்’ என்பதை விடுத்து, சின்னச் சின்ன மரபுகளின் எச்சங்களைப் பற்றி சிந்தித்த முதல் பெரிய சிந்தனையாளர். நாட்டுப்புற வாய்மொழி மரபுகளை நன்றாக அறிந்தவர். இந்தியக் கலைகளை மேனாட்டுக்கு தெரியப்படுத்தியவர் ஆனந்த குமாரசாமி. ஆனால் ஆனந்த குமாரசாமி அறிமுகப்படுத்தியது சம்ஸ்கிருத மரபுகள். சம்ஸ்மிருதமில்லாத மற்ற மரபுகளை வெளியுலகிற்கு யாராவது அறிமுகப்படுத்தினார்கள் என்றால், அவர் ஏ.கே. ராமானுஜனாகத்தான் இருக்க முடியும். மானிடவியல் பயன்பாடுகளுக்காக மட்டுமே தமிழைப் படித்த மேலைநாட்டு அறிஞர்களை இலக்கியப் பயன்பாடுகளுக்காகவும், தமிழ் படிக்க வைத்தவர் ஏ.கே. ராமானுஜன்.

* உங்கள் அறுபதாண்டு கால அளவில் வாழ்க்கையில் நீங்கள் கற்ற பாடம் என்ன?

* ‘நான் நினைப்பதே சரியானது’ என்று நினைக்காமலிருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். ‘எதையும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை’ என்பதையும் நான் கற்றுக் கொண்டேன். எனக்குள்ள புகழ், மரியாதை அனைத்துமே என் தகுதிக்கு மீறியது என்பதையும் நான் அறிந்துகொள்கிறேன்.

*
நிழற் படங்கள்: ரவி சங்கரன்
*
நன்றி : சுபமங்களா , சீர்காழி சாதிக்

கிளிப் ஜாயிண்ட் – யு.ஆர். அனந்த மூர்த்தி

நேஷனல் புக் டிரஸ்ட் 1975ல் வெளியிட்ட , ஜி.எச். நாயக் தொகுத்த, ‘கன்னடச் சிறுகதைகள்’ நூலிலிருந்து இந்த பழைய நெடுங்கதையை பதிவிடுகிறேன்.

தமிழாக்கம் : டாக்டர் டி.பி. சித்தலிங்கையா

***

U_R_Ananthamurthy

கிளிப் ஜாயிண்ட்யு.ஆர். அனந்த மூர்த்தி

“வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்” என்று பைப்பை இழுத்து, யோசித்து, சொற்களைத் தேடி, ‘என் வாழ்க்கையில் அது இல்லை’ என்று சொல்லும்போது ஸ்டூவர்ட்டின் நீலக் கண்கள் சிந்தனையில் மூழ்கி ஆழமாகக் காட்சியளிப்பதில் நடிப்பு எவ்வளவு? உண்மை எவ்வளவு? இவனும் மோசமானவன்தானோ? என்னைப் போல?

கேசவன் கீழே பார்த்தான், மின்சாரம் நிரம்பி குளிர்ச்சியாகக் காணும் டியூப் ஸ்டேஷனின் (பாதாள ரயில்) தண்டவாளங்கள், பாய்ந்தால்-

“பாய்ந்தால் ஒரே கணத்தில் சாவு” என்று ஸ்டூவர்ட் கன்னத்தைச் சொரிந்து கொட்டாவி விட்டு “எக்ஸ்கியூஸ் மி” என்றான்.

எங்கோ படித்த நினைவு. எல்லா அனுபவங்களின் முடிவும் மரணத்தைப் போல இருக்கும். “இரண்டாவது டிரெயின் நம்முடையது.”

அணைந்து போன பைப்பைப் பையில் வைத்துக்கொண்டு ஸ்டூவர்ட் சூடேறி கரகரத்துப் போன குரலில் சபித்தான். பப்ளிக் ஸ்கூலில் படித்து விட்டு வந்த உண்மையான அரிஸ்டோகிராட்டிக் லிபரல் இவன் – ஓரம் தைக்காத உல்லன் டை, அழுக்கேறிய சாம்பல் நிறப் பிளானல் கால்சட்டை, ஹாரிஸ் ட்வீட் கோட், பை, நீளமாக வளர்ந்த எண்ணெய் படாத கிராப், தாடி, உயர்ந்த உடல். ஆனால் தன்னுடையது குட்டையான தடித்த உடம்பு. ஆடையில்லாமல் குளிக்கும்போது யுனிவர்சிடி ‘ஜிம்’மில் பார்த்திருக்கிறான். இந்திய இளைஞர்களுக்கெல்லாம் பொதுவாக இடுப்பைச் சுற்றித் தொப்பை.

கேசவன் பேடிங்டன் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உலாவினான். இங்கே ? பவுண்டின் கவிதையிலா? இந்த இரண்டு வரிக் கவிதை – ‘பனி மூடிய மங்கிய வெளிச்சத்தில் இந்த முகங்கள், உலர்ந்த கொம்பில் எரிந்த பூவின் இதழ்கள்’ ஸ்டூவர்ட்டைக் கேட்டால் கேலி செய்வான்: “கேசவ், இந்தியராகிய நீங்கள் இலக்கியங்களில் படித்ததை இங்கே நேரில் காணவும், ஒப்பிட்டுப் பார்க்கவும் இங்கிலாந்துக்கு வருகிறீர்கள்”. உண்மை. யூனிவர்சிடிக்கு போய் திரும்புபோதெல்லாம் தினமும் பார்த்து வந்த பூ ட·ப்போடில்ஸ் என்று தெரிந்த பிறகே வொர்ட்ஸ்வொர்த் என்று மனதில் மணி அடித்தது. கை கட்டிய படி நடந்து கொண்டே பிளாட்பாரம் முழுவதும் ஆர்வத்தோடு பார்த்தான் – பெஞ்ச்; அட்வர்டைஸ்மெண்ட் போஸ்டர். சிகரெட், சாக்லெட், பால், பழரசம், சூடான காப்பி இவற்றுக்கான ஸ்லாட் மெஷின்; பெஞ்ச்; உள்ளாடைகளை விளம்பரம் செய்யும் அரை நிர்வாணப் பெண்ணின் உடம்பின் மீது பென்சில்கோடுகளால் விபசாரம். இண்ட்ரெஸ்டிங். இந்தியாவில் கல்லூரிகள் கக்கூஸ் சுவர்கள். இந்தியக் கல்லூரி மாணவர்களைப் போல அதிருப்தியடைந்த ரகசிய காமுகர்கள் உலகத்தில் எங்குமே இல்லை. என்னை போல. கல்லூரியில் யாராவது ஒரு பையன் ஒரு பெண்ணோடு மரத்தின் கீழே எதிரெதிராக நிற்கும் அளவுக்கு துணிவு காட்டினால் போது. அறிவு வளராத பையங்களை விட்டுவிடுவோம். எவ்வளவோ அறிவாளியான ஆசிரியர்களின் கண்களும் அவன் மேல்தான். என் தம்பி பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் ஜன்னல் வழியாகக் கண்களாலேயே பேசினான் என்பது தெரிந்து நான் எவ்வளவு கோபித்துக் கொண்டேன். கலாட்டா செய்தேன்.

ஏப்பம் வந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் இந்த ஜனங்கள், பொதுவான இடங்களில் பெஞ்சுகளின் மேல் – அந்தப் பக்கமே நடந்தான்.

பெஞ்ச் ஒன்றின் மேல் பீட்டில்ஸ் கிராப் வைத்திருந்த ஒரு பையன் சிவப்பு உடையணிந்த ஒரு பெண்ணை அணைத்துக்கொண்டு அவள் காதுகளைக் கடித்தபடியே ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். கேசவன் நின்றான். அவள் நெளிந்தபடியே அவனுடைய ஸ்வெட்டருக்குள் கையை விட்டுத் தடவினாள். கேசவன் அங்கிருந்த கண்ணை எடுக்க முடியாமல் நின்றான். புரட்டாசி மாதத்தில் நாய்கள் மாத்திரமே.. அந்தப் பெண்ணின் மூடிய கண்களை விரல்களால் திறந்து நாக்கு நுனியால கலகலவென்று சிரித்துக்கொண்டே தள்ளினாள். கேசவன் முகத்தை திருப்பிக் கொண்டான். கள்ளத்தனமாகப் பார்த்தான். வெட்டுப் பட்ட பல்லியின் வால் துள்ளிவிழுந்து செயலற்றுப் போனதைப் போல. உள்ளேயிருந்து கலக்கியதைப் போல. “திஸ் இஸ் நோ கண்ட்ரி ·பார் ஓல்ட்மேன்”.

“எனக்கு இப்போது வயது 32 ஸ்டூவர்ட். தலைமுடி நரைக்க ஆரம்பிச்சுட்டுது. இளமையில் சிறுவயதில் இருந்த வியப்பும் உற்சாகமும் மறைஞ்சிட்டே வருது. இன்னும் ஒரு பெண்ணின் கையைக் கூட நான் தொட்டதில்லை. இதற்கு என்ன சொல்றே?” கேசவன் ஸ்டூவர்ட்டுக்கு சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.

‘தேங்க்ஸ். வேண்டாம். நான் பைப்பிலேயே பிடிக்கிறேன். நீ சொல்வது வியப்பாக இருக்கிறது.’ என்று பைப்பைக் கடித்தபடி கேசவனுடைய சிகரெட்டைப் பற்றவைத்து பிறகு தன்னுடைய பைப்பைப் பற்ற வைத்துக்கொண்டு புகையை இழுத்து, “நீ மிகவும் அதிகமாக சிகரெட் பிடிக்கிறாய், கேசவா” என்றான். அவர்கள் இருவரின் ஐந்து, ஆறு மாத நட்பில் இதுதான் ஸ்டூவர்ட்டின் முதலாவது பர்சனல் ரியாக்ஷன். “நாக்கு எப்போதும் எதையாவது சுவைத்துக்கொண்டே இருக்கணும். அரைமணி நேரம்கூட சும்மா இருக்க மாட்டேன். யாரோடாவது எப்போதும் இருக்க வேண்டும். தனியாக, எதுவும் செய்யாமல், பிடிக்க சிகரெட் இல்லாமல் ஒருநாள் கழிக்க வேண்டி வந்தால் அநேகமாக நான் தற்கொலை செய்ஹ்டு கொள்வேன்.” சிவப்பு உடையணிந்த அந்தப் பெண் தன் நண்பனின் முகத்தைக் கைகளில் ஏந்தி ஆராதிக்கும் கண்களால் பார்த்தாள்.

“ஏன்?”

“தெரியாது பயம் – ஒருவித விசித்திரமான அச்சம்”

தாவி ஒரு ட்ரெயினில் ஏறப்போன கேசவனைத் தடுத்து நிறுத்தி, “நம்முடையது இரண்டாவது வண்டி. இது அல்ல” என்றான் ஸ்டூவர்ட். “இது என்னுடைய முதல் டியூப் பிரயாணம்” என்றான் கேசவன்.

“வாழ்க்கையில் ஒரு நோக்கம் வேண்டும் என்று அதனால் சொன்னேன். நோக்கம் இல்லாவிட்டால்…”

“எனக்கு நோக்கத்தில் நம்பிக்கை இல்லை. நோக்கமுள்ள கதைகளில் நம்பிக்கை இல்லை ஸ்டூவர்ட்.”

வண்டியின் கதவுகள் அலிபாபாவின் கதையில் வருவதைப் போலத் திறந்து கொண்டன். ஜனங்கள் உள்ளே நுழைந்தவுடன் மூடிக் கொண்டன. சிகரெட்டை விட்டுவிட்டால் மாதத்துக்கு 10 பவுண்டுக் காசு மிச்சப்படுத்தலாம். பத்து பவுண்டு காசை அந்த கள்ளச் சந்தை பஞ்சாபிக்குக் கொடுத்தால் இந்தியாவில் இருக்கும் தன் தாயாருக்கு அவன் இருநூறு ரூபாய் கொடுக்கச் செய்வான். ஒரு மாசம், வாழ்க்கை ஓட்டுவதற்கு அது அவருக்குப் போதும். வறுமைத் துன்பம், தங்கைகளில் திருமணக் கவலை தீர்வதற்கு எடுத்து வைக்கும் முதல் அடி – நான்  சிகரெட்டை விடுவது. ஆனால் விட மாட்டேன். நான் இருக்கிறேனா செத்தேனா என்று நீ கவலைப் பட வேண்டாம். இந்த வீட்டை விட்டு நான் போகிறேன்’ என்று மாது எழுதியிருக்கிறான். என்னுடைய வாழ்க்கையைப் பற்றி இப்படி அவன் தீர்ப்பு கூறியிருக்கிறான். ஆனால் இன்று அந்தக் கவலை வேண்டாம். எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று ஸ்டூவர்ட்டோடு லண்டனுக்கு வந்திருக்கிறேன்…

“குறைந்தது கேன்சர் வரும் என்று பயத்திலாவது சிகரெட்டை விட்டால்..’ தனக்குள்ளேயே கவலைப்படுவதைப் போல ஸ்டூவர்ட் பேசினான்.

“அப்படி நான் எதையும் விடுவதில்லை, ஸ்டூவர்ட். நீ உன் கையில் பிடித்துக்கொண்டிருப்பது ஒரு பாம்பு என்று தெரிந்தால் என்ன செய்வாய் சொல்? டக்கென்று அதை அங்கேயே வீசி விடுவாய் அல்லவா? தர்ம சங்கடம், உள்ளேயே தப்பு, சரி என்னும் போராட்டத்திற்குப் பிற்கு ஒரு தீர்மானதத்துக்கு வருவதில்லை அல்லவா? அப்படி வர வேண்டும் ஆன்ம ஞானம்”

“ஆன்ம ஞானம், ஆன்மாவை விமர்சிக்கும் சக்தியினாலும் சக்தியிலிருந்தும் பண்பாட்டில் இருந்தும் வருகிறது என்று நான் நினைக்கிறேன் கேசவ்..”

“தப்பு, இதோ பார்! எனக்கு ஆன்ம ஞானம், ஆன்மாவை விமர்சிக்கும் சக்தி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த ஆன்ம ஞானமும் நான் முதலிலேயே நிச்சயப்படுத்திக்கொண்ட ஆன்மாவின் ஞானம். வீட்டிலிருந்தபோது சில தடவை நினைத்தது உண்டு. இப்படி நான் வேண்டிக் கொள்வதும், தாய் மேலும் ,தம்பிகளின் மேலும் கோபத்தைக் காட்டிக் கொண்டிருப்பதும் எனக்கு விபரீதமான ஸெல்·ப்-லவ் இருப்பதால்தான். இது தப்பு-என் வாழ்வு முழுவதும் விஷத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறேன் என்று. அப்படிப் பார்த்தால் ஒரு வாரத்திற்கு எல்லாம் சரியாக நடக்கும். ஆனால் ஏதாவது கொஞ்சம்
மீறினாலோ குறைந்தாலோ போதும்.. என்னுடைய சுபாவம் மறுபடியும் படம் எடுத்துச் சீறும். அதற்காகத்தான் கையில் இருப்பது பாம்பு என்று தெரிந்து கொண்டவனுடைய உதாரணத்தைச் சொன்னேன். ஆன்ம ஞானம், டக்கென்று வரணும். உயிர் தலைகீழாகி, புதிதாக ஆவது அப்படித்தான். இல்லாவிட்டால் நாம் எப்போதும் முன்பே நிச்சயமானதைப் பற்றிக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்போம். ஆன்ம ஞானம் என்னும் மயக்கத்தில் திண்டாடிக் கொண்டிருப்போம். அதனால்தான் எனக்கு லட்சியத்திலோ, லட்சியம் பற்றிய கதைகளிலோ நம்பிக்கை இல்லை என்று சொன்னேன். எல்லா லட்சியமும் முன்னதாகவே நிச்சயிக்கப்பட்டதுதான்.. என் சொற்பொழிவை மன்னித்துக்கொள். இந்தியர்கள் முடிவில்லாமல் பேசுவதில் நிபுணர்கள்’ – திடீரென்று முழுவதும் தனிப்பட்டதான தன் அனுபவத்தைப் பற்றிய பேச்சு வெளியிட்டதில், கூச்ச சுபாவமுடைய அந்த ஆங்கிலேயன் என்ன நினைத்தானொ? கேசவன் ஆர்வத்தோடு ஸ்டூவர்டைப் பார்த்தான்.

“தேங்க்ஸ் ·பார் த அட்வைஸ்” என்று ஸ்டூவர்ட் குப்பைத் தொட்டி அருகே போய் தன் பைப்பை வீசி எறிந்துவிட்டு வந்து “என்னுடைய நாடகத்தை மன்னித்துவிடு “ என்றான்.

“இப்பொழுது உனக்கு பைப் விஷயத்தில் தோன்றியதைப் போல எனக்குத் தோன்றியதை செய்வதானால் ஒன்று, அதோ அங்கே சிவப்பு ட்ரெஸ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாளே அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டு முத்தம் கொடுக்க வேண்டும் அல்லது இந்த தண்டவாளங்களில் பாய வேண்டும்” என்று சொல்லி கேசவன் சிரித்தான். மற்றொரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு பல நாட்களாகத் தான் யோசித்து வந்ததைப் பற்றிச் சொற்களைக் கூட்டி “எனக்கொரு சித்தப்பா இருந்தார். ஒருநாள் அவர் வீடு வாசலை எல்லாம் விட்டு பத்ரிகாசிரமத்திற்கு தவம் செய்யப் போனார்.. உன்னுடைய கதையே வேறு. நீ இங்கிலாந்தின் உயர்ந்த நாகரீகத்தின் சிறந்த விளைச்சல். என் சித்தப்பா இந்திய நாகரீகத்தின் மிகச் சிறந்த விளச்சலாக இருந்ததைப் போலவே. ஒருவன் தவசி. இன்னொருவன் நாகரிகமுடையவன். நாகரிகமுடையவன் தன் வாழ்க்கையின் குற்றங்குறைகளைத் திருத்திக்கொண்டு வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டில் மகிழ்ச்சியில் நடத்திக்கொண்டு போவான். நான் சொல்லிக்கொண்டிருப்பது எனக்கே இன்னும் தெளிவாகவில்லை. என்றாலும் இப்படித் தோன்றுகிறது. நீ நாகரிகமுடையவன் , அவன் தவசி, நான்…”

“நீ” என்று ஸ்டூவர்ட் சிரித்துக்கொண்டே, “ஓ, ஐ மிஸ் மை பைப்’ என்றான்.

“நான் வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இல்லாத, முழுமையான இயல்புடைய, நாகரிகமுடையவனாகவும் ஆக முடியாமல், தவசியும் ஆக முடியாமல் தவிக்கிறவன்” என்றான் கேசவன் சிகரெட்டை இழுத்து புகையை வெளியே விட்டபடி “ஒரு சிகரெட் எடுத்துக் கொள்” என்று ஸ்டூவர்ட்டுக் கொடுத்து தீக்குச்சியைக் கிழித்துப் பற்ற வைத்தான். ஸ்டூவர்ட் மௌனமாக இருப்பதற்கு விரும்பலாம் என்று அவனுடைய முக பாவத்திலிருந்து தெரிந்து கொண்டு கேசவன் பாய்ந்து வருகிற பேச்சுக்களை எல்லாம் விழுங்கிக் கொண்டான்.

(தொடரும் – ஷார்ஜாவின் அசல் இலக்கியவாதி டைப் செய்து கொடுத்தால்!)

***

நன்றி :யு.ஆர். அனந்த மூர்த்திநேஷனல் புக் டிரஸ்ட்

***

ஆசிரியர் பற்றிய குறிப்பு :

டாக்டர் யூ.ஆர். அனந்தமூர்த்தி : பிறப்பு: டிஸம்பர் 21, 1932. ஊர் : சிவமொக்க மாவட்டத்து தீர்த்தஹள்ளி வட்டத்து பேகுவள்ளி. மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ (ஆங்கிலம்). பர்மிங் ஹாமில் ரிச்சர்ட் ஹாகர்ப் தலைமையில் பி.எச்.டி. மைசூர்ப் பல்கலைக் கழகத்தின் மாநஸகங்கோத்தி பட்ட மேற்படிப்புத் துறையில் ரீடர் (ஆங்கிலம்), ஹோமி பாபா ·பெலோஷிப் பெற்றார் (1972-74). அயோவாவில் நடந்த World Writers Meetஇல் பேராசிரியராக 6 மாத கால அழைப்பின் பேரில் சென்றிருந்தார். நூல்கள் : எந்தெந்தூ முகியதகதெ, பிரசனெ, மௌனி (கதைத்தொகுப்புகள்), ஸ்ம்ஸ்காரா (ஜனாதிபதி பரிசு பெற்ற திரைப்படக் கதை), பாரதீபுர (நாவல்கள்), பிரக்ஞெ மத்து பரிஸர, ஸன்னிவேச (விமரிசன நுல்) உள்ளிட்ட பல.  நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அக்காதெமியின் தலைவராகப் பணியாற்றியவர். ஞானபீட விருது பெற்றுள்ளார்.

***

+

To The Point with U R Ananthamurthy (youtube)