அகமியம் தளத்திலிருந்து விளக்கம்

என்ன வினோதம்! இன்று காலை 11 மணிக்கு சலீம்மாமாவை சந்திப்பதாக இருக்கிறேன். ‘சின்ன எஜமான்’ என்று அழைக்கப்படும் தாதாவின் ஹத்தம் ஆயிற்றே இன்று…சந்திப்பார்களா? சலீம்மாமா எழுதி மர்ஹூம் வாஹித் பாடிய அருமையான பாடலை முதலில் கேளுங்கள் :
அலங்காரவாசலுக்கு முன் பந்தல் போடப்பட்டிருக்கிறது. சுத்துவட்டாரத்து ஜனங்கள் விதவிதமாக நேர்ந்துகொண்டு பலமாதிரி ஐட்டங்களை கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். (நாலைந்து பராட்டக்களைக் கூட நேற்று பார்த்தேன்!). எனக்கும் நேர்ந்துகொண்டு , ‘என்ன கட்டலாம் மச்சான்?’ என்றாள் அஸ்மா.
’என்னைக் கட்டித் தொங்கவிடு புள்ளே!’
தமாஷ் கிடக்கட்டும், இன்று இணையத்தைத் திறந்தால் சலீம்மாமாவின்  ஒரு பாடல் சம்பந்தமான விளக்கம்  அகமியம் தளத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. ஆக, ஆபிதீன் பக்கங்களை மூன்றாவது நபரும் பார்க்கிறார். சந்தோசம்தான். இறைவன் இருட்டில்தான் இருந்தான் என்கிறார்கள். முன்பு எப்படியோ , ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறேன் என்று ’நேட்டோ’ படைகள் ஏதாவது ஒரு நாட்டில் நுழையும்போதெல்லாம் இருட்டில்தான் – நம் வள்ளலார் சொல்வது மாதிரி , ‘உரிமை நாயகன்’ – இருப்பதாக எனக்குப் படும்.  என் சந்தேகத்தை விடுங்கள். அகமிய விளக்கத்தைப் பாருங்கள். நன்றி. –ஆபிதீன்
***
’அகமியம்’ மெயில் :
அப்துல் கையும் எழுதி தங்களின் இணையத்தளத்தி்ல் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ள ‘இறைவனும் இருட்டும்’ என்ற பதிவுக்கு (பார்க்க : https://abedheen.wordpress.com/2009/04/15/qaiyum_on_salim/ ) பதிலாகவும் விளக்கமாகவும் அமையும் பதிவு :
 
‘இருட்டில் இருந்தான் இறைவன்’ என்று நாகூர் சலீம் அவர்கள் பாடிய பாடல் சரியானதே அதற்கான விளக்கத்தை இலங்கையில் வாழ்ந்து அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மகான் குருபாவா அவர்கள் இலங்கையில் வெளிவந்த “ஞானச் சுரங்கம்” என்ற பத்திகைக்கு எழுதிய கட்டுரை.
 
பதிவைப் படிக்க :

http://www.ahamiyam.co.cc/2011/10/blog-post_206.html

***

Thanks :

Ahamiyam
The Islamic Sufism web in Tamil

கப்பலுக்குப் போன கன்றாவி மச்சான்

எழுபது வயது இளம் தோழி , ’எருமையாக இருந்தது போதும்; எழுந்திரு’ என்று மெஸ்ஸேஜ் அனுப்பினாள். உடனே எனக்கு எழுந்து விட்டது – எண்ணம்!

அட, இத்தனை வாசகர்களா எனக்கு ! ’எப்ப போடுவீங்க , எப்ப போடுவீங்க?’ என்று அஸ்மா கேட்பதுபோலல்லவா ஆவலுடன் கேட்கிறார்கள்! தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவள் ஃபோனைச் சொல்கிறாள். இவர்களோ பதிவைச் சொல்கிறார்கள். அதுதான் கொஞ்சநாள் அருமையான எருமைகளாக இருப்போம் என்றிருந்தேனே… அதற்குள் என்ன அவசரம்?  பத்துநாள் கூட பொறுக்க முடியாதா? எத்தனை மெயில்கள்! கவனித்து நோக்கினால் அத்தனையும் என் யாஹூ மெயிலிலிருந்து நானே அனுப்பியதுஜீ!

வேடிக்கை இருக்கட்டும், இந்தப் பதிவு நண்பன் நாகூர் ரூமியின் நாவல் குறித்த பதிவல்ல. ஆனாலும் அதில் விமர்சிக்கப்படும் மச்சான்களைப் பற்றிய பதிவு. அந்த மச்சான்களில் நானும் ஒருவனாதலால் ’புலி வாலை’ப் பிடிக்கிறேன்.

’எத புடிக்கனுமோ அத நல்லா அழுத்திப் புடிக்கனும் மச்சான்’ என்பாள் அஸ்மா. (இந்த வரி எல்லோருக்கும் பிடிக்கும்!).

நாம் பிடித்த புலிவால்’ என்று ஒரு உரைவீச்சு சென்றவருடம் இணையத்தில் உலா வந்தது. இப்போதும் வருகிறது. ’சஃபர்’ வாழ்க்கையின் (இதன் பெயர் வாழ்க்கையா?) கொடுமையைச் சொல்லும் வரிகள். அலாவுதீன் என்ற சகோதரர் எழுதியது. அதற்கு வந்திருந்த மறுமொழிகள் கண்ணீரை வரவழைத்தன. ’என்ன செய்ய முடியும்?’ என்று புலம்பித் தவித்திருந்தார்கள் இஸ்லாமியர்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வழிதான். நன்றாகப் படித்து சொந்த ஊரில் வேலையில் அமர்வது. அதை எப்படிச் செய்வது என்று கேட்காதீர்கள். தெரிந்திருந்தால் நான் ஏன் துபாய்க்கு வந்து துப்பு கெட்டு அலைகிறேன்? என்னால் இப்போது முடிவது சோகத்தை அதிகமாக்குவதே. அழுவதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்ய தம்பி இஸ்மாயில் பதிவிட்ட ’சஃபர் சலாமத்’ஐ – இனிமையான , நிம்மதியான பயணம் என்று அர்த்தம் – பார்த்து விடுங்கள். அதைப் பார்த்துவிட்டு சிரிப்பவர்கள் 4000 சிங்கப்பூர் வெள்ளி இஸ்மாயில் அக்கவுண்ட்டில் கட்டணுமாம். ’என் வெள்ளி எனக்கு; உங்கள் வெள்ளி உங்களுக்கு’ என்று அமைதியாகச் சொல்பவர் இப்படி அழிச்சாட்டியம் செய்யலாமா? ஆனாலும் , இருந்த நாலு திர்ஹத்தை இழக்காமல் அதைப் பார்த்தேன்.

எதையும் இழக்காமல் நீங்களும் பார்க்கலாம்.

சலீம்மாமா இயற்றி மர்ஹூம் S.S, வாஹித் பாடிய பாடலை (1982-ம் வருடம்?) இப்போது பதிவிலிடுகிறேன். படித்துவிட்டு அவசியம் கேட்டும் பாருங்கள். ’சீசன்’ அசனா மரைக்கார் கொடுத்த கேஸ்ஸட். பூத்துப் போயிருந்தது. வெயிலில் காயவைத்து எடுத்தேன் (ஜபருல்லா நானாவின் டெக்னிக்). ஆதலால் நன்றாகவே அலசும். ஆனாலும் கேட்கலாம். கேட்க வேண்டும்.

மர்ஹூம் காயல் ஷேக் முஹம்மது பாடிய ‘கப்பலுக்குப் போன மச்சான்’ஐ எழுதிய கவிஞர் நாகூர் சலீம்தான் இந்தப் பாடலையும் இயற்றினார்கள். அந்த ’கப்பலுக்குப் போன மச்சான்’ பாடலில் இஸ்லாமிய பெண்ணும் ஆணும் புலம்புவதை ஷேக்முஹம்மது ஒருவரே கச்சேரிகளில் பாடுவார் – பயங்கரமான தாபத்தோடு. பாடலின் முடிவில் ‘உன் இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்.’ என்று வரும். ’நெனச்ச்ச’வில் ஏக அழுத்தம் கொடுத்து ,’நான் தருவேன்.. நான் தருவேன்.. நான் தருவேன்’ என்று ஆவேசமாக உருகுவார் மனுசன். கேட்கும் சில துப்பட்டிகள் கேளாமலே நனையும்!

பாடியவரும், இயற்றியவரும் ’கப்ப சபராளிகள்’ அல்ல என்பதுதான் இதில் தமாஷ். இருந்தாலும் கற்பனையில் எழுதுவதும் படிப்பதும் (பாடுவதும் என்று சொல்லக்கூடாது!) நன்றாகத்தான் இருக்கிறது. பாடகர் வாஹிதும் அரபுநாட்டு வாழ்க்கை வாழ்ந்தவரல்ல என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும் சூழல் புரியும். ’வெற்றிக்கொடி கட்டு’ வடிவேலு மாதிரி – வெட்டி பந்தா விடும் ஆட்கள் எந்த ஊரில்தான் இல்லை? அந்த பந்தாக்களை பார்த்து மயங்கி இங்கே வந்து பந்தாக சுருண்டு விடுகிறார்கள் பத்தாவது கூட படிக்காத நம்ம பையன்கள். எங்கே போனாலும் அடிமட்ட வேலைகளுக்கு இவர்கள்தான். சபராளி குடும்பத்தின் குணாம்சத்தை கணக்கிலெடுக்காமல் பையன்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தமில்லைதான். புரிகிறது, புரிகிறது.

துபாய் நண்பரின் அறையில் ஒரு பையன். படுத்திருப்பவன் திடீரென்று எழுந்து உட்காருவான் படுக்கையில். ‘எந்த மசுராண்டி இந்த லைஃபை கண்டுபுடிச்சது?’ என்று உரக்க ஒரு கேள்வி கேட்பான் சுவரைப் பார்த்து. அடுத்தநொடியில் குப்புறப்படுத்து விடுவான். அவனால் முடிந்தது! சமயத்தில் , ’புது சட்டையும் செண்ட்டும் காட்டி கூட்டாளி ஏமாத்திட்டானே’ என்று புலம்புவான். ’கப்பலுக்கு போன மச்சான்’ பாட்டை ஒருநாள் கேட்டான். ‘என்னா நடிப்பு! இவளுங்க கொடுத்த தொல்லை தாங்கமுடியாமதான ஓடிவந்தேன்’ என்றான் மல்லாக்க படுத்துக்கொண்டு. எச்சிலும் துப்பியிருக்கக்கூடும்.

இளைய ராஜாவின்  ரகளையான பாட்டை இங்கே சொல்லவேண்டும். அவர் துபாய் வந்தபோது எல்லா பாட்டையும் விட அந்த ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா’ பாட்டுக்குத்தான் ஏக ஆரவாரம்! ஆயிரக்கணக்கான அழுகைகளை ஒன்றாகக் கேட்டால் ஆரவாரமாகத்தான் தெரியும். ஆண்டவனே  இதென்ன கொடுமை…? ஷார்ஜா , ஏன் , அமீரகமே அமிழ்கிறதே கண்ணீரில்…

’படித்தால் உயரலாம் என்கிறீர்களே.. படித்துவிட்டா ஏழுநட்சத்திர புர்ஜ்-அல்-அராப் ஹோட்டலில் ’எளிமையாக’த் தங்கினார் இளையராஜா?’ என்று சிலர் கேட்கலாம். இசையை உருப்படியாகக் கற்றாரே ராஜாதிராஜா. என்னைப்போல் எல்லாவற்றிலும் வாயைவைத்து ( ’அதயெல்லாம் எழுதாதீங்க மச்சான்!’ – அஸ்மா) ஏமாந்து போகவில்லையே.. அப்புறம் அந்த சொர்க்கம்.. ஏயார் ரஹ்மானுக்கு இசைக்கலைஞர்கள் இருக்கும் மைலாப்பூர் சொர்க்கமென்றால் கவாலி தர்பார்கள் நடத்தும் காதரொலி பாவாவின் நாகூர்தான் எனக்கு  சொர்க்கம்.  என்ன, மினாரா தாக்கில் இப்போதெல்லாம் கஞ்சா சரியாகக் கிடைப்பதில்லை! தவிர , கவிஞர்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை. இன்னொரு விஷயம் : ஊர் போகும்போது கண்டிப்பாக சீர்காழி வழியாகப் போகவே கூடாது! அங்கே ஒரு பேய் உட்கார்ந்துகொண்டு ‘ஊருக்கு வந்தா நல்லா சம்பாதிக்கலாம்யா’ என்று தூபம் போடுகிறது. என்ன, கடனையா? இந்தாள் பேச்சைக் கேட்டு ’சின்ன ஷைத்தான்’ சாதிக் முந்தா நாள் ’ஒரேயடியாக’ ஊர் போயிற்று. இன்று காலை வந்துவிட்டது!

ஆடு ஜீவிதமே நித்ய ஜீவிதம்!

’ஊர்ல புள்ளைங்களோட இக்கிம்போது அல்லாஹூத்தஆலா வந்தா கூட ‘ஒய்.. பொய்ட்டு அப்புறம் வாங்கனி’ண்டு வெரட்டிப்புடுவேன்’ என்று வெறியுடன் சொல்லியிருக்கிறேன் ’வெள்ளி’ இஸ்மாயிலிடம். சிரித்தார் அவர். ’அவ்வளவு புரியமா நானா?’. ‘பின்னால சூத்தாமட்டைல ஓங்கி உதைப்பாங்கதான். இந்தாலும் அனீகா, நதீம்னா உசுரு எனக்கு’ ‘எனக்கும்தான் நானா’

மலேசியா சபராளியான என் சீதேவிவாப்பாவும் எவ்வளவோ முயற்சித்தார்கள் – தன் பிள்ளைகளுடன் ஊரோடு இருக்க. தன் பிள்ளைகள் ஊரோடு இருக்க.

உசுரோடு இருக்க முடியவில்லை. ஊரும் சொந்தங்களும் இருக்க விடவில்லை.

இப்போது தரும் ’அரபிக்கடல்’ பாடலில் , நம்ம கன்றாவி மச்சான் அக்கரையில் இருந்துகொண்டு புலம்புகிறார். முப்பது வருடங்களுக்கும் முன்பிருந்த முக்கியமான புலப்பம். வந்து வெந்த எல்லா மச்சான்களுக்கும் அதே புலப்பம்தான் – இப்போதும். பாடலைக் கேட்கும்போது சவூதி என்று தெரிகிறது ’இது கருணைநபி பிறந்த தேசம் பைங்கிளியாளே..’ என்றால் சவுதிதானே? ஒரு சந்தேகம்…சவூதி அரபுநாடா? மண்ணின் மைந்தர்களுக்கு சலுகைகளின் சர்க்கரை மழையையும் பிறநாட்டவர்களுக்கு நெருப்பு மழையையும் அளிக்கும் சவுதி. ’இந்நேரத்தில்’ வந்த ’சர்க்கரை மழை’ பதிவில் ’நமது நாட்டவர்கள் இந்த அரேபியர்களால் படுகின்ற கஷ்டங்களை கேட்டால் இந்த சவுதி மேல் வெறுப்புதான் வரும். மறுமையில் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.’ என்று சகோதரர் ‘Muslim’ கொதிப்புடன் எழுதிய மறுமொழியை மாமன்னர் பார்த்தால் அவ்வளவுதான்! அந்த ’Muslim’க்கு , ’யாரையும் கஷ்டப்பட்டு இருக்க சொல்லலே. முடிஞ்சா இருங்க. இல்லேன்னா அவரவர் நாட்டுக்கு போக வேண்டியதுதான். மொதல்ல நம்ம நாடு நமக்கு என்னா செஞ்சதுன்னு பாக்கணும். அப்பறம்.. மத்த நாட்ட பத்தி பேசலாம்’ என்று ’பாதுஷா’ பதில் சொல்லியிருந்தார் படபடப்பாக.

தம்பி பாதுஷா, இந்த பதிவிற்கு ’நொந்து நூடுல்ஸா போனவங்களுக்கு’ என்று தலைப்பிடச் சொன்னார் அசனா மரைக்கார். ஆடுமாடுகள் போல நடத்தப்படுபவர்களின் அவலங்கள் புரிந்த மரைக்கார். சேவல்பண்ணைகளின் சிந்தனைச் செம்மல்களைப் பார்த்து தினமும் அழும் மரைக்கார்.

ஹூம்… ஆயிரத்தில் ஒருவருக்கு அரபுநாட்டு மாலை கிட்டலாம். மற்றவர்களுக்கு – என்னையும் சேர்த்து – எதிரே தெரிவதெல்லாம் புழுதி மழைதான்.

’நத்திங் ஈஸ் இம்பாஸிபிள், நக்கிங் ஈஸ் பாஸிபிள்’ என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடாதீர்கள் உடனே. ஃபேமிலி கொண்டுவரும் வசதி இப்போது எனக்கு இருக்கிறது சாரே… ஃபேமிலி நிம்மதியாக இருக்கவேண்டுமென்றுதான் கொண்டுவரவில்லை! மனம் தாளாமல் மற்றவர்களுக்காக பதிவிடுகிறேன். புரியுதா? ஆமாம், அதென்ன நத்திங் ஈஸ் இம்பாஸிபிள்? நான் தி. ஜானகிராமன் ரசிகன். மாற்ற முடியுமா உங்களால்? என்னதான் கடவுளைக் கிண்டல் செய்தாலும் (கடவுள்தானே கிண்டல் செய்ய வைக்கிறார்!) அடிப்படையில் நான் ஆன்மீகவாதி. மாற்றிவிட முடியுமா? ஆயில் இருக்கும்வரை அரபுநாட்டு ராஜாக்கள் அமெரிக்க கூஜாக்களால் ஆளப்படுவார்கள். மாற்ற முடியுமா? எப்படித்தான் எச்சரித்தாலும் கடைசிவரை தாஜ் கவிதை எழுதுவார். திருத்த இயலுமா?!

அட்வைஸ்..! இணையமெங்கும் நிறைந்திருக்கும் ’உதயமூர்த்தி சுவாமிகள்’ பற்றி ஹஜ்ரத் சொன்ன தமாஷ் சொல்கிறேன். ’கிச்சு கிச்சு’ அல்ல. அதெல்லாம் எனக்கு வராது ஓய், செம்ம வெடை. அதாவது கிண்டல்.

படம் பார்க்க பட்டணம் போன ஹஜ்ரத்தின் சீடர்களிடம் உழைப்பின் பெருமை, நேரத்தின் மதிப்பு, கல்வியின் அவசியம், இறைநம்பிக்கை என்று நீண்டநேரம் அறுத்தெடுத்திருக்கிறார் ஒரு திடீர் பணக்காரர். நொந்துபோய் திரும்பிய சீடர்களிடம் ஹஜ்ரத் சிரித்துக்கொண்டே சொன்னார்களாம் : ‘ஒண்ணுமில்லே.. அவர் ஜோப்புல ரெண்டு ரூவா இந்திக்கிது. அது அவர பேசவச்சிக்கிது!’

வெறும் ரெண்டு ரூவாக்கே…! எச்சரிக்கை : ’பெரிய ஷைத்தான்’ மஜீத் எழுதிய ஹஜ்ரத் ஜோக் விரைவில் வரும். இங்கே அல்ல; அவர் தளத்தில். அடுத்தவர்களின் பதிவுபோட்டு நான் அடிவாங்கியது போதும்ப்பா!

பெரிய நாவலாக எழுத வேண்டிய விஷயம் இந்த ’சஃபர்’. வெளிநாட்டில் குடும்பத்தோடு ’வாழ்பவர்கள்’ பற்றியும் விரிவாக எழுத வேண்டும். மனைவியை ஆறுமாதத்திற்கு மேல் பிரிந்திருப்பது ஹராம் என்று சொல்லும் அழகான மதத்தின் சட்டங்களை அப்படியே கடைப்பிடிப்பதாகச் சொல்லிக் கொல்லும் அரபுநாடுகளின் நிஜ முகத்தையும் காட்ட வேண்டும் – உயிரோடு விட்டால். எழுதினால் , ‘ஆமா.. எப்பப்பாரு இவருக்கு ஒரே சப்ஜெக்ட்தான்’ என்று அலுத்துக்கொள்வார் ஆம்பூர் ஹஜ்ரத். எனவே ’சஃபர்’ பற்றி அண்ணன் சடையன் சாபு எழுதிய வரிகளைச் சொல்லி முடிக்கிறேன். ‘பயணங்கள் முடிவதில்லை’ கவிதையின் கடைசி பாரா மட்டும்.

’பயணம் முடியப்போகிறதென
நினைத்தேன்
வீடு… வாசல்..
வயல்.. வரப்பு
நிலம்.. நீச்சு
மாடு.. கண்ணு
தோப்பு.. தொரவு
கார்.. பங்களா..
துணி.. மணி
நகை.. நட்டு
என என்
பயணம் தொடர்கிறது
பயணங்கள் முடிவதில்லை’

இதன் பெயர் கவிதையா? அது வேறு விவாதம். இங்கே வேண்டாம். அமீரக ஆண்டுவிழா மலரில் (2002) இடம்பெற்ற இந்த வரிகளை எடுத்துக்கொடுத்தது அசனா மரைக்கார்தான்.

அசனா…, உயர்படிப்பு படித்து, அமீரகத்திலுள்ள பெரிய கம்பெனியில் உயர்பதவி வகித்த நம் சாபத்தாவுக்கே இத்தனை கவலையென்றால் சாதாரணர்கள் நாம் எந்த மூலை?

அதிர்ஷ்டமோ அருகதையோ, சுகபோகமாக வாழும் இந்திய – பாகிஸ்தானி சோதரர்கள் (மொஹாலியில் நேற்று சகோதரர்களானோம் – 29 கோல்கள் வித்தியாசத்தில். மறந்து விட்டீர்களா? ) பல நாடுகளிலும் உண்டுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் எத்தனை விழுக்காடு? தவிர, வெற்றி-தோல்வி பற்றிய என் அபிப்ராயமே வேறு. பிறகு எழுதுகிறேன். அவசியம் உடனே தெரியவேண்டுமெனில் ’பிராஞ்சியேட்டன்’  (Pranchiyettan & the Saint) சினிமாவில் புனித ஃபிரான்சிஸ் கடைசியில் கூறும் அந்த அட்வைஸை கவனமாகக் கேட்கவும். அதுதான் என் அட்வைஸ்!

அரிசி வியாபாரியான பிரான்ஸிஸ்-ஐ (மம்முட்டி) ’அரிப்பிராஞ்சி’ என்று கிண்டலாக அழைக்கிறது ஊர். அவமானமாக இருக்கிறது அவருக்கு. இந்த பட்டப்பெயரை எப்படியாவது மாற்றனும் என்று நகைக்கடை வைத்தால் ’நகைக்கடை அரிப்பிராஞ்சி’ என்றாகிறார்! பத்மஸ்ரீ பட்டம் வாங்கினாலாவது மாறாதா என்று பணத்தோடு (பின்னே, சும்மாவா கிடைக்கும்?) முயற்சித்து அதிலும் ஏமாறுகிறார். தன்னுடைய புலப்பங்களை தனக்கு காட்சி தரும் புனித ஃபிரான்சிஸிடம் சொல்வதுதான் கதை. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த படம். எங்கிருந்து சுட்டார்களோ நான் அறியேன், ஆனால் கடைசி ஐந்து நிமிடங்கள் தெய்வம் விரும்பும் மனிதனை (தெய்வத்தை விரும்பும் மனிதனையல்ல) அழகாக விளக்கி விடுகிறது. தங்கத்தால் ஆலயம் கட்டுபவனல்ல , சக மனிதனின் துன்பத்தைப் போக்க முயற்சிப்பவன்தான் சொர்க்கத்திற்குப் போகும் தகுதியுடையவன் என்று சொல்கிறது. வெற்றி பெற்றவர்கள் என்று நாம் நினைப்பவர்களெல்லாம் உண்மையிலேயே அப்படித்தானா? என்று கேட்கிறது. எல்லாம் அடைந்தவர்கள் என்று நாம் ஏங்கும் ஆட்கள் என்னதான் நிஜத்தில் அடைந்தார்கள்? என்று விளக்குகிறது.

முஸாஃபிர் சல்தே சல்தே தக்கயாஹை…

’எருமை ஸ்பீடில்’ எனை வரவழைத்த நண்பர்களுக்கு நன்றி!

ஆபிதீன்

***

கவிஞர் நாகூர் சலீம் இயற்றி S.S, வாஹித் பாடிய பாடல் (1982) :

அரபிக்கடல் இக்கரையில்
ஆருயிரே உன் நினைவில்
அனுதினமும் வாழுகிறேன் பைங்கிளியாளே – நான்
அதிவிரைவில் உனை அடைவேன் பைங்கிளியாளே.. (அரபிக்)

கல்லுருகி நீர் வடிக்கும்
கண்மழையோ கரை உடைக்கும்
என் நிலையை கண்டறிந்தால் பைங்கிளியாளே – நீ
இறைவனிடம் சொல்லு இதை பைங்கிளியாளே.. (அரபிக்)

பாலையிலே சாலைகளும்
பழம் உதிரும் சோலைகளும்
பார்க்க ஒரு சொர்க்கமடி பைங்கிளியாளே – இது
பைந்தமிழர் வேர்வையடி பைங்கிளியாளே.. (அரபிக்)

பாடுபட ஓடுவதும்
பாறைகளில் வாடுவதும்
நாம் சுகமாய் வாழ்வதற்கே பைங்கிளியாளே – தமிழ்
நாடுவிட்டு இங்கு வந்தேன் பைங்கிளியாளே.. (அரபிக்)

கஷ்டங்களை மறப்பதற்கு
கல்பில் இதை சகிப்பதற்கு
காரணமும் உண்டெனது பைங்கிளியாளே – இது
கருணைநபி பிறந்த தேசம் பைங்கிளியாளே.. (அரபிக்)

*

பாடலை டவுன்லோடு செய்யவேண்டுமென்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள் – பத்தாயிரம் பவுண்ட் சம்பளம் தரும் விசாவோடு!

போனால் போகிறது , இங்கே கேளுங்கள் :

***

தொடர்புடைய ஒரு கதை : மஜ்னூன் – மீரான் மைதீன்

*

நன்றி : சலீம் மாமா, அசனா மரைக்கார், ’சடையன்’ சாபு  , அலாவுதீன்

நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலுல்லாஹ்..

’வாழும்வரை நம் மதிப்பு , பெருமானார் ரசூல் (ஸல்) அவர்களின் உம்மத்துகள் நாம் என்பதுதான்’ என்ற குறுஞ்செய்தி இப்போது வந்தது – ஜபருல்லா நானாவிடமிருந்து.’ தேன்கூட்டில்’ இருக்கும் திருநபி தினப் பாட்டும் ஞாபகம் வருகிறது. ‘அன்புடனுளங்கள் ஆர்வமாய்க் கூடி / ஆதி தூதரின் நற்புகழ் பாடி / மன்பதை யாருமோர் குடையின் கீழே/  மகிழ்ந்து கூடுவம் வா, வா, வா / மகிழ்ந்து கூடுவம் வா’ என்பார் புலவர் ஆபிதீன். இப்போது? வம்புடனுளங்கள் ஆர்வமாய்க் கூடி வசைமழை பொழிகின்றன! நம்ம ஜாஃபர்நானா அப்படியல்ல. நைஸ்குத்து குத்துவதில் மன்னன். (மஞ்சக்கொல்லைக்காரங்க எல்லாருமே அப்படித்தான்). வஹாபிகள் கொடுத்த ஒரு நோட்டீஸ் நேற்று கிடைத்ததில் கைலியோடு இறங்கி விட்டார், கைவிடுபடையுடன். அப்படீன்னா… அது ஒரு அஸ்திரமாக்கும். எச்சரிக்கையாக இருங்கள். எதற்கும் கூடவே இருக்கட்டுமென்று என்னைக் கவர்ந்த பாடகர் , மறைந்த வாஹித் பாடிய ’இஸ்லாமியப்’ பாடலை முதலில் தருகிறேன் – சலீம்மாமாவின் வரிகளில் சங்கதி இருப்பதால். ச..ச…! ’சில்சிலா’வில் வந்த மெட்டு. Dekha Ek Khawab..

கேட்டீர்களா? 28 வருடங்களுக்கு முன் நண்பர் பிலால் – ‘சீசன் ஸ்டீரியோ’ மூலம் – ரிகார்ட் செய்ததை இன்றும் பத்திரமாக வைத்திருந்து ,mp3யாக்கி , எனக்கு அனுப்பிய ’ETA’ அசனா மரைக்காருக்கு நன்றி. பதிவின் கீழே , பக்கா ரிகார்டிங்-ல் நெல்லை உஸ்மான் தந்த ‘யா ரசூலுல்லா’ இருக்கு. அவசியம் கேளுங்கள். இந்த மேட்டரெல்லாம் பிடிக்காத சகோதர மதத்து நண்பர்கள் ஸ்ரீவல்ஸனின் ஆனந்தமிர்தகர்ஷினியைக் கேட்க ஓடலாம். சுகம்.

***

நபி தினம்ஹமீது ஜாஃபர்

“நாயகர் நாளிதுவே – நபி
நாயகர் நாளிது – நாம்
புகழ்வோம் கலி கூறி…!”

பெருமானார் அவர்களின் பிறந்த நாள், அவர்களின் சிறப்பைப் பற்றி எழுதுவாதானால் எதை எழுதுவது , எப்படி எழுதுவது , புலவர் தா.காசிம் தென்றல் காற்றை தூது விட்டாரே அதை அடிப்படையாக வைத்து எழுதலாமா இல்லை கனவிலாவது காட்சி தரமாட்டார்களா என்று இறை காதல் கொண்ட ஆலிம்கள் ஏங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்கு வந்தால் எப்படி வரவேற்பேன் என்று எங்க ஜஃபருல்லாஹ் நாநா ஆசைப் படுகிறாரே அதை வைத்து எழுதலாமா என சிந்தித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு நோட்டீஸ் கிடைத்தது. தலைப்பு: ‘சாபத்தைப் பெற்று தரும் மவ்லீதுகளும் அருளைப் பெற்று தரும் சலவாத்தும்’ படித்துப் பார்த்தேன் ஒரே ஒளராட்டியம். தெ(ள)ஹீது என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் பொருள்கூட புரியாமல் ஒரு கூட்டம், நாங்கள்தான் தெ(ள)ஹீது என்று iso முத்திரைக் குத்திக்கொண்டு டிரேட் மார்க்குடன் பண்ணுகிற அழிச்சாட்டையம் தாங்கமுடியவில்லை. இவர்களுடைய டிரேட் மார்க்கை வேறு யாரும் உபயோகப்படுத்த முடியாது. எல்லாம் ரிஜிஸ்டர்டு. தமிழ் நாடு தெ(ள)ஹீது, ஆல் இண்டியா தெ(ள)ஹீது, இண்டர்நேஷனல் தெ(ள)ஹீது etc., etc., இந்த அக்மார்க் முத்திரைக்காரர்களுக்குள் போட்டி வேறு!

இவங்களோட தொல்லை தாங்கமுடியலை. ஊர்லெ வேலை கிடைக்காமெ, வியாபாரம் செய்யத் தெரியாமெ இங்கே வாராங்க. இங்கே வந்து இந்த நாட்டைப் பார்த்தவுடனேயே மார்க்கத்தை புரிஞ்சிக்கிட்ட மாதிரியும், கரைச்சு குடிச்சமாதிரியும் நெனச்சுக்கிட்டு என்ன சொல்றோமுன்னெ தெரியாம எதாவது ஒளறிக்கிட்டே இருக்காங்க. அது செஞ்சா பித்அத்து, இது செஞ்சா விரோதம், அப்படி செஞ்சா இணை வைப்பது, ஜியாரத்து செஞ்சா கபுர் வணக்கம் இப்படி எதாவது சொல்லி நோட்டீஸோட அமளி தாங்கமுடியலை. அப்படி வந்த நோட்டீஸுலெ ஒன்னுதான் மவ்லீதைப் பற்றியது.

மவ்லீதுன்னா என்னா? புகழ்மாலை, பாமாலை. இதை ஓதுறப்ப பெரிசா சோறாக்கி எல்லோருக்கும் கொடுக்குறாங்க, பத்து ஏழைப் பாளைகள் பயனடையுது. அவர்களுக்கு நல்ல சோறு வாசமணமா கெடைக்குது. இதுலெ தப்பு என்னங்க இருக்கு? ஆஹா மார்க்கத்துலெ இல்லாததை செய்றாங்க வரம்பு மீறி புகழ்றாங்க, இணை வைக்கிறாங்க என சொல்லி அதுலெ மண்ணள்ளிப் போடப் பார்க்குறாங்க இந்த தெ(ள)ஹீதுகள். ஏற்கனவே ஆறாம் பாத்திஹா பதினோறாம் பாத்திஹான்னு பல வூடுகள்லெ ஓதி ரெண்டு மிஸ்கீனுக்கு சோறு(நெய் சோறு+கறி) கொடுத்துக்கிட்டிருந்தாங்க, அதுக்கு ஆப்பு வச்சு ‘கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா’ இப்பொ ஒன்னு ரெண்டு வீடுகள்லெ மாத்திரமே நடக்குது.

சுபுஹான மவ்லீதில் ‘யா நபி சலாம் அலைக்கும், யா ரசூல் சலாம் அலைக்கும்’ என்கிற பைத்து இருக்குது. அப்படி இருக்கக் கூடாதாம். “யா நபியல்லாஹ், யா ரசூலல்லாஹ்”ன்னுதான் இருக்கணுமாம். யா நபி, யா ரசூல்னு சொல்றது சம அந்தஸ்துள்ளவங்களைக் கூப்பிடுவது போல இருக்கிறதாம். அதுலெ வர்ற ‘யா முஹம்மது’ என்ற சொல் மரியாதை இல்லாமல் இருக்கிறதாம். யாப்பிலக்கணம், சொல் இலக்கணம், அணி இலக்கணம் தெரியாத உங்களுக்கு எவ்வளவுதான் (புளி போட்டு) விளக்கினாலும் விளங்காது. தம் வாழ் நாள் முழுவதையும் இறை நேசத்தில் ஊறித்திளைத்த இபுனு அரபி எழுதிய பைத்தில் குறை காண உனக்கு அறிவும் கிடையாது, வயதும் பத்தாது.

“உங்களில் எவரும்  உங்களைவிடவும், உங்கள் செல்வத்தைவிடவும், உங்கள் தாய் தந்தையரைவிடவும், இன்னும் அணைத்தையும் விடவும் மேம்பட்ட பிரியம்  என் மீது இல்லாத வரை உங்களின் ஈமான் பரிபூரணமாவதில்லை” என்று நபி(சல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அப்படி இருக்க அவாம்களாகிய நம்மைவிட இறை நேசர்களுக்கு, புலவர்களுக்கு, புரவலர்களுக்கு எவ்வளவு நேசமும் பாசமும் இருந்திருக்கும்.!

மாறாத அன்புகொண்ட புலவர் பெருமக்கள் தங்களுடைய கற்பனை எல்லாம் திரட்டி சாறாகப் பிழிந்து இறைவன் மீதும் பெருமானார் மீதும் விருத்தம், களிப்பு, புராணம், பிள்ளைத் தமிழ். கீர்த்தனை முதலியவைகளை பாடிப் பாடி பக்தி பரவசத்தை வெளிப்படுத்திருக்கிறார்கள் என்றால் அது நமக்கு மட்டுமல்ல தமிழ் இலக்கியத்துக்கும் கிடைத்த வெகுமதிகள் என்றால் அது மிகையாகாது. அவைகளினுள் ஆழ்ந்து கிடக்கும் கருத்துக்கள் திகட்டாத தேனமுதங்களாகும். அள்ளி அள்ளிப் பருகினாலும் அலுப்புத் தட்டாதது.

புலவர்கள் என்றால் தாம் சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் வருணனைகள், உவமானங்கள், உவமேயங்கள் இவைகள் வாயிலாக படிப்பவர்கள் இன்புற தேன் சொட்ட அமுதத்தை ஊட்டுபவர்கள். அவர்கள் தங்களுடைய கற்பனை வளங்களால் நம்மை அங்கேயே அழைத்துச் செல்பவர்கள் அப்பாவலர்கள். அத்தகைய வருணனைகள், உவமானங்கள் இல்லையென்றால் அது உயிரோட்டம் இல்லாத செத்த விடக்காக இருக்கும். ஏன் இறைவனே சொர்க்கத்தப் பற்றிய வசனங்களில் உவமானங்களை வைத்துதானே கூறுகிறான். ஹூருலீன்கள், மாளிகைகள், வற்றாத நதிகள், கிடைத்துக்கொண்டே இருக்கும் கனி வர்கங்கள், மாறாத பணிவிடைகள் இவைகள் எல்லாமே உவமானங்கள்தானே. அதுபோன்று புலவர்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

ஒருத்தர் சொல்கிறார், கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு பதிவுலேயோ அல்லது நோட்டீஸோ படித்த ஞாபகம். அவர் சொல்கிறார் “ரசூல்(சல்) அவர்கள் மனைவிகள் நமக்கு தாய் போன்றவர்கள் உம்முல் முஃமினீன். அப்படி இருக்க தாய்க்கு ஒப்பான தாயைவிட மேலான கதீஜா பிராட்டியாரை உமறு புலவர் வருணிப்பது இஸ்லாத்துக்கு விரோதமாக இருக்கிறது, கீழ்த்தரமாக இருக்கிறது; ஒரு தாயை யாராவது வருணிப்பார்களா, மனம்தான் வருமா? என்று அங்கலாய்த்திருந்தார்.

கற்பூரத்தை இதோடு எணச்சுப் பேசுவாங்க , காம்போதி ராகத்தையும் ஏன் இதோடு எணச்சாங்கன்னு தெரியலெ. கற்பூரம் காட்டினா பத்திக்கும் இது…. ஒருவேளை ஆரோகணத்தில் ஆரம்பிச்சு அவரோகணத்தில் முடிக்கிதே அதனாலெயா சொல்றாங்களா? தெரியலெ. அதனாலெ கொஞ்சம் மோப்பம் புடிச்சுப் பார்த்தப்ப அது ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஏழு சுரங்களையும் பூரணமா கொண்டிருப்பதால் மேளகர்த்தா வகையை சேர்ந்ததுன்னு சொல்றாங்க. எப்படியோ ரெண்டுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்குங்கிற மாதிரி இருக்கு.

உமறு புலவர் கதீஜா நாயகியரை மட்டும் வருணிக்கவில்லை; ’வற்றிப்போய் வாயுலர்ந்து வறணாக்கை நீட்டுவதுபோல் முற்றியநீண் மரப்பொதும்பின் முதுபாம்பு புறப்படுமே’ என பாலை நிலத்து மரங்களை பேய்களகாவும், மரப் பொத்துக்களை பேய்களின் வாய்களாகவும், அவ்வாய்களிலிருந்து வரும் நாக்குகளை பாம்புகளாகவும் ஆக்கிக் காட்டி அரபு நாட்டின் பாலைவனத்தின் வெப்பத்தை வருணித்துக் காட்டுகிறார்.

பெருமானார் அவர்கள் ஷாம் தேசத்துக்குச் செல்கிறார்கள், இறைதூதர் வரும் பாதைக்கு தங்க விரிப்பு விரித்து, பாதையின் இரு மருங்கிலும் அகல் விளக்கேற்றி, இரு பக்கமுமுள்ள வயல் வெளிகளில் தாமரை மலர்களைப் பூக்கவைத்து நபியவர்கள் வரும் பாதையில் கைவிளக்கேற்றி நின்று வரவேற்பதுபோல் காட்சி அமைத்து மகிழ்வுறுகிறார் புலவரவர்கள். ‘பண்ணை வாய்ச்செழுங் கமலங்கள் செவ்விதழ் பரப்பி, யுண்ணி றைந்தமா மணியொடு மொளிர்வன வலைகள், வண்ண வார்கழன் முஹம்மது வருநெறிக் கெதிரா, யெண்ணி றந்ததை விளக்கெடுத் தேந்தின ரியையும்.’ இதோடு நின்றுவிடாமல் தமிழகத்திலுள்ள மா, பலா, வாழை இன்னும் பிற வகைகளையும் கொண்டு செல்கிறார். இதுவும் திருப்தி படாமல் புல்லினங்களையும் வண்டினங்களையும், குயில் கூட்டத்தையும் பாடவைத்து நபிகளாரை வரவேற்கிறார் புலவர் கோமான்.

இப்படி சொல்வது புலவருக்கழகு, புலமைக்கழகு, மொழிக்கழகு, இதையெல்லாம் புரியாதவர்களை என்ன சொல்வது? ‘புரியாத அறிவுக்கு மக்கள் எதிரானவர்கள்’ என்று அரபியில் ஒரு பழமொழி இருக்கிறது. அப்படித்தான் நம்ம தெ(ள)ஹீதுகளும். இவங்களை சொல்லி குத்தமில்லை, இவங்கள்லாம் அம்பு. இந்த அம்புகளை விடுறவர் ஒருத்தர் இருக்கார் அவர் எல்லா மவ்லீதும் ஓதி முடிச்சுட்டு அதுலெ வருமானமில்லை , லைஃபுக்கு லாயக்குப் படாதுன்னு ஒரு ஷார்ட் கட்/ எல்லாத்தையும் ஆண்டவனிம்தான் கேட்கணும், வேறே யாரிடமும் கையேந்த கூடாது (டிராஃப்டை மட்டும் எங்களுக்கு அனுப்புங்க)ன்னு ஒரு மூல மந்திரத்தை சொல்லிக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருக்காங்க. அவரு வண்டிக்குள்ளேயும் இவங்க வெளியே வண்டிக்குப் பின்னாலேயும் ஓடிக்கிட்டிருக்காங்க. ஓடட்டும் , கால் வலிக்கும் வரை..!

அது சரி…! அல்லாவுக்கு கால் இருக்குன்னு சொல்லிட்டீங்களே, மத்த பாகமெல்லாம் எப்ப தெரியும்? அவரு ஆம்பிளையா, பொம்பிளையா இல்லை லேடிபாயா.? கொஞ்சம் சீக்கிரமா கண்டுபுடிச்சு சொல்லுங்க..! எங்களுக்கும் பார்க்க ஆசையா இருக்கு!

**

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

**

நெல்லை உஸ்மான் பாட்டு :

*
Download