பெருமையின் பிரிவுகள் – இமாம் கஜ்ஜாலி

அறிஞர் குழு அறிவை வைத்துப் பெருமையடிப்பது போல், பக்தர் குழு பக்தியை வைத்துப் பெருமையடிக்கிறது ! – இமாம் கஸ்ஸாலி (ரஹ்)

*

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் , Sufi Islam அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் (ஷரியத்,தரீக்கத்)
*

நூல் : சிந்தனையின் சிறப்பு
மூலம் : ‘ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்‘ ‘இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்.
தமிழ் விரிவுரை : எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி

**
அறிஞர்களும் பக்தர்களும் தெரிந்தோ தெரியாமலோ பெருமையடிக்கிறார்கள் என்று நான் குறிப்பிட்டேன். இப்போது, அவர்களின் பெருமையுணர்வு எத்தனை பிரிவுகளாகப் பிரிகிறது என்று பார்ப்போம்.

முதற் பிரிவு: இந்தப் பிரிவிலுள்ளவர்கள் நீங்காத பெருமையுடையவர்கள். இந்த உணர்வு மனப்பரப்பில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. பெருமையான எண்ணமும்” சிந்தனையும் இவர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கின்றன. என்றாலும் இவர்கள் அவற்றை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. சில வேளைகளில் அவர்கள் பணிவுள்ளவர்கள் செய்யும் வேலைகளைச் செய்கிறார்கள்; பணிந்து நடப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். தம்மை விட மேலானவன் என்று கருதப்படும் ஒருவனைப் பின்பற்றுகிறார்கள்.
இவர்களின் உள்ளப் பரப்பில் பெருமை மரம் வேரூன்றி நிற்கிறது என்றாலும் அதன் கிளைகள் துண்டிக்கப் படுகின்றன. எனவே இவர்கள் பகிரங்கமாகப் பெருமையடிப்பதில்லை.

இரண்டாம் பிரிவு: இந்தப் பிரிவில் கட்டுப்பட்டவர்கள் தம்முடைய பெருமையுணர்வைச் செயலில் காட்டுகிறார்கள். எண்ணத்தில் மட்டுமின்றி, சொல்லிலும் செயலிலும் இந்தப் பெருமை பிரதிபலிக்கிறது. இவர்கள் நாலு பேருக்கு மத்தியில் அர்த்தமில்லாத பல வேலைகளைச் செய்கிறார்கள். புன்னகை பூப்பதும் இனிமையாகப் பேசுவதும் அவர்கள் வரவேற்காதவை. புன்னகை பூத்தால் தம் கண்ணியம் குறைந்து விடுமாம்! இனிமையாகப் பேசினால் தம் அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமாம்! அறியாமை! பெருமானாரை விட அந்தஸ்திலும் அறிவிலும் பக்தியிலும் சிறந்தவர் யாரேனும் இருக்க முடியுமா? ஆனால் அவர்கள் இப்படி நடக்கவில்லையே! அவர்கள் புன்னகையோடு பழகினார்கள்; இனிமையோடு உரையாடினார்கள். எனவே இவர்கள் முதற் பிரிவினரை விடத் தாழ்ந்தவர்கள்.

அறிஞர்கள் பெருமைக்குரியவர்கள் தான்; இதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் பெற்றிருக்கும் அறிவைப் பொறுத்து அவர்களின் சிறப்பு பெருகுகிறது. அவர்கள் தம்மைப் பற்றி அதிகமாக எண்ணாமலிருந்தால் இறைவனிடம் அவர்களின் பெருமை உயரக்கூடும். ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் உரையாடும் முறையையும் பார்க்கும் போது நம்மால் வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை. அறிவைச் சுமந்த அவர்கள் எதற்காக இந்த குப்பையைச் சுமக்க வேண்டும்?

அகிலத்தை அளந்து பார்க்கும் திறன் படைத்த அவர்கள் யாருக்காக அருவருப்பை வாரிக் கட்டிக் கொள்ள வேண்டும்? “என்னைப் போல் இந்தத் துறையில் அல்லும் பகலும் ஈடுபடுகிறவர்கள் யார்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். “என் ஆயுளில் பெரும்பகுதியைக் கல்விக்கும் சிந்தனைக்கும் செலவிட்டு விட்டேன். மார்க்கத்தின் மர்மங்களையெல்லாம் நான் கரைத்துக் குடித்திருக்கிறேன்…” என்று வெட்கமின்றிக் கூறுகிறார்கள். இதுபோன்ற விவரங்களை வெளியிடும் போது உண்மையான அறிஞன் நிச்சயம் வெட்கப்படுவான்.

மற்றவர்களின் கருத்திலும் பேச்சிலும் தவறு கண்டு பிடித்து அதைப் பலருக்கு மத்தியில் அவர்கள் கூறுகிறார்கள். இதில் அவர்கள் காணும் இன்பம் எல்லையற்றது….

அவர்கள் ஒரு விவரத்தை நினைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். சிறிதளவு பெருமையுணர்வு கொண்டவனும் சுவனத்தின் வாடையை அனுபவிக்க முடியாது என்னும் பெருமானார் கருத்தை இவர்கள் உணர்ந்துதான் இருப்பார்கள். பெருமைக்கு மறுப்புத் தெரிவிக்கும் திருக்குர் ஆன்வசனங்களையும் இவர்கள் பார்த்துத்தான் இருப்பார்கள். அறவழி நடந்த முன்னோரின் பொன்னான வாழ்வையும் இவர்கள் உணர்ந்துதான் இருப்பார்கள். இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு எதிர்திசையில் நடக்கும் இவர்கள் ஆத்மீக வெற்றியை எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.

மூன்றாம் பிரிவு: குலத்தையும் கோத்திரத்தையும் வைத்துச் சிலர் பெருமையடிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் பெருமானார் அறுத்தெறிந்த குல வேற்று மையை இப்போது இவர்கள் புத்துயிர் கொடுத்து எழுப்புகிறார்கள். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையையும், கரிய நிறம் படைத்தவன் வெண்ணிறம் படைத்தவனுக்குத் தாழ்ந்தவனல்ல என்ற தத்துவத்தையும் இவர்கள் சுக்குநூறாக உடைத்தெறிகிறார்கள். கரிய நிறம் படைத்த பிலாலுடன் வெள்ளி நிறம் படைத்த பெருமானார் கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை இவர்கள் உணரவில்லையோ என்னவோ!

“அபூதர்! வெண்மேனி பெற்றவன் கரியமேனி பெற்றவனை விட உயர்ந்தவனல்ல!” என்று பெருமானார் குறிப்பிட்டிருக்கிறார்கள். இங்கு நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். நிறம் என்பது சூழலால் ஏற்படும் ஒன்று. அது எந்த விதத்திலும் சிறப்புக்குக் காரணமாகாது. உண்மையான சிறப்பு, அல்லது இழிவு மனத்திலிருக்கிறது. அதுவே மனிதனின் சிறப்பை உயர்த்துகிறது; அதுவே அவன் கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடுகிறது.

நான்காம் பிரிவு: இன்னும் சிலர் அழகை வைத்துப் பெருமையடிக்கிறார்கள். இந்தத் துறையில் ஆண்களை விடப் பெண்களே பெரிதும் முன்னேறியிருக்கிறார்கள் என்று நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். இந்த அழகுணர்ச்சியின் அடிப்படையில் உருவாகும் உரையாடல்கள் மற்றவர்களின் மர்மங்களைச் சந்திக்குக் கொண்டு வருகின்றன.

இந்த ஆபத்தில் அன்னை ஆயிஷாவே சிக்கிக் கொண்டி ருக்கிறார். பெருமானாரிடம் ஒரு பெண் வந்தாள். அன்னை ஆயிஷா தம் கையால் ‘ அவள் குட்டையாக இருக்கிறாள்’ என்று சைகை செய்தார். உடனே பெருமானார் கண்டித்தார்கள். “நீ புறம் பேசி விட்டாய்!” என்று! இந்தச் சம்பவத் துணுக்கு ‘புறம் பேசாதே!’ எனும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.

ஐந்தாம் பிரிவு: பொருளை வைத்து வேறு சிலர் பெருமையடிக்கிறார்கள். அரசர்கள், வர்த்தகர்கள் முதலியோர் இந்தப் பிரிவில் சேருகிறார்கள். அரசர்கள் தம்மிடமுள்ள ‘கஜானா’வை வைத்துப் பெருமையடிக்கும் போது, வணிகர்கள் தம்மிடமுள்ள சரக்குகளை வைத்துப் பெருமையடிக் கிறார்கள். தாம் அணியும் துணிமணிகளை வைத்துப் பெருமையடிப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் தனித்து விளங்கும் எண்ணம் படைத்தவர்கள். ஏழைகளையும் வழிப்போக்கர்களையும் கண்டால் இவர்களுக்குப் பிடிக்காது. ஏனெனில் அவர்களிடம் ‘கஜனா’வுமில்லை; சரக்குமில்லை; உயர்ந்த துணிமணிகளுமில்லை. கிழிந்த சட்டையும் குழிவிழுந்த கண்களும் காய்ந்து போன உதடுகளுமாகக் காட்சியளிக்கும் ஏழையை அவர்கள் இழிவுக்கண் கொண்டு பார்ப்பார்கள்; இரக்கம் காட்ட மாட்டார்கள். “பிச்சைக்காரப் பயல்! நான் எண்ணினால் உன்னைப் போன்ற மனிதனை விலை கொடுத்து வாங்கி விடுவேன்!” என்று அனல் தெறிக்கப்
பேசுவார்கள்.

ஆ! என்ன பேச்சு இது! மனிதனை மனிதன் விலை கொடுத்து வாங்குவதா? பெருமானார் ஒழித்துக் கட்டிய மனித விற்பனைக்கு உயிர் கொடுப்பதா? இல்லை. விலை கொடுத்து வாங்குவது அவர்களின் எண்ணமல்ல. தம்மை உயர்வாகவும் ஏழையைத் தாழ்வாகவும் மதிக்கும் போது இத்தகைய பேச்சு வெளிவந்து விடுகிறது. அவ்வளவுதான்!

இந்தப் பெருமைக்காரர்கள் சில பொன்மொழிகளை அடிக்கடி உலகில் இறைக்கிறார்கள். உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போமா?

“போ வெளியே! உன் கால்பட்ட இடத்தை ‘சல வாத்து’ சொல்லிக் கழுவ வேண்டும்!”

புனிதத்தன்மை என்பது செல்வர்களுக்கு மட்டுமே உரித்தானதா? ஏழை என்ற ஒரே காரணத்தால் அவனது புனிதத்தன்மை மறைந்து போய் விடுமா? உலகை மாற்றிய உத்தமர்களில் பெரும்பாலோர் ஏழைகளாகத் தானே தம் வாழ்வுப் பயணத்தைத் துவக்கினார்கள்? “ஏழைமை என்பது எனக்குப் பெருமை கொடுக்கிறது” என்று பெருமானாரே கூறியிருக்கிறார்களே!

இது இரண்டாம் பொன்மொழி: “உன்னை யார் மதிக்கிறார்கள்? நீ ஓர் ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் தொகை, எனக்கு ஒரே ஒரு நாளைக்குப் போதாது!”

சிக்கனத்தின் சிறப்பை உணராததால் ஏற்படும் வேற்றுமை இது. விரயம் செய்கிறவர்களை மார்க்கம் எதிர்க்கிறது என்னும் உண்மை இவர்களுக்குத் தெரியாதா?

”நீ ஓர் ஏழை; பிச்சைக்காரன்; போதிய வருமானம் இல்லாதவன். என்னிடம் வந்து விவாதம் செய்கிறாயே, என்ன துணிச்சல் உனக்கு!”

செல்வமும் வறுமையும் இரண்டு சூழல்கள். இவ்விரண்டிலும் நன்மையும் தீமையும் கலந்திருக்கின்றன. ஆத்மீகத்தில் முன்னேறிய ஏழைகளைப் போல், ஆத்மீகத்தில் முன்னேறிய பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஆத்மீகத்திற்கு ஒளி கொடுத்த பெருந்தகைகளில் எத்தனையோ செல்வர்கள் தோன்றியிருக்கிறார்கள். நபிமார்கள், நபித் தோழர்கள் சட்ட நிபுணர்கள், வேத வியாக்கியானிகள் முதலியோரில் எத்தனையோ செல்வர்கள் காணப் படுகிறார்கள்.

எனவே இவ்விரு சூழல்களில் நம்மால் எதையும் இழித்துக் கூற முடியாது. ஒன்றை ஒளி என்றால், மற்றொன்றை இருள் என்று சொல்ல வேண்டும். ஒளி மட்டுமின்றி, இருளும் மனித வாழ்வுக்குப் பயன்படத்தான் செய்கிறது.

செல்வம் பெற்றவர்கள் மட்டும் பெருமையடிப்பதற்கு என்ன இருக்கிறது? அவர்கள்தம் செல்வத்தை மார்க்கத்தின் கட்டளைப்படி புனித வழிக்கும் ஆக்க வேலைக்கும் செலவிட்டால் அவர்கள் பெருமைக்குரியவர்கள். மக்கள் அவர்களைப் பெருமைப்படுத்துவார்கள். தமக்குத் தாமாகப் பெருமையடித்துக் கொள்வதும் ஏழைகளை இழித்துரைப்பதும் அறிவுடைமையல்ல. ஏனெனில் இவ் விரண்டும் நீடித்து நிற்பவையல்ல. இந்த மண்ணகத்தில் ஏழைகள் பணக்காரர்களாகவதும் பணக்காரர்கள் ஏழைகளாவதும் சாதாரண சம்பவங்கள்.

எனவே, இப்போது பெருமையடிப்பவர்கள் நாளைக்கு முடிதுறக்கலாம்; அல்லது செல்வம் இழக்கலாம். இன்று வாடி வதங்கி நிற்கும் அந்த வறியவன் நாளை அரசனா கலாம்; அல்லது பணக்காரனாகலாம்; இதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இறைவனின் ஆற்றலைப் பற்றி நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை
என்று பொருள்.

ஆறாம் பிரிவு: இன்னும் சில வேளைகளில் வலிமையை வைத்துப் பெருமையடிக்கப் படுகிறது. பெரும்பான்மை இந்தப் பெருமை பலவீனர்களிடம் தான் காட்டப்படுகிறது.

இன்று மட்டுமின்றி, உலகம் தோன்றிய நாளிலிருந்து, அதில் மனிதன் வாழத் தொடுத்த நேரத்திலிருந்து இறைவன் எத்தனையோ செல்வங்களைக் கொடுத்திருக்கிறான். வற்றிப் போகாத அவனுடைய அருட் கொடைக்கு நம்மால் எப்படி வரம்பு காட்ட முடியும்! மலையைக் குடைந்து மனை அமைத்து வாழ்ந்த வலிமை வீரர்கள் பலர் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள்? இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டார்கள். அவர்களின் வலிமை அழிந்து போய் விட்டது. பெருமைக்காரர்களே! தயவு செய்துஇதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நீங்கள் பலவீனத்துடன் பிறந்தீர்கள். ஒரு காலத்தில் அந்தப் பலவீனத்துடனேயே இறப்பீர்கள் அந்தக் கடைசிக் கட்டத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

ஏழாம் பிரிவு: மாணவர்களின் எண்ணிக்கை, உறவினர்களின் எண்ணிக்கை முதலியவற்றைச் சிலர் பெருமையடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். படை பலத்தை வைத்துப் பெருமையடிக்கும் அரசர்களும் இருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், இறைவனின் அருட் கொடைகளை வைத்துத்தான் அனைவரும் பெருமையடிக்கிறார்கள். சிறப்பம்சத்தை வைத்துப் பெருமையடிப்பது சாதாரணச் செயல். சிறப்பம்சம் என்று எண்ணிக் கொண்டு சிலர் எதை எதையோ வைத்துப் பெருமையடிக்கிறார்கள். குடிகாரர்கள் சிலர் தம்முடைய அனுபவம் பற்றி விரிவாகப் பேசுவதை நீங்கள் கேட்டதில்லையா?

குடிப்பது இகழப்படுகிறது; அது சிறப்பம்சமல்ல. என்றாலும் குடிக்கிறவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். போதையுடன் வந்திருக்கும் அவர்கள் தம் நிலையைப் பகிரங்கப்படுத்துவதில் இன்பமடைகிறார்கள். ஏனெனில் மதுபானம் உபயோகிப்பதை அவர்கள் ஒரு சாதனை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவனே! உன்னிடமிருந்து உதவியையும் அன்பையும் எதிர்பார்க்கிறோம். நீ அனைத்தையும் படைத்தவன்; அனைத்தையும் ஆள்பவன்; அனைத்தையும் அழிப்பவன். உன் சக்தி வரம்பிட முடியாதது. உன் படைப்புகள் அனைத்தையும் உன் ஆற்றலைப் பறை சாற்றுகின்றன. நீ சர்வ வலிமை யுள்ளவன்!

*

தொடர்புடைய பதிவு : ஆறுதல் தரும் ஆன்மீகப் பொக்கிஷம் (pdf)

கஸலும் நானும் 04 : நாகூர் ரூமி

கஸல் – 04
பாடியவர் குலாம் அலி
பாடலாரிரியர்: மஸ்ரூர் அன்வர்
குலாம் அலியோடு எங்களுக்கான உறவு ரொம்ப அலாதியானது. இவர் குரல் ஜக்ஜித் சிங் மாதிரியான கம்பீரக்குரல் அல்ல. பங்கஜ் உதாஸ் மாதிரியான வெள்ளியைச் சுண்டின மாதிரி கணீர்க்குரலல்ல. இவர் ஒரு தனி ரகம். இப்படித்தான் பாடுவார் என்று இவரைப்பற்றிச் சொல்லிவிடவே முடியாது.
எல்பி ரெகார்டில் வேறு வழியில்லாமல் ஒரு வட்டத்துக்குள் பாடியிருப்பார். ஆனால் கச்சேரி என்று வந்துவிட்டால் இவர் அவிழ்த்துவிட்ட காளை மாதிரி. ஒரே பாட்டுதான். ஆனால் கச்சேரிக்குக் கச்சேரி இவர் அதில் செய்யும் நகாசு வேலைகள், தாவல்கள் அற்புதமானவை. ஆன்மாவை நெகிழ வைப்பவை.
அடிப்படை மெட்டு அப்படியே இருக்கும். ஆனால் இவர் அதில் சும்மா சிலம்பமெடுத்து விளையாடுவார். வேண்டுமானல் ’ஹங்காமா ஹை க்யூன்’ என்ற பாடலை இரண்டு வேறுவேறு கான்சர்ட்டுகளில் இவர் பாடுவதைக் கேட்டுப்பாருங்கள். நான் சொல்வதன் உண்மை புரியும்.
குலாம் அலி என்றால் எனக்கும் ஆபிதீனுக்கும் மட்டுமல்ல, மர்ஹூம் ஜஃபருல்லாஹ் நானாவுக்கும் உயிர். நள்ளிரவில் நாகூர் நிஜாம் நானாவின் கேசட் செண்டரின் ஸ்பீக்கரில் ’ஜின்கெ ஹோண்டோன்’ என்ற குலாம் அலியின் பாடலைக்கேட்டுவிட்டு ஜஃபருல்லாஹ் நானா அழுதார். (எனக்காவது கொஞ்சம் உர்து தெரியும். உர்து என்று ஒரு மொழி இருப்பதே ஜஃபருல்லாஹ் நானாவுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது.)
அழும்படியாக அந்தப் பாட்டில் ஏதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜஃபருல்லாஹ் நானா அழுதார். நான் அப்போது உடனிருந்தேன். எனவே கஜலைப்பொறுத்தவரை அது எங்கள் மூவரின் ஆன்மாவோடு தொடர்பு கொண்டது. அதிலும் குலாம் அலி எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்.
நிகாஹ் படத்தில் வரும் ’சுப்கே சுப்கே ராத் தின்’ என்ற பாடல் உலகப்புகழ் பெற்றது. ஆனால் அதில் உண்மையான குலாம் அலியை தரிசிக்க முடியாது.
எல்பி ரெகார்டில் அவர் வாமனன். கச்சேரியில்தான் அவரது விஸ்வரூபம் தெரியும்! யாராவது விசிலடித்தால் கடுப்பாகிவிடுவார்! (அந்த லிங்க்கைத்தான் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்).
ஆள் கொஞ்சம் லொள்ளுதான்! பாகிஸ்தான்காரரான இவர் இந்தியாவுக்கு வந்தபோது ஒரு பத்திரிக்கை இவரைப் பேட்டி எடுத்தது.
இங்கே ஜக்ஜித் சிங், பங்கஜ் உதாஸ், அனூப் ஜலோட்டா போன்றோர் கஸல் பாடுகிறார்களே அவர்களைப்பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்டபோது, ‘அவர்களெல்லாம் நன்றாகத்தான் பாடுகிறார்கள். ஆனால் கஸல் என்பது வேறு’ (கஸல் அவுர் குச் சீஸ் ஹை) என்றார்! ஆனால் அப்படிச் சொல்வதற்குரிய தகுதி உள்ளவர்தான்!
ஒருமுறை முந்தயை இசைஞானியும் இன்றையை ’நெகிழ்வு’மான (’லூஸ்’ என்பதன் மேலோட்டமான தமிழாக்கம்!) இளையராஜா பவ்யமாக குலாம் அலியிடம் கேட்ட ஒரு வேண்டுகோளை (உங்களைப் புகழ்ந்து பேசவா அல்லது பாடவா என்று கேட்டிருக்கலாம்) குலாம் அலி சட்டென்று புறக்கணித்தார்! சரி பாடலுக்குள் செல்வோமா?
தொகையறா
தில் கி ச்சோட்டோன் நெ கபீ / சேன் ஸே ரெஹ்னெ ந தியா
இதயத்தின் காயங்கள் (எனை) எப்போதுமே / அமைதியில் இருக்க விடவில்லை
ஜப் ச்சலீ சர்த் ஹவா / மேனெ துஜெ யாத் கியா
எப்போதெல்லாம் குளிர்காற்று வீசியதோ / அப்போதெல்லாம் உன் நினைவு வந்தது!
இஸ்கெ ரோனா நஹீ க்யூன் தும்னெ கியா தில் பர்பாத்
நீ ஏன் (என்) இதயத்தைக்கொன்றாய் என்பதால் நான் அழவில்லை
இஸ்கா கம் ஹை கெ பஹுத் தேர் மெ பர்பாத் கியா
ரொம்ப தாமதமாகக்கொன்றிருக்கிறாய் என்பதுதான் வருத்தமே!
பல்லவி
ஹம் கொ கிஸ்கெ கம்னெ மாரா / யாருடைய துக்கம் என்னைக் கொன்றது?
எ கஹானீ பிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
கிஸ்னெ தோடா தில் ஹமாரா / யார் என் இதயத்தை உடைத்தது?
எ கஹானீ பிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
தில்கெ லுட்னே கா சபப் பூச்சோ ந சப்கே சாம்னே
இதயம் திருடப்பட்ட காரணத்தை எல்லாருக்கும் முன் வைத்துக்கேட்காதே
நாம் ஆயேகா தும்ஹாரா எ கஹானீ ஃபிர் சஹீ
உன் பெயர் வந்துவிடும், அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
நஃப்ரதோன்கி தீரு காகர் தோஸ்தோன் கி ஷெஹ்ர் மெ
நண்பர்களின் நகரத்தில் வெறுப்பின் அம்புகளை வாங்கிக்கொண்டு
ஹம்னெ கிஸ்கிஸ் கோ புகாரா / நான் யார் யாரையெல்லாமோ அழைத்தேன்
எ கஹானி ஃபிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
க்யா பதாயேன் ப்யார் கி பாஸி வஃபா கி ராஹ் மேன் / நம்பிக்கையின் பாதையில் காதல் விளையாட்டு பற்றி நான் (உனக்கு) என்ன சொல்வேன்
கோன் ஜீத்தா கோன் ஹாரா எ கஹானி ஃபிர் சஹீ / யார் வென்றார், யார் தோற்றார் அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்

பாடலுக்கான இணைப்பு:
https://www.youtube.com/watch?v=VqZIkfVptHg

*

**

nagoreumi - fb1
நன்றி : நாகூர் ரூமி

கஸலும் நானும் 02-03 : நாகூர் ரூமி

nagoreumi - fb1

கஸல் – 02
பாடல்: பூலோங்கி தரஹ்
கவிஞர்: குல்ஸார்
பாடியவர்: ஜக்ஜித் சிங்
பூலோங்கி தரஹ் லப் கோலு கபீ
பூவைப்போல இதழ்களை விரி எப்போதும்
குஷ்பூ கி ஸூபான் மெ போலு கபீ
நறுமணத்தில் மொழியிலேயே பேசு எப்போதும்
நான் மிகவும் ரசித்துக் கேட்கின்ற கஸல்களில் இதுவும் ஒன்று. ஜக்ஜித் சிங் தன் தங்கக்குரலில் பாடியது. பாடலாசிரியர் குல்ஸார்.
இந்த ஒரு பாடலுக்காக அவருக்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுவும் பல்லவியாய் இருக்கும் அந்த ஆரம்ப இரண்டு வரிகளுக்கு.
இன்றைக்கு அரசியலிலும் அதிராகரத்திலும் இருக்கும் பல வாய்கள் பன்றிகளைப்போல பேசிக்கொண்டுள்ளன. ஆனால் பூவைப்போல உன் இதழ்களை விரி என்கிறது பாடலின் முதல் வரி.
எனக்கு ஒரு நபிமொழி நினைவுக்கு வருகிறது. இதைமட்டும் காப்பாற்றிக்கொள்பவருக்கு நிச்சயம் சொர்க்கம்தான் என்று சொல்லிப் பெருமானார் தன் நாக்கை வெளியில் நீட்டிக்காட்டினார்களாம்.
ஏனெனில் பேச்சினால் ஒருவரைக் கொல்லலாம். அல்லது வாழவைக்கலாம்.
தன் இரண்டு தொடைகளுக்கு நடுவில் உள்ளதையும், இரண்டு இதழ்களுக்கு நடுவில் உள்ளதையும் காப்பாற்றிக்கொள்பவர்க்கு சுவனம் உண்டு என்று சொன்ன நபிமொழியும் உண்டு.
தொடைகளை விரித்தே பழக்கப்பட்டிருந்தால் இது கொஞ்சம் கஷ்டம்தான்!
இந்த கஸலின் முதல் இரண்டு வரிகளை நான் எனக்கான உபதேசமாகவே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் கடந்த காலத்தில் நானும் என் வாயால் பலரைக் காயப்படுத்தியிருக்கிறேன்.
திறமை என்ற பெயரில். கிண்டல் என்ற பெயரில். பேச்சுத்திறன் என்ற பெயரில். பதிலுக்கு பதில் என்ற பெயரில். இன்னும் என்னென்னவோ பெயரில்.
என்னால் காயப்பட்டவர்கள் யார் யார் என்று என்னால் பட்டியல்போடக்கூட முடியாது. நான் என் கடந்த கால நாக்குக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறேன். இதைப்படிக்கும் யாராவது ஒருவர், நண்பர் அல்லது அவரது உறவினர் யாரும் என்னால் கடந்த காலத்தில் காயப்பட்டிருப்பார்களேயானால் நான் அவர்களிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
நீ என்ன இவ்வளவு குள்ளமா இருக்கே, இவ்வளவு கருப்பா இருக்கே என்பது போன்ற வார்த்தைகள்கூட வாயால் நிகழ்த்தப்படும் வன்முறைதான். அப்படிப்பட்ட வன்முறைகளுக்கு இப்பாடல் வரிகள் (உணர்ந்து பின்பற்றினால்) ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றன. மிக அழகாக.
பூலோங்கி தரஹ் லப் கோலு கபீ
பூவைப்போல இதழ்களை விரி எப்போதும்
குஷ்பூ கி ஸூபான் மெ போலு கபீ
நறுமணத்தின் மொழியிலேயே பேசு எப்போதும்
அல்ஃபாஸ் ஃபரக்தா ரெஹ்தாஹெ
வார்த்தைகள் வேறுபட்டுக்கொண்டே உள்ளன
ஆவாஸ் ஹமாரி தோலு கபீ
(எனவே) நம் குரலை (நாம்) எடைபோட வேண்டியுள்ளது
(என்ன பேசவேண்டும் என்று யோசித்துப் பின் பேசவேண்டியுள்ளது)
கிடுகி மெ கட்டி ஹை சப் ராத்தேன்
ஜன்னலோடு நின்றுவிட்டது இரவு முழுவதும்
குச் சௌரஸ் அவர் குச் போலு கபீ
சமயத்தில் கொஞ்சம் சதுரமாகவும், சமயத்தில் கொஞ்சம் வட்டமாகவும்
(இருள் பல வடிவங்களை எடுக்கிறது, சொற்களைப்போலவே என்பது குறிப்பு)
எ தில் பி தோஸ்து ஜமீ(ன்) கி தராஹ்
இந்த இதயம்கூட பூமியுடைய நண்பன்தான்
ஹோ ஜாதாஹெ டாவான் டோலு கபீ
(எனவே பூமியைப்போலவே) அதுவும் அசைந்தாடுகிறது
பூலோங்கி தரஹ் லப் கோலு கபீ
பூவைப்போல இதழ்களை விரி எப்போதும்
குஷ்பூ கி ஸூபான் மெ போலு கபீ
நறுமணத்தில் மொழியிலேயே பேசு எப்போதும்
குறிப்பு: இந்தப்பாடலுக்கான காணொலியில் வரும் பெண் ரொம்ப அழகு. தமிழ்ப்பெண்ணைப்போலவே இருக்கிறார்!

பாடலுக்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=px2-iWwdTTI

*


கஸலும் நானும் – நாகூர் ரூமி
*
கஸல் – 03
நான் கஸல்களுக்கு விளக்கவுரை போல ஏதோ எழுதுவதைப் பார்த்து தூண்டப்பட்ட என் சகோதரர் நஹ்வி அவர்கள் பங்கஜ் உதாஸின் இந்த கஜலை அனுப்பியிருந்தார். நான் விளக்க வேண்டும் என்பதற்காக அல்ல. சும்மா அனுப்பியிருந்தார்.
அந்த கஜல் இறப்பைப் பற்றியது. எனவே உடனே அது என்னையும் பற்றிக்கொண்டது.
இனி வாழும் காலம் எவ்வளவென்று எனக்குத் தெரியாது (யாருக்குமே). ஆனால் இனிமேலாவது இறைப்பொருத்தத்தை சம்பாதிக்கும்படி வாழ்ந்துவிடவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உள்ளது. அதற்கான செயல்பாடுகளும்தான்!
சரி, இந்த கஜலையே தமிழாக்கம் செய்யலாம் என்று நினைத்தேன்.
நான் உர்து அதிகம் தெரிந்தவன் அல்ல. ஆனால் உர்துமீது காதல் கொண்டவன்.
அந்தக்காலமாக இருந்தால் ஒரு ஆசிரியரிடம் அல்லது உர்து நன்றாகத் தெரிந்த அறிஞரிடம் கேட்கவேண்டும். அல்லது அகராதிகளைப் பார்க்க வேண்டும்.
ஆனால் இந்த இணைய யுகத்தில் அர்த்தத்தோடு இந்தப்பாடலைக்கொடு என்று கேட்டுவிட்டால் பல தளங்களிலிலிருந்து தகவல்கள் கொட்டும்.
ஆனால் அவற்றிலிருந்து தேர்ந்தெடுப்பது ஒரு கலை. அதற்குப் பொறுமையும், மொழியின் மீது உண்மையான ஆர்வமும் வேண்டும்.
நான் ரேக்தா என்ற அகராதியைப் பார்ப்பேன் (https://www.rekhtadictionary.com/). ரொம்ப அருமையான அகராதி அது.
ஒரு சொல்லுக்குக் கீழே அதன் அர்த்தம் கொடுப்பது மட்டுமின்றி, பக்கவாட்டில் உர்துவில் பல வாங்கியங்களை விளக்கமாகக் கொடுக்கும். அது எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஹிந்தியில் சொல்லை ‘காப்பி’ செய்து போட்டுப்பார்த்தாலும் அதே அர்த்தம் வருகிறதா என்று பரிசோதிக்கவேண்டும். ஏனெனில் பேச்சு வழக்கு மொழியில் உர்துக்கும் ஹிந்திக்கும் பெரிதான வேறுபாடு ஒன்றுமில்லை.
எனக்கு ஹிந்தி எழுத்துக்கள் கொஞ்சம் பரிச்சயமுண்டு (இளமையில் நான் டெல்லி சென்றபோது பேருந்துகளின் எண்களைக்கண்டுபிடிக்க கஷ்டப்பட்டு நான் கற்றுக்கொண்டது அது!)
கொடுக்கப்படும் அர்த்தம் பாடலின் அர்த்தத்தோடு சரியாக ஒத்து வருகிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
ஒரு மிக எளிமையான பாடலுக்குக்கூட இப்படியெல்லாம் கஷ்டப்பட்டால்தான் அர்த்தம் பிடிபடும்! சரி, பாடலுக்குள் செல்வோமா?!
நான் கொடுக்கும் அர்த்தங்கள் தவறாக இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
தொகையறா
மர் மர் கெ முசாஃபிர்னெ பசாயா ஹை துஜெ
கடுமையான முயற்சிக்குப்பின் (இறப்பு என்ற) பயணி உன்னிடத்தில் வந்துவிட்டான்
ருஹ் சப் ஸெ பிராகெ மூ திகாயா ஹை துஜெ
பலரிடம் காட்டாத (இறப்பின்) முகத்தை உன்னிடம் காட்டிவிட்டான்
க்யூன் கர்னா லிபட் கெ சோவூன் துஜ்ஸெ ஏ கப்ர்
நான் ஏன் போர்த்திக்கொண்டு (கஃபனிடப்பட்டு) உன்னிடம் உறங்கவேண்டும் மண்ணறையே?!
ஜிந்தகீ தேகே மெனெ பாயா ஹை துஜே
என் வாழ்வைக்கொடுத்து உன்னை நான் கண்டுகொண்டேன்
பல்லவி 1
ஜிந்தகினெ மௌத் செ பர்தா கியா
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
வாழ்வானது இறப்பை மறைத்துவிட்டது
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்!
உன்கொ ஆனாத்தா, ந ஆயே அவுர் யஹான்
இங்கே வந்திருக்கவேண்டும் இறப்பு , ஆனால் வரவில்லை
மர்னெ வாலா ராஸ்தா தேகா கியா
இறப்பின் விளிம்பில் இருப்பவர் அதன் சாலையைப் பார்த்திருக்கிறார்
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
ஜிந்தகினெ மௌத் செ பர்தா கியா
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்
வாழ்வானது இறப்பை மறைத்துவிட்டது
கோயி பீ மெஹ்ஃபில் ஹோ ஜீலக்தா நஹீ
சபை எதுவாக இருந்தாலும் இனி விருப்பமாக / சந்தோஷமாக இருக்க முடியாது
உஸ்கி யாதோனெ ஹமெ தன்ஹா கியா
(இறப்பபைப் பற்றிய) அந்த நினைவுகளில் நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன்
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்
த்தாவு ஸே கித்னா பிச்சட் நே கா மலா
பிரிந்துதான் ஆகவேண்டிய சூழ்நிலை
ஜாதே ஜாதே வோ முஜே தேக்கா கியா
போய்க்கொண்டே அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள்
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்
கஃபன் – இறந்த முஸ்லிம் உடலை மூடும் தையலில்லா வெள்ளைத்துணி

*

பாடலுக்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=6MfI9ZKcaQo

நன்றி : நாகூர் ருமி

கஸலும் நானும் – 01 : நாகூர் ரூமி

nagoreumi - fb1

நான் பிஏ ஆங்கில இலக்கியம் படித்த காலத்திலிருந்தே, ஏன் பள்ளிக்கூட நாட்களிலிலிருந்தே எனக்கு இசை கேட்பதில் விருப்பம் அதிகம். யாருக்குத்தான் இருக்காது!
குறிப்பாக அந்தக்காலத்தில் வந்த ஹிந்திப்படப்பாடல்கள். கிஷோர் குமார், முஹமம்து ரஃபி, லதா, ஆஷா இப்படி.
பள்ளிக்கூட நாட்களிலேயே நாகப்பட்டினம் பாண்டியன் தியேட்டரில் ஹிந்திப்படம் பார்க்கச்செல்வோம். (இப்போது பாண்டியன் தியேட்டர் சென்னையில் உள்ள தியேட்டர்களைவிட சிறப்பாக உள்ளது)!
பின்னர் அப்படியே அந்த ஆர்வம் மெல்ல கஸலுக்குத்திரும்பியது. கவ்வாலியில் எனக்கு ஆர்வமேற்படவில்லை.
ஜக்ஜித் சிங், சித்ரா சிங், குலாம் அலி,
மெஹ்தி ஹஸன் (கொஞ்சம்),
நுஸ்ரத் ஃபதே அலிகான் (கொஞ்சம்)
என என் விருப்பம் திரும்பியது.
ஆனால் நண்பர் ஆபிதீன் இதில் இன்னும் ஒருபடி மேல். பர்வீன் சுல்தானாவின் ’ஆ’ என்ற ஆலாபனையையே அவரால் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்க முடியும்.
அவர் ‘இசைபட’ வாழ்பவர்!
நான் இசை தொட வாழ்பவன்!
என்னாலும் வெறும் கருவிகளின் இசையை மட்டும் கேட்டுக்கொண்டிருக்க முடியும்தான். குறிப்பாக ஷிவ்குமார் ஷர்மாவின் சந்தூர், அல்லாஹ் ரக்காவின் தப்லா, ரவிஷங்கரின் சித்தார், எல் ஷங்கரின் வயலின், அலி அக்பர்கானின் சரோத் இப்படி.
என் குரலில் ஒரு பெண் தன்மை இருப்பதாக பலர் கருதினார்கள். ஆனால் இந்தக்குரலை வைத்துக்கொண்டு நான் ஒருகாலத்தில் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீதவித்வான் மர்ஹூம் எஸ்.எம்.ஏ. காதர் மாமா – என் நண்பன் நூர்சாதிக்கின் வாப்பா -– அவர்களிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்கள்.
ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்றுமணி நேரம்! வர்ணம் என்ற பாடம் வரை வந்தேன். அடுத்தது ராகம்தான். ஆனால் அதற்குள் எனக்கு வேலை கிடைத்து ஆம்பூருக்குச் சென்றுவிட்டேன்! நல்லவேளை கர்நாடக சங்கீதம் பிழைத்தது!
நிற்க. கஸலுக்கு வருவோம். நான் பிஏ ஆங்கில இலக்கியம் படித்த காலத்தில் தமிழுக்கு பதிலாக உர்து எடுத்தேன். அதனால் நல்ல உர்துவைப் புரிந்துகொள்ளவும் எழுதவும் என்னால் முடியும்.
அதற்கு முக்கியமான காரணம் உர்துத்துறைத்தலைவர், என் பேராசிரியர், கவிஞர் ஹஸ்ரத் சுஹ்ரவர்தி அவர்கள். ஆனால் உர்து பேசமட்டும் நான் பழகவில்லை.
நல்ல உர்து என்றால் என்ன என்று கேட்டால் இப்படிச் சொல்லலாம். கஸல் பாடல்களில் உள்ள உர்து! ஆமாம். அப்படி ஒரு பாடலைத்தான் நான் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.
ஜக்ஜித் சிங் பாடிய ஒரு காதல் பாடல்.
கஸலின் அடிப்படைக்கரு எப்போதுமே காதல்தான்.
ஆப் கோ தேக் கர் தேக்தா ரெஹ்கயா
என்ற காதல் பாடல். கேட்கலாமா?
கடைசியில் லிங்க் கொடுத்துள்ளேன். முடிந்தால் ஹெட்ஃபோன், அல்லது இயர்ஃபோன் போட்டு கேட்டுப்பாருங்கள்.
கஸல் ஒன்று
==========
ஆப் கோ தேக் கர் தேக்தா ரெஹ்கயா
உன்னைப்பார்த்தேன், அப்படியே பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன்
க்யா கஹூன், அவ்ர் கெஹ்னெ கொ க்யா ரெஹ்கயா
என்ன சொல்வேன்? அதோடு, சொல்வதற்கு என்ன பாக்கி இருந்தது (ஒன்றுமில்லை)
ஆதே ஆதே மேரா நாம்ஸா ரெஹ்கயா
வந்துவிட்டது, வந்துவிட்டது,என் பெயர் மட்டும்தான் பாக்கி (அவளின் உதடுகள் உச்சரிக்க)
உஸ்கெ ஹோண்டோம்பெ குச் காம்ப்தா ரெஹ்கயா
(ஆனால்) அவளின் உதடுகளில் ஒரு முணுமுணுப்பு /நடுக்கம் மட்டும்தான் இருந்தது
ஓ மெரே சாம்னே ஹீ கயா அவ்ர் மெ
ராஸ்தே கி தராஹ் தேக்தா ரெஹ்கயா
அவள் என் அருகில்தான் இருந்தாள்
ஆனால் நானோ வீதியையே பார்த்துக்கொண்டிருந்தேன்
ஜூட் வாலே கஹீன் ஸே கஹீன் படுகயே
அவ்ர் மெ த்தாஹ் கெ சச் போல்தா ரெஹ்கயா
பொய் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்
நான் மட்டுமே உண்மை சொல்ல இருந்துகொண்டிருக்கிறேன்
ஆந்தியோன் கெ இராதே அச்சே ந த்தே
அவுர் ஏ தியா கைசெ ஜல்தா ஹுவா ரெஹ்கயா
புயல்களின் நோக்கம் நல்லதாக இருக்கவில்லை (காதலுக்கான எதிர்ப்பை புயல் என்று கவிஞர் குறிக்கிறார்)
ஆனால் இந்த (காதல்) விளக்கு மட்டும் எப்படி எரிந்துகொண்டே இருக்கிறது!
இந்தப்பாடலில் விளக்கு என்பதற்கு ’தியா’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
’தியா’ என்றால் ‘கொடுத்தாச்சு’ என்று பொருள் வரும்.
நான் முதலில் அது ஒரு வினைச்சொல் என்று நினைத்து கஸலின் அர்த்தம் பிடிபடாமல் குழம்பினேன். ஆனால் ‘எரிகிறது’ (ஜல்தா) என்ற சொல்லோடு தொடர்புபடுத்திப் பார்த்தேன்.
நிச்சயம் இது கொடுத்தல் என்ற பொருளைத்தரும் ‘தியா’ அல்ல. ஒருவேளை இது ஒரு பெயர்ச்சொல்லாக இருக்கலாம் என்று தோன்றியது.
அகராதியைப் பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். ’தியா’ என்ற பெயர்ச்சொல்லுக்கு அர்த்தம் ’அகல்விளக்கு’ என்று கொடுக்கப்பட்டிருந்தது!

*
Aap ko dekh kar dekhta rah gaya LIVE HQ Aziz Qaisi & Waseem Barelvi Jagjit Singh

**

நன்றி : நாகூர் ருமி

« Older entries