பொறாமை பற்றி ஒரு இறுதி போஸ்ட்! – பாதசாரி

“பொறாமையிலிருந்து விலகியிருங்கள். ஏனென்றால், நெருப்பு விறகுகளை எரித்துவிடுவதைப் போல, பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது” என்பார்கள் ரசூலுல்லாஹ். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்று இணையத்தைத் தேடினால் இந்த ’ஹதீஸ்’ பலமானதா பலவீனமானதா என்று தொப்பிவாப்பாக்கள் சண்டயிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓடிவந்து விட்டேன்.

இந்த ஆமை பற்றி எனக்குப் பிடித்த எழுத்தாளரான பாதசாரி அவர்கள் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது எழுதியவற்றை சேகரித்து வைத்திருந்தேன் – கொஞ்சம் திருந்துவோமே என்று. எப்போதாவது அவற்றை எடுத்துப் படிப்பது வழக்கம் (முடியவில்லை :-)) . ’படம்’ இன்றோடு கடைசி என்று அவர் போட்டிருந்ததால் இங்கே பகிர்கிறேன். நன்றி. – AB


பொறாமை என்பது புற்றுநோய் மாதிரி..
முளையிலேயே கிள்ளி எறிந்தால் தப்பிக்கலாம்..

புற்று செல்கள் அதிவிரைவாகப் பல உறுப்புகளுக்கும் பரவுவது (metastases ) போல , ஒருவர்மீது கொள்ளும் பொறாமை , ஊரார் அனைவர் மீதும் பற்றி உனக்குள் துயரமாகும் . புற்று உள்ளிருந்து தொடங்குவது போல பொறாமையும் உனக்குள்ளிருந்தே புறப்படுகிறது.. வெளித்தூண்டுதல் ஏதுமில்லை !

உண்மையில் உன் பொறாமை பற்பலர் மீதூரினும் ,
காரணம் ஒன்றே தான்..

நீ ‘ஒருவர் ‘ மீது தான் பொறாமை கொள்கிறாய் !

அமைதியின்மைக்கு முழுமுதற்காரணம் பொறாமை தான்..

இந்த பொறாமை என்பதும்
ஆசையின் ஒரு மாறுவேடம் தான் !

***

” ஒருவர் மீதுள்ள பொறாமையை நீங்கள் எப்படித் தணித்துக் கொள்கிறீர்கள் ? “

” அவரை வாயாற வாழ்த்தித் தான் “
*
மருள் சூழ் உலகை எதிர்கொள்ள நமக்கு அருள் சூழ் இதயமே வழி.

யார் மீதும் உன் வருத்தத்தை அல்லது வெறுப்பை நீ நீடித்துப் பேணினால் , தீராமல் வருந்துவது நீயாகவே இருக்கக் கூடும்.

***

எல்லாமே நிலையற்றவை (impermanence) என உணரும் போதினிலே எண்ணங்களும் நிலையற்றவை தான் என – அவை தானே குறையும் என்கிறது புத்தம்.

எண்ணம் எழும் போது , ‘ ஓ..! இன்னொரு எண்ணமா ..நடக்கட்டும் நடக்கட்டும் ..! ‘ என நகர்ந்து விட வேண்டியது தான் !

***

ஆசைகளுக்கு பல குணம். இதில் பொறாமையின் ஆசை விசித்திரமானது ! எட்டுத் திக்கும் பாய்ந்து , எதிராளியால் அன்றி , தனக்குத் தானே ஆறாத உட்காயம் பெறுவது !
( சொந்த செலவில் சூனியம் எனும் இக்காலக் கூற்று இதற்கும் பொருந்தும் ! )

வள்ளுவ ஆசானே !
யாதனின் யாதனின் யாதனினும் நீங்கவியலா இது ஒன்றின் நோதலே எங்களுக்கு தலையாய துன்பம் , இறுதியாக கடைசி மனிதன் இருக்கும் வரை போலும் !

***

துள்ளித் திரியும் சிறார் மீதிலும் இருந்து , தள்ளாடும் முதியோர் மீது வரை உன் பொறாமை பாய்கிறது !

***
போட்டி மனப்பான்மையை மூன்று வேளையும் உண்டுகொண்டு , இயலாமைத் தாழ்வுணர்ச்சியை அருந்தியபடி , சுயபிம்ப ஒப்பீட்டுத் தீனியை சதா கொறித்துக் கொண்டு உறக்கமின்றி மனம் படும் பாடு தான் மனிதனுக்குப் பொறாமை .

காரணத்திற்கெல்லாம் அடிபணிந்து விடுமா இந்த மூடுபனி மனம் ?

எக் காரணம் கொண்டும் இனி எதற்கும் காரணத்தைத் தேடி , அமைதியை இழக்கக் கூடாது.

காரணம் எதுவும் வாழ்வுக்கு
அர்த்தம் வழங்கி விடாது .

எல்லாக் காரணமும்
மனிதன் புரிந்து விடச்
சுலபமானவை அல்ல..

பிறன் மனதில் ஒரு துளியும் பொறாமை இருக்காது என்று நம்பித்தான் பழகுகிறோம். இது தான் இன்றைய வாழ்வைப் புரிதலில் இறுதி நம்பிக்கையாக இருக்க முடியும்.

பிறர் மீது வெறுப்பின் கசப்பை உமிழ உமிழ , தன்மீதும் வெறுப்பின் கசப்பு தனக்குள் சேகரமாகி தானே விழுங்க வேண்டியிருக்கும்.

ஆதி முதல் இன்றுவரை ,மனிதனின் மதிக்கத் தக்க சாகசம் என்பது அது பொறாமையிலிருந்து நீங்குவது தான்..

***

கடைசி(?) பதிவு :
பொறாமை பற்றி , திகட்டத் திகட்ட எக்கச்சக்கமாக ‘ போஸ்ட்’கள் போட்டாச்சு.. இனி நீ போடத் தேவையில்லை ‘ – என்றார் நாளும் என் நலம் நாடும் மேதமைமிகுந்த மேன்மையான என் நண்பர்.
‘ ஒரே ஒரு முத்தம்..கடைசி முத்தம்..இந்த ஒரு தடவை மட்டும்..’ – எனக் காதலியிடம் கெஞ்சும் காதலன் போல , மானசீகமாக அவரிடம் கெஞ்சி விட்டு , பொறாமை பற்றி ஒரு இறுதி போஸ்ட் :
‘என்னைப் பற்றி முழுசா , அவ்வளவு டீடெயிலா டீப்பா , ஏன் தெரிஞ்சுக்க விரும்பறீங்க , ஏன் பொண்ணு குடுக்கப் போறீங்களா ? ‘ – என்று கிண்டலாகக் கேட்டதற்கு ,
அவர் நேர்மையாகச் சொன்னார் :
” உங்க மேல பொறாமைப் படறதுக் காகத்தானுங்க..”
*
நன்றி : பாதசாரி

என்னையே நான் வியக்கும் வேளை – பாதசாரி

Padhasari viswanathan1அன்புள்ள பஷீர்,

கடிதம் எழுதி எவ்வளவு காலமாச்சு! முத்தம் கொடுத்து எவ்வளவு காலம் ஆச்சு என்று 60 வயதில் கணவன் மனைவியைக் கேட்பது மாதிரியிருந்தாலும், இப்படிக் கேட்டுக்கொண்டு தொடங்குவது செல்லமாக இருக்கிறது. என்னமும் பேசலாம் எனும் சுதந்திரத்தால் என்னமும் சொல்வேன். நீர் எதிரில் இருந்தால்கூட இப்படி என் பேனா துள்ளாது. கடவுள் கைபிடித்து ‘சொல்லுப்பா’ என்றால்கூட நான் ஒன்றிரண்டை விட்டுவிடுவேனாயிருக்கும். காணத கடவுளிடம் என்னமும் பேசலாமே மனசுக்குள்…

உங்கள் நண்பர் குழாமுக்கு முன்னே எனக்கு பெருங் கூச்சம் வந்து விட்டது. ஆனால் விடாது என்னோடு தொடர்பு கொள்கிறீர்கள்… நட்பு பேணுகிறீர்கள்.. நானோ ஒதுங்கி ஒளிபவன். எனக்கு வரலாற்று உணர்வு கிடையாது. சமூக அக்கறை கிடையாது. பழந்தமிழ் இலக்கியம் ஒன்றுகூடப் படித்ததில்லை. அன்று பழனியான் சொன்னமாதிரி உங்களுக்குத் தர என்னிடம் ஒன்றுமில்லை என்பதே அப்பட்ட உண்மையில்லையா! ஆனாலும் உங்களது நம்பிக்கைக்கு அடிப்படை என்னவென்றே புரியவில்லை… வெறும் அன்புதானே? நோக்கங்கள் அற்ற அன்பு… நான் மின் தகனமேடை ஏறும் வரை என் சுவாசத்தில் கலந்துவரும் அன்பு… இப்போதும் எதையாவது எழுது என்கிறீர்கள்.

மனைவி பணிநிமித்தம் சென்னையில். என் மகனுக்கு கடும் காய்ச்சல்.. தாயின் பிரிவு தாளாது? பக்கத்திலேயே உட்கார்ந்து பராமரிக்கிறேன். இன்று வெளியில் எங்கும் போகவில்லை.. என்னதான் தாயுமானவானக நான் உணர்ந்து செயல்பட்டாலும் தாயின் இடமே வேறு. பையனுக்கு காய்ச்சல் விட்டுவிட்டு வருகிறது. அவன் அருகில் அமர்ந்துதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தெருவில் சுற்றித் திரியும் ஒரு மனநிலை பிறழ்ந்தவரிடம் போய், உனக்குப் பிடித்த கண்ணதாசன் பாட்டொன்றைப் பாடேன் என்று கேட்பதுபோல, என்னிடம் எதையாவது – தோணுவதை – எழுதியனுப்புய்யா என்று கேட்கிறீர்கள்.. நீர் கேட்பது புரிந்து அவன் ரெண்டு வரியாவது ஞாபகத்திலிருந்து பாடுவானா, உத்திரவாதமில்லை.. எழுதிச் செல்லும் கை எப்போது ஓயும் என்று தெரியவில்லை. தாள்கள் முடிந்தவுடன் முடியலாம். முடிந்தவுடன் இந்தத் தாள்களிலிருந்து வரிகளில் பொறுக்கி நல்லதாக எடுத்து மனநிழலுக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வேறு வழியறியேன்.

போட்டியிலேயே பங்கெடுங்காத ஒருவனுக்கு உயரம் தாண்டுதலுக்கான முதல் பரிசு கிடைத்ததுபோல் எனக்கு ஓர் இலக்கியப் பரிசு கோவையில் மலையாளிகள் கொடுத்தார்கள். கூசிக்குறுகித் திருடன் போலப் போய் கவர்ந்து வந்தேன் சமீபத்தில், காசு கிடைத்தது என்பதாலேயே! கிடைத்த ஷீல்டை மகன் டி.விக்குப் கீழே ஷோகேஸில் வைத்து சந்தோஷப்பட்டான், பாவம்…! ‘ஆறுதல்’ பரிசாக நினைத்துக்கொள் என்றார் நண்பர். கவலைப்படுபவனுக்குத்தானே ‘ஆறுதல்’ எல்லாம். எனக்கெதற்கு? தினமும் காலையில் நான் கண்விழிப்பதே எனக்கு ஆறுதல் பரிசு. பன்னிரண்டு வருஷங்களாக சர்க்கரை வியாதியும் ஏழு வருஷங்களாக குருதிக் கொதிப்புமாக இருப்பவனுக்கு தூக்கத்திலேயே காலத்தை உறையச் செய்யும் சர்வ வல்லமை உண்டுங்காணும். காலையில் கண் திறந்தால் – ‘அட.. இன்று ஒரு நாள்’ பரிசாகக் கிடைக்கிறது! கண்விழித்தவுடன் யாருக்குக் கிடைக்கும் இந்த சந்தோஷப் பரிசு.. சரி அதை விடுவோம்.. ‘உட்கார்ந்து யோசிப்பானோ’ என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள்… என் மனம் உட்கார இடமேயில்லை ஐயா. கர்ப்பப்பையே இல்லாத மனசு. எதுவும் கருவாக உருவாக வழியே இல்லை. இப்போது தாளிலேயே தோன்றிக்கொண்டிருக்கிறது.

என் காரியங்கள் யாவும் வடிவேலுத்தன்மையோடு அமைவதே அதிகம். ஆனால் நீங்கள் என்னைக் கெட்டிக்காரன் என்று கருதிக்கொண்டிருக்கிறீர்கள். முன்னொரு காலத்தில் மாமல்லன் என்றொரு கூர்மதியோன் சொன்னார் – காசியை எழுதிய இவன் இனி ஒரு கதைகூட எழுதமாட்டான் என்று. தீர்க்கதரிசி இப்போது எங்கே, தன் கூர்மதியை எதற்காகச் செலவழித்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. கடைசியாகக் கோவையில் பார்த்தபோது, லாட்டரிச் சீட்டுகள் வாங்கி உடனடியாகப் பெரும் பணக்காரனாகும் கனவில் பேசிச் சென்றார். வடிவேலுத்தன்மையில் நான் எப்படி? நடிப்பில் மகா கலைஞன் அவன். நானும்தான்! என் மனத்திரையில் என்னால் எந்த வேஷத்திலும் நடிக்க முடியும். ‘எக்ஸ்க்யூஸ்மி.. அந்த குரங்கு பொம்மை என்ன விலை?’ என்று வடிவேலு ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பந்தாவாக கேட்பார். விற்பனையாளர் ‘ கண்ணாடி சார் அது!’ என்பார். நடைமுறையில் இந்த ஜோக் போல அமைந்துவிடும் என் காரியங்கள். எதையும் யாரிடமும், எந்த விளைவையும் பற்றிக் கவலைப்படாமல் உளறிக் கொட்டிவிடுவேன். மனிதர்களுக்கிடையில் ‘ரகசியமில்லாத மனிதனாக’த் திரியத்தான் ஆசை.. அப்படித் திரிந்து பெறுவதென்ன? இன்னல்கள்தான். விவஸ்தை கெட்டவன் என்று பட்டம். ஆனாலும் மனசிலே ஒன்றுமே வெச்சுக்காததில் உள்ள சுதந்திரம் ஆனந்தமானது. எனக்கு ஆபத்தானாலும் பரவாயில்லை… வெளிப்பட்ட பேச்சால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடங்கள் தோற்றுவிப்பது விவேகமான செயலில்லை என்று தெரிந்துதான் இருக்கிறேன்.

…….

peikarumbu-pathasari-10147

நூல் : பேய்க்கரும்பு

*

நன்றி : பாதசாரி (நா. விஸ்வநாதன்) , தமிழினி, சாதிக்