கடவுளைக் காப்பாற்றுங்கள்! – தென்கச்சி சுவாமிநாதன்

‘நண்பர்களே! வயதாகிவிட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள். பலபேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை!’ என்று தமாஷ் பண்ணும் நம்ம தென்கச்சியார், கடவுளைக் காப்பாற்றுங்கள் என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். தலைப்பிற்கு முன், ‘இயலாதுதான், இருந்தாலும்..’ என்று அடைப்புக்குறிக்குள் போட்டிருக்கலாம். பழசாக இருந்தாலும் ரசித்துப் படித்தேன்.
***
கடவுளைக் காப்பாற்றுங்கள்! – தென்கச்சி சுவாமிநாதன்
—————–
ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.
டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, “இதை உடனே வாங்கி வா!” என்றார். அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார். மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை . மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
“இது கிடைத்தாலும் பரவாயில்லை!” என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.
அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை .
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி… ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு- இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!
மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.)
சரி… இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.
ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!
ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
*
நன்றி : சக்தி விகடன் , தமிழ்நேசன்1981 & பூடகம்
*

தென்கச்சியாரை ஜெயிக்க முடியாது!

Thenkachi_Ko._Swaminathanமுந்தாநாள் பார்த்த வீடியோவில் பேராசிரியை பர்வீன் சுல்தானா சொன்னார் : தென்கச்சி சுவாமிநாதனை பேட்டி எடுத்த ஒருவன் , ‘இவரை யாராலும் ஜெயிக்க முடியாது’ என்றொரு குறிப்பு எழுதியிருக்கிறான். ‘அப்படியா, உங்களை ஜெயிக்கவே முடியாதா அய்யா? என்று பர்வீன் சுல்தானா கேட்டதற்கு, ‘அட, எப்பவுமே தோற்கத் தயாராக இருப்பவனை யாரால ஜெயிக்க முடியும் அம்மா?’ என்றாராம்!

இன்னொரு தமாஷூம் இருந்தது.

தென்கச்சியாரும் சுகி.சிவமும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘ எல்லாவற்றையும் விட்டுங்க, பெரிய விசயம்லாம் எதுவுமில்லே’ன்னு ஸாஃப்டா தென்கச்சியார் பேசுறாரு, எதையும் விடாதே.. அப்பதான் வெற்றி கிடைக்கும்னு நீங்க (சுகி.சிவம்) சொல்றீங்க. இப்ப யார் பேச்சை நான் கேக்குறது?’ என்று ஒரு பையன் கேட்டதற்கு தென்கச்சி சுவாமிநாதன் ஐயா எழுந்து பதில் சொன்னாராம்: ‘உன் இஷ்டம்தான். அமைதியா சந்தோஷமா இருக்கனும்னா என் பேச்சைக் கேளு; வாழ்க்கையில ஜெயிக்கனும்னா சுகி.சிவம் பேச்சைக் கேளு!’

இதிலிருந்து நான் தெரிந்துகொண்டதாக G+ல் எழுதினேன் : மண்டைகாயாம இருக்கனும்னா கிழ ப்ளஸ். பாயைப் பிறாண்டனும்னா ஃபேஸ்புக்🙂

சிவாஜி பாணியென்றாலும் பேரா. பர்வீன் சுல்தானாவின் சிறப்பான பேச்சை இங்கே கேட்கலாம் (30:41 to 32:40) :
https://www.youtube.com/watch?v=V9JDuqvqCB4

இங்கே இலவச தமிழ் ஆடியோ புத்தகங்கள் கிடைக்கும் (4.44 GB)

இலவசமென்றதும் என்ன வேகமாக ஓடி வருகிறீர்கள், என்னைப் போலவே! வாழ்க.  இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கும் வாரியார் சுவாமிகளின் மஹாபாரத உரை முதல்,  தென்கச்சி சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’, முனைவர் கு. ஞானசம்பந்தனின் ‘சிரிக்கலாம் வாங்க’, அறிஞர் அண்ணாவின் சுதந்திரம் (முஸ்லீம்கள் கவனிக்கவும் : இதில் இஸ்லாம் பற்றிய 80 கே.பி உரையும் அடங்கும்!), நடிகவேள் எம்.ஆர். ராதா, வைரமுத்து, திருச்சி கே.கல்யாணராமன், முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யர், டி.ஏ.ஜோஸப், சுகி.சிவம் மற்றும் பலரின் ‘ரிலாக்ஸ் ப்ளீஸ்’ உரைகள் கீழ்க்கண்ட சுட்டியில் கிடைக்கின்றன. PDF சென்ஷி மாதிரி MP3 சென்ஷியாக விளங்கும் எமது நண்பர் எம்.டி. மூர்த்திக்கும் எழில்மிகு கடற்கொள்ளைக்காரனுக்கும் நன்றி.

இங்கே சொடுக்கி டோரண்ட் கோப்பை இறக்குங்கள். சுட்டி வேலை செய்யாவிடில் வேறு காதுகளை வாங்கிக் கொள்ளுங்கள் 🙂

பொங்கல் வாழ்த்துகள், தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’யுடன்…

தலைவர்கள் வாழ்த்தியதை – குறிப்பாக ஜி.ராமகிருஷ்ணன் சொன்னதை – வழிமொழிந்து, ‘வெட்டுப்புலி’ நாவலின் ‘எழுபதுகள்’ பிரிவின் ஆரம்பத்தில் வருகிற இந்தப்பகுதியை தேர்வு செய்தவர் ‘அல்கூஸ் அறிஞர்’ சாதிக்பாய். நண்பர் தாஜூக்கு இவர் நெருக்கமானவர் என்பதுதான் பிரச்சனையே தவிர மற்றபடி ரொம்ப நல்ல பிள்ளை. தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்வதே அவர் பணி. வாழ்க. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! – ஆபிதீன்

***

அதான் பெரியாரு…! – – தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’யிலிருந்து…

periyar-line1…பெரியார் இறந்து விடுவார் என்பதை அவர் (லட்சுமண ரெட்டி) அதற்கு முன் எப்போதும் யோசித்ததில்லை. மணி நாயுடு சொன்ன தொனியினாலா அல்லது அவருடைய வயது திடீரென்று மூளைக்குள் அப்போதுதான் உறைத்ததா என்று சொல்லத் தெரியவில்லை. உலகநியதி அப்போதுதான் அவருக்கு எட்டியதுபோல இருந்தது. அவர் நிரந்தரமாக மனிதகுலம் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருப்பார், எல்லோருக்காகவும் அவர் ஒருவரே யோசித்துக்கொண்டிருப்பார் என்பதுபோல லட்சுமண ரெட்டியாருக்கு ஒரு மூடநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. நாளை முதல் நாமெல்லாம் என்ன செய்வது என்பது போல பதறினார். அதனால்தான் பெரியாரை உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். திடலுக்குப் போய்விட்டால் எந்தத் தகவலும் உடனுக்குடன் தெரிந்துவிடும் என்று விரைந்தார். பூக்கடையில் இறங்கி, பூந்தமல்லி சாலையில் செல்கிற ஏதோ ஒரு பஸ்ஸைப்பிடித்து தினத்தந்தி ஆபீஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கினார். போன செப்டம்பர் மாதம் அவருடைய பிறந்த நாளுக்கு வந்து போனதோடு சரி. தி.மு.கவில் இருந்து பிரிந்தபின்பு  எம்.ஜி.ஆரும் வந்திருந்தார். இந்த வயசில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று அவருடைய படத்துக்குத் தலைப்பு வைத்திருப்பதாகச் சற்று கேலியாக பேசிக்கொண்டிருந்த தோழர்களும் அவரை நேரில் பார்த்தபோது வாலிபன் என்று சொல்வது அத்தனை பெரிய குற்றமில்லை என்று கருத்தை மாற்றிக்கொண்டார்கள். ‘நல்ல நேரம்’னு தலைப்பு வைக்கிறாரே..அதுதான்யா புடிக்கல’ என வேறு குறையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்குக் கருணாநிதியை விட்டுப் பிரிந்து வந்த கோபமும் இருந்தது.

தி.மு.கவுக்காக எம்.ஜி.ஆரும் பாடுபட்டுத்தான் இருந்தார். கருப்பு வேட்டி, சிவப்பு சட்டையெல்லாம் போட்டு நடிப்பதும் ஒருவகை பிரசாரம்தானே? கருப்புச் சட்டை, சிவப்பு பேண்ட் என யாராவது  போடுவார்களா? போட்டால் சகித்துக்கொள்ளத்தான் முடியுமா? அண்ணா இறந்த பிறகு கருணாநிதிக்கு ஆதரவாக இருந்தவரும் அவர்தானே? என்ற யோசனைகள் லட்சுமண ரெட்டியாருக்கு அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தது.

திடலுக்குள் நுழையும்போதே பதட்டம் இரண்டு மடங்காகிவிட்டது. பெரியார் நல்லபடியாக இருக்கிறார் என்று யாராவது ஓடிவந்து தெரிவிக்க மாட்டார்களா? ஆங்காங்கே இருவர் மூவராக தோழர்கள் நின்று கொண்டிருந்தனர். அரங்கம் இருக்கும் இடத்துக்கு முன்புறம் விசாலமாக இடம் விட்டு பரந்து கிடந்தது. மணல்வெளி. அதில் நின்றிருந்தவர்களின் முகங்களில் சோகம் அதிகமாக இருந்தது. ஒருவேளை செய்தி வந்துவிட்டதா என்று சந்தேகமாக இருந்தது. ஏற்கனவே திடலில் நிலவிய மனஓட்டத்தோடு புதிதாக உள்ளே வந்த இவருடைய மன ஓட்டம் இணைவதற்குச் சற்றே தயக்கம் இருந்தது. நாமாக சென்று ஆரம்பிக்கலாமா, அவர்களாக ஆரம்பிப்பார்களா என்ற தயக்கம்.

நல்லவேளையாக அங்கே சௌந்தர பாண்டிய நாடார் இருந்தார். திடலுக்கு வந்தால் போனால் அருகில் வந்து வாஞ்சையாகப் பேசக் கூடிய தோழர்களில் ஒருவர் லட்சுமண ரெட்டியாரின் மன ஓட்டத்தை வாசித்துவிட்டதாலோ, என்னவோ கண்ணை நிதானமாக மூடித்திறந்து ஒன்றுமில்லை, கவலைப்பட வேண்டாம் என்றார் சைகையாலேயே.

இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. ஈசல் பூச்சிகள் பறந்து மொய்த்தன. ‘வேலூர் சி.எம்.சி.க்குக் கொண்டு போயிருக்காங்க.. ஒண்ணும் ஆகாது உக்காருங்க அண்ணாச்சி’. அரங்கத்தின் படியில் பேப்பரைத்தட்டி சுத்தம் செய்துவிட்டு அமர்ந்த சௌந்திர பாண்டியன், லட்சுமண ரெட்டியாரையும் உட்காரச் சொல்லி பணித்தார். உட்காரும் முன்பே மறுகையில் இருந்த சஞ்சிகையைக் காட்டி, ‘பார்த்தீங்களா இதை’ போல கண்ணைச் சிமிட்டினார்.

அவருடைய கையில் இருந்த சஞ்சிகையின் பெயர் நாடார்குல மித்ரன் என்றிருந்தது. ‘மொத மொதல்ல பெரியாரோட பேச்சை முழுசா இதிலதான் போட்டுருக்காங்க.. நீங்க வந்தா காட்டிடலாம்னுட்டுதான் கொண்டாந்தேன்’ என்றவாறே நீட்டினார். ‘அப்படியா?’ என்று ஆசையோடு வாங்கியவர், அது உடைந்துவிடும்படிக்கு இருந்ததால் மீண்டும் அவரிடமே கொடுத்து, ‘நீங்களே வாசிங்க, கேக்கறேன்.. நான் படிச்சா நிதானமாத்தான் படிப்பேன்’ என்றார்.

‘நானும் உங்க கேஸ்தான்.. முழுசா வேணாம்…சிலதைக் குறிச்சி வெச்சிருக்கேன் அத மட்டும் படிக்கிறேன்.. பெரியார் காங்கிரஸ்ல இருந்தபோது பேசினது.. இருபத்து நாலுல..’

‘அடேங்கப்பா.. அம்பது வருஷத்துப் பத்திரிக்க..’

‘திருவண்ணாமலையிருக்கும் தகரக் கொட்டைகையில் சுமார் 2.30 மணிக்கு மகாநாடு ஆரம்பமாயிற்று. அவ்வமையம் இந்து, முஸ்லிம், கிருஸ்துவ மதங்களின் சார்பாகக் கடவுள் வணக்கம் செய்யப்பட்ட பின்பு உபசரணக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புப் பத்திரம் வாசித்து முடித்ததும் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கரவர்கள் அக்கிராசனராகப் பிரேரித்தார்..’

‘பெரியார் கலந்துகிட்ட கூட்டமா இது? மாத்திகீத்தி படிச்சிடப்போறீரு’

‘அட.. தமிழ் மாகாண மகாநாடு நடந்திருக்கு.. அப்பல்லாம் பெரியாரு கடவுள் சம்பந்தமா தீவிரமாகல. அதான் விசயம்.. அப்ப கான்கிரஸ்ல இல்ல இருக்காரு? மேல படிக்கிறன் கேளுங்க.. சுயராஜ்யம் என்பதற்கு பலர் பலவாறு பொருள் கூறுவது வழக்கம். சுயராஜ்யத்தின் உண்மைப் பொருளை உள்ளங்கொண்டு நோக்கும்போது உலகில் எந்தத் தேசமுஞ் சுயராஜ்யம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தேசம் மற்றவர்களால் ஆளப்படாமல் தன்னைத்தானே ஆண்டுகொள்வது சுயராஜ்யமென்று சொல்லப்படுவதும் எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. ருஷ்யாவில் ஜார் காலத்தில் நடைபெற்ற அரசாட்சி அந்நிய அரசாட்சியா?..’

‘எப்படி கேள்வி போட்ராறு பாருங்க.. அதான் பெரியாரு’

‘இன்னொரு எடத்தில பாருங்க.. சுயராஜ்யத்தில் ஊக்கங்கொண்டுழைக்க முற்பட்டுள்ள காங்கிரஸ் ராஜ்யத்திலாவது சுயராஜ்யமிருக்கிறதாவென்றால் அங்குமிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் எனக்குற்ற அனுபவம் காங்கிரஸிலும் இன்னும் சுயராஜ்யம் ஏற்படவில்லை என்றே சொல்லும்.. தேசத்தில் செல்வர் இறுமாப்பும் ஏழைகள் இழிவும் ஹிந்துக்கள் அச்சமும் முஸ்லிம் ஐயமும் தாழ்ந்த வகுப்பார் நடுக்கமும் ஒழியுமாறு முயல வேண்டும். இக்குறைகள் ஒழியப் பெற்றால் சுயராஜ்யமென்பது ஒருவர் கொடுக்க நாம் வாங்குவதல்லவென்பதும் அது உம்மிடமேயிருப்பதும் செவ்வனே விளங்கும்.’

‘இதுமாதி யோசிக்கிறதுக்கு இவர வுட்ட வேற யாரு இருக்கான் இந்த இந்த உலகத்தில? சுயசிந்தனை. எதனா புக்க பாத்து படிச்சுட்டு பேசற பேச்சா இது?’

லட்சுமண ரெட்டியார் சிலாகிப்பதற்கு அவகாசம் தந்துவிட்டு மேலே படிக்கலானார் சௌந்திர பாண்டி. ‘ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை தேசத்துக்கு மிக அவசியமானது. அவ்வொற்றுமைப் பேச்சும் நமது தமிழ்நாட்டுக்கு வேண்டுவதில்லை. கடவுளை வாழ்த்துகிறேன்.. கடவுளை வாழ்த்துறது யாரு..? பெரியாரு. எதுக்காக வாழ்த்திறாரு..? அடுத்த வரியப் பாருங்க.. கோயில்களை இடிப்பதும் மசூதிகளைக் கொளுத்துவதும் பெண்மக்கள் கற்பை வலிந்து குலைப்பதும் மனிதர்கள் செயல்களாக. சுயராஜ்யத்துக்கு அடிப்படையாக உள்ள ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கே கேடு நிகழ்வது கண்டு மகாத்மா இருபத்தொரு நாள் உண்ணாவிரதமிருந்தார். அவர் முயற்சி வெற்றியடைய வேண்டுமென்று நாம் கடவுளை எப்பொழுதும் வாழ்த்திய வண்ணமிருப்போமாக..’ கடவுளை வாழ்த்துறது இதுக்குத்தான் ரெட்டியாரே புரியுதா?’

‘புரியுது…புரியுது..’

‘இன்னொரு முக்கியமாக இடம் படிக்கிறன் கேளுங்க.. சில பிராமணரல்லாதவர் – ஜஸ்டிஸ் கட்சியார் – கூடி ஒரு பிற்போக்கான இயக்கத்தைக் கிளப்பியதும் அதை ஒடுக்கப் பிராமணரல்லாதார் – காங்கிரஸ் கட்சிக்காரர் – புறப்பட்டதும் கனவில் தோன்றிய நாடகங்களல்ல. காங்கிரஸ் சார்பாக டாக்டர் வரதராஜலூ நாயுடுவும் ஸ்ரீமான் வி.கல்யாண சுந்தர முதலியாரும் வேறு சிலரும் மேற்கொண்ட பேருதவியால் ஜஸ்டிஸ் கட்சி முளையாகவும் நின்று வெம்பி காய்ந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று நாடோறும் பிரார்த்தனை செய்பவருள் நானும் ஒருவன்.’

‘இது இன்னாயா புதுக்கதையா இருக்குது.. ஏம்பா நாடார் குல மித்ரன்ல ஒண்ணுகெடக்க ஒண்ணு எழுதி வெச்சிருக்கப்போறாம்பா..’

‘முடிக்கிறதுக்குள்ள அவசரபட்றீங்களே..? காங்கிரஸ்வாதியாயிருந்த டாக்டர் நாயர் திடீரென ஜஸ்டிஸ் கட்சியை தோற்றுவிக்கக் காரணங்களாக நின்றவை எவையோ, அவை இன்னும் நிற்கின்றனவா, இல்லையா என்பதை நேயர்களை கவனிப்பார்களாக. அக் காரணங்கள் அழிந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. அவை தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும்வரை பிராமணர் – பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுதலரிதே. தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டிக் காங்கிரசில் காரியதரிசியாகவும் தலைவனாகமிருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாக்கிக்கொண்டே  நான் இன்று பேசுகிறேன்.. இப்ப புரியுதா? நாடார் குல மித்ரன்ல சரியாத்தான் போட்டுருக்கனும்னு?.. இன்னும் ஒரு பத்தி படிசிர்றேன்.. அவருடைய பேச்சு சாமர்த்தியத்துக்கு இது உதாரணம்.. தமிழ்நாட்டிலுள்ள காங்கிரசில் உள்ள பிராமணரல்லாத தலைவர்கள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு காங்கிரஸ் தொண்டு செய்து வருகிறார்களாதலால் எக்குறை முறையீடும் வெளிக்கிளம்பாது கிடக்கிறது. மகாத்மாகாந்திக்குத் தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்குள் உள்ள குறைகள் பெரிதும் தெரியா. தெரிவிப்போருமில்லை. உண்மை நிலை தெரிந்தால் அவர் எத்துணை நாள் உண்ணாவிரதம் கொள்வாரோ தெரியாது.. எப்பிடி?.. உனக்குப் பெரியார்னா உசுராச்சே.. அதான் படிச்சுக் காட்டலாம்னு கொண்டாந்தேன்.. டீ சாப்புடுவமா தோழர்?’

‘ஆனைமுத்து வருவார்னு பாத்தேன். அவரு, பெரியார் பேசுனது எல்லாத்தையும் புத்தகமா போடப்போறதா சொன்னாங்க. ‘ பேசியபடியே டீக்கடை வாசலுக்கு வந்து நின்றபடி ‘ரெண்டு டீ போடுங்கய்யா’ என்றார் லட்சுமண ரெட்டி.

‘அவரு.. வீரமணி, மணியம்மை எல்லாருமே வேலூர்லெதான் இருக்காங்க இப்போ’

‘ஓ..’

பஸ் பிடித்து நிம்மதியாக ஊர்வந்து சேர்ந்தார். லட்சுமணரெட்டியார். மீண்டும் திடலுக்கு வந்ததும் பெரியாரைப் போய்ப்பார்த்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையாக இருந்தார், மூன்றாம் நாள் பெரியார் இறந்துவிட்டதாக ரேடியோவில் செய்தி வாசித்தார்கள்.

***

tamilmagan1

நன்றி : தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், (தட்டச்சு செய்த) ஆபிதீன்!

***

சில சுட்டிகள் :

விமர்சனங்கள் : 1. கவிஞர் மதுமிதா  , 2. அருணகிரி , 3. யுவகிருஷ்ணா

பறக்கும் குதிரை!  – ‘தென்கச்சி’ பற்றி தமிழ்மகன்

« Older entries