கை நழுவிய உலகம் – தாஜ்

திண்ணை இதழில் – 2007ஆம் ஆண்டு – வெளியான சிறுகதை இது. நன்றியுடன் பகிர்கிறேன். – AB
*

taj-ps3

கை நழுவிய உலகம் – தாஜ்

‘பைத்தியக்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் அதிகத்திற்கு அதிகமாக சிரிப்பார்கள், கத்துவார்கள், புலம்புவார்கள், தனக்குத்தானே பேசுவார்கள்,
அடிக்கவரும் பாவனை செய்வார்கள், சில நேரம் கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக்கவும் செய்வார்கள். நாமும் சில நேரங்களில் அத்தனையும் செய்பவர்களாகவே
இருக்கிறோம்! இதில், அவர்களுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்றால், நாம் செய்யும் அத்தனைக்கும் – அது ‘அதீதமே’ என்றாலும் – ஏதோவொரு காரணம்
காரியம் சொல்லிவிடுவோம். சிரிப்பதற்கு ஒரு காரணம், அழுவதற்கு ஒரு காரணம், பொண்டாட்டியிடம் பணிந்து போவதற்கும் ஒரு காரணமென்று! தனித்தனியே நமக்கு
‘ஒடுக்கத்தியக்’ காரணங்கள் பல இருந்துக் கொண்டே இருக்கும். பைத்தியமானவர்களிடம் அது சாத்தியமில்லை. தங்களது எந்தவொரு செய்கைக்கும் அவர்களால் விளக்கம் சொல்லத் தெரியாது!’

– இது என்னுடைய நோக்கின் கண்டெடுப்பல்ல; பிரபல எழுத்தாளர் ஒருவரின் கட்டுரையில் எப்பவோ படித்திருந்த ஞாபகம். அதைத்தான் இங்கே பதிந்திருக்கிறேன்.
அட்சரசுத்தமாக பதிந்திருக்கிறேன் என்றும் சொல்ல முடியாது. அவர் எழுதியிருந்ததின் சாரம் நிச்சயம் இந்த வரிகளில் உண்டு.

என் ஞாபகம் இப்பவெல்லாம் அத்தனைக்கு பலமானதாக இல்லை. எல்லாவற்றையும் மறந்து தொலைத்து விடுகிறேன். வலிய அதை நினைவுக்கு
இழுத்துவரும்போதெல்லாம் அதன் அடுக்குகள் கலைந்து போகின்றன. யோசிக்க யோசிக்க இதற்கு காரணங்கள் என்று எதுவும் பிடிபடவில்லை.

சிலர் சொல்கிறமாதிரி தலைக்கு ‘டை’ அடிப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நான் பயணிக்கும் கரடு முரடான பாதைகளில் பல தடவைகள் தடுக்கி
விழுந்திருக்கிறேன். அது தரும் சிராய்ப்புகளின் வலி அதிகம். அந்த வலியை தாங்கிக் கொள்கிற போது, எழும் மன அழுத்தம் இப்படிப் பாதிக்கும் என்கிறார்கள்! தவிர,
அந்தப் பாதையில் ஓரிரு முறை குப்புற விழ நேர்ந்ததில் நெத்திப் பொட்டில் அடி! சித்தம் பேதலிக்கிற அளவுக்கு தெறிப்பு! இதெல்லாம் கூட காரணமாக இருந்திருக்குமோ
என்னவோ!

ஞாபக மறதியைத் தொடர்ந்து, இப்பொழுது என் செயல்பாட்டில் சரளமாக அதீதங்கள் தெரிவதாகச் சொல்கிறார்கள். “இரவில் படித்துக் கொண்டிருந்தபோது ஏன் அப்படி
சிரித்தீர்கள்? தூங்கும்போது யாரிடம் பேசுகிறீர்கள்?” என்று மனைவியோ மகளோ கேட்டால், எனக்கு பதில் சொல்லத் தெரிவதில்லை.

புத்தகங்களை படிக்கும்போது சில நேரம் வாய்விட்டு சிரிப்பது உண்டுதான். என்னடா இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்பதற்காக அல்ல! அதற்காகவெல்லாம்
சிரிக்கணும் என்றால் முடிகிற காரியமும் இல்லை! தேர்ந்த படைப்பாளிகளின் வித்தைக் கொண்ட வார்த்தைகள், வாசிப்பின் ஆழத்தில் எங்கெங்கோ குத்தி வெடிக்கும்போது
கிளைக்கும் சிரிப்பு அது. இந்த விளக்கத்தை மனைவியிடமோ மகளிடமோ சொல்ல முடியுமா? இப்பவே என் மீது ஒரு மாதிரி யோசனையில் இருக்கிறார்கள். தூக்கத்தில்
யாருடன் என்ன பேசினேன் என்று தெரியவில்லை. நல்ல பகல் பொழுதில் சந்திப்பவர்களிடம் பேசும் எல்லாமும் மறந்து போகும் நிலையில் இதற்கெல்லாம் கவலைப்பட முடியாது.

யாசிக்க வருகிற முஸாஃபர்களிடம் யாசகம் இடும் வேளையில், மனித நேயத்தோடு இரண்டு வார்த்தைகள் பேசுவது உண்டு. இது எனக்கு ரொம்பகாலப் பழக்கம்.
இப்பொழுது அப்படி அவர்களிடம் பேசுவதும்கூட என் மனைவிக்கு தப்பாகப் போகிறது. நேற்று ஒரு பெண் முஸாஃபரிடம், “இரவுகளில் அங்கே இங்கே
படுத்துக்கிடக்கிறீங்களே… இப்பொழுது குளிர் காலமாச்சே எப்படி சமாளிக்கிறீங்க?” என்று கேட்டேன். அவள் கிலுக்கென்று சிரித்து வெட்கம் சிந்திப் போய்விட்டாள்.
இத்தனைக்கும் அவளுக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். இதை கவனித்து விட்ட மனைவி, “நீங்க என்ன கேட்கிறீங்க…, அவள் என்ன செய்துட்டுப் போறா
பார்த்தீங்களா? கதவைத் திறந்தோமா காசு போட்டோமான்னு இல்லாமே என்ன வேண்டிக்கிடக்கு அவள்டலாம் பேச்சு!” என்றவள் கொஞ்சம் தள்ளிப் போய், “இந்த
மனுஷனுக்கு பைத்தியம் புடுச்சிடுச்சுப் போலிருக்கு!”என்று முனங்கினாள்.

நான் எங்கே போய் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெளிவாகவே தெரிந்தது. என் மனைவி ஒன்றை உறுதி செய்து விட்டால், நிச்சயம் அதை சாதிக்காமல்
விடமாட்டாள். வாழ்வின் நகர்வுகள் நேர்த்தியாக இயங்குவதாகவே பட்டது. யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத உச்சம் கிட்டப்போகிறது! சுதந்திரப் பறவை மாதிரி
வலம் வர இன்னொரு உலகத்திற்கு விசா கிடைக்கப்போகிறது!

என் ஊரில் எனக்குத் தெரிந்து நான்கு பைத்தியங்கள் – வீதிகளில் எப்பவும் ஆஜர். அவர்கள் இல்லாமல், அவ்வப்போது கடைவீதி மணிக்கூண்டுப் பக்கம், பழைய பஸ்
ஸ்டாண்ட் பக்க, பாதம் ஹல்வாவுக்கு பெயர் போன மஹாலிங்க அய்யர் சைவ சாப்பாட்டு கடைப்பக்கமெனத் தென்படும் இப்படியான சிலர் , ஓரிரு நாட்களுக்குப் பின்னர்
தென்படவும் மாட்டார்கள். பின்னொரு வாரங்களில் எப்பவாவது அவர்களை அந்த அழகில் அந்த இடங்களிலேயே பார்ப்பதும் உண்டு.

நல்ல உடுப்பில் அவர்களைப் பார்க்க லெட்சணமாகவும், செய்கைகளில் மிடுக்கும் இருக்கும். பெரும்பாலும் உயர்தரவகைச் சேட்டைகளைத்தான் செய்வார்கள். ரோட்டில்
கூட்டத்தை சரி செய்வது, டிராஃபிக் நெரிசலில் பஸ்களுக்கு வழியேற்படுத்திக் கொடுப்பது, சாலைச் சந்தில் நின்று, கைகளை நீட்டியும் மடக்கியும், வலது புறமாக அனுமதி தந்து பின்னர் இடது புறத்துக்கு அனுமதியை மாற்றி, தேர்ந்த ‘ட்ராஃபிக்’ கான்ஸ்டபிளை விட நேர்த்தியாக செயல்படுவது. பெரிய கடைகளின் பிளாட்ஃபாரத்தை பெருக்கித் தருவது என்பதாக இருக்கும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு மறைந்து போகிறார்கள் என்பதெல்லாம் பிடிபடாத புதிராகவே இருந்தது.

இது குறித்து கடைவீதியில் ஜனரஞ்ஜகமானதோர் வியாபார ஸ்தலத்தில், வெற்றிலை – பாக்கு – சீவல் – பீடி – சுருட்டு – புகையிலை போன்றனவற்றை ஹோல்செல்
மற்றும் ரீட்டைல் விற்பனைக் கடை நடத்தும் நண்பனும் எதிர் வீட்டுக்காரனுமான உசேன்பாபாவிடம் கேட்டேன், இப்படியான தகவல் வழங்குவதில் அவன் கெட்டி!

அவன் தெளிவாகவே சென்னான், “அவர்கள் எல்லாம் நம்ம ஊரில் ஆண்ட பரம்பரையின் சந்ததிகள். அவர்களில் சிலருக்கு இந்தப் ‘பித்தநிலை’ காலத்தில்
வாய்த்துவிடுகிறது. சாபம் மாதிரி. அவர்கள் அடைக்கப்பட்ட நிலையிலிருந்து காவலை, மீறி இப்படி வீதிக்கு வந்து தங்களது சுதந்திர வேட்கையைகளைத் தீர்த்துக்
கொள்பவர்களாக திரிவார்கள். திரும்பவும் வீட்டு நபர்களால் வீட்டுக் காவலுக்கே வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டு விடுவதால் ரோட்டில், தொடர்ந்து அவர்களை
பார்க்க முடிவதில்லை!” என்றான்.

ஒருவன் இப்படின்னு முத்திரை பெற்றுவிட்டால், அவனை விட்டுவிட வேண்டும். அப்புறம் என்ன குடும்ப கௌரவம்…? வீட்டுக்காவல்…? இப்படி நானும் முத்திரைப்
பெற்றவனாக வந்துவிடுவேனேயானால், பிறகு தன்னை யாரும் குடும்ப கௌரவம் சொல்லி திரும்ப வீட்டுச் சிறை வைக்க இடம்தரக் கூடாது என்ற எண்ணம் அப்போது
உறுதிப்பட்டது.

எங்க வட்டத்தில் வழக்கமாகத் தென்படும் அப்படியான அங்கீகரிக்கப்பட்ட நால்வருக்கு என்னை நன்கு தெரியும். அதில் இரண்டுபேர் எங்கள் மஹல்லாவை சேர்ந்தவர்கள்.
என்னை பெயர் சொல்லி அழைப்பவர்கள். அதில் ஒருவன் முஸ்லீம். பெயர் அய்யூபு! தெக்னி. உருது அவனது தாய் மொழி. ஆனாலும் தமிழ் அவனுக்கு சரளமாக வரும்.
தமிழ் மட்டுமல்லது இன்னும் இரண்டு – மூணு பாஷைகளும் அதே சரளம் அவனுக்கு! பள்ளிக்கூடத்தில் அவன் எனக்கு சீனியர். அங்கே அவனை தள்ளி நின்றுதான்
பார்க்க முடியும். எப்பவும் அவனுடன் பல்வேறு தினுசான மாணவர்கள்! அவனது பருவக்காலத்து விசேச கூறுகளை தெரிந்தவர்கள் சொன்னால், கேட்பவர்கள் இன்றைக்கு
நம்பமாட்டார்கள்.

மாவட்ட அளவில் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன். அப்பொழுது அவன் ஆடாத ஆட்டமில்லை. இன்னும் வேகத்தாண்டுதல், உயரத்தாண்டுதல், அம்பு வீசுதல், ஓடுதல்
என்கிற விளையாட்டுகளிலும் கெட்டி அவன். அவனது வேறோரு விளையாட்டாக, ஜாதி வித்தியாசம் பாராது சமத்துவமாக எல்லாப் பிரிவிலிருந்தும் இரண்டுக்கு மேற்பட்ட
காதலிகளை வட்டமிட வைத்திருந்தான்! அவர்களும் அவனை மொய்த்தார்கள். அவர்களின் பிடி தளர்ந்து போகாத வகையில் மந்திரமாய் சில காந்த வித்தைகளையும்
வைத்திருந்தான். அதிலொன்று இசை! எல்லா தரப்புகளிலிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட குரல் அவனது குரல்! அவன் அன்றைக்குப்பாடி, அரங்கம் அதிர கைத்தட்டலைப் பெற்ற
இந்துஸ்தானியையும், கவாலி, கஸலையும் வித்தியாசப்படுத்திப் புரிந்துக் கொள்ளவே எனக்கு அதன் பிறகு இருபது வருடங்கள் பிடித்தது.

பள்ளிப்பருவத்திலேயே அவன் எல்லா இசைக்கருவிகளையும் வாசிப்பான். பிரமாதமாக இசையும் அமைப்பான். கொஞ்சம் மிடுக்காய் பேசுவான், அப்படியே நடக்கவும்
நடப்பான். லாவகமாக சிகரெட் பிடிப்பான், அவ்வப்போது பிரமாதமாகப் பொய் சொல்வான். அலங்காரமாக நெய்யப்பட்ட ஆடையாக அது அவனுக்கு இருக்கும். குடும்பத்தில் வறுமை அவனை சக்கையாய்பிழிந்து நார் நாராக காயப் போடுகிறபோதெல்லாம் பொய்யைதான் அணிவான். எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படிக்கு கச்சிதமாக அது அவனுக்குப் பொருந்திப்போகும்.

இப்பக்கூட, இந்த விடியற்காலை குளிரில் அவனைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன். பள்ளிவாசல் பக்கமுள்ள வேப்பமரத்தடி டீக்கடையின் வாசலில் அவன் நின்றான்.
சாவகாசமான நேரத்தில் எங்கே அவனைப் பார்த்தாலும் “மிஸ்டர் அய்யூப்” என்று அழைத்துப் பேசத் தவறமாட்டேன். இப்போதெல்லாம் அவன் பேசும்போது பேச்சு
கோர்வையாக இருப்பதில்லை. விட்டு விட்டு துண்டு துண்டாக வருகிறது. நான் ஒன்று பேச அவன் ஒன்று பேசுவான். சிலநேரம் சரியான பதிலாகவும் பேசுவான்.

அவனைச் சந்திக்கும் நேரங்களில் கட்டாயம் அவனோடு டீயும் சிகரெட்டும் பகிர்ந்து கொள்வேன். பலவற்றை மறந்தவனாக காணப்பட்டாலும், எந்த முத்திரை குத்தப்பட்டு
அவன் சீர்குலைந்திருந்தாலும் சிகரெட் புகைப்பதில் மட்டும் இப்பவும் அவனிடம் அதே ஆதி முத்திரை அழகு! கொஞ்சமும் மாறாத லாவகம்! இன்றைக்கு அவன் ஆடை
வழக்கத்தைவிட மிகமிக அழுக்காக இருந்தது! முகச்சுழிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு! இவனது உலகத்தில் பிரவேசிக்க அனுமதி கிடைக்கும் பட்சம் இத்தனை அழுக்காக
உடுத்தக் கூடாது நான்! உடுத்திக் கொள்ளவும் மாட்டேன். இவனை மாதிரி ஒரே இடத்தில் நிற்கவும் மாட்டேன். விட்டை விட்டால்.. எத்தனை ஊர் சுற்றினோம் என்கிற
கணக்கு எகிற வேண்டும் எனக்கு!

அய்யூபும் நானும் பேசிக்கொண்டிருந்ததை யாரோ பார்த்துப் போய் வீட்டில் என் மனைவியிடம் அவசியமாக சொல்லி இருக்கிறார்கள். “பள்ளிவாசல் கிட்டே நின்னுகிட்டு
பைத்தியத்திட்டெயெல்லாம் பேசிகிட்டு இருக்கிங்களாமுல்ல?” என்று அவள் கேட்கவும், சற்று நேரம் இவள் யாரை குறிப்பிட்டு கேட்கிறாள் என்று புரியாது குழம்பினேன்!
அங்கே நின்று நிறையபேர்களிடம் நான் பேசுவது வழக்கம். பள்ளிக்கு தொழுவிட்டு வருகிறவர்கள், ஹஜ்ரத், பஞ்சாயத்துக்காரர்கள், , எங்க பக்கத்து அரசியல் புள்ளி என்று
பலரிடமும் பேசிவிட்டு வந்திருந்தேன். சரி, இவள் யாரை குறிப்பிட்டுக் கேட்கிறாள்?

அய்யூபுவைப் பற்றி அவள் அந்த நேரத்தில் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை அவள் முறைக்கவும், ஞாபகம் வந்தவனாக ‘யாரு.. அய்யூபிடம் பேசியதை
கேட்கிறாயா?’ என்றேன். “உங்களுக்கு என்ன செய்யுறோம், ஏது செய்யுறோம்… என்பது தோணுறதே இல்லை! நீங்க பைத்தியத்துக்கிட்டே இப்படி பேசிகிட்டு நிக்கிறத
நாலுபேர் பார்த்தா என்ன நினைப்பாங்கன்ணு உங்களுக்கு நிஜமாகவே ஒண்ணும் தோணலையா? வர வர ‘இது’ இப்படியா ஆகணும்!?” என சலித்துக் கொண்டாள். அவள்
‘இது’ என்றது என்னைத்தான். சமயத்தில் ‘அது’ என்று தன்மையாகவும் குறிப்பிடுவாள். பழகிப்போச்சு.

இதற்குப்போய் இவள் ஏன் இப்படி அநியாயத்திற்கு சலித்துக் கொள்கிறாள் என்று தோன்றியது. எத்தனையோ பேர்களிடம் பேசுகிற மாதிரிதானே அவனிடமும் பேசுகிறேன்!
சரியாகச் சொன்னாள் அவனிடம் பேசுவது எனக்கு உகந்ததாகத்தான் இருக்கிறது. அவன் திருடுவது கிடையாது. சூது, வாது, பித்தலாட்டம் கிடையாது. லஞ்சப்
பேர்வழியுமில்லை. ரசிகர் மன்றத்துக்காரனுமல்ல. எந்த அரசியல் கட்சிகளிலும் அவன் உறுப்பினனோ அனுதாபியோ கூட இல்லை. குறிப்பாய் மதங்களிலிருந்தும் அவன்
விலக்கு பெற்றவனாக வேறு இருக்கிறான். இந்த அளவில் அன்னியமாகி இருப்பவனிடம் பேசியதை இவள் இத்தனைக்கு பெரிது படுத்தக் கூடாது. நாளைக்கு என்னிடம்
யாரும் பேச வேண்டாமா? ‘அப்படி’ முத்திரை குத்துவதென்று முடிவு செய்த பிறகு, இவள் அதைச் செய்யவேண்டியதுதானே? அதைவிட்டு ஏன் இவ்வளவு அழிச்சாட்டியம்
செய்கிறாள்!

போன மாதம் இப்படித்தான், குறுக்குத்தெரு, ஜபுருல்லா என்னைப் பார்க்க வந்திருந்தான். கல்ஃபிலிருந்து இருந்து அவன் எப்ப ஊர் வந்தாலும் கட்டாயம் என்னைப் பார்க்க
வருவான். இப்பவும் அப்படித்தான் வந்து பார்த்துவிட்டுப் போனான். என்னை விட இளையவன். மதம்சார்ந்த விசயங்களில் கெட்டி. நிறைய ஓதிக் கற்றவன். ஓர்
இஸ்லாமியன் நெறி தவறாமல் எப்படி நடக்க வேண்டும் என்று குரான் ஹதீஸ் அடிப்படையில் அவன் பேசத் துவங்கினால், கேட்பவர்கள் சுய குற்ற உணர்வால் பிரமைப்
பிடித்தவர்கள் மாதிரி ஆகிவிடுவார்கள். பருவத்தில் அவனது எதிர் வீட்டுப் பெண்ணை அவன் கரம்பிடித்த போது, அந்த அவனது திருமணத்தில் என் பங்கு கணிசமாக
இருந்தது. அதுதொட்டு மிகுந்த பிரியம் என் மீது.

அவன் வீட்டுக்கு வந்து பேசி விட்டுப்போன பிறகு, இவள் சப்தம் போட்டாள். “அந்த மனுஷன் திண்ணையில் உட்கார்ந்து உங்க கிட்ட பேசுற பேச்சை, கூடத்தில் உட்கார்ந்து
கேட்கிறப்போவே எனக்கு மண்டைவலி வருது. உங்களுக்கு ஒண்ணுமே வரலையா? அந்த ஆளு பைத்தியமா இருந்தவருன்னு உங்களுக்கே நல்லா தெரியும்! ஏன்
அவர்கிட்டே இத்தனை மணி நேரம் பேசிகிட்டு இருக்கிங்க?” அவனோடு அப்படி நீண்ட நேரம் பேசிக்கிட்டு இருந்ததை சுட்டி, அவள் திட்டுவதில் கொஞ்சத்திற்கு கூடுதலாக
நியாயம் இருப்பதாகவே பட்டது.

இப்பொழுதெல்லாம் என்னாலும் அவன் பேசுவதை பத்து நிமிடம் கூட கேட்க முடிவதில்லைதான். மாங்காவில் பேச்சை ஆரம்பித்தான் என்றால், தேங்கா, பனங்கா,
புளியங்கா, கொய்யாக்கா என்று புலம்பிக் கொட்டி சரியாக மாங்காயில் வந்தே முடிப்பான். அத்தனைக் காய்களையும் மாங்காயாகவே பாவித்துப் பேசியதை அவன்
உணரமாட்டான். ஐந்து வருடங்களுக்கு முன் அவன் மனநிலைப் பாதிக்கப்பட்டவனாக சில மாதங்கள் இருந்தான். பின்னர் வைத்தியம் பார்த்ததில் தேவலாம்போல் ஆனான்!

அவன் மனநிலை பாதிப்புக்கு உள்ளான தருணத்தில் அவனைப் பார்க்க போய் இருந்தேன். தூய வெள்ளாடை விரிப்பில், தொழுகைக்குரிய ஆசனமிட்டு அவன்
அமர்ந்திருந்தான். ரூமின் சன்னல் கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டு ஸ்தலம் இருளாக இருந்தது. ஓர் மூலையில் அளவுக்கு அதிகமாக வத்தி புகைந்துக் கொண்டிருந்தது.

அவனை பெயர் கூறி அழைத்தேன். “என்னை பெயரை கூறி அழைக்காதே!” என்றவன். சற்றைய நாழிக்கெல்லாம் “நான் யார் தெரிகிறதா?” என்றான். எப்பவும் என்னை
எதிர்கொண்டு அழைப்பவனின் இந்த பதில் கொஞ்சத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் மனநிலை சரியில்லாமல் பேசுகிறானென்று சமாதானம் ஆனேன். பிற்பாடு
அவன் கூறிய பிரமாண்ட வார்த்தைகளின் வாக்கியம் என்னை நிலைகுலைய வைத்தது. நிஜமாகவே அதிர்ந்துதான் போனேன். “நான்தான் அல்லா” என்று அவன்
கூறுகையில் நான் சகஜமாகவா இருக்க முடியும்? அவன் மனைவியை அழைத்து, ‘என்ன செய்றதா உத்தேசம்?’ என்று கேட்டேன்.

“புரியலண்ணே. ஏர்வாடிக்கு கொண்டுப் போகலாமுன்ணு எங்க அம்மா சொல்றாங்க”.

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதலிலே இதற்குண்டான வைத்தியத்தியம் செய்ய தகுந்த டாக்டரை பாரும்மா!”

“யாரு, என்னான்னு தெரியாதண்ணே.”

பக்கத்து டவுனில் உள்ள நல்ல மனோதத்துவ டாக்டரின் முகவரியை எழுதிக் கொடுத்து, அவர் இருக்கும் இடத்திற்கு போகும் வழியையும் சொன்னேன். அந்தப் பெண்ணிடம் ஒரு தயக்கம் இருப்பது மாதிரிப்பட்டது.

“ஏதாவது தயக்கமிருந்தா சொல்லும்மா.. பணம் காசு ஏற்பாடு செய்து தரணுமா?”

“இல்லண்ணே…. பணமெல்லாம் இருக்கு…., ஒரு சமயம் அவரு சொல்ற மாதிரி அவரு…..?”

“என்ன சொல்ற மாதிரி…. அவரு?”

“இல்லண்ண…, அவரு…. நான் ‘அல்லா’ங்கிறாரே… அது நிஜமா இருக்குமோ?”

“அவன் ஏதோ உளறுறான்னா…. நீ வேறே…! அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா.”

ஒரு வாரத்திற்குள் குணமாகி வீடு திரும்பிவிட்டிருந்தான். சந்தோசமாக இருந்தது. அவன் மனைவி வீட்டுக்கு வந்து, அந்த டாக்டரின் ‘ட்டிரீட்மெண்”டைப் பற்றிப் புகழ்ந்து
சொன்னது. தொடர்ந்து ஐந்து நாள், காலையும் மாலையும் ‘ஷாக்’ தந்ததில் அவன் சரியாகி விட்டதாக விவரித்தது மகிழ்ந்தது. அவனை நான், போய் பார்த்து வந்தேன்.
அவன் குணமானதெல்லாம் சரி! ஆனால் பேச்சு? முந்தைக்கு இப்பொழுது உளறலாகப் பட்டது. அநியாயத்திற்கு ‘ஷாக்’ தந்திருப்பார்களோ! போகப்போக
சரியாகிவிடுமென்று சமாதானம் ஆனேன்.

அடுத்த ஆறு மாதத்திற்கெல்லாம் அவனை அவன் மனவி சௌதிக்கு போக ஏற்பாடுகள் செய்து பயணம் அனுப்பி வைத்து விட்டது. இப்பொழுது பிரமாதமாக
சம்பாதிக்கவேறு செய்கிறான். இவனை மாதிரி ஆட்களை எந்த அரபு நாடும் வஞ்சிப்பதே இல்லை! இறையருள் அப்படி! வருடா வருடம் ஊர் வருகிற போதெல்லாம்
என்னைப் பார்ப்பதை அவன் தவிர்ப்பது இல்லை. அவனது உளறலும் குறைந்தபாடில்லை. என் மனைவி, அவனைக் குறித்து புலம்பியதென்பது சரிதான்.

பைத்தியக்காரர்களின் உலகத்திற்கு இவன் ஒரு மோசமான உதாரணம். இவனை மாதிரி நான் இருக்கக் கூடாது. ஒண்ணு அந்தப் பக்கம் இருக்கணும் அல்லது இந்தப்
பக்கம் இருக்கணும்.

என்னைக் குறித்து மீண்டும் வீட்டில் புகார். ஒரு நல்ல புத்தகத்தையோ, நல்ல கதைகளையோ படிக்கமுடிவதில்லை. மனம் சரியில்லையே என்று நேற்று ஆபிதீனின் குறு நாவலான ‘கடை‘யை எடுத்து மறுவாசிப்பு செய்தேன். மனம் விட்டும் சிரித்தேன்.

இப்படிச் சில நேரம் தி.ஜானகிராமனின் ‘பத்து செட்டி’, ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’, எஸ்.ராம கிருஷ்ணனின் ‘உலகம் ஓர் பெரிய எழுத்து கதை! போன்றவற்றை
தேர்வு செய்து மனம் விட்டுச் சிரித்து வைப்பதுண்டு. நேற்று, ‘கடை’ படித்து அப்படி அநியாயத்துக்கு சிரித்து தப்பாகிவிட்டது.

என்னைப் பார்க்க என் அம்மா, பழைய வீட்டில் இருந்து வந்திருந்தார்கள். இப்படி, எனது புதிய வீட்டிற்கு எப்பொழுதாவதுதான்! ‘நல்லது கெட்டது’ என்கிற அளவில் பார்க்க
வருவார்கள்.

அப்பப்ப வரவும் அவர்களால் முடிவதில்லை. வயதாகிவிட்டது. இறப்பு எந்நேரமும் வரும் என்கிற கணக்கில் தான் பிறந்து வளர்ந்த அந்தப் பழைய வீட்டை விட்டு
வெளியே நகர்வதும் கிடையாது. ‘மௌத்’என்றால் அது அங்கேதான் நடக்கணும் என்பது அம்மாவின் திண்ணம். இப்பொழுது வந்திருக்கிறார்கள். அவர்களது திண்ணத்திற்கு
பாதகம் வந்துவிடக் கூடாது.

என் அம்மாவை, என் மனைவியும் மகளும் குசலம் விசாரித்தபடியே வரவேற்றார்கள். துப்பட்டியைக் கழட்டச் சொல்லி, மகள்வாங்கி உதறி மடித்து வைத்தாள்.

“எம் புள்ளெ எங்கே?”

”அறையிலதான் இருக்கு.”

பேத்தியை இழுத்து முத்தம் தந்தவர்களாக,

“காலையிலே இந்தப் புள்ளெ போன் செய்யவும் என்னமோ ஏதோன்னு பதறிட்டேன். கையும் ஓடல காலும் ஓடல. என்ன செய்து அவனுக்கு? நம்ம குடும்பத்துக்கு அந்த
மாதிரியெல்லாம் ஒன்னும் வராது. நம்ம யாருக்கு என்ன செஞ்சோம்? எனக்குத் தெரிஞ்சி நம்ம குடும்பத்திலயும் சரி, நம்ம சொந்தபந்தத்துலேயும் சரி இப்படி யாருக்கும்
வந்ததில்லம்மா! அல்லா ரசூல்தான் காப்பாத்தணும்.”

“ஒண்ணுமில்ல மாமி, அது என்னமோ ராத்திரி சிரிச்சிச்சின்னு இவ பயந்துட்டா. அது எப்பவும் இப்படிதான் ஒண்ணுகிடக்க ஒண்ணைப் படிச்சிட்டு சிரிக்கும். அதுக்கோசரம்
காலங்காத்தாலெ உங்களுக்கு போன் செஞ்சி சொல்லிருக்கா.”

“இப்படிதாம்மா.. ஒரு மாசமா அத்தா, ராத்திரிக்கு ராத்திரி சிரிக்குது.”

எங்க அம்மாவை என் மகளும் அம்மா என்றுதான் அழைப்பாள்! எல்லா கூத்தையும் அறையில் இருந்து கேட்டபடியும், கதவின் கொஞ்சம்போல திறப்பால்…. குறுக்காலத்
தெரியும் சில காட்சிகளைப் பார்த்தபடியும் இருந்தேன்.

“அவன் சும்மா சிரிச்சிருப்பாண்டி.”

“சும்மா… போம்மா நீ…. ராத்திரில அப்படி சிரிக்கறதே கேட்கிறப்போ… எனக்கு என்ன பயமா இருக்கு தெரியுமா!”

“நீ தூங்க வேண்டியதுதானே? நீயேன் முழிச்சிட்டி கெடக்கே?”

“அத்தாவுக்கு உடம்பு சரியில்லங்கிறப்போ எப்படிமா தூக்கம் வரும்?”

“முதல்லே இவளுக்கு ஓதிவிடணும்! புள்ளெ ரொம்ப பயந்திருக்கா. ஏண்டி.. அத்தா மேலே இவ்வளவு அக்கறையா இருக்கேயே ‘குல் அவூதுல்ல மூணுதரமும்,
குல்ஹூவல்லாவுலே மூணுதரமும், ஓதிட்டுப் போயி அத்தா மேலே ஊதிவிட்டா என்ன? காத்துக்கருப்புன்னு ஒண்ணும் அண்டாதுல்ல.”

“நல்லா….. ஓத விடுமே! போடி…. பைத்தியக்காரி…ங்கும்.”

“அப்படிதான் சொல்லுவான். நான் ஓதிவிடுறேன்னாலும் காட்டிக்க மாட்டான். அதெ இதெ படிக்கிறான்ல.. அதான்.. தான்தான்னு நிக்கிறான். ரப்புல் ஆலமீன் எப்பத்தான்
அவனுக்கு நல்ல புத்திய கொடுக்கப் போறானோ!”

“ஆமாம்மா.. எப்பப்பாத்தாலும் எதையாவது படிச்சிகிட்டுதான் இருக்கு. இல்லாட்டி எழுதுது. கைவலிக்காது?”

“எங்க அம்மா மௌத்தாவுறத்துக்கு முன்னாடி இவனெப் பத்திதான் கவலைப் படுவாங்க. இப்படி எழுதிட்டு படிச்சிட்டே இருக்கானே…. ‘எங்கே கூத்தாடியா
போயிடுவானோன்னு’ என்கிட்ட எத்தனைதரம் கவலைப்பட்டிருக்காங்க! ‘அறிவை அறிவு அறுத்திடும்டா பாவா…ன்னு’ அவன் கிட்டே தன்மையா எடுத்துச்
சொல்லியிருக்காங்க.. கேட்டாத்தானே இவன்!. நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன், இப்படி படிச்சிகிட்டே இருக்காதேடா மூளை கெட்டுடும்ன்னு. புள்ளையா
பொறந்ததுங்க தாய் தகப்பன் சொல்றதெ பெரியவங்க சொல்றத கேட்கணும்!”

“ஆமாம்மா அத்தாவுக்கு மூளைத்தான் கெட்டிடுச்சி. டாக்டர்கிட்டே கூப்பிட்டுப் போயி காமிம்மா… நீ கூப்பிட்டாதாம்மா வரும்.”

என் அம்மாவுக்கு காப்பி போட்டு எடுத்து வந்து தந்தவளாக என் மனைவி, “இவ ஒருத்தி.., அதுக்கு அதெல்லாம் ஒண்ணுமில்லடி” என்றாள் மகளிடம்.

“துபாயிக்கு போறதுக்கு விசா ஏற்பாடு செய்திருக்குன்ணு சொன்னியே… இன்னும் ஆவுலியா?”

“அதான் கவலை அதுக்கு. சம்பாத்தியம் இல்லாம வூட்லயே இருக்குல.. நான் வேற அப்பப்ப சத்தம் போடுறேன்ல… அதான்… அது சோம்புன மாதிரி அதை இதை
செஞ்கிட்டு, ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிகிட்டு, பத்தும் பத்தாதுக்கு சிரிச்சுகிட்டுவேற… கெடக்கு.”

“அப்படிதான், அவன் பயணம் போறவரை சத்தம் போட்டுகிட்டே இரு… இல்லன்னுவையி, இப்படியே சுத்த ஆரம்பிச்சுடுவான்! இல்லெ…. படிக்கிறேன்ணு கிளம்பிடுவான்.
புள்ளையா பொறந்ததுங்க சம்பாதிச்சி சொத்தா வாங்குதுங்க, இவன் புஸ்தகமா வாங்குறேங்குறான், இந்த அநியாயத்தே எந்த அல்லாட்ட சொல்றது?”

“அதான் சத்தம் போட்டுகிட்டேதான் இருக்கேன். பொறுப்பு வரட்டுமேன்ணு. அது என்ன நினைக்கிதோன்னுவேற பயமா இருக்கு. அந்த விசா இன்னும் ரெண்டுநாள்ளெ
தபால்லெ வந்து கெடைச்சிடும்ணு போன் வந்துச்சி. போன் வந்தும் நாலு நாளாச்சி இன்னும் அது வந்து கிடைக்கல.”

“அதானெ பார்த்தேன். எனக்கு அந்த ரோசனை உதிக்கல! நான் என்னமோ ஏதோன்னு சின்னவன் கரீம்டெ வேற சொன்னேன். அவன் என்னன்னா, இது ஏதோ பெரிசோட
சேட்டை மாதிரி தெரியுது. மஞ்சக்கொல்லை ஹஜிரத்துகிட்ட போன் போட்டு பேசிட்டு வரேன்ணு போயிருக்கான்.”

ஆமாம், கரீம் என் தம்பி! தாடியெல்லாம் வச்சிகிட்டு எனக்கு அண்ணன் மாதிரி இருப்பான்! அவனுக்கு வீட்டை விட்டா பள்ளிவாசல்தெரியும், பள்ளிவாசலை விட்டா கடை
தெரியும். அங்கேயும் போயி உட்கார்ந்துக்கிட்டு வியாபாரம் செய்கிறானோ இல்லையோ குரான் ஆயத்தை ஓதிக்கிட்டே இருப்பான். கேட்டா பரக்கத்துக்காக என்பான். மூணு
லட்ச ரூபா முதல் போட்டு வியாபாரம் ஆரம்பிச்சான். இப்போ கடையும் அவனும்தான் பாக்கி. என்னடான்னு கேட்டா, ‘யாரோ செய்வினை’ வச்சிட்டதா சொல்றான்.

அவன் கிட்டெ யாராவது போயி உடம்பு சரியில்லைன்னு சொன்னா, ஒண்ணு நாட்டு மருந்தைப் பற்றி அவர்களிடம் பேசத் தொடங்கி விடுவான். குறிப்பா ஆடாதொடை
இலையைப் பற்றி – அதன் மருத்துவ மகிமைகளைப் பற்றி போதும் மட்டும் பேசுவான் அல்லது மஞ்சக்கொல்லை ஹஜரத்தைபோயி பாருன்னு சிபாரிசு செய்வான். இப்ப
என்னைப் பார்க்காமலேயே மஞ்சக்கொல்லை ஹஜிரத்துட்டெ அனுப்புறதுன்ணு முடிவு செய்திருக்கான். அண்ணேதானேன்ணு என் அனுமதியை, உரிமையோடு
எடுத்துகிட்டுயிருக்கான்!

ஹால் கடிகாரம் பன்னிரெண்டு மணி அடித்தது. போஸ்ட் மேன் வரும் நேரம். போஸ்ட்மேன் வாசலில் கூப்பிடுவதா மகள் சொன்னாள். அறையை விட்டு வெளியே
வந்தேன். “என்னடா செய்யுது”?ன்னு கேட்டாங்க அம்மா.

“போஸ்ட்மேனை பார்த்துட்டு வறேன். தம்பி கரீமிடம் சொல்லி உங்க ரெண்டுபேரையும் மஞ்சக்கொல்லைக்கு அனுப்பி வைக்கிறேனா இல்லையா பாரு!” – இன்னொரு
உலகம் எனக்கு நழுவிப் போனதில் சொல்ல முடியாத ஆத்திரம்வேறு.

“இப்படித்தான் மாமி, ஒண்ணுமில்லாததுக்கெல்லாம்….. கோபப்படுது.”

“ஆமாம்மா” என்றாள் மகள்.

“அவன் கிடக்கறான், நீ போயி அவனுக்கு காப்பி எடுத்துகிட்டு வா” என்றார் அம்மா.

வாசலில் போஸ்ட்மேன் ரிஜிஸ்டரோடு நின்றார். கையொப்பம் இட்டு வாங்கிப் பிரித்தேன். உள்ளே, மீண்டும் குல வழக்கத்தைத் தொடர புதியதோர் அனுமதி!

*

நன்றி : திண்ணை

‘மொழி, அழாதே..’ – தாஜ்

மறைந்த உயிர் நண்பர் சீர்காழி தாஜ் பற்றி அவரது முகநூல் தோழி அமுதமொழி எழுதிய கண்ணீர் புகழ் நினைவஞ்சலியைப் பகிர்கிறேன்.

*

வாழ்க்கை பள்ளத்தாக்கை சாடித் தாவி கடக்க முனைந்த நவ கலைகளின் ஈடுபாடு மனிதகுல மேன்மைக்கு அழகும்- கீர்த்தியும் சேர்க்குமென நம்பும் இன்னொரு நண்பனை நான் எங்கே தேடுவேன்.

உள்ளொளி பிரவாகம் ஓயாமல் சலசலத்து ஓடிய உங்கள் ஆன்மா பல யதார்த்தம் மீறிய கற்பனையில் தளும்பிய வண்ணம் இருப்பதைப் பதிவுகள் மூலம் அறியத்தந்தீர்கள் தாஜ்.

ஒரு இஸ்லாமியராக பிறப்பால் இருந்தபோதும் மதம் பற்றிய தீவிர சிந்தனையோ நம்பிக்கையோ இல்லாதவர் நீங்கள்.

மனித நேயமும் மனிதகுல ஜீவிதமும் மட்டுமே நீங்கள் கேட்ட கேட்க காதலுற்ற இன்னிசை.

உங்கள் தீவிர அரசியல் பதிவுகளைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு என் அப்பாவின் நினைவு வரும். அவரும் அப்படித்தான் ஆங்கில இந்து பேப்பரை ஒரு வரி விடாமல் படிப்பார். ரேடியோவினை காதருகில் வைத்து செய்திகளை கேட்டபடியே இருப்பார்.

ஆரியத்தின் மனிதகுல வெறுப்பரசியலுக்கு மாற்றாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைத் தலைவர் ஸ்டாலின் மீது அதி நம்பிக்கை கொண்டிருந்தீர்கள்.

உங்கள் அரசியல் பதிவுகள் முகநூல் வழி அரங்கேற்றம் காண்பதைத் தடைச் செய்ய உங்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் வராமல் செய்து விட்டார்கள் என்று கூட பதிந்துள்ளீர்கள். நான் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இப்படி கூட நடக்குமா என்று.

இயற்கை நேசர் நீங்கள். நான் ஒரு முறை என் வீட்டருகில் இருக்கும் வனக் காளியின் படத்தையும் அதன் அமைவிடத்தையும் வர்ணித்து எழுதிய பொழுது அதைப் பார்க்க வேண்டும் என்று அவாவுற்றீர்கள்.

நான் வாருங்கள் என்று சொன்னபொழுது ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வருவதாக கூறினீர்கள்.

இலக்கியம் பற்றி என்னுடன் பேச வேண்டும் என்று என்னைக் கூட சீர்காழி வரும்படி அழைத்தீர்கள். “பேருந்து நிறுத்தத்திற்கு எதிர் வீடே மொழி ” என்று வழி கூட சொன்னீர்கள்.

என் வீட்டில் போர்டிகோவில் இருக்கும் டைல்ஸ் போல நீங்களும் போட்டுள்ளதைச் சொன்னீர்கள்.

ஏதோ மனச்சோர்வு உடலின் உபாதைகள் வாழ்வின் நளிந்த நாட்கள் நான் சோர்வுற்று மரணம் பற்றி ” வந்தால் தேவலாம் “என்று சொல்கிறேன் ” நீங்கள் நல்ல உற்சாகமாக இருக்கும் பொழுது இதைப் பற்றி நிறைய பேசலாம் ” என்று சொல்லி உடனே மரணம் பற்றிய உரையாடலைத் தவிர்த்தீர்கள்.

ஆனால் இன்று அக்கொடிய மரணத்திலேறி மரணத்தின் வசனங்களை எனக்கு உபதேசம் செய்கிறீர்கள்

உங்கள் சிந்தனை செயல் இரண்டும் இலக்கியமும் இந்திய மக்களின் நலனும் என்ற இரட்டை புரவிகளின் மீதே சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததை இந்த உலகம் அறியத் தந்தீர்கள்.

இந்த முகநூல் பயணத்தில் உங்களைப் பற்றிய பல அரிய தகவல்களை உங்கள் வாழ்க்கை நெறியை இலட்சிய நகர்வை அறியத் தந்தீர்கள்.

உங்களுக்கு உங்கள் தாயின் மீதும் மனைவி மீதும் உங்கள் மகள் மீதும் குழந்தைகள் மீதும் பேரக் குழந்தைகள் பேத்திகள் மீதும் இருந்த அன்பினை உங்களுக்கே உரிய வாஞ்சையுடன் அறியத் தந்தீர்கள்.

அதில் ஒரு துளியினை உங்கள் பரிவும் பாசமும் மிக்க நட்பின் வழி நானும் துய்த்திருக்கிறேன்.

நாடு இனம் மதம் கடந்த உங்கள் அன்பின் பரந்துபட்ட விசாலத்தை அறிந்திருக்கிறேன்.

நீங்கள் எங்கோ சீர்காழியில் நானோ காவேரிப்பட்டணத்தில்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நேரில் பேசிக் கொண்டதில்லை .

எல்லாம் இந்த இணைய வழி தொடர்பு மட்டுமே.

ஆனால் உங்கள் மரணம் ஏற்படுத்தும் துக்கம் தாளாமல் இரவெல்லாம் அழுது அழுது மனம் இறுகிவிட்டது.

ஏன் என்று தெரியவில்லை புரியவுமில்லை.

நீங்கள் எனக்கு என்ன உறவு. உங்கள் மரணம் என்னை ஏன் இவ்வளவு பாதிக்கின்றது.

கேள்விகள் விடையற்ற கேலி செய்யும் கேள்விகள்.

மனித மனம் அதன் நுட்பத்தில் உணரும் உன்னதம் மிக்க உணர்வுகள் காரண காரியங்களை கடந்தவை என்பதை மட்டுமே நான் அறிகிறேன்.

தேற்றுவார் இன்றி அழுதபடி இருக்கும் என் காதுகளில் ” மொழி அழாதே ” என்று சொல்லிப் போக வருவீர்கள் என்று காத்திருக்கிறேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாஜ் பிரிய நண்பரே!

*

Thanks : Amuthamozhi Mozhi

சிவகாமியின் மரணம் – அசோகமித்திரன்

இந்தியா டுடே (மே 26, 1999) இதழில் வெளியானது.  பக்கங்களை தபாலில் அனுப்பிவைத்த நண்பர் தாஜ் , கதையை வியந்து இப்படி அந்தத் தாளில் எழுதியிருந்தார் :

*

சிவகாமியின் மரணம் – அசோகமித்திரன்

புத்தகத்தை வாங்கி இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இப்போதுதான் நான்காம் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. சிவகாமியின் மரணம் 29-5-1958.

புத்தகம் பைகிராப்ட்ஸ் சாலை நடைபாதை புத்தகக் கடை ஒன்றில் வாங்கியது. அந்த சாலையை இப் போது பாரதியார் சாலையாகப் பெயர் மாற்றியிருக்கிறது. முன்பும் பல கடை கள் இருந்தன. இப்போது பெரிய, பகட்டான கடைகள். நடைபாதை பாதியாகக் குறுகிவிட்டது. தரையில் புத்தகங்களைப் பரப்பி வைக்க அதிக இடம் இல்லை . பொதுவாகப் பழைய புத்தகக் கடைகளில் நின்றபடி நாம் வேண்டும் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்க முடியாது. இப்போது அந்தப் பழைய புத்தக் கடை முன்னால் உட்கார முடியாது. அச்சமெழுப்பும் போக்குவரத்தில் சில விநாடிகளுக்குள் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, மோட்டாரோ கூட இடித்துத் தள்ளி விடும். பழைய புத்தகங்கள் வாங்குவதை அநேகமாக நிறுத்திவிட்டதற்குக் கண், பார்வை மங்கி வருவது மட்டும் காரணமில்லை.

புத்தகம் ‘செயிண்ட் ஜோன். பெர்னார்ட் ஷா எழுதிய நாடகம். அதை அவர் 1924ல் எழுதி அடுத்த வருடம் நோபல் பரிசு பெற்றுவிட்டார். ஆனால் நான் வாங்கிய புத்தகம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அச்சிடப்பட்டது. பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகளுக்காக மலிவான தாளில் மலிவுப் பதிப்பாகப் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டது. யாரோ ஜான் – ஸ்மித் என்பவர் 1944ல் வாங்கியிருக்கிறார். இங்கிலாந்திலேயே வாங்கியிருக்கக் கூடும். அவருக்கு அந்த நாடகம் பிடிக்காமல் போயிருக்கலாம். ஜோன், பிரெஞ்சுக்காரர்கள் சார்பில் இங்கிலாந்துக்காரர்களோடு போரிட்டு வென்றவன். அப்படி இருந்தும் பிரான்சு நாட்டுப் பெரிய தலைகள் சேர்ந்து கொண்டு – அந்த பட்டிக்காட்டுப் பெண்ணை இங்கிலாந்துக்காரர்களுக்கே விற்று விட்டன. பதினேழு, பதினெட்டு வயதில் வெறும் கத்தியும் ஈட்டியும் வைத்துக் கொண்டு ஒரு படைக்குத் தலைமை தாங்கி வெற்றிகளை வாங்கித் தந்த அந்தப் பெண்ணை அவள் நாட்டுக்காரர்களே எதிரிகளிடம் விற்று விடுகிறார்கள்! இங்கிலாந்துக்காரர்கள் ரோஷமுடையவர்கள். பய பக்தி கொண்டவர்கள். நல்ல கிறிஸ்தவர்கள். அவர்கள் மானம் போகும் படியாக அவர்களைத் தோற்கடிக்கும் ஆற்றல் படைத்த இளம் பெண் சூனியக்காரியாகத்தான் இருக்க வேண்டும். சாத்தானின் கைக்கூலியாக இருக்க வேண்டும். கொளுத்து அவளை உயிரோடு! வேத முழக்கங்களுடன் அந்தப் பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண் உடல் கருகி ரத்த நாளங்கள் வெடித்துத் துடிதுடிக்கச் செத்தாள்.

ஜான் ஸ்மித்துக்கு ‘செயிண்ட் ஜோன்’ நாடகம் பிடிக்காமல் போனதற்கு இன்னும் கூடக் காரணங்கள் இருக்கலாம். இரண்டாம் உலக யுத்தத் தில் இங்கிலாந்துக்காரர்களும் பிரெஞ் சுக்காரர்களும் நேச நாடுகள் சேர்ந்து ஜெர்மனியோடு சண்டை போட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த ஆயிரமாண்டுப் பகையும் போட்டியும் எங்கே போய் விடும்?

ஜான் ஸ்மித் எறிந்துவிட்டுப் போன ‘செயிண்ட் ஜோன்’ புத்தகம் எஸ். ராதாகிருஷ்ணன் என்பவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. அவர் அதை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கி யிருக்கலாம். ஜான் ஸ்மித் பெயரை அடித்து விட்டுத் தன் பெயரை எழுதி இருக்கிறார். ஜான் ஸ்மித்தே அந்தப் புத்தகத்தை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்திருக்கலாம். ராதாகிருஷ்ணன் பெர்னார்ட் ஷா நாடகத்தைப் படித்து ரசிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஜான் ஸ்மித், ராதாகிருஷ்ணன் இரண்டு பேருமே யுத்தக் கைதிகளாக சிங்கப்பூரில் இருந்திருக்கலாம். ராதா கிருஷ்ணனுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்தில் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜான் ஸ்மித் யுத்தம் முடியும் வரை யுத்தக் கைதியாகவேதான் காலம் தள்ளியிருக்க வேண்டும். எஸ். ராதாகிருஷ்ணன் – இவர் இந்தியாவின் உப ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்தவரல்லவா? அந்த மனிதர் ‘செயிண்ட் ஜோன்’ நாடகத்தைப் படிக்கும் ரகமா? அவர் ஏதாவது பழைய புத்தகக் கடையில் வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் புத்தகங்களைப் பழைய புத்தகக் கடையில் போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் பெயர் உள்ள சாலையில் அவருடைய வீடு அவ்வளவு பெரியது. இந்த ராதாகிருஷ்ணன் பெயர் எழுதப்பட்ட பக்கத்தின் பின்புறத்தில்தான் ‘சிவகாமியின் மரணம் 29-5-1958* என்று இருந்தது. உண்மையில் இந்த மூன்று கையெழுத்துக்களில் மரணம் குறித்து எழுதியதுதான் பளிச்சென்று யார் கவனத்தையும் கவரக் கூடியதாக இருந்தது. ஆனால் அதைத்தான் இருபத்தைந்து வருடங்கள் பார்க்கத் தவறியிருக்கிறேன்.

நாடகத்தையாவது இன்னொரு முறை படித்து விடலாமா? ஜோனுடைய வாழ்க்கைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள இந்த நாடகம் போதாது. பெர்னார்ட் ஷா ஏனோ எல்லா நேரமும் தான் ஒரு அதி புத்திசாலி என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மனிதர்களைவிட மனிதக் குழுக்கள், சமூகம், சமூக அமைப்புகள் மீது அவர் கணிப்புகளும் கண்டுபிடிப்புகளும்தான் முக்கியம். அவரைப் போலவே அவருடைய பாத்திரங்களும் கெட்டிக்காரர்கள். கெட்டிக்காரர்களிடம் ஒரு சங்கடம், அவர்கள் வார்த்தைகளைப் பிறர் மீது அள்ளிக் கொட்டுவதுபோல அவர்கள் மீதே அவற்றை வாரி இறைத்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனதில் அவை ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த இரைச்சலில் சில உண்மைகள் அளையக் கிடைக்காமல் தவறி விடும். பெர்னார்ட் ஷா தன் நாடகங்களில் அவ்வப்போது வரலாற்று நாயகர்களைப் பாத்திரங்களாகப் பயன்படுத்திக் கொண்டாலும் அவர்களைக்கூட சமூகப் பிரதிநிதி களாக மாற்றி விடுவார். ஒரு வேளை அதுதான் சரியான பார்வையோ?

கடவுளின் காவலர்கள் எனத் தங்களை அறிவித்துக் கொண்டவர்களால் உயிரோடு கொளுத்திக் கொல்லப்பட்ட அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணை 1920ஆம் ஆண்டில் தெய்வக் கிருபை பெற்றவள் என்று கடவுளின் காவலர்கள் அறிவித்துக் கொள்ளும் இன்னொரு கிறிஸ்தவ சபை அறிவித்தது. ஐநூறு ஆண்டுகள் முன்பு தெய்வ விரோதி, சூனியக்காரி, மதச் சத்ரு என்று சொல்லி உயிரோடு எரிக்கப்பட்ட அந்தப் பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண் திடீரென்று பத்திரிகைச் செய்திகளில் முதலிடம் பெற ஆரம்பித்தாள். புனித ஜோன் ஆனாள். உடனே அவள் பற்றி நூல்கள். நாடகங்கள். இங்கிலாந்தின் பங்குக்கு பெர்னார்ட்ஷா நாடகம் என்றால் அமெரிக்காவின் பங்குக்கு மாக்ஸ்வெல் ஆண்டர்சன் நாடகம். பேசாத் திரைப்படம் பேசத் தொடங்கியவுடன் உரத்த பின்னணி இசையுடன் மேலும் திரைப்படங்கள்…

எஸ்.ராதாகிருஷ்ணன் ‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடிய நாட்களில் ஜோன் பழைய செய்தியாகிவிட்டாள். அந்த நாளில் இன்ஸி என்ற பெயர் கொண்ட தொரு அமெரிக்க மனத்தத்துவ மருத்துவர் ஆண்கள் – பெண்கள் எல்லாமே நம்பக்கூடியவர்கள் அல்ல என்று புள்ளி விபரக் கணக்கு தந்தார். அவர் தன்னுடைய கூற்றை எல்லாக் காலத்துக்கும் விஸ்தரித்தார். மனிதரில் புனிதத் தன்மையே சாத்திய மில்லை . பதினெட்டு வயதுப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்குக்கூட.

ஆனால் எல்லாக் காலத்திலும் நிறையப் பெண்கள் பதினெட்டு, பத்தொன்பது வயதில் இறந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் எழுதப்பட்ட கதை, நாவல் என்று எதை எடுத்தாலும் இளையாள், சித்தி, சிற்றன்னையின் பிள்ளைகள் என்று நிகழ்ச்சிகள் போகும். சரத் சந்திரர் கதைகளில் முதல் மனைவி பூரண ஆயுள் பெற்றிருந்தாள் என்ற பேச்சே கிடையாது. பெண்களுக்குப் பத்து வயதிலும் பனிரண்டு வயதிலும் கல்யாணம். பதினைந்து வயதுக்குள் கையில் ஒரு குழந்தை. பத்துப் பதினைந்து நபர்கள் உடைய குடும்பத்தின் வீட்டு வேலை. மாமியார், நாத்தனார் மரபுக் கொடுமை. இந்த நிலையில் எப்படி ஒரு பெண் தீர்க்காயுள் கொண்டிருக்க முடியும்? இந்தப் பத்து வயதுக் கல்யாணம் இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளான பிறகு நல்ல வசதியுள்ளவர்கள் குடும்பங்களில் கூட நடந்திருக்கிறது. வாய் கிழிய ஊருக்கு உபதேசம் பண்ணுகிற அமைச்சர் ஒருவர் தன் பதினைந்து வயதுப் பெண்ணுக்குப் பல கோடி ரூபாய் செலவழித்துக் கல்யாணம் செய்வித்தார். ராஜகுடும்பத்தைச் சேர்ந்த அவர், ரயில்வே மந்திரி. தன் ஊர் ரயில் நிலையத்தைச் சலவைக்கல்லால் இழைத்து விட்டார். சென்னை ஆட்டோ ரிக்ஷாக்களில் மட்டும் தான் பெண்ணின் திருமண வயது 21. அந்த அமைச்சரைச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை.

சிவகாமி அற்பாயுளில்தான் போயிருக்க வேண்டும். இல்லாது போனால் அவளுடைய சாவை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்திருப்பார்களா? சுத்த சைவப் பெயர். தகப்பனார் பட்டை பட்டையாக விபூதி தரித்துக் கொண்டிருப்பார். அது ராதாகிருஷ்ணனாக இருக்க முடியாது. புத்தகம் மூன்றாவது கை மாறியிருக்கிறது. ‘செயிண்ட் ஜோன்’ போன்ற புத்தகங்களை யாராவது அடிக்கடி பார்க்கக் கூடிய இடத்தில் வைப்பார்களா? தினமும் பார்த்துப் படித்து ரசிக்கக்கூடிய புத்தகம் இல்லை அது.ஒரு முறை படித்து விட்டு எங்கோ மூலையில் பாது காப்பாக வைத்திருப்பார்கள். ஆதலால் இந்தப் புத்தகம் அந்த மூன்றாவது நபர் கையில் கிடைத்த ஓரிரு தினங்களுக்குள் சிவகாமியின் மரணம் நிகழ்ந்து விட்டது.

சிவகாமி, சிவகாமிநாதன். சிவகாம சுந்தரம், சிவகாமி நடராஜ சுந்தரம்… சிவகாமி என்று தொடங்குகிற பெயரை ஆண்களுக்குத்தான் நிறைய வைத்திருக்கிறார்கள். பெண்களுக்குப் பெயராக இரண்டாம் யுத்த காலத்தில் தான் இது அதிக அளவில் புழக்கத்துக்கு வந்தது. கல்கி எழுதி வந்த தொடர்கதையான ‘சிவகாமியின் சபதம் தான் இதற்குக் காரணம். பார்த்திபன், விக்கிரமன், குந்தவி, அருண்மொழி, நரசிம்மன், பரஞ் சோதி என இன்னும் சில பெயர்களும் குழந்தைகளுக்கு வைக்கக் கருதப்பட்டன. ‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சிவ காமி அது அச்சிடப்பட்ட ஆண்டில் கூடப் பிறந்திருக்கலாம். சிவகாமி இறந்தபோது பதினான்கு அல்லது பதினைந்து வயது. பதினைந்து வயது வளர்ந்த குழந்தையை இழக்க நேருவது எவ்வளவு கொடுமை? செயிண்ட் ஜோன் மரணம் போலவே. ஒரு வித்தியாசம். இந்த நாளில் யாரையும் உயிரோடு கொளுத்துவது இல்லை . அப்படியும் கூறுவதற்கில்லை. வெறும் பத்திரிகைச் செய்திகளின்படியே, தமிழ்நாட்டிலேயே ஓராண்டுக்கு எழுநூறு, எண்ணூறு பெண்கள் இந்தக் கதிக்கு ஆளாகிறார்கள். பட்டிக்காட்டுப் பெண். ஜோன் கொளுத்தப்பட்ட காலத்திற்கும் இப்போதைக்கும் உள்ள ஒரு வித்தியாசம், பெண்களைச் சூன்யக்காரி என்று பெயர் சூட்டிக் கொளுத்துவதில்லை .

‘செயிண்ட் ஜோன்’ புத்தகத்திலிருந்து மூன்று, நான்கு எண் பக்கங்களுடைய தாள்களைக் கிழித்தேன். சிவகாமியுடன் ராதாகிருஷ்ணன், ஜான் ஸ்மித் ஆகிய பெயர்களும் அகன்று விட்டன. இப்போது ‘செயிண்ட் ஜோன்’ நாடகத்தை என்னால் முறையாகப் படிக்க முடிந்தது.

***

ஓவியம் : எஸ். என். வெங்கட்ராமன்

வாசகர் பார்வை : ‘தங்ஙள் அமீர்’

மறைந்த உயிர் நண்பர் தாஜ் (எழுதும்போதே கண்ணீர் வருகிறது எனக்கு) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பான ‘தங்ஙள் அமீர்’ பற்றி சகோதரர் முஹம்மது சுஹைப் முகநூலில் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளரா என்று ஆச்சரியப்படும் சுஹைப், யாரென்றே தெரியாமற் போனாரே தாஜ் என்று உருகுகிறார்.

பதிவில் கண்ட மறுமொழிகளையும் கீழே இணைத்திருக்கிறேன். – AB
*

தமிழில் இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இருந்தார் என்றே ரொம்ப நாட்களுக்குப் பிறகு… எனக்கு இந்தப் புத்தகம் பார்த்துதான் தெரியும்.

சீர்காழியைச் சேர்ந்த தாஜ் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை .மிகச்சமீபமாகத்தான் இவர் நம்மை விட்டும் மறைந்தார் என்ற தகவல் கூட அருமை நண்பர் நிஷா மன்சூர் சொல்லித்தான் தெரியும்.

இப்படித்தான் சிலர் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்து போகின்றனர்.

அவரது அடர்த்தியான எழுத்துக்களைக் கொண்ட ’தங்ஙள்அமீர்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை ..வாசிக்கும் போது இவர் இருக்கும் போது இவரை அறியாமற் போனோமே என்ற வருத்தமே மேலோங்கியது.

சிறுகதை என்ற இலக்கணத்தையும் மீறிய சற்றே பெரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது…நாலோ…ஐந்தோ கதைகள்தான் உள்ளன.

பொதுவாக… தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து எங்கள் பக்கம்…அல்லது குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததான கதைகளையே நான் பெரிதும் வாசித்துள்ளேன். ஆனால்…முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கிறார்களே…இல்லையா…?

கீழ்த் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை…மிக நேர்த்தியாக .எனதுமுதல்திருமணம்… பெருநாள்காலை..போன்ற கதைகளில் மிக விரிவாக சித்தரிக்கிறார்….

தொகுப்பின் தலைப்புக் கதையான ’தங்ஙள் அமீர்’ கதை முழுக்க சவூதி அரேபியா தம்மாம் மற்றும் ரியாத் நகர்களில் நடக்கிறது…இந்த இரண்டு ஊர்களிலுமே நான் பணி செய்தவன் என்பதால் இக்கதையும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது…

இந்தியாவிலிருந்து மாந்ரீகம் செய்யும் ஒரு கேரளத் தங்ஙள் மும்பை வந்த ஒரு அரபியின் அழைப்பை ஏற்று அவன் காதலிக்கும் ஒரு பெண்னை மாந்த்ரீக சக்தியால் அவனோடு சேர்த்து வைக்கும் பொருட்டு அவனோடு ரியாத் சென்று… அது முடியாத காரணத்தால் எங்கே அந்த அரபி தன்னை நாடு திரும்ப அனுமதிக்க மாட்டானோ…?என்ற அச்சத்தில் கேரள முஸ்லிம்களிடம் தஞ்சமடைய…அவர்கள் தங்களது செல்வாக்கை பய்படுத்தி தங்ஙளை இந்தியாவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் செயலை…மிக அற்புதமாக சித்தரிக்கிறது கதை.

சவூதிக்கு ஒரு முதலாளியிடம் வேலை செய்ய வந்து அந்த முதலாளியின் அராஜகம்…பிடிக்காததால்…அவனை விட்டும் தப்பி…வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்து…நாலைந்து ஆண்டுகள் உழைத்த பொருளோடு ..இறுதியாக இந்தியத் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து பிறகு தூதுவரகம் வழங்கும் தற்காலிக பாஸ்போர்ட்டில் தாய்நாடு திரும்பிய பலரது கதைகளை நான் அங்கிருக்கும் போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

தங்ஙள் கதையும் அம்மாதிரியானதுதான். என்ன வழக்கமான கூலித் தொழிலாளியாக இல்லாமல் சற்று மேல் மட்ட கதையாக இது சொல்லப்படுகிறது

“எனது முதல் திருமணம் “கதை தாஜ் சிறுவயதாக இருந்த போது… விளைச்சல் இல்லாத தென்னை மரத்துக்கு திருமணம் செய்து வைத்தால்…விளைச்சல் பெருகும்..என்ற பாரம்பர்ய கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையையொட்டி….அந்த தென்னை மரத்துக்கு தாஜையே திருமணம் செய்து வைத்த கலகலப்பான நிகழ்வை… அங்குள்ள முஸ்லிம்களின் பேச்சு நடையில் சித்தரித்துள்ளார்..

பெருநாள் காலை’யும் அதே மாதிரியான ஒரு முஸ்லிம்கள் வாழ்வியல் சித்தரிப்புதான்.

இறந்தவன் குறிப்புக்கள்’ மிகவும் அடர்த்தியான இலக்கியச் சொல்லாடல்கள் மிகுந்த கதை.இப்படியான எழுத்துக்களை எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் கூட…இருந்திருக்கிறார்களா..? என்று என்னை வியக்க வைத்த ஒரு நிரூபணம் .

தாஜ் பத்திரிக்கைகளில் எழுதியவரா…? என்று தெரியவில்லை.

எனக்குத்தான் தனிப்பட தெரியாமல் போனாரா…? அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா….? என்பதும் தெரியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். யாரென்றே தெரியாமற் போனது ஒரு இலக்கிய சோகம்.

*

Thanks to : K S Mohammed Shuaib

*

மறுமொழிகள் :

Firthouse Rajakumaaren Nazeer : ஒரு சிறந்த இலக்கிய வாசகர் கவிஞர் ,எழுத்தாளர் தாஜ் அவர்களைத் தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக இருக்கு ஜி !

நிஷா மன்சூர் : பெரும் சோகம் இது. தமிழ்ச் சூழலில் படைப்புகளை விட படைப்பாளிகளின் பாலிடிக்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது

Slm Hanifa : எனக்கு பத்துவருடங்களுக்கு முன்னரே அறிமுகமானார்.. ஆபிதீன் பக்கங்களை அவர் எழுத்துக்கள் அலங்கரித்தன.. தளம் சிற்றிதழ் அவரின் படைப்புகளை பிரசுரித்தது.. தமிழ்சினிமாவின் பின்னணியில் அசோகமித்திரன் எழுதியதைவிடவும் இவரின் எழுத்து உன்னதமானது.. ஆனாலும் இவரைப்பலரும்கண்டுகொள்ளவில்லை… மரணத்திற்கு முதல் நாளும் இவரோடு பேசினேன் … அனாரின் கவிதைகள் பற்றிய இவரின் பார்வை எத்துணை சிறப்பானது தம்பி..

Mohamed Sabry : இவர் அறிமுகமானவர்தான். கட்டாயம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை. அவர் மரணச் செய்தி கேட்டதும் மிகவும் கவலையாக இருந்தது. அண்மையில்தான் தங்ஙள் அமீர் வாசித்தேன்.

Meeran Mitheen : நல்ல நேசமுள்ள அன்பாளராக இருந்தார்.

Kannan Sundaram : சுரா நடத்திய காலத்திலிருந்தே காலச்சுவடில் பங்களித்துள்ளார். அதிகம் எழுதுபவர் அல்ல.

நசிஹா நேசன் : முகநூல் நண்பராக இருந்தவர்…முன்னர் சில நேரங்களில் முகநூல் உள்டப்பி மூலம் பேசியதுண்டு காகா….

Moulasha Moulasha (பிறைநதிபுரத்தான்)  : 2002-3 களில் திண்ணை இணைய தளத்தில் அடிக்கடி கட்டுரை கவிதை எழுதுவார். அவ்வப்போது நானும் எழுதும்போது நன்பரானோம். அடிக்கடி மெயில் மூலம் ஊக்கம் தருவார். சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இரண்டு முறை வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் போன் மூலம் தொடர்பு கொள்வதுண்டு எழுத நிறைய விஷயங்கள் இருந்தன அவரிடம். எதிர்பாரா மரணம் – ஒரு படைப்பாளியை பறித்துக் கொண்டது.

Rasool Mohideen ; ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகம். இன்று ஐயாயிரம் முஸ்லிம் எழுத்தாளர்கள் உயிர் வாழக் கூடும். மாவட்டம், சாதி, இஸம், முற்போக்கு லாபி, குழு மனோபாவம் அழுத்துகிறது.இப்போதைக்கு முகநூல் இணைக்கிறது.

« Older entries