Loving Vincent – Trailer

Van Gogh’s Letter to John Peter Russell (1890)

To John Peter Russell. Saint-Rémy-de-Provence, Saturday, 1 February 1890.

vangogh-Garden-of-the-AsylumMy dear friend Russell

Today I’m sending you a little roll of photographs after Millet which perhaps you may not know.

In any event, it’s to recall us, my brother and myself, to your good memory. Do you know that my brother has since married and that any day now he’s expecting his first-born? May it go well – he has a very nice Dutch wife.

How it pleases me to write to you after a long silence. Do you remember the time when, almost simultaneously, you I think first and I afterwards, met our friend Gauguin? He’s still struggling on – and alone, or almost alone, like the good fellow he is. Am sure, though, that you don’t forget him.

He and I are still friends, I can assure you, but perhaps you’re not unaware that I myself am ill, and have more than once had serious nervous crises and delirium. This was why, having had to go into an asylum for the insane, he and I separated. But prior to that, how many times we talked about you together! Gauguin is currently still with one of my fellow-countrymen called De Haan, and De Haan praises him a great deal and doesn’t find it at all bad to be with him.

You will find article on canvases of mine at the Vingtistes, I assure you that I myself owe a lot to things that Gauguin told me as regards drawing, and hold his way of loving nature in high, very high esteem. For in my opinion he’s worth even more as a man than as an artist. Are things going well with you? And are you still working a lot?

Although being ill isn’t a cause for joy, I nevertheless have no right to complain about it, for it seems to me that nature sees to it that illness is a means of getting us back on our feet, of healing us, rather than an absolute evil.

If you ever come to Paris,  take one of my canvases from my brother’s place if you wish, if you still have the idea of making a collection for your native country one day. You’ll remember that I’ve already spoken to you about it, that it was my great desire to give you one for this purpose. How is our friend MacKnight? If he’s still with you, or if there are others with you whom I’ve had the pleasure of meeting, give them my warm regards. Above all, please remember me to Mrs Russell and believe me, with a handshake in thought,

Yours truly,
Vincent van Gogh

c/o Doctor Peyron
St-Rémy en Provence.
*
Image Courtesy : http://bit.ly/Garden-of-the-Asylum
Thanks to : vangoghletters.org & Van Gogh Museum (+)

வாங்க விற்க வான் கோ

ஒவியன் வான்கோ பற்றிய பதிவு இது. ‘வான்கோன்னா யாருப்பா?’ என்று மீண்டும் கேட்கும் வாலிப வயோதிகர்களுக்கு, ’இப்ப சொல்லுதேன் சரியா கேட்டுக்க,  வாங்கோன்னா எந்திரிச்சிக்க ; கோங்கோன்னா விடிஞ்சிரிச்சி’ என்பதுதான் பதில். கொஞ்சம் சீரியஸா பேசுவோமா? நண்பர் சுகுமாரன் சொல்வதை காதுதாழ்த்திக் கேட்போம்: ‘எதார்த்தத்தின் மீது நாம் உருவாக்கியிருக்கும் பாதுகாப்பை ஊடுருவிச் சென்றதிலும் தன்னுடைய அகஉணர்வுக்கு எதார்த்தத்தின் படிமத்தை வழங்கியதிலுமே வான்கோவின் கலை மகத்துவம் பெறுகிறது. கடிதம் ஒன்றில் குறிப்பிட்டார்: “ஒரு நல்ல ஓவியத்தைப் படைப்பது முத்தையோ வைரத்தையோ கண்டெடுப்பதைவிட எளிதானதல்ல. அதேபோல, சிரமப்படவேண்டும்; வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும்’. மேலும் பார்க்க : வான்கோவின் கடிதங்கள் – சுகுமாரன் . பதிவுக்கு வருகிறேன். ’வான்கோவின் காது’ சிறுகதையை – தன் ’சமாதி’யுடன் சேர்த்து அனுப்பியிருக்கிறார் தாஜ். ‘சமாதி’ என்றதும் பயப்பட வேண்டாம்,  கவிதையின் தலைப்பாக்கும்  அது. இவருக்கு வேறு உடம்பு சரியில்லையே , யார் சொல்வதையும் கேட்க மாட்டேங்கிறாரே என்று பயந்துகொண்டேதான் வாசித்தேன். சே, நம்மை சாகடிப்பதுதான் அவர் குறிக்கோள். கவிஞர் வாழ்க!  ஓவியனாக உதார் விட்டுக்கொண்டிருக்கிற என்னையும் கொஞ்சம் உளறச் சொல்லியிருக்கிறார். அது பதிவின் கடைசியில் – வான்கோ ஓவியத்தின் கீழே – இடம் பெறுகிறது. 

***

தாஜ் குறிப்புகள் :

இந்த ஆண்டு
சென்னையில் நடந்தேறிய
புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தபோது
என்னையும் அறியாமல் வாங்கிய
சில நல்ல புத்தகங்களில்
இதுவும் (உலக அதி நவீன சிறுகதைகள்) ஒன்று.

நவீன இலக்கியம் சார்ந்து
உலகளாவிய வாசகர்களது
கவனத்தை ஈர்த்த
பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களின்
சில கதைகள் இந்தத் தொகுப்பில்
இடம் பெற்றிருக்கிறது.

நான் வாசிக்க விரும்பிய
‘வான்கோவின் காது’
இந்தத் தொகுப்பில்
இடம் பெற்றிருந்ததில்
மிகுந்த சந்தோஷமெனக்கு.

அமரர். வெங்கட்ராம் அவர்களின்
சாகித்திய அக்கெடமி விருது பெற்ற
‘காதுகள்’ நாவலை
ரசித்துப் படித்து
உள்வாங்கி உருகிப்போன என்னால்
‘வான்கோவின் காது’ என்கிற
இந்தச் சிறுகதையின்
முடிவை உள்வாங்க முடியாமல் போனது.
திணறிப் போனேன்.
முழுமையாய்
விளங்கிவிட்டது என்று
இப்பவும் என்னால் சொல்ல முடியாது.
இக்கதையினால் என் முன் எழுந்து நிற்கும்
இந்தச் சவாலினால்
நான் விண்டுபோகாமல் இருக்க
ஆபிதீன்
அதற்கு பதவுரை எழுதி உதவினால்தான் உண்டு.

*

இந்தத் தொகுப்பில் உள்ள
பல கதைகள்
சிறிய வடிவிலானவை.
பத்து பதினைந்து வரிகளில்
பல கதைகள் இருக்கிறது.
அத்தனையையும்
சிறந்த உலக இலக்கியக் கர்த்தாக்களால்
எழுதப்பட்டதாகும்.
வாசகர்களின் பார்வையில்
அவற்றை வைக்க எண்ணமுண்டு.
காலம் கனியட்டும்.

இந்தத் தொகுப்பில் காணும்
ஒரு கதை
இரண்டே வார்த்தைகளைக் கொண்டது.
எழுதியவர்: எம்.ஸ்டேன்லி பபின்
தலைப்பு:
‘கரடி வேஷம் போட்டவன் வாழ்வில் ஒருநாள்’

கதை:

“என்னைச் சுடாதே”

மதிப்பிற்குரிய
மறைந்த நம்ம சுஜாதா அவர்கள்
இருபது வருஷத்துக்கு முன்னால்
இரண்டு வரிகளில்
கதையொன்று சொன்னது
நினைவில் நிற்கிறது.

‘ஒரு ஊர்ல ஒரு நரியாம்
அதோடு கதைச் சரியாம்’

ஸ்டேன்லி பபினைவிட
நம்ம சுஜாதாவின்
இந்த இரண்டுவரிகள்
இன்னும் அழுத்தமாக இருக்குல!

சுஜாதாவின்
இந்த இலக்கிய வித்தையை
ரசித்து வாசித்த நான்
என் பங்கிற்கு
ஒரே வார்த்தையில் கவிதையென்றை
நெட்டுக் குத்தாக எழுதினேன்.
(சிஷ்யன் பதினாறு அடி பாயனுமுல்ல!)

தலைப்பு: சமாதி


வ்


வு
தான்.

*
அவ்வளவுதாங்க
இனி நீங்க
’வான்கோவின் காதை’
வாசிப்பில் காணலாம்.


தாஜ் (1985 ! )

***

வான்கோவின் காது:
மோயாகிர் ஸ்கிளியர்

தமிழில் : கீதாஞ்சலி

வழக்கம்போல நாங்கள் அழிவின் விளிம்பில் இருந்தோம். என் அப்பா, ஒரு சின்ன மளிகைக் கடையின் முதலாளி. ஒரு வியாபாரியிடம் கணிசமான ஒரு தொகைக்காக அவர் கடன்பட்டிருந்தார். மேலும் அவர் அந்த கடனை அடைப்பதற்கு எந்த வழியுமே இல்லை.

என் அப்பாவிற்கு பணத்தட்டுப்பாடு இருந்ததே தவிர அவருடைய கற்பனை சக்தியில் எந்த தட்டுப்பாடும் இல்லை. அவர் புத்தி கூர்மையான, நாகரீக மனிதன். அவர் சரிகட்ட வேண்டிய விஷயங்களை சந்தோஷத்துடன் செய்தார். அவர் பள்ளிப் படிப்பைக் கூட முடித்திருக்கவில்லை. ஒரு அளவான மளிகைக்கடை மட்டுமே அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. மளிகை சாமான்களுக்கு மத்தியில் அவர் வாழ்க்கையின் தாக்குதல்களுக்கு தைரியமாக ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய வாடிக்கையாளர்கள் அவரை மிகவும் நேசித்தனர். ஏனென்றால் அவர் மற்ற பொருள்களுக்கு மத்தியில் கடன்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும் கறாராக பணத்தை கட்டச் சொல்லி அவர் எப்போதும் கேட்டதேயில்லை. ஆனால் அவருக்கு பொருள்கள் அளித்தவர்களின் கதையோ அதற்கு நேர்மாறாக இருந்தது. அவர்கள் கனமான இருதயம் படைத்த கனவான்கள். அப்பாவுக்கு கடன் கொடுத்திருந்த மனிதன் ஒரு இரக்கமற்றவன் என்று எல்லோராலும் அறியப்பட்டிருந்தான்.

அந்த நேரத்தில் மற்ற ஒரு மனிதனாக இருந்தால் துயரத்தில் தள்ளப்பட்டிருப்பான். அவ்விடத்தை விட்டு ஓடிப்போவதைத் பற்றி அல்லது தற்கொலை செய்து கொள்வதைப்பற்றியோ கூட சிந்தித்துப் பார்த்திருப்பான். ஆனால் அப்பா அப்படிச் செய்யவில்லை. நல்லதையே யோசிக்கும் அப்பா இதிலிருந்து வெளியே வர ஒரு வழியைக் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்துச் சமாதானமானார்.

இந்த மனிதனுக்கு ஏதாவது ஒரு பலகீனம் இருந்தே தீரவேண்டும் என்று அவர் சொன்னார். அந்த வழியில்தான் நாம் அவனை மடக்கப்போகிறோம். இங்கும் அங்கும் விசாரித்து, உறுதியளிக்கக் கூடிய ஒரு விசயத்தை அவர் தோண்டியெடுத்து வந்தார். தோற்றத்தில் மனிதனாகவும் தோன்றிய அவன், ஓவியர் வான்கோ மீது அளவு கடந்த ஆசையை மறைத்து வைத்திருந்தான். அந்தச் சிறந்த ஓவியரின் கலைப் படைப்பின் மறுபிரதிதிகளைத் தன் வீடு முழுக்க வைத்திருந்தான். கிரிக்டக்லஸ் முக்கிய கதாபாத்திரம் எடுத்து நடித்த, அந்த ஓவியரின் சோகமான வாழ்க்கையை பற்றிய படத்தை குறைந்தபட்சம் ஆறுமுறையாவது அவன் பார்த்திருப்பான். 

வான்கோவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அப்பா நூலகத்திலிருந்து கடனாக வாங்கி வந்து, அதிலேயே ஒரு வாரமாக மூழ்கியிருந்தார். பிறகு ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் அவருடைய படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. அதிலிருந்து அவர் வெற்றியுடன் வெளியே வந்தார்.

“நான் கண்டுபிடித்து விட்டேன்.”
 
எனக்கு பன்னிரெண்டு வயதாயிருந்த போது நான் அவருக்கு உண்மையாகவும், ஒத்துழைப்பு தருபவனாகவும் இருந்தேன். அதனால் அவர் என்னை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று, அவர் கண்கள் மினுக்க என்னிடம் கிசுகிசுத்தார்.

“வான் கோவின் காது, அது நம்மைக் காப்பாற்றும்”

“நீங்கள் இருவரும் என்ன கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று அம்மா கேட்டாள். அவள் தனது கணவனின் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு பொறுமைசாலி இல்லை.

“ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை”, என்று அவளிடம் கூறிவிட்டு, குரலை தாழ்த்திக் கொண்டு என்னிடம், “அதைப்பற்றி அப்புறம் விளக்குகிறேன்” என்று கூறினார்.

அவர் கூறியபோது கதை இப்படியாகச் சென்றது. அதாவது வான்கோ பைத்தியக்காரத்தனதுடன் தன் காதை வெட்டி எடுத்துத் தன் காதலிக்கு அனுப்பியிருக்கிறார். அப்பா, தன் திட்டத்தைத் தீட்டுவதற்கு இந்த உண்மைக்கதைதான் வழிவகுத்தது. அப்பா, கடனளித்தவனிடம் சென்று, வான்கோவின் காதலிதான் தன் கொள்ளுத்தாத்தாவின் காதலி என்றும், அவள் பதப்படுத்தி வைத்திருந்த அந்த ஓவியனின் காதை தன் கொள்ளுத்தாத்தாவுக்குக் கொடுத்ததாகவும் கூறுவார். பிறகு, இந்தக் காதை மாற்றிக் கொள்வதற்கு பலனாக தன்னுடைய கடனையெல்லாம் தள்ளுபடிசெய்துவிட்டு, இன்னும் கொஞ்சம் பணத்தையும் அப்பா அவனிடம் கேட்பார்.

“இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றார் அப்பா. அப்பா கூறுவது சரிதான். அப்பா வேறு ஒரு கனவுலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தார். இப்போது பிரச்சனை அவருடைய அபத்தமான, யோசனை அல்ல. ஏனென்றால் நாங்கள் அவ்வளவு மோசமான நிலையில் இருந்தோம். இப்போது எதை முயற்சி செய்து பார்த்தாலும் அது எங்களுக்கு நல்லதுதான். ஆனால் இப்போது ’காதுக்கு’ என்ன செய்யப்போகிறோம்?

காதா? இதுவரை அது தனது மனதில் உதிக்காததுபோல அவர் அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார்.

“ஆமாம், வான்கோவின் காதுகள். அதை இந்த உலகத்தில் எங்கிருந்து வாங்கப் போகிறீர்கள்?”

“ஆம், பிரச்சினை இல்லை. நாம் பிணவறையிருந்து காது ஒன்றை வாங்கிக் கொள்ளலாம்; என்னுடைய நண்பன் ஒருவன் அங்கு வேலை செய்கிறான். அவன் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.”

மறுநாள் காலை சீக்கிரமாகவே அவர் வெளியே கிளம்பிவிட்டார். மதியம் அவர் முகத்தில் பிரகாசத்துடன் ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்தார். பிறகு அதை கவனமாகப் பிரிக்கத் தொடங்கினார். ஒரு ப்ளாஸ்கில் ரசாயனக்கலவையுடன் ஏதோ ஒன்று கறுத்துப்போய், ஒழுங்கீனமான வடிவத்தில் இருந்தது. அதை வான்கோவின் காதுகள் என்று வெற்றியுடன் அறிவித்தார்.

“யார் அதை இல்லை என்று கூறப்போகிறார்கள்?” எப்படியிருந்தாலும் ஏதோ ஒரு தேவைக்காக, “வான்கோவின் காது” என்ற வாசகத்தை அதன் மீது ஒட்டினார்.

மதியம், கடனளித்தவனின் வீட்டை நோக்கி நாங்கள் இருவரும் சென்றோம். அப்பா உள்ளே சென்றார். நான் வெளியே காத்திருந்தேன். ஐந்து நிமிடம் கழித்து குழப்பத்துடன் வெறித்தனமாக வெளியே வந்தார். அந்த மனிதன் அந்தத் திட்டத்தை மறுத்ததுமட்டுமல்லாமல் அந்த ப்ளாஸ்கை அப்பாவிடமிருந்து பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே தூக்கியும் போட்டுவிட்டான்.

“அவமானம் ”

அவரோடு நான் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் இப்படியான ஒரு வெளிப்பாட்டை ஓரளவுக்கு தவிர்க்க முடியாது என்று நான் நினைத்தேன். அந்தச் சாலையில் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அப்பா வழிநெடுக்க “அவமானம், அவமானம்” என்றே முனகிக் கொண்டே வந்தார். வழியில் திடீரென்று உறைந்துபோய் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அது இடது பக்கத்தினுடையதா அல்லது வலது பக்கத்தினுடையதா?”

“என்னது?” என்று புரியாமல் நான் கேட்டேன்.

“வான்கோவின் வெட்டப்பட்ட காது இடது பக்கத்துடையதா அல்லது வலது பக்கத்தினுடையதா?” “எனக்கெப்படி தெரியும்?” ஏற்கனவே மொத்த விஷயத்தினாலும் எரிச்சலூட்டப்பட்டவனாக நான் கேட்டேன். “நீங்கள்தானே அந்தப் புத்தகத்தைப் படித்தவர். உங்களுக்குத்தானே அது தெரிந்திருக்க வேண்டும்.”

“ஆனால் எனக்கு தெரியவில்லை” என்று சமாதானமற்றவராய் கூறினார். “எனக்குத் தெரியவில்லை என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.”

நாங்கள் சிறிதுநேரம் நிசப்தமாக நின்றுக்கொண்டிருந்தோம். அப்போது நான் நச்சரிக்கும் சந்தேகத்தால் தாக்கப்பட்டிருந்தேன். நான் அந்தச் சந்தேகத்தை வெளிப்படுத்தவே பயந்தேன். ஏனென்றால், அதற்கான விடை என்னுடைய பால்யகாலத்தின், இறுதிக்கட்டமாக இருக்கக்கூடும் என்பது எனக்கு தோன்றியது.

“அப்போது அந்த ப்ளாஸ்கில் இருந்தது வலது பக்கத்தினுடையதா அல்லது இடது பக்கத்தினுடையதா?” என்றேன் நான்.

வாயடைத்துப் போனவராய் என்னை வெறித்துப் பார்த்தார்.

“உனக்கு ஒன்று தெரியுமா? அதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று சோர்வான கரகரத்தக் குரலில் முணுமுணுத்தார்.

அதன் பிறகு நாங்கள் வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினோம். நீங்கள் ஒரு காதை கவனத்துடன் ஆராய்ந்து பார்த்தீர்களானால் எந்த காதாக இருந்தாலும், அது வான்கோவினுடையதாக இருந்தாலும் இல்லையென்றாலும் அது ஒரு கேள்விக்குறியைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணமுடியும். இந்தப் புதிரில்தான் நான் தொலைந்து போனேன். இதிலிருந்து திரும்ப வெளியேவரும் வழியை இனி எப்போதுமே என்னால் கண்டுபிடிக்க முடியாது.

***

நன்றி :  கீதாஞ்சலி / அம்ருதா பதிப்பகம் & தாஜ்

***

இந்தக் கதை இரண்டு வருடங்களுக்கு முன்பே இணையத்தில் வந்துவிட்டது- ’வெப்துனியா’வில். ஆர்.முத்துக்குமார் மொழிபெயர்த்திருக்கிறார்.  இப்போது கிடைத்ததை இன்னொரு மொழிபெயர்ப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். ஏன், இன்னொரு கதையென்றும் எடுத்துக்கொள்ளலாம்.  எதையும் அனுப்புவதற்கு முன்பு தேடிப்பாரேன்யா என்றால் கேட்கிறாரா இந்த தாஜ் ? என்ன செய்வது, ஆர்வம் ஊற்றெடுக்கிறது அவருக்கு. அதுவாவது ஊறட்டும்!  அவர் கேட்டதற்காக நானும் கொஞ்சம் சொல்கிறேன். 

இந்தச் சிறுகதையின் முடிவை தாஜால் ஏன் உள்வாங்க முடியவில்லை? பதவுரைக்கு என்னை வேறு அழைக்கிறாரே… இதுதானே வேணாங்கிறது, நான் என்ன விமர்சகனா ,  கதையென்பதுவும் கணித சூத்திரமா? அவரவர்க்கு தோன்றியதை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே, இதிலென்ன பிரச்சனை? என் எழுத்தை வாசித்த ஒருவர்,  ஆப்ரிக்காவின் அடியிலெபுடுக்குங்கோ எழுதியது போல இருக்கிறது என்றார். ’யாருங்கோ அதுங்கோ?’.  ‘ஆடுமாடு மேய்க்கிறவங்கோ’. உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

’வான்கோவின் காதின்’ முடிவு எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது . தத்துவ விளக்கங்களில ஈடுபட்டு தடுமாற விரும்பவில்லை. கண் எட்டும் தூரத்திற்கு கவலைகள் இருக்கின்றன. வான்கோ அறுத்துக்கொண்ட்து அவனது வலது காதையா இடது காதையா என்பது காசோடு காதும் உள்ளவர்கள் கேட்டறிந்ததே. இடது காதுதான். இடது காதேதான் ஐயா. பின்னே மண்டபத்திலிருந்து…. இழுக்க வேண்டாம், அவன் வெட்டிக்கொள்ளும்போது நான் அங்கே இல்லையென்றாலும் (காகினுடன் காப்பி சாப்பிடப் போயிருந்தேன்) விருப்போடு ‘விக்கி’ உதவிற்று. ’Lust for Life’ சினிமாவும்தான். (சுகுமாரனின் கட்டுரையை படித்த அன்றே இறக்கி விட்டேன், தெரியுமோ? Torrent லிங்க் கொடுக்க மாட்டேன். நீங்களே தேடிக்கொள்ளுங்கள்). சிலர் சித்தரிப்பதுபோல காதலிக்கு பரிசு கொடுப்பதற்காகவே அவன் காதை வெட்டிக் கொள்ளவில்லை என்பது என் முடிபு. வெட்டிக்கொண்டதும் கொடுத்தான், முன்பு ஆசைப்பட்டுக் கேட்டாளே என்று. பழைய பாக்கியாக இருக்கலாம். பரிசா அது ரேச்சல்? நண்பன் காகினுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பின் – மன அழுத்தம் மேலும் அதிகமாகி – தன் காதை அறுத்துக் கொள்கிறான் வான்கோ. காகின்தான் வெட்டினார் என்றெல்லாம்கூட அவரவர் போக்கிற்கு இன்னும் ’வெட்டி’ விவாதங்களில் பலர் ஈடுபட்டாலும் புதிரைக் கண்டுபிடித்துவிட்டதாக இரு வருடங்களுக்கு முன் டைம்ஸ் இதழ் விட்டிருக்கிறது, தம்பி தியோவின் திருமண செய்தி கிடைத்ததும் வெட்டிக்கொண்டதாக.  ‘Dreams‘ சினிமாவிலோ , ‘என்னை வரைந்து கொண்டிருந்தேன். பாரு, இந்த காது மட்டும் ஒழுங்கா வரலே. அதனால ’கட்’ பண்ணிப் பார்த்து வரையவேண்டியிருந்தது’ என்று வான்கோ சொல்வதாக ஒரு காட்சி வரும்.  வான்கோவை சந்திக்கப் போகும் இளைஞன் அவருடைய ஓவியங்களின் இடையே நடந்து வரும் இந்த கனவுப்பகுதி அற்புதமான கவிதையாக – நம்ம தாஜ்ஐயா கவிதை போல அல்ல  (அப்பாடா, பழிவாங்கிவிட்டேன்!) – எடுக்கப்பட்டிருக்கும். ரொம்பவும் ரசித்த சினிமா. எல்லாமே சரியாக இருக்கட்டும், என்னிடமுள்ள என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா  (2010) தமிழில் சொல்வதையே தயங்காது எடுத்துக் கொள்வோம். Disaster struck on Christmas Eve 1888. Physically and emotionally exhausted, van Gogh snapped under the strain. He argued with Gauguin, reportedly chased him with a razor, and then cut off the lower half of his own left ear…

ஒரு சுவாரஸ்யம், மேலேயுள்ள வான்கோவின் ஓவியத்தில் வலது காதில் அல்லவா பேண்டேஜ் போடப்பட்டிருக்கிறது!  கண்ணாடியில் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்; குழப்பம் தெளியும். என்னைப்போல் Irfanview பிரியரா? இமேஜைத் திறந்து , மாற்றி மாற்றி ’H’ அழுத்தி விளையாடுங்கள். சுவாரஸ்யம் கூடும். கதையில் , பிணவறையிலிருந்து பெறப்படும் போலி காது இடது பக்கத்தினுடையதா அல்லது வலது பக்கத்தினுடையதா என்ற கேள்விக்கு மட்டும்  எதையும் அழுத்த வேண்டாம். ’உங்களுடையதை’ அழுத்தினால் போதும்  அதுவும் ஒரு தூரிகைதான். இல்லையா? (சிறுவயதில் நிறைய ‘பெயிண்ட்’ அடித்ததுண்டு நான்!) காது ஏன் கேள்விக்குறி போல இருக்கிறது என்ற அபத்தமான கேள்வியை மட்டும் ( ’கேள்விக்குறி’ வடிவமென்று கீதாஞ்சலி சொன்னால் , ’கிருக்கு மறுக்கான பல்வழி அமைப்பு வடிவத்தில்’ என்று ஆர்.முத்துக்குமார் ஏன் சொல்கிறார் என்பது இன்னொரு கேள்வி.  ஆங்கிலம் அறிந்த ரூமிசார்தான் அதிகம் சொல்லனும்.)  கடவுளிடம்தான் கேட்க வேண்டும். கடவுளே ஒரு அபத்தம் என்று சொல்பவர்களுக்கு காதுகள் தேவையில்லை. 

நம்ம கடவுள் இருக்கிறாரே, அவருக்கும் ஏகப்பட்ட குழப்பம்தான். இதுக்குத்தாங்கனி எல்லாமே ஒண்ணா படைக்கனும்ங்குறது..! 

’வயசானவங்களக்கு ஏன் காது கேக்காம போவுது, தெரியுமா? அவங்க சொல்றதை யாருமே கேக்குறது இல்லே. அதனாலதான்’ என்று ’யங்’ தெரியாத கிழவர் ஒருவர் சொன்னது இப்போது ஞாபகம் வருகிறது. அவர் சொன்னது யார் காதிலும் விழவில்லை! என்னைப் பொறுத்தவரை , அபத்தமான முறையில் கடனைத் தீர்க்க நினைப்பதற்கு , காமெடியான கேள்வியுடன் கதை முடிகிறது. அபத்தமாக முடிகிறது. என்றும் சொல்லலாம். அவ்வளவுதான். கதைசொல்லியான அந்தப் பையன் , விடை தெரிந்துவிடுமோ என்று பயப்படுவதைப் பார்த்தால் நம் பிரச்சினைகளே கேள்விஞானம் கிடைத்தபிறகுதான் ஆரம்பமாகிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் ’மதமற்ற’ ஷைத்தான் சாதிக். மங்கலம் பொங்கும் மதவாதிகளிடம் போகலாமா மனத்தெளிவு பெற? ஐய்யய்யோ, நம் காதுகளிலிருந்து உடனே ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிடும்.

அன்பின் தாஜ்… இதற்குத்தான் பத(க்)உரை எழுத நான் வரமாட்டேன் என்றேன். எனக்கு வான்கோ தெய்வம் (அடி, ஷிர்க்!). பிரஷுக்குப் பதிலாக எரியும் நெருப்புக் கட்டையை தொடர்ந்து சொருகியதுபோல் வலிமையாக விழும் அவனது ஒவ்வொரு ’ஸ்ட்ரோக்’க்கிற்கும் அடிமை நான். அப்புறம் இருக்கவே இருக்கிறது, வாழும்வரை அங்கீகரிக்கப்படாமல் அவன் புழுங்கிச் செத்தது. பைத்தியம் பைத்தியம் என்று அடித்துவிரட்டி, செத்ததும் அவனைச் சீராட்டும் சீர்கெட்ட சமூகத்தில் இன்று வான்கோ பொம்மையாகிப் போனான் – ஸ்க்ளையருக்கும். அவருடைய இந்த கதையில் நிஜமான வான்கோ வராதது எனக்கு பெரிய ஏமாற்றம்.  நம்போன்ற சாதாரணர்களின் குழப்பம் நீங்க – தன் மயக்கும் மொழியால் –’அன்பு தியோ’ எழுதிய அன்பர் எஸ்.ரா சொல்லலாம். ஹா, என்னமாதிரி அனுபவித்திருக்கிறார் மனுசன், வான்கோவின் இரவை!  ’சூரிய மஞ்சள்’ எழுதிய தேணுகாவும் சூப்பராக விளக்கலாம். ஆதிமூலத்தை தொடர்புகொள்ள ‘ஆல்ஃபா தியானம்’ தேவைப்படுமாதலால் ஓவியர் அரவக்கோன்ஐயா அவர்களே இப்போதைய என் தேர்வு. அவரை எங்கே தேடுவது இப்ப? ’ராயர்கிளப்’ போய் ரொம்ப நாளாச்சி. அதுவரை, கண்களை செங்குத்தாக தனித்தனியாக வரைந்து , கோணலான மனித முகத்தின் இரு பக்கங்களிலும் பொருத்தி , ’இதுதான் காது வாப்பா’ என்று சிறுவயதில் சொன்ன என் செல்லப் பிள்ளைகள் அனீகாவும் நதீமும்தான் இன்றுவரை எனக்கு செம்ம புதிர். ஏன், வேலைமெனக்கெட்டு இதைப் படிக்கிற நீங்களும்தான்!

கடைசியாக ஒன்றும் சொல்லவேண்டுமே… அதாவதுங்க…, நாகூர் மியான்தெருவிலுள்ள ஒரு வீட்டில் (8/54A) பத்திரமாக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அறுபட்ட காதுகளை நீங்கள் கவனத்துடன் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அது ஆன்மிகத்திற்குள் விழுந்த ஆபிதீனுடையது என்று தெரியவரும். இதில் புதிர் ஏதுமில்லை. தொலைந்துபோகவும் வேண்டாம். எத்தனை முறை ஊர் போனாலும் ‘விசாவோடுதானே வந்திக்கிறீங்க?’ என்று ஊரான்களோடு சேர்ந்துகொண்டு உள்ளன்போடு விசா-ரிக்கும் எங்கவூட்டு ’மஹாலெட்சுமி’  (அஸ்மான்னு சொன்னா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்) கேட்கும் கேள்வியால் நேர்ந்த கொடுமை அது.  யாரும் கேட்காமலேயே கேட்பாரற்றவர்களையும்  காத்து ரட்சிக்கும் என் கடவுளே , கேக்குதா?

’அன்புள்ள வின்சென்ட்’ கட்டுரையிலுள்ள சுகுமாரன் வரிகளோடு முடித்து விடுகிறேன். ‘ கலைக்கும் அதன் மூலமாக மனித இனத்துக்கும் முழுமையாக தன்னை சமர்ப்பித்துக்கொண்ட கலைஞன், வான்கோவைப் போல எவருமில்லை. கலையே வாழ்வின் அர்த்தமாகவும் தான் வாழ்ந்த வாழ்க்கையே கலையாகவும் இயங்கிய பெரும் கலைஞன் வான்கோ. கலையும் கலைஞனும் வேறு வேறு என்று கருதப்படும் சிந்தனைச் சூழலில் இன்னொரு வான்கோவைக் கற்பனைதான் செய்ய முடியும்.’ 

ஆபிதீன்

***

தொடர்புடைய பதிவுகள் :

வான்கோவின் கடிதங்கள் – சுகுமாரன் & வான்கோவின் வயல் –  எஸ். ராமகிருஷ்ணன்

நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

வான்கோவின் கடிதங்கள் – சுகுமாரன்

நீ ஓவியர்களை மிகவும் நேசிக்கிறாய். நான் சொல்லட்டுமா, மனிதர்களை நேசிப்பதைவிட மகத்தான ஒரு கலையும் இல்லை. – வான்கோ (1888)

*

‘அன்புள்ள வின்சென்ட்’ என்ற தலைப்பில் எழுத்தாள நண்பர் சுகுமாரன் – ‘Lust for Life’ புத்தகத்தைப் படித்த நெகிழ்ச்சி மாறாமல் – எழுதிய கட்டுரையிலிருந்து இந்தப் பதிவு. 2003ல் வெளியான சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ தொகுப்பில் இது இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த, நான் அடிக்கடி படிக்கும் கட்டுரை . ‘சுயநலச் சிந்தனைகள்தான் துக்கத்துக்குக் காரணம். மகத்தான இலட்சியங்களைக்  கைக்கொண்டு சுயநலமின்றி செயல்பட்டால் துக்கத்திலிருந்து விடுபடலாம்’ போன்ற வைர வரிகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கலாம் – துக்கம் சற்றும் குறையாவிட்டாலும். ‘மனப்புயலின் வேகத்தால் சிதைந்த’ வான்கோ, தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சகோதரனின் தோளில் சாய்ந்து உயிரை விட்டதை,  ‘ காலத்தின் நிறமற்ற திரை மீது ஒரு சிவப்பு நிற ஓவியம் பதிந்தது’ என்று குறிப்பிடும்  (இந்த வரியின் நிறம் என்னவாக இருக்கும்?) கவிஞர் சுகுமாரன். என்னை கலங்கவைத்த இந்த கட்டுரையை முழுதாக பதிவிட ஆசை. முடியவில்லை. ஆதிமூலத்தின் காந்தியைப் பார்த்தே அலறி ஓடிய பாய்மார்களும் தாய்மார்களும் அடிக்க வருகிறார்கள். எனவே , ‘பைத்தியக்காரன்’ வான்கோ தன் பிரிய சகோதரன் தியோவுக்கு எழுதிய , சில கடிதங்களின் ஒரிரு பத்திகளை மட்டும் இப்போது இடுகிறேன்.

‘வான்கோ தனது பத்தொன்பதாம் வயதிலிருந்து சகோதரன் தியோவுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார். முப்பத்தி ஏழாம் வயதில் இறக்கும் வரை, ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்தத் தொடர்பு தடைபடாமல் நீண்டிருந்தது. அநேகமாக வாழ்க்கையின் எல்லாத் தருணங்களையும், உணர்ச்சிகளையும், தனது மனதின் பாதிக்குச் சொல்வது போன்ற உண்மையுணர்வுடன் எழுதப்பட்டவை அவை. சிறுவயதில் இணைந்து தொடர்ந்து சகோதரன், வான்கோ என்ற கலைஞனின் நிரந்தர அங்கீகரிப்பாளன், நண்பன், புரவலன் என்ற நிலைகளை மீறித் தனது மனசாட்சியின் பாதுகாவலனாகத் தியோவை ஒப்புக்கொண்டிருக்கிறார் வான்கோ. அன்றாட வாழ்க்கையின் செயல்கள், கலை பற்றிய கனவுகள், திட்டங்கள், பிறரின் கலை பற்றிய கருத்துக்கள், பருவ காலங்கள், இயற்கைக் காட்சிகள், காதல், ஆசைகள், வேதனைகள், சந்தோஷங்கள், தோல்விகள், மனிதர்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் எழுதப்பட்ட இக்கடிதங்களின் பரப்பும் உயிர்த்துடிப்பும் எழுத்தமைதியும் இலக்கியக் குணம் கொண்டவை. ஓர் அர்த்தத்தில் இவை வான்கோவின் நாட்குறிப்புகள். விரிந்த பார்வையில் வின்சென்ட் வான்கோ தன்னையறியாமல் எழுதி வைத்த சுயசரிதை’ என்கிறார் சுகுமாரன்.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடிக்காவிட்டால் ஒரு காதை அறுத்துக் கொள்வேன்!

*

‘ஹேகின் சாலைகளில் இரண்டு சகோதரர்கள் நடந்து போகிறார்கள். ஒருவன் சொல்கிறான் : எனக்கு முதலில் வேண்டியது பொருளாதர பலம். வியாபாரம் தொடங்க வேண்டும். என்னால் ஓவியனாக முடியுமென்று தோன்றவில்லை. மற்றவன் : நான் நாயைப் போல ஆகிக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் அசுத்தமானவனாகவும் முரட்டுப் பிடிவாதமுள்ளவனாகவும் ஆகிவிடுவேன். வறுமைதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்று இப்போதே தெரிகிறது. இருந்தாலும் நான் ஓவியனாகத்தான் இருப்பேன்.’

*

‘இந்த உலகத்துக்கு நான் ஒருவகையில் கடன்பட்டிருக்கிறேன், கடமைப்பட்டிருக்கிறேன் என்று நான் உணர்ந்தால்தான் அது என்னை பொருட்டாக மதிக்கும். ஏனெனில் முப்பது வருடங்கள் இந்த பூமி மீது நடமாடியிருக்கிறேன். அதற்கு நன்றியாக சில ஓவியங்களையும் படங்களையும் நினைவுப் பரிசாக விட்டுச் செல்ல விரும்புகிறேன். கலையின் எந்த இயல்பையாவது திருப்திப்படுத்துவதற்காக அல்ல. உண்மையான மனித உணர்வை வெளிப்படுத்துவதற்காக.’

*

காகின் வந்திருக்கிறான். அவனுடைய ஆரோக்கியம் தேறியிருக்கிறது. நீ அவனுக்காக செய்த விற்பனை ஏற்பாடுகள் பற்றி அவனுக்கு மிகவும் திருப்தி. அவசியமான பொருட்கள் வாங்குவதற்கான பணம் அதன் மூலம் கிடைக்கும். அந்தச் சுமை உன் தோளை விட்டு இறங்கியதே. மனிதன் என்ற முறையில் காகின் எவ்வளவோ நல்லவன். நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அநேக காரியங்களைச் செய்ய முடியும். காகின் இங்கிருந்து ஏராளமான ஓவியம் தீட்டுவான். நானும்தான்.

நான் நோயாளியாகப் போகிறேனோ என்று சிறிதுகாலம் முன்புவரை தோன்றியது. காகின் வருகைக்குப் பிறகு அது மாறியிருக்கிறது. பண நெருக்கடி, அதனால் உனக்கு ஏற்படக்கூடிய சிரமம் – இவற்றை யோசித்துத்தான் என் நோய் அதிகரித்தது. இனி அதுபோன்ற துன்பங்கள் மாறிவிடும்.

ஆறு மாதங்களுக்குள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை உருவாக்க முடியும். அது நிரந்தரமானதாக இருக்கும். இங்கே வருகிற ஓவியர்கள் அதைத் தங்குமிடமாகக் கொள்ளலாம். என்னுடைய ஓவியமும் காகினுடைய ஓவியமும் ஒவ்வொரு மாதமும் உனக்குக் கிடைக்கும். உன் நிறுவனத்துக்கு வெளியே எங்கள் ஓவியங்களை விற்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை இனிமேல் கூப்பிள்ஸின் படியை மிதிக்கப் போவதில்லை. நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம். மாலையானதும் களைத்து சோர்ந்து போகிறோம். அப்போது உணவு விடுதிக்குப் போவோம். இரவில் சீக்கிரம் உறங்குகிறோம். இதுதான் வாழ்க்கை.

காகினும் நானும் ஓவியக்கலை பற்றி காரசாரமாக விவாதிக்கிறோம். எங்களுடைய வாக்குவாதம் மின்சார ஓட்டம் போல. அது முடிவடையும்போது நாங்கள் ஓய்ந்துபோன பாட்டரிபோல ஆகிவிடுகிறோம்.’

*

‘ஒரு சகோதரனுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய கவலையைத்தான் உன் கடிதத்தில் பார்த்தேன். அதனால் என்னுடைய மௌனத்தை முடித்துக்கொள்வது என் கடமை. முழுமையான சுய உணர்வுடன்தான் இதை எழுதுகிறேன். பைத்தியக்காரனின் கடிதமல்ல. நீ அறிந்த உன் சகோதரனின் கடிதம்.

என்னை வெளியில் விடக்கூடாது என்று அநேக ஆட்கள் மேயரிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னைப் பூட்டி வைக்கக் கட்டளை இட்டிருக்கிறார். அதனால் நான் இங்கே பாதுகாப்பாலிருக்கிறேன். காவல்காரர்கள் இருக்கிறார்கள். நான் என்ன குற்றம் செய்தேன் என்றுகூட நிரூபிக்காமல் இதைச் செய்திருக்கிறார்கள். எனக்கு மனசாட்சியின் நீதிமன்றத்தில் சொல்வதற்கு நிறைய பதில்கள் இருக்கின்றன. நான் ரோஷப்படுவதில் அர்த்தமில்லை. எனக்கு நானே தீர்ப்பு வழங்கிக்கொள்வேனாயின் என்னைக் குற்றவாளியாக்குவேன். எனக்கு இது போதும். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு எதிராக அதுவும் நோயாளியான மனிதனுக்கு எதிராக இத்தனை பேர் திரள்வது பூமியின் மையத்தில் இடி விழுவதுபோல. தவிர, மனிதர்களுடன் அதிகமாக நட்புப் பாராட்டுவது முட்டாள்தனத்தில்தான் முடிகிறது.

தற்காலிகமாக என்னை நீ மறக்க வேண்டும். எனக்குத் தேவை சிறிது மன அமைதி. மேயரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் என்னிடம் தோழமையுடன்தான் பழகுகிறார்கள். எல்லாவற்றையும் சரிப்படுத்த கூடுமானதைச் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். நான் என்னைக் காயப்படுத்திக் கொண்டேன். ஆனால் பிறரிடம் அராஜகமாக நடந்து கொள்ளவில்லை. அதுவுமில்லாமல், இந்தச் செலவுகளை என்னால் தாங்க முடியாது. இதையெல்லாம் அவர்களிடம் சொன்னேன். நான் ஏதாவது வேலைசெய்து மூன்று மாதங்களாகின்றன. என்னைப் பூட்டி வைக்காமலும், துன்புறுத்தாமலும் இருந்தால் என்னால் வேலை செய்ய முடிந்திருக்கும்.

இப்போது என்னை வெளியே நடமாட அனுமதிக்கிறார்கள். ஒரு புத்தகம் வாங்கினேன். இரண்டு அத்தியாங்கள் ஆவலுடன் படித்தேன். ஏதாவது படித்து வாரக்கணக்காகிறது. படிப்பு என்னுடைய நோயைக் குணப்படுத்த உதவும். பால்சாக்கின் இன்னொரு நாவலையும் படித்துக் கொண்டிருக்கிறேன். டிக்கன்ஸின் கிறிஸ்துமஸ் புத்தகங்களையும் படிக்கிறேன்.

அன்புள்ள தியோ! என்னைப் பூட்டி வைக்க வேண்டிய தேவை இல்லாதபடிக்கு நோய் தீருமென்றே தோன்றுகிறது.’

*

‘என்னுடைய மனத்தின் சமநிலைக்கு இப்போது கோளாறு எதுவுமில்லை. என்னால் முடிந்தவரை வேலை செய்கிறேன். என்னுடைய நோய் திரும்ப வந்து விடுமானால்  நீ பொறுத்துக் கொள். என்னுடைய இப்போதைய நிலையைப் பற்றி யோசித்தால் பயமாக இருக்கிறது. சிந்தனைக் குழப்பம். நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமா? ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன்.’

*

‘இங்கே நான் மிகுந்த துக்கத்தோடு இருக்கிறேன். எனது விவகாரம் – உங்களை உலுக்குகிற புயல். அதைப் பற்றியும் துக்கப்படுகிறேன். நான் என்ன செய்ய? முடிந்தவரைக்கும் அமைதியுள்ளவனாக முயற்சி செய்கிறேன். என் வாழ்க்கையின் அடிப்படையே அபாயகரமானது. என்னுடைய ஒவ்வொரு காலடியும் தடுமாறுகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.

இப்போதும் ஓவியங்களையும் வாழ்க்கையும் நேசிக்கிறேன். ஆனால் எனக்கென்று ஒரு பெண் துணை இனி ஏற்படப்போவதில்லை. அதற்கான வயதும் கடந்து போயிருக்கிறது. இப்போது அப்படியான ஆசை இல்லை. ஆனால், அப்படியொன்று சாத்தியமாகாமற் போனதன் துக்கம் இருக்கிறது. என்னை முழு மனத்துடன் ஓவியத் திரையில் அர்ப்பணிப்பது. அது மட்டும்தான் இனி இந்த வயதில் என்னால் முடியும். என்னுடைய வாழ்க்கையையும் சுக சௌக்கியங்களையும் உருக்கி வார்த்தவையே என்னுடைய ஓவியங்கள்.’

*

‘மனசாட்சியும் உணர்ச்சியுமே ஒரு கலைஞனை நடத்திச் செல்ல வேண்டியவை. அவனுடைய தூரிகையை இயக்குவது அறிவல்ல. தூரிகையே அறிவைச் செலுத்த வேண்டும்.

*

‘ஒரு நல்ல ஓவியத்தைப் படைப்பது, முத்தையோ வைரத்தையோ கண்டெடுப்பதை விட எளிதானதல்ல. அதேபோல, சிரமப்பட வேண்டும்; வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும்.’

*

எனது ஓவியங்கள் விற்பனையாகவில்லை என்பதற்காக நான் எதுவும் செய்ய முடியாது. ஒரு காலம் வரும் – வர்ணத்தின் விலையை விடவும் அவற்றுக்கு மதிப்பு அதிகம்’ என்று மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம்’ என்று எழுதினார் வான்கோ. அந்தக் காலம் அவரது மரணத்துக்குப் பிறகு வந்தது. முன்பு செய்த புறக்கணிப்புக்குப் பிரதியாக பல மடங்கு ஆவேசத்துடனும் கோலாகலத்துடனும் வந்தது. நூறு வருடங்களைக் கடந்தும் நீடிக்கிறது. ஏனெனில், வின்சென்ட் வான்கோவின் கலை மனித வரலாற்றுக்கு அன்புப் பரிசாக வாய்த்த கௌரவம்’ –  சுகுமாரன் (நட்புறவு பாலம் , 1990).
***

நன்றி : சுகுமாரன், அன்னம்
கவிஞர் சுகுமாரனின் வலைப்பக்கம் : http://vaalnilam.blogspot.com/

”திசைகளும் தடங்களும்” நூல் கிடைக்குமிடம் :

அன்னம் , மனை எண்: 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007

**

தொடர்புடைய பதிவு : நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோஸப் ஜேம்ஸ்

**

Visit : Wikipedia  & THE VINCENT VAN GOGH GALLERY