சால்வடார் டாலியின் ஓவியங்கள் – பிரம்மராஜன்

பிரம்மராஜனின் மீட்சி இதழ் 28-இல் இருந்து, நன்றியுடன்..

பெரும் பயப்பதியும், காரண அறிவும் பிணைந்து நம்மை இயக்குகிற இந்த இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நமக்கு அர்த்தத்தை அளிக்க வேண்டுமானால் அது ஸர்ரியலிஸத்தின் மூலமாகவே அதிகமாய் சாத்தியப்படும். வேறு எந்தவித கோணத்திலும், ஆய்வு முறைமையிலும் பிடிபடாத பல உறுத்தும் உண்மைகள் – ஹிரோஷிமா, வியத்நாம், கம்பூச்சியா, டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், பெர்ஷிங் IIs ஏவுகணைகள்- இவை யாவும் ஸர்ரியலிஸ வெளிப்பாட்டில் நமது பிரக்ஞையில் கச்சிதமாகப் பதிவாகின்றன. ஸர்ரியலிஸ ஓவிய இயக்கத்தில் டாலியின் பங்கு தனித்துவமானது இருபதாம் நூற்றாண்டின் இரட்டை நிகழ்போக்குகளான Sexம், paranoiaவும் டாலியின் உலகத்திலும் நமது உலகத்திலும் ஒரே மாதிரி இயங்குகின்றன. மற்றொரு ஸர்ரியலிஸ ஓவியரான Max Ernst மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் William Burroughs ஆகிய இருவரிடமிருந்தும் டாலி வேறுபடுகிறார். முந்திய இருவரும் தமது தனித்துவ உலகங்களின் நிழல்களில் சமைந்துவிடும்போது டாலி தனது ஓவிய வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறார்.

ஃபிராய்டிஸ யுகத்தின் தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் டாலி. இருபதாம் நூற்றாண்டு ஸ்வயத்தினுடைய (Peyche)வினோத வியாபக உலகினை, தொலைபேசிகள், குழையும் கைக்கடிகாரங்கள், பொறிக்கப்பட்ட முட்டைகள். கடற்கரைகள் போன்ற சாதாரண உலகின் படிமங்களைக் கொண்டு சித்தரிக்கிறார். டாலியின் ஓவியங்களில் நடக்கும் ‘நிகழ்ச்சிகளுக்கும் நமது நடைமுறை யதார்த்தத்தின் நிகழ்ச்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என்று சொல்ல முடியும். டாலியின் ஓவியங்களின் பிரதான குணம் என்று சொல்லப்படக் கூடியது அவற்றின் hallucinatory naturalism of the Renaissance. இதற்கு மேற்பட்டு டாலி புகைப்படத் தன்மையான யதார்த்தத்தையும், குறிப்பிட்ட ஒருவித திரைப்பட வெளிப்பாட்டு முறையையும் உத்திகளாகப் பயன்படுத்துகினர். இந்த உத்திகள், பார்வையாளனை அவனுடைய வசதிக்கு ஏற்ப மிக நெருக்கமாக ஓவியங்களுடன் தொடர்புபடுத்துகின்றன.

பிற ஸர்ரியலிய ஓவியர்களான Max Ernat, Rene Magritte. Tanguy ஆகியோர் சம்பிரதாய விவரணை வெளியைப் (Traditional Narrative Space) பயன்படுத்தினார்கள். இவ் விதமான விவரணை வெளி, ஓவியத்தின் காட்சிப் பொருளை முன்பார்வை கொண்டதாகவும் (Frontal) பொதுப்படுத்தப்பட்ட கால அமைப்பை உடையதாகவும் ஆக்குகிறது. மாறாக டாலி தனது ஓவியங்களை, திரைப்படத்தில் ஒரு Frameலிருந்து மற்றொரு Frameக்கு கடந்து செல்வது மாதிரியான உணர்வைத் தரும்படி ஆக்கியிருக்கிறார். டாலியின் ஓவிய உலகில் நம்மை அமைதியில்லாமல் துன்புறுத்தும் வெளிச்சம், சூரியனைச் சார்ந்தது என்பதை விட மின் ஒளியைச் சார்ந்தது என்பது சரியாக இருக்கும். மேலும் டாலியின் ஓவியங்கள், சென்டிமென்டலிஸத்தைத் தவிர்த்த அழகான நியூஸ் ரீல்களாக நமது மண்டைகளில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களின் இயக்கமற்ற Stillகளைப் போலிருக்கின்றன. முழு மனிதனையே தனது சித்திரங்களில் படைக்கும் டாலியின் ஒவிய வளர்ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1.The classic Freudian Phase.
2. The Metamorphic phase. (A Poly-perverse Period) .
3. The Religious Phase.
4. The Nuclear Phase.

1968ம் ஆண்டு டாலி கூறிய வார்த்தைகள் ஒய்வற்று ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன !
“The Specialized Sciences of our times are concentrating on the study of the three constants of life: the Sexual instinct, the sentiment of death, and the anguish of space – time.”
*
மீட்சி முகப்பு அட்டை ஓவியம் : டாலியின் ‘Geopoliticus’ Child Watching the Birth of a New Man. 1943 Reynolds – Morse Collection, Cleveland, Ohio.

*

நன்றி : பிரம்மராஜன்

*

மேலும் :
சால்வடார் டாலி – பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து…  –  நன்றி : யுவன் பிரபாகரன்

வளர்ப்பு மிருகம் – சுகுமாரன் கவிதை (ஒவியம் : ஆதிமூலம்)

கவிஞர் ஞானக்கூத்தன் நடத்திய ’கவனம்’ சிற்றிதழில் வெளியான சுகுமாரனின் கவிதையையும் அதற்கு ஆதிமூலம் வரைந்த ஓவியத்தையும் நண்பர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் பகிர்ந்திருந்தார். (’கவனம்’ இதழ்கள் முழுத்தொகுப்பையும் தற்போது அமேஜான் தளத்திலும் வெளியிட்டிருக்கிறார். இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்).

எனக்குப் பிடித்த ஒவியர்களில் ஒருவரான ஆதிமூலம் பற்றி சுகுமாரன் எழுதிய  ’வாழும் கோடுகள்’ என்ற சிறு கட்டுரையை ஏற்கனவே டைப் செய்து வைத்திருந்தேன்.  எல்லாவற்றையும் சேர்த்துப் போட இப்போது ஒரு வாய்ப்பு.

சுகுமாரனுக்கும், மாமல்லனுக்கும், எப்போதும் எடுத்துக் கெடுக்கும் (!) என் சென்ஷிக்கும் நன்றிகள். – AB

*

வளர்ப்பு மிருகம் – சுகுமாரன்

தளர்ந்து
உயிர் பிரியத் தவிக்கும் உடம்பாய்க் குறுகி
எங்கோ பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை முகர்ந்தது, அது.
அதன் கண்களில் நிராதரவு.
இரங்கி சில சொற்களை எறிந்தேன்
பசி நீங்கியும் போகாமல்
என் நிழலைத் தொடர்ந்தது.
நாளடைவில் கால் முகம் ரோமம் என
உறுப்புகள் மீண்டன அதற்கு
பற்கள் நீண்டன
நகங்கள் வளர்ந்தன
கண்களில் குரோதம் அடர்ந்தது
அதற்குப் பயந்து
நண்பர்கள் வராமல் போனார்கள்
குழந்தைகள் ஒளிந்து கொண்டார்கள்,
அது வளர்ந்து
என்னை விடப் பெரிதாயிற்று
அதன் பற்களில் வெறி துடித்தது
எனினும் என்னை ஒன்றும் செய்யாது என்றிருந்தேன்
அதன் முனகலும் உறுமலும்
என் அமைதியைக் கலைத்தன.
அதன் ரோமங்கள் உதிர்ந்தும்
மூத்திரம் தேங்கியும்
மலம் குவிந்தும்
அறை நாற்றமடிக்கத் தொடங்கியது.
தொல்லை தாளாமல் நம்பிக்கைகளைக் கோர்த்துச் சங்கிலியாக்கிக்
கட்டி வைத்தேன்,
உலாவப் போகையில் சங்கிலி புரளக்
கூடவந்தது. பிறகு
இழுத்துப் போக வலுவற்ற என்னை
இழுத்துப் போகத் தொடங்கியது.
சங்கிலிச் சுருளில் மூச்சுத் திணற
சிக்கிக் கொண்டேன் நான்.
விடுபடத் தவிப்பதே விதியாச்சு
ஒரு நாள் விசை குறைந்த சங்கிலியைக் கை உணர
அது தொலைந்ததென்று மகிழ்ந்தேன்.
எனினும்
புலனாகாத எங்கோ
அகற்ற முடியாத சங்கிலியின் மறுமுனையில்
இருக்கக் கூடும் அதுவென்ற
பயம் பின்பு நிரந்தரமாச்சு.

(கவனம் / 13)

*

வாழும் கோடுகள் – சுகுமாரன்

சில ஆண்டுகள் முன்பு வரை வெகுஜன வாசகர்களுக்கு தயக்கம் இருந்தது. நவீன ஓவியமெல்லாம் நமக்குப் புரியாது என்பது அந்தத் தயக்கம். பெரும் பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியங்களிடம் தீண்டாமை இருந்தது. அதுவெல்லாம் நமது பத்திரிகைகளில் பொருந்தி வராது.

இந்தத் தயக்கத்தையும் தீண்டாமையையும் உடைத்த ஓவியர் கே.எம். ஆதிமூலம். எழுபதுகளில் வெளிவந்த சிற்றேடுகளில் ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் இடம்பெறாத இதழ்கள் மிகக் குறைவாகவே இருக்கும். புதிய கவிதைபோல நவீன ஓவியமும் துடிப்புள்ள ஒரு சின்ன வட்டத்தின் விவாதப் பொருளாக இருந்தது.

பெரும் பத்திரிகைகளின் உலகுக்கு குங்குமம் மூலம் அறிமுகமானவர் ஆதிமூலம். தனித்துவமும், உயிர்ப்பும் உள்ள கோடுகளால் உருவான அவரது ஓவியங்கள் வெகுஜன வாசகர்களை முதலில் பிரமிக்க வைத்தன. பிறகு கவனிக்க வைத்தன. அதன் பிறகு புரிந்து கொள்ள அழைத்தன. இன்று நவீன ஓவியங்களை வெளியிட எந்தப் பெரிய பத்திரிகையும் முகம் சுளிப்பதில்லை. மாறாக கொஞ்சம் சீரியஸான கதை, கவிதைகளுக்கு அவரையோ, அவரைப் போன்ற நவீன ஓவியர்களையோ தேடுவது வழக்கமாகிவிட்டது.

நவீன ஓவியர்களில் பல முதன்மைகளைக் கொண்டிருப்பவர் ஆதிமூலம். பெரும் பத்திரிகைளில் பரவலாக நவீன ஓவியங்களை முதன் முதலில் இடம்பெறச் செய்தவர். தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பில் மாற்றம் செய்து புத்தக முகப்புகளிலும், தலைப்புகளிலும் குடியமர்த்தியவர். நவீன ஓவியங்களில் தொடர்கதைக்குப் படம் வரைந்தவர் என்று பல முதல்கள் அவரிடமிருந்து தொடர்கின்றன.

ஆதி மூலம் உருவாக்கிய தலைப்பு எழுத்துக்கள் ஆரம்பத்தில் மிகவும் நையாண்டிக்குரியனவாகப் பேசப்பட்டன. அது அறியாமை . ஏனெனில் அந்த எழுத்துக்களின் வடிவம் அச்செழுத்துக்களின் வடிவமல்ல; கல்வெட்டுகளிலும், ஓலைச் சுவடிகளிலும் பயன்படுத்தப்பட்ட அசலான தமிழ் எழுத்துக்கள் அவை .

மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் தீட்டிய நூறு காந்தி படங்கள் ஓவிய உலகில் மிகவும் பிரசித்தம். மிகக் குறைச்சலான கோடுகளால் வரையப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் அவை. புகைப்பட காந்தியில் இயல்பான தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஆதியின் கோடுகளில் காந்தியின் உயிர்ப்பைப் பார்க்க முடிந்தது. கிராமியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான கடவுள் படங்களில் தெரியுமே அதுபோன்ற எளிமையின் உயிரோட்டம்.

சுதந்திரப் பொன்விழாவையொட்டி சென்னை வேல்யூஸ் ஆர்ட் ஃபவுண்டேஷன் ஆதி மூலத்தின் கோட்டோவியங்களை காட்சியாக வைத்திருந்தது. 1962 முதல் நேற்று வரை ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்களின் கண்காட்சி அது. ஆதிமூலம் இதுவரை வரைந்த கோட்டோவியங்களின் தொகுப்பு (கோடுகளுக்கிடையே Between the Lines) ஒன்றும் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது . இந்த முயற்சியிலும் தமிழ் ஓவியர்களில் முதல் பெருமை ஆதிக்குத்தான்.

ஆதிமூலம் அகில இந்திய ஓவியர்கள் வரிசையில் குறிப்பிடப் படுபவர். தமிழ்நாட்டில் ஒதுங்கிவிட்ட காரணத்தினால் உலகப்பிரசித்தி பெறவில்லையோ என்னவோ?

சர்வதேசத் தரம் உள்ளவர் ஆதிமூலம். ஆனால், அவரது வேர்கள் தமிழ் நிலத்தில் ஊன்றியவை. காந்தி, மகாராஜா ஓவியத் தொடர்கள் அனைத்தும் இயல்பான கோடுகளால் உருவானவை. கிராமிய தேவதைகளின் சிலைகளில் தெரியும் அதே கம்பீரம், அதே ஜீவன் ஆதிமூலத்தின் படைப்புகளிலும் தென்படுபவை.

“ஓவியம் என்பது அறிவிலிருந்து வரும் விஷயமல்ல. உங்கள் பார்வையிலிருந்து வருவது. உங்கள் அனுபவத்திலிருந்து வருவது. நம் ஊர்க் கலைஞர்கள் ஆளுயர அய்யனார் சிலைகளைச் செய்து வைக்கிறார்களே. அவர்கள் ஓவியமோ சிற்பமோ கற்றுக் கொண்டா செய்கிறார்கள். பார்க்கிறார்கள். அனுபவிக்கிறார்கள். படைக்கிறார்கள்’‘ – என்கிறார் ஆதிமூலம்.

நிஜம். நமது பார்வை திரைபோடப்படாததாக இருக்குமெனில் ஆதிமூலத்தின் படைப்புகள் நிச்சயம் ஓர் அனுபவமாக இருக்கும்.

*

(குங்குமம் இதழில் வெளியான கட்டுரை.  சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ நூலிலிருந்து.. (பக் 130-132)
*

நன்றி : சுகுமாரன் , விமலாதித்த மாமல்லன்

*

தொடர்புடையவை :
‘நம் திறமையை நாம் உணர வேண்டும்..!’ – ஓவியர் ஆதிமூலம்

நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ்

Metamorphosis of Salvador Dali

In Memoriam: Salvador Dali (11 May 1904 – 23 January 1989)

Thanks to : Slideshow Metamorphosis & Sen She

சாந்தியும் வீர சந்தானமும்

ஓவியர் வீர சந்தானத்தின் பேட்டி (pdf)

நன்றி : ஆனந்த விகடன் , சேதுபதி

« Older entries