நாம் ‘ஜியாரத்’என்று கூறுவதை, நவீன ஏகத்துவவாதிகள் ‘வழிபாடு’என வர்ணிக்கிறார்கள். ‘அல்லாஹு மன்ஃபஅனா பிஹிம் வபரகாதிஹிம்’என்றுதான் அவர்களது பிரார்த்தனைகள் துவங்குகின்றன. ‘எல்லாம் வல்ல இறைவா, இங்கே அடக்கமாகி இருக்கும் மகானின் பொருட்டால் எங்களுக்கு அருள் பொழிவாயாக’ என்பதே மொழியாக்கம். இங்கே ஏகத்துவ விரோதம் அல்லது ஓரிறைத் துரோகம் என்ன இருக்கிறது என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். எத்தனையோ தடவை எடுத்துக் கூறியும் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதாகவோ திருத்திக்கொள்வதாகவோ தெரியவில்லை. ‘அரபி’ ஞானமற்றவர்கள்தான் அவ்வாறு கூறுகிறார்கள் என்றால் மெத்தப்படித்த பி.ஜெய்னுல் ஆபிதீன் போன்ற மாமேதைகளும்கூடத் திரும்பத் திரும்ப அப்படித்தான் சொல்கிறார்கள். ‘ஜியாரத்’ என்றால் ‘சந்திப்பு’ எனப் பொருள். “யாரைச் சந்திப்பது? உயிரோடு இருப்பவர்களையல்லவா சந்திக்க முடியும்? இறைநேசர்கள்தான் இறந்துவிட்டார்களே?”என்ற ஒரு குதர்க்கவாதம் இங்கே குறுக்கிடுகிறது. இதைப்பற்றி நிறையப் பேச வேண்டியுள்ளதால், பிரிதோர் இடத்தில் விவாதிக்கலாம். எனவே ஒருவேளை ஒரு பொய்யைப் பலமுறை உரைப்பதால் அதனை உண்மையாக மாற்றும் வித்தை தெரிந்தவர்களோ என்னவோ; தர்காவுக்குச் செல்பவர்களையெல்லாம், “அவர்கள் இறைநேசர்களை வழிபடச் செல்கிறார்கள். வழிபாடு இறைவனுக்கு மட்டுமே சொந்தம். எனவே ஜியாரத் என்பது இறைவனுக்கு இணைவைப்பது” என்று சொல்லிச்சொல்லியே தனது ஆதரவாளர்களை அவர்கள் மூளைச்சலவை செய்துவிட்டார்கள்.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும்: “ஜியாரத் செய்யுங்கள். பெண்களும் ஜியாரத் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்” என்ற நபிமொழி, அவர்கள் நம்பும் நபிமொழித்தொகுப்புக்களிலிருந்தே நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களாகும். ஆக, இஸ்லாம் அனுமதி தந்த காரியங்களைக்கூடச் செய்வதற்கு அவர்கள் தடையிடுவதையும் சொற்போர் புரிவதையும் கூர்ந்து கவனிக்கையில், மார்க்கம் சார்ந்த விஷயத்தைத் தாண்டி வேறு ‘ஏதோ’ ஓர் உள்நோக்கம் அவர்களிடத்தில் மலிந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
குடி,வட்டி,விபசாரம் போன்ற கொடுஞ்செயல்களைச் சாடுவதைக்காட்டிலும் ரமளான், ஹஜ் காலங்களில் ‘ஜியாரத்’தைத் தாக்குவதில்தான் அவர்கள் சொல்லெணா ஆர்வமும் ஆவேசமும் காட்டுகிறார்கள். அதனாலேயே அதை ‘வழிபாடு’ என்று வாதிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சமுதாயக் கொடுமைகள் அத்தனையையும் விடுத்துவிட்டு, இஸ்லாம் அனுமதித்த ஜியாரத்தை அவர்கள் முழுமூச்சுடன் எதிர்ப்பதற்கு அப்படி என்ன சிறப்புக் காரணம் இருக்க முடியும்?
அவர்கள் ஜியாரத்தைக் கையிலெடுக்கும் காலகட்டத்தைக் கூர்ந்து கவனிக்கையில் ஒரு சராசரி ஐயம் எழுகிறது: ஜக்காத், பித்ரா,குர்பானி போன்ற தானதர்மங்கள் இடம் பெறும் சமயங்களிலெல்லாம் முஸ்லிம்கள் பெருமளவில் தர்காவுக்கு வந்து அங்குள்ள எளியவர்களுக்கு அவற்றை அளிப்பது நீண்ட நாட்கள் பழக்கம். அதில் அவர்கள் மிகுந்த மனநிறைவும் திருப்தியும் அடைகிறார்கள். இல்லையெனில் இஸ்லாத்தில் புதுமையைப் புகுத்த விரும்புகிற மார்க்க ஜாம்பவான்கள் கூறுகின்ற லாஜிக்கையெல்லாம் மீறி, நோன்பைக் கடைபிடித்துக்கொண்டு நீண்ட தூரத்துக்கு வந்து இத்தகைய ‘மதவிரோத’ காரியங்களில் ஈடுபடப் போவதில்லை. ( “ஜக்காத்தை தர்காவில் இருக்கும் ஏழை எளியவர்களுக்குத்தான் அளிக்க வேண்டுமென்று எந்த குரானில் கூறப்பட்டிருக்கிறது?”என்றுகூட வினாக்கள் எழுப்படுகின்றன.) ஜக்காத், பித்ராத் தொகைகளை முஸ்லிம்கள் உண்டியலில் இடுவது கிடையாது என்பது பகிரங்க உண்மை. எனினும் பாமர முஸ்லிம்கள் தர்கா போன்றதொரு புண்ணிய ஸ்தலத்தில் அப்படிப்பட்ட தர்ம காரியங்கள் செய்வதிலேயே திருப்தியடைகிறார்கள். அதில் தவறோ சட்டமீறலோ எதுவுமில்லை. வழங்க வேண்டிய தொகைகளை உரியவர்கள் அவர்கள் கைகளினாலேயே செய்கிறார்கள். ‘எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் உரியவர்களிடம் சேர்ப்பிக்கிறோம்’என்ற விளம்பரங்களையும் பிரச்சாரங்களையும் அவர்கள் ஏற்பதில்லை. இப்படிப்பட்ட பிராக்ஸிகளுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதுகூட நவீன ஏகத்துவவாதிகளின் கூற்றுதான்.
இந்நிலையில், ‘ஜியாரத்’தை ஒரு மத விரோதக் காரியம் என்ற எண்ணத்தை மக்களின் மனத்தில் திணித்து விட்டால் ,ஜக்காத்தையும் பித்ராவையும் வழங்குவதற்கு ஓர் இடைத்தரகர் தேவைப்படுகிறார். அவர் மார்க்க அழைப்புப்பணி செய்பவர் என்று முத்திரை குத்தப்பட்டவராக இருந்தால் காரியம் இன்னும் சுலபம்.இங்கே ஜியாரத்தைத் தாக்குவதற்கு ஒரு நோக்கமிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது நிச்சயம் லௌகீகம் சார்ந்த விஷ்யமே தவிர, மார்க்கம் சார்ந்தது அல்ல. “ஜக்காத்தையும் பித்ராவை எங்களுக்கு அனுப்புங்கள்”என்று விளம்பரம் செய்யாமல் பிரச்சாரம் செய்யட்டுமே, பார்ப்போம்.
மற்றப்படி ஜியாரத், இஸ்லாத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு செயலா என்பதை, இன்ஷா அல்லாஹ், அடுத்த கட்டுரையில் பார்ப்போம்
*
நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail : hatheeb@gmail.com
Barakathullah said,
24/08/2010 இல் 13:37
Very good article…this type of messages needed more and more to create awareness on muslims to protect against commercialising Dheen (for money making purpose)
ஒ.நூருல் அமீன் said,
24/08/2010 இல் 17:03
வித்தியாசமான பார்வை. உங்கள் அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.