கொம்பன் – கந்தர்வன் சிறுகதை

’சபராளி’ என்னைக் கலங்கவைத்த கதை இது. நண்பர் எஸ். ஷங்கரநாராயணன் தொகுத்த ‘1999ன் சிறந்த கதைகள்’ தொகுப்பிலிருந்து, நன்றியுடன்..


gandharvan

கொம்பன் – கந்தர்வன்

அதிகாலை மங்கலில் மாடுகள் படுத்திருந்தது வெள்ளை வேட்டியை விரித்துப் போட்டது போலிருந்தது. செவல் காட்டுப்பக்கமிருந்து வந்த காலைக் காற்றை உடம்பில் வாங்கியபடி மங்கலக்குடியார் மந்தையை நோட்டம் விட்டிக்கொண்டிருந்தார். விடிகாலைக் குளிர்ச்சிக்கு சுகமாகக் கழுத்தை நீட்டிச் சில. பாரியான வயிறுகளை ஒரு பக்கமாய் சரித்துச் சில.நாலு கால்களையும் நீட்டி ஏகாந்தமாய்ச் சிலவை…என்று கலக்கம் கலக்கமாகவும் அதி சுதந்திரமாகவும் படுத்திருந்தன மாடுகள்.

சிலது ரொம்ப சினேகிதத்துடன் ரெண்டு ரெண்டாய் ஒட்டிப் படுத்துக் கிடந்தன. விடிந்து கொண்டிருப்பது தெரிந்து எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற நினைப்பு வந்ததும் சோம்பலோடு சினேகித மாட்டிற்கு சுகம் வரும்படி நாக்கால் நீவிக் கொண்டிருந்தன சிலவை. அவர் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தார். அதன் கீழாக பூமியின் வாசம் நுகர்ந்து றெக்கை இல்லாப் பெரும் பெரும் பறவைகளைப் போல் அவை படுத்திருந்தன.

மங்கலக்குடியாரையும் அவருடன் மந்தைக்கு வந்திருந்த கீழத்தெரு ஆட்களையும் விட்டு விலகிய பண்ணையாள் கீழ்த்திசைக் குச்சிலுக்குள் போய் வேட்டியைப் போர்த்திப் படுத்துக்கிடந்த மந்தைக்காரனை எழுப்பினான். அவன் விழித்ததும் சொன்னான். ‘மங்கலக்குடியிலிருந்து வந்திருக்கோம் மொதலாளி நிக்கிறாரு.’

மந்தைக்காரன் வேட்டிகட்டி இடுப்பில் துண்டு சுற்றிச் சாத்தி வைத்திருந்த சாட்டைக் கம்புடன் வெளியே வந்தான். அவன் இரவு வெகு வேரம் நட்சத்திரங்களோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு நான்காம் ஜாமத்தில் தூங்கத் துவங்கியதால் கண்கள் சிறுத்தும் சிவந்தும்கிடந்தன. அங்கவஸ்திரத்தோடு நின்று கொண்டிருந்த மங்கலக்குடியாரை கும்பிட்டுச் சொன்னான்.

‘ரெண்டு வருசத்துக்கு முந்தி ஐயா வந்தது’

‘ஆமா இப்ப காணி கரை கூடிருச்சி’

‘அடுத்து ஒரு ஜோடி வேணும்ல’ என்றான் பண்ணையாள்.

அய்யா கன்னு (கன்று) பாக்கிறீயளா? என்றான் மந்தைக்காரன்.

‘ஆமா’ என்றபடி தான் கூட்டிவந்த ஆட்களைப் பார்த்தார். அவர்கள் மந்தைக்காரனை முன்னென விட்டுப் பின்னே நுழைந்தார்கள்.மந்தைக்குள் அறிமுகமற்றவர்கள் வீட்டிற்குள் நுழைகையில் வாரிச்சுருட்டி எழும் பெண்களைப் போல் முன்னங்கால்களைத் தாறுமாறாக மடக்கி அவசர அவசரமாய் மாடுகள் எழுந்தன. கிடேரிகள் பிஞ்சுக்கொம்புகளை வேகவேகமாய் ஆட்டின. கிடாக்கள்
பின்னங்கால்களைக் காற்றில் உதைத்தன.

எழுந்தவாக்கில் மாடுகள் கால்களைத் தூக்கி சாணி போட்டன. மூத்திரம் பெய்தன. மங்கலக்குடியார்மந்தையின் பக்கவாட்டில் போய் கிடாக்களின் ஆட்டத்தை உற்றுப் பார்த்தார். எங்கு பார்த்தாலும் கொம்புகளாகத் தெரிந்தன. பண்ணையாளும் கீழத்தெரு ஆள்களும் மந்தைக்காரனோடு மந்தையின் முதுகுப்பகுதியில் மெல்ல மெல்ல முன்னேறிச் செல்கையில் மாடுகளின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

அவருக்கு மந்தை மாடுகள் தான் பிடிக்கும். சந்தையில் நிற்கும் மாடுகள் சத்துக்கெட்டவை. மாடு குனிந்து விடாமல்,மூக்கணாங்கயிறு பிடித்து முகம் நிமிர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பார்கள் தரகர்கள். நெற்றிச் சுழிக்கு விபூதி பூசி மறைப்பார்கள். அரைக்கிழடும் வங்கிழடுமானவைகளை எண்ணெய் பூசி கண்ணை மயக்குவார்கள்.

மந்தை மாடுகள் தான் தோன்றிகள். தறி கெட்ட வளர்ப்பு. பூசணிக்காய்போல் மடுக்கள் சுமக்கும் பசுக்களிலிருந்துமனிதர்களுக்கு ஒரு சொட்டு பால் கூடப் பீச்சக்கூடாது. என்பது மந்தையின் முதல் விதி. எல்லாப் பாலும் கன்றுக்கு. பசுவும் கன்றும் கழுத்தில் கட்டும் உலகக் கயிறுகள் அறியா. பசு தேடித் தேடித் போய் கண்டறிந்து நிற்கும். ‘இன்னும் குடி இன்னும் குடி ‘ என்று நாக்கில் கன்றுடம்பு நக்கி மட்டும் வளர்ப்பதல்ல மந்தையில் கன்று வளர்ப்பு. கடல் போல் அமிர்தம் சொரியும் பசு கன்றுக்கு..

மந்தையில் மேய்சல் நிலங்களிலும் கன்றுகள் நடப்பதில்லை . இரவு பகலாய் எம்பி குதித்துதான் திரியும். பால் குடி மறக்கும் காலம் புலியின் நீளத்துக்கு நெருக்கும். கொம்பு முளைக்குமுன்பே பசுக்கை விரட்ட ஆரம்பிக்கும். மந்தைக்காளைகள் எல்லாமே பொலிகாளைகள். நடந்து வரும் போதே ‘இந்த உலகத்தை என்ன செய்ய போகிறேன் பார்’ என்பது போல் பூமியைத் தூசி பறக்க விட்டுத்தான் நடப்பார்கள். சதா காலமும் பசுவின் மூத்திரம் சுவைத்து மூஞ்சியை ஏழு கோணங்களில் வைத்து ரசாயன பரிசோதனை செய்வார்கள் சேர்க்கையின் நிமித்தம்.

செவல் அடிவார வார்ப்பகுதியான பதினேழு கிராமங்களுக்கு வெளியே வனமும் சுனைகளுமாயுள்ளன. புதர் புதராய் புல் வளர்ந்து முழங்காலுக்கு கிடக்கும். சிறு மழைக்கும் பனிக்கும் கூட அருகம்புல் புசு புசு வென்று முளைத்துக் காற்றிலாடி மந்தையைக் கூப்பிடும். ஒரு வாய்க்கு ஒரு பிடி என்று மாடுகள் புல் மேய்ந்து செழித்தும் திமிர்பிடித்தும் திரியும். எலும்பு தெரியும் மாடு மந்தைக்குள் தெரிந்தால் ஊருக்கு கொண்டுபோய் விடுவார்கள்.

மந்தை மேய்ப்பிற்காக திக்குக்கு ஒருவராக நாலு பேருண்டு ஏழு நாளுக்கு ஒரு திசையிலே போய்த் திரும்பும் மந்தை. இராத்தங்கல்பதினேழு கிராமங்களுக்கு வெளியே காட்டுப் பொட்டல்களில் நிகழும். பட்டி, கதவில்லை மந்தைக்கு. மந்தைக்காரனைக் கேட்டால் சொல்வான். திமிர் கொண்டதுக்கு பேர்தான் மந்தை. ஆனா சத்தியத்துக்கு கட்டுப்பட்டது.

ஊர்த் தொழுவங்களில் கட்டிக் கிடக்கும் மாடுகளை திருடிக் கொண்டு போவதும் தடம் பார்த்துப் போய் கண்டுபிடிப்பதும் மந்தையில் நேர்வதில்லை. ஈனும் நாளில் நஞ்சுக்கொடி வாசத்துக்கு வரும் நாய் நரிகளே மாட்டுக் கொம்புகளில் கிழிபடுவதால் எந்த சூரனும் மந்தை மாட்டை தொட்டுத் திருட முடியாது..கோட்டைச் சுவர்கள் கொம்புகள்.

மேடு தென்படும் இடங்களைக் கண்டால் மாடுகளுக்கு ஆவேசம் வரும். கொம்புகளால் மேட்டை குத்திக் குதறும்.மேடுகள் சமாதிகள் என்றாலும் விடாது.

கண்மாய்ப்பக்கம் மேயப் போய்விட்டு வந்தால் எல்லா மாட்டுக் கொம்பிலும் கரம்பை அப்பியிருக்கும். ஆளுயரக் கண்மாய்க்கரை மேடுகளைக் பார்த்த கோபம்.

பௌர்ணமி இரவுகளில் மந்தை பூராவிலும் கொம்புகளாய் கிடப்பதைப் பார்க்க வெகு அழகாய் இருக்கும். அமாவாசை ராத்திரிகளில் கொம்புகள் தெரியாது. அன்று நாய் நரிகளின் மனசில் மட்டும் தெரியும் கடல் கடலாய் கொம்புகள்.

மங்கலக்குடியார் மந்தையின்வயிற்றுப் பக்கமாய் நடந்துக்கொண்டு மந்தைக்குள் நின்ற பண்ணையாளுகளும் எது வாய்ப்பானது என அடையாளம் காட்டினர். வெகு நேரங்கழித்து அவர்கள் அவ்வளவு பேர்களும் பாராக்கயிறுகளைக் கழுத்துகளில் கட்டி இழுத்துவந்த மாடுகள் போலும் கன்றுகள் போலும் இருந்தவைகளை அருகில் வைத்து பார்த்தனர். பாலுக்கு நீலம் போட்டது போல் நிறம். பிறந்ததன் பின் முதன்முறையாத் தங்கள் கழுத்துகளில் கயிறுகளோடு நின்றன அவை.

கண்கள் திரு திருவென்றும் உடம்புகள் திமிறிக் கொண்டும் அலைபாய்ந்தன. பாராக் கயிறுகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் கீழத்தெரு ஆட்கள் எவ்வளவு நேரத்திற்கு தாக்குப் பிடிப்பது என்பது போல் மாடுகளின் திமிர்தல்களுக்கு வளைந்து நெளிந்து கொண்டிருந்தார்கள். ஒருசாண் உயரக் கொம்புகள் யாரையும் எதுவும் செய்துவிடும் என்பதுபோல் தலையில் வினாடிக்கொருமுறை பல திசைகளிலும் பாய்ந்து கொண்டிருந்தன. இப்படியோர் தேக்கம் இதுவரை அவைகளின் வலுத்த கால்களுக்கு ஏற்பட்டதில்லை. ஆபத்திலும் மகிழ்சியிலும் நாலுகால் பாய்ச்சலில் ஓடியே
வளர்ந்தவை. நகர முடியாமல் நிறுத்தலுக்கு உட்பட்ட கால்கள் நடுங்கின.

மங்கலக்குடியார் இரண்டும் ஒரு ஜாதியாகவும் சம மட்டத்திலும் சம நிறத்திலும் இருப்பதை, நின்றும் சுற்றிவளைத்தும்குனிந்தும் குத்துக்கால் வைத்து உட்கார்ந்தும் பார்த்தனர். வால்கள் ரொம்ப அழகாய் இருந்தன.உரிவி விட வேண்டும் போலிருந்தது. பெண்களின் நீண்ட ஜடைகள் போல் தெரியும் வால்கள். உணர்ச்சி வயப்பட்டுஉருவிடக் கையை நீட்டி விட்டார். அவற்றின் கொம்புகளை பார்த்த மாத்திரத்தில் கைகளை இழுத்துக்கொண்டார்.

மாட்டு சாஸ்திரம் அறிந்தவர் மங்கலக்குடியார். மாட்டிற்கு வால் எதற்காக உண்டாகி இருந்தாலும் அவர் பொருட்டு அது ஒய்யாரத்திற்கே. திமிருக்கு திமிர். கொம்புதான் ஆயுதம். மாடு மாதிரி சிலது தான் பிறக்கும்போதே ஆயுதத்துடன் பிறக்கிறது. வளர வளர ஆயுதம் கனத்து வலுவாக வளர்கிறது. மங்கலக்உடியார் ஒரு நிமிடம் கொம்புகளை கவணித்துவிட்டு மாடுகளின் காதுகளை கவனித்தார். சுருண்ட காட்டு இலைகள் போலிருந்த அவை எவ்விதக் குற்றமும் இன்றி இருந்தும் மீண்டும் வால்களைப் பார்த்தார். பூரான் சுளி இல்லை. நெற்றிகள் சின்ன சொளகுகளில் விஸ்தாரம்.

கழுத்துகளைக் கூர்ந்து பார்த்தார். தடிமனாய் இருந்தன. நுகத்தடிகளின் வழியாக அவரது பழங்காலத்து வீட்டை அந்தக் கழுத்துகள் தான் இனி சுமந்து செல்ல வேண்டும். எல்லாமே அவருக்கு திருப்தி.

‘நான் காலாங்குடிக்குப்போய் மாட்டுக்கான பணத்தை மந்தை முதலாளிட்ட ஒப்பிச்சிட்டு வாரேன். நீங்க பதனமா மாடுகளை வீடு கொண்டுபோய்ச் சேருங்க’ என்றார்.

திசைக்கு ஒரு கயிறு இழுத்து இழுபட்டார்கள் மாடு ஓட்டுபவர்கள். மந்தையின் மற்ற மாடுகள் மிரண்டு குதித்தன. இம்மாதிரி மாடு பிடித்து போகும் காலங்களில் நடப்பது போலவே மாடுகள் தங்களுக்கு எவ்விதப் பகையுமின்றிக்கோபத்தில் அடுத்த மாட்டோடு மூர்க்கமாய் மோதின. மாடு ஓட்டுபவர்கள் இரண்டுக்கும் வாய்களைச் சுற்றி ஒரு கட்டு போட்டு அவை மந்தையை திரும்பி பார்க்க விடாமல் செய்திருந்தார்கள். மந்தையை மறுபடி பார்த்து விட்டால் இரண்டும் ரௌத்திரம் கொண்டு பாராக் கயிறுகளையும் அறுத்துக் கொண்டு ரத்தவிளாரி எடுத்துத் திரும்பி மந்தைக்குள் ஓடிவிடும். விரட்டினால் மின்னலாய்ப் பாய்ந்து காட்டிற்குள் நுழைந்து காணாமற் போய்விடும்.

பத்தடி தூரத்திற்கு மாடுகளை நடத்த அறைமணியானது.பண்ணையாள் மற்றவர்களுக்கு கூர் சொல்லிக் கொண்டிருந்தான். இழுவை பறியலாய்க் கிடக்கும் இதைப் பார்த்தபடி வட மேற்காகப் போகும் ஒத்தையடிப் பாதையில் மங்கலக்குடியார் நடக்க ஆரம்பித்தார்.

மதியவேளையில் மங்கலக்குடியார் வேப்பமரத்தில் இரண்டும் அதே பாராக் கயிறுகளால்கட்டிக் கிடந்தன. பக்கத்து தொழுவம், தொழுவத்தில் கட்டப்பட்டு அசையாது கிடக்கும் மாடுகள், கூரைகள், சுவர்கள், வீடுகள், கூட்டமான ஜனங்கள் என்று பார்த்துப் பார்த்து மிரண்டும் அதிர்ந்தும் நின்றன. சுத்து வீட்டுப் பெண்கள் தங்கள் குழந்தைகளை அடக்கிக் கொண்டிருந்தார்கள். புது மாடுகளின் பக்கம் போகாமல். அப்படியும் ஒரு பையன் பாதுகாப்பாய் தூரத்தில் நின்று எறிந்த ஒருகல் மாட்டின் முதுகில் விழுந்ததற்காக மரத்தையே ஒடித்துப் போடுவது போல் ‘வாங்கடா கிட்ட’ என்பதாகக் கொம்புகளை வீசிக் குதித்தது. வேம்புக்குளிர்ச்சி அவற்றின் கொதிப்பை கிஞ்சிற்றும் குறைக்கவில்லை.

சட்டியில் சோறுவாங்கி தொழுவத்தில் உட்கார்ந்து பண்ணையாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மங்கலக்குடியார் சொன்னார். ‘தொழுவத்து மாடுகளை அவிழ்த்து வேப்ப மரத்தடியில் விடு பழகட்டும்.’

தொழுவத்தில் நின்ற மாடுகளை அவிழ்த்து வேப்ப மரத்தடிக்கு விட்டபோது மந்தை மாடுகள் அவைகளை வேறு ஏதோ ஜந்துக்களை கண்டு விட்டதைப்போல் முட்ட வந்தன. கண்களில் ஒளியிழந்தும் உடம்புகளில் செயலிழந்தும் மெதுவாய் நடந்து வந்த தொழுமாடுகள் இளம் மாடுகளின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கி ஆபத்தற்ற இடைவெளி விட்டு வெட்கமின்றி நின்றன.

இன்னும் ஒரு வாய் கூளம் வைக்கோல் கூடத் தின்னவில்லை. தொட்டியில் வைத்த தண்ணீரில் ஒரு சொட்டைக்கூட குடிக்கவில்லை. பண்ணையாளிடம் மங்கலக்குடியார் சொன்னார். ‘அந்தப் புல்லுக் கட்டுலயிருந்து கொஞ்சத்த அதுக முன்னாடி ஒதறிப் போடுடா. புல்லை உதறிப் போடுவதற்காக அவன் எவ்வளவு நயமாய் பயமாய் போனாலும் கயிற்றின் எல்லைவரை ஓடிவந்து கொம்பு தாழ்த்தி விரட்டின. ராத்திரியானதும்தெருக் கம்பங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வந்த மின் ஒளி பார்த்து முரண்டி சத்தமிட்டன.

ரெண்டு நாளில் மிரட்சி குறைந்து புல் தின்னவும் தண்ணீர் குடிக்கவும் ஆரம்பித்தபோது ஒரு விடியற் காலையில் மங்கலக்குடியார் வீட்டுக்குள்ளிருந்து இரண்டு குட்டையான வெள்ளைக் கயிறுகளை எடுத்து வந்தார். விரல் தடிமனாய் இருந்தன கயிறுகள்.பண்ணையாள் போய் கீழத்தெரு ஆள்களைக் கூட்டி வந்திருந்தான். அவர்கள் கருத்தும் வைரம் பாய்ந்த உடம்பினராகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவராய் வந்த அம்மாசியின் கைகளில் முனை சீவிய பனைநார் ஒன்றிருந்தது.

அவர்கள் மந்தை மாடுகளை முன்னும் சென்று கூர்மையாகப் பார்த்துவிட்டு ‘நல்ல ஜோடி ‘ என்றார்கள். மங்கலக்குடியாருக்கு மேலும் காணி கரை சேரப்போவதாய்ச் சொன்னார்கள். ஒரு மாட்டை பிரித்து மஞ்சனத்தி மரத்தில் கட்டுவதற்குள் ஜனம் வடம்பிடித்து நடத்தும் எருது காட்டுத்திருவிழாவைப் பார்த்து விட்டது. அவ்வளவு அமளி.

வேப்ப மரத்தடி மாட்டின் உடம்பை இரு பக்கங்களிலும் நவ்வாலு பேர் மெதுவாக வந்து மாட்டின் உடம்பை அமுக்கிப் பிடிக்க கொம்புகளை மட்டும் இரண்டு பேர் அழுத்திப் பிடித்து நிற்க அம்மாசி கூர்நாரில் மங்கலக்குடியார் கொடுத்த கயிற்றைக் கோர்த்து மாட்டு மூக்கின் ஒரு துளையில் நுழைத்துக் குத்தினார். சவ்வு கிழிந்து மாடு முன் எப்போதும் இல்லாத கோபத்தில் திமிறியது. குதித்தது.

பலவான்கள் தங்கள் உடல் பலத்தின் மூலம் மாட்டின் அசைவுகளைக் கட்டுப்படுத்தினார்கள். இந்த இடைவெளியில் அம்மாசி ஒரு துளையில் குத்திய நாரைக் கயிறோடு மறுதுளை வழியாக இழுத்தார்.

மாட்டு மூக்கிலிருந்து ரத்தம் சொட்டியபோது அதன் கால்கள் ஆடின. வலியால் துடித்து எம்பியது. மூக்கில் பூரிக்கயிறை இழுத்துக் கொம்பிற்குப் பக்கமாய் முடிச்சுப் போட்டார்கள். மங்கலக்குடியார் கொடுத்த இன்னொரு கயிறை இதன் கழுத்தில் கட்டினார்கள். மாடு சிறிது நேரம் துடித்துவிட்டு அசையாமல் நின்றது. இதேபோல் அடுத்த மாட்டுக்கும் மூக்குப் பூரிரத்தம் சிந்தவிட்டுக் கழுத்துக் கயிறும் கட்டினார்கள்.

மறுபடி புல்லும் நீரும் மறுத்து நின்ற நிலையிலே நின்றன இரண்டும். பிள்ளைகள் கூடிநின்று மாடுகளின் அலங்காரம் பார்த்தார்கள். மங்கலக்குடியாரின் சம்சாரம் திருஷ்டி கழித்துவிட்டுப் போனார். கூட்டத்தை விரட்டினார். வெள்ளை மாட்டிற்கு மூக்கு மட்டும் கறுப்பாயிருப்பது கயிறு போட்டபின்தான் பளிச்சென்று தெரிந்தது. மூக்குமட்டும் ஏன் கறுப்பாய்ப் படைக்கப்பட்டது என்பது குறித்துக் கம்பூன்றி வந்தவர்கள் கதைகள் சொன்னார்கள். ஆயினும் குழந்தைகளுக்குக் கொம்புகளின் வீம்பு திடீரெனக் குறைந்தது பற்றி சலிப்பானார்கள். அவர்களுக்கு வியப்பும் வருத்தமும் வந்தன.

மாடுகளால் கொம்புகளை அசைக்க முடியவில்லை. ஆட்ட முயன்ற போதெல்லாம் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. ரத்தத்திற்காகப் படையெடுத்தஈக்களைக்கூட முகம் ஆட்டி விரட்ட இயலவில்லை அவைகளால்.

ஒரு வாரத்திற்குள் புல்தின்ன வைக்கோல் தின்ன என்று ஆரம்பித்தன. ஜோடி சேர்த்துக் கட்டினார்கள். ஊர் பழகிவந்து கொண்டிருந்தது அவைகளுக்கு. மூக்கணாங் கயிறோடும் கழுத்துக் கயிறோடும் சேர்த்து ஒருநீளமான சாதா கயிறு போட்டுக் கட்டி வைத்தார்கள்.

மங்கலக்குடியார் ஒருநாள் ரொம்பப் பிரியமாக அருகில் போனார். மாடுகள் ஒன்றும் செய்யவில்லை. சற்று தைரியம் வந்து மாட்டு நெற்றியைச் சொரிந்துவிடக் கையை நீட்டியபோது மாடுகள் மிகுந்த கோபத்தோடுமுட்டித் தள்ளியது. மக்கசக்கரப்பட்டு விழுந்து எழுந்த மங்கலக்குடியாருக்குத் தொடையில் மிதமான காயம். தெருஜனம் வேடிக்கை பார்த்ததில் வெகு வெட்கம். தேவைக்கதிகமாக ரெண்டுநாள் சின்னக் குழந்தைகளிடம் கூட சிரித்தபடி திரிந்தார்.

மூன்றாம்நாள் புறஞ்சேரிக்குப் பண்ணையாள் போய் சேமாறியை (காயடிப்பவன்) அழைத்து வந்தான். பண்ணையாள் இரண்டு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு சந்திரப் பொட்டலுக்குப் போனான். சேமாறி கவட்டைக் கட்டையோடு பின்னால் வந்தான். கீழத்தெரு ஆட்கள் ஏற்கனவே பொட்டலுக்கு வந்திருந்தார்கள்.

முன்னிரண்டு கால்களை இணைத்து ஒரு கட்டும், பின்னரண்டு கால்களை இணைத்து ஒரு கட்டும் போட்டார்கள். மெதுவாக மாட்டை விழுத்தாட்டினார்கள். நின்ற எல்லோரும் மண்டிபோட்டு அமுக்கிக்கொள்ள சேமாறி கட்டையால் மாட்டின் ஜீவவிதையை நசுக்கினான். மாடு கால்களை வெட்டித் துடித்தது.

பின் அடுத்த மாட்டிற்கும் அவ்வாறே கயிறு கட்டிப் படுக்கப் போட்டு சேமாறி விதை நசுக்கினான். மாடுகளின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. தடுமாறி நடந்தன. அன்று மாலையே வேப்ப மரத்திலிருந்து இரண்டையும் அவிழ்த்துத் தொழுவத்திற்குக் கொண்டுபோய்க் கட்டினான் பண்ணையாள். தொழுவத்தில் அவன் சாப்பிடும் இடம்தள்ளிப் போனது.

இரண்டும் நின்ற நிலைதான். படுக்கவில்லை . புல் நீர் எதுவும் வாயில் படவில்லை . கண்களில் வடிந்த நீருக்கு ஈக்கள் வந்தன. சுற்றி நடக்கிற எல்லாமே மந்தமாயின. ஒருவாரத்தில் மங்கலக்குடியார் மகனே மாடுகளை அவிழ்த்துத் தண்ணீர் காட்டினான். வைக்கோல் தின்ன ஆரம்பித்தன. புல் போட்டார்கள். தின்றன.

வல்லுநர்கள் வந்து ஆராய்ந்து எது வலதன், எது இடதன் என்று முடிவு சொன்னார்கள். அவ்வாறே ஒரு சுபதினத்தில் இரண்டு மாடுகளையும் ஒரு தட்டு வண்டியில் பூட்டி சாட்டையில் அடித்தும் சாட்டைக் கூம்பின் நுனி ஆணியால் புட்டங்களில் ரத்தம்வரக் குத்தியும் வசக்கினார்கள். வாலைப்பிடித்து முறுக்கினால் வேகம் போயின. அடிக்க அடிக்கத் தாங்கின. சுமந்தன. இழுத்தன.

சேறும் சகதியுமாய்க் கிடந்த வயல்களில் வெயில் மழை அந்தி சந்திகளில் கலப்பை இழுத்தன. உழவு தளையில் கொழுமுனை காலிலேறி வயல் நீர் ரத்தத்தால் சிவந்து ரத்தக்களறியான போதும் கொம்புகளை அவை அசைக்கவில்லை. சந்திரப் பொட்டலுக்கு ஒருநாள் அவைகளைக் கொண்டுபோய் மல்லாத்திப் போட்டு லாடம் அடிக்க வைத்தார் மங்கலக்குடியார்.

ஒரு மால் இருட்டில் காட்டுப்புஞ்சை அறுப்பாகி நெல் ஏற்றிய வண்டி இழுத்துவருகையில் அருகாக அந்த மந்தை மாடுகள் போனபோது அவைகளை வெகு மந்தமாய் பார்த்துவிட்டு சாலையில் ஓடின சாட்டையடி வாங்கியபடி. அந்த வருடப் பொங்கலுக்கு நாலுநா முந்தி மங்கலக்குடியார் கையால் மாடுகளின் கொம்புகளை கூர்மையான கத்திக்கொண்டு சீவி அவருக்குப் பிடித்தமான வர்ணம் அடித்தார்.
***
நன்றி : புதுவிசை, நிலா புக்ஸ்

தொடர்புடைய பதிவு :
கந்தர்வன் சிறுகதைகள் சில..

1 பின்னூட்டம்

  1. அனாமதேய said,

    08/06/2022 இல் 16:32

    கண்முன் விரிந்த காட்சி. நெட்டி தள்ளும் சோகம். மிக மிக அற்புதமான கதை.


பின்னூட்டமொன்றை இடுக