நீ ஓவியர்களை மிகவும் நேசிக்கிறாய். நான் சொல்லட்டுமா, மனிதர்களை நேசிப்பதைவிட மகத்தான ஒரு கலையும் இல்லை. – வான்கோ (1888)
*
‘அன்புள்ள வின்சென்ட்’ என்ற தலைப்பில் எழுத்தாள நண்பர் சுகுமாரன் – ‘Lust for Life’ புத்தகத்தைப் படித்த நெகிழ்ச்சி மாறாமல் – எழுதிய கட்டுரையிலிருந்து இந்தப் பதிவு. 2003ல் வெளியான சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ தொகுப்பில் இது இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த, நான் அடிக்கடி படிக்கும் கட்டுரை . ‘சுயநலச் சிந்தனைகள்தான் துக்கத்துக்குக் காரணம். மகத்தான இலட்சியங்களைக் கைக்கொண்டு சுயநலமின்றி செயல்பட்டால் துக்கத்திலிருந்து விடுபடலாம்’ போன்ற வைர வரிகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கலாம் – துக்கம் சற்றும் குறையாவிட்டாலும். ‘மனப்புயலின் வேகத்தால் சிதைந்த’ வான்கோ, தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சகோதரனின் தோளில் சாய்ந்து உயிரை விட்டதை, ‘ காலத்தின் நிறமற்ற திரை மீது ஒரு சிவப்பு நிற ஓவியம் பதிந்தது’ என்று குறிப்பிடும் (இந்த வரியின் நிறம் என்னவாக இருக்கும்?) கவிஞர் சுகுமாரன். என்னை கலங்கவைத்த இந்த கட்டுரையை முழுதாக பதிவிட ஆசை. முடியவில்லை. ஆதிமூலத்தின் காந்தியைப் பார்த்தே அலறி ஓடிய பாய்மார்களும் தாய்மார்களும் அடிக்க வருகிறார்கள். எனவே , ‘பைத்தியக்காரன்’ வான்கோ தன் பிரிய சகோதரன் தியோவுக்கு எழுதிய , சில கடிதங்களின் ஒரிரு பத்திகளை மட்டும் இப்போது இடுகிறேன்.
‘வான்கோ தனது பத்தொன்பதாம் வயதிலிருந்து சகோதரன் தியோவுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார். முப்பத்தி ஏழாம் வயதில் இறக்கும் வரை, ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்தத் தொடர்பு தடைபடாமல் நீண்டிருந்தது. அநேகமாக வாழ்க்கையின் எல்லாத் தருணங்களையும், உணர்ச்சிகளையும், தனது மனதின் பாதிக்குச் சொல்வது போன்ற உண்மையுணர்வுடன் எழுதப்பட்டவை அவை. சிறுவயதில் இணைந்து தொடர்ந்து சகோதரன், வான்கோ என்ற கலைஞனின் நிரந்தர அங்கீகரிப்பாளன், நண்பன், புரவலன் என்ற நிலைகளை மீறித் தனது மனசாட்சியின் பாதுகாவலனாகத் தியோவை ஒப்புக்கொண்டிருக்கிறார் வான்கோ. அன்றாட வாழ்க்கையின் செயல்கள், கலை பற்றிய கனவுகள், திட்டங்கள், பிறரின் கலை பற்றிய கருத்துக்கள், பருவ காலங்கள், இயற்கைக் காட்சிகள், காதல், ஆசைகள், வேதனைகள், சந்தோஷங்கள், தோல்விகள், மனிதர்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் எழுதப்பட்ட இக்கடிதங்களின் பரப்பும் உயிர்த்துடிப்பும் எழுத்தமைதியும் இலக்கியக் குணம் கொண்டவை. ஓர் அர்த்தத்தில் இவை வான்கோவின் நாட்குறிப்புகள். விரிந்த பார்வையில் வின்சென்ட் வான்கோ தன்னையறியாமல் எழுதி வைத்த சுயசரிதை’ என்கிறார் சுகுமாரன்.
சுகுமாரனின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடிக்காவிட்டால் ஒரு காதை அறுத்துக் கொள்வேன்!
*
‘ஹேகின் சாலைகளில் இரண்டு சகோதரர்கள் நடந்து போகிறார்கள். ஒருவன் சொல்கிறான் : எனக்கு முதலில் வேண்டியது பொருளாதர பலம். வியாபாரம் தொடங்க வேண்டும். என்னால் ஓவியனாக முடியுமென்று தோன்றவில்லை. மற்றவன் : நான் நாயைப் போல ஆகிக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் அசுத்தமானவனாகவும் முரட்டுப் பிடிவாதமுள்ளவனாகவும் ஆகிவிடுவேன். வறுமைதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்று இப்போதே தெரிகிறது. இருந்தாலும் நான் ஓவியனாகத்தான் இருப்பேன்.’
*
‘இந்த உலகத்துக்கு நான் ஒருவகையில் கடன்பட்டிருக்கிறேன், கடமைப்பட்டிருக்கிறேன் என்று நான் உணர்ந்தால்தான் அது என்னை பொருட்டாக மதிக்கும். ஏனெனில் முப்பது வருடங்கள் இந்த பூமி மீது நடமாடியிருக்கிறேன். அதற்கு நன்றியாக சில ஓவியங்களையும் படங்களையும் நினைவுப் பரிசாக விட்டுச் செல்ல விரும்புகிறேன். கலையின் எந்த இயல்பையாவது திருப்திப்படுத்துவதற்காக அல்ல. உண்மையான மனித உணர்வை வெளிப்படுத்துவதற்காக.’
*
‘காகின் வந்திருக்கிறான். அவனுடைய ஆரோக்கியம் தேறியிருக்கிறது. நீ அவனுக்காக செய்த விற்பனை ஏற்பாடுகள் பற்றி அவனுக்கு மிகவும் திருப்தி. அவசியமான பொருட்கள் வாங்குவதற்கான பணம் அதன் மூலம் கிடைக்கும். அந்தச் சுமை உன் தோளை விட்டு இறங்கியதே. மனிதன் என்ற முறையில் காகின் எவ்வளவோ நல்லவன். நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அநேக காரியங்களைச் செய்ய முடியும். காகின் இங்கிருந்து ஏராளமான ஓவியம் தீட்டுவான். நானும்தான்.
நான் நோயாளியாகப் போகிறேனோ என்று சிறிதுகாலம் முன்புவரை தோன்றியது. காகின் வருகைக்குப் பிறகு அது மாறியிருக்கிறது. பண நெருக்கடி, அதனால் உனக்கு ஏற்படக்கூடிய சிரமம் – இவற்றை யோசித்துத்தான் என் நோய் அதிகரித்தது. இனி அதுபோன்ற துன்பங்கள் மாறிவிடும்.
ஆறு மாதங்களுக்குள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை உருவாக்க முடியும். அது நிரந்தரமானதாக இருக்கும். இங்கே வருகிற ஓவியர்கள் அதைத் தங்குமிடமாகக் கொள்ளலாம். என்னுடைய ஓவியமும் காகினுடைய ஓவியமும் ஒவ்வொரு மாதமும் உனக்குக் கிடைக்கும். உன் நிறுவனத்துக்கு வெளியே எங்கள் ஓவியங்களை விற்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை இனிமேல் கூப்பிள்ஸின் படியை மிதிக்கப் போவதில்லை. நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம். மாலையானதும் களைத்து சோர்ந்து போகிறோம். அப்போது உணவு விடுதிக்குப் போவோம். இரவில் சீக்கிரம் உறங்குகிறோம். இதுதான் வாழ்க்கை.
காகினும் நானும் ஓவியக்கலை பற்றி காரசாரமாக விவாதிக்கிறோம். எங்களுடைய வாக்குவாதம் மின்சார ஓட்டம் போல. அது முடிவடையும்போது நாங்கள் ஓய்ந்துபோன பாட்டரிபோல ஆகிவிடுகிறோம்.’
*
‘ஒரு சகோதரனுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய கவலையைத்தான் உன் கடிதத்தில் பார்த்தேன். அதனால் என்னுடைய மௌனத்தை முடித்துக்கொள்வது என் கடமை. முழுமையான சுய உணர்வுடன்தான் இதை எழுதுகிறேன். பைத்தியக்காரனின் கடிதமல்ல. நீ அறிந்த உன் சகோதரனின் கடிதம்.
என்னை வெளியில் விடக்கூடாது என்று அநேக ஆட்கள் மேயரிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னைப் பூட்டி வைக்கக் கட்டளை இட்டிருக்கிறார். அதனால் நான் இங்கே பாதுகாப்பாலிருக்கிறேன். காவல்காரர்கள் இருக்கிறார்கள். நான் என்ன குற்றம் செய்தேன் என்றுகூட நிரூபிக்காமல் இதைச் செய்திருக்கிறார்கள். எனக்கு மனசாட்சியின் நீதிமன்றத்தில் சொல்வதற்கு நிறைய பதில்கள் இருக்கின்றன. நான் ரோஷப்படுவதில் அர்த்தமில்லை. எனக்கு நானே தீர்ப்பு வழங்கிக்கொள்வேனாயின் என்னைக் குற்றவாளியாக்குவேன். எனக்கு இது போதும். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு மனிதனுக்கு எதிராக அதுவும் நோயாளியான மனிதனுக்கு எதிராக இத்தனை பேர் திரள்வது பூமியின் மையத்தில் இடி விழுவதுபோல. தவிர, மனிதர்களுடன் அதிகமாக நட்புப் பாராட்டுவது முட்டாள்தனத்தில்தான் முடிகிறது.
தற்காலிகமாக என்னை நீ மறக்க வேண்டும். எனக்குத் தேவை சிறிது மன அமைதி. மேயரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் என்னிடம் தோழமையுடன்தான் பழகுகிறார்கள். எல்லாவற்றையும் சரிப்படுத்த கூடுமானதைச் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். நான் என்னைக் காயப்படுத்திக் கொண்டேன். ஆனால் பிறரிடம் அராஜகமாக நடந்து கொள்ளவில்லை. அதுவுமில்லாமல், இந்தச் செலவுகளை என்னால் தாங்க முடியாது. இதையெல்லாம் அவர்களிடம் சொன்னேன். நான் ஏதாவது வேலைசெய்து மூன்று மாதங்களாகின்றன. என்னைப் பூட்டி வைக்காமலும், துன்புறுத்தாமலும் இருந்தால் என்னால் வேலை செய்ய முடிந்திருக்கும்.
இப்போது என்னை வெளியே நடமாட அனுமதிக்கிறார்கள். ஒரு புத்தகம் வாங்கினேன். இரண்டு அத்தியாங்கள் ஆவலுடன் படித்தேன். ஏதாவது படித்து வாரக்கணக்காகிறது. படிப்பு என்னுடைய நோயைக் குணப்படுத்த உதவும். பால்சாக்கின் இன்னொரு நாவலையும் படித்துக் கொண்டிருக்கிறேன். டிக்கன்ஸின் கிறிஸ்துமஸ் புத்தகங்களையும் படிக்கிறேன்.
அன்புள்ள தியோ! என்னைப் பூட்டி வைக்க வேண்டிய தேவை இல்லாதபடிக்கு நோய் தீருமென்றே தோன்றுகிறது.’
*
‘என்னுடைய மனத்தின் சமநிலைக்கு இப்போது கோளாறு எதுவுமில்லை. என்னால் முடிந்தவரை வேலை செய்கிறேன். என்னுடைய நோய் திரும்ப வந்து விடுமானால் நீ பொறுத்துக் கொள். என்னுடைய இப்போதைய நிலையைப் பற்றி யோசித்தால் பயமாக இருக்கிறது. சிந்தனைக் குழப்பம். நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமா? ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன்.’
*
‘இங்கே நான் மிகுந்த துக்கத்தோடு இருக்கிறேன். எனது விவகாரம் – உங்களை உலுக்குகிற புயல். அதைப் பற்றியும் துக்கப்படுகிறேன். நான் என்ன செய்ய? முடிந்தவரைக்கும் அமைதியுள்ளவனாக முயற்சி செய்கிறேன். என் வாழ்க்கையின் அடிப்படையே அபாயகரமானது. என்னுடைய ஒவ்வொரு காலடியும் தடுமாறுகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.
இப்போதும் ஓவியங்களையும் வாழ்க்கையும் நேசிக்கிறேன். ஆனால் எனக்கென்று ஒரு பெண் துணை இனி ஏற்படப்போவதில்லை. அதற்கான வயதும் கடந்து போயிருக்கிறது. இப்போது அப்படியான ஆசை இல்லை. ஆனால், அப்படியொன்று சாத்தியமாகாமற் போனதன் துக்கம் இருக்கிறது. என்னை முழு மனத்துடன் ஓவியத் திரையில் அர்ப்பணிப்பது. அது மட்டும்தான் இனி இந்த வயதில் என்னால் முடியும். என்னுடைய வாழ்க்கையையும் சுக சௌக்கியங்களையும் உருக்கி வார்த்தவையே என்னுடைய ஓவியங்கள்.’
*
‘மனசாட்சியும் உணர்ச்சியுமே ஒரு கலைஞனை நடத்திச் செல்ல வேண்டியவை. அவனுடைய தூரிகையை இயக்குவது அறிவல்ல. தூரிகையே அறிவைச் செலுத்த வேண்டும்.
*
‘ஒரு நல்ல ஓவியத்தைப் படைப்பது, முத்தையோ வைரத்தையோ கண்டெடுப்பதை விட எளிதானதல்ல. அதேபோல, சிரமப்பட வேண்டும்; வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும்.’
*
‘எனது ஓவியங்கள் விற்பனையாகவில்லை என்பதற்காக நான் எதுவும் செய்ய முடியாது. ஒரு காலம் வரும் – வர்ணத்தின் விலையை விடவும் அவற்றுக்கு மதிப்பு அதிகம்’ என்று மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம்’ என்று எழுதினார் வான்கோ. அந்தக் காலம் அவரது மரணத்துக்குப் பிறகு வந்தது. முன்பு செய்த புறக்கணிப்புக்குப் பிரதியாக பல மடங்கு ஆவேசத்துடனும் கோலாகலத்துடனும் வந்தது. நூறு வருடங்களைக் கடந்தும் நீடிக்கிறது. ஏனெனில், வின்சென்ட் வான்கோவின் கலை மனித வரலாற்றுக்கு அன்புப் பரிசாக வாய்த்த கௌரவம்’ – சுகுமாரன் (நட்புறவு பாலம் , 1990).
***
நன்றி : சுகுமாரன், அன்னம்
கவிஞர் சுகுமாரனின் வலைப்பக்கம் : http://vaalnilam.blogspot.com/
”திசைகளும் தடங்களும்” நூல் கிடைக்குமிடம் :
அன்னம் , மனை எண்: 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007
**
தொடர்புடைய பதிவு : நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோஸப் ஜேம்ஸ்
**
Visit : Wikipedia & THE VINCENT VAN GOGH GALLERY
nagoorumi said,
01/03/2010 இல் 13:46
அருமையான பதிவு. வான் கோ பற்றி வீண்கோ-வின் பதிவு! நீரும் ஒரு வான்கோ போல ஆகியிருக்க வேண்டியவர்தான் ஆபிதீன் (தற்கொலை செய்து கொண்டதைத்தானே சொல்கிறீர்?-ஆபிதீன்). அதே பாணியில் அல்ல. அந்த வழியில். நிச்சயம் முடிந்திருக்கும். தூரிகைதான் அறிவைச் செலுத்த வேண்டும் என்ற வான்கோவின் கருத்து — அது கருத்து என்று வைத்துக் கொண்டால் – அவருடைய ஒவியத்தைப் போலவே அற்புதமானது. ஏனெனில் அது உண்மையானது. அந்த வரிகள் இலக்கியத்துக்கும் பொருந்தும். ஏன் வாழ்க்கைக்கும் பொருந்தும். ரூமி
sukumaran said,
22/03/2010 இல் 08:37
ஆபிதீன்,
என்னுடைய கனவும் சாரமுமானவை என்று நான் கருதுகிற சில
மொழிபெயர்ப்புகளை நீங்கள் உங்கள் வலையில் பிடித்து விடுகிறீர்கள்.
முன்பு சியாட்டில். இப்போது வான்கோ.
நன்றி.
சுகுமாரன்
abedheen said,
22/03/2010 இல் 11:10
நன்றி சுகுமாரன். உங்களின் பல கட்டுரைகளிலிருந்து மேலும் பிடிக்கவிருக்கிறேன்!