பொறாமை பற்றி ஒரு இறுதி போஸ்ட்! – பாதசாரி

“பொறாமையிலிருந்து விலகியிருங்கள். ஏனென்றால், நெருப்பு விறகுகளை எரித்துவிடுவதைப் போல, பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது” என்பார்கள் ரசூலுல்லாஹ். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் என்று இணையத்தைத் தேடினால் இந்த ’ஹதீஸ்’ பலமானதா பலவீனமானதா என்று தொப்பிவாப்பாக்கள் சண்டயிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓடிவந்து விட்டேன்.

இந்த ஆமை பற்றி எனக்குப் பிடித்த எழுத்தாளரான பாதசாரி அவர்கள் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது எழுதியவற்றை சேகரித்து வைத்திருந்தேன் – கொஞ்சம் திருந்துவோமே என்று. எப்போதாவது அவற்றை எடுத்துப் படிப்பது வழக்கம் (முடியவில்லை :-)) . ’படம்’ இன்றோடு கடைசி என்று அவர் போட்டிருந்ததால் இங்கே பகிர்கிறேன். நன்றி. – AB


பொறாமை என்பது புற்றுநோய் மாதிரி..
முளையிலேயே கிள்ளி எறிந்தால் தப்பிக்கலாம்..

புற்று செல்கள் அதிவிரைவாகப் பல உறுப்புகளுக்கும் பரவுவது (metastases ) போல , ஒருவர்மீது கொள்ளும் பொறாமை , ஊரார் அனைவர் மீதும் பற்றி உனக்குள் துயரமாகும் . புற்று உள்ளிருந்து தொடங்குவது போல பொறாமையும் உனக்குள்ளிருந்தே புறப்படுகிறது.. வெளித்தூண்டுதல் ஏதுமில்லை !

உண்மையில் உன் பொறாமை பற்பலர் மீதூரினும் ,
காரணம் ஒன்றே தான்..

நீ ‘ஒருவர் ‘ மீது தான் பொறாமை கொள்கிறாய் !

அமைதியின்மைக்கு முழுமுதற்காரணம் பொறாமை தான்..

இந்த பொறாமை என்பதும்
ஆசையின் ஒரு மாறுவேடம் தான் !

***

” ஒருவர் மீதுள்ள பொறாமையை நீங்கள் எப்படித் தணித்துக் கொள்கிறீர்கள் ? “

” அவரை வாயாற வாழ்த்தித் தான் “
*
மருள் சூழ் உலகை எதிர்கொள்ள நமக்கு அருள் சூழ் இதயமே வழி.

யார் மீதும் உன் வருத்தத்தை அல்லது வெறுப்பை நீ நீடித்துப் பேணினால் , தீராமல் வருந்துவது நீயாகவே இருக்கக் கூடும்.

***

எல்லாமே நிலையற்றவை (impermanence) என உணரும் போதினிலே எண்ணங்களும் நிலையற்றவை தான் என – அவை தானே குறையும் என்கிறது புத்தம்.

எண்ணம் எழும் போது , ‘ ஓ..! இன்னொரு எண்ணமா ..நடக்கட்டும் நடக்கட்டும் ..! ‘ என நகர்ந்து விட வேண்டியது தான் !

***

ஆசைகளுக்கு பல குணம். இதில் பொறாமையின் ஆசை விசித்திரமானது ! எட்டுத் திக்கும் பாய்ந்து , எதிராளியால் அன்றி , தனக்குத் தானே ஆறாத உட்காயம் பெறுவது !
( சொந்த செலவில் சூனியம் எனும் இக்காலக் கூற்று இதற்கும் பொருந்தும் ! )

வள்ளுவ ஆசானே !
யாதனின் யாதனின் யாதனினும் நீங்கவியலா இது ஒன்றின் நோதலே எங்களுக்கு தலையாய துன்பம் , இறுதியாக கடைசி மனிதன் இருக்கும் வரை போலும் !

***

துள்ளித் திரியும் சிறார் மீதிலும் இருந்து , தள்ளாடும் முதியோர் மீது வரை உன் பொறாமை பாய்கிறது !

***
போட்டி மனப்பான்மையை மூன்று வேளையும் உண்டுகொண்டு , இயலாமைத் தாழ்வுணர்ச்சியை அருந்தியபடி , சுயபிம்ப ஒப்பீட்டுத் தீனியை சதா கொறித்துக் கொண்டு உறக்கமின்றி மனம் படும் பாடு தான் மனிதனுக்குப் பொறாமை .

காரணத்திற்கெல்லாம் அடிபணிந்து விடுமா இந்த மூடுபனி மனம் ?

எக் காரணம் கொண்டும் இனி எதற்கும் காரணத்தைத் தேடி , அமைதியை இழக்கக் கூடாது.

காரணம் எதுவும் வாழ்வுக்கு
அர்த்தம் வழங்கி விடாது .

எல்லாக் காரணமும்
மனிதன் புரிந்து விடச்
சுலபமானவை அல்ல..

பிறன் மனதில் ஒரு துளியும் பொறாமை இருக்காது என்று நம்பித்தான் பழகுகிறோம். இது தான் இன்றைய வாழ்வைப் புரிதலில் இறுதி நம்பிக்கையாக இருக்க முடியும்.

பிறர் மீது வெறுப்பின் கசப்பை உமிழ உமிழ , தன்மீதும் வெறுப்பின் கசப்பு தனக்குள் சேகரமாகி தானே விழுங்க வேண்டியிருக்கும்.

ஆதி முதல் இன்றுவரை ,மனிதனின் மதிக்கத் தக்க சாகசம் என்பது அது பொறாமையிலிருந்து நீங்குவது தான்..

***

கடைசி(?) பதிவு :
பொறாமை பற்றி , திகட்டத் திகட்ட எக்கச்சக்கமாக ‘ போஸ்ட்’கள் போட்டாச்சு.. இனி நீ போடத் தேவையில்லை ‘ – என்றார் நாளும் என் நலம் நாடும் மேதமைமிகுந்த மேன்மையான என் நண்பர்.
‘ ஒரே ஒரு முத்தம்..கடைசி முத்தம்..இந்த ஒரு தடவை மட்டும்..’ – எனக் காதலியிடம் கெஞ்சும் காதலன் போல , மானசீகமாக அவரிடம் கெஞ்சி விட்டு , பொறாமை பற்றி ஒரு இறுதி போஸ்ட் :
‘என்னைப் பற்றி முழுசா , அவ்வளவு டீடெயிலா டீப்பா , ஏன் தெரிஞ்சுக்க விரும்பறீங்க , ஏன் பொண்ணு குடுக்கப் போறீங்களா ? ‘ – என்று கிண்டலாகக் கேட்டதற்கு ,
அவர் நேர்மையாகச் சொன்னார் :
” உங்க மேல பொறாமைப் படறதுக் காகத்தானுங்க..”
*
நன்றி : பாதசாரி

பின்னூட்டமொன்றை இடுக