கிரிக்கெட்டை முன்வைத்து கிருஷ்ணன் சொல்லியது

‘1996ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான பெங்களூர் ஆட்டத்தில் உலகக் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜாவேத் மியான்தாத் கடைசி முறையாக ஆடினார். குஹா கூறுகிறார் : When he walked out of the ground I stood up to applaud him. “Why are you clapping?” asked an abnoximous fellow from a row behind..”He is a truly great player, and this is the last time any of us see him bat.” “Thank God. I shall never see the bastard again” came the reply.

ஆனால் 1999ல் சென்னையில் பாகிஸ்தான் முதல் டெஸ்டில் வெற்றிகண்டபோது  சென்னைப் பார்வையாளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாகிஸ்தான் குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அரங்கத்தைச் சுற்றி நின்ற பாகிஸ்தான் ஆட்டக்காரர்களின் கண்களில் குறிப்பாகக் குழு மேனேஜராக வந்த மியான்தாத் கண்களில் – கண்ணீரைப் பார்த்ததாக எனக்கு ஞாபகம்.’ – பி.ஏ. கிருஷ்ணன்

**

சீட்டாட்டம் போலவே கிரிக்கெட் ஆட்டமும் எனக்கு ரொம்ப தூரம். இன்றுவரை இந்த இரண்டுமே எனக்கு சற்றும் புரியாததால் மகாஜனங்களுடன் ஒன்றமுடியாத மனநிலை. மகனை விடுங்கள், இதற்காக மனைவியே என்னை வெறுக்கிறாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனாலும் அதைவைத்து நண்பர் மணிக்கு ஒரு செய்தி சொல்லலாம் என்றுதான் மேலே ஆடினேன். அதன் பெயர் என்ன, ‘டக்’ஆ? நீங்களே மேய்த்துக் கொள்ளுங்கள். பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் ‘தமிழர்களும் வெகுதூரம் வந்துவிட்டார்கள்’ கட்டுரையில் கண்டதுதான் மேலேயுள்ள பத்தி. அவர் சந்தேகத்தோடுதான் முடிப்பார் கடைசியில். வேண்டுமென்றுதான் அதை நான் இங்கே சேர்க்கவில்லை. எனக்கு சந்தேகமுமில்லை. நீங்கள் புத்தகத்தை வாங்கிப் பார்த்துக்கொள்ளுங்களேன்.  நூல் : அக்கிரகாரத்தில் பெரியார். காலச்சுவடு வெளியீடு. படு சுவாரஸ்யமான புத்தகம். மதிப்பிற்குரிய இராம.கி ஐயா அவர்களுடன் அவர் நடத்திய விவாதத்தையும் ரசித்துப் படித்தேன். மெய்ப்பொருள் காண்பது அறிவு! நூலிலுள்ள ‘வடிவியலின் கதை’ மட்டும் கொஞ்சமும் புரியவில்லை. மூச்சு நின்றுவிட்டது! ‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்தப்படும் பயங்கரவாதம்’ என்பதை கிருஷ்ணன் மறுக்கலாம்; நான் மறுக்கமாட்டேன். பட்டபாடு அப்படி சார்!

நூலின் பல இடங்களிலும் , (உச்சாணிக்கொம்பிலிருந்து இறங்க மறுக்கிற) ‘பாப்பனத்திமிர்’ என்று துணிச்சலாகச் சொல்கிற இந்தப் ‘பார்ப்பன’ எழுத்தாளரின் நடிப்பற்ற கோபத்தை நன்றாக நான் உணர்ந்தேன். பாகிஸ்தான் பாடப் புத்தகங்களில் காணப்படும் மதவெறியைச் சொல்லும்போதும் (The Subtle Subversion – The State of Curricula and Textbook in Pakistan – compiled by Nayyar and Ahmed Salim), தாரிக் அலியின் புத்தகத்தின் ( The Clash of Fundamentalism) முக்கியமான பகுதியாக அன்வர்ஷேக்-ஐ சொல்லும்போதும் (கூடவே , அபு அல் ஆலா அல் மாரியின் கவிதை வேறு!  ‘The Prophets, too, among us come to teach, Are one with those who from the pulpit preach; They pray, and slay, and pass away, and yet Our ills are as the pebbles on the beach..’)  கிருஷ்ணன் மேல் எனக்கு எரிச்சல் வந்ததுதான். சொல்ல இயலாத முஸ்லிமாயிற்றே! ஆனால் , பெரியார் பற்றிய கட்டுரையில், தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு தலித் அதிகாரியை சக (பிராமண) அதிகாரி ஒருவர் கடுமையாக அவதூறு செய்ததை, ‘எனக்கு மலத்தை மிதித்த உணர்வு ஏற்பட்டது. அந்த மலம் தோய்ந்த செருப்பாலேயே அவரை அடிக்கவேண்டும் என்று தோன்றியது’ என்று அவர் எழுதும்போதும், ‘மனுஷ்ய வித்யா‘ கட்டுரையில் ‘நான் மார்க்ஸ் சொன்ன De Ominbus Dubitandum (எல்லாமே சந்தேகப் படத் தக்கது) என்ற கூற்றை நம்புபவன். ஆனால் ஒரு கிறித்துவத் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து சுற்றிப் பார்க்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது’ என்று எழுதும்போதும் என் கண்களில் நீர் நிறைந்து விட்டது.

போதும் சீரியஸ் மேட்டர்.

என்னைபோலவே பி.ஏ கிருஷ்ணனுக்கும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ (மலர்ச்சி) கதை பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. சு.ராவோடு கிருஷ்ணன் பேசும்போது ஒரு தமாஷ். யாருடைய வீட்டைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

‘பெருசோ?”

‘தொலைஞ்சு போயிடலாம் கிருஷ்ணன்”

சு.ராவை தோற்கடிக்கிறார் கிருஷ்ணன் , தன்னுடைய ‘ஆசிரியப்பணி‘ குறித்த ஒரு கட்டுரையில் (இது நூலில் இல்லை). நண்பர் நாகூர் ரூமி கவனிக்க வேண்டிய பகுதி இது! :

‘நான் ஆசிரியப் பணியைவிட்டு வெளிவரத் தீர்மானித்த ஆண்டில் தான் மதுரையில் கல்லூரி ஆசிரியர்களுக்காக ஒரு அமைப்பு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. அதன் செயல்பாடுகளின் விளைவாகக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று எனது நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகள் குறைந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை’

*

நன்றி : காலச்சுவடு , பி.ஏ. கிருஷ்ணன்

*

சில சுட்டிகள் :

 ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள் – பி.ஏ. கிருஷ்ணன்

‘புலிநகக் கொன்றை நாவலை’ முன்வைத்து, திரு. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு ஓர் திறந்த மடல். – – தாஜ்

அடிப்படைவாத மோதல்கள் – தாரிக் அலி பற்றிய குறிப்புகள்  : எச். பீர்முஹம்மது

1 பின்னூட்டம்

  1. haranprasanna said,

    24/04/2010 இல் 11:48

    //சொல்ல இயலாத முஸ்லிமாயிற்றே!//

    இன்னும் சொல்லாமல் ஏதேனும் இருக்கிறதா என்ன. :)))


பின்னூட்டமொன்றை இடுக