தாஜ்-ன் முன்குறிப்பு:
ஆபிதீன் பக்கங்களில் நான் பயனுள்ள கட்டுரைகளை – அதாவது , ஆபிதீன் பக்கங்களைப் படிக்கும் எல்லோருக்குமான பயன்தரும் கட்டுரைகளை – எழுதுவதில்லையென்று எனக்கே என் மீது வருத்தம் உண்டு. இந்த மன உளைச்சலுக்கு ஏதாவது ஓர் தீர்வு செய்யணும் என்கிற உயர்ந்த நோக்கில், ஒரு வாரப் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்த இக்கட்டுரையை தட்டச்சு செய்தாவது அனுப்பணும் என்கிற முடிவில் இயங்குகிறேன். இந்த மாபெரும் சேவைக்காக என்னை நீங்கள் கட்டாயம் பாராட்டுவீர்கள். என்ன , பாராட்டுவீர்கள்தானே?
‘வாட்டர் தெரஃபி’ பற்றியும் அதன் பயன் பற்றியும் நான் பத்து வருடங்களுக்கு முன்னால் அறிய வந்தேன். வாட்டர் தெரஃபி ஓர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய மருத்துவர்கள் உலகுக்கு அறிமுகப் படுத்திய ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ ஞாயிறு மலரில், ஆசிரியர் வீரமணி அவர்கள் இது குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில், தனது உடல் சுகவீனங்கள் குறித்து மா.நெடுமாரனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தனக்கு இந்த வாட்டர் தெரஃபியை பற்றி கூறி, அறிமுகம் செய்து வைத்தார்கள் என்றும், அது முதல் அதனை கடைப்பிடிக்க தான் நிறைய பலன் அடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நான் வியந்து போனேன். எத்தனை எளிய வைத்தியமாக இருக்கிறது இது என்று! உடனே சபதம் பிறந்தது. நாளை முதல் நாம் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாக. ஆனால் பாருங்கள் அந்த நாளைதான் இன்னும் வரவில்லை. பத்து வருடமாகிவிட்டது. அது இன்னும் வராததுதான் புரிந்து கொள்ள முடியவில்லை!
என்றாலும், அவ்வப்போது வாட்டர் தெரஃபி குறித்து யோசிப்பதுண்டு. சில சமயம் சின்னச் சின்னதான சில சங்கதிகளை செய்வதுண்டு. ‘நீர் நிறைய குடி’ என்று வாட்டர் தெரஃபிகாரர்கள் சொல்கிறார்கள்! நான், என் காலம்தொட்டு அதனைத்தானே செய்தும் வருகிறேன். இவர்களுக்காக இன்னொரு டம்ளர் சேர்த்து பருகுவது பெரிய காரியமுமில்லை! இப்படி சில கடைப்பிடிப்பவனாக இருந்தாலும், இந்த மஹா எளிய வைத்தியத்தினாலான பெரும் பயனை நான் ஒப்புக் கொள்ளவே செய்கிறேன்.
‘கற்றதினாலான பயன் என்பது, அதனை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதுதான்’ என்று என்பாட்டி எனக்கு அறிவுரை சொல்லும். அதனைத்தான் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறேன், இக் கட்டுரையையும் சேர்த்து.
*
தண்ணீர் மருத்துவம்
இரா. மணிகண்டன்
எப்போதெல்லாம் உங்களுக்குத் தண்ணீர் குடிக்கத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம். அதற்குத்தான் தண்ணீர். இந்த நேரம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்; இந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதெல்லாம் இல்லை.
நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் உள்ளது. உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கடத்தும் வேலையை தண்ணீர்தான் செய்கிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப தண்ணீர்தான் உதவுகிறது. நம் உடலின் வெப்பத்தை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சமநிலையில் வைத்திருப்பதும் இந்தத் தண்ணீர்தான். தண்ணீர் இல்லாவிட்டால் நம் உடலில் உள்ள மூட்டுகளின் வழவழப்புத் தன்மைபோய் மூட்டுக்கள் தேயத் தொடங்கி விடும்.
சுருக்கமாக தலை முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக நம் மூளை செயல்பட 90 சதவீதம் தண்ணீர்தான் தேவையாக உள்ளது. எப்போதெல்லாம் நம் உடலில் நீர்ச்சத்து குறைகிறதோ அப்போதெல்லாம் மூளையின் செயல்பாடும் குறையும். நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். அதன் முதல் அறிகுறி தலைவலியாகத்தான் இருக்கும். உடற்சோர்வு, மயக்கம் எல்லாம் அடுத்தடுத்து வரும்.
சமீபத்தில் ஜப்பான் மருத்துவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள நீர்தெராஃபி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது ஏறத்தாழ நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த தண்ணீர் மருத்துவம்தான்.
காலையில் எழுந்ததும் வாயை மட்டும் கொப்பளித்து விட்டு, ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். போகப்போக சரியாகிவிடும். அதன் பின் ஒரு மணிநேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. காபி, டீ, உணவு, நீராகாரம் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது. ஒரு மணி நேரத்திற்குப்பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 30 நாட்களுக்குள் பி.பி.கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். அதைப்போல வாய்வுக் கோளாறு மலச்சிக்கல், நீரழிவு நோய்களும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தண்ணீர் தெராஃபியில் பின்வரும் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
1. முகம் பொலிவு பெறும்.
2. கொழுப்புகள் நீங்கும். அதனால் உடலின் எடை குறையும்.
3. ஜீரண சக்தி அதிகரிக்கும்.
4. நாள் முழுவதும் உடல் புத்துணர்வுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
5. ரத்த அழுத்த நோய் நீங்கும் அல்லது கட்டுப்படும்.
6. சக்கரை வியாதி கட்டுப்பாட்டிற்குள் வரும்.
* சரி, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியெல்லாம் கட்டாயமில்லை.
ஒவ்வொருவருடைய உடல்வாகு, வாழும் இடம், சீதோஷ்ணநிலை, செய்யும் வேலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறுபடலாம்.
நம் உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி தேவையான அளவு தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும்.
* சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா கூடாதா?
நாம் உணவு உண்ணத் தொடங்கியதுமே நம் வயிற்றில் உணவை ஜீரனிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்க ஆரம்பித்து விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் சேர்த்து உட்கொண்டால், அந்தத் தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, ஜீரணப் பணியை பாதித்து விடும்.
அதனால் சாப்பாட்டின் போது இடையியையே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கலாம்.
* விக்கல் எடுக்கும்போது கூட தண்ணீர் அருந்தக் கூடாதா?
அதிக காரம், அதிக உப்பு, விக்கல், உணவுப் பொருள் தொண்டையில் சிக்கிக் கொள்ளுதல் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தண்ணீர் அருந்தித்தான் ஆகவேண்டும். அதில் தவறில்லை. ஒவ்வொரு கவளத்திற்கு இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்தானது.
* அப்படியானால் எப்போதுதான் தண்ணீர் அருந்துவது?
உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன், சாப்பிட்ட பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, வேண்டிய மட்டும் தண்ணீர் அருந்தலாம்…. தண்ணீர் தாகம் எடுத்தால்.
சாப்பிட்டு முடித்ததும் வயிறு முட்ட சிலர் தண்ணீர் குடிப்பார்கள். அது தவறு. சிறிதளவு தண்ணீர் போதும். ஜீரண சக்தி அப்போதுதான் தடைபடாமல் இருக்கும்.
அதிக உப்பு, அதிக காரம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வேகமாக சாப்பிடுவதைத் தவிர்த்தாலே விக்கல் வராது. நிதானமாக மென்று விழுங்கினால் போதும் தண்ணீர் தேவைப்படாது. உமிழ்நீரும், வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவமும் மட்டுமே போதும், ஜீரண சக்தி தடைபடாமல் இயங்க.
இவையெல்லாம் தண்ணீர் குடிப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள். ‘தண்ணி’ அடிப்பவர்களுக்கு அல்ல.
***