கேரக்டர் (pdf) – சாவி

Click Image to Download :

Thanks to  : சாவி பப்ளிகேஷன்ஸ் , tamilvu.org & Vasu Balaji

பெருநாள் பரிசு (pdf) – பிரேம் சந்த் சிறுகதை

இமேஜை க்ளிக் செய்து PDF -ஐ பார்க்கவும்.  (or use ‘save link as’ option to Download) . இது  ருசிக்கால பரிசும் கூட !

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா & எஸ். பாலபாரதி

பிஸ்மில்லாவும் ந. பிச்சமூர்த்தியும்

‘பிஸ்மில்லா!’ என்று இறைவனின் திருப்பெயரால் அற்புதமாகத் தொடங்கும், அமரர் ந. பிச்சமூர்த்தி எழுதிய ‘வெறும் மரமா? எனும் சிறுகதையைப் பகிர்கிறேன் –  நோன்புப் பெருநாள் சிறப்புச் சிறுகதையாக. முக்கிய ஆவணமான ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பில்  ஜாகிர்ராஜா இதை சேர்த்திருக்கவேண்டும். சரி, ‘பிஸ்மி’ சொல்லி எதையும் ஆரம்பிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.  நடுராத்திரியில் ஒரு நாகூர் மரைக்காயர்கூட அப்படித்தான் சொல்லி , தூக்கி வைத்தார் – பீரோவில் கொஞ்சம் பணத்தை.  ‘பரக்கத்’தாக பெருகும் என்று.  காலையில் பார்த்தால் காணோம். ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று அவர் மனைவி சுருட்டிவிட்டது (பிழைப்பு என்னும் நீரோட்டத்துக்கடியில் எத்தனை திருட்டுக் கெண்டைக் குஞ்சுகள்! – பூனைக்கண் சிறுகதையில் ந. பிச்சமூர்த்தி). அது போகட்டும், ஆன்மீகக் கதை வாசிக்கப்போகும் உங்களிடம் அற்பன் நான் மேலும் கதைப்பது நல்லதல்ல. ஈத் முபாரக்! – ஆபிதீன்

*

pichamoorthi - by - maruthu

வெறும் மரமா ? ந. பிச்சமூர்த்தி

பிஸ்மில்லா என்று கடைத்தெருவின் முதல் கடையில் டேப்பைத் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தார் பக்கிரி..

“இப்பத்தான் கடை திறக்கிறேன், தெரியல்லையா?” என்று சீறி விழுந்தார் கடைக்காரர்.

பக்கிரி கோபம் கொள்ளவில்லை. தம் நெற்றியைத் தொட்டுச் சலாம் வைத்துக்கொண்டே அடுத்த கடைக்குப் போய் டேப்பைத் தட்ட ஆரம்பித்தார்.

“நம்ப கடையிலே வியாழக்கிழமைதான் தருமம், தெரியாதா சாயபு?” என்றார் முதலாளி.

பக்கிரிக்குக் கோபம் என்பதே தெரியாது போலிருக்கிறது. யாசகந்தான் கேட்கிறார். அதனால் கோபத்திற்கு இடமில்லை. அலுப்பு இருக்கும் அல்லவா? பக்கிரிக்கு அலுப்புக்கூட இல்லை. யாரேனும் பக்கிரியின் தங்கமான தன்மையை ஊன்றிக் கவனித்திருந்தால் பேரின்பப் பெருவாழ்வுக்கு வழி கடைத்தெரு வழியாகக்கூட போகமுடியும் என்பது தெரிந்துவிடும். நிலைகுலையாத அவ்வளவு அமைதியுடன் அடுத்த கடைக்குச் சென்றார்.

“நீ வந்த வேளை சில்லறை இல்லையே, சாயபு” என்றார் கடைக்காரக் கிழவனார்.

யாசகம் கேட்பதில்கூட அதிருஷ்டம் துரதிருஷ்டம் இருப்பதுபோன்ற பழியைக் கிழவனார் பக்கிரிமீது சுமத்தினார்.  வழக்கம்போலச் சலாம் வைத்துவிட்டுப் பக்கிரி அடுத்த கடைக்குப் போய், டேப்பைத் தட்டினார், டேப் தகடுகள்  ஜிகுஜிகு என்று ஒலித்தன. கடை முதலாளி புதியவர்; இளைஞர். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஒரு சின்னக்கட்டு ஊதுவத்தியும் அரையணாக் காசும் பக்கிரியிடம் கொடுத்தார். பக்கிரி நெற்றியைத் தொட்டுச் சலாம் செய்துவிட்டுக் கடைக்காரர் தலையை மயில்பீலியால் ஒரு தரம் தடவினார். பிறகு அல்லாவின் நற்பெயரை,

அல்லாவின் நற்பெயரைச்
சொல்லு சொல்லு – எல்லாப்
பொல்லாங்கும் போகுமென்று
சொல்லு சொல்லு

என்று பாடிக்கொண்டே சென்றார்.

அடுத்தது புஷ்பக் கடை. பக்கிரியைக் கண்டதும் கடைக்காரருக்கு மகிழ்ச்சி ஒரு புறம், வியப்பு ஒரு புறம்.

“என்ன பக்கிரி! ரொம்ப நாளாகக் காணோமே?”

“காணாமல் என்னங்க? கழுதை கெட்டால் குட்டிச்சுவருதானுங்களே! குட்டிசுவர் இல்லாட்டிப் பாழும் மண்டபம். அது மாதிரிதான் ஊரிலே சுத்திகிட்டுக் கிடக்கிறேன். அல்லா கண்திறக்கிற வரையில் சுத்தித்தானே ஆகோணும்? நாலு காசு கிடைச்சாப் போதுமின்னு போயிடறேனுங்க.”

புஷ்பக் கடைக்காரருக்குத் தம்மை அறியாமலேயே பக்கிரியிடத்தில் ஓர் அன்பு உண்டு.

இப்பொத்தான் கடையைத் திறக்கிறேன். பக்கிரிக்குப் போணி பண்றேன்” என்று கூறிக்கொண்டே இரண்டணாக் காசையும் ஒரு பாகம் மல்லிகைப் பூச்சரத்தையும் கொடுத்தார்.

“பக்கிரிக்குப் பூ எதுக்குங்க வீணா?”

“பக்கிரிகிட்டெ கொடுத்தால் அல்லாவுக்குப் போய்ச் சேரும்.”

மயில்பீலியால் புஷ்பக்காரர் தலையில் தடவி விட்டுப் பக்கிரி அடுத்த கடைக்குப் போனார். அதற்குப் பிறகும் சில கடைகளுக்குப் போனார். சில இடங்களில் காசு கிடைத்தது; சில இடங்களில் வசவு கிடைத்தது. எது கிடைத்த போதிலும் யா அல்லா என்று கூறி வணக்கம் செய்துவிட்டு அவர் போய்க்கொண்டிருந்தார். பின்னும்  சிறிதுநேரத்திற்குள் அவர் மனம் மாறிவிட்டது. கையில் இருந்த காசுகளை எண்ணிப் பார்த்தார்.  அன்றைப்பாட்டுக்குப் போதுமானது இருந்தது. ஒரு படி அரிசியும் உப்பும் மிளகாயும் ங்கிக்கொண்டார். பத்தடிக்கு அப்பால் சென்றபோது ஒரு கோழிக் குஞ்சு விலைக்கு வந்தது. அதையும் வாங்கிக்கொண்டு ஊர்ப்புறத்துக் காட்டை நோக்கிச் சென்றார்.

காட்டின் முன்புறத்தில் பெரிய ஆலமரமும் குளமும் இருந்தன. டேப்பையும் கோட்டையும் மூட்டையையும் இறக்கி வைத்துவிட்டுச் சமையல் வேலையைத் தொடங்கினார். சமையல் அவருக்கு எப்பொழுதுமே பெரிய காரியமாய் இருந்ததில்லை. இப்பொழுதும் அப்படித்தான்.

மரத்தடியில் வேண்டிய செங்கல் கிடந்தது. புதரில் வேண்டிய சுள்ளி இருந்தது. பையில் நெருப்புப் பெட்டி இருந்தது. வேறு என்ன வேண்டும்? ஒரு கலயத்தைத் தண்ணீரும் அரிசியுமாக அடுப்பில் ஏற்றினார். அரை மணிக்குள் சோறாகிவிட்டது. பிறகு இறகைப் பிய்த்துவிட்டுக் கோழிக் குஞ்சை மண் சட்டியில் போட்டு அடுப்பில் ஏற்றினார்.

கோழிக் குஞ்சு வாடிக்கொண்டிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக ஈரத்தின் அரவம் சட்டியில் அடங்கிவிட்டது. புரட்டிப் போட்டால் பக்குவம் ஆகிவிடும் என்று நினைத்தார். துடுப்பு வேண்டுமே! காட்டில் துடுப்பு ஏது? ஒரு விநாடி திகைப்படைந்தார். மறுவிநாடி எதிர்ப்புறத்தில் நின்றுகொண்டிருந்த தனி மரம் ஒன்று தென்பட்டது. அதிலிருந்து ஒரு சிறு கொம்பை ஒடித்து நுனியைக் கிள்ளி எறிந்துவிட்டுத் துடுப்பாக்கிக்கொண்டார்.

கோழிக் குஞ்சை அந்தக் குச்சியால் மூன்று நான்கு தடவை புரட்டி விட்டார். ஐந்தாம் தடவை புரட்டும்பொழுது விர்ர் என்ற ஓசை எழுந்தது. சட்டியில் இருந்த மாமிசம் சிறகு பெற்றுப் பறந்து போய்விட்டது. திரும்பத் திரும்பச் சட்டியைப் பார்த்தார். கோழிக்குஞ்சு இருந்த சுவடே தெரியவில்லை. திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தார்! கோழிக்குஞ்சு சிறகுடன் கண்ணெதிரே பறந்துபோய் எதிர்ப்புறத்து மரமொன்றில் உட்கார்ந்துகொண்டிருந்தது.

பசிக்கொடுமையுடன் அதைப் பிடிக்க ஓடினார். அது மற்றொரு மரத்திற்குப் பறந்து சென்றுவிட்டது. அதைத் தொடர்ந்து சென்றார், கைக்குக் கிட்டுவதுபோல் இருக்கும். ஆனால் கிட்டாது. இப்படியே ஆசை காட்டிக் கோழிக் குஞ்சு அவரை நெடுந் தூரம் இழுத்துச் சென்றுவிட்டது. பக்கிரி சலிப்படைந்தார். கால்கள் துவண்டன. பசி காதை அடைத்தது. இனித் தொடர்வதில் பயனில்லை என்று நின்றுவிட்டார்.

நின்றவுடனே மின் வெட்டினாற்போல் ஓர் எண்ணம் எழுந்தது. ‘உயிரற்ற கோழிக் குஞ்சுக்கு உயிர் ஊட்டியது எது? வெறும் மாமிசத்தைக் குஞ்சாக்கி இறகளித்து வெட்ட வெளியில் பறக்கச் செய்தது எது?” என்ற எண்ணங்கள்
முளைத்தன. தன் கையில் இருந்த துடுப்பு தென்பட்டது. துடுப்பால் கோழிக்குஞ்சைப் புரட்டியபொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது என்று ஞாபகம் வந்தது. ஒரு விநாடி கண்ணை மூடி அல்லா என்றார். மறுவிநாடி துடுப்பில் இருந்த இரண்டோர் இலைகளை எடுத்து மென்று தின்றார். இரண்டொரு நிமிஷங்களுக்குள் கும்மென்று அடைத்திருந்த காது தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. வயிற்றைக் கிண்டிய பசி ஆறிவிட்டது. மனத்தை அழுத்திய அலுப்பும், உடலை அழுத்திய அயர்வும் இருந்த இடம் தெரியவில்லை. அதற்கு மாறாக அவருக்குள் புதிய ஒளியும் அமைதியும் சக்தியும் கடலலைபோல் எழுந்து பாய்ந்து கொண்டிருந்தன., ‘வாஹ்வா! வாஹ்வா!’ என்று மகிழ்ச்சியால் ஒரு கணம் பொங்கினார்.

அடுத்த விநாடி ‘இந்த மர்மம் அந்த மரத்தில்தான் ஒளிந்திருக்கிறது’ என்ற நினைப்பு மூண்டது. அந்த மரத்தைத் தேடிக்கொண்டே பக்கிரி வந்த வழியே திரும்பினார். ஆனால் வழி தெரியவில்லை. மரமும் தென்படவில்லை.

அந்தக் கொம்பை வைத்துக்கொண்டு இன்னும் மரத்தைப் பக்கிரி தேடிக்கொண்டுதான் இருக்கிறார்.

இப்பொழுதெல்லாங்கூடக் கடைத்தெருப் பக்கம் சில சமயம் வருகிறார். ஆனால் கையில் டேப் இல்லை. வயிற்றில் பசி இல்லை! கையில் அந்தக் கொம்பு! கண்ணில் ஒரு லாகிரி. எந்தக் கடை வாசலையும் இப்பொழுது அவர் மிதிப்பதில்லை.

பக்கிரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கடைக்காரர்கள் நினைக்கிறார்கள். புஷ்பக் கடைக்காரரும் ஊதுவத்திக் கடைக்காரரும் அவர் மஸ்தான் ஆகிவிட்டார் என்று மறுக்கிறார்கள். தாமாக யாரேனும் அவருக்கு இப்பொழுது கொடுத்தால்தான் உண்டு. இல்லாவிட்டாலும் இல்லை. ஆனாலும் அவருக்குக் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

(END)

*

Download  பிச்சமூர்த்தி கதைகள் – pdf  (right click & save as pdf)

நன்றி : சுரேஷ்கண்ணன் , டிராட்ஸ்கி மருது

*
‘ஒரு நாள்’ சிறுகதையில் ந.பிச்சமூர்த்தி : இந்த மனத்தைக் கவனித்தாலே தமாஷாக இருக்கிறது. எதிர்பாராத சாதுர்யத்தை ஒரு சமயத்தில் மின்ன விடுகிறது. மற்றொரு சமயத்தில் பெரும் மழையில் அடிபட்ட ஆடு போலக் குன்றி ஒடுங்குகிறது. இந்த மனம் அசைவதைக் கவனித்துக்கொண்டிருந்தாலே போதும் போலிருக்கிறது. அது சரி, கவனிப்பது யார்?கவனிக்கப்படுவது எது?…

ஸ்ரீதர் தொகுத்த ‘பண்புடன்’ சிறப்பிதழ் (PDF)

இந்தப் பக்கங்களுக்கு இதுவரை சிறுகதை அனுப்பாத தம்பி ஸ்ரீதர் நாராயணனை பழிவாங்க இதைவிட வேறு வழியில்லை. தெம்புடன் இங்கே  அழுத்தி ‘விஷத்தை’ இறக்குங்கள். இந்த 2012 சிறப்பிதழ் மூலமாக ஆசிப் மீரான், சென்ஷி போன்ற சில நண்பர்கள் துபாயில் கிடைத்தார்கள். அது ஒன்றுதான் எனக்கு பெரிய வருத்தம்!

Panbudan_Jan2012-1

*

நன்றி : ‘பண்புடன்‘ , Free Tamil Ebooks

« Older entries