‘புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்!’ – முஹம்மது யூசுப்

சென்ற வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெற்ற ‘மணல் பூத்த காடு’ விமர்சனக் கூட்டத்தில் நாவலாசிரியர் யூசுஃபின் ஏற்புரை , முகநூலிலிருந்து நன்றியுடன்…

உலக வரைபடத்தின் மூலை முடுக்கு எல்லாம் செல்ல விருப்பமா ஒரு நூலகம் செல் – எனும் டெஸ்கார்டெஸ் அவர்களின் வாக்கியத்தோடு ஆரம்பம் செய்கிறேன்.

நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரியங்கள் கலந்த வணக்கம்.

சமகால எழுத்துலகின் ஜாம்பாவன்களாகக் கருதப்படும் ஜெயமோகன், சாரு, எஸ்.ரா போன்ற என்ற எந்த ஒருவரின் ஆதரவும், பின்புலமும் (வட்டத்திலும்) இல்லாத,

கனவுப் ப்ரியன் என்ற பெயரில் இரண்டு சிறுகதைத் தொகுப்பு எழுதி,

முஹம்மது யூசுஃப் என சமகால எழுத்துலகிற்கு அறிமுகமே இல்லாத புதுப் பெயராக மாற்றிக் கொண்ட பின்பும்,

முழுக்க இஸ்லாமிய நாடான சவூதி பற்றிப் பேசும் 445 பக்கம் கொண்ட தடிமனான இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த யாவரும் பதிப்பகத்திற்கும்,

சென்னை புத்தக கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்தில் அதிகமாக விற்ற இரண்டாவது புத்தகம் என்ற பெருமையைத் தந்த, தொடர்ந்து வாசித்து கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறியவனாக ஏற்புரையை ஆரம்பம் செய்கிறேன்.

“ லவ்லல் இக்திலாபு லஹலக்கல் உலமா “ என்கிறது அரபுப் பழமொழி.

கேள்விகள் இல்லை (கருத்து வேற்றுமை) என்றால் அங்கு அறிஞர்கள் இல்லை.

இந்த மணல் பூத்த காடு நாவலே கேள்வியில் இருந்து பிறந்தது தான். அதனால் இந்த ஏற்புரையை “ நாவலில் என்ன எழுத வேண்டும்..? / நாவலை எப்படி எழுத வேண்டும் / இந்த நாவலை ஏன் எழுத வேண்டும் என மூன்று பிரிவாக பேசலாம் என எண்ணியுள்ளேன்.
என்ன எழுத வேண்டும்

ஒரு நாள் அதிகாலை 6 மணிக்கு எனது பணி நிமித்தம் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து போன் வந்தது.

அதிகாலை ஒரு பெண்ணிடம் இருந்து போன் என்றதும் ஏதோ அவசரம் என்பதைப் புரிந்தவனாக வேகமாக போன் அட்டெண்ட் செய்தேன்.

“ என் குழந்தைக்கு சுகமில்ல, நேத்து டாக்டர்கிட்ட போய் காட்டிட்டு வந்தோம். காது வலின்னு மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்த அப்புறமும் குழந்தை அழுகிறாள் அதுவும் பயந்த மாதிரி உடம்பை உதறி திடீர் திடீர்ன்னு வீறிட்டு அழுகிறாள். ஊருக்கு போன் செய்து அம்மாவிடம் கேட்டேன். அங்க ஏதாவது பள்ளிவாசல் கூட்டிட்டு போய் ஓதி காட்டச் சொல்லு சரியாயிரும்ன்னு சொன்னாங்க. ஊருல (இந்தியால) இருக்கிற மாதிரி இந்த ஊருல ஓதிக் காட்ட எந்த பள்ளிவாசல் போகனும்னு தெரியல. எங்க போகனும் “

“ இங்க அப்படி யாரும் ஓத மாட்டாங்க பள்ளிவாசல்ல “

“ ஏன் இந்தியாலேயே ஓதுறாங்க. இது அரபு நாடு இங்க ஓத மாட்டாங்களா “

“ இல்ல “

“ அதான் ஏன், உங்களுக்கு உண்மையிலே தெரியுமா தெரியாதா “

“ உண்மையிலே ஓத மாட்டாங்க “

“ குழந்தை நைட் முழுக்கத் தூங்கல. நாங்களும் தான். பாப்பாவ பாக்க கஷ்டமா இருக்கு. வேலைக்குப் போக மனசில்ல “

“ ம்ம்….ஒன்னு செய். உன் புருசனை என்னோட ரூமுக்கு வரச் சொல் “

பத்து நிமிடத்தில் அவளது கணவன் என்னுடைய பிளாட் வந்து நின்றான்.

அவன் வண்டியில் ஏறியதும் “ எங்க போகனும் , அந்த ஆள் எங்க இருக்கார் “

“ நான் தான் அந்த ஆளு. நேரா வீட்டுக்குப் போ “

“ நீயா “

“ ஆமா”

அவள் வீடு சென்று ஒலு செய்து “ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். ஹதம்து பில்லாஹில் அலீயில் அலீம் வபி ஹக்கி ஹாத்திமி சுலைமான் இப்னு தாவுது அலைஹிஸ்ஸலாம் “ என்றபடி ஓத ஆரம்பித்தேன்.

மறுநாள் மதியம் எனது அலுவலகம் வந்த அவளின் கணவர் கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் உடன் “ உங்க கிட்ட பேசனுமே. கீழப் போய் பேசலாமா “ என்றதும் இருவரும் அருகில் இருக்கும் காபி ஷாப் சென்றோம்.
காபி வரும் முன்னே அவரது கேள்வி ஆரம்பம் ஆகி விட்டது. “ ஏன் இங்க உள்ள பள்ளிவாசல்ல ஓதுறது இல்ல “

“ அது அவுங்களின் சித்தாந்தம் “

“ அது என்ன சித்தாந்தம் “

“ வஹாபியிசத்துல இது கூடாதுன்னு சொல்லுவாங்க “

“ அது என்ன வஹாபியிசம்….? என கேள்விகளாகத் தொடுத்தவர்.

“ என்னென்னமோ எழுதுறீங்க. இதை எழுதுங்கங்க “ என்ற அந்தச் சொல், கோவில்பட்டி எழுத்தாளர் உதய சங்கர் அவர்கள் கூறிய “ இனி நீ நாவல் எழுது..? “ என்பதற்கும் “ என்ன எழுத வேண்டும் “ எனும் தேடலுக்கும் பதிலாக இருந்தது.

இனி எப்படி எழுத வேண்டும்…

“ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்று நாவல்களில் ஒரு வகைமை உண்டு. ஆர்ட் வேறு கிராப்ட் வேறு. இது இரண்டையும் ஓரளவுக்கு வாசிக்க தகுந்தாற்ப் போல சேர்த்து கொடுப்பது தான் டாகுமென்ட்ரி பிக்சன்.

ஐந்தும் ஆறும் இருந்தால் அறியாதவளும் கறி சமைப்பாள் – என்பது வட்டாரப் பழமொழி.

முதல் ஐந்து – எண்ணெய், கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, சிறுபருப்பு – தாளிப்பதற்காக, பின்னம் உள்ள ஆறு – காய்கறிக்கு காய்கறி மாறுபடும்.

1.இஸ்லாமிய வரலாறு இடங்கள்

  1. பிரிட்டனின் சதியால் உண்டான வஹாபிய அரசியல்
  2. நாத் எனும் பாடல் முறை அது வழியாக கூறும் சூஃபியிசம்
  3. வளைகுடா பற்றிய சினிமாக்கள்
  4. ஈராக், சூடான், எகிப்து, ஜோர்டான், ஏமன், குவைத், பஹ்ரைன் இத்தனை நாடுகளின் எல்கையைத் தொட்டு நிற்கும் பல்வேறு அரேபிய ஊர்கள்.
  5. சுபைதா எனும் சிறுமி மூலம் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கதைகள்.
  6. 30 வித விதமான மருத்துவக் கருவிகள்
  7. மறந்து போன கடிதப் போக்குவரத்துகள்
  8. அல் குர்ஆன், ஹதீஸ், அரபிப் பழமொழிகள்
  9. அயல்வாசிகளின் ஒரே மாதிரியான சைக்கிளிங்க் வாழ்வு முறை
  10. அனீஸ் என்பவனின் வேலை சார்ந்த பயணம்.

கிறிஸ்மஸ் ட்ரீ போல தோழப்பா எனும் ஒருவர் கூறும் வஹாபிய வரலாறு மேலை நாடுகளின் அரசியல் எனும் நேர் கம்பில் மற்ற பத்து பாகங்களையும் சின்ன சின்னதாய் கிளைக் கதைகள் கொண்டு டாக்குமென்ட்ரி ஃபிக்சன் எனும் வகைமையில் நாவல் உண்டாக்கப்பட்டது.

முன்னுரையில் “ இது நடையாடி ஒருவனின் கால்களால் எழுதப்பட்ட கதை. உங்களுக்கு பயணங்கள் விருப்பமா, தகவல் கொண்டாடியா, புதிய செய்திகளின் மீது ஆர்வமா அப்படியானால் இந்த எழுத்து உங்களுக்கானது “ என்ற அறிமுகத்துடன் “ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்ற வகையில் தான் இந்த நாவல் உள்ளது என உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

கூடவே ஒரு வீடியோ டீசர். அதிலும் ஒரு பூனை மட்டுமே வரும். மற்ற எல்லாமே இடங்கள் சார்ந்த படங்கள் தான் அந்த வீடியோவில் உண்டு. அதிலும் இது பயணம் சார்ந்த கதை என முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது.

ஆக இது கிற்ஸ்மஸ் ட்ரீ என்றுச் சொல்லித்தான் உங்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.

கிற்ஸ்மஸ் ட்ரீயை மரம் அல்ல என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.

இதுவரை நீங்கள் எப்போதும் வாசிக்கும் உங்களுக்குப் பழக்கப்பட்ட / தேடிய வேப்பமரம் அல்ல இது என்பதை வேண்டுமால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஜோர்டான் நாட்டு பெட்ரா சென்றவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா…..?

நன்றி.

நாவலின் முதல் பாகத்தில் நான் எழுதி இருக்கும் பெட்ரா பற்றிய வர்ணனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுபவர்கள் இங்கே இருக்கிறீர்களா..?

நன்றி.

நான் பெட்ராவே சென்றதில்லை. அங்கு செல்லாமலே, இதுவரை நான் பூனையை வளர்க்காமலே, நண்பன், சுபைதா என்ற பெண் குழந்தை உடன் மதின் சாலே ஒட்டக பயணம் செல்லாமலே, தோழப்பா, ஜலால் சாச்சா, ஷேக் பாய், முஜிப், சித்ரா ஸ்ரீனிவாசன் என புனைவைத் தெளித்த எனக்கு முழு நாவலையும் கதையாக எழுதுவது என்பது பெரிய காரியம் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் புனைவு எழுத நல்ல கற்பனை வளம், அழகிய மொழி கையாளுதல், சிறந்த சொற்கள் இருந்தால் போதும்.

“ டாக்கு ஃபிக்சன் “ எழுத நிறைய உழைக்கனும்.

சித்ரா எனும் கதாபாத்திரம் ஒரு நாவலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காக நிறைய தேர்வு செய்து அதிலிருந்து தபுல ராஜா என்ற தமிழ் வார்த்தை இருந்ததால் “ யே இப்னு இஹ்சான் “ நாவலைத் தேர்ந்து எடுத்து 157 பக்க பிடிஃப்பை முழுமையாக வாசித்து அந்த நாவல் பற்றிய ஒரு வரி ஒரே ஒரு வரி இந்த நாவலில் வந்துள்ளது.

இந்த நாவலுக்காக பார்த்த சினிமா, வாசித்த புத்தகங்கள், தேடிய தகவல்கள் என நாவலுக்கு உண்மையாக இருந்திருக்கிறேன்.

ஏன் இவ்வளவு மெனக்கெடனும் அதற்கான அவசியம் என்ன, என்ற கேள்வி வருகிறது. இனி, ஏன் இப்படி எழுத வேண்டும்..

இத்தனை வருட கால பாரம்பரியத் தமிழ் எழுத்துப் பரப்பில், ஆயிரகணக்கான எழுத்தாளர்கள் கொண்ட தமிழ் எழுத்துலகில் சவூதியைப் பற்றி இதுவரை மூன்று நாவல்கள் தான் வந்துள்ளன.

புன்யாமின்னின் “ ஆடு ஜீவிதம் “ அதுவும் நேரடி நாவல் கிடையாது.

ஆக, மீரான் மைதீனின் எழுதிய “ அஜ்னபி “க்குப் பின்
முஹம்மது யூசுபின் “ மணல் பூத்த காடு “ மட்டும் தான் மீதம் இருக்கு.

ஏன் யாரும் எழுதல..?

பயணக் கட்டுரை புகழ் இதயம் பேசுகிறது மணியன் உலகத்தின் பல இடங்கள் பற்றி எழுதினார்.

சாதுர்யமாக இந்த மண்ணைத் தவிர்த்து விட்டார். ஏன்..?

தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளில் ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரேபியா அரசு உத்தரவு – என்ற பெயரில் போட்டோவுடன் கூடிய செய்தி வந்து விடுகிறது.

எங்க நடந்துச்சு. அது தெரியல ஆனா இன்னும் இருக்கு பாஸ் – அப்படியா நீங்க பாத்திருக்கீங்களா -இல்ல அங்க ஒருத்தர் சொன்னார்…… இது ஏன் நிகழ்த்தப்படுகிறது ஆதாரம் இல்லாமலே.

விஸ்வரூபம் படத்தில் கமலஹாசன் படத்தின் இறுதியில் வில்லனின் மகனை படிக்க அனுப்பிவிட்டதாகக் கூறுவார்.

அதாவது முட்டாத் துலுக்கங்களா போய் படிங்க என்பார் தீவிரவாதத்தைத் தடுக்க அவதரித்த ISS எனும் உளவுப்பிரிவின் MI 5 க்கு உதவும் இந்திய உளவுத் துறை அதிகாரி.

பலரூபங்களில் உருவாக்கப்படும் இஸ்லாமியர்கள் பற்றிய பொது கட்டமைப்பு.

நம்ம ஆளு அதுக்கும் மேல தமிழ் நாட்டுல மட்டும் 56 இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கு.

நோன்பு காலம் வரப்போகிறது 8 ரகாஅத் 20 ரகாஅத்-ன்னு அடிச்சிக்குவான்.

“ ஹுப்புல் வதன் மினல் ஈமான் “ – ன்னு நபிகள் பெருமான் சொல்லி இருக்காங்க. அதாவது சொந்த நாட்டை நேசிப்பது ஈமானைப் போன்றது. ஈமான் என்பது உயிருக்குச் சமமானது.

அரசியல் கட்சி வரும் போகும். சொந்த நாட்டின் மீது அக்கறை இல்லையா பற்று வரலையா போய் சாவு உன்ன யாரு உயிரோட இருக்கச் சொன்னாங்க என்பது தான் அந்த வாக்கியத்தின் கொச்சை மொழி.

நீண்ட வருடங்களுக்குப் பின் RSS ஊர்வலம் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்ததும் நடந்தது. நினைவிருக்கலாம் பலருக்கும். RSS ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க என்று கேட்டதற்கு அதே நாளில் தாம்பரத்தில் ஓர் இஸ்லாமிய இயக்கம் மாநாடு நடத்த அனுமதி வழங்கியதை காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

நாகர் கோவிலில் பொன்னார் எந்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் நிற்கிறார். மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் பெரும்பான்மை மக்களை கோபத்திற்கு ஆளாக்குது

கோவையில் பாருகை வெட்டியது யார். போலிஸ் ரெக்கார்ட்களின் அதிக இஸ்லாமிய பெயர்கள் சேர்ந்தது புட்ற்றீசல் போல புதிய புதிய இயக்கங்கள் வந்த பின் தான்.

டிசம்பர் 6 ஊர் முழுக்க சுவர் விளம்பரம் பாபரி மஸ்ஜிதை மீட்போம்ன்னு. பெருநாள் என்றும் பாராமல் அன்றும் கூட கருப்பு உடை அணியும் இஸ்லாமிய ஒரு கூட்டம். ஒவ்வொரு கோயிலிலும் போலிஸ் பந்தோபஸ்து. அதை காரணம் காட்டி கோயில் வரும் பக்தர்களை பரிசோதிக்கும் காவல்துறை. ஏன் என்று கேட்டால் கிடைக்கும் குண்டு வைத்துவிடுவார்கள் என்ற பதில். எரிச்சல் வருமா வராதா கோயில் வந்தவனுக்கு.

பிஜேபி எப்படி ராமர் கோவிலை கட்டாதோ அதை மாதிரி தான் இதுவும்.

இஸ்லாமிய புதிய புதிய இயக்கங்கள் பெருநாளின் நாட்களை ( ரமலான் 4 நாள் வேறு வேறு நாட்களில் கொண்டாடுகின்றன) அதீகரிப்பதில் மக்களை பிளவு படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

சிப்பாய் கலகம் தொட்டு இன்றைய வினாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் வரை இந்து- முஸ்லீம் மட்டும் சண்டை போட்டபடி உள்ளார்கள். எங்கே இவர்கள் ஒற்றுமை ஆகிவிடுவார்களோ என்று யாருக்கோ பயம்.

யார் அந்த யாருக்கோ அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்ன என்பதை இந்த நாவலில் சொல்ல முயற்சித்து உள்ளேன்.

சென்ற வாரம் கூட முகனூலில் சண்டையில் நிஷா மன்சூர் கமேண்டில் யூசுஃப் மணல் பூத்த காட்டில் விரிவாக எழுதி உள்ளார் வாசிக்கவும்ன்னு சொல்லி இருந்தார்.

ஆக, என்னோட வேலை நான் செய்து விட்டதாகத் தான் கருதுகிறேன்.

ஊடகத்தின் “ நுண்ணிய அரசியல் கட்டமைப்பு “ வழியாக / வன்முறை வளர்த்தெடுக்க நினைக்கும் இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக இந்த நூலின் தரவுகளை தாராளமாக நீங்கள் முன் வைக்கலாம். அதில் அதற்கான தகவல்கள் உள்ளன.

வீட்டு கல்யாணம், வியாதி, படிப்பு, நடுத்தர மக்களின் தேவையை நிறைய பூர்த்தி செய்வது இந்த வளைகுடா மண் தான். தைரியமா போ அந்த மண்ணுக்கு – அப்படின்னு நம்பிக்கை கொடுக்கிறது இந்த நாவல்

அதுக்காக இவ்வளவு தகவல் தேவையா அப்படின்னு நிறைய பேர் கேட்கிறார்கள்.

நண்பர் இங்கே குறிப்பிட்டார் “ 23 F “ சீட்டில் அமர்ந்திருந்தான். அப்படின்னு இருக்கு. பிளைட்டில் இருந்தான்னு சொன்னா போதாதா 23 F வரைக்கும் எழுதனுமா என்று.

“ A-B-C——D-E-F ” F ன்னா என்ன அர்த்தம் ஜன்னலோர சீட். ஜன்னலோர சீட்ட யார் விரும்புவா பயணப்படுபவன் தான்.

ஏர் போர்ட் உள்ளே நுழைஞ்சதும் போர்டிங்கில் உள்ளவன் டிக்கெட் தருபவன் எதிரே நிற்பவனின் முகபாவத்தை வைத்தே முடிவு செய்து விடுவான். “ இந்த ஆளு மொத தடவையா பாரின் செல்கிறான் இவனுக்கு ஒன்னும் தெரியாது. கடைசியில உள்ள வரிசையில் சீட் புக் செய்தால் போதும் “ என்று.

அனீஸ் போன்ற இதுவரை வெளி நாடு செல்லாத பயந்தாங்கொள்ளிக்கு ஜன்னலோர சீட் எனும் பயணம் விதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அவன் விரும்பி பயணம் செய்யவில்லை. கடன் எனும் நிர்பந்தம் அவனை தனியாக அந்த நாடு முழுக்க பயணிக்க வைக்கிறது.

உங்களுக்குத் தகவலாக தெரிவதை சற்று உள்வாங்கி உற்று நோக்குங்கள் அதன் பின்னால் ஒரு கதை இருக்கும்

வாசகன் போலவே அவனும் புதிது புதிதாக ஒவ்வொரு செய்தியும் தகவலும் கேட்டு பார்த்து படித்து அறிந்தபடி கடந்து செல்கிறான்.

அவனுக்குள்ளும் தோழப்பா சொல்வது சரிதானா என்ற கேள்வி எழுந்தபடி உள்ளது.

கேள்விகள் தொடர்ந்தபடி உள்ளன. தகவல்களும் தான்.

புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம். எங்க போகப் போது.

இப்போதைய சமூகத்தின் தேவை நல்லிணக்கம்.

நன்றி வணக்கம்.

**

தொடர்புடைய பதிவு :
“ சான் ராத் ” – கனவுப் பிரியன்