முன்உரிப்பு: இது என் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது. சேமிப்பிற்காக இங்கேயும்…
**
கத்தரிக்காய் கதை
(மௌலானா , மௌலவி, அல்ஹாஃபில் அஹ்மது அப்துல் காதிரி மஹ்லரி அவர்கள் நாகூர் ஷரீஃபில், 2002ஆம் ஆண்டு, ஆற்றிய உரையிலிருந்து, நன்றியுடன்..)
———–
பிஷ்ருல் ஹாஃபி (ரழியல்லாஹு அன்ஹு) சூஃபியாக வாழ்ந்தவர்கள். பல சூஃபிகளை உருவாக்கியவர்கள். அவர்கள் குறிப்பிடுகிறார்கள்… எனக்கு ரொம்ப நாளாக கத்தரிக்காய் தின்ன வேண்டும் என்ற ஆசை இருந்தது….. பலவருடங்கள் கடந்தும் நான் அதனை சாப்பிடாமலே இருந்தேன்.
கத்தரிக்காய் என்பது கிடைக்காத ஒரு பொருள் அல்ல இருந்தபோதிலும் தன் நஃப்சை (ஆசையை) அடக்கி ஒடுக்கி அதற்கு தராமல் வைத்திருந்தார்கள்.
இந்த தகவலை தொடர்வதுக்கு முன்பாக, கத்தரிக்காய் என்றதும் எனக்கு ஒரு தமாஷான விஷயம் நினைவிற்கு வருகிறது.
ஒருவன் ஊர் ஊராக சென்று கத்தரிக்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.
புதிதாக ஓர் ஊருக்கு வந்த அவனின் கடையில் கத்தரிக்காய் விற்பனை ஆகவில்லை. நேரம் ஆக ஆக அவனுக்கு பயம் வந்து விட்டது. இன்று வியாபாரம் அறவே நடக்காமல் போய்விடுமோ? நஷ்டமடைந்து விடுவோமோ? அல்லது இந்த ஊர் மக்கள் கத்தரிக்காயே சாப்பிடமாட்டார்களோ என்றெல்லாம் யோசிக்க துவங்கினான்.
காலையில் துவங்கிய கடையில் ஒரு கத்தரிக்காய் கூட விற்பனை ஆகவில்லை என்றபோது அவன் ஒரு தந்திரம் செய்தான். ஒரு அட்டையை எடுத்து அதில்,
من اكل الباذنجان فقد دخل الجنة – رواه البخاري
– ’யார் கத்தரிக்காய் சாப்பிடுகிறாரோ அவர் திட்டமாக சுவனம் நுழைந்திடுவார் – அறிவிப்பாளர் புகாரி’ என்று எழுதி கடைக்கு முன்பாக வைத்தார். அவ்வளவுதான். மக்கள் பார்த்தார்கள். இப்படி ஒரு ஹதீஃதை நமக்கு யாரும் சொல்லவில்லையே இவர்தானே சொல்கிறார். அது கூடாது இது கூடாது வசீலா கூடாது மத்ஹப் கூடாது ஸியாரத் கூடாது என்று புதிது புதிதாக சொல்லும்போது ஒரு கூட்டம் அவருக்கு பின்னால் போகும் இல்லையா? அதுபோல எனக்கு உனக்கு என்று போட்டி போட்டு மக்கள் கத்தரிக்காயை வாங்க ஆரம்பித்தார்கள். இதனைப் பார்த்து அவன் அதன் விலையையும் கூட்டிவிட்டான். சற்று நேரத்தில் எல்லாம் விற்று தீர்ந்தது. விற்ற கொள்ளைக் காசை சாவாகாசமாக எண்ணிக்கொண்டிருந்தான். அந்த சமயம் அந்த வழியே ஒரு மார்க்க அறிஞர் சென்றார். அவர் அந்த BOARD-ஐ படித்து திகைத்துப் போய்விட்டார்.
இவ்வளவிற்கும் அவர் மாணவர்களுக்கு புனித புகாரி கிரந்தத்தை நடத்தக் கூடிய ஆசிரியராகவும் அவர் திகழ்கிறார்.
நேராக அந்த கடைக்காரனிடம் சென்று என்னப்பா இது? ஆச்சர்யமாக இருக்கு நானும் பல வருடங்களாக ’புகாரி’யை மாணவர்களுக்கு நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு ஹதீஃதை நான் பார்த்ததே இல்லையே! யாரப்பா இந்த புகாரி ? என்று கேட்டபோது, அவன் சர்வ சாதாரணமாக நான் தான். என் பெயர்தான் புகாரி என்று கூறினான்.
இப்படித்தான் இன்று பல புகாரிகளும் கத்திரிக்காய் வியாபாரிகளும் ஹதீதுகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
(2002 உரை)
*
பின்முறிப்பு : இது புத்தகவிழா சம்பந்தமானது அல்ல!
*
நூல் : இறை நெருக்கத்திற்கு தடையாக இருப்பது எது? (பக். 18-19)
நன்றி : அல் இஹ்ஸான் ஆன்மீக அறக்கட்டளை.
கொசுறு (இது போன வருசம் போட்டது)
மூ. எழுத்தாளர்: நான் பாராட்டியதால்தான் உன் புத்தகம் நூறு பிரதிகள் விற்றது.
இ. எழுத்தாளர்: ஆமாம் சார், இல்லையேல் இருநூறு பிரதிகள் போயிருக்கும்.
**
அடிச்சதே பத்து😁
*
(மீள்2021. இதை எல்லா புத்தக விழாக்களுக்கும் போடலாம்!)