பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

கல்கி இதழில், ஏப்ரல் 1964-இல் வெளியான சிறுகதை இது. காலச்சுவடு பதிப்பகத்திற்காக கவிஞர் சுகுமாரன் பதிப்பித்த முழுத்தொகுப்பில் கிடைத்தது. நன்றியுடன் பகிர்கிறேன். – AB

**

thi janakiraman - tamilwiki 2

பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

… ‘என் தாயாருக்கு நீங்கள் அனுப்பிய அனுதாபச் செய்தி கிடைத்தது. ‘நிறைந்த சங்கீத அறிவுடன், ரசிக சிரோமணியாகத் திகழ்ந்தார் தங்கள் கணவர் ஸ்ரீபலராமன். பயமின்றியும் பாரபட்சமின்றியும் அவர் சங்கீத விமர்சனம் செய்து வந்ததே, சங்கீதமே மூச்சாக அவர் வாழ்ந்த லட்சிய நோக்குக்குச் சான்றாகும். அவர் மறைவைச் செவியுற்று இசையுலகம் துயரில் ஆழ்ந்து கிடக்கிறது. அன்புக் கணவரைப் பிரிந்து துயரெனும் இருளில் தவிக்கும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபத்தை எங்கள் பிருங்கி சங்கீத சபை தெரிவித்துக்கொள்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள்.

அம்மா அதைப் படித்துவிட்டுச் சிறிது நேரம் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். “நன்றி, என்று ஒரு வார்த்தை பதில் எழுதிப் போட்டுவிடட்டுமா?” என்று கேட்டேன். “இத்தனை தப்பு இருக்கிற கடுதாசுக்கு விவரமாகத்தான் எழுதிப் போடேன்” என்று சொல்லிப் போய்விட்டாள். போய் முன்வாசல் படியில் நின்று, “இந்தக் கடுதாசு உனக்கு சரியாகப்படறதா?” என்று கேட்டாள்.

மறுபடியும் படித்து, ஒவ்வொரு வார்த்தையாக எடை போட்டுப் பார்த்தேன். அநேகமாக எல்லாமே தவறு என்று தோன்றிற்று. அம்மாவிடம் அதைச் சொல்லியும்விட்டேன். “அப்படீன்னா பொய்யைக் கழுத்தை முறிச்சுப் போடு” என்று சொல்லிவிட்டு வாசற்படி இறங்கிப் போனாள்.

மறுபடியும் உங்கள் கடிதத்தைப் படித்தேன். அப்பாவின் கெட்டிக்காரத்தனத்தை நினைத்துச் சிரிப்பு வந்தது. முரட்டு ரசிகர்களான பிருங்கி சபையார் கண்ணில் மண்ணைப் போட்டு விட்டாரே என்று தோன்றிற்று. அப்பா ரசிகரும் இல்லை. சிரோமணியுமில்லை. பயந்து பயந்துதான் பொழுதைப் போக்கினார் அவர். அவருடைய லட்சியம் சங்கீதமல்ல. பக்ஷ்யம்தான். காலட்சேப பாகவதர்கள் அடுக்குகிற ஏழு ஸ்வரங்களுக்குச் சுத்தம், சாதாரணம், அந்தரம், சதுச்ருதி, த்ரிச்ருதி, ஷ்ட்ச்ருதி, கோமளம், தீவிரம் என்றெல்லாம் அடைமொழிகளுடன் வேறுபாடுகள் இருப்பதுபோல் ஒவ்வொரு சுவைக்கும் பன்னிரண்டு வகைகள் உண்டு என்று அவர் கட்சி. உண்டி வகைகளை உண்பதுதான் அவருடைய பரம புருஷார்த்தம். அம்மாவுக்கும் அவருக்கும் இடையே எந்தவித அன்பும் மலர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இருந்தால் மொட்டிலேயே கருகியிருக்க வேண்டும். துயரெனும் இருளில் அம்மாவோ நாங்களோ தட்டித் தடவி நடக்கவில்லை. நான் மனையியலையும் சங்கீதத்தையும் விசேஷ பாடமாக எடுத்துக்கொண்டு ஆனர்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். என் தம்பி கெமிஸ்டாக ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். நானும் அவனும் வில்லி பார்லாவில் குடியிருக்கிறோம். அம்மா – கோரேகானில் அன்புக் கணவரோடு – இந்த நாள் கணவரோடு – சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அப்பாவின் மனைவியாக அல்ல. போலீஸ்காரர்கள் வந்து அவரைப் பைத்திய ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய்ச் சேர்த்த பிறகுதான் அம்மாவுக்கு ஆறுதல் கிடைத்தது. மூன்று வருஷங்கள் கழித்துச் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டுவிட்டாள்.

மாதா பிதா பாவம் மக்கள் தலையிலே என்பார்கள். அந்தப் பாவத்தை என் அப்பா தன் தலையில் சுமந்துகொண்டு அலைந்தார். கடைசியில் அது அவர் தலைக்குள் இருப்பதையே பாதித்துவிட்டது. அவருடைய பிதா (என் தாத்தா) செய்த பாவம் பிள்ளைக்குச் சங்கீதம் கற்பிக்க முயன்றது. மாதா (என் பாட்டி) செய்த பாவம் அதைத் தடுத்து நிறுத்தாமல் போனது. அதனால் சிலவேளை அப்பாவை நினைக்கும்போது வருத்தமாயிருக்கும்.

தாத்தாவுக்கு மூன்று பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகளும் திவ்வியமாகப் பாடுவார்களாம். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா, சங்கீதத்திலும் கரை கண்டவர். கரையைக் கண்டுவிட்டாலும் எப்போதும் அதிலேயே நீந்திக் கொண்டிருப்பாராம். பிள்ளைகள் பாடுவதைப் பார்த்து உடம்பே வெடிக்கும்போல் பூரித்துக் கொண்டிருப்பாராம். தக்க வயது வந்ததும் சங்கீத இலக்கண இலக்கியங்களையெல்லாம் கரைத்துப் புகட்டிவிடுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாராம். ஆனால் அவர் இதயமே வெடிக்கிற சம்பவம் நிகழ்ந்தது. அந்த முதல் இரண்டு பிள்ளைகளும் ஒரு சாதாரண ஆற்றில் நீந்தப் போய், உயிரை ஆற்றிடம் தந்து, உடம்பாக எங்கோ அகப்பட்டார்களாம். தாத்தாவுக்குத் துயரம் தாங்கவில்லை. தம் சங்கீத சொத்தை அவர் இனி மேல் யாருக்கு எழுதி வைப்பார்? மூன்றாவது பிள்ளைக்குத்தானே? வேறு வாரிசு ஏது? எனவே, என்னுடைய அப்பாவுக்கு ஏழு வயதிலிருந்தே சங்கீதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். வாழ்வில் அநித்தியத்தை எண்ணி, சங்கீத இலக்கண சாஸ்திரங்கள் வரலாற்று நூல்கள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகப் பாடம் சொன்னார். என் அப்பாவுக்குப் பாட்டு வராவிட்டாலும் கடம் நன்றாக வரும். எத்தனை பெரிய புத்தகமானாலும் கடம் போட்டுவிடுவார். கேட்ட இடத்தில் தலையில் பிரம்ம தண்டத்தை வைத்தாற்போல் கடகடவென்று ஒப்பிப்பார். பாடத்தான் வரவில்லை. தாத்தா அவரை அடியோ அடி என்று அடித்தார். உள்ளங்கை என்ன, முஷ்டி என்ன, பாக்குவெட்டி என்ன, புத்தகம் என்ன, டம்ளர் என்ன, டபரா என்ன- இப்படிப் பல ஆயுதங்களை அவர் மீது கண்ணை மூடிக்கொண்டு பிரயோகம் செய்வார். இப்படி வெகு காலம் வரையில் இந்த சிட்சை நடந்தது. இதற்கிடையில் என் அப்பாவுக்குக் கல்யாணமும் நடந்தது. ஆனால் இசைப் பயிற்சியும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. அதனுடைய பிரிக்க முடியாத அங்கமான வசவுகளும் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தன. எத்தனை பொழிந்தும் விளைச்சலில்லை. கட்டாந்தரையில் எப்படி முளைக்கும்? அப்பா சங்கீத சாஸ்திரங்களை நெட்டுருப் போட்டதனைத்தும் பாத்தியில் எருவாகக் குவிந்திருந்தது. ஆனால் பாத்தி கருங்கல். பாட்டு வரவில்லை. தாத்தா அடிக்கடி பெருமூச்சுவிட்டு ஓய ஆரம்பித்தார். “அட, பாஷாங்க சனியனே!” என்று அடிக்கடி பிள்ளையை ஒரு புதுமுறையில் விரக்தியுடன் திட்ட ஆரம்பித்தாராம். “நீ எங்கேடா இங்கே வந்து பிறந்தே?” என்று பெருமூச்சு விடுவாராம்.

இதை என் அம்மா கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சின்னப் பெண். சாந்தி கல்யாணம் ஆகவில்லை. ஆகாவிட்டாலும் புருஷன் வீட்டுக்குப் பெண்ணை ஒரு மாசம் கொண்டுவிடுவதும் அழைத்துப் போவதும் அந்தக் காலத்து வழக்கம். “பாஷாங்க சனியனே!” என்றால் என்ன என்று அவளுக்கு அப்பொழுது புரியவில்லை. பாஷாணம் என்பதை அப்படித் தவறிச் சொல்கிறாரோ என்று தோன்றுமாம். கடைசியில் ஒரு நாள், “பாஷாங்க ராக ராக்ஷசப் பயலே ஒழி” என்று ஆசீர்வாதத்துடன் சங்கீதப் பயிற்சிக்கு மங்களம் பாடி முடித்துவிட்டாராம் தாத்தா.

தாத்தா பிறகு அதிக காலம் ஜீவித்திருக்கவில்லை. ஒருநாள் இகவாழ்வை நீத்தார். நீக்கும்போது அவரால் பாட முடியவில்லை. பிள்ளையைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாராம்.

அவர் போனதும் என் அப்பா ‘கூகூ’ என்று பச்சைக் குழந்தை மாதிரி அழுதாராம். தம் தந்தையார் கடைசியில் பார்த்துப் பார்த்துப் பேச முடியாமல் கண்ணீர் விட்டதன் அர்த்தத்தை ஆராய முனைந்தார். கண்டுபிடித்துவிட்டார். “என் கோட்டையெல்லாம் தகர்ந்துவிட்டதே” என்றுதான் அவர் வெம்பியிருக்க வேண்டும் என்று அப்பாவுக்குப் புரிந்துவிட்டது. அந்தக் கணமே, இனி வேலைக்குப் போவதில்லை, சங்கீதத்துக்கே உழைப்பது என்று தீர்மானம் செய்துவிட்டார்.

சங்கீதத்தைப் பற்றியே பேச ஆரம்பித்தார் என் தந்தை. வீட்டில் பேசுவார். வெளியில் பேசுவார். ஹோட்டலில் பேசுவார். ரயிலடியில் பேசுவார். நண்பர்களோடு பேசுவார். சங்கீதக் கச்சேரிக்கு யாராவது நிர்பந்தமாகக் கூப்பிட்டுப் போனால், வெளியே உட்கார்ந்து சங்கீதத்தைப் பற்றிப் பேசிவிட்டு வந்துவிடுவார். அதனால் அவரைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தார்கள். ‘வலமோ இடமோ போகட்டும். மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி’ என்று சங்கீத வித்துவான்கள் ஓடி ஒளிந்தார்கள். அதற்காக அவருக்கு நண்பர்களில்லாமல் போய்விடுவார்களா? அவரைப்போலவே நாலு பேர்கள் சேர்ந்து கொண்டார்கள். காசுள்ள ஆசாமி என்றால் விடுவார்களா? அவரோடேயே சாப்பாட்டுக்கும் வந்துவிடுவார்கள். இரண்டு கறி, கூட்டுகள், பிட்ளை, ஆமவடை, பாயஸம் இப்படி அம்மா சாப்பாடு பண்ணிப் போடுவாள். அந்தச் சிரமங்களைக் கூட அவள் சட்டை செய்யவில்லை. கூடத்திலிருந்து அப்பா பேசுகிற மாவு மிஷின் குரலையும் நண்பர்களின் குரலையும் தான் அவளால் சகிக்க முடியவில்லை. சில சமயம் குஷி தாங்காமல் அப்பா பாடிக்கூடக் காட்ட ஆரம்பித்துவிடுவார். அம்மாவின் முகத்தில் அப்போது ஒரு பேயறைந்த கிலி வந்து படர்வதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். நண்பர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அப்பாவுக்கு நாலு கறியில்லாமல் சாப்பிடத் தெரியாது. அப்பளத்தைச் சுட்டால் பிடிக்காது. காலையில் இட்டிலி அல்லது பொங்கல் காப்பி, எட்டு மணிக்கு ஒரு காப்பி, பத்து மணிக்கு இரண்டு பிஸ்கட் காப்பி, பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு, இரண்டு மணிக்குக் காப்பி, நான்கு மணிக்கு டிபன் காப்பி, ஆறு மணிக்குக் காப்பி, எட்டு மணிக்குச் சாப்பாடு, பத்து மணிக்கு டீ, பன்னிரண்டு மணிக்கு ஓமப்பொடி, கீமப் பொடியோடு இஞ்சி இடித்த கொத்தமல்லிக் காப்பி. நடுநடுவே ஹோட்டல் டிபன் வேறு. எப்படி இந்த மாதிரி சாப்பிட முடிகிறதென்று அம்மா பயந்து போய்விட்டாள். வர வர அந்தப் பயம் எப்படி இனிமேல் இத்தனையும் பண்ணிப் போடப் போகிறோம் என்ற மலைப்பாக மாறிவிட்டது. ஏனென்றால், அப்பாவின் சொத்து எப்பொழுதும் குட்டிபோட்டுக் கொண்டேயிருக்கிற பணக்காரச் சொத்து இல்லை. தாத்தாவின் பிராவிடண்ட் பணம், ஊரிலிருந்த வீடு, சாப்பாட்டு நிலம் – எல்லாம் இந்தச் சாப்பாட்டிலேயே கரைந்து போய்விட்டன.

இப்போது சங்கீத வித்தவான்களுக்கு அப்பா கடிதம் எழுத ஆரம்பித்தார். உங்களைப்போல் பாடுகிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று ஒரு நூறு பேருக்குக் கடுதாசு போட்டுவிட்டார். சிலர் நன்றி தெரிவிக்க நேரிலேயே வந்தார்கள். சிலரிடம் இவரே போனார். எதற்கு? கடன் வாங்க. ஓர் இருபது பேரிடம் பலித்தது. ஆனால் அதற்குள் சங்கீதக்காரர்களுக்கு அடிக்கடி கூடிப் பேசுகிற சந்தர்ப்பங்கள் இருப்பதால், “எனக்கு மட்டும் எழுதியிருக்கிறார்” என்று அவர்கள் குடுமியில் அப்பா சுற்றியிருந்த பூ வாடிவிட்டது. பயந்து கொண்டிருந்தவர்கள் இப்போது சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாலுகறி, கூட்டு பச்சடி, ஒரு கறியாகவும் வற்றல் குழம்பாகவும் குறைந்துவிட்டன.

“என்னடீ! உங்க அப்பாவாத்துச் சமையல் மாதிரி ஆயிட்டுது!” என்று ஆரம்பித்தார் அப்பா.

உண்மையில் அம்மா இப்போது அவள் அப்பா அம்மா வீட்டிலிருந்து தான் சாமான் சஜ்ஜாவெல்லாம் வரவழைத்துக் கொண்டிருந்தாள். அதுதான் எத்தனை நாட்கள் நடக்கும்? அவள் அப்பா அம்மா மட்டும் என்ன சிரஞ்சீவிகளா? அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். அம்மாவின் அண்ணன் தம்பிகள் சும்மா இருந்தால் அவர்களுடைய மனைவிகள் சும்மா இருப்பார்களோ?

“உங்க அப்பன் மாதிரின்னு நெனச்சிண்டியோன்னேன்” என்று அம்மாவைப் பார்த்து அடிக்கடி குத்தி நெருடிக்கொண்டேயிருப்பார் அப்பா.

“உங்கப்பாவுக்கு நானும் அவர் மாதிரி பணம் பணம்னு பறக்காம இருக்கேனேன்னு குறை! பணம்னு சம்பாதிக்காவிட்டாலும் வரவா போறவா குறைச்சல் இல்லை. பத்து பணக்காரனுக்குச் சமமா காய்தா பண்றானே மாப்பிள்ளை அப்படீன்னு வேறே ஆதங்கம். செத்துப் போகிற வரைக்கும் திரிசமனும் ஜாடையுமா இதைச் சொல்லிக் காமிச்சிண்டேயிருந்தார். இப்பதான் அவர் ஆத்மா சாந்தியடைஞ்சிருக்கும். இப்பதான் நிஜமாவே நான் இல்லாமல் கஷ்டப்படறேனோல்லியோ?’ என்றார் அப்பா ஒரு நாள். அதைக் கேட்டு அம்மா பிழிந்து பிழிந்து அழுதாள். வெகுநாட்கள் பொறுத்துக் கொண்டேயிருந்தாள். கடைசியில் ஒரு நாள் திடீரென்று ஆவேசம் வந்தாற்போல் ஒரு கூச்சல் போட்டாளே பார்ப்போம். “போரும், அப்பாவைப் பத்தி இனிமே பேச வாண்டாம்!’ என்று பீறின அந்தக் கூச்சல் ஏழு வீட்டுக்குக் கேட்டது. அப்பா அப்படியே வெலவெலவென்று தொய்ந்து போனார். சற்று நேரம் பேசாமல் நின்றார். பிறகு வாசல் பக்கம் போய்விட்டார் அவர்.

அம்மா இப்போது சாதாரண மனுஷியாகிவிட்டாள். இதுவரை பார்யா தர்மம், ஸ்திரீ தர்மம், இல்லாள் கடமை என்று புத்தகங்களில் எழுதியிருக்கும் பெண்மணி மாதிரி இருந்தாள். இப்போது திடீரென்று நினைத்துக்கொண்டு சாதாரண மனுஷியாகிவிட்டாள்.

அப்போதுதான் விஜயராகவன் அப்பாவுக்குச் சிநேகிதம் ஆனார். அப்பா மாதிரி அவர் அழுக்காக இருக்க மாட்டார். அழுக்கு வேட்டி கட்ட மாட்டார். சுருக்கு சுருக்கென்று பேச மாட்டார். சும்மாச் சும்மா தின்றுகொண்டேயிருக்க மாட்டார். சிநேகிதமாயிருந்தார். அவர் ஒரு நாள் கூடத்தில் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்கள் எத்தனை நாட்கள் சார், இப்படியே இருக்கப் போறேள்? ஏதாவது சம்பாதிக்க வழி பண்ணிக்க வேண்டாமா?”

“எனக்கு என்னய்யா, இப்ப குறை? நான் சந்தோஷமாகத்தான் இருக்கேன்.”

“சம்பாத்தியம் ..?’

“அதுதானே? நான் உண்மைக்காகப் பாடுபடறேன் இந்த மாதிரி மனுஷாள்ளாம் பட்டினி கிடந்துதான் செத்துப் போயிருக்கா. கலையோட சரித்திரத்தை எடுத்துப் பார்த்தீர்னா தெரியும்.”

“கலியாணத்தைப் பண்ணிண்டு, ஒரு குடும்பத்தை உண்டாக்கிப் பிட்டு -”

“அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவாளுக்கு இதையெல்லாம் தாங்கிக்கிற பலமில்லேன்னா நான் என்ன செய்யகிறது?”

“நீ வாழ்ந்தே” என்றாள் உள்ளே காப்பி போட்டுக் கொண்டிருந்த அம்மா. இருபது பலம் காப்பிப் பொடியை அன்று காலையில்தான் விஜயராகவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தார்.

“கடனுக்கு லாயர் நோட்டீஸ் நாலஞ்சு பேர்கிட்டேயிருந்து வந்துட்டுதே.”

“வரட்டுமே. இருந்தால்தானே கொடுப்பேன் . . .”

“கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சி பண்ண வாண்டாமா?”

“திருப்பித் தரும் யோசனையோடு நான் வாங்கலியே விஜயராகவன்! பணம் வாங்கினால் திருப்பிக் கொடுத்துடணும் என்கிற நேர்மை எல்லாம் பாமர மனுஷாளுக்கு ஏற்பட்ட சட்டமில்லையோ?”

“உவா” என்று உள்ளே குமட்டினாள் அம்மா.

“பெரிய கலைஞர்கள், மேதாவிகள் எல்லாம்தான் இதெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லுகிற வழக்கம்.”

“அப்படி இங்கே ஒண்ணும் இல்லேன்னு சொல்றீமாக்கும்! ஒப்புக்காட்டா என்னய்யா? நான் கலைஞன் இல்லேன்னு ஆயிடுமா?” என்றார் அப்பா.

“இதைக் கொண்டு மாமாகிட்ட கொடுத்துட்டு வா” என்று காப்பியைக் கொடுத்தாள் அம்மா. கொடுத்துவிட்டு வந்தேன்.

“ஐயோ, ரதீ! சர்க்கரையே போடலியே!” என்று அப்பாவின் குரல் கத்திற்று. சர்க்கரை டப்பாவை எடுத்ததும், “வைடீ, கீழே!” என்று உருட்டி விழித்தாள் அம்மா. உடனே கூடத்து நிலையண்டை போய் நின்று கொண்டாள். “கலைஞருக்குச் சர்க்கரை என்னத்துக்கு?” என்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். இதைச் சொல்லச் சிரிப்பானேன் என்று குழம்பிய எனக்கு அந்தச் சிரிப்பைக் கேட்டு நடுநிசியில் இருட்டின நிசப்தத்தில் ஏதோ உறுமலைக் கேட்பதுபோல் இருந்தது. அம்மா உள்ளே போய்விட்டாள்.

ஒரு நாள் நான் சமையல் அறைக்கு அப்பால் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தேன். விஜயராகவ மாமாவோடு அம்மா கூடத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அரை மணி கழித்து அப்பாவின் குரல் கேட்டது. அம்மா உள்ளே வந்தாள்.

“கழுகுக்கு மூக்கிலே வேர்க்கிறாப்பல இருக்கே இது?” என்று அப்பாவின் குரல் கேட்டது.

“என்ன?” – விஜயராகவ மாமாவின் குரல்.

“நான் இல்லாத சமயம் பார்த்தே வறீமேன்னேன்?”

“வந்தா என்ன?”

“வந்தா என்னவா! . . . கெட் ஔட்.” – அப்பாவின் குரல். அம்மா நிலையண்டை விரைந்தாள். நானும் போய் நின்றேன். விஜயராகவ மாமா நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. அப்பாவையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். மரவட்டையையோ, எட்டுக்கால் பூச்சியையோ பார்க்கிற மாதிரி இருந்தது. அப்பா அம்மாவைப் பார்த்தார். விறுவிறுவென்று செருப்பைக்கூட மாட்டிக் கொள்ளாமல் வாசலில் இறங்கிப் போய்விட்டார். விஜயராகவ மாமா படத்தில் எழுதின சமுத்திர அலை மாதிரி உட்கார்ந்திருந்தார். ஐந்து நிமிஷங்கள் கழித்துச் சமுத்திர அலை அசைந்தது. எழுந்து வெளியே போய்விட்டது.

ஆறு மணிக்கு அப்பா வந்தார். சமையல் அறைக்கு வந்தார். “ஓகோ நான் வருவேன்னு தெரிஞ்சு போயிட்டுதாக்கும்?” என்று பொதுவாகச் சுவரைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.

“இந்தக் கிறுக்குப் பேச்செல்லாம் வாண்டாம். இன்னிக்கு ரண்டிலே ஒண்ணு தீரணும்” என்றாள் அம்மா.

“அப்படியா? . . . என்னத்துக்கு விஜயராகவன் வெறுமனே நான் இல்லாதபோது வர்றான்?”

“என்னத்துக்கா? சொல்லட்டுமா?” – என்று ஒரே ஒரு வாய்க்கடையால் சிரித்தாள் அம்மா.

“பயமுறுத்தறியே.”

“அது உங்க வேலைன்னா. நான் பாடகன் இல்லை. உங்களைக் கண்டு பயப்படறதுக்கு. நீங்கதான் இப்ப பயப்படப் போறேள்.”

“சும்மா மிரட்டாதே. அவன் எதுக்கு வரான் அதைச் சொல்லு, கிடக்கட்டும்.”

“பாஷாங்க ராகத்துக்கு வேற ஸ்வரம் எதுக்கு வரும்?”

” – “

“எதுக்கு வரும்னு கேட்டால் சொல்லுங்களேன்.” அப்பா நிமிர்ந்து ஒரு நிமிஷம் பார்த்தார். பார்த்துக்கொண்டேயிருந்தார்.

“சொல்லுங்களேன்.”

“ரக்திக்கு” என்று மெதுவாகச் சொன்னார் அப்பா.

“இப்ப புரிஞ்சுதா? அந்நிய ஸ்வரம் எதுக்கு வரும்? ராகத்துக்கு ரக்தி கொடுக்க வரும். அதை இன்னும் போஷிக்க வரும். இப்ப நாலு மாசமா குடும்ப போஷணை விஜயராகவன்னாலேதான் நடக்கிறது. நாலு மாசமா நீங்க திங்கிற அரிசி, குடிக்கிற காப்பியெல்லாம் அவன் வாங்கிப் போட்டுதுன்னேன். இத்தனை சாஸ்திரம் படிச்சும் வீட்டிலே இருக்கிற ராகமே புரியலெ” என்று அம்மா தோளில் கன்னத்தை இடித்துக்கொண்டாள்

அப்பா முகத்திலும் தலையிலும் ஓங்கி ஓங்கிப் போட்டுக்கொண்டார். நான் தடுக்கப் போனேன். “நில்லு” என்று அதட்டினாள் அம்மா. அப்பா நோக நோகப் போட்டு கொண்டுவிட்டு, “நீ உன் பொண்ணு எல்லாம் பாஷாங்கம் தாண்டி, கிராதகி” என்று பல்லைக் கடித்துவிட்டு மறுபடியும் வாசலுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. “பாஷாங்க ராகம் பாடாதேள். குடும்பத்துக்குக் கெடுதல் – கெடுதல்” என்று வாசலில் நின்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டியைக் கிழித்தும் கொள்ளத் தொடங்கிவிட்டார். தற்செயலாக வடக்கேயிருந்து வந்திருந்த அப்பாவின் அத்தான் வீட்டில் இருக்கிற நிலைமையைப் பார்த்தார். அவரை வடக்கே தாம் வேலை பார்க்கிற ஊருக்கே அழைத்துப் போய்விட்டார். மந்திரவாதிகளைக் கூப்பிட்டுப் பார்த்துப் பயனில்லாமல் பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார். அப்பாவுக்குத் தெளியவில்லையாம். பைத்திய ஆஸ்பத்திரியிலேயே ஐந்து வருடங்கள் இருந்து அவர் அங்கேயே இறந்துவிட்டதாகத் தெரிந்தது. அப்பாவின் அத்தானுக்கு அவர் மேல் மிகவும் பிரியம். அத்தை பிள்ளைகள் அப்படித்தானிருப்பார்கள். அவர்தான் பத்திரிகைக்கு – அவர் காலமான செய்தியைக் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. எங்களுக்குக்கூட அப்படித்தான் சேதி தெரிந்தது. நீங்கள் போட்ட அனுதாபக் கடுதாசு எங்கெங்கோ சுற்றித் தாறுமாறாக முத்திரை வாங்கிக் கொண்டு முந்தாநாள்தான் வந்தது. அப்பாவை அவர் அத்தான் அழைத்துப்போன அடுத்த மாசமே நாங்கள் பம்பாய் வந்துவிட்டோம்.
இத்தனை நீளமாகக் கடுதாசி எழுதினதற்கு மன்னிக்க வேண்டும். மேதைக்கும் பைத்தியத்துக்கும் இடையே உள்ள வரம்புக் கோடு மிக மெல்லியது என்று சொல்லுகிறது வழக்கம். ஆனால் கோடே இல்லாத மாதிரி நீங்கள் குழம்பிவிட்டதால் அம்மாவின் உத்தரவுப்படி எழுதினேன்.

பெற்ற அப்பாவைப் பற்றி இத்தனை கேவலமாக எழுதக்கூடாது. என்ன செய்கிறது? வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த அப்பாவிடம் நானும் தம்பியும் பட்ட வேதனை..

இப்படிக்குத் தங்கள்,

ரதிபதிப்ரியா

பின்குறிப்பு: அம்மா கோரேகானிலிருந்து இன்று காலை வந்தாள். இந்தப் பதிலைக் காட்டினேன். அவளும் இரண்டு வார்த்தை எழுத விரும்புகிறாள்.

நமஸ்காரம்… குழந்தை சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் பலராமனுக்குச் சித்தம் கலங்குவதற்கு முன்னால் ஒன்று நடந்தது. என்மேல் அவ்வளவு சந்தேகப்பட்டுக் கோபமும் கலக்கமுமாகப் போனவர் சாப்பாட்டுக்கு மட்டும் வேளா வேளைக்கு வந்துகொண்டிருந்தார். பிறகுதான் நான் எழுதி அவருடைய அத்தானை வரவழைத்தேன் . . குழந்தை சொன்னது ரொம்ப சரி. என் மாமனார் செய்த பாபத்தை அவர் தலையில் சுமந்து கொண்டு அலைந்தார். அதற்கு நாங்கள் எவ்வாறு பிணையாக முடியும்?

தங்கள்,

விஜயா விஜயராகவன்.

**
நன்றி : கல்கி, சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம்

கத்தரிக்காய் கதை

முன்உரிப்பு: இது என் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது. சேமிப்பிற்காக இங்கேயும்…
**

கத்தரிக்காய் கதை

(மௌலானா , மௌலவி, அல்ஹாஃபில் அஹ்மது அப்துல் காதிரி மஹ்லரி அவர்கள் நாகூர் ஷரீஃபில், 2002ஆம் ஆண்டு, ஆற்றிய உரையிலிருந்து, நன்றியுடன்..)
———–
பிஷ்ருல் ஹாஃபி (ரழியல்லாஹு அன்ஹு) சூஃபியாக வாழ்ந்தவர்கள். பல சூஃபிகளை உருவாக்கியவர்கள். அவர்கள் குறிப்பிடுகிறார்கள்… எனக்கு ரொம்ப நாளாக கத்தரிக்காய் தின்ன வேண்டும் என்ற ஆசை இருந்தது….. பலவருடங்கள் கடந்தும் நான் அதனை சாப்பிடாமலே இருந்தேன்.

கத்தரிக்காய் என்பது கிடைக்காத ஒரு பொருள் அல்ல இருந்தபோதிலும் தன் நஃப்சை (ஆசையை) அடக்கி ஒடுக்கி அதற்கு தராமல் வைத்திருந்தார்கள்.

இந்த தகவலை தொடர்வதுக்கு முன்பாக, கத்தரிக்காய் என்றதும் எனக்கு ஒரு தமாஷான விஷயம் நினைவிற்கு வருகிறது.

ஒருவன் ஊர் ஊராக சென்று கத்தரிக்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

புதிதாக ஓர் ஊருக்கு வந்த அவனின் கடையில் கத்தரிக்காய் விற்பனை ஆகவில்லை. நேரம் ஆக ஆக அவனுக்கு பயம் வந்து விட்டது. இன்று வியாபாரம் அறவே நடக்காமல் போய்விடுமோ? நஷ்டமடைந்து விடுவோமோ? அல்லது இந்த ஊர் மக்கள் கத்தரிக்காயே சாப்பிடமாட்டார்களோ என்றெல்லாம் யோசிக்க துவங்கினான்.

காலையில் துவங்கிய கடையில் ஒரு கத்தரிக்காய் கூட விற்பனை ஆகவில்லை என்றபோது அவன் ஒரு தந்திரம் செய்தான். ஒரு அட்டையை எடுத்து அதில்,
من اكل الباذنجان فقد دخل الجنة – رواه البخاري
– ’யார் கத்தரிக்காய் சாப்பிடுகிறாரோ அவர் திட்டமாக சுவனம் நுழைந்திடுவார் – அறிவிப்பாளர் புகாரி’ என்று எழுதி கடைக்கு முன்பாக வைத்தார். அவ்வளவுதான். மக்கள் பார்த்தார்கள். இப்படி ஒரு ஹதீஃதை நமக்கு யாரும் சொல்லவில்லையே இவர்தானே சொல்கிறார். அது கூடாது இது கூடாது வசீலா கூடாது மத்ஹப் கூடாது ஸியாரத் கூடாது என்று புதிது புதிதாக சொல்லும்போது ஒரு கூட்டம் அவருக்கு பின்னால் போகும் இல்லையா? அதுபோல எனக்கு உனக்கு என்று போட்டி போட்டு மக்கள் கத்தரிக்காயை வாங்க ஆரம்பித்தார்கள். இதனைப் பார்த்து அவன் அதன் விலையையும் கூட்டிவிட்டான். சற்று நேரத்தில் எல்லாம் விற்று தீர்ந்தது. விற்ற கொள்ளைக் காசை சாவாகாசமாக எண்ணிக்கொண்டிருந்தான். அந்த சமயம் அந்த வழியே ஒரு மார்க்க அறிஞர் சென்றார். அவர் அந்த BOARD-ஐ படித்து திகைத்துப் போய்விட்டார்.

இவ்வளவிற்கும் அவர் மாணவர்களுக்கு புனித புகாரி கிரந்தத்தை நடத்தக் கூடிய ஆசிரியராகவும் அவர் திகழ்கிறார்.

நேராக அந்த கடைக்காரனிடம் சென்று என்னப்பா இது? ஆச்சர்யமாக இருக்கு நானும் பல வருடங்களாக ’புகாரி’யை மாணவர்களுக்கு நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு ஹதீஃதை நான் பார்த்ததே இல்லையே! யாரப்பா இந்த புகாரி ? என்று கேட்டபோது, அவன் சர்வ சாதாரணமாக நான் தான். என் பெயர்தான் புகாரி என்று கூறினான்.

இப்படித்தான் இன்று பல புகாரிகளும் கத்திரிக்காய் வியாபாரிகளும் ஹதீதுகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

(2002 உரை)
*
பின்முறிப்பு : இது புத்தகவிழா சம்பந்தமானது அல்ல!
*
நூல் : இறை நெருக்கத்திற்கு தடையாக இருப்பது எது? (பக். 18-19)
நன்றி : அல் இஹ்ஸான் ஆன்மீக அறக்கட்டளை.


கொசுறு (இது போன வருசம் போட்டது)

மூ. எழுத்தாளர்: நான் பாராட்டியதால்தான் உன் புத்தகம் நூறு பிரதிகள் விற்றது.

இ. எழுத்தாளர்: ஆமாம் சார், இல்லையேல் இருநூறு பிரதிகள் போயிருக்கும்.

**
அடிச்சதே பத்து😁
*
(மீள்2021. இதை எல்லா புத்தக விழாக்களுக்கும் போடலாம்!)

கனவுக்குள் கனவு – ஆபிபாய் விமர்சனம்

ஃபேஸ்புக்கில் முந்தாநாள் எழுதியது. பகிர்கிறேன். கனவிலாவது வாசியுங்கள். நன்றி. –  AB
**
 
’.. என்னுடைய ’கனவுக்குள் கனவு’ சூஃபிஸ நாவலை இதுவரை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், ஏன் அதுபற்றி முகநூலில் நீங்கள் எழுதவில்லை?’ – மெஸ்ஸெஞ்சரில் மிரட்டியிருந்தார் பிரியத்திற்குரிய நூருல் அமீன் ஃபைஜி.
 
படித்ததால்தான் என்று சொல்லமுடியவில்லை!
 
உயிர் நண்பரான மர்ஹூம் தாஜ் எழுதிய ‘தங்ஙல் அமீர்’ புத்தகம் உள்பட எதற்குமே விமர்சனம் நான் எழுதியதில்லை. எழுத்தாளனா நான்? அப்படியெல்லாம் எழுதவும் வராது. ஏன் அனுப்பிவைத்தார்? தெரியவில்லை. ‘சூப் விரும்பிகளின் புனைபெயர்தான் சூஃபி’ என்று ஏதோ ஒரு கதையில் எழுதியதாலா? இருக்கலாம். அதெல்லாம் என் கிறுக்கல்கள் அமீன். சூஃபிஸத்தைக் கரைத்து ஊற்றும் பேராசிரியர்கள் நாகூர் ரூமி ரமீஸ் பிலாலி , கவிஞர் ஹைமா ஹாத்துன், மன்னிக்கவும், நிஷா மன்சூர் போன்றவர்களே இந்த நூலைப் பாராட்டிய பிறகு நானும் எதற்கு?
 
இருந்தாலும் கொஞ்சம் சொல்ல முயற்சிக்கிறேன் தயவுசெய்து அமீன்பாய் கோபிக்கக் கூடாது. நாவல் நன்றாக வந்திருக்கிறது!
 
தமிழின் நல்ல நாவல்கள் எதையுமே படிக்காமல், ‘இது பின்நவீனத்துவ முறையில்’ வந்திருக்கிறதென்று ஒருவர் சொன்னபோது சிரிப்பாக இருந்தது. எந்த முறையோ, இந்த நாவல் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது எனக்கு – ’லா இலாஹா இல்லல்லாஹ்’வுக்கு விளக்கம் என்று உலூஹிய்யத், உஜூது, சிஃபாத், அஃஆல், ஆஸார் என்று விரியும் பக்கங்களையும், தக்வா – தவக்கல் – கியால் – தஜல்லி என்று விளக்கும் பக்கங்களையும் தவிர. ‘அஃப்யானே தாபிதா’வும் அப்படித்தான். ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருள்படும் முராக்கபாவையும் அகவிழிப்பு எனும் முஷாஹதாவும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம் (இதில் ஐம்பது பக்கங்கள் போய்விடும்!)
 
தெரியாமல் கேட்கிறேன், இது நாவலா அல்லது ’ஏகத்துவ இறைஞானம்’ இரண்டாம் பாகமா?
 
படிக்கிற முஸ்லிம்கள் பரவசப்படலாம். மற்றவர்கள் பயந்து ஓடிவிடுவார்களே…
 
இவர் நேரில் கண்ட ஹஜ்ரத்தை விட தான் காண விரும்பிய ஹஜ்ரத்தை காட்டியிருக்கிறார் என்பதும் என் அபிப்ராயம்.. William Chittic – Annemarie Schimmel – ஜே. கிருஷ்ணமூர்த்தி – விவேகானந்தர் ஓஷோ நூல்கள் , கிரேக்க ஞானி Epictetus சொல்வது , மேக்ஸ்வெல் மால்ட்ஸ்-ன் Self Image Pshychology , எமிலி கூ பிரபலப்படுத்திய Auto Suggestion பயிற்சி , குர்ஆனை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்த Toshihiko Izutsu எழுதிய Sufism and Taoism புத்தகம், Ontology எனும் கடலில் கால் வைத்தல் , பிரம்மத்தின் தரிசனம் பற்றி சுஜாதா எழுதிய வாசகங்கள் , இப்னு அரபி பற்றி பேசும் Claude Addas , Inception படம் பார்த்த Oludamini Ogunnaike, ‘இல்முல் கியால்’ பற்றி விளக்கும் Hendry Corbins, அல்லாமா இக்பாலின் கவிதை என்று சகலமும் தெரிந்த – பிறர் மனதில் உள்ளதை விளங்கிக் கொள்ளும் கஷ்ஃபுடைய – ஹஜ்ரத்…
 
துபாய் மால்-ல் உள்ள Kinokuniya புத்தகக் கடலை மொய்க்கும் அமீன்தான் இது – பார்ப்பதற்கு இவர் பாலகுமாரன் போல இல்லாவிட்டாலும்.
 
நூர் (ஒளி) பற்றி விளக்கும் பாடத்தில், பிரபஞ்சம் என்பதே அவன் பேரழகை வெளிப்படுத்தும் சினிமாதான் என்று அற்புதமாகச் சொல்கிறார்கள் ஹஜ்ரத்.
 
இடையிடையே மெய்ஞானியர்களின் மேன்மையான மேற்கோள்கள் , அவர்கள் சொல்லும் அருமையான கதைகள்… நிதானமாக வாசிக்க நமக்கு வருடங்கள் வேண்டும். ஆனால், இவ்வளவு தகவல்கள் ஒரு நாவலுக்குத் தேவையா?
 
சில விசயங்கள் தேவைதான். கழுத்துக்குக் கீழே டை போல – பெண்களின் சடை பின்னல் போல – அமீரக அரபிகள் அணியும் தர்பூஷுக்கு காரணம் இவர் சொல்லித்தான் தெரிந்தது . அந்தக் காலத்தில் அரபிகள் முத்துக்குளிப்புக்கு சென்றால் திரும்பிவர பல மாதங்கள் ஆகுமாம். அதற்காக, தர்பூஷை அத்தர் பாட்டிலில் நனைத்து இவர்களின் மனைவிமார்கள் கொடுப்பார்களாம். நினைப்பு வந்தால் மோந்துக்கோ. நான் ஏதோ இழுத்து நாலு சாத்து சாத்துவதற்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!
 
அரேபிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஜூஹா என்ற நகைச்சுவைப் பாத்திரம்தான் செர்வாண்டஸின் டான் குயிக்ஸோட்டுக்கு Inspiration என்பதும் அமீன் தரும் அபூர்வ தகவல்தான்.
 
என்னடா இது, வசதியானவர்களின் ஆன்மிகச் சிந்தனைகளை அறியவிரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நாவல் போல இருக்கிறதே.. பாவப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பற்றி இவர் லட்சியமே செய்யலையே என்று யோசித்துக்கொண்டே படிக்கும்போது ஹஜ்ரத்தின் முரீதுகள் (சீடர்கள்) ஜலாலும் பஷீரும் வந்தார்கள். வெறும் 600 திர்ஹம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கடும் வெயிலில் கட்டிடப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள். தங்குமிடத்தில் ஏசியும் கிடையாது. ஆனால் முகங்களில் வாட்டமில்லை. வேலை கஷ்டமா இருக்கா என்று கேட்டால் ஊரில் வேலை இல்லாமல் எவ்வளவோ பேர் இருக்காங்களே.. இந்த வேலையாச்சும் கொடுத்த இறைவனுக்கு நன்றி ஹஜ்ரத் என்று சொல்கிறார்கள். என்ன ஆச்சரியம், இப்போது சௌதியில் மாதம் 5000 ரியாலுக்கு மேல் சூப்பர்வைசர்களாக இருக்கிறார்கள். இதற்காகவே மூதேவிகள் நாமும் மூரிதுகளாக மாறலாம்!
 
”மாப்புள, ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஊர். மீதி நாளெல்லாம் துபாய்லன்னு வாழ்க்கை பத்து வருசமாப் போவுது. இப்பவே எனக்கு 40 ஆவுதுடா. இன்னும் பத்து இளமையான வருசம் கழிச்சி ஊருக்கு கொஞ்சம் காசோட போயி என்னாத்த கிழிக்கப் போறேன்னு தெரியலே’ என்று சொல்லும் ஆசிக்கும் இருக்கிறான். நம்ம ஆள். ஒன்னு தெரியுமா ஆசிக், நான் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக இருக்கிறேன். கையில் ஒரு பைசா கிடையாது. இருப்பதெல்லாம் அவமானங்களும் துயரங்களும்தான். அல்லாஹ்வின் நாட்டம் போலும். Accept the inevitable!
 
இப்படியே போனா எப்படிங்னி என்று என்மேல் அக்கறை கொண்ட நண்பர் நாகூர் ரூமி கவலையோடு ஊரில் கேட்டார். அப்டியே போயிடவேண்டியதுதான் என்றேன்.
 
‘ஏதேது செய்திடுவோ பாவி விதி ஏதேது செய்திடுமோ
ஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ’
– குணங்குடி மஸ்தான்
 
மனைவி ஷஹீதாவை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் ‘தேவையை’ தலவாணியில் தீர்த்துக்கொள்ளும் ஆஷிக், தேவை பற்றி ஹஜ்ரத் சொன்னதாக வரும் அழகிய பகுதி இது :
 
“எப்ப நம்ம தேவை நிறைவேறும் போது அல்லா தான் நெறைவேத்துறான்னு பாக்கலயோ,அப்ப நாம தேவையுடையவர்கள். அல்லாஹ் தேவையை நிறைவேத்துறவங்கிற உணர்வு அந்த நேரத்துல நம்மல வுட்டு போயிடுச்சு. எப்பவாச்சும், ஏதாச்சும் கிடைக்கும் போது அல்லாஹ் தந்தான்னு நன்றி சொல்றவங்களுக்கு நாகூர் ஹனிஃபா பாடுவாஹல்ல “தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்”னு, அப்புடி தேட மனிதருக்கு அல்லாட கருணைல கிடைக்கிதுல்ல, அந்தளவு பங்கு தான் கிடைக்கும். ஒவ்வொரு தேவையிலும் ஹக்கை முன்னோக்கி கேட்பவர்களுக்கு அல்லாஹ் தன் நேசர்கள் எனும் அவுலியாக்கு கொடுக்கிற மாதிரி விசேஷ கருணயோடு வழங்குவான். ‘ரிஜ்குன் கறீம்’னு சொல்ற சங்கை மிகுந்த வாழ்வாதாரங்கள கொடுத்து கண்ணியப் படுத்துவான். அவனுடைய வாழ்க்கையே ‘ஹயாத்தன் தய்யிபா’வான மணமிக்க வாழ்க்கையாகிடும்”னு சொல்லி, “இது ஷெய்கு எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அத நான் புடிச்சுகிட்டேன் அதுல வந்தது தான் இந்த செல்வச் செழிப்பான வாழ்க்கை. நீங்களும் இத புடிச்சுக்கங்க. இது தான் அடிப்படை. மத்த பாடம்லாம் அப்படி தேவைய நிறைவேத்துற ஹக்கை நீங்க உங்க கூட இருக்கிறவனா இன்னும் எல்லா சிருஷ்டிகள் கூடவும் இருக்கிறவனா விளங்கனுங்கிறதுக்காகத் தான், விதவிதமா சொல்றேன்”
 
தேவை பற்றி அன்பில் முஹம்மதுவின் கேள்வியோ இப்படி இருக்கிறது : எந்த யானை எல்கேஜியில் ஆரம்பித்து இருபது வருடங்கள் புத்தகங்களை தூக்கி சுமந்துச்சு? எந்த எறும்பு எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் கால்கடுக்க நிண்டுச்சு?
 
அதானே?
 
இப்னுல் அரபி (ரலி) அவர்களின் கவிதை வரிகளை இங்கே சேர்ப்போம்:
 
இன்னமுல் கௌனு கியாலுன்
ஃபஹூவ ஹக்குன் ஃபில் ஹகீக்கா
குல்லுமய் யஃப்ஹமு ஹாதா
ஹாஸ அஸ்ராறத் தரீக்கா
 
எதாவது புரிகிறதா? புத்தகம் வாங்கிப் படியுங்கள். அழகான தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு.
திடீரென்று, கிருத்துவப் பள்ளியில் ஒரு பையன் பாடும்
 
‘என் திரு யாழிசை இறைவா
உன் பண் தரு மருந்துண்டேன்
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
நீர் இசைத்திட வேண்டும் இசையரசே’
பாட்டு நாவலுக்கு பெருமை சேர்க்கிறது.
 
நியாஸின் சபராளி வாப்பாதான் நிஜமாகவே என்னைக் கலங்க வைத்தார். ’ஏன் புள்ளைய அடிச்சி வளர்க்க மாட்டேங்குறீங்க?’ என்று உம்மா கேட்கும்போது ‘நானே சீசனுக்கு சீசன் வரும் பொன்னாந்தட்டான் பறவை மாதிரி வருசத்துக்கு ஒரு தரம் ஒரு மாசம் வர்றேன். இதுல என்ன கண்டிக்கிறது? அவன் சிறப்பாக்கி வைன்னு அல்லாஹ்ட்ட அழுது கேக்குறேன்மா’ என்கிறார். நாலைந்து வருடங்களுக்கொரு முறை மலேயாவிலிருந்து வந்த என் சீதேவி வாப்பாவின் குரல்…
 
நாவலின் தலைப்பான ‘கனவுக்குள் கனவு’ மிகவும் பிடித்தது (யாரோ ஒருவன் விழித்திருக்கும்போது கண்ட கனவு நான் என்று கௌஸி ஷாஹ் (ரலி) சொன்ன மேற்கோளுடன் அத்தியாயம் நான்கு தொடங்குகிறது.). தலைப்பு பிடித்திருப்பதற்கு காரணம். என் மகன் நதீம். சோறு உண்ணும்போது கறியை தனியே சாப்பிடாமல் சோற்றின் உள்ளேயே வைத்து அமுக்கி சாப்பிடுவான். கேட்டால் ‘உணவுக்குள் உணவு வாப்பா’ என்பான். இதற்காகவே என் நினைவில் என்றும் இந்த நூல் இருக்கும்.
 
ஆதவனின் அங்கத எழுத்தை ரசிக்கும் அமீன், தன் ஹஜ்ரத் பற்றி ஒரு வரி கூட எதிர்மறையாக எழுதாதற்குக் காரணம் அவருடைய அளப்பரிய அன்பாகத்தான் இருக்க வேண்டும்.
 
ரொம்ப சீரியஸாக நான் எழுதியது போலத் தெரிகிறதே… நூருல் அமீனுக்கு சுலபமாகக் கைவசப்படும் (ஆனால், போட மாட்டார்) நகைச்சுவையோடு முடிக்கிறேன்.
 
பார்த்து… உங்க கூட்டாளி ஆஷிக் சொல்றதைக் கேட்டு தொழுகை, ஹஜ்ரத்துன்னு அலைஞ்சா அப்புறம் அல்லாஹ் பயித்தியமா மாறிடுவீங்க என்று எச்சரிக்கை விடுக்கிறாள் நஜீரின் மனைவி. மனைவிக்கு கொஞ்சமும் பயப்படாதவன். நஜீர், என்னைப் போல. அன்றிலிருந்து ஹஜ்ரத் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை! என்னப்பா, தொழுகையிலே உன்னோட ஹால் (மனநிலை) மாறிடுச்சா என்று கேட்கும் ஆஷிக்கிடம், ‘ஆமா மாப்புளே. அனுஷ்கா நெனப்பு இப்பல்லாம் ஒரு தடவை கூட வர்றதில்லே’ என்று பதில் சொல்கிறான். இங்கே அமீன் எழுதுகிறார் : அனுஷ்காவுக்குப் பதில் ஹன்ஷிகாவின் முகம்தான் மனதில் வருகிறது என்பதை அப்பாவி ஆஷிக்கிடம் சொல்ல நஜீருக்கு ஏனோ மனமில்லை!
 
அப்பாவி முஸ்லிம்களுக்கு என் குறிப்பு: அனுஷ்கா, ஹன்ஷிகா இருவரும் விண்வெளி வீராங்கனைகள்.
 
அன்பையும் இறையருள் பற்றிய நினைப்பையும் பெருக்க உதவும் நூல்கள் பல நூருல் அமீன் ஃபைஜி ஆக்கத்தில் மேலும் வெளிவரட்டுமாக.
 
பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.
ஆபிதீன், துபாய்
12.12.2020

அப்பாக்களின் நாட்கள் – போகன் சங்கர்

’போக புத்தகம்’ நூலில் இருந்து..

நன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்

*

நேற்று ஒரு நண்பர் திடீரென்று அழைத்து, தான் அடைந்த அவமானங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் வாழ்க்கை அவமானங்களின் கூடை. அவருடன் வாழ மறுத்துப்போன அவர் மனைவி சொன்னதாக அவர் ஒன்று சொன்னார். எந்த மனிதனையும் வீழ்த்திவிடும் ஒரு சொல். நான் ஏண்டா இன்னும் உயிரோட இருக்கேன்?’ என்றார். அவர் என்னை அழைத்துப் பேசினதற்கு ஒரு காரணம் உண்டு. அவரைப்போலவே நான் இன்னுமொரு அவமானங்கள் நிரம்பி வழியும் கூடை என்பதே அது. ஆனால் பெரிய அவமானங்கள் இல்லை . பிறர் சிறிய அவமானங்கள் என்று கருதக்கூடியவையே எனக்குள் ஆறாத ரணங்களாக இன்னும் இருக்கின்றன.

டிவியில் சினிமா பார்க்க என்னையும் தன்னுடன் கூட்டிப் போன நண்பனின் அக்காவிடம், இவனைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியலியே. இவனை இனிமேல் கூட்டிட்டு வராதே’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சொன்னது, கார்க் கதவை இப்படி சத்தமாச் சாத்தக்கூடாது என்று பணக்கார நண்பன் முகம் சுளித்தது, வேலை நிமித்தமாகப் போன இடத்தில் பேருந்து இல்லாமலாகிவிட ஆட்டோ வரவழைத்த பெண் உயரதிகாரி பின்னால் வேறு ஆளே இல்லாதபோதும் என்னை முன் சீட்டில் டிரைவரோடு உட்காரப் பணித்தது (நான் மறுத்து 6கிமீ நடந்தே ஊருக்கு வந்தேன்) போன்ற சிறியதுபோலத் தோற்றமளிக்கும் நுட்பமான அவமானங்கள்.

இந்த அவமானங்களைச் செய்கிறவர்களைக் கவனித்திருக்கிறேன். தெரிந்தே பலர் செய்வார்கள். ஒரு வகையில் அவை உன் இடம் இது’ என்று நமக்கு சுட்டிக்காட்டுவது. சிலர் இயல்பாகவே அவர்களையும் அறியாமல் தங்கள் வர்க்கத்தால், சாதியால், பதவியால் இந்த அவமானங்களை மற்றவருக்குச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள். இது மாதிரி சமயங்களிலெல்லாம் ஏனோ நான் என் அப்பாவைத் தான் நினைத்துக்கொள்வேன். அவர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதுபோல. இப்படிப் பூஞ்சையாய் வளர்த்து என் னைத் தெருவில் விட்டாயே என்பதுபோல. தந்தை மகற்காற்றும் உதவி அவையில் முந்தி இருக்கச் செய்வது அல்லவா?

நான் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் அப்பாவிடம் கொட்டுவேன். அப்போதெல்லாம் அப்பா மிகுந்த பதற்றமும் துயரமும் அடைந்து இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். அது நேரடியாக என் வாழ்வு மட்டுமல்ல, அவர் வாழ்வும் ஒரு தோல்விதான் என்று சுட்டிக் காட்டும் செயல் என்பது இப்போது புரிகிறது. பின்னர் அவர் மனச் சிதைவில் விழுந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று உணர்கிறேன். நான் மெல்ல மெல்ல என் தோல்விகளால் அவரை உடைத்தேன். தன் மகன் இந்நேரம் யார் முன்னால் குறுகி நிற்கிறானோ என்ற பதற்றத்திலேயே அவர் கடைசிக் காலங்களில் இருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் என் வீட்டுக்கு எதையோ விற்க வந்தார்கள். ஏதோ ஒரு வணிகப் படிப்பின் மாணவர்கள். அவர்களை களப் படிப்பு என்று கூறிப் பொருட்களை விற்க அனுப்புவது இங்கொரு வழக்கமாக உள்ளது. நான் மறுத்தேன். அவர்கள் விடாது வற்புறுத் திக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, வெளியே போங்கலே’ என்று கத்திவிட்டேன். அவர் கள் ஒருகணம் ஸ்தம்பித்து பிறகு, சாரி சார்’ என்று விலகிப் போனார்கள். மனைவி அருகில் வந்து என்னாச்சு’ என்றாள். உண்மையில் எனக்கே எனது எதிர்வினை அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் செய்தது சற்று அதிகம்தான். ஆனால் இளைஞர்கள். அவர்களுக்கு இவ்வளவு விற்றால்தான் மதிப் பெண் என்ற இலக்குகள் எல்லாம் உண்டு. எல்லாம் நான் அறிவேன். இருந்தாலும்….

நான் மிகுந்த குற்றமாய் உணர்ந்தேன் ஒரு கட்டத்தில் தாள முடியாது வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைத் தேடிப் போனேன். தபால் ஆபீஸ் அருகே உள்ள டீக்கடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். என்னைக் கண்டதும் சற்று மிரண்டார்கள். நான் வண்டியை நிறுத்தி, அந்தப் பொருளை வாங்கிக்கறேன் தம்பி’ என்றேன்.

இன்று காலை அவர்களில் ஒரு பையன் என்னைத் தேடி வந்தான். என்னைப் பார்த்ததும், பொருள் விக்க வரலை சார்’ என்றான் அவசரமாக . பிறகு தயங்கி, படிப்பு முடிஞ்சு போச்சு. ஊருக்குப் போறேன் சார். உங்ககிட்டே சொல்லிட்டுப் போணும்னு தோனுச்சு.’ நான் சற்று வியப்படைந்து அவனை உள்ளே வரச் சொன் னேன். ‘உன் ஊர் எங்கே?’

திருநெல்வேலிப் பக்கம் செய்துங்க நல்லூர் சார்.”

ஓ, எனக்கும் அங்கனக்குள்ளதான்.’

தெரியும் சார். பேச்சிலே கண்டுபிடிச்சேன். சற்று நேரம் மௌனம்.

அவன் திடீரென்று , அன்னிக்கு ஏன் சார் தேடி வந்தீங்க?’ என்றான்.

நான் சற்றுத் தடுமாறி, ‘உங்களை ரொம்பத் திட்டிட்டதுபோல தோனுச்சு.’

அவன் அதைக் கேட்காமல் கண்கள் தூரமாகி, எங்க அப்பா வும் இப்படித்தான் சார்’ என்றான். அவர் வாத்தியார். பள்ளிக் கூடத்திலே யாரையாவது அடிச்சிட்டா, ராத்திரிலாம் எழுந்து அழுதுகிட்டிருப்பாரு என்றவன், நீங்க பரவால்ல சார். இங்கே சில வீட்டுல நாயை ஏவி விட்டுடறாங்க.’

நான் மிகுந்த தர்ம சங்கடமாய் உணர்ந்தேன். மன்னிச்சுக்கோ தம்பி. ரொம்ப மோசமா நடந்துகிட்டேன் அன்னிக்கி.’

அவன், ‘ஐயோ சார்’ என்றான். பிறகு எழுந்து, வரேன் சார்.”

நான், இரு, உன்னியக் கொண்டுவிடறேன்’ என்று அவன் மறுக்க மறுக்க அவனை வண்டியில் ஏற்றி குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவிட்டேன். டீ சாப்பிடறியாடே.’

‘வேணாம் சார்.’

‘பரவால்ல சாப்பிடு.’

நாங்கள் டீ சாப்பிட்டோம். பஸ் வந்தது.

கூட்டமா இருக்கே. போயிடுவியா?” அவன், பரவால்லை சார்.’

ஊருக்குப் போக பைசா வச்சிருக்கியா?’

இருக்கு சார்.’

நான் தயங்கி, உங்க அப்பாவைக் கேட்டதாச் சொல்லு.’

அவன் புன்னகைத்து, அவரு செத்துப் போயிட்டாரு சார்’ என்றபடி பேருந்தில் தாவி ஏறிக்கொண்டான். ‘ஊருக்கு வந்தாக் கட்டாயம் வாங்க சார்.’

நான் ஏனோ மிகுந்த தளர்வாய் உணர்ந்தேன். சற்றுநேரம் அங் கேயே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன்.

வீடு வந்ததும் மனைவியிடம் அவசரமாக, கீர்த்தி எங்கே?’ என்றேன். அவள், ‘விளையாடப் போயிருக்கான்’ என்றாள். பின்பு நெருங்கி, என்ன, உன் மூத்த மகனை பஸ் ஏத்தி விட் டாச்சா?’ என்று கேட்டாள். நான், என்ன உளர்றே?’ அவள், ‘நான் உளறலை. நான் தான் உன் கண்ணைப் பார்த்தேனே. நீ கீர்த்தியை மட்டும் ஒருமாதிரி தலையை சாய்ச்சி, நாடியை உயர்த்திப் பார்ப்பே. அந்தப் பையன் பேசப் பேச, நீ அதேமாதிரி அவனைப் பார்த்தே’ என்றாள். நான் சற்றுநேரம் அசையாது அப்படியே நின்றிருந்தேன். பிறகு தலையை உலுக்கிக்கொண்டு, “ச்ச்ச்சே’ என்றேன். பிறகு கீர்த்தி நினைப்பும்தான். ஆனா அதைவிட அப்பாவோட நினைப்பு.

அவள் இன்னும் நெருங்கி, ஒன்னு தெரியுமா?” என்றாள். ‘என்ன?’ “நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். இன்னிக்கு அப்பாவோட திதி.’


*
Thanks to : Bogan Sankar

« Older entries