”If you don’t see yourself as a winner, then you cannot perform as a winner'” என்று எஸ்.எம்.எஸ் வந்தது ஜபருல்லாநானாவிடமிருந்து. நானா இப்பொ தமிழ்சீரியல் வசனங்களைக் குறிப்பெடுப்பதை விட்டுட்டாஹா போல! தேடினால் Ziglar சொன்னதாக கூகுள் சொல்கிறது. என்னதான் அது சொல்லாது? ’வெற்றி’ என்று டைப் செய்தால் 4,990,000 பக்கங்கள் தருகிறது; ’Success’ என்று டைப் செய்தாலோ ’1,120,000,000’ பக்கங்கள் தருகிறது. மொழி வேறுபடும்போது வெற்றியும் வேறுபடுகிறது போலும். இந்த வெற்றியைப் பற்றி நினைத்ததும் ‘வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை’ என்ற கண்ணதாசன் வரிகள் ஞாபகம் வந்து அதன் தொடர்ச்சியாக கண்ணதாசன் மகன்களில் ஒருவர் சொன்ன காமெடியும் ஞாபகத்திற்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு நண்பர் தளவாய் சுந்தரத்தின் வலைப்பதிவில் காந்தி கண்ணதாசன் தனது தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தபோது பார்த்திருந்தேன். காமெடி பண்ணியது அவரல்ல; அவருடைய தம்பிகளில் ஒருவர். பெயர் கமல். படித்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன். நீங்களும் ஏற்கனவே விழுந்திருக்கலாம். இருந்தாலும் மீண்டும் விழுவதில் தப்பே இல்லை. விழுந்தால் வெற்றி பெறலாம் என்பதால் சொல்கிறேன். அது ஒரு கின்னஸ் ரிகார்டாகப் போகும் இல்லையா?
காந்தி கண்ணதாசன் சொல்கிறார் இப்படி:
’சில நாட்களில், வேலை காரணமாக இரவு நேரமாகி அப்பா வீட்டுக்கு வர நேரும் பொழுது, வந்தவுடன், “எந்திரிங்கப்பா, வாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்று எல்லோரையும் எழுப்புவார். அப்புறம் இரவு ஒரு மணி வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வோம். ஒருநாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, “சீக்கிரம் நான் செத்துருவேன் போல் இருக்குப்பா” என்று அப்பா சொன்னார். அதற்கு கமல், “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்க கவலைப்படாதீங்கப்பா” என்றான். “ஏம்பா அப்படிச் சொல்றே” என்றார் அப்பா. கமல் சொன்னான்: “நல்லவங்கதான் அப்பா சீக்கிரம் சாவாங்க. அதனால உங்களுக்கு வாய்ப்பு குறைவு.” நாங்கள் எல்லோரும் பயங்கரமாகச் சிரித்துவிட்டோம். அப்பாவும் விழுந்து விழுந்து சிரித்தார்’.
கலகலப்பான அப்பா, கலகலப்பான பிள்ளைகள்.
அவருடைய பிள்ளைகளில் கவிதாயினி விஷாலி கண்ணதாசனை எனக்குப் பிடிக்கும். களையான முகமும் கம்பீரமான தமிழுமாக அசத்துவார். அழகாகப் பாடுவார். தொலைக்காட்சி சேனல்களில் ஆரம்பத்தில் அவர் நுழைந்தபோது அலட்டினார் என்றும் கல்யாணமானதும் அடக்கமாக மாறினார் என்றும் நண்பர்கள் சொல்வார்கள். அஸ்மா, கல்யாணமானால் ஆண்தானே அடங்கிப் போவான்? அதை விடுங்கள். சென்றவாரம் வெள்ளிக்கிழமை காலை எதேச்சையாக ராஜ் டி.வியைப் பார்த்தபோது ‘புதியதோர் கவிஞன் செய்வோம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். மறு ஒளிபரப்பாக இருக்கலாம்; தெரியவில்லை. நிகழ்ச்சி பிடித்திருந்தது. ‘பட்டாம்பூச்சிக்கு பல்வலி’ என்றெல்லாம் புதிய கவிஞர்கள் தன் புலமையைக் காட்டியபோது பல் நிஜமாகவே சுளுக்கிக் கொண்டது – எனக்கும் விஷாலிக்கும். ’யதார்த்தமா சொல்லனும்னா… தேறும்’ என்று சில கவிஞர்களை விஷாலி தேற்றினார்.
புதுக்கோட்டை ராமச்சந்திரன் என்பவர் பாடியதை மட்டும் விஷாலி மிகவும் ரசித்தார், என்னைப்போலவே. தேர்வும் செய்தார். அவசரமாக அப்போது ’லபக்’கென்று Zen-ல் பிடித்ததை இங்கே பதிவிடுகிறேன். ஜெனிஃபராக விஷாலி மாறியது வெற்றியா தோல்வியா என்று வெறியோடு வினவ வேண்டாம். இந்த டானிக்-ஐ குடியுங்கள். இப்போதெல்லாம், நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வது ரொம்ப அவசியம். அவ்வளவு கஷ்டம்!
***
நன்றி : விஷாலி கண்ணதாசன் , ராஜ் டி.வி