நாஞ்சில்நாடன், ஜெயமோகன் உரை @ துபாய் (2012)

உதவிக்கரம்

முகநூலில் ஆசிப்மீரான் பகிர்ந்தது, நன்றியுடன் இங்கேயும்…

அமீரகத்தின் துணை அதிபரும், துபாயின் ஆட்சியாளருமான மாட்சிமை மிகு ஷேக் முகம்மது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மலையாளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தி. தமிழ் சமூகத்தின் சார்பிலும் மாட்சிமை மிகு ஷேக் முகம்மது பின் ராஷீத் அல்‌ மக்தூம் அவர்களுக்கு நன்றி!!

*****

சகோதர சகோதரிகளே, இந்தியாவில் கேரள மாநிலம் கடினமான பிரளயத்துக்குள்ளாகியிருக்கிறது.இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரளயம் இது. நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து விட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருக்கின்றனர். ஈத் அல் அல்ஹாவை முன்னிட்டு இந்திய சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மறக்காதீர்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமீரகம் மற்றும் இந்திய சமூகங்கள் ஒன்றாக இயங்க வேண்டும். உடனடி உதவிகளை வழங்குவதற்காக நாங்கள் ஒரு கமிட்டியை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இந்த முயற்சியில் தாராளமாக நன்கொடை எல்லோரிடமும்‌ நாங்கள் வேண்டுகிறோம். அமீரகத்தின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் உடனிருந்தார்கள். பிரளயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்துணையாக இருக்கவும், உதவவும் நமக்கு தனிப்பட்ட உத்தரவாதமிருக்கிறது – குறிப்பாக ஈத் அல் அல்ஹாவுடைய புனிதமும் இறையருளும் நிறைந்த இந்த சந்தர்ப்பத்தில்..

அதிர்ச்சியில் இருக்கிறேன்…

தப்பாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது , தம்பி சென்ஷி ஆசைப்பட்டபடி சென்ற வியாழன் இரவு (12/4/2012)  மேடையில் ஏறினேன். ஒட்டாமல் ஒதுங்கி இருந்தவனை ஒருவழியாக – 22 வருடம் கழித்து கண்டுபிடித்து – உட்கார வைத்த அமீரகத் தமிழ் மன்றத்துக்கு என் அதிர்ச்சி உரித்தாகுக!

குத்தாட்டம் கோலாட்டம் இல்லாமல் துபாயில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். சகோதரர் ஆசிப்மீரானின் திறமையால் ’இலக்கியக்கூடல்’ மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆபிதீன் எதுவும் பேசாததுதான் நிகழ்ச்சி சிறக்க உண்மையான காரணம் என்று எல்லாரும் உண்மை பேசினார்கள். மணிமேகலை பற்றிய உரையில் தமிழின் மிக முக்கிய ஆளுமையான ப்ரேமை குறிப்பிட்டுப் பேசிய நண்பர் ஜெயமோகன் கவர்ந்தார். அழுத்தமாகப் பேசுகிறார் மனுசன்.  மூத்த அண்ணன் போல என்னிடம் பேசிய நாஞ்சில்நாடன் அன்பும் நெகிழ வைத்தது. அவரிடம் கொடுப்பதற்காக வாங்கிய உஸ்தாத் ரஷீத்கானின் லேட்டஸ்ட் சி.டியை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்திருந்தேன்! 

நேரமாகிவிட்ட காரணத்தால் டிரெயின்/ பஸ் பிடித்து என் இடத்திற்கு போக எத்தனித்தேன், (‘இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்காம எலக்கியவாதியாவே இக்கீறீங்களே’ என்று முபாரக் வெடைத்தது இங்கே ஞாபகம் வருகிறது). ஹமீதுஜாஃபர் நானாவும் நண்பர் மஜீதும்  ஊர் போயிருப்பதால் எனக்கு கொஞ்சம் சிரமம். எங்கே நின்று கூப்பிட்டாலும் உடனே வரும் சாதிக்கின் இப்போதைய டூட்டி டைமும் ஒத்துவராது. கம்பெனி டிரைவர்களை கண்டநேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்வதோ கட்டோடு எனக்குப் பிடிக்காது. நான்தான் நல்லவனாக ரொம்பநாளாக நடித்துக் கொண்டிருக்கிறேனே..

சென்ஷி , ‘நான் அரேஞ்ச் பண்றேன்னே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க; நாளைக்கே பொய்டலாம்’ என்றார்!

உலக சினிமாக்களை எனக்கு அறிமுகப்படுத்தும் உத்தமர் (1000 டிவிடிக்களை காப்பி பண்ணி தருவதாக சொல்லியிருப்பதால் இந்த அடைமொழி ) அய்யனார் தன் காரில் உடனே கொண்டுபோய் விடுவதாகச் சொய்யனார்.

’ஒரு அழுத்துல பொய்டலாம் அண்ணே’

‘எங்கே, மேலேயா? அதெல்லாம் வாணாம்’

அழுத்தினால் போகாமலா இருக்கும்?! அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் அல்கூஸ் போய்விடலாம் – காரில். ஆனால் , குடும்பஸ்தர்களை நான் சிரமப்படுத்துவதில்லை (அதற்குத்தான் மனைவி இருக்கிறார்களே!).  வந்ததுபோலவே போய்க்கொள்கிறேன் என்று மறுத்தேன். கஷ்டப்படும் சுதந்திரத்தைக்கூட எனக்குத் தரமாட்டீர்களா? என்று வேடிக்கையாவும் சொன்னேன். கராமா மெட்ரோ வரையாவது விடுகிறேன் என்று அன்போடு உதவினார் – காரைத் தள்ளிக்கொண்டே.

பத்து ரோல்ஸ்ராய்ஸுக்கு இணையானது துபாய் மெட்ரோ. பயமெதற்கு?

மெட்ரோ /  பஸ் என்று என் வழியில் இருப்பிடம் போக ஒன்றரை மணி நேரம் ஆகும். அதனால் என்ன, இசை கேட்கலாம். அபுதாபி கிளாஸிக் எஃப்.எம் (87.90 MHz) 24 மணிநேரமும் இருக்கிறது. சூர்யானா மஹ்மூத் வருவாள் சுந்தரக் குரலோடு. இடம் நெருங்க நள்ளிரவு ஆகிவிட்டது. என்ன இழவு யோசனையோ , F25 feeder பஸ்ஸை விட்டு அல் அஹ்லி டிரைவிங் ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்கி – அடுத்தநாள் சமைப்பதற்கு சாமான்கள் வேண்டுமே என்ற நினைவு வர திரும்பவும் அருகே இருந்த அல்கூஸ் மால் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு, பசி வயிற்றைக் கிள்ளியதால் பக்கத்து ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டுவிட்டு (இலக்கியக்கூடல் முடிந்தபிறகு அருமையான ஓசி டிஃபன் இருந்தது. பதிவர்கள் வந்திருந்ததால் நமக்கு ஒன்றும் கிடைக்காது என்பதாலும் மேலும் தாமதமாகிவிடும் என்றும் சாப்பிடவில்லை.) தனியாக நடக்க ஆரம்பித்தேன். காடு நாவலில் எனக்குப் பிடித்த ஓரிரு பக்கத்தை நாளை பதிவிடலாம் என்று யோசனை. இல்லை, வெள்ளிக்கிழமை (13/4/2012) என் சீதேவி வாப்பாவின் நினைவு நாள். என் பிள்ளைகளோடு அவர்கள் இருக்கும் அபூர்வமான ஒரே ஒரு புகைப்படம் இருக்கிறது. அதை முகநூலில் பதிவிடவேண்டும். அதுதான் முக்கியம். வாப்பா ஹயாத்தோடு (உயிரோடு) இருந்திருந்தால் இன்று  நடந்த விசயத்திற்கு மகிழ்ந்திருப்பார்கள். பிரபல எழுத்தாளர்களோடு சேர்ந்து உட்காரும் அளவுக்கு மகன் வளர்ந்து விட்டானே… நம் பிள்ளை மக்கு இல்லை.

எமிரேட்ஸ் கிளாஸை கடக்கும்போது ஒரு போலீஸ் வேன் ரோந்து போனது. பாதுகாப்புக்கு துபாய்தான். ஆள் நடமாட்டமில்லை. இன்னும் ஒரு சந்து திரும்பினால் உம்-அல்-ஸுகீம் ரோடுக்கு வந்து என் இருப்பிடத்திற்கு போய்விடலாம். சந்திலிருந்த RGB அலுவலகம் அருகே ஓரமாக வந்தபோது மடேரென்று என் பின் தலையிலும் சூத்தாமட்டையிலும் (பேண்ட்டில்) என்னவோ வேகமாக அடிக்கப்பட்டது. மரக்கிளை ஏதும் விழுந்ததோ? அதிர்ச்சியில் கிறுகிறுவென்று மயக்கம் வந்தாற்போல இருந்தது. அப்படியே உட்கார்ந்து விட்டேன்.

நாயையோ பன்றியையோ அடிப்பதுபோல் இன்னும் நாலைந்து வருடத்தில் ரிடையராகப் போகிற கிழவன் ஆபிதீன் மேல் அடித்துவிட்டு ’ஹிந்தி ஹிந்தி..’ என்று கேலிச்சிரிப்போடு கத்தியபடி கருப்புநிற வேனில் பறந்தார்கள் மண்ணின் மைந்தர்கள். அல்-பர்ஷா ஏரியா பயல்களாக இருக்க வேண்டும். கார் நம்பரைக் கவனிக்க இயலவில்லை.  கவனித்தால் மட்டும் – அல் அமீன் சர்வீஸை கூப்பிட்டு – புடுங்கவா முடியும்? அரபி முதலாளியை ’அந்த’நேரத்தில் கூப்பிடுவதும் ஆபத்து.

ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று தடவினால் கொழகொழவென்று… சட்டை பேண்ட் எல்லாம் நனைந்து தொடையில் ஒட்ட ஆரம்பித்துவிட்டது. யாராவது பார்த்தால் நான் கழிந்திருப்பதாகத்தான் சொல்வார்கள். அல்லது வழக்கம்போலவே இருப்பதாகச் சொல்வார்கள்.

அவமானப்படும் சுதந்திரத்தை ஆபிதீனுக்கு மேலும் அளித்த அரபி கூழ் முட்டைகளே , அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லவேளையாக , முணேமுக்கா திர்ஹம் மதிப்புள்ள என் மொபைலையும், பத்தேகால் திர்ஹம் உள்ள பர்ஸையும் விட்டு விட்டீர்கள். சுக்ரன்.

சவுதியில் இருந்தபோது பலமுறை பட்டிருக்கிறேன். துபாயில் இதுதான் முதன்முறை. ’உள்ளூர்லேயே பொழைச்சி புள்ளகுட்டியோட இருக்கனும் வாப்பா.’ என்று என் வாப்பா அடிக்கடி சொல்வார்கள்.  அவர்களை உதாசீனப்படுத்தி அரபுநாடு வந்ததற்கு எனக்கு இன்னும் வேண்டும்.

மனம் கசங்கும்போதெல்லாம் யூசுப்தாதா பற்றி சலீம்மாமா எழுதிய பாடல் வரிகளை எனக்குள் சொல்லிக்கொள்வது வழக்கம்.

‘சேய் எந்தன் கண்களில் நீரோடலாமா..
கண் பாரும் கண் பாரும்…’

மேலும் கசங்கியதுதான் மிச்சம். இரண்டுநாளாக மனதே சரியில்லை. அலுவலகம் போய்வரும்போது போகிற வருகிற கார்களின் எண்களையெல்லாம் தன்னிச்சையாக பரபரவென்று மனம் பதிவு செய்கிறது. ‘கண்கள் முழுக்க எண்கள் ; எண்கள் ’ என்பார்கள் கவிஞர்கள். (தாஜைச் சொல்லவில்லை; கவிஞர்களைச் சொன்னேன்!).

முந்தாநாள் , மனைவி அஸ்மாவிடம் லேசாக விசயத்தைச் சொன்னபோது,  ‘பைத்தியம் புடிச்சிக்கிது போலக்கிது. முட்டையாலயா அடிப்பானுவ , ஹராமிளுவ?’ என்று திட்டினாள். விட்டால் பாதாள சாக்கடைக்காக ஊரில் தோண்டப்பட்டிருக்கும் கல், மண்ணையெல்லாம் அரபிகளுக்கு அனுப்பிவிடுவாள் போலிருக்கிறதே! நொந்தபடி நேற்று இரவு  ஜபருல்லா நானாவை தொடர்புகொண்டு என் மனப்புழுக்கத்தைச் சொன்னேன். குரு போன்றவர் அவர். ஊஹூம், குருவேதான்.

’ம், எழுதிக்கும்ங்கனி…

நல்லவர் கெட்டவர் என இல்லை.
எல்லோரும் ஒண்ணேதான்.
இறைவனும்…!

எப்படி? ஷைத்தான படைச்சதனால அல்லாவும் கெட்டவனாயிட்டான், ஹா..ஹா..’ என்றார்.

இந்த அதிர்ச்சிதான் இன்னும் நீங்கவில்லை!

***

நன்றி : ஆசிப்மீரான், சென்ஷி, அமீரகத் தமிழ் மன்றம், இஜட். ஜபருல்லா

***

பார்க்க : ஜெமோ & நாஞ்சில்நாடன் சந்திப்பு புகைப்படங்கள் (சகோதரர் குசும்பன் எடுத்தது)

கப்பலுக்குப் போன கன்றாவி மச்சான்

எழுபது வயது இளம் தோழி , ’எருமையாக இருந்தது போதும்; எழுந்திரு’ என்று மெஸ்ஸேஜ் அனுப்பினாள். உடனே எனக்கு எழுந்து விட்டது – எண்ணம்!

அட, இத்தனை வாசகர்களா எனக்கு ! ’எப்ப போடுவீங்க , எப்ப போடுவீங்க?’ என்று அஸ்மா கேட்பதுபோலல்லவா ஆவலுடன் கேட்கிறார்கள்! தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவள் ஃபோனைச் சொல்கிறாள். இவர்களோ பதிவைச் சொல்கிறார்கள். அதுதான் கொஞ்சநாள் அருமையான எருமைகளாக இருப்போம் என்றிருந்தேனே… அதற்குள் என்ன அவசரம்?  பத்துநாள் கூட பொறுக்க முடியாதா? எத்தனை மெயில்கள்! கவனித்து நோக்கினால் அத்தனையும் என் யாஹூ மெயிலிலிருந்து நானே அனுப்பியதுஜீ!

வேடிக்கை இருக்கட்டும், இந்தப் பதிவு நண்பன் நாகூர் ரூமியின் நாவல் குறித்த பதிவல்ல. ஆனாலும் அதில் விமர்சிக்கப்படும் மச்சான்களைப் பற்றிய பதிவு. அந்த மச்சான்களில் நானும் ஒருவனாதலால் ’புலி வாலை’ப் பிடிக்கிறேன்.

’எத புடிக்கனுமோ அத நல்லா அழுத்திப் புடிக்கனும் மச்சான்’ என்பாள் அஸ்மா. (இந்த வரி எல்லோருக்கும் பிடிக்கும்!).

நாம் பிடித்த புலிவால்’ என்று ஒரு உரைவீச்சு சென்றவருடம் இணையத்தில் உலா வந்தது. இப்போதும் வருகிறது. ’சஃபர்’ வாழ்க்கையின் (இதன் பெயர் வாழ்க்கையா?) கொடுமையைச் சொல்லும் வரிகள். அலாவுதீன் என்ற சகோதரர் எழுதியது. அதற்கு வந்திருந்த மறுமொழிகள் கண்ணீரை வரவழைத்தன. ’என்ன செய்ய முடியும்?’ என்று புலம்பித் தவித்திருந்தார்கள் இஸ்லாமியர்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வழிதான். நன்றாகப் படித்து சொந்த ஊரில் வேலையில் அமர்வது. அதை எப்படிச் செய்வது என்று கேட்காதீர்கள். தெரிந்திருந்தால் நான் ஏன் துபாய்க்கு வந்து துப்பு கெட்டு அலைகிறேன்? என்னால் இப்போது முடிவது சோகத்தை அதிகமாக்குவதே. அழுவதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்ய தம்பி இஸ்மாயில் பதிவிட்ட ’சஃபர் சலாமத்’ஐ – இனிமையான , நிம்மதியான பயணம் என்று அர்த்தம் – பார்த்து விடுங்கள். அதைப் பார்த்துவிட்டு சிரிப்பவர்கள் 4000 சிங்கப்பூர் வெள்ளி இஸ்மாயில் அக்கவுண்ட்டில் கட்டணுமாம். ’என் வெள்ளி எனக்கு; உங்கள் வெள்ளி உங்களுக்கு’ என்று அமைதியாகச் சொல்பவர் இப்படி அழிச்சாட்டியம் செய்யலாமா? ஆனாலும் , இருந்த நாலு திர்ஹத்தை இழக்காமல் அதைப் பார்த்தேன்.

எதையும் இழக்காமல் நீங்களும் பார்க்கலாம்.

சலீம்மாமா இயற்றி மர்ஹூம் S.S, வாஹித் பாடிய பாடலை (1982-ம் வருடம்?) இப்போது பதிவிலிடுகிறேன். படித்துவிட்டு அவசியம் கேட்டும் பாருங்கள். ’சீசன்’ அசனா மரைக்கார் கொடுத்த கேஸ்ஸட். பூத்துப் போயிருந்தது. வெயிலில் காயவைத்து எடுத்தேன் (ஜபருல்லா நானாவின் டெக்னிக்). ஆதலால் நன்றாகவே அலசும். ஆனாலும் கேட்கலாம். கேட்க வேண்டும்.

மர்ஹூம் காயல் ஷேக் முஹம்மது பாடிய ‘கப்பலுக்குப் போன மச்சான்’ஐ எழுதிய கவிஞர் நாகூர் சலீம்தான் இந்தப் பாடலையும் இயற்றினார்கள். அந்த ’கப்பலுக்குப் போன மச்சான்’ பாடலில் இஸ்லாமிய பெண்ணும் ஆணும் புலம்புவதை ஷேக்முஹம்மது ஒருவரே கச்சேரிகளில் பாடுவார் – பயங்கரமான தாபத்தோடு. பாடலின் முடிவில் ‘உன் இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்.’ என்று வரும். ’நெனச்ச்ச’வில் ஏக அழுத்தம் கொடுத்து ,’நான் தருவேன்.. நான் தருவேன்.. நான் தருவேன்’ என்று ஆவேசமாக உருகுவார் மனுசன். கேட்கும் சில துப்பட்டிகள் கேளாமலே நனையும்!

பாடியவரும், இயற்றியவரும் ’கப்ப சபராளிகள்’ அல்ல என்பதுதான் இதில் தமாஷ். இருந்தாலும் கற்பனையில் எழுதுவதும் படிப்பதும் (பாடுவதும் என்று சொல்லக்கூடாது!) நன்றாகத்தான் இருக்கிறது. பாடகர் வாஹிதும் அரபுநாட்டு வாழ்க்கை வாழ்ந்தவரல்ல என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும் சூழல் புரியும். ’வெற்றிக்கொடி கட்டு’ வடிவேலு மாதிரி – வெட்டி பந்தா விடும் ஆட்கள் எந்த ஊரில்தான் இல்லை? அந்த பந்தாக்களை பார்த்து மயங்கி இங்கே வந்து பந்தாக சுருண்டு விடுகிறார்கள் பத்தாவது கூட படிக்காத நம்ம பையன்கள். எங்கே போனாலும் அடிமட்ட வேலைகளுக்கு இவர்கள்தான். சபராளி குடும்பத்தின் குணாம்சத்தை கணக்கிலெடுக்காமல் பையன்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தமில்லைதான். புரிகிறது, புரிகிறது.

துபாய் நண்பரின் அறையில் ஒரு பையன். படுத்திருப்பவன் திடீரென்று எழுந்து உட்காருவான் படுக்கையில். ‘எந்த மசுராண்டி இந்த லைஃபை கண்டுபுடிச்சது?’ என்று உரக்க ஒரு கேள்வி கேட்பான் சுவரைப் பார்த்து. அடுத்தநொடியில் குப்புறப்படுத்து விடுவான். அவனால் முடிந்தது! சமயத்தில் , ’புது சட்டையும் செண்ட்டும் காட்டி கூட்டாளி ஏமாத்திட்டானே’ என்று புலம்புவான். ’கப்பலுக்கு போன மச்சான்’ பாட்டை ஒருநாள் கேட்டான். ‘என்னா நடிப்பு! இவளுங்க கொடுத்த தொல்லை தாங்கமுடியாமதான ஓடிவந்தேன்’ என்றான் மல்லாக்க படுத்துக்கொண்டு. எச்சிலும் துப்பியிருக்கக்கூடும்.

இளைய ராஜாவின்  ரகளையான பாட்டை இங்கே சொல்லவேண்டும். அவர் துபாய் வந்தபோது எல்லா பாட்டையும் விட அந்த ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா’ பாட்டுக்குத்தான் ஏக ஆரவாரம்! ஆயிரக்கணக்கான அழுகைகளை ஒன்றாகக் கேட்டால் ஆரவாரமாகத்தான் தெரியும். ஆண்டவனே  இதென்ன கொடுமை…? ஷார்ஜா , ஏன் , அமீரகமே அமிழ்கிறதே கண்ணீரில்…

’படித்தால் உயரலாம் என்கிறீர்களே.. படித்துவிட்டா ஏழுநட்சத்திர புர்ஜ்-அல்-அராப் ஹோட்டலில் ’எளிமையாக’த் தங்கினார் இளையராஜா?’ என்று சிலர் கேட்கலாம். இசையை உருப்படியாகக் கற்றாரே ராஜாதிராஜா. என்னைப்போல் எல்லாவற்றிலும் வாயைவைத்து ( ’அதயெல்லாம் எழுதாதீங்க மச்சான்!’ – அஸ்மா) ஏமாந்து போகவில்லையே.. அப்புறம் அந்த சொர்க்கம்.. ஏயார் ரஹ்மானுக்கு இசைக்கலைஞர்கள் இருக்கும் மைலாப்பூர் சொர்க்கமென்றால் கவாலி தர்பார்கள் நடத்தும் காதரொலி பாவாவின் நாகூர்தான் எனக்கு  சொர்க்கம்.  என்ன, மினாரா தாக்கில் இப்போதெல்லாம் கஞ்சா சரியாகக் கிடைப்பதில்லை! தவிர , கவிஞர்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை. இன்னொரு விஷயம் : ஊர் போகும்போது கண்டிப்பாக சீர்காழி வழியாகப் போகவே கூடாது! அங்கே ஒரு பேய் உட்கார்ந்துகொண்டு ‘ஊருக்கு வந்தா நல்லா சம்பாதிக்கலாம்யா’ என்று தூபம் போடுகிறது. என்ன, கடனையா? இந்தாள் பேச்சைக் கேட்டு ’சின்ன ஷைத்தான்’ சாதிக் முந்தா நாள் ’ஒரேயடியாக’ ஊர் போயிற்று. இன்று காலை வந்துவிட்டது!

ஆடு ஜீவிதமே நித்ய ஜீவிதம்!

’ஊர்ல புள்ளைங்களோட இக்கிம்போது அல்லாஹூத்தஆலா வந்தா கூட ‘ஒய்.. பொய்ட்டு அப்புறம் வாங்கனி’ண்டு வெரட்டிப்புடுவேன்’ என்று வெறியுடன் சொல்லியிருக்கிறேன் ’வெள்ளி’ இஸ்மாயிலிடம். சிரித்தார் அவர். ’அவ்வளவு புரியமா நானா?’. ‘பின்னால சூத்தாமட்டைல ஓங்கி உதைப்பாங்கதான். இந்தாலும் அனீகா, நதீம்னா உசுரு எனக்கு’ ‘எனக்கும்தான் நானா’

மலேசியா சபராளியான என் சீதேவிவாப்பாவும் எவ்வளவோ முயற்சித்தார்கள் – தன் பிள்ளைகளுடன் ஊரோடு இருக்க. தன் பிள்ளைகள் ஊரோடு இருக்க.

உசுரோடு இருக்க முடியவில்லை. ஊரும் சொந்தங்களும் இருக்க விடவில்லை.

இப்போது தரும் ’அரபிக்கடல்’ பாடலில் , நம்ம கன்றாவி மச்சான் அக்கரையில் இருந்துகொண்டு புலம்புகிறார். முப்பது வருடங்களுக்கும் முன்பிருந்த முக்கியமான புலப்பம். வந்து வெந்த எல்லா மச்சான்களுக்கும் அதே புலப்பம்தான் – இப்போதும். பாடலைக் கேட்கும்போது சவூதி என்று தெரிகிறது ’இது கருணைநபி பிறந்த தேசம் பைங்கிளியாளே..’ என்றால் சவுதிதானே? ஒரு சந்தேகம்…சவூதி அரபுநாடா? மண்ணின் மைந்தர்களுக்கு சலுகைகளின் சர்க்கரை மழையையும் பிறநாட்டவர்களுக்கு நெருப்பு மழையையும் அளிக்கும் சவுதி. ’இந்நேரத்தில்’ வந்த ’சர்க்கரை மழை’ பதிவில் ’நமது நாட்டவர்கள் இந்த அரேபியர்களால் படுகின்ற கஷ்டங்களை கேட்டால் இந்த சவுதி மேல் வெறுப்புதான் வரும். மறுமையில் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.’ என்று சகோதரர் ‘Muslim’ கொதிப்புடன் எழுதிய மறுமொழியை மாமன்னர் பார்த்தால் அவ்வளவுதான்! அந்த ’Muslim’க்கு , ’யாரையும் கஷ்டப்பட்டு இருக்க சொல்லலே. முடிஞ்சா இருங்க. இல்லேன்னா அவரவர் நாட்டுக்கு போக வேண்டியதுதான். மொதல்ல நம்ம நாடு நமக்கு என்னா செஞ்சதுன்னு பாக்கணும். அப்பறம்.. மத்த நாட்ட பத்தி பேசலாம்’ என்று ’பாதுஷா’ பதில் சொல்லியிருந்தார் படபடப்பாக.

தம்பி பாதுஷா, இந்த பதிவிற்கு ’நொந்து நூடுல்ஸா போனவங்களுக்கு’ என்று தலைப்பிடச் சொன்னார் அசனா மரைக்கார். ஆடுமாடுகள் போல நடத்தப்படுபவர்களின் அவலங்கள் புரிந்த மரைக்கார். சேவல்பண்ணைகளின் சிந்தனைச் செம்மல்களைப் பார்த்து தினமும் அழும் மரைக்கார்.

ஹூம்… ஆயிரத்தில் ஒருவருக்கு அரபுநாட்டு மாலை கிட்டலாம். மற்றவர்களுக்கு – என்னையும் சேர்த்து – எதிரே தெரிவதெல்லாம் புழுதி மழைதான்.

’நத்திங் ஈஸ் இம்பாஸிபிள், நக்கிங் ஈஸ் பாஸிபிள்’ என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடாதீர்கள் உடனே. ஃபேமிலி கொண்டுவரும் வசதி இப்போது எனக்கு இருக்கிறது சாரே… ஃபேமிலி நிம்மதியாக இருக்கவேண்டுமென்றுதான் கொண்டுவரவில்லை! மனம் தாளாமல் மற்றவர்களுக்காக பதிவிடுகிறேன். புரியுதா? ஆமாம், அதென்ன நத்திங் ஈஸ் இம்பாஸிபிள்? நான் தி. ஜானகிராமன் ரசிகன். மாற்ற முடியுமா உங்களால்? என்னதான் கடவுளைக் கிண்டல் செய்தாலும் (கடவுள்தானே கிண்டல் செய்ய வைக்கிறார்!) அடிப்படையில் நான் ஆன்மீகவாதி. மாற்றிவிட முடியுமா? ஆயில் இருக்கும்வரை அரபுநாட்டு ராஜாக்கள் அமெரிக்க கூஜாக்களால் ஆளப்படுவார்கள். மாற்ற முடியுமா? எப்படித்தான் எச்சரித்தாலும் கடைசிவரை தாஜ் கவிதை எழுதுவார். திருத்த இயலுமா?!

அட்வைஸ்..! இணையமெங்கும் நிறைந்திருக்கும் ’உதயமூர்த்தி சுவாமிகள்’ பற்றி ஹஜ்ரத் சொன்ன தமாஷ் சொல்கிறேன். ’கிச்சு கிச்சு’ அல்ல. அதெல்லாம் எனக்கு வராது ஓய், செம்ம வெடை. அதாவது கிண்டல்.

படம் பார்க்க பட்டணம் போன ஹஜ்ரத்தின் சீடர்களிடம் உழைப்பின் பெருமை, நேரத்தின் மதிப்பு, கல்வியின் அவசியம், இறைநம்பிக்கை என்று நீண்டநேரம் அறுத்தெடுத்திருக்கிறார் ஒரு திடீர் பணக்காரர். நொந்துபோய் திரும்பிய சீடர்களிடம் ஹஜ்ரத் சிரித்துக்கொண்டே சொன்னார்களாம் : ‘ஒண்ணுமில்லே.. அவர் ஜோப்புல ரெண்டு ரூவா இந்திக்கிது. அது அவர பேசவச்சிக்கிது!’

வெறும் ரெண்டு ரூவாக்கே…! எச்சரிக்கை : ’பெரிய ஷைத்தான்’ மஜீத் எழுதிய ஹஜ்ரத் ஜோக் விரைவில் வரும். இங்கே அல்ல; அவர் தளத்தில். அடுத்தவர்களின் பதிவுபோட்டு நான் அடிவாங்கியது போதும்ப்பா!

பெரிய நாவலாக எழுத வேண்டிய விஷயம் இந்த ’சஃபர்’. வெளிநாட்டில் குடும்பத்தோடு ’வாழ்பவர்கள்’ பற்றியும் விரிவாக எழுத வேண்டும். மனைவியை ஆறுமாதத்திற்கு மேல் பிரிந்திருப்பது ஹராம் என்று சொல்லும் அழகான மதத்தின் சட்டங்களை அப்படியே கடைப்பிடிப்பதாகச் சொல்லிக் கொல்லும் அரபுநாடுகளின் நிஜ முகத்தையும் காட்ட வேண்டும் – உயிரோடு விட்டால். எழுதினால் , ‘ஆமா.. எப்பப்பாரு இவருக்கு ஒரே சப்ஜெக்ட்தான்’ என்று அலுத்துக்கொள்வார் ஆம்பூர் ஹஜ்ரத். எனவே ’சஃபர்’ பற்றி அண்ணன் சடையன் சாபு எழுதிய வரிகளைச் சொல்லி முடிக்கிறேன். ‘பயணங்கள் முடிவதில்லை’ கவிதையின் கடைசி பாரா மட்டும்.

’பயணம் முடியப்போகிறதென
நினைத்தேன்
வீடு… வாசல்..
வயல்.. வரப்பு
நிலம்.. நீச்சு
மாடு.. கண்ணு
தோப்பு.. தொரவு
கார்.. பங்களா..
துணி.. மணி
நகை.. நட்டு
என என்
பயணம் தொடர்கிறது
பயணங்கள் முடிவதில்லை’

இதன் பெயர் கவிதையா? அது வேறு விவாதம். இங்கே வேண்டாம். அமீரக ஆண்டுவிழா மலரில் (2002) இடம்பெற்ற இந்த வரிகளை எடுத்துக்கொடுத்தது அசனா மரைக்கார்தான்.

அசனா…, உயர்படிப்பு படித்து, அமீரகத்திலுள்ள பெரிய கம்பெனியில் உயர்பதவி வகித்த நம் சாபத்தாவுக்கே இத்தனை கவலையென்றால் சாதாரணர்கள் நாம் எந்த மூலை?

அதிர்ஷ்டமோ அருகதையோ, சுகபோகமாக வாழும் இந்திய – பாகிஸ்தானி சோதரர்கள் (மொஹாலியில் நேற்று சகோதரர்களானோம் – 29 கோல்கள் வித்தியாசத்தில். மறந்து விட்டீர்களா? ) பல நாடுகளிலும் உண்டுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் எத்தனை விழுக்காடு? தவிர, வெற்றி-தோல்வி பற்றிய என் அபிப்ராயமே வேறு. பிறகு எழுதுகிறேன். அவசியம் உடனே தெரியவேண்டுமெனில் ’பிராஞ்சியேட்டன்’  (Pranchiyettan & the Saint) சினிமாவில் புனித ஃபிரான்சிஸ் கடைசியில் கூறும் அந்த அட்வைஸை கவனமாகக் கேட்கவும். அதுதான் என் அட்வைஸ்!

அரிசி வியாபாரியான பிரான்ஸிஸ்-ஐ (மம்முட்டி) ’அரிப்பிராஞ்சி’ என்று கிண்டலாக அழைக்கிறது ஊர். அவமானமாக இருக்கிறது அவருக்கு. இந்த பட்டப்பெயரை எப்படியாவது மாற்றனும் என்று நகைக்கடை வைத்தால் ’நகைக்கடை அரிப்பிராஞ்சி’ என்றாகிறார்! பத்மஸ்ரீ பட்டம் வாங்கினாலாவது மாறாதா என்று பணத்தோடு (பின்னே, சும்மாவா கிடைக்கும்?) முயற்சித்து அதிலும் ஏமாறுகிறார். தன்னுடைய புலப்பங்களை தனக்கு காட்சி தரும் புனித ஃபிரான்சிஸிடம் சொல்வதுதான் கதை. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த படம். எங்கிருந்து சுட்டார்களோ நான் அறியேன், ஆனால் கடைசி ஐந்து நிமிடங்கள் தெய்வம் விரும்பும் மனிதனை (தெய்வத்தை விரும்பும் மனிதனையல்ல) அழகாக விளக்கி விடுகிறது. தங்கத்தால் ஆலயம் கட்டுபவனல்ல , சக மனிதனின் துன்பத்தைப் போக்க முயற்சிப்பவன்தான் சொர்க்கத்திற்குப் போகும் தகுதியுடையவன் என்று சொல்கிறது. வெற்றி பெற்றவர்கள் என்று நாம் நினைப்பவர்களெல்லாம் உண்மையிலேயே அப்படித்தானா? என்று கேட்கிறது. எல்லாம் அடைந்தவர்கள் என்று நாம் ஏங்கும் ஆட்கள் என்னதான் நிஜத்தில் அடைந்தார்கள்? என்று விளக்குகிறது.

முஸாஃபிர் சல்தே சல்தே தக்கயாஹை…

’எருமை ஸ்பீடில்’ எனை வரவழைத்த நண்பர்களுக்கு நன்றி!

ஆபிதீன்

***

கவிஞர் நாகூர் சலீம் இயற்றி S.S, வாஹித் பாடிய பாடல் (1982) :

அரபிக்கடல் இக்கரையில்
ஆருயிரே உன் நினைவில்
அனுதினமும் வாழுகிறேன் பைங்கிளியாளே – நான்
அதிவிரைவில் உனை அடைவேன் பைங்கிளியாளே.. (அரபிக்)

கல்லுருகி நீர் வடிக்கும்
கண்மழையோ கரை உடைக்கும்
என் நிலையை கண்டறிந்தால் பைங்கிளியாளே – நீ
இறைவனிடம் சொல்லு இதை பைங்கிளியாளே.. (அரபிக்)

பாலையிலே சாலைகளும்
பழம் உதிரும் சோலைகளும்
பார்க்க ஒரு சொர்க்கமடி பைங்கிளியாளே – இது
பைந்தமிழர் வேர்வையடி பைங்கிளியாளே.. (அரபிக்)

பாடுபட ஓடுவதும்
பாறைகளில் வாடுவதும்
நாம் சுகமாய் வாழ்வதற்கே பைங்கிளியாளே – தமிழ்
நாடுவிட்டு இங்கு வந்தேன் பைங்கிளியாளே.. (அரபிக்)

கஷ்டங்களை மறப்பதற்கு
கல்பில் இதை சகிப்பதற்கு
காரணமும் உண்டெனது பைங்கிளியாளே – இது
கருணைநபி பிறந்த தேசம் பைங்கிளியாளே.. (அரபிக்)

*

பாடலை டவுன்லோடு செய்யவேண்டுமென்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள் – பத்தாயிரம் பவுண்ட் சம்பளம் தரும் விசாவோடு!

போனால் போகிறது , இங்கே கேளுங்கள் :

***

தொடர்புடைய ஒரு கதை : மஜ்னூன் – மீரான் மைதீன்

*

நன்றி : சலீம் மாமா, அசனா மரைக்கார், ’சடையன்’ சாபு  , அலாவுதீன்

« Older entries