ஒசாமாவை பேட்டி கண்டேன்

பேட்டி கண்டது நண்பர் தாஜ் அல்ல. தைஸீர் அலோனி (تيسير علوني).  அவர் (தாஜ்) அனுப்பிய ‘த சன்டே இந்தியன்’ கட்டுரையைப் பதிவிடுகிறேன்.’கவர் ஸ்டோரி’யின் இரு இமேஜ்கள் இங்கே இருக்கின்றன. ‘க்ளிக்’ செய்து பெரிதாக்கவும்.  இதையே – சில பின்குறிப்புகளுடன் – கவிஞரும் தட்டச்சு செய்து அனுப்பியிருந்தார். அதுவும் அடியில் உண்டு. பாருங்கள். நன்றி.

‘நாம் அனைவரும் அமைதிக்குத் தரவேண்டிய விலைதான் போரா?’

***

செப்டம்பர் 11 தாக்குதல் நடந்ததற்கு ஒரு மாதம் கழித்து, அப்போது உலகம் முழுவதும் தேடப்பட்ட ஒரு நபரை பத்திரிகையாளர் டைசீர் அலோனி பிரத்யேக நேர்காணல் செய்தார். அந்த நபர் ஒசாமா பின்லேடன். காபூலில் சி.என்.என். மற்றும் அல்ஜெசிராவின் செய்தியாளராக இருந்த இவர், சிரியாவில் பிறந்து ஸ்பெயினில் வாழ்பவர். அல்காயிதா அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு, மேட்ரிட் நீதிமன்றம் இவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை அளித்தது. எண்ணற்ற மனுக்களுக்குப் பிறகு 51 வயதான டைசீர், கொடும் சிறையான அல்காலா மெகாவிலிருந்து ஸ்பெயினில் கிரானடாவில் உள்ள தன் வீட்டுக்கு மாற்றப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இப்போதும் வீட்டுக்காவலில் இருக்கும் டைசிர் அலோனி, த.ச.இ.க்கு (த சன்டே இந்தியன்-க்கு) அரபியில் தனது நேர்காணலை எழுதி அளித்திருக்கிறார். இதில் அவர் இஸ்லாம், மேற்குலகம், சமாதானத்திற்கான தடைகள் குறித்துப் பேசுகிறார் –  இந்திரா

***

வீட்டுச்சிறை

பிப்ரவரி 2012 வரை நான் வீட்டுக் காவலில்தான் இருக்கவேண்டும். காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நான் வெளியே சென்றுவரலாம். ஆனால் கிரானடாவுக்கு வெளியே நான் செல்லமுடியாது. இதனால் பத்திரிகையாளராக பணிபுரிய இயலாது. அதற்கு நான் ஸ்பெயின் நாடு முழுவதுமாவது பயணிக்க இயலவேண்டுமே….

ஒசாமாவுடன் நேர்காணல்

நான் ஒரு பத்திரிகையாளராக அவரை பேட்டி கண்டேன். இதற்காக ஒருபோதும் வருத்தப்படமாட்டேன். மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை எழுந்தாலும், அந்த வேலையைச் செய்வதற்கு தயங்கமாட்டேன். பின்லேடன் , குரானுக்கு அவருக்கே உரியதான அர்த்தப்படுத்தலைச் செய்தார். அவரது கருத்துடன் அனைத்து முஸ்லிம்களும் உடன்பட வேண்டியதில்லை. ஒரு யூதராகவோ, கிறிஸ்துவராகவோ இருப்பதற்காக அவர்களுடன் முகமது நபி சண்டையிடவில்லை. ஆனால் நீங்கள் எப்படி அவர்கள் மீதான போரை நியாயப்படுத்துகிறீர்கள் என்றும் கேட்டேன். அவர் 1998 ஆம் ஆண்டில், தான் வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்ததாலேயே யூதர்கள் மற்றும் சிலுவைப் போராளிகள் மீது போரை அறிவித்ததாகக் கூறினார். ஆனால் இதற்கு முரணாக 2001 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ், தனக்கு கடவுளிடமிருந்து செய்திகள் வந்துகொண்டிருந்ததாகவும் ‘சிலுவைப் போரை’ தொடங்கியதாகவும் தெரிவித்தார். இது ஒசாமாவுக்கும் பொருந்துவதுதான் சோகமயமானது.

மேட்ரிட் குண்டுவெடிப்புகள்

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்ரிட் குண்டுவெடிப்புகள் பற்றி நான் செய்தி எழுதினேன். குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் மீதானவிசாரணையின் தகவல் அது. அவர்கள் வடக்கு ஸ்பெயினில் உள்ள சில சுரங்க உரிமையாளர்களிடம் வெடிமருந்துகளை வாங்கினார்கள். ஆனால் விற்றது வாங்கியதைத் தவிர அங்கு வேறு எதுவும் நடக்கவில்லை. சுரங்க உரிமையாளர்களுக்கு வெடிமருந்து எதற்காக வாங்கப்படுகிறது என்பது தெரியாது.

வேறு வழி உண்டா?

அல் காயிதா மற்றும் பிற அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் சேர காரணம், உலகின் பல இடங்களில் முஸ்லிம்கள் சந்திக்கும் அநீதிதான். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குநாடுகளும் தங்கள்மீது இலக்கு வைத்துள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். அப்பாவிகள் கொல்லப்படுவதுதான் பயங்கரவாதம் என வைத்துக்கொள்வோம். அப்படிதான் பின்லேடன் பயங்கரவாதி ஆகிறான். ஆனால் அமெரிக்காவோ, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்றுள்ளது. இந்தக் கொலையில் இங்கிலாந்தும் பங்குபெற்றது. இந்தச் செயலை நாம் எப்படி பெயரிடப்போகிறோம்? பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. போராட்டங்களின்போது காஷ்மீரிகளை இந்தியா கொல்கிறது. இதை என்ன பெயரிட்டு அழைப்பது? 60 ஆண்டுகள் ஆகியும் பாலஸ்தீனிய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவேயில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாலஸ்தீனியர்கள் கடும் கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் உதவி செய்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலுக்கு எதிராக எந்தத் தீர்மானத்தையும் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா அதை ரத்து செய்ய முயலும். மூன்றாம் உலகநாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக மேற்குநாடுகள் உள்ளன. இப்படியான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் மிகப் பாதகமானதாகவே தோன்றுகிறது.

அகிம்சை ஓரளவுக்கு உதவும்

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் போராட்ட வழிமுறைகள் வெற்றிக்கரமான பலன்களைத் தந்தன. ஆனால் தற்போதைய நிலைமை வித்தியாசமானது. காந்தி ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகவும் மண்டலா நிறவெறி பாகுபாட்டிற்கு எதிராகவும் போராடினார். தற்போது நாம் அரசியல்ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கிறோம். உதாரணத்துக்கு பாலஸ்தீனத்தில் ஆக்ரமிப்பை எதிர்க்கும் எந்த வன்செயலும் பயங்கரவாத நடவடிக்கையாக இனம் காணப்படுகிறது. ஆனால், இஸ்ரேலின் குற்றங்களை பாதுகாப்பு என்ற பெயரில் மேற்குநாடுகள் நியாயப்படுத்துகின்றன.

இஸ்லாம் – மறு கண்டுபிடிப்பு

அரசியல் லாபத்திற்காக இன்று இஸ்லாம் தாக்கப்படுகிறது. இஸ்லாம்தான் பயங்கரவாதத்தின் அச்சாக நமக்கு தொடர்ந்து கூறப்படுகிறது. பயங்கரவாதம் என்பதற்கான பொது வரையறை சர்வதேச சமூகத்தில் இல்லை. இஸ்லாமுக்கு வழிகாட்டுதல்கள் எதுவும் தேவையில்லை. அதற்குச் சொந்தமாக கோட்பாடுகள் உள்ளன. உலகம் முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்த அவசியமும் இஸ்லாமுக்கு இல்லை. இஸ்லாம் அமைதியின் மதம். முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகவே அம்மதம் ஜிகாத்தை வரவேற்கிறது. இச்செயலை எதிரிகள் தீவிரவாதம் என்று சொல்வார்கள் எனில், அது அவர்களுடைய பிரச்சனை. ஏனெனில் அவர்கள் இஸ்லாமை வெறுக்கிறார்கள். இரட்டை அளவுகோல்களையும், போலித்தனத்தையும் முடிவுக்குக்கொண்டு வந்தால் மட்டுமே தீர்வு சாத்தியம்.

***

நன்றி: த சன்டே இந்தியன்/ 04-17,Oct 2010

***

பின் குறிப்பு:

மேற்கண்ட தேதியிட்ட இதழில்,
‘போரும் சமாதானமும்’ என்கிற தலைப்பின் கீழ்…
‘நாம் அனைவரும் அமைதிக்குத்
தரவேண்டிய விலைதான் போரா?
தோட்டா நிரம்பிய துப்பாக்கி இல்லாத வேறொரு வழி இருக்கிறதா?
வாய்ப்புகளை அலசுகிறது த சண்டே இந்தியன்.’
என்கிற முழக்கத்தை முன் வைத்து…..
உலகம் தழுவிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுரைகள் 12 -ஐ
மாறுபட்ட எழுத்தாளர்களின் பார்வையில்
வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஒன்றுதான் இது!

*

தட்டச்சு & வடிவம்: தாஜ் | E-Mail : satajdeen@gmail.com
8:52 PM 10/25/2010

***

நன்றி : கநாசு. தாஜ்

***

மேலும் பார்க்க : A Discussion on the New Crusader Wars
Tayseer Allouni with Usamah bin Laden
  

கலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்…

மக்கள் டி.வி – 1.10.2008 – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘சன்னலுக்கு வெளியே’விலிருந்து…

***

[இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. இங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம். தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட அந்த கிராமத்திற்கு 1997ல் ஒரு இலக்கியவாதியின் வழியாக மேலும் ஒரு சிறப்பு கிடைத்தது. முஸ்தபாகண்ணு என்ற கதாபாத்திரத்தை ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலின் வழியாக அவர் உயிரூட்டியபோது இலக்கிய உலகின் முக்கிய விருதான சாகித்ய அகாடமி அந்த நாவலை வந்தடைந்தது. அவர்: தோப்பில் முஹம்மது மீரான். 1968ல் வெளிவந்த ‘நரகம் பூமியில் ‘ இவருடைய முதல் படைப்பு. அதன் பிறகு ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘கூனன் தோப்பு’ , ‘அனந்த சயனம்’ போன்றவை இவருடைய முக்கிய படைப்புகள். இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன இவருடைய எழுத்துக்கள். தான் சார்ந்த இலக்கிய அனுபவங்களையும் சமகால நிகழ்வுகளின் அரசியல் பற்றியும் நம்மோடு கலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்]

***

வணக்கம். நாஞ்சில் நாட்டுக் களம், கடலும் கடல் சார்ந்த இடமும், வீட்டுல யாரும் பெரிய அளவுக்கு யாரும் எழுத்தாளர்கள் கிடையாது. இதுதான் உங்களுடைய பின்புலம். அப்படியுள்ள பின்புலத்திலிருந்து தோப்பில் முஹம்மது மீரான் என்கிற எழுத்தாளன் உருவான கதை…

எங்க ஊரு தேங்காய்பட்டிணம். கடற்கரை. பண்டொரு துறைமுகமா இருந்த பகுதி. அரபி கலாச்சாரம், அந்நியநாட்டு கலாச்சாரம், பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த பகுதிதான் தேங்காபட்டிணம். பலதரப்பட்ட மக்கள் அங்க வாழுறாங்க. பலமொழிகள் பேசுற மக்களும் வாழுறாங்க. வித்தியாசமான ’லை·ப்’ அவங்களுக்கு. அந்த வித்யாசமான ’லை·ப்’ வரப்போ… (தனக்கு) தெரியாமலேயே எங்க காலத்தில ஒரு கலைஞன் உருவாயிடுவான். ஆனால் உருவாகலே! உருவாயிருக்கான்; சங்கீத வித்வான் உருவாயிருக்கான், வைத்தியர்கள்..இப்படி. எனக்கு முன்னாலெ கவிஞர்கள் இருந்திருக்கான். ஆனால் இந்த நவீன காலகட்டத்திலே ஒரு நாவலாசிரியன் என்ற பொருளிலே நான்தான் வந்தேன். நான் வந்ததுக்கு ரெண்டு காரணம். ஒன்னு.. ஏதோ என் மூதாதையரோட Blood எங்கிட்டே இருக்கு. இன்னொரு விஷயம் என்னன்னா இந்த ஊருலே உள்ள மக்களுடைய வாழ்க்கை. பலதரப்பட்ட ஜனங்கள்.. அவங்களுடைய வாழ்க்கை… இந்த வாழ்க்கைய நான் உள்வாங்கினேன். ரெண்டாவது , என் தகப்பனார் பெரிய ஒரு கதைசொல்லி. எல்லா தினமும் நைட்லே எங்களுக்கு கதை சொல்லித் தருவார்..அந்த Blood எங்கிட்டே இருக்கு. ஆனால் என் brothers, சொந்தங்கள்லே இந்த tactics வரலே. அதென்னமோ அந்த ‘டேலண்ட்’ எனக்கு வந்துபோச்சி. என் தகப்பனார் எப்படிக் கதை சொன்னாரோ அப்படியே நான் எழுதினேன். மொழி தெரியாததுனாலெ அவர் சொன்னாரு; மொழி தெரிஞ்சதுனாலெ நான் மொழிவாயிலாகச் சொன்னேன். இதுதான் வேறுபாடு.

ஒரு எழுத்தாளன் பிறந்து வளரக்கூடிய இடம் அவனுடைய எழுத்திற்கும் வாழ்விற்கும் பிரயோசமாக இருக்கிறதா?

வாழ்வுக்கும் எழுத்துக்கும் இடையிலே – என்னைப் பொறுத்தவரைக்கும் – நெருக்கம் உண்டு. எங்க ஊருலே எதைப் பார்த்தேனோ அதை அப்படியே நான் எழுதினேன். என்னுடைய வாழ்க்கையிலே நான் அனுபவிச்ச விசயங்களையும் எழுதினேன். எழுத்திலே இருந்து என் வாழ்க்கை அந்நியப்பட்டதல்ல. நான் எந்த கதாபாத்திரத்தையும் உருவாக்கவேயில்லை. எல்லாமே எங்க கிராமத்திலே வாழ்ந்த கதாபாத்திரங்கள். இப்ப சில கதைகள் வந்து.. நான் வாழக்கூடிய திருநெல்வேலி சுற்றுவட்டாரத்திலேர்ந்து எழுதியிருக்கேன். இங்கேயும் வாழ்ந்த கதாபாத்திரத்தைத்தான் எழுதியிருக்கேன். கதாபாத்திரங்களை கற்பனையில் உருவாக்கவே முடியாது. கற்பனையிலே உருவாகிற கதாபாத்திரம் நிலையாக நின்றதே கிடையாது. வாழ்ந்த கதாபாத்திரங்களே மெருகூட்டிருக்கு…

இப்ப தமிழ்லே பார்த்தீங்கன்னா.. வட்டார வழக்கு உபயோகப்படுத்தி எழுதிய மிக முக்கியமான எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். இது வாசகர்கள் மத்தியில் சிக்கலை உருவாக்காதா?

பெரிய சிக்கலை இது உருவாக்கும்னு எனக்கு தோணலே. வாசகன் என்பவன் சிறந்த கலைஞன். அவனுக்கு எந்த வட்டார வழக்குமே சிக்கலைக் கொடுக்கவே கொடுக்காது. வட்டார வழக்கு என்ற எழுத்து முறையை நான் கையாண்டதில்லே..எனக்குத் தெரிஞ்ச மொழி, எங்க மக்கள் பேசுற மொழியை எழுதனும்டு நான் எழுதினேன். எனக்கு தமிழ்ப் பின்னணி தெரியவே தெரியாது. நான் மலையாளப் பின்னணி. வட்டார வழக்குன்னா என்னான்டே எனக்குத் தெரியாது. எங்க ஊருல பேசுனபடியே நான் எழுதினேன். எழுதி , புத்தகமாயி , ரெண்டு மூணு ஆண்டுகளுக்குப் பிறகுதான் – வட்டார மொழிண்டு எல்லோரும் சொன்னபிறகுதான் – அப்படியொன்னு உண்டுன்னே எனக்குத் தெரியும். வட்டாரமொழிலெ எழுதனும்டு திட்டமிட்டு நான் எழுதினதே அல்ல. அந்த classificationஐ நான் விரும்பவுமில்லே.

ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

நாலு நாவல்கள் வந்திருக்கு. இதுலே எது சிறந்ததுண்டு கேட்டா நாலும் சிறந்ததென்றுதான் சொல்வேன். இருந்தாலும் – வெளிவந்ததிலே – எனக்கு சிறந்ததாகப் படுறது ’சாய்வு நாற்காலி’. எதனாலே எனக்கு விருப்பம்டு சொன்னா அதுல இருநூறு ஆண்டு கால வரலாறு சொல்வேன். அஞ்சு தலைமுறை சொல்லிட்டு வர்றேன். அஞ்சாவது தலைமுறையிலே உள்ள மூதாதையர் ரத்தத்திலே உள்ள சில விஷயங்கள் பின் தலைமுறையிலும் வரும் என்பதைத்தான் சாய்வு நாற்காலிலெ சொல்றேன். அது மட்டுமல்ல; ஒரு காலத்திலே மதம் , அரசு, மக்களாட்சி… இதையெல்லாம் தொகுத்து அப்படியே கொண்டு வர்றேன் – ’சாய்வு நாற்காலி’லெ. ஆனா சாதாரண வாசகர்களுக்கு அது புரியல்லே..அவன் அந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி , குடும்பம் நசிஞ்சி போறதுங்கறதைப் பத்தி பேசுறாங்களேயொழிய அந்த நாவலுடைய spiritஐ யாருமே புரிஞ்சிக்கலே..என்னைப் பொறுத்தவரை அதுல ஒவ்வொரு கதாபாத்திரமும்….மனிதனைவிட கம்பு, பிரம்புலாம் பேசும். சாய்வு நாற்காலி..அது பேசும். அவைகள்தான் கதாபாத்திரம்; மனிதர்களல்ல. இந்த கதாபாத்திரங்கள் பேசுறதுக்காகத்தான் மனிதர்களை படைச்சிருக்கேன். இதுபோல இன்னொன்னு – அதே formலே – என்னாலெ படைக்க முடியாது.

உங்களுடைய கதைகளின் வழியாக உங்களுடைய கதாபாத்திரங்களின் வழியாக வாசகர்களின் மனதில் எதை விதைக்க நினைக்கிறீர்கள்?

சமூகத்திலேர்ந்து எந்த விதமான அனுபவங்களைப் பெற்றேனோ அதே அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுத்து அவங்களும் அந்த அனுபவத்தைப் பெறச் செய்றேன். அதே நோக்கம்தான் என்னுடைய நாவல்கள் வழியாக நான் செய்றது. நாவல் வழியாக எந்த தர்ம உபதேசங்களும் செய்ய நான் வரலே. என்னுடைய நாவலை வாசித்து சமூகம் முன்னேறும்டு எதிர்பார்ப்பும் எனக்கு இல்லே.

வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளி..முஸ்தபாகண்ணு..இதுபோன்ற முக்கியமான கதாபாத்திரங்கள் உங்களுடைய புதினங்கள் வழியாக நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். இதில் உங்களுடைய மனதை மிகவும் பாதித்த கதாபாத்திரம் எது? காரணம் என்ன?

‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யிலே வரக்கூடிய மெயின் கதாபாத்திரம் வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளி. இந்த வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளியை நான் பார்த்ததில்லே. அவருடைய பின்வாரிசுகளையெல்லாம் பார்த்திருக்கேன். வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளி என்று சொல்லக்கூடியவர் ஒரு ஆளுடைய பிரதிபலிப்பு அல்ல. அவரைப்போல எங்க ஊருலே நிறைய பேரு வாழ்ந்திருந்தாங்க. அவங்கதான் ஊரை ஆட்டிப் படைச்சிருக்காங்க. அடிக்கிற அதிகாரம், என்ன வேண்டுமானாலும் செய்யிற அதிகாரம் கொண்டு.. பள்ளி நிர்வாகம் அவங்க கையிலதான். இப்படிப்பட்ட பல ஆட்கள் இருந்தாங்க. இவங்க எல்லோரையுமே ஒரு ஆளாகவே கற்பனை பண்ணி – எல்லா குணாதிசயங்களையும் ஒரு ஆளுக்கே கொடுத்துதான் வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளியை நான் உருவாக்குனேன். ஆனா ’சாய்வு நாற்காலி’லெ வரக்கூடிய முஸ்தபாகண்ணு நேரடியா எனக்கு தெரிஞ்ச ஆளு. அதேபோல ஆளு இப்பவும் வாழ்ந்துகிட்டிருக்கான். அந்த கதாபாத்திரம் நான் படைச்சேன்.

மிகச்சிறந்த எழுத்தாளர்களை உருவாக்குவது அனுபவங்களா புத்தகங்களா அப்படிங்குற விவாதம் நடந்துக்கிட்டிருக்கு. நீங்க எந்த கருத்துக்கு உட்படுறீங்க?

புத்தக அறிவை விட – வாசிச்சி கிடைக்கிற அறிவை விட – அனுபவிச்சி கிடைக்கிற அறிவுதான் கலைக்கு பொருந்தும். ஒரு நல்ல படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்கள்தான் முக்கியம். உலகத்தின் எந்த மிகச்சிறந்த படைப்பை எடுத்துக்கிட்டாலும் படைப்பாளி அவனுடைய அனுபவத்தைத்தான் எழுதியிருப்பான். நாஜி கேம்ப் அனுபவங்கள் பத்தியெல்லாம் jewsகள் நிறைய எழுதிருக்கான். எல்லாம் அவங்களோட அனுபவங்கள். அவங்க யாரும் புத்தகம் வாசிச்சவங்க அல்ல. அதேபோல ஆ·ப்ரிக்காவுல உள்ள வாழ்க்கையப் பத்தி நிறைய பேரு எழுதியிருக்கான். வாசிச்சதல்ல,அவங்களோட அனுபவங்கள். வெள்ளைக்கார சமூகத்திலேர்ந்து அவங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் , இம்சைகள் இதெல்லாம் தாங்க முடியாமதான் அவனுள்ளேர்ந்தே ஒரு எழுத்தாளன் உருவானான். அவன்தான் யதார்த்த படைப்பாளி. நாலு புத்தகம் படிச்சிட்டு அஞ்சாவது புத்தம் எழுதுறவன் எழுத்தான்தான், படைப்பாளியல்ல. படைப்பாளி என்பவன் அவனுடைய அனுபவத்திலேர்ந்து எழுதக்கூடியவன். எழுத்தாளன் என்பவன் வாசிச்சி எழுதக் கூடியவன்.

இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளை பழிவாங்கிக்கொண்டிருக்கும் விஷயம் உலகமயமாக்கம். இது எழுத்தையும் எழுத்துத் துறையையும் எழுத்தாளனையும் பாதித்திருக்கிறதா?

ரொம்பப் பாதிச்சிருக்கு. கலைத்துறையை மட்டுமல்ல நம்ம நாட்டுலெ உள்ள எல்லா துறையையும்… இயற்கையே அழிஞ்சி போயிருக்கு. நாம் இன்றைக்கு காணக்கூடிய வயல் நாளைக்கு இருக்காது. இங்கே காணக்கூடிய குன்று நாளைக்கு இருக்காது. இந்த நதி இருக்காது. எங்கே போறதுண்டு தெரியாம உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்கோம். உலகமயமாக்கத்தாலே நம்ம கலாச்சாரம் அழிஞ்சி போயிடுச்சி. நம்ம மொழி அழிஞ்சது; பண்பாடு அழிஞ்சது. எல்லாமே அழிஞ்சுது. இனியொரு காலகட்டத்திலே நம்ம நாடே அடிமைப்படும் ஒரு சூழல் ஏற்படும். உலகமயமாக்கம் வந்து எழுத்துலகத்துக்கு மிகப்பெரிய சவாலா இருக்கு. நிச்சயமா ஒவ்வொரு படைப்பாளியும் உலகமயமாக்கத்துகு எதிராத்தான் எழுதனும்.

குஜராத் கலவரம், மும்பை குண்டுவெடிப்பு, அயோத்தி பிரச்சனை..பாபர்மசூதி இடிப்பு…இந்த பிரச்சனைக்குப் பிறகுள்ள இந்திய சமூகத்தை உற்று நோக்கும்போது இஸ்லாமிய முகாம்களெல்லாம் ஒரு பயங்கரவாத முகாம்களாகத்தான் இங்குள்ள பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றன. இதைப்பற்றி உங்களுடைய கருத்தென்ன?

இது விஷயமா ஏற்கனவே நான் எழுதிருக்கேன். ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று மிகப்பெரிய ஒரு கட்டுரை நான் எழுதியிருக்கேன். அதுல நான் பல விஷயங்களை கொண்டுவந்து – இப்ப சொல்றதுக்கு ஞாபகம் இல்லே – ஆனாலும்..திட்டமிட்டுதான் இந்தியாவில் உள்ள எல்லா ஊடகங்களும் சில அதிகார வர்க்கங்களும் – bureuacracy என்று சொல்வோமில்லையா – இது எல்லாமே வந்து முஸ்லீம்கள் தீவிரவாதியாக வந்து சித்தரிக்கிறார்களேயொழிய முஸ்லீம்கள் தீவிரவாதியா என்றால் இல்லை. சில தீவிரவாதிகள் இருக்கலாம்; இல்லாமல் இல்லை, இருக்கலாம். ஆனால் அந்த தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லே. எதனாலே தீவிரவாதம் உருவாச்சிண்டு யாருமே சிந்திக்கலே. ‘தீவிரவாதத்தை ஒடுக்கனும்’டு குரல்தான் எழுந்ததே தவிர தீவிரவாதம் ஏன் உருவாகுது, அத ஒடுக்குறதுக்கு என்ன வழி , தீவிரவாதிகள் உருவாகாமல் இருக்குறதுக்கு நாம் என்ன செய்யனும் என்பதைப் பத்தி அரசு தரப்பிலேர்ந்து எந்த தீர்வும் வரலே. என்றைக்கு அரசு தரப்பிலேர்ந்து தீவிரவாதம் உருவாகாமல் இருக்குறதுக்கு இங்கு ஒரு சூழல் உருவாகுதோ அன்றைக்குத்தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும். ஒரு தீவிரவாதி உண்மையான முஸ்லீமாக இருக்கவே மாட்டான். இந்த விசயம் தெரியாமத்தான் முஸ்லீமகளை தீவிரவாதி தீவிரவாதிண்டு முத்திரை குத்திக்கிட்டிருக்காங்க. இஸ்லாம் எந்த இடத்திலேயும்….நபியோட காலத்தில நடந்த யுத்தம் அத்தனையும் defenceதான். அவங்க ஆக்கிரமிச்ச ஹிஸ்டரியே கிடையாது. அநியாயமா – ஒரு மாட்டைக்கூட அடிச்சிக் கொல்ல – இஸ்லாம் விரும்பலே. சாதாரணமா விளைஞ்சிருக்ககூடிய பயிரைக்கூட அழிக்க இஸ்லாம் விரும்பலே. இப்படிப்பட்ட இஸ்லாத்தை நம்பக்கூடிய மக்கள் பெயரிலே தீவிரவாத்தை சுமத்துறது அநியாயம். முஸ்லீம்கள்லே தீவிரவாதிகள் இருக்கலாம்; இல்லேண்டு சொல்லலே. ஏன் உருவாகுறாங்க? உருவாகக்கூடிய சூழல் என்ன அப்படிங்குறதும் இருக்கு. எத்தனையோ தீவிரவாதிகளை பிடிச்சிட்டுப் போயிருக்காங்க. தெளிவில்லாம விட்டும்தான் இருக்கான். அதனாலே தீவிரவாதத்துக்கும் இஸ்லாத்தும் எந்த விதமான் சம்பந்தமும் இல்லே. முஸ்லீம்கள் பெயரிலே உலகளாவிய தரத்திலே திட்டமிட்ட ஒரு பழிச்சுமத்தல் – முஸ்லீம் தீவிரவாதம் – என்பது. … இந்த உரையாடலுக்குத் தேவையான தூண்டலை மதப் புரோகிதர்கள் ஏற்படுத்திட்டான். புரோகிதத்தன்மை என்னைக்கு மதத்திலேர்ந்து நீங்குதோ அன்னைக்கித்தான் மனுசன் மனுசானவே மாறுவான். இந்தப் புரோகிதர்கள்தான் வெறியூட்டிவிடுறது. ஒரு யதார்த்த மதநம்பிக்கையாளன் இன்னொரு மத நம்பிக்கையாளனை வெறியூட்டவே மாட்டான். அதனாலே இந்த புரோகிதத்தன்மையை நாம ஒழிச்சாகனும். அது ஒழியாத காலம்வரை பிரச்சனை நீங்கவே நீங்காது. மனுசன் மனுசனா மாறனும். இன்றைக்கு வந்து..மதம் ஒரு அரசியலா மாறிட்டுது. மத அரசியல்னு அதுக்குப் பெயரு. இந்த மத அரசியலை வச்சித்தான் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கோட்பாடுகளை வச்சிக்கிட்டு அரசு நடத்திக்கிட்டுருக்கான். அதுக்கு சில வெறித்தனங்களை ஊட்டி இளைஞர்களை ஒருபக்கம் திருப்புறான். அங்கேதான் வகுப்புக் கலவரம் ஏற்படுது. அந்த கலவரத்துலெ எந்த பெரியவனா¡ச்சும் சாவுவானா? எந்த புரோகிதனாவாது சாவுவானா? (சாவுறதெல்லாம்) சாதாரண இளைஞர்கள்..ஒன்னும் தெரியாத இளைஞர்களை ஏன் வெறியூட்டி விடுறான்? அதனாலே அவனுங்களுக்கு கிடைக்கிற நன்மை என்ன? அஹ்மதாபாத்லெ குண்டு வச்சதுக்கும் பாம்பேயில குண்டு வச்சதுக்கும் நோக்கம்தான் என்ன? இப்ப டெல்லியிலே குண்டு வச்சான். அதுக்கு நோக்கம் என்ன? எதுக்காக குண்டு வச்சான்? யாருமே சொல்லலிலே…எவ்வளவு உயிர்கள் பலியாச்சுது. நோக்கம் என்ன, இந்த விஷயத்துக்காக குண்டு வச்சோம், எங்களுக்கு இன்னது கிடைக்கனும்..வெளிப்படையா சொல்லலியே..இதெல்லாம் என்னண்டா ஒரு மாதிரி வெறி. இளைஞர்களை வெறியூட்டுறது…அதனாலே இன்னைக்கி நமக்கு தேவை , மதம்டா என்ன, மனிதனுக்கும் மதத்துக்கும் இடையேயான தொடர்புகள் என்ன, மதம் மனிதனுக்கு வெறியூட்டுதா ,இல்லே,மதம் மனிதனை அரவணைக்குதா அதுதான் சொல்ல வேண்டிய விஷயம்.

உங்களுடைய அடுத்த கட்ட முயற்சிகள்..

ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் அந்த நாவல் வந்து noveletteஆக ஏற்கனவே மலையாளத்துலெ வெளிவந்தது. மாத்யமம் ஆண்டுமலர்லெ வெளிவந்தது. அதுல சில விஷயங்கள் சொல்லலே..சொல்லப்படாத விஷயங்களையெல்லாம் புதியதாகச் சொல்லி ஒரு பெரிய நாவலாட்டம் இப்ப வெளிவரப்போவுது. கூடிய சீக்கிரம் ஒரு மாசம் ரெண்டு மாசத்துலெ வெளிவரும். அதோட ஒரு சிறுகதைத் தொகுப்பும் வருது. மூணாவது..இன்னொரு நாவல் முயற்சியிலே இப்ப ஈடுபட்டிருக்கேன். இதுவரை எழுதினதுலே மிகப்பெரிய நல்ல நாவலாக அது வெளிவரும்டு நெனைக்கிறேன். இதுக்கெல்லாம் வாசகர்களோட ஒத்துழைப்புதான் முக்கியம்.

உங்களுடைய சிந்தனை சார்ந்த எழுத்து முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய எங்களுடைய மக்கள் தொலைக்காட்சி நிறுவனம் சார்பாக வாழ்த்துக்கள். வணக்கம்.

***

‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ – மஹாகவி பாரதி. பசியின் மகத்துவத்தை உலகமனிதர்களெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் இந்த நோன்புத் திருநாளில் உலக அமைதிக்காகவும் மன விடுதலைக்காகவும் உலக மக்களின் சமத்துவத்திற்காகவும் போராடிய முகம்மது நபி சல்லல்லாஹ¥ அலைஹிவசல்லத்தை இந்த நிமிடத்தில் நினைத்துக்கொண்டு புதிய பார்வைகள் புதிய தேடல்களோடு புதிய கோணங்கள் இவைகளின் தொகுப்புகளோடு மீண்டும் ‘சன்னலுக்கு வெளியே’ நிகழ்ச்சியின் மற்றொரு அத்தியாயத்தில் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து நன்றிகூறி விடைபெறுவது : ஆபிதீன் (அட, நிகழ்ச்சி நடத்திய சகோதரர் பெயர் தெரியலேங்க… அதுதான்!)

‘சன்னலுக்கு வெளியே’ இயக்கம் : ராஜா , ஒளிப்பதிவு : சந்தோஷ், படத்தொகுப்பு : சரவணன் , வரைகலை : சுரேஷ்- ஜெனட்- வில்சன், நிகழ்ச்சித் தொகுப்பு : ச்யாம பிரசாத், நிர்வாகத் தயாரிப்பாளர் : துரை நாகராஜன், நிகழ்ச்சித் தலைமை : கார்மல்.

நன்றி: மக்கள் தொலைக்காட்சி.

***

தொடர்புடைய சுட்டிகள் :

தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதை : காலத்தின் ஆவர்த்தனம்

’சாய்வு நாற்காலி’ வாசிப்பனுவபம் – கிருத்திகா

குங்குமத்தில் நாகூர் ரூமி

rumi_kunkumam1.jpg

குங்குமம் 4/10/2007 இதழில்  வெளிவந்த நண்பர் நாகூர் ரூமியின் நேர்முக (தொகுத்தவர் : மு.வி.நந்தினி) சுட்டிகளை இங்கே பதிகிறேன்.

‘பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம்’ என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும்போது தீவிரவாதத்திற்கு முன்னால்’ இஸ்லாமிய’ என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?’ – நாகூர் ரூமி

சுட்டி : குங்குமத்தில் நாகூர் ரூமி 

– ஆபிதீன் –

**

இஸ்லாமிய தீவிரவாதம்! 
 

உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். ‘தீவிரவாதம்’ ‘வன்முறை’ என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்று சொல்லுகிறார்களே அது என்ன?

இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்’ என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் ‘இஸ்லாமிய’ என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?

ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை ‘இந்து தீவிரவாதி’ என்றோ, ‘கிறிஸ்தவ தீவிரவாதி’ என்றோ ஏன் அழைப்பதில்லை? தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது’ என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்? 

‘பழிக்குபழி  ரத்தத்துக்கு ரத்தம்’ என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும்போது, தீவிரவாதத்திற்கு முன்னால் ‘இஸ்லாமிய’ என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?
 
சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்! அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம். 

எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது. வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர, இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன். 

அவன் இந்துக்களை ஒடுக்கினான்’ என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல  முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள். 

எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், ‘இந்தியன் ஹிஸ்டரி’ என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்! 

‘ஆரியர்கள் வருகை’ என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் ‘முகலாயர்களின் படையெடுப்பு’ என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.  

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். ‘முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்’ என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். 

‘இஸ்லாம்’ என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது’ என்பதுதான். ‘ஜிகாத்’ என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை. அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன? 

இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது “சச்சார் கமிட்டி” அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம   ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள், ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை. எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள். 

காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. ‘அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்’ என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம். எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை. இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வர ப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன. 

ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்… மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை. 

தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு. 

‘உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை’  

இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்! 

**

நன்றி: குங்குமம் , சத்தியமார்க்கம்