My brother and I slept in a room. My parents had left the house. The mosquitoes didn’t let us sleep. As they stung me a lot I went out to my parents. And when my mother raised the screen the earthquake began.
Ah. And your brother remained inside.
Yes, under the rubble.
You were only barely saved.
Yes.
Those mosquitoes saved your life.
That’s what my father says, but my mother is angry.
Why?
Above all because the mosquitoes had not stung Reza.
’ஆசையினாலே மனம், அடியிலெ தொங்குது கனம், அப்பாட பிரிமிஸ் பழம்’ என்று வேடிக்கையான பாட்டு ஒன்றுண்டு – நாகூரில். அங்கே எல்லாமே வேடிக்கைதான். தாத்தாவை அப்பா என்று சொல்லும் வேடிக்கை உள்பட. ப்ரூம்ஸ் பழம்தான் பிரிமிஸ் பழம் என்றானதோ? தெரியவில்லை, அடியில் எல்லாம் ஆராய்ச்சி பண்ணக் கூடாது. ம்… பாட்டில் வரும் ’அப்பாஸ்’ அல்ல இந்த அப்பாஸ். அப்பாஸ் கிராஸ்தமி ( عباس کیارستمی ) . புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர். அதிகம் அறிந்தவர்கள்தான் நீங்கள். தெரியும். குரஸோவா யாரப்பா? என்று கனவில் குரலெழுப்பியவர் அப்பாஸ் யாரப்பா? என்று அலறக்கூடாதென்பதற்காகச் சொன்னேனப்பா.
பழமென்றாலும் பழம், மன்னிக்கவும், படமென்றாலும் படம். ‘எந்த துணிச்சல்ல இத எடுத்தாரு?’ என்றே கேட்டார் நண்பர் சாதிக் – அநியாயமான ஆமைவேகம் காரணமாக. அபூர்வமான சினிமாக்களை அறிமுகம் செய்யும் சகோதரர் அய்யனாரின் பதிவை ( ’தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான் ) எடுத்துக் கொடுத்தேன். உடனே அவருக்கு படத்தின் வசனங்கள் பிடிக்க ஆரம்பித்தன – அந்த குழப்பமான முடிவு வரும் வரை. ’என்ன நானா இது, குழில படுத்து செத்தவன் திரும்பவும் வர்றான்?’ ‘நாம பாக்குறது படம்தான்னு சொல்றாரு. யார் செத்தாலும் வாழ்க்கை அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிக்கிறதை காமிக்கிறாரே.’ ‘என்னமோ போங்க, ஆனா குரஸோவாவோட ’இகிரு’க்கு இது தேவலாம்.’ ’அதுவும் அருமையான படம்தான் சாதிக். என்னா, ரெண்டு மணிநேரம் ட்ரிம் பண்ணிடனும்!’ ‘சீரியஸாவே பேச மாட்டீங்களா நானா?’ – சலித்துக்கொண்டார்.
‘செர்ரியின் சுவை’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தூக்கம் வந்தால் அருமையான சினிமா என்று அப்பாஸ் சொல்லியிருக்கிறார்!. (மதச் சட்டங்களால் தடுக்கப்பட்ட) தற்கொலை செய்யும் முடிவுடன் – தன் பிணத்தைப் புதைக்க உதவுபவர்களைத் தேடி – அலைகிறார் ஜனாப். பதீஈ. எதற்காக அந்த முடிவு என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ’உனக்கு துப்பாக்கி ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? என்று ஒரு இளைஞனைப் பார்த்து அவர் கேட்கும் ஒரேயொரு கேள்வி மட்டும் இருக்கிறது . போதுமா? ஆனாலும் எதுவும் சொல்லாத இறுக்கம் என்னென்னவோ சொல்வதை எடுத்துக் கூறவேண்டும். காரணத்தைச் சொல்லாமல் – ’பணம் நிறைய தருகிறேன், ஒரு உதவி செய்வாயா?’ என்று இளைஞர்களை அவர் ஆரம்பத்தில் கேட்கும்போது ஏதோ ஓரினப் புணர்ச்சிக்கு அழைப்பதுபோல இருக்கிறது என்று ஒரு விமர்சன மேதை எழுதியிருந்ததைப் பார்த்துத் தொலைத்தேன். ’பையன்வேலை’யில் முண்டன் போல அவர் ! எனக்கு அப்படிப் படவில்லை. விடுங்கள், விமர்சகர்கள் பார்த்துக் கொல்வார்கள். கதாநாயகரைப் பார்த்து பகேரி என்ற கிழவர் சொல்லும் ஆறுதலும் அதனூடே வரும் அட்டகாசமான நகைச்சுவைக்காகவும்தான் இந்தப் பதிவு.
தனக்கும் – கல்யாணமான சமயத்தில் – ரொம்ப பிரச்சனைகள் ஏற்பட்டன என்கிறார் அந்தக் கிழவர். (பாரடி அஸ்மா, உலகம் முழுதும் ஒரே மாதிரி பிரச்சனை!). அவர் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்:
’ஒருநாள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று தோன்றிற்று. அதிகாலையில் எழுந்து – ஒரு கயிறை எடுத்துக்கொண்டு – மல்பெரி பழத் தோட்டம் ஒன்றுக்குச் சென்றேன். மரத்தில் கயிற்றை மாட்டலாம் என்றால் முடியவில்லை. ஓரிருமுறை முயன்றேன். சரிவரவில்லை. நானே மரத்தில் ஏறி கயிற்றை இறுகக் கட்டினேன். அப்போது என் கையில் மென்மையாக ஒன்று நசுங்கியது. மல்பெரி பழம்! சுவையும் இனிப்புமுள்ள மல்பெரி! ஒன்றைத் தின்றேன். அதன் சாறும் சதையும்…ஆஹா.. அப்புறம் ரெண்டாவது, மூன்றாவது…! அப்போதுதான் பார்த்தேன், சூரியன் மலையுச்சியிலிருந்து எழுந்து கொண்டிருந்தான். என்ன அற்புதமான காட்சி! குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நின்றார்கள். மரத்தை உலுக்குங்களேன் என்றார்கள். உலுக்கினேன். பழங்கள் விழுந்தன. சாப்பிட்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கீழிறங்கி , கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். மனைவி உறங்கிக்கொண்டிருந்தாள். விழித்ததும் அந்தப் பழங்களை அனுபவித்துச் சாப்பிட்டாள். பார், தற்கொலை செய்வதற்காகப் போனேன். பழங்களுடன் திரும்பி வந்தேன்! ஒரு மல்பெரி பழம் என்னைக் காப்பாற்றி விட்டது. ஒரு மல்பெரி பழம்..!’
அவ்வளவுதான். ’ஒவ்வொரு பருவமும் தரும் விதவிதமான பழங்களைப் பாரேன். எந்தத் தாயாவது இப்படி வகைவகையான பழங்களை தன் பிள்ளைகளுகாக சேகரிக்க இயலுமா? தன் படைப்புகளுக்கு இறைவன் காட்டும் கருணையைப் போல உலகின் எந்தத் தாயாலும் செய்யவே இயலாது. இதையெல்லாம் மறுக்க விரும்புகிறாயா நீ? வாழ்வின் இனிமையை இழக்க விரும்புகிறாயா?’ என்று நெஞ்சை நிறைக்கும் நீண்ட போதனை… அட்வைஸ் பழம்தான் நமக்கு அதிகம் கசக்குமே, அதனால் அவர் சொல்லும் ’ஜோக்’கை மட்டும் அடியில் பதிவிடுகிறேன் – காணொளியாக. கண்டு சிரிப்பதும் கண்பட வாழ்வதும் உங்கள் இஷ்டம். பார்ப்பதற்கு முன் ஒரு விசயம் சொல்ல வேண்டும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, சகோதரர் சன்னாசியின் ‘மரணம் பற்றிய இரண்டு படங்கள்‘ பதிவில் ஜபருல்லா என்பவர் இந்தப் படத்தைச் சொல்லியிருந்தார் – மரணத்தின் மூலம் வாழ்வதற்கான காரணங்களை தேடும் சிறந்த (மற்றொரு) படைப்பு இதுவென்று. யாருப்பா இவர் புதுசா? அன்றிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றுவரை. கண்டுபிடிக்கவே முடியவில்லை என்னால். அறிந்தவர்கள் சொல்லுங்கள். சத்தியமாக நாகூர் ஜபருல்லாநானா கிடையாது. நம்ம நானா நல்ல சினிமாலாம் பாப்பாஹலா என்னா? பொழுதன்னைக்கிம் டி.வி சீரியல் பார்த்துக்கொண்டு , அதில் வரும் ஒலஹமஹா தத்துவங்களைக் சின்ஸியராக குறித்துக் கொண்டிருப்பதற்கே நானாவுக்கு நேரம் போதாது. இத்தனைக்கும் , சீரியல்காரன்கள் இவரைப் போன்றவர்களின் வரிகளிலிருந்துதான் சுட்டிருப்பான்கள். நாதஸ்வரத்தைப் பிடித்துக்கொண்டே சீரியல் தத்துவங்கள் சொல்லும் இன்னொரு நாகூர்க்காரரும் உண்டு. ஆல்ஃபா மன்னரை அப்புறம் கவனிக்கலாம். முதலில் இந்தக் காட்சியைப் பாருங்கள். சிரித்துவிட்டு , பிறகு சீரியஸ் ஆளான அப்பாஸ் கிராஸ்தமியின் நேர்காணலை அவசியம் பாருங்கள்.
’செர்ரியின் சுவை’ பற்றி விமர்சனம் செய்த நண்பர்கள் எவருமே கீழே காணும் ஜோக்கை ஏன் குறிப்பிடவில்லை என்பது சிந்தனை செய்யப்பட வேண்டிய விஷயம்.