‘புதிய’ பார்வை : கமல்ஹாசன் Vs இராம கோபாலன்

‘புதிய பார்வை’ இதழில் வெளியான கமல்ஹாசனின் பேட்டியை பிறகு பதிவேன். இப்போது அந்தப் பேட்டி சம்பந்தமாக இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் இராம கோபாலனின் ‘அதிரடி’க் கருத்துக்கள். புதியபார்வை / நவம்பர் 16-30 , 2009ல் வெளியானது. மாற்றுக் கருத்துக்களை தனது திறந்த வெளி மேடையில் இடம் பெற முடிவு செய்திருக்கிறதாம் ‘புதிய பார்வை’. ‘கூர்மையான இடங்களிலே உட்கார்ந்துகொண்டு பஜனை பாட முடியாது, சமன்படுத்துங்கள்’ என்ற வாஜ்பாய்க்கும் விரைவில் இடம் கொடுக்கட்டும். சரி, இராம கோபாலனை சந்தித்தவர் பெயர் : வசீரன். முஸ்லிம் நிருபரா? தெரியவில்லை. ‘ஆயிரம் வாலா சரவெடி போன்று வெடித்துத் தள்ளிவிட்டார் மனுஷன்!’ என்று வியக்கிறார். ‘கலைஞரைப் போன்றே கமல்ஹாசனும் ஒரு இந்து விரோதி’ என்பது ‘புதிய பார்வை’ தந்த தலைப்பு. அப்படியா உலக நாயகா?

**

புதிய பார்வை : கமல் படங்கள், நடிப்புப் பற்றி உங்கள் கருத்து?

இராம கோபாலன் : கமல்ஹாசன் அவருடைய துறையில் அவர் நன்றாகவே விளங்குகிறார். ஆனால் அவரை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிற ஜால்ரா கும்பலின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. அதை அவரும் ரசிப்பதுதான் வேடிக்கை.

சினிமா பார்ப்பீர்களா? எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள்?

எப்பொழுதாவது பார்ப்பேன். கடைசியாக பார்த்தது கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படம். ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜூன் போன்றோர் நடித்த, தேசபக்தியை தூக்கலாக காண்பிக்கிற படங்கள், ராணுவம், காவல்துறையை உயர்வாக போற்றுகின்ற படங்களை நேரம் கிடைத்தால் பார்ப்பேன். எந்நேரமும் வாய்ப்பும் கிடைப்பது மிகவும் அரிது.

முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தினார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

கலப்படமில்லாத கம்யூனிஸ்ட் பொய். கோவிலை உடைத்து, மக்களை மதம் மாற்றி, பசுக்களை வெட்டி, பெண்களை தூக்கிக் கொண்டு போய் கற்பழித்து, மதம் மாற மறுத்தவர்களை துண்டு துண்டாக வெட்டி நம் நாட்டை வளப்படுத்தினார்கள் மொகலாய மன்னர்கள். யதுநாத் சர்க்கார், ஆர்.சி. மஜூம்தார், கே.எம்.முன்சி போன்றவர்கள் எழுதிய புத்தகங்களில் இஸ்லாமியர்களின் கொடூர ஆட்சி அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உடைக்கப்பட்ட கோவில்கள், இவர்கள் செய்த கொடுமைகளை மேலும் தெரிந்துகொள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்’ – கே. கே. பிள்ளை என்ற புத்தகமும், எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் நூல்களுமே சான்று. மேலும் தகவல்களுக்கு ‘சௌத் இந்தியா அண்ட் இட்ஸ் முஸ்லிம் இன்வேடர்ஸ்’ என்ற புத்தகத்திலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கோவில் சிற்பங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை எல்லாம் யாருடைய கை வரிசை என்பது குழந்தைக்கு கூட தெரியும்.

மதுரை மீனாட்சிய்யம்மன் கோவில் மாலிக்கபூர் படையெடுப்பின்போது உடைக்கப்பட்டதே. ஸ்ரீரங்கம் கோவில் 42 ஆண்டுகள் மூடிக் கிடந்ததே. இவை எல்லாம் கமலுக்குத் தெரியாதா?

கர்நாடகத்தில் ஹளபேடு, கோவாவில் உள்ள அபூர்வ சிற்பங்களை நாசப்படுத்தியது யார்? என்பதை கமல் மட்டும்தான் அறியமாட்டார்.

மேற்சொன்ன விசயங்களில் சிலதான் கமலின் பார்வையில் முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தியதோ!

‘இராமர் பிறந்தது ஆப்கானிஸ்தானில்தான்.. இராமருக்கு ஆபாகானிஸ்தானில் கோவில் கட்ட வேண்டும் என்ற முதல்வர் கலைஞரின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும்’ என்று கமல் சொல்லியிருக்கிறாரே?

சுத்த பேத்தல். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார். நடக்காத சம்பவத்தை நடந்ததாகக் கூறுவதைக் கேட்டு பைத்தியக்காரன் கூட வாய்விட்டுச் சிரித்து விடுவான்.

ராமாயணத்துக்கும் காந்தாரிக்கும் என்ன சம்பந்தம்? காந்தாரி (மஹாபாரதம்) பிறந்ததுதான் காந்தாரத்தில். ஸ்ரீராமர் பிறப்புக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கோசல நாட்டின் தலைநகரம் தான் அயோத்தி. இங்குதான் ஸ்ரீமார் பிறந்தார். பெண்கள் பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு போவது என்பது ராஜஸ்தானில் பழக்கமே இல்லை.

கமலுக்கு வரலாறும் தெரியாது. புவியியலும் தெரியாது. நல்ல குரு, நல்ல வழிகாட்டி..

கமல்ஹாசன் இம்சை அரசன் ’25’ஆம் புலிகேசியாக மாறி வரலாற்றை திரித்துக்கூற முயற்சிக்கிறார். அது எக்காலத்திலும் முடியாது.

முதல்வர் கலைஞருக்கு எப்போதுமே குழப்பம்தான். கமல் கலைஞர் கருத்தை ஆமோதிக்கிறார்!

பயங்கரவாத சம்பவங்களை மதத்தோடு சம்பந்தப்படுத்துவது தவறு என்ற கமலின் கருத்துக்கு உங்கள் பதில்?

எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்பதை நடுநிலைவாதிகள் எல்லோரும் உணர்ந்து கொள்கிறார்கள். 18/09/2008 நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பொருளாதார நிபுணரும் , பிரபல எழுத்தாளருமான எஸ். குருமூர்த்தி ‘மதநூலும் பயங்கரவாதமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் பயங்கரவாதிகள் தங்களுடைய செயல்களுக்கு அல்லாவின் கட்டளைதான் காரணம் என்று குறிப்பிட்டிருப்பதை ஆதாரத்துடன் எவரும் மறுக்கவில்லை.

டெல்லி, அயோத்யா, மதுரை, மும்பை, அகமதாபாத்..போன்ற பல இடங்களில் குண்டு வைத்தவர்கள் ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் முன் அறிவிப்பு செய்துள்ளார்கள். குரானின் 9 : 123, 9:14 வசனங்கள் ஆகியவற்றை ஆதாரமாக காட்டியிருப்பதை இஸ்லாமிய மத அறிஞர்கள் கூட இதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் மூலம் முஸ்லீம்கள் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல, அதே நேரத்தில் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கம் அல்ல என்று கமல் கூறியுள்ளாரே..?

கமல் கூறுவது வேறு. ஆனால் முஸ்லிம்களை காப்பாற்றுவதுதான் அவருடைய உள்நோக்கம் என்பது நடுநிலையாளர்களுக்கு புரியும்.

அவரே ‘ஹே ராம்’ இந்து தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று கூறியிருக்கிறாரே! எனவே அவரும் தி.மு.க தலைவரை போல இந்து விரோதிதான்.

‘ஹே ராம்’ திரைப்படம் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று இப்போது கமல் கூறியிருப்பது ஏன்?

ஹே ராம்! அவருக்கே வெளிச்சம்.

மத வெறியின் காரணமாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணம். இதற்காக வருத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளாரே?

சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியும், வரலாறு தெரியாது. பாபர் அயோத்யா, மதுரா, காசி ஆகிய கோவில்களைத் தவிர ஏறத்தாழ 3000 கோவில்களை இடித்தார்.

அந்த இடங்களில் எல்லாம் மசூதிகளைக் கட்டினார். இன்றைக்கும் காசிக்கும், மதுராவிற்கும் போய் வருகிறவர்கள் இடிபாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களையும் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அயோத்தியில் பாபர் , ராமர்கோவிலை உடைத்து ஒரு கட்டிடம் கட்டினான். அது மசூதியே அல்ல. மசூதி தூண்களில் தெய்வ சிற்பம் இருக்காது.

முகம், , கை கழுவ ஒரு குளம் இருக்கும். வலம் வருவதற்கான ஏற்பாடு இருக்கது.

நீதிமன்ற உத்தரவுப்படி அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட போது விக்ரமாதித்யன் கட்டிய கோவிலின் மண்டபங்கள் காணக் கிடைத்தன.

ராமர்கோவிலை காப்பாற்ற 43 போர்கள் நடந்தன, ஏறத்தாழ 3 லட்சம் பேர் பலியானார்கள். இதில் ராஜஸ்தானை சேர்ந்த 3 ஆயிரம் பெண்களும் அடங்குவர்.

இந்த ஆதாரங்கள் எல்லாம் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டன. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் இதனை வெளியிட்டிருக்கிறார்கள்.

பாவம், ப. சிதம்பரத்திற்கு அரசியல் பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. வரலாற்றை எங்கு படிக்கப் போகிறார்?

எனவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பசை இல்லாத வாதங்களை வெளியிட்டு யாரையோ திருப்திப்படுத்துகிறார்.

மத வெறியின் காரணமாகவே ராமர்கோவில் இடிக்கப்பட்டது. இதற்காக முஸ்லிம்கள் மன்னிப்பு கோரவேண்டும் என்று இன்று கேட்கவில்லை. நாடு முழுவதும் அமைதியாக இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் சில முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பரித்து ராமர் கோவிலை நினைவுபடுத்தி வருகிறார்கள். நன்றி. டிசம்பர் 6ஐ மறக்க வேண்டாம்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை முதல்வர் கண்டுகொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உரிய காலத்தில் உரிய நடவடிக்கையை எடுப்போம்.

பகவத் கீதையுடன் கோபாலபுரத்துக்கு திடீர்ப் பிரவேசம், கலைஞருடன் அதிரடி சந்திப்பு, திரும்பி வரும்போது உங்கள் கையில் கலைஞர் அளித்த கி. வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகம்… மறக்க முடியாத சம்பவம் இது. நம்முடைய கேள்வி, அந்த கீதையின் மறுபக்கம் நூலை நீங்கள் படித்துவிட்டீர்களா? பகிர்ந்து கொள்ள அதில் விஷயங்கள் எதுவும் இருக்கிறதா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகும் இன்றும் கூட மக்கள் பக்தி சிரத்தையோடு பகவத்கீதையை படிக்கிறார்கள். விளக்கவுரையும் கேட்கிறார்கள். கி. வீரமணி புத்தகத்தை கலைஞராவது படித்திருப்பார் என்பது கூட சந்தேகம்தான்.

தினமும் ஐந்துவேளை தொழுகை, இது இஸ்லாமியர்களின் வழக்கம். ஞாயிறு அன்று தவறாமல் சர்ச்சுக்கு விசிட், பிரேயர்..இது கிறித்துவர்கள். ஆனால் இந்துக்கள் இப்படி இல்லையே? அவர்களிடம் பக்தி குறைந்து விட்டதா?

குறிப்பிட்ட நேரத்தில்தான் குறிப்பிட்ட முறையில்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இந்து தர்மம் கட்டாயப்படுத்தவில்லை.

வழிபாட்டு விசயத்தில் பூரண சுதந்திரம் அளித்திருப்பது இந்து மதத்தில் மட்டும்தான்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் கூடுகிற கூட்டம்; புதிய புதிய கோவில் கும்பாபிஷேகத்தில் கூடுகிற கூட்டம், பிரதோஷ வேளையில் சிவன் கோவில்களில் கூடுகிற கூட்டம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் கூடுகிற கூட்டம், சபரிமலை, பழனிமலை, திருப்பதிமலை போன்ற புனிதத் தலங்களில் கூடுகிற கூட்டம்… பக்தி அதிகரித்துள்ளது என்பதை காட்டவில்லையா?

***

நன்றி : புதிய பார்வை, வசீரன், தாஜ்

கமல் ஒரு மகான் ! – ஏ.ஹெச்.ஹத்தீப்

kamal-UPO

உன்னைப்போல் ஒருவன் – திரை விமர்சனம்

 ஏ.ஹெச்.ஹத்தீப்

இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “போதிய ஆதாரங்கள் இல்லை. நேரடி சாட்சிகள் இல்லை. குற்றத்தை சந்தேகமற நிரூபிக்கிற ஆவனங்கள் எதுவுமில்லை. என்றாலும் இந்திய வெகுஜனங்களைத் திருப்தி படுத்துவதற்காகவே குற்றம் சாட்டப்பட்ட அஃப்ஸல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்”என்று உலகமே முக்கின்மீது விரல் வைத்து வியக்கின்ற ‘அபார’மான தீர்ப்பொன்றை வழங்கிற்று. உச்சநீதிமன்றத்துக்கும் உன்னைப்போல் ஒருவனுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். இரண்டுமே சட்டத்தின் பார்வையில் குற்றமிழைக்கின்றன. ஒருவனைத் தண்டிப்பதற்கு ‘மக்கள் கோபத்தில் இருக்கிறாரர்கள்’என்று உணர்வது மட்டும் போதாது. ஒரு காரணத்துக்காக மக்கள் குஜராத்தில் சினம்கொண்டிருப்பார்கள். அதே காரணத்திற்காக காஷ்மீரில் மகிழ்ச்சியில் மிதப்பார்கள். மகாராஷ்டிரக்காரர்களும் பஞ்சாபைச் சேர்ந்தவர்களும் ஒரே தேசத்தவர்கள்போல் தோன்றினாலும் அவர்களுக்குள் அநேக மதமாச்சரியங்கள் உண்டு. தமிழக மக்களின் வெறுப்பையும் மத்தியப்பிரதேசத்தவர்களின் ஆத்திரத்தையும் ஒன்றாக முடிச்சுப்போடுவது தேசத்தின் நாடித்துடிப்பை உணராதவர்களின் கணிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய வெகுஜனம் ஒவ்வோர் இடத்திலும், ஒவ்வொரு தருணத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காக மகிழ்கிறார்கள் அல்லது இகழ்கிறார்கள்.இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், காமராசர், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஒப்பற்ற தலைவர்கள் அனைவருமே ஒருகாலக்கட்டத்தில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள்தான். இல்லையெனில் அரசியல் சரிவுகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கமாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்டனர் என்பது என்பது எப்படி அபத்தமோ அதுபோலவே ஒட்டுமொத்த தேசமுமே அவர்களை அரவணைத்துக்கொண்டது என்பதும் பச்சைப்பொய். எனவே ஒருவனைத் தூக்கிலிடுவதற்குத் தேவைப்படுவதெல்லாம் நேரடிச் சாட்சிகள் மற்றும் உறுதியான ஆதாரங்களே தவிர, மக்களிடம் அவ்வப்போது தோன்றி மறையும் உணர்ச்சிகள் அல்ல. நல்லவேளையாக, வெகுஜனங்களால் அவர்கள் தூக்கியெறியப்பட்ட சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ‘மக்களைக் குஷிப்படுத்த’ என்ற வாக்கியத்தில் மயங்கி தலைவர்களைச் ‘சிரச்சேதம்’ செய்கின்ற அபாரமான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்காதது நாடு செய்த புண்ணியம்.

அப்படித்தான் இருக்கிறது ‘உன்னைப்போல் ஒருவ’னில் கமலஹாசனால் முன்மொழியப்பெற்ற ஆவேசக்கருத்தும். ‘ஆதாரங்கள் எதுவுமில்லை.ஆனால் தூக்குத்தண்டனை உறுதி’ என்ற விசித்திரமான தீர்ப்புக்கும் கமலின் முடிவுக்கும் அதிக வித்தியாசமில்லை. ‘மக்களைத் திருப்திப்படுத்த’ என்கிற அர்த்தமற்ற வார்த்தை ஜாலங்கள், ஆழ்ந்த அறிவு சார்ந்ததோ சட்டத்தின் உயிரோட்டத்தை அடிப்படையாகக்கொண்டதோ அல்ல. உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசராகட்டும் அல்லது அறிவுஜீவி எனப்புகழப்படும் கமலஹாசனாகட்டும் சராசரி அளவுகோளுக்கு அப்பாற்பட்டவர்கள்.தராசுகளின் கொள்ளளவில் அவர்கள் கட்டுப்படமாட்டார்கள்.அவர்கள் கூறுவது வேதவாக்கு. எதையும் கூறுவதற்கு முன்னால் ஒன்றுக்கு நூறுமுறை சிந்திக்க வேண்டிய கட்டாயமும் கடமையும் அவர்களுக்கு உண்டு.

குறிப்பாக கமலுக்கு.

ஏனெனில் அவர் விரல் சொடுக்கும் நேரத்தில் மக்களைச் சென்றடைகிறார். ஈட்டியைவிட ஆழமாக அவரது கருத்துக்கள் நெஞ்சில் பாய்கிறது.ஐந்து வயது குழந்தைமுதல் எழுபதுவயது முதியவர்வரை திரைப்படம் என்ற சக்திமிக்க மீடியாவால் ஈர்க்கப்பட்டவர்கள். எனவே எண்ணித் துணிகக் கர்மம் என்று சுட்டிக் காட்டுவது உசிதம்.

சுமார் பத்தாண்டுகளுக்குமுன், ‘குருதிப்புன’லில், ‘தீவிரவாதிகளுக்குள்ளிருந்தே அவர்களை எதிர்ப்பவன் உருவாக வேண்டும்’ என்ற ஒரு கருத்தை முன்வைத்தார் கமல். அது ஒரு சொதப்பல் என்றே தோன்றிற்று. தீவிரவாதத்தின் மூர்க்கத்தையும் வீரியத்தையும் பற்றி விரிவாக உணர்ந்துகொள்ள முடியாத பக்குவமின்மையும் பலவீனமுமே அதற்குக் காரணங்கள் எனக்கூறலாம். ‘பயங்கரவாதிகள் திருந்த வேண்டும்’ என்று எளிமையாகச் சொல்லவேண்டியதை அப்போது அவர் கடுமையாக, மக்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ‘சங்கேத பாஷை’யில் சொல்லிவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது. தீவிரவாதிகள் திருந்த வேண்டும் என்பதைக்காட்டிலும் அவர்கள் முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்று எடுத்துரைப்பது நன்று. சாலச் சிறந்தது. காரியச் சாத்தியமிக்கது. எதார்த்தமானது.

திருந்துவதும் திருத்துவதும் தீவிரவாதிகளின் அகராதியில் இடம் பெறாத சொற்கள்.

இவற்றைப் பின்னர் புரிந்துகொண்டாரோ என்னவோ ஒரு மாமங்கத்துக்குப்பின்னர், இப்போது ‘உன்னைப்போல் ஒருவன்.’ வெகுஜனங்களே வீறுகொண்டு வெகுண்டெழுந்து தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார். ‘அஃப்ஸல் குருவுக்கு மரணத் தண்டனை வழங்காவிடில் இந்திய வெகுஜனமே குற்றம் சாட்டப்பட்டவரைத் துவம்சம் செய்துவிடும் என்று தனக்குத்தானே கற்பித்துக் கொண்டு உச்சநீதிமன்றம் சற்றும் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதைப்போன்று இப்போது புரட்சிநாயகன் கமலே ‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்’ என்று மக்களை ஆசீர்வதிக்கிறார். அதன் விளைவுகளைச் சற்றும் உணராமல் மக்களை உசுப்புகிறார். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு இதுதான் உருப்படியான செயல் என்று ஈனஸ்வரத்தில் முனகுகிறார். தீவிரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்டப்போவதாகச் சூளுரைத்துக்கொண்டு இன்னொரு புதிய பயங்கரவாத வர்க்கத்துக்குப் பிறப்புக்கொடுக்கப் பகீரதப் பிரயத்தனப்படுகிறார்.

ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியே தீரவேண்டும்: பயங்கரவாதத்துக்கெதிராக ஒவ்வொரு மனிதனும் ஏதாவது செய்தாக வேண்டிய தருணமிது என்று அவர் ஆழமாக எடுத்துரைக்கிறார். ஆனால் காவல்துறையினர் உட்பட ‘எல்லோருமே துப்பாக்கி ஏந்துங்கள்’ என்பதை ஏற்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனல் பயங்கரவாத வளர்ச்சிக்கு ஒருவகையில் காரணகர்த்தாவான போலீஸ்காரர்களின் கைகளில் காரியத்தை ஒப்படைப்பதுகூட ஒரு கொடுஞ்செயல். தீவிரவாதம் பிறந்ததற்கும் வளர்ந்ததற்கும் விரிந்துபரவியதற்கும் அதிகார வர்க்கம் முக்கியக் காரணம் என்பதைக் குருதிப்புனனில் அழுத்தத் திருத்தமாகச் சொல்லிவிட்டு, இப்போது அதற்கு நேரெதிர்த்திசையில் பயணிக்கப் பார்க்கிறார் கமல்.

ஆனால் இந்தப் படத்தில் அவர் ஏதோ ஒரு நல்ல விஷயம் சொல்ல விரும்புகிறார். அதற்காகப் பிரயாசைப்படுகிறார். அவர் சிரமப்படுவதை நன்றாக உணர முடிகிறது.

ஆனால், வெகுஜனம் வாளேந்த வேண்டும் என்பது சரியான பாதையல்ல. ஒரு சராசரி இந்தியன் வெடிகுண்டு தயாரித்து, மனித நடமாட்டங்கள் மிகுந்த பகுதிகளில் வைத்துவிட்டு, காவல்துறை ஆணையரைக் கைப்பேசியில் அழைத்து, விவாதங்கள் புரிந்து, கோவை மத்தியச்சிறைவாசிகளை அழைத்துவரும்படி நிபந்தனை விதித்து, அவர்களை வெடி வைத்துச் சிதறடிக்க சினிமாவிலேயே இரண்டு மணி நேரம் பிடிக்கிறதென்றால், உண்மையான தீவிரவாதிகளுக்கு ஒரு வினாடி போதும். ஏனெனில், அவர்களுக்கு மதம் இல்லை. மார்க்கமில்லை. சட்டமில்லை. இதயமில்லை. மனிதாபிமானமில்லை. “சுடு” என்று உத்தரவு வந்தால், “நிறுத்து” என்று மறுஆணை வரும்வரை சுடுவதைத் தவிர அந்தக் கயவர்களுக்கு வேறு எந்த எழவுமில்லை. சதா இயந்திரத் துப்பாக்கிகளின் ஸ்ட்ரிக்கரில் விரல் பதித்துக் கொண்டிருக்கும் இதயமற்ற இயந்திரங்களை ஒழித்துக்கட்ட கமலின் இந்தப்புது அவதாரம் போதாது.

“பயங்கரவாதிகளின் இதயத்தோடு பேச வேண்டும்” என்கிறார் இங்கிலாந்து பிரதமர் கார்ட் ப்ரவ்ன். “அவர்களது குடும்பத்தினர் வாழும் சூழலை மாற்றியமைக்க வேண்டும். அவர்களது குழந்தைகளுக்கு உயர்க்கல்வி அளிக்க வேண்டும் ”என்று பரிந்துரைக்கிறது 565 பக்கங்கள்கொண்ட 9/11 அமெரிக்க ஆணைய அறிக்கை. தீவிரவாதத்தை ஆராய்ச்சிசெய்த அனைத்து உளவியல் நிபுணர்களும் ‘உன்னைப்போல் ஒருவன்’ கமலுக்கு எதிரான கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.

எனவே இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கமல் முடிவெடுக்க வேண்டும். அவர் ஒரு சிருஷ்டிகர்த்தா. புதுமையான, அற்புதமான கருத்துக்களுக்கு வடிவம் கொடுப்பவர். அவர் சராசரி மனிதரல்ல. அவரொரு மகான்.

மகான்களின் தவறுகள் மன்னிக்கப்படுவதில்லை.

**

நன்றி :

ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

***

இப்போதைக்கு ஒரே ஒரு சுட்டி! :

உன்னைப்போல் ஒருவன் பாசிசத்தின் இலக்கியம்!! – வினவு