கலைஞருக்கு கவிஞர் தாஜ் அஞ்சலி

kalaignar-1wp

‘உங்க பெயர் ?’
‘தாஜுதீன்!’
‘எந்த ஊர்?’
‘சீர்காழி.’
மெல்லிய சிரிப்போடு, ‘என்ன செய்றீங்க?’
‘சௌதிக்கு போக இருக்கிறேன்.’
கேட்டது கலைஞர். பதிலளித்தது நான்.

*
எமர்ஜென்சி காலக்கட்டத்தில் ஸ்டாலின் முதலாக திமுக தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கொடுமைகள் பலவும் அவர்களுக்கு அரங்கேறியது. திமுகவில் இருந்து ராஜினாமா செய்தாகணும் என்ற கண்டிப்பு வேறு! கலைஞர் குடும்ப பெண்கள் கூட எமர்ஜென்ஸியின் மிரட்டலுக்கும் – வீடு புகுந்த போலீசார்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளானார்கள் – சரியாகச் சொன்னால், சுகந்திர நாட்டுப் பிரஜைகள் அனைவரும் கொடுங்கோலை நேர்கொண்ட தருணம் அது!

திமுகவில் பலரும் பலவித இன்னல்களுக்கு ஆளாக – ஒருகட்டத்தில் ஆட்சியை இழந்தார் கலைஞர். ஆட்சியை இழந்த நிலையிலும் எமர்ஜென்ஸியை எதிர்த்தார்! சென்னை வீதிகளில் இறங்கிப் போராடினார். அவர் கொஞ்சமும் பணியவில்லை. தன் கருத்துகளைச் சொல்ல உதவும் பேனாவையும் செய்தித்தாள்களின் சுதந்திரத்தையும் எமர்ஜென்சி அரக்கம் முடக்கிவிட்ட நிலையில் அவர்தான் என்ன செய்வார்!?

என்னோடு அண்ணாமலையில் படித்த – நண்பன் செல்வராஜ் சிதம்பரத்தை சேர்ந்தவன். கலைஞர் மீது பற்றும் பாசமும் கொண்டவன். கல்லூரி பருவத்தில் – என்னோடு அரசியல் விஞ்ஞானம் ( Political Science) படித்தான் என்றாலும், கல்லூரிக்கு வெளியே பெரியாரின் தத்துவங்களை கூடுதல் பாடமாகப் படித்தவன் அவன்! பின்னே கலைஞர் மீது பாசத்திற்கு சொல்லவா வேணும்?

அன்றைக்கு ஆட்சியை இழந்து – தொண்டர்களை இழந்து – எமர்ஜென்ஸியை எதிர்த்து ஒத்தையாக போராடிக் கொண்டிருந்த கலைஞரை நேரில் பார்க்க விரும்பினான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கலைஞரை அப்படி அவன் அன்றைக்கு பார்க்காது போயிருந்தால்தான் வியப்பு!

எங்க ஊரில் கோவிந்தராஜ் என்றொரு தோழர் வெற்றிலை பாக்கு ‘ஹோல்சேல்’ வியாபாரம் செய்துவந்தவர். திமுக அனுதாபி. எமர்ஜென்ஸி காலத்தில் திருவாரூரில் ஒரு கூட்டத்திற்கு போய்விட்டுத் திரும்பிய கலைஞருக்கு, சீர்காழியில் தன் வீட்டில்வைத்து பகல் சாப்பாடு கொடுக்க விரும்பினார். கட்சி நிர்வாகிகளை அனுகி முறையான அனுமதியையும் பெற்றார். ஆக, அந்த அனுதாபி வீட்டில் பகல் சாப்பாடு. அதன்படிக்கு அவரது வீட்டில் சாப்பாட்டை முடித்த கலைஞர், கோவிந்தராஜ் வீடு சார்ந்த பக்கத்து வீதியில் திமுக கொடியையும் ஏற்றினார்.

அந்தக் கொடியேற்ற தருணம் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்ட செய்தியை 2-10 ஆல்-இந்திய ரேடியோ அறிவித்தது. அவசரமாக கலைஞர் சென்னை புறப்பட, வெற்றிலை-பாக்குக் கடை கோவிந்த ராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி கொண்டு செல்லப்பட்டார். கலைஞருக்கு பகல் சாப்பாடு ஏற்பாடு செய்த காரணத்திற்காகவே அவரை சிறைவாசம் செய்தனர். எமர்ஜென்ஸியின் செயல்பாடுகள் குறித்து ஏன்? என்று கேள்விகேட்க முடியாத நேரம் அது!

கலைஞர் தன் அரசியல் வாழ்வில் பல போராட்டங்களை கண்டிருக்கிறார். தலைமையேற்றும் களம் கண்டிருக்கிறார். ஆனால், எமர்ஜென்சியை எதிர்த்து அவர் நிகழ்த்திய எதிர்வினைகளும் – போராட்டங்களுமே அவர் புகழை இந்திய முழுமைக்கும் கொண்டு சேர்த்தது என்பதுதான் உண்மை.

ஆட்சியை இழந்த கலைஞர் – சென்னை வீதியில் இறங்கி – எமர்ஜென்ஸி கொடுமைகளை தெளிவுப்படுத்தும் வாசகங்கள் கொண்ட நோட்டிஸ்களை – மக்கள் மத்தியில் வீசியடித்து கோஷம் எழுப்பிப் போராடினார். அவர் அப்படி அன்றைக்கு போராடியது தினசரி சங்கதியாக சிலநாட்கள் தொடர்ந்தது.

அந்த எமர்ஜென்ஸி நிலையிலும் – துவளாமல் அப்படிப் போராடும் கலைஞரை காண என்னையும் உடன் அழைத்தான் நண்பன் செல்வராஜ். ‘சென்னை போய் ஒருதரம் கலைஞரை பார்த்து வரலாம், கூடவே ‘ஷோலே’ இந்திப் படத்தை ‘சத்திய’த்தில் கண்டுவரலாம்’ என்று கூடுதலாக அழுத்தம் தந்தான். உட்பட்டேன்.

எமர்ஜென்ஸி நேரத்தில் கலைஞரை காண்போர்கள் அனைவருமே மத்திய அரசின் போலீஸாரால் கண்காணிப்புக்கு உள்ளாகும் நிலை இருந்தது. அதனையெல்லாம் யோசிக்காது என்னை அவன் அழைத்ததும் – நான் பரபரக்க கலைஞரைக் காணப் போனதும் மறக்க முடியாத நிகழ்வு.

அந்தக் காலக்கட்டத்தில் நான் காமராஜ் பிரியன். அதனாலேயே காமராஜை எதிர்த்த இந்திராவை எனக்கு பிடிக்காது. இந்திரா கொண்டுவந்த எமர்ஜென்ஸியையும் பிடிக்காது. அதன் சர்வாதிகாரத்தனங்களையும் சேர்க்க சுத்தமாய் பிடிக்காது. காமராஜ் சார்ந்து இந்த முடிவை நான் எடுத்திருந்தேன் என்றாலும், என் சுய அறிவும் அதனைதான் சொல்லியது. ‘சுதந்திரம் இல்லாமல் மனிதன் வாழ்வதெப்படி?’

எமர்ஜென்ஸி கொடுமைகளை – இந்தியா பூராவும் நடந்த பல மூத்த அரசியல்வாதிகளின் கைதுகளை, களமிறங்கி எதிர்க்க முடியாத உடல்நல குறைவில் காமராஜ் வீட்டிலேயே முடங்கிவிட, எமர்ஜென்சியை கலைஞர் பலமாக எதிர்த்தார்! பத்திரிகை ஆசிரியர் சோ, தன் துக்ளக் வாயிலாக எமர்ஜென்ஸியை மறைமுகமாகவும் – ஆனால் – மக்களுக்கு உறைக்கும்படிக்கும் ‘சடையராய்’ எதிர்த்து எழுதினார். அதாவது, அன்றைக்கு காமராஜின் பின்புலமாக நின்றபடிக்கு – அவரது பாதுகாப்போடு சோ எழுதினார் என்றும் கொள்ளலாம்.

அன்றைய காலக்கட்டத்தில் சிறையில் அடைக்கப்படாமல் வெளியில் நின்று போராடிய மாநில முதல்வர் ஒருவர் உண்டென்றால் அது கலைஞராகதான் இருக்கும். அதுமாதிரியே சிறைபிடிக்கப்படாமல் எமர்ஜென்சியை எதிர்த்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இருந்தார் என்றால் அது துக்ளக் ‘சோ’வாகத்தான் இருக்கும்! தவிர, ஏக இந்தியாவிலும் எமர்ஜென்சியின் போது கைது செய்யப்படாத பெரிய தலைவர் ஒருவர் விளங்கினாரென்றால் அது காமராஜாகதான் இருக்கும்!

இதனை இப்படிக்கூடச் சொல்லலாம், காமராஜின் உறுதுணையால் பிரதமர் அரியாசணை ஏறிய இந்திரா, தனது எமர்ஜென்சியின் போது இந்தியா பூராவும் பல அரசியல் தலைவர்களை – மதத்தலைவர்களை கைது செய்தபோதும், தமிழகத்தில் தனது அடாவடியை அடக்கி வாசித்ததற்கு காரணம், காமராஜ் தமிழகத்தில் இருக்கிறார் என்பதினாலேயே!

இப்படியான ஓர் கால சூழலில்தான் செல்வராஜும் நானும் கலைஞரைக் காணச் சென்றோம்.

ரயிலைவிட்டு இறங்கி, காலைப்பணிகளை முடித்துக் கொண்டு – கலைஞரைக் காண நேரே கோபாலபுரம் போனோம். அங்கே வீட்டில் கலைஞர் இல்லை. அன்பாலயத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். அன்பாலயம் (இன்றைக்கு அது திமுக இளைஞர் அணி சார்ந்த அலுவலகக் கட்டிடமாக இருக்கிறது – தவிர, ‘அறிவாலயம்’ அப்போது கட்டப்படவில்லை. )

அன்பாலயத்துக்கு போனோம். உள்ளே பெரிய ஹாலிற்குள் நுழைந்த போது, ஹாலின் மறுபக்கம் நீள மேஜை போடப்பட்டிருந்தது. மேஜைக்கு அந்தப் பக்கம் கலைஞர், நெடுஞ்செழியன், பேராசிரியர் என மூவரும் உட்கார்ந்து இருந்தனர். அவர்களைக் காணவந்த கட்சிக்காரர்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராய் அவர்களை கண்டு சென்றவண்ணம் இருந்தனர். செல்வராஜும் நானும் அந்த நீளவரிசையில் போய் நின்றோம். எங்க ‘டர்ன்’ வந்தது.

எங்களுக்கு முன் நின்ற கோவையைச் சேர்ந்த கணவன் மனைவி இருவர் கலைஞருக்கு வணக்கம் சொன்னார்கள். அவர்களிடம் கலைஞர் நேரம் எடுத்து கொண்டு, எமர்ஜென்சி நேரத்து நள்ளிரவு கைது பற்றி கூறி நொந்து கொண்டார். நள்ளிரவில் போலீஸார் வீடுதேடிவந்து ஸ்டாலினை அடித்துத் துன்புறுத்தி கைது செய்துகொண்டு போனதையும், வீட்டில் உள்ள பெண்களை கண்டமேனிக்கு பேசி துன்புறுத்தியதையும் அவர்களிடம் விவரித்தார் கலைஞர். அந்தக் கணவனும் மனைவியும் அழாத குறையாக கண்களில் நீர் மல்க அகன்றார்கள். அடுத்து என் நண்பன் செல்வராஜ் முறை. கலைஞருக்கு வணக்கம் செய்தவனாக முன்னே நகர்ந்து பிற தலைவர்களுக்கும் தன் வணக்கத்தை செய்தபடி நகர்ந்தான். இப்போது நான் நகர்ந்து வணக்கத்துடன் கலைஞர் முன் நின்றேன்.

‘உங்க பெயர்?’ ‘தாஜுதீன்!’ ‘எந்த ஊர்?’ ‘சீர்காழி.’ மெல்லிய சிரிப்போடு, ‘என்ன செய்றீங்க? என கேட்டார் கலைஞர்.’ ‘சௌதிக்கு போக இருக்கிறேன்.’ அந்நாட்டிலிருந்து எனக்கு கடிதம் ஏதேனும் எழுதும்பட்சம் நேராக என் முகவரிக்கு எழுத வேண்டாம். இங்கே என் கடிதங்கள் அத்தனையும் போலீஸால் பிரித்துப் படிக்கப்படுகிறது. நண்பர்கள் முகவரிக்கு எழுதி எனக்கு கிடைக்கச் செய்யுங்கள்’ என்று சொன்னார். தலையாட்டினேன்.

‘எமர்ஜென்சியை எதிர்த்து முரசொலியில் நீங்கள் எழுதுவதை தவறாமல் படித்துவருகிறேன். மிகச்சிறப்பாக இருக்கு. நாவலர் அப்படி எதுவும் எழுதுவதில்லையே?’ என்று கலைஞரிடன் மெல்லக் கேட்டேன். தனது கையை நாவலர் பக்கம் சுட்டிக் காட்டி, ‘இதனை அவரிடமே கேளுங்கள்’ என்றார். மீண்டும் கலைஞருக்கு வணக்கம் செய்தவனாக முன்நகர்ந்து ‘எமர்ஜென்ஸி கொடுமைகள் குறித்து மறைமுகமாகவேனும் முரசொலியில் நீங்கள் ஏதும் எழுதுவதில்லையே ஏன்?’ யென கேட்டேன். அவர் என்னை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை. கீழே குனிந்தபடிக்கு ஏதோ யோசனையில் இருந்தார்.

எமர்ஜென்சி காலக்கட்டத்தில் அதன் சிறைவாசத்திற்கும் – அதனூடான பல கொடுமைகளுக்கும் – துன்புறுத்தல்களுக்கும் பயந்து, பல மாவட்ட திமுக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் கட்சியைவிட்டு – தங்கள் தலைவர் கலைஞரை விட்டு – வரிசை வரிசையாக அண்ணா திமுகவுக்கு சென்றுகொண்டு இருந்தனர். அந்த வரிசையில் நாவலர் நெடுஞ்செழியனும் அண்ணா திமுக-விற்கு விரைவில் போக இருக்கிறார் என்றோர் செய்தி அன்றைக்கு உலா வந்தவண்ணம் இருந்தது. நான் சென்னையில் வைத்து அவரை கண்டுவந்த சிலநாட்களில் அது மெய்யாகி அவர், அண்ணா திமுக-வென்றாகிபோனார்!

கலைஞரை அதன் பின்னர் நான் சந்தித்ததில்லை. நானும் அதற்கு முயன்றதில்லை. காமராஜ் மீது பிரியம் கொண்டவனாக ஊரில் நாட்களை அரசியலோடு நகர்த்திக் கொண்டிருந்தேன். பின்னர் 1998-ம் ஆண்டு வாக்கில் ‘சுப மங்களா’ என்கிற இலக்கிய இதழ் வழியாக, நவீன இலக்கியம் பொருட்டான கலைஞரின் நேர்காணலில் எதிரொலித்த அவரது நவீன இலக்கியப் புரிதலுக்கு – எதிராய் விமர்சனம் ஒன்று எழுதினேன். அன்றைய கலைஞரது மந்திரிசபையில் சபாநாயகராகவும், திமுகவின் இலக்கிய அணித் தலைவராகவும் இருந்த ‘தமிழ்க்குடி மகன்’ சுபமங்களாவின் அடுத்த இதழில் என் விமர்சனத்திற்கு பதில் அளித்திருந்தார். 2006 – வாக்கில் திண்ணை வலைதளத்திலும், பின்னர் ஆபிதீன் பக்கங்களிலும் இந்தச் சர்ச்சையை குறித்த என் பதிவை செய்திருக்கிறேன்.

கலைஞர், இன்றைக்கு தனது 95-வது வயதில் இயற்கையை எய்தி இருக்கிறார். அவரது பெரும்வாழ்வு மதிக்கத் தகுந்தது. ஐந்துமுறை முதல்வராகி அவர் ஆற்றிய தொண்டுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே என்றாலும், பின்தங்கிய – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் செய்த நற்காரியங்கள் அதிகம். அத்தனையும் – திராவிட சிந்தனைக் கொண்டது. பெரியார் குறிப்பிட்டு சென்ற கீழ்த்தட்டு  மக்களுக்கான நற்காரியங்கள் அவை!

அந்த நற்காரியங்களை கலைஞர் செய்தார் என்று சுலபமாக நான் சொல்லிவிட்டேன். இதனையெல்லாம் அவர் நேரம் பார்த்து சட்டம் இயற்றி மேட்டுக்குடி மக்களின் ஏச்சு பேச்சுகளை ஏற்று – அவர்களது தடைகளை தகர்த்து – கலைஞர் நடத்திக்காட்டிய சாதனைகள்!

இன்னொரு மொழியில் சொல்வோமெனில், கலைஞர் நிறைவேற்றிய கீழ்த்தட்டு மக்களுக்கான திட்டங்கள் அத்தனையும் வாழ்வியல் புரட்சி சார்ந்தது. ஏழை எளிய மக்களுக்கான நல்வாழ்வை – அவர்களுக்கு கிட்ட வேண்டிய சமநீதியை ஓர் அரசு வழங்குவதென்பது சாதாரணமானதல்ல! வெளியில் நின்று வாய் இருக்கிறது என்பதற்காக எதனையும் பேசிவிடலாம். விமர்சித்துவிடலாம். ஆனால் அரியணையில் அமர்ந்த வண்ணம் அதனையெல்லாம் செய்து முடிப்பதென்பது அத்தனை எளிதானதல்ல.

இப்படியான திராவிட சிந்தனை கொண்ட சட்டங்கள் இனி சபையேறி – அது வென்று – மக்களை சென்றடைவதும்தான் எங்கணம்? பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத மண்ணில் நாளைக்கு இதெல்லாம் சாத்தியமா? எட்டுவழிச்சாலை போட – மலைகளை உடைக்க – கனரக கான்ராக்ட் விட்டு இங்கத்திய இயற்கை செல்வத்தை அள்ளிப் போக ஆயிரம் பேர் ஆளவருவார்கள் போவார்கள். அடித்தட்டு மக்களை கைதூக்கிவிட கலைஞர் மாதிரி இன்னொரு பெரியாரின் பிள்ளை எவர்வருவார்?
*
(6:56 PM 13/8/2018)

taj-fb2

நன்றி : தாஜ்

கழக நிலைப்பாடு படும் பாடு – ‘துக்ளக்’ சத்யா

நன்றாக இருக்கும் எங்கள் நாகூர் வித்வானை முந்தாநாள் முகநூலில் ’தெரியாமல்’ மவுத்தாக்கிய நண்பர் தாஜை திட்டுவதற்காக ஃபோன் செய்தேன் நேற்று. ‘இந்தபாருடி,  ஆபிதீன் இன்னும் ஹயாத்தோடு இருக்கார்..!’ என்று மனைவியிடம் பயந்து அலறுகிறார்! காதர் ஒலி சார், என்ன செய்வது இவரை?  துக்ளக் சத்யா பற்றி , ’யார் யார் எழுத்திலோ… எழுத்தின் சிறப்பு பல தினுசுகளில் வெளிப்பட்டிருக்கிறது. இங்கே, சத்யாவின் எழுத்து காட்டும் தரம் தனிரகம். இதனை வாசிக்கும் அன்பர்கள், கட்டுரை என்கிற கணக்கில் மட்டும் வாசிக்கும் பட்சம், கட்டுரை மட்டும்தான் கிடைக்கும். நடந்தேறிய அரசியல் சம்பவங்களை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, பின் வாசிக்க வாசிக்க மனதால் அசைபோடும் பட்சம், அடக்க முடியாத சிரிப்பலையோடு ஓர் ஆனந்தத்தில் முழுகலாம்’ என்கிறார் தாஜ். நம்பி வாசியுங்கள். நன்றி. –  ஆபிதீன்

***

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவை அறிவிக்கும் வரை நாம் ஏன் சஸ்பென்ஸில் காத்திருக்க வேண்டும்? தி.மு.க.வினரின் மனநிலையை இப்போதே ஸ்கேன் செய்து பார்க்கலாமே! – சத்யா

*

karunanidhi-2hindu

கலைஞர்:
எல்லோரும் வந்தாச்சா? விவாதத்தை ஆரம்பிக்கலாமா? கழகம் எப்போதுமே ஜனநாயக ரீதியிலே நடக்கிற இயக்கம். நாடாளுமன்றத் தேர்தல்லே எந்தக் கட்சியோடு கூட்டு வெச்சுக்கலாமுன்னு உங்க கருத்துக்களை மனம் திறந்து சொல்லலாம். அப்புறம், குடும்ப உடன்பிறப்புகளோட கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கிறேன்.

மாவட்டச் செயலாளர்:
காங்கிரஸோட கூட்டு வெச்சுத்தான் தலைவரே நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு. சட்ட சபைத் தேர்தலிலே, நாம கொடுக்காமலேயே 63 இடங்களை எடுத்துக்கிட்டு, நம்மை மைனாரிட்டி எதிர்க் கட்சியா ஆக்கினதே காங்கிரஸ்தான். மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, 28 எம்.பி. ஸீட் எடுத்துக்கிட்டு ஒண்ணோ ரெண்டோதான் ஜெய்ப்பாங்க. காங்கிரஸை நாம் ஏற்கனவே கழட்டி விடாம இருந்தா, இப்ப கழட்டி விட்டுடறது நல்லதுங்க.

துரைமுருகன்:
கழட்டி விட்டா என்ன ஆகும்னு யோசிக்கணும். 2ஜி கேஸ்லே ஸி.பி.ஐ.க்கு சுதந்திரம் கிடைச்சுடாதா? தலைவர் நிம்மதியா கட்சி நடத்த வேண்டாமா? கனிமொழியைக் காப்பத்தறது முக்கியமா? கழகத்தைக் காப்பாத்தறது முக்கியமா? எனக்கென்னவோ, காங்கிரஸோட கூட்டு சேர்ந்தா வர்ற கெடுதலை விட, கூட்டு சேரலைன்னா வர்ற கெடுதல்தான் அதிகம்னு தோணுது.

மா.செ:
அதில்லைங்க, எப்படியாவது விஜயகாந்தை இழுத்துட்டா நல்லது. கழகம் வலுவோட இருந்தாத்தான் 2016-லே மறுபடியும் ஆட்சியைப் பிடிச்சு, எவ்வளவோ செய்யலாம். முன்னாள் மந்திரிகளை சொத்துக் குவிப்பு வழக்கிலேர்ந்து காப்பாத்த முடியும். கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி எவ்வளவு நாளாச்சு!

ஸ்டாலின்:
விஜயகாந்தை நாம கூப்பிட்டா அவர் கேக்கிற ஸீட் குடுக்கணும். அவரே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம். இன்னும் டைம் இருக்குது. வேணும்னா கடைசி நேரத்திலே முயற்சி செஞ்சு பாக்கலாம்.

தயாநிதி மாறன்:
நம்ம கெட்ட நேரம் திடீர்னு விஜயகாந்தும் அம்மையாரும் சேர்ந்துட்டா, அந்தக் கூட்டணி பலமாயிடும். அதனாலே விஜயகாந்தையும் விட்டுடாம காங்கிரஸையும் சேர்த்துக்கிட்டு கூட்டணி அமைக்கலாம். அவங்களுக்கு ஒதுக்கினது போக மீதி ஏதாவது தொகுதி இருந்தா அதுலே போட்டி போடலாம். 2ஜி கேஸ் இதே மாதிரி நல்லபடியா போகும், நீரா_ராடியா டேப்பை ஸி.பி.ஐ. ஆராயாது. இவ்வளவு நன்மை இருக்குது.

கலைஞர்:
அதுக்காக? சுயமரியாதையை இழக்க நான் தயாராக இல்லை. இந்த மத்திய அரசாலே இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மீனவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. கழகத்தின் உணர்வுகளை மதிக்காம, காமன்வெல்த் மாநாட்டுலே கலந்துக்க பிரதமரே இலங்கை போறார். இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்க என்னாலே முடியாது. நாளைக்கே டெஸோ கூட்டம் கூட்டறேன்.

தயாநிதி மாறன்:
(செல்ஃபோனை நீட்டியபடி) தாத்தா… டெல்லியிலேர்ந்து பேசறாங்க. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்திலே ஸி.பி.ஐ. குற்றப் பத்திரிகை ரெடி பண்ணியிருக்குதாம். மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறாங்க.

கலைஞர்:
வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வரையிலே இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரா நான் எப்பவும் செயல்படமாட்டேன். நாம காங்கிரஸுக்கு எதிரா முடிவெடுத்தா மட்டும் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துடுமா? தனி ஈழம் கிடைச்சுடுமா? மீனவர்களை யாரும் கடத்த மாட்டாங்களா?

தயாநிதி மாறன்:
ஹலோ… கலைஞர் சொன்னதைக் கேட்டுகிட்டீங்களா? அதாங்க கழக நிலைப்பாடு. ஆவேசமா விவாதிச்சாலும், கடைசியிலே ஃபார்முக்கு வந்திடுவோம்.

மா.செ:
காங்கிரஸுக்கு எப்பவும் விஜயகாந்த் மேலே அக்கறை அதிகம். அவங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு, கழகத்தை தனிமைப்படுத்திட்டா, கழகம் மூணாவது இடத்துக்குப் போனாலும் போயிடும். அதைத் தடுக்கணும். விஜயகாந்த் கேக்கிற ஸீட்டைக் குடுத்து அவரை நம்ம பக்கம் இழுத்துடுவோம். அப்பதான் காங்கிரஸுக்கு புத்தி வரும்.

ஸ்டாலின்:
விஜயகாந்துக்கு அதிக ஸீட் குடுத்தா, எதிர்காலத்திலே எனக்கு அவரே போட்டியா வந்துடுவாரு. எப்படியும் அம்மையார் அணியிலே இடம் கிடைக்காம கம்யூனிஸ்ட்கள் நம்மைத் தேடி வருவாங்க. அப்புறம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விஜயகாந்தை நம்ம பக்கம் கூட்டிட்டு வந்துடுவாங்க. 12 ஸீட்டை ஒத்துமையா பிரிச்சுக்குங்கன்னு சொல்லிடலாம்.

மா.செ:
சமயத்திலே அ.தி.மு.க.வும் காங்கிரஸும் கூட கூட்டு சேர்ந்துடலாம். அதிகார பலத்திலே அவங்க ஜெயிக்க முடியும். மத்தியிலே காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க.தான். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டு வெச்சா, பா.ஜ.க. தலைவர்கள் விஜயகாந்தையும் நம்ம பக்கம் இழுத்துட்டு வந்துருவாங்க. அப்ப நம்ம அணிதான் ஸ்டிராங்கா இருக்கும்.

கலைஞர்:
கூட்டணி தொடர்பான என்னுடைய பல கருத்துகளிலே அதுவும் ஒன்று. கலைஞர் இருக்கிற இடத்திலே மதவாதம் இருக்காதுன்னு ஸி.எஸ்.ஸே. சொல்லியிருக்கார். மோடிக்கு எதிரா அமெரிக்காவுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதியதைக் கண்டிச்சவனே நான்தான். நமது தொப்புள்கொடி தமிழினத்தை திட்டமிட்டு அழித்த ரத்த வெறி ராஜபக்‌‌ஷேவுக்கு துணை போன காங்கிரஸுக்கு, இன்னும் எத்தனை காலத்துக்கு நாம லாலி பாடிக்கொண்டிருக்க முடியும்? நான் காரணமில்லாம டெஸோவை ரெண்டாவது தடவை உருவாக்கலை….

துரைமுருகன்:
(செல்ஃபோனில்) ஹலோ… அமலாக்கப் பிரிவிலேர்ந்து பேசறீங்களா?… அப்படியா? ஐயையோ! ஒரு நிமிஷம்… தலைவர் கிடே குடுக்கிறேன். கலைஞரே! டெல்லியிலியிலேர்ந்து ஃபோன், கனிமொழிக்கு எதிரா அமலாக்கப் பிரிவு ஏதோ புதுசா வழக்கு போடப் போகுதாம். கூட்டணி விஷயமா என்ன முடிவெடுத்தீங்கன்னு கேக்கிறாங்க.

கலைஞர்:
நான் அவசரப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கத் தயாராயில்லை. மதவாத ஆக்டோபஸ் ஆட்சி இந்தியாவில் எந்த விதத்திலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்னு மசூதி இடிக்கப்பட்டபோதே சபதம் எடுத்திருக்கோம். மதவாத பா.ஜ.க.வை விரட்டியடிக்க காங்கிரஸை விட்டால் வேறு என்ன இருக்கிறது?

துரைமுருகன்:
அப்ப சரிங்க… அப்படியே சொல்லிடறேன். ஹலோ… ஒண்ணும் பிரச்னை இல்லைங்க. கூட்டணி தர்மப்படியே நடக்கலாம். முகுல்வாஸ்னிக்கை அனுப்புங்க. பேசித் தீர்த்துக்கலாம்.

மா.செ:
காங்கிரஸோட சேர்ந்தாலே நமக்கு ரொம்ப கெட்ட பேருங்க. மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, தமிழ் உணர்வாளர்கள் ஓட்டெல்லாம் அம்மையார் பக்கம் போயிடும். மீனவர் கடத்தல் நடக்கும் போதெல்லாம் நம்மைத்தான் திட்டுவாங்க. ராஜபக்‌‌ஷே பண்ற கொடுமைக்கெல்லாம் நாமதான் பதில் சொல்லணும்.

மா.செ:ஆமாங்க. இலங்கைப் பிரச்னையிலே நாம வீரமா கேக்கறதுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்குது. காங்கிரஸோட சேர்ந்துட்டா, சொல்றதுக்கு ஒரு பதில் கூட இல்லை.

மா.செ: அப்படியும், காங்கிரஸோட கூட்டு சேர்றதா இருந்தா, ‘அடுத்த சட்டசபைத் தேர்தல்லே கழகத்தை கழட்டி விட்டுடணும்’னு இப்பவே ஒப்பந்தம் போட்டுக்கறது நல்லதுங்க. காலாகாலத்திலே நமக்கு காங்கிரஸ் கிட்டேயிருந்து விடுதலை கிடைச்சா, சுதந்திரமா கழகத்தை வளர்க்கலாம்.

துரைமுருகன்:
கழகத்தை வளர்க்க இப்ப என்ன அவசரம்? மாநிலத்திலே அம்மையாரை விரோதிச்சுட்டு, மத்தியிலே காங்கிரஸையும் பகைச்சுக்கிட்டா நிம்மதியா வாழ விட்டுருவாங்களா? சுவர் இருந்தாதான் சித்திரம். தலைவர் குடும்பத்திலே பிரச்னை இல்லாம இருந்தாத்தான் எதிர்காலத்திலேயாவது அவராலே கழகத்தைக் காப்பாத்த முடியும்.

ஸ்டாலின்:
ஊழல்களால் காங்கிரஸ் பேர் ரொம்பக் கெட்டுப் போயிருக்குது. அவங்களோட சேர்ந்து தேர்தலை சந்திச்சா, ஊழல் கட்சிகள் ஒண்ணா சேர்ந்துட்டதா கிண்டல் பண்ணுவாங்க. காங்கிரஸை எதிர்த்தா, ஊழலை எதிர்க்கிறோம்ன்ற பேர் நமக்கே கிடைக்கும். காங்கிரஸ் கூட்டு வேண்டவே வேண்டாம். கலைஞர் முடிவை ஏத்துக்கறேன்.

கலைஞர்:
தம்பி ஸ்டாலின் கருத்துதான் என் கருத்தும். சோனியாவின் மருமகனும் உதவியாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படறாங்க. அவுங்களுக்கு ஒரு நீதி. கழகத்துக்கு ஒரு நீதியா? அதனால்தான் இலங்கைப் பிரச்னையிலேயும், சேது திட்டத்துக்காகவும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய கட்டாயத்திலே இருக்கோம்.

தயாநிதி மாறன்:
மறுபடியும் டெல்லியிலேந்து ஃபோன்.

கலைஞர்:
அதுக்குள்ளே ஏன் அவசரப்படறாங்க? நாமதான் இன்னும் எந்த முடிவும் எடுக்கலையே….

தயாநிதி மாறன்:
அழகிரியின் உரத்துறையிலே ஊழல்ன்னு பா.ஜ.க. பிரச்னை கிளப்புதாம். ஸி.பி.ஐ. விசாரணை வெக்கணுமுன்னு கேக்கறாங்களாம். கூட்டணி விசயமா இன்னுமா முடிவெடுக்கலைன்னு கேக்கிறாங்க. என்ன பதில் சொல்றது?

கலைஞர்:
காங்கிரஸ் உடனான உறவில், கழகத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லைன்னு சொல்லிடுவோம். அப்பத்தான் நாம காங்கிரஸை ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமான்னு யாருக்கும் புரியாது.

***

thuklaksathya
நன்றி: சத்யா / துக்ளக் (14.8.2013) , தட்டச்சு நிபுணர் : தாஜ்

***

தொடர்புடைய கட்டுரை :  தி.மு.க.வும் ஐ.நா. சபையும்… – ‘துக்ளக்’ சத்யா

கலைஞரும் நவீன தமிழ் இலக்கியமும்

இது இரண்டாவது பாகம் போலும்! ஏற்கனவே ‘திண்ணை’யில் ‘கருணாநிதியும் நவீன இலக்கியமும்’ எழுதிய நண்பர் தாஜ். இப்போது இந்த கட்டுரையையும் அனுப்பியிருக்கிறார். ம்…. கல்யாண சுமைகள் போய்விட்டால் கலாட்டா பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள்! யோவ், என்னை சும்மா இருக்க விடமாட்டாயா?

*

கலைஞரும் நவீன  தமிழ் இலக்கியமும்.
தாஜ்..

கொஞ்சம் பேசிவிடுகிறேன்…

ஜெயகாந்தனையும், சுஜாதாவையும் என் கல்லூரி பருவத்தில் வாசித்து ஓய்ந்த பிறகு, குறிப்பிட்ட சில வருடங்கள் வேறு திசைகளில் மும்முரமாகிவிட்டேன். ஆண்டுகள் கழித்து ராஜ நாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ வழியாக ஜானகிராமன், புதுமைப் பித்தன், க.நா.சு., மௌனி, நகுலன், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், அம்பை, வெங்கட் சாமிநாதன் என்று கிளம்பி சிற்றிதழ்களில் சஞ்சாரம்செய்து இன்னும் சில சிகரங்களிடமும் வியந்து நவீன கவிதைகளையும், அப்படியான சிறுகதைகள், நாவல்களையும் அடையாளம் கண்டுகொண்டேன். அதன் அழகியல் வியாபகம் என்னை ஆட்டிப்படைத்ததை சொல்லி மாளாது! அதனூடான கவர்ச்சி, இன்னும் கூட என்னை வசீகரிக்கிறது!

சிற்றிதழ்களில் சஞ்சரித்ததாக குறிப்பிட்ட ‘அந்தக் காலகட்டம்’ கலைஞர் தன் அரசு கட்டிலில், உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்து நாட்டையும் மக்களையும் பரிபாலணம் செய்த காலக்கட்டம்! மஹா வேலைபளு கொண்ட அந்த தருணங்களிலும்கூட அவர் தனக்கு இஷ்டமான இலக்கிய கூறுகளுடன் தாராளமாக புழங்கினார்! தினைக்கும் எழுதுகிற முரசொலி கடிதம் போக, திருக்குறளுக்கு உரை, தன் வாழ்க்கை வரலாற்றைத் தொட்டுக்காட்டிய  நெஞ்சுக்கு நீதி,  திரையுலக சங்கதிகளாக திரைக்கதை – வசனம்,  மேலே  அவ்வப்போது நகர மேடைகளில் பட்டி மன்றத் தலைமை,  கவியரங்கத் தலைமை என்று வியக்கவைத்துக் கொண்டிருந்தார்!! அப்படி வியக்கவைத்த நேரங்களில், இடையிடையே நவீன தமிழ் ஆக்கங்களை, அதன் கீர்த்திகளை லேசாக பிறாண்டியும் வைப்பார். அந்த மேடைகளில், தமிழால் அவரை  அலங்கரித்துப் பார்க்கும் தமிழ்த்துறைச் சார்ந்த  வல்லுனர்களுக்கு கலைஞரின் இந்த வகைப் பிறாண்டல் இதம் தரக்கூடியது. பகுதி நேர வேலையாக அவர்கள் செய்யும் ஒன்றை, கலைஞர் பிறாண்டுவதில் மஹா ஆனந்தம்!  கலைஞரும் கூட, தன்னை அலங்கரிப்பவர்களின் மன சந்தோஷத்திற்கு வேண்டியும் அதை தட்டாது செய்யக் கூடியவறாக இருந்தார் என்பதும் உண்மை!

கலைஞரின் இந்த பிறாண்டலினால், முகம் சுழித்த நவீன இலக்கிய அனுதாபிகள் யார் யாரென எனக்குத் தெரியாது.  ஆனால், அதில் ஒருவனாக  நான் இருந்தேன்  என்பது மட்டும் நிச்சயம்! இந்த பிறாண்டலின் நீட்சி, விட்டுவிட்டு தொடர்ந்த நேரத்தில்… நவம்பர்-1992/ சுபமங்களா இதழில் கலைஞரின் நேர்காணல் வந்திருந்தது. அதில் ஒரு கேள்வியாக,  நவீன இலக்கியம் சார்ந்து அவரிடம் கேட்கப்பட்டது.  அதற்கான அவரது பதில், என்னை கூடுதலாக  யோசிக்க வைத்தது. வழக்கமாதிரி அவர் நவீன இலக்கியத்தைப் பிறாண்டியோ சாடியோ இருப்பாரேயானால்  நான் அந்த கேள்வி பதிலை தாண்டியிருப்பேன். மாறாய்,  ‘ஆங்கில கலப்பு கொண்ட நடையில் எழுதப்படும் ஆக்கங்களே நவீன இலக்கியம்!’ என்கிற தொனி அவரது பதிலில் மிகைத்திருக்கவே அப்படியோசிக்க வேண்டிதாகிவிட்டது. அப்படியானால்.. இத்தனைகாலமும் ஓர் தவறான புரிதலோடுதான் அவர் நவீன இலக்கியத்தை அனுகியிருக்கிறார்! சாடியிருக்கிறார்! கலைஞருக்கா இப்படியொரு சறுக்கல்? நம்பவே முடியவில்லை!!

இத்தனை காலமும் நவீன இலக்கியத்தை அவர் பிறாண்டி கொண்டிருந்ததற்கு பதில் செய்யும் சரியான தருணம் இதுவெனத் தோன்ற,  அவரது தவறான புரிதலை  முன்வைத்தும், அவரது நேர்காணலில் இலக்கியம் சார்ந்த சில நெருடலுக்குமாக பதில்எழுதினேன். டிசம்பர்-92/சுபமங்களா இதழில் அது பிரசுரம் ஆனது. அவருக்கு மறுப்பு எழுதினேன் என்றாலும்… அவரது ஆளுமையின், அனுபத்தின் கால்தூசுக்கு நான் சமமாக மாட்டேன் என்பது  அப்போதும் தெரியும்,  இப்போதும் தெரியும்.  நவீன இலக்கியத்தின் மீது கொண்ட நிஜமான ஈடுபாடு பொருட்டே அப்படி முனைந்தேன். இதையொட்டிய நிகழ்வாக, மேலிடத்திலிருந்து சிலர் எனக்கு மறுப்பு செய்தார்கள்.  இன்னொரு பக்கம் இலக்கிய சகாக்கள் என்னை தட்டியும் கொடுத்தார்கள்! சகாக்களில் வேறு சிலர் மிகுந்த உரிமையோடு, “அவரைப் போயி….! ஏய்யா உனக்கிந்த வீண் வேலை?” என்றார்கள்.

இதையெல்லாம் தாண்டிய நிகழ்வாக  நான் கருதுவது, அன்றுதொட்டு  கலைஞர்  நவீனஇலக்கியத்தை மறந்தும் துவேசிப்பதே இல்லை. இடைக்காலத்தில்  ‘நவீன இலக்கியத்தின் உலக மகா சக்தியும், நோபலுக்கான (ஜஸ்ட் மிஸ்டு!) ‘மகா காவியம்’ எழுதியவரும், தமிழ் நவீனத்தின் தந்தையும்/அத்தாரிட்டி மற்றும் டிக்டேட்டருமான திருவாளர் ஜெயமோகன், கலைஞரின் எழுத்து மீதும், அந்த எழுத்தை  மெச்சியவர்கள் மீதும் விழுந்து பிடித்து குதறியபோதும்கூட, கலைஞருக்கும்  அவரது சகபாடிகளுக்கும் ஜெயமோகன்தான் இலக்கானாரே தவிர, நவீன இலக்கியம் அங்கே இலக்காகவில்லை. மேலாய், கலைஞருக்கான என் மறுப்புக்கு பிறகு,  அவரது பக்கமிருந்தே  நவீன இலக்கியம் சார்ந்த விழுது  ஒன்று வீரியத்தோடு இறங்கி எல்லோரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது! கலைஞர் அதனைத் தடுக்கவில்லை, மாறாய் வரவேற்கவே செய்தார்! நவீனத்துவம் கொண்ட அந்த வீரியமிக்க விழுதின் பெயர் கனிமொழி!!

பதிவுக்காக பத்தொன்பது நினைவுகளுடன்… 

தாஜ்

***

தாஜின் சுபமங்களா (டிசம்பர் – 1992)  கடிதம் :

தமிழின் நவீன இலக்கியத்தோடு மு.கருணாநிதி அவர்களுக்கு தொடர்பு கிடையாது என்ற ஒரு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மு.க. பதில் அளித்திருக்கிறார். பதில் யோசிக்கத் தகுந்தது.

தமிழ் சிறுகதைகளிலும் – நாவல்களிலும் இடைச்சொருகலாய் அதிகமான ஆங்கில கலப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார். அது நவீன இலக்கியம் என்றால்… அது மாதிரியான நவீன இலக்கியம் செய்யவில்லைதான் என்பதாக சொல்லி இருக்கிறார். சுட்டிக்காட்டியிருப்பது சரியே. இப்படிப்பட்ட கலப்பை, பல எழுத்தாளர்கள் அதீதமாய் செய்துகொண்டு  இருப்பதும் உண்மை. ஆனால் மு.க. அவர்களின் கூற்றுப்படி அப்படி எழுதும் எழுத்தை வைத்து, அந்த ஆக்கங்களை யாரும் நவீன இலக்கியம் என்பதாக சொல்வது கிடையாது.

நவீன இலக்கியம் பாசாங்கு அற்றது, பிரச்சாரமற்றது, அழகியலையும் – கலைநேர்த்தியையும் உள்ளடக்கியது. மொத்தத்தில் மொழியின் கீர்த்திக்கு பட்டைத் தீட்டிக் கொண்டே இருப்பது.

இப்படி ஒரு தன்மையில் மு.க. இலக்கியம் படைத்திருக்கிறாரா என்றால் ஒரு வரியில் இல்லை என்றிடலாம்.  என் எழுத்துக்களில்  தலைவைத்துப் படுக்காதவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் சொன்னாலும், என் இல்லை… இல்லைதான். ஆனால் தமிழ் மொழிக்கு   அவர் ஆற்றிய தொண்டையும்,   அதன் கீர்த்திக்கு அவர், அவரது பாணியில் செம்மைப் படுத்தியதையும் இதன் பொருட்டு குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

தமிழின் நவீன இலக்கியத்திற்கு வித்திட்டவர்களின் பட்டியலில் திராவிட இயக்கங்களில் சார்பில் மு.க. நிச்சயம் உண்டு. அவரது ஆரம்பகால இலக்கிய ஈடுபாடுகளின்போது அவர் தன் பங்கிற்கு திரைக்கதை வசனம் என்கிற ஸ்தானத்தில் சினிமாவிலும் நாடகத்திலும் தன் திறைமையை காட்டியிருக்கிறார்.  தமிழை  பழமையில் இருந்து  குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு உந்தி முன்னே நகர்த்தி இருக்கிறார். தமிழ் சினிமா சமஸ்கிருதத்தை தமிழ் என்று நம்பிக் கிடந்தது போக, தமிழை முழுவதுமாய் பேச கற்றுக்கொண்டதற்கு காரமாணவர்களில் மு.க.வும் ஒருவர். மறுக்க முடியாது.

இந்த நிஜங்களுக்குப் பிறகும் அவரது சிறுகதைகள், சமூக – சரித்திர நாவல்கள் குறித்த என் மதிப்பீட்டை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது.

மு.க.வின் சிறுகதைகள் அவரது பிரச்சாரத்திற்கான களம் மட்டுமே. மிகையான எதுகை மோனை வர்ணனைகளே கதையை நடத்தும். நாவல்களும் அப்படித்தான்.  நாவல் என்பதற்காக கொசுறாய் பிரச்சாரமும், எதுகை மோனை வர்ணனைகளும் கொஞ்சம்தூக்கலாய் இருக்கும். அவரது சரித்திர நாவல்கள் குறித்து தனியாக எதுவும் சொல்லவேண்டி இருக்காது. ஒரு சின்ன உண்மைத் தடயத்தைப் பற்றிக்கொண்டு கல்கியும், சாண்டில்யனும் மிதந்து பறந்த கற்பனை உலகத்தில் மு.க.அவர்களும் தன்பங்கிற்கு அப்படி ஒரு வலம் வந்திருந்தார். அவ்வளவுதான்.

மு.க. அவர்களின் ‘குறளோவியம்’ குறித்து  இங்கே குறிப்பிடாமல் விடுவது சரியாக   இருக்காது.  அவரது ஆர்வமான பணிகளில் இதுவும் ஒன்று என பேசப்படுகிறது. ஆனால் குறளோவியத்தை எழுத அவர் கையாண்ட யுக்தி நினைவுகூறத் தக்கது.  குறளோவியத்தை குங்குமத்தில் வாரா வாரம் எழுதியபோது  அந்தந்த வாரத்து  அரசியல் நிகழ்வுகளில் தனக்கு சாதகமான அம்சங்களை பொழிப்புரையில் முதன்மைப்படுத்தி தனது குறளோவியத்தை தீட்டினார் என்பதை மறந்து விட இயலாது.

மு.க. தான் படைத்ததாக நம்பும் அவரது நவீன இலக்கியத்தை – இன்றைய – திறனான – நவீன இலக்கியம் சார்ந்த ஒரு வாசகன் – பத்து நிமிடம் நெளியாமல் வாசிக்கக்கூடுமென்றால்… அந்த வாசகனின் மனோவலிமையை என்னால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது.

தமிழில் நவீன இலக்கியத்திற்கு வித்திட்டவர்களில் திராவிட இயக்கங்களின் சார்பில் மு.க. அவர்கள் உண்டு என்பதை சொல்லி இருந்தேன்.  பிறகு ஏன் அவர்  குறிப்பிடத் தகுந்த நவீன இலக்கியம் செய்தார் இல்லை என யோசிக்கும் போதே, ஆரம்பக் கட்டத்திலேயே நவீன இலக்கிய ஈடுபாடுகளில் அவர் தடைப்பட்டுப் போனதும் அறிய முடிகிறது. இப்படி அவர் தடைப்பட்டு போனதற்கு என்ன காரணங்களாக இருக்கும் என யோசித்தால்… நியாயமான காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் தெரிய வருவதை அறிய முடிகிறது.

தமிழக அரசியல் இயக்கத்தில் மு.க.தன்னை தலைவராக தயார் பண்ணிக் கொண்டு இருந்தபோதும், பின் தலைவராக அவர் விளங்கிய போதும் அவர் தம் எழுத்து முழுக்கமுழுக்க சமூக சீர்திருத்தத்தையும் – பிரச்சாரத்தையுமே  கொண்டிருக்க வேண்டிய  ஒரு மறைமுக நிர்பந்தம்  அதற்கு இருந்து வந்ததை நாம் உணர முடியும். கொள்கை வயப்பட்ட பிரச்சார எழுத்து, இலக்கியத்தை பின்னுக்குத் தள்ளியது என்பதையும் நாம் உணரமுடியும்.

தமிழின் நவீன இலக்கியம், மேற்கத்திய நவீன இலக்கியங்களின் வீச்சால் இங்கே உதயமான மாற்றம் என அறியப்படுகிறது. மேற்கத்திய நவீனங்களில் முழுகி முத்துக்குளித்த நம்ம வர்கள், ஒருவித சுய ஆதங்கத்தில், தமிழின் தொன்றுதொட்ட இலக்கிய முகலட்சணத்தை மாற்றி அமைத்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். சம்பந்தப்பட்டவர்களிடம் வாய்த்த மேற்கத்திய பாஷையின் புலமையும் ஞானமும் நம் இலக்கிய மாற்றத்திற்கு பெரியதொரு காரணமென்றும் அறிகிறோம். அப்படி ஒரு புலமை – அப்படி  ஒரு ஞானம்  மேற்கத்திய பாஷையில் மு.க. அவர்களுக்கு சந்தர்ப்பவசத்தால் கைக்கூடாது போனது என்பதையும் நாம் அறிவோம். இந்த தடங்கள் கூட ஒரு காரணமென என்ன முடிகிறது.

இன்னொரு காரணத்தைக் கூட அழுத்தமாக சொல்லலாம். இந்தக் காரணம் ரொம்பவும் யதார்த்தமானது; சரி என்றும் நம்பக்கூடியது.

தமிழக அரசியலில் அவரது பங்கு மிகப்பெரியது. என்றாலும் தான் நம்பும் இலக்கியப்பணியில் ஈடுபடவும் செய்கிறார். தாண்டி, நவீன இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபாடு கொள்வதற்கும், சிரத்தையோடு கவனம்செய்வதற்கும், அப்படி ஒருபடைப்பை படைப்பதற்கும் நேரமின்மை காரணமாகி இருக்கலாம். யதார்த்ததில் அவருக்கு இதற்கெல்லாம் நேரமில்லாமல் போய் இருக்கும் என்பதை நாம் நன்கு யூகிக்கவும் முடிகிறது.

மு.க., நவீன இலக்கியத்தோடு தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருப்பாரானால் சிகரத்தைத் தெடும் சில படைப்புகளை நமக்கு தந்திருக்கக் கூடும். நம்புவோம்.

நவீன இலக்கியமும், மு.க. அவர்களும் அன்னியப்பட்டு போனதற்கு சில காரணங்களை எட்டியவரை உணர்ந்து அடுக்கினோம். இதில் ஏதேனும் ஒன்றோ, அல்லது  அத்தனையும் சேர்ந்த ஒரு நிலைகூட காரணமாகி இருக்கலாம். அல்லது… மு.க. அந்த குறிப்பிட்ட பதிலில் தொனித்த இலக்கிய மயக்கம் கூட ஒரு காரணமாகலாம்.

மு.க. வாழ்கிற காலத்திலேயே இதை எழுதியதில் எனக்கு ஒரு நிம்மதி. அவர் நினைத்தால்… என் யூகங்களை பொய் என்று மறுக்க வாய்ப்பிருக்கிறது. எனது இந்தக் கட்டுரையை தாண்டி, இது குறித்த வாழும் நிஜத்தை, என் மதிப்பிற்குரிய மு.க. அவர்களிடமே தெரிந்துகொள்ள எனக்கும் ஆசை.

***

நன்றி: தாஜ் , தமிழ்ப்பூக்கள்
E- Mail : satajdeen@gmail.com

‘துக்ளக்’ வழங்கும் தீபாவளி பட்டிமன்றம் – சத்யா

‘துக்ளக்’ வழங்கும் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

thuklaksathya
-சத்யா

‘துக்ளக்’ 21/10/2009 இதழிலிருந்து, நன்றிகளுடன்…

***

தமிழக முதல்வர் கலைஞருக்கு தி.மு.க.வும் தமிழக அரசும் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை வழங்குகின்றன. அவர் முன்னிலையில் கட்சியினரும், கவிஞர்களும், பேச்சாளர்களும் அவரை எவ்வளவு புகழ்ந்தாலும், அவருக்கு முழு திருப்தி ஏற்படுகிறதா என்று தெரியவில்லை.எதற்கு சந்தேகம்? ஐஸ் வைப்பது என்று முடிவு செய்த பிறகு அதில் சிக்கனம் எதற்கு? தாரளமாக இப்படிப் புகழ்ந்தால் கலைஞர் மறுக்கவா போகிறார்? தீபாவளி சமயத்தில் டி.வி சேனல்கள் ஒளிபரப்புகிற பட்டிமன்றங்களுக்கு சவால் விடும் வகையில் ‘துக்ளக்’கும் களத்தில் குதிக்கிறது.

***

நடுவர் : நேயர்களுக்கு வணக்கம். கலைஞருக்கு விருது கொடுக்கிற மாதிரி ஒரு மகிழ்ச்சியான விஷயம் உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது. என் வாழ்க்கையில் பெரும்பகுதியை நான் கலைஞரைப் பாராட்டுவதற்காகவே செலவிட்டிருக்கிறேன். ‘கலைஞரின் புகழுக்குக் காரணமாக இருப்பது அவரது அரசியல் பணிகளா, இலக்கிய-சமுதாயப் பணிகளா?’ என்ற அருமையான தலைப்பை கலைஞரே தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார். கடலின் அளவைக் கூட அளந்து விடலாம். கலைஞரின் சாதனைகளை அளந்து விட முடியாது. இருந்தாலும் நம்முடைய பேச்சாளர்கள் எப்படி அளக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பேச்சாளர் : கலைஞர் வேறு, தமிழ் வேறு என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதே தவறான தகவல். தமிழுக்கு வயது 86-தான். கலைஞர் பிற்ந்தவுடன் செய்த முதல் வேலை, தமிழுக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததுதான். கலைஞரால்தான் விருதுகளே பெருமை அடைகின்றன. நீயே தமிழனுக்கு வழங்கப்பட்ட விருது. உனக்கு எதற்கு இன்னொரு விருது? நீயே உலக ரத்னா. உனக்கு எதற்கு பாரத ரத்னா? உடன்பிறப்புக்கு நீ எழுதும் கடிதத்திலேதான், நாங்கள் பகவத் கீதையும், பைபிளும், குர்-ஆனும் கற்றுக் கொள்கிறோம். நான் கனவில் காந்தியைக் கண்டபோது அவர் என்ன கேட்டார் தெரியுமா? ‘என்னை ஆளாக்கிய கலைஞர் எழுதிய ‘உளியின் ஓசை’ சி.டி கிடைக்குமா?’ என்றுதான் கேட்டார். அதுதான் கலைஞரின் இலக்கிய சாதனை.

நடுவர் : வெங்கடாசலபதியை தரிசிக்க திருப்பதி செல்ல வேண்டும். யேசுபிரானைப் பிரார்த்திக்க ஜெரூசலம் செல்ல வேண்டும். அல்லாவைத் தொழ மெக்கா செல்ல வேண்டும். மூன்று தெய்வங்களையும் ஒரே சமயத்தில் வணங்க கோபாலபுரம் சென்றால் போதும். அண்ணாவையும், பெரியாரையும், காந்தியையும், நேருவையும் ஒரே சமயத்தில் பார்க்க அறிவாலயம் வர வேண்டும். அதுதான் கலைஞர் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற வசதி. கலைஞர் தகரத்தைத் தொட்டால் தங்கம். மண்ணாங்கட்டியைத் தொட்டாலும் மந்திரி. அடுத்த பேச்சாளரை அழைக்கிறேன்.

பேச்சாளர் : புத்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றான். போதி மரமோ கலைஞரின் காலடியில் ஞானம் பெற்றது. இந்த வரலாற்றை மாற்ற நினைத்தால் எதிர்கால சமுதாயம் உங்களை மன்னிக்காது. கலைஞர் மூச்சு விட்டால் முல்லைப் பெரியாறே சாம்பலாகி விடும். அவரிடமா விளையாடுகிறீர்கள்? வள்ளுவர் திருக்குறளில் 133 அதிகாரங்களை உருவாக்கினார். கலைஞர், தன் குடும்பத்திலேயே அதற்கும் மேற்பட்ட அதிகாரங்களை உருவாக்கிக் காட்டியிருக்கிறார். பாளையங்கோட்டை சிறையில் பல்லிக்கே பயப்படாதவரை, கரப்பானுக்கே கலங்காதவரை, காவிரிப் பிரச்னையில் தோற்கடித்து விட முடியுமா? கலைஞரின் சின்னம் மட்டுமல்ல, அவரே சூரியன்தான். அவரைத்தான் அகில இந்திய அரசியல் சுற்றி வர வேண்டும்.

நடுவர்: சூரியனே கலைஞரைத்தான் சுற்றுகிறது. புவி ஈர்ப்பு விசையையும் ஈர்க்கும் ஆற்றல் கலைஞருக்கு உண்டு. என் தலைவன் கலைஞர் உலகில் கற்பதற்கு எதுவுமே பாக்கியில்லை என்பது உலகின் குறை. பல்கலைக்கழகங்களே கலைஞரைப் படித்துத்தான் பட்டம் பெற வேண்டும். நான் கம்பனைக் கண்டதில்லை. ஷெல்லியைக் கண்டதில்லை. கலைஞரின் பேனா மூடிக்குள் இருவரையும் கண்டேன். எங்கள் இறைவா, உன் நெஞ்சுக்கு நீதி, சுப்ரீம் கோர்ட்டுக்குப் பாடம். பராசக்தி வசனம், பாருக்கே வேதம். நீ, நீயாகவும் வாழ்கிறாய், அண்ணாவாகவும் வாழ்கிறாய், பெரியாராகவும் வாழ்கிறாய். எப்படி உன்னால் மட்டும் இப்படியெல்லாம் ஒரே சமயத்தில் கண்டபடி வாழ முடிகிறது? அடுத்த பேச்சாளரைக் கேட்போம்.

பேச்சாளர் : திருக்குறளை தமிழனுக்கு அடையாளக் காட்டியதே கலைஞரின் குறளோவியம்தான். மறுக்க முடியுமா? பகுத்தறிவு உணர்வோடு திருக்குறளைத் திருத்திய தீரம் கலைஞருக்கு மட்டும்தான் இருந்தது. ஆகாயம் கூட உன் புகழை அண்ணாந்து பார்க்கிறது. அண்ணாவின் இதயத்தையும், பெரியாரின் உள்ளத்தையும், காயிதே மில்லத்தின் நெஞ்சத்தையும், தமிழ் சிம்மாசனத்தில் அமர்த்தியவன் நீ. இன்றைய தினம் குப்பனும் சுப்பனும் ‘மானாட மயிலாட’ பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், அதைவிட மக்கள் தொண்டு வேறென்ன இருக்க முடியும்? ஆணும் பெண்ணும் நடனம் ஆடும்போது தமிழ் வளரும் என்பதைக் கண்டறிந்த ஒரே தலைவன் கலைஞர்தான். ஏழையின் சிரிப்பில் இயறகையையும், குடும்பத்தினரின் சிரிப்பில் கோடீஸ்வரர்களையும் கண்டவர் கலைஞர். அதுதான் கலைஞரின் சமுதாயப் பணி.

நடுவர்: வீட்டிலிருந்து பொருள் எடுத்து வந்து கொடுப்பவன் கொடையாளி. ஆனால், வீட்டையே எடுத்துக் கொடுப்பவர் கலைஞர். காவிரியை கர்நாடகாவுக்குக் கொடுத்தாய். பாலாறை ஆந்திராவுக்குக் கொடுத்தாய். முல்லைப் பெரியாறை கேரளாவுக்குக் கொடுத்தாய். உன்னை விடவா கர்ணன் கொடையாளி? கர்ணம் இன்று இருந்திருந்தால், கொடைத் தன்மையைக் கொடுக்கும்படி கலைஞரிடம் கையேந்திருப்பான். நீ தலைவர்களின் தலைவன். பகுத்தறிவில் பெரியாருக்கும் பெரியார். அறிவில் அண்ணாவின் அண்ணன். அவ்வளவு ஏன்? ஆதாமுக்கே அண்ணன். நீ விழித்தால்தான் இங்கு காலண்டர் கிழியும். நீ நடந்தால்தான் இங்கு கடிகாரம் சுற்றும். நீ மூச்சுவிட்டால் காற்றே காணாமல் போகும். நீ வாய் திறந்தால் வங்கக்கடலே வற்றிப் போகும். அடுத்த பேச்சாளரை அழைக்கிறேன்.

பேச்சாளர் : தலைவா, உன்னை மனதால் நினைத்தாலே நான் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வளவு இனிப்பு, உன்னைப் பற்றிய நினைப்பு. உன் பேச்சு நடையில், மாநில அரசு இயங்குகிறது. எழுத்து நடையில் மத்திய அரசு இயங்குகிறது. நீ பிரதமருக்கு கடிதம் எழுதினால், அமைச்சரவை அதிர்கிறது. தந்தி அனுப்பினால் டெல்லியில் பூகம்பம் ஏற்படுகிறது. குடும்பத்தோடு நேரில் சென்றால், மத்திய அரசே நடுங்கிப் போகிறது. சட்டசபையில் நீ பேசினால்தான் ஜனநாயகத்தால் மூச்சுவிட முடிகிறது. நீ எழுதினாய் பராசக்தி. அதனால்தான் தமிழகம் பெற்றது அபார சக்தி. நீ எழுதினாய் திரும்பிப் பார். தமிழகம் எங்கும் தோன்றியது டாஸ்மாக் பார். உன் கைகளுக்கு ஏழு பிறவியிலும் முத்தம் கொடுக்கும் பேறு எனக்குக் கிடைக்க வேண்டும். அதுதான் உன் அரசியல் சாதனைக்கு நான் செய்யும் கைம்மாறு.

நடுவர் : கலைஞர் பிறந்திருக்காவிட்டால் , தமிழன் இன்னும் இருட்டில்தான் தடுமாறிக் கொண்டிருப்பான். கலைஞர் பிறந்த பிறகுதான், ஒளி தர வேண்டும் என்ற பொறுப்புணர்வே சூரியனுக்கு வந்தது. கலைஞர் பெருமானே, உன் மீது கொண்ட பொறாமையால், இயற்கை உன்னை வஞ்சித்து விட்டது. சாக்ரடீஸூம், ஷேக்ஸ்பியரும், பெர்னாட்ஷாவும் உனக்கு முன்னால் பிறந்ததால், சிந்தனையாளர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டு விட்டார்கள். இது இறைவன் செய்த படைப்புச் சதி. மனோகராவிலும், மந்திரி குமாரியிலும் நீ சொல்லாத கருத்துக்களையா அவர்கள் சொல்லிவிட்டார்கள்? அண்ணா இன்று உயிரோடு இருந்திருந்தால், உன்னை தலைவனாக ஏற்றிருப்பார். பெரியார் இன்று இருந்திருந்தால் துணை முதல்வரைப் பாராட்டி விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருந்திருப்பார். அடுத்த பேச்சாளரே, வருக!

பேச்சாளர் : 14 வயதிலேயே ஹிந்தி அரக்கியை வடநாடு வரை விரட்டிச் சென்ற வீரம், கலைஞரின் வீரம். உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று முழங்கியபடி உயிர் நீத்த தம்பிகளின் ஒரே அண்ணன் நீ. உன்னுடைய அத்தகைய தியாகப் பணிகள் தொடர்வதற்காகவாவது. ‘உயிரை விடத் தயார்’ என்று இன்னும் பலகோடி நூறாண்டுகளுக்கு ஹிந்தி ஆதிக்க வெறியர்களை நீ எச்சரிக்க வேண்டும். நீ நெருப்பை எரிப்பவன். தென்றலைக் குளிர்விப்பவன். அழகிரி சொன்னதைச் செய்தாய். ஸ்டாலின் சொன்னதைச் செய்தாய். கனிமொழி சொன்னதைச் செய்தாய். சொன்னதைச் செய்பவன் நீயன்றி வேறு யார்?

நடுவர் : நீ பகுத்தறிவின் உச்சம். எதிரிகள் உனக்கு துச்சம். நீ செல்வது – அண்ணாவே பயந்த – அண்ணா வழி. அதன் மூலம் எதிரிகளை அழி. உன் நாவும் பேனாவும் உனக்கு துணை. உலகில் யார்தான் உனக்கு இணண? நீ அனுப்பினாய் இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு. இனி ராஜபக்க்ஷே ஒரு புழு. நீ எதைத் தொட்டாலும் வெற்றிதான். இடைத் தேர்தலிலும் வெற்றி. உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி. வறுமையை ஒழிப்பதற்கு வாக்களியுங்கள் என்று கேட்பது அரசியல் மரபு. ஆனால் நீயோ, கவர் கொடுத்து, ஒருநாள் வறுமையை ஒழித்துவிட்டுத்தான் ஓட்டே கேட்கிறாய். அதனால்தான் வெற்றி தேவதை உனக்கு அடிமையாகி விட்டாள்! வணக்கம்

**

நன்றி : ‘துக்ளக்’ / சத்யா