வானவில் (இதழ் – 26)

மண்ணுள்ளி பாம்பு , வினவுக்கு நன்றியுடன்..

சென்ற வாரம் இதைப் படித்ததிலிருந்து பலரிடமும் சொல்லிவிட்டேன், மிகவும் என்னைப் பாதித்ததாக.   ஊரில் நடந்த வேறொரு சம்பவம் ஒன்றும் ஞாபகம் வந்தது. அதைப் பிறகு எழுத வேண்டும், இன்ஷா அல்லாஹ் (எழுத மாட்டேன்னு அர்த்தம்!).  இந்த சம்பவத்தை எழுதிய நண்பரின் பெயர் மாடசாமி என்று புதிய கலாச்சாரம் இதழ் (Oct’2012) சொல்கிறது. அரபுநாட்டு சபராளிகள் தேடுவதும் ஒருவகை மண்ணுள்ளிப்பாம்புதான் என்று உணர்த்திய அவருக்கு என் ஸலாம். – ஆபிதீன்

***

மண்ணுள்ளி-பாம்பு

mannulipambu1இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் – என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது.

கெணேசு என்கிற கணேச மூர்த்திக்கு சில லட்சியங்கள் இருந்தன. சம்பாதிக்க வேண்டும். நிறைய்ய சம்பாதிக்க  வேண்டும். கைக்கொள்ளாத ரூபாய் நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்து புரள  வேண்டும். ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும்; அதில் ஐம்பதடிக்கு நூறடி அளவில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சியில் குறைந்தது நூறு ஏக்கராவுக்கு தென்னந்தோப்பு ஒன்றை அமைக்க வேண்டும். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டுத் தூங்க வேண்டும். கயிற்றுக் கட்டிலில் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வருமோ என்னவோ – கணேசன் நம்பினான். தூக்கம் வரும். அப்புறம், வாரம் ஒரு முறையாவது கோயமுத்தூர் ரெஸிடென்சியில் தண்ணியடித்து,  மட்டையாகி விட வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் தன்னுடைய மாத சம்பளமான மூவாயிரத்தில் செய்ய முடியாது என்கிற உண்மை தான் கெணேசனை செல்லாக அரித்துக் கொண்டிருந்தது. மூவாயிரத்துக்கு ரெஸிடென்சிக்காரன் வாசல் வரை கூட விட மாட்டான் என்பதை கணேசன் அறிந்திருந்தான். இந்தக் கதை நடந்த காலம் 2005. அப்போது கணேசன் கோவை நூறடி ரோட்டிலிருந்த கவிதா எலக்ட்ரானிக்ஸ் என்கிற மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தான்.

கணேசன் வேலையில் கெட்டிக்காரன். எந்த ரேடியோ செட்டாக இருந்தாலும் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்குள் பிரித்து மாட்டி விடுவான். நேஷனல் பானாசோனிக் என்றழைக்கப்படும் முகலாயர் காலத்து ரேடியோ செட்டைப் பழுது பார்க்கும் நிபுணத்துவம் அநேகமாக  கோவையிலேயே அவனுக்குத் தான் இருந்திருக்கும்.  கணேசன் அவ்வளவு கெட்டவன் இல்லை தான்; ஆனாலும் சமீப காலமாக அவன் சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரைச்  சேர்ந்த பள்ளித் தோழன் ரெங்கு என்கிற ரெங்கசாமியைப் பற்றி கேள்விப்படும் கதைகள் அவனை நிறையவே மாற்றியிருந்தது. ரெங்குவின் கதைகளில் இருந்து தான் முதல் பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் கணேசனின் லட்சியங்களெல்லாம் முளைவிட்டன.

ரெங்குவின் அப்பாவுக்கும் கணேசனின் அப்பாவைப்  போலவே விவசாயம். ஒன்றரை ஏக்கர் துக்கடா நிலம். அதில் கொம்பு வண்டுகள் மொட்டையடித்த ஐம்பது தென்னைகள் பரிதாபமாக நிற்கும். கால்வாய்ப் பாசனம். தக்காளி போடுவார்கள் – விலையத்துப் போகும். வாழை  போடுவார்கள் – பேய் மழை வந்து சாய்த்து விடும். நெல்லைப்  போட்டால் – மழை வராது; கால்வாய் வறண்டு போகும்.  கரும்பு விளைந்த நேரமாகப் பார்த்து யானைகள் புகுந்து துவம்சம் செய்து விடும். நல்ல விளைச்சல் தரும் என்று சொல்லப்பட்ட வெளிநாட்டு விதைகள் வெள்ளாமைக்கே வந்து சேராது. கஷ்ட ஜீவனம்.

ஆனால் ரெங்கு தலையெடுத்தான். ரெங்குவும் கணேசனைப் போலவே ஐ.டி.ஐ படித்தவன் தான். ஆனால் என்ன வேலை பார்த்தான் – அல்லது பார்க்கிறான்; என்ன தொழில் செய்தான்  – அல்லது செய்கிறான் என்பதெல்லாம் ஊராருக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம் திடீர் திடீரென்று ரெங்குவால் வாங்கப்படும் பட்டா நிலங்களும், தோப்புத் துரவுகளும், பளிச்சென்று எழுந்து நிற்கும் வீடுகளும் தான்.

மணியக்காரத் தெருவில் இருந்த ரெங்குவின் ஓட்டு வீடு பங்களாவாய் உருமாறியது. உள்ளே பெரிய நீச்சல் குளம் இருப்பதாகவும், தரைமட்டத்துக்குக் கீழே பாதாளத்தில் அறைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். பொள்ளாச்சி பத்திராபீசில் ரெங்குவுக்கு நிரந்தரமாக நாற்காலியே போட்டு விட்டார்கள் என்று கூட சொன்னார்கள்.

ரெங்குவின் அசுர வளர்ச்சியால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையோ கணேசன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தான்.

“யேண்டா கெணேசா.. அந்த ரெங்கானும் ஒன்ர கூட படிச்சவந்தான.. பாரு எத்தினி காரியமா சம்பாரிக்கிறான்னு.. நீயெல்லாம் அவன்ர  மூத்தரத்த வாங்கியாச்சும் குடுச்சுப் பாரு. நெப்பு வருதான்னு பாக்கலாம்” சரியாக இரவு சாப்பாட்டுத் தட்டின் முன் உட்காரும் போது தான் கணேசனின் அம்மா லெட்சுமி திரியைப் பத்த வைப்பாள்.

“அவனெ யேண்டி அல்லைல குத்தீட்டிருக்கே.. அறிவும் ஊக்கமும் பொறப்புலயே வந்தாத்தான் ஆச்சு. நீ தின்னுடா கண்ணு” அப்பா தன்னை ஆதரிக்கிறாரா,  அவரும் சேர்ந்து வெந்த புண்ணில் மிளகாய்த் தேய்க்கிறாரா என்பதைக் கணேசனால் கடைசி வரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்பனும் ஆத்தாளும்தான் இப்படியென்றால் வெளியே கேட்கவே வேண்டாம்.

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? பொள்ளாச்சில ஏதோ மில்லுக்கு வெல பேசீட்டிக்குறானாமா?”

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? புதுசா காரு வாங்கீக்கறானாமா?”

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா?  கழுத்துல கயிறு கெணக்கா தங்கச் செயினு போட்ருக்கானாமா?”

“கெணேசு.. இந்த ரெங்கானிருக்கானே……”

“கெணேசு.. நம்ம ரெங்கான்….”

“கெணேசு….”

இப்படியெல்லாம் அவர்களுக்குள்ளும் பேசிக் கொள்வார்களா,  இல்லை நம்மைப் பார்த்தால் மட்டும் தான் ஆரம்பிக்கிறார்களா  என்று புரியாமல் கணேசன் குழம்பினான். ஒரு சுபயோக சுபதினத்தில் கணேசனின் பொறுமை எல்லை கடந்தது. “வக்காளி ஆனதாகட்டும், போனது போகட்டும். நாமலும் ரெங்காண விட ஒரு பத்துக் காசாவது அதிகமா சம்பாரிச்சிக் காட்டீரோணும்டா” –  முடிவெடுத்து விட்டான். இதுதான்  ஒரு ‘லட்சியவாதி’ உருவானதன் வரலாறு.

முடிவு என்னவோ எடுத்து விட்டான் – ஆனால் எப்படிச் செயல்படுத்துவது? எப்படி பணக்காரன் ஆவது? என்ன தொழில் செய்வது? எப்படி வேகமாக வளர்வது? சரியாக இந்த இடத்தில் தான் கணேசன் பல சவால்களைச் சந்தித்தான். அம்பானியில் இருந்து பில்கேட்ஸ் வரை பணக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் கோவை டவுண் ஹாலில் இருக்கும் விஜயா பதிப்பகத்தில் காசு கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்தான். புரியவில்லை என்பது உடனடி விளைவு.  குழப்பமடைந்தான் என்பது தான் நீண்ட கால விளைவு. கடைசியில் வேறு வழியின்றி கணேசன் எடுத்த முடிவு தான் அவன் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை.  நேரடியாக ரெங்கானிடமே கேட்டு விட வேண்டும் என்பது தான் அந்த முடிவு. என்ன இருந்தாலும் உடன் படித்த நண்பனல்லவா, உதவாமலா போய் விடுவான்?

2005ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  சந்திப்பு நடந்தது. விஷயத்தைச் சொன்னதும் ரெங்கான் கட கடவென சிரித்தான். “நீயெல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டே” கழுத்துச் செயினை உருவி விட்டுக் கொண்டான். “அதெல்லாம் பெரிய ரிஸ்குடா” கைச்செயினை தடவிக் கொண்டான். கணேசன் கேட்பதாக இல்லை. கடைசியில் “போலீசு  கேசுன்னு அலைய வேண்டியிருக்கும்” என்று கூட மிரட்டிப் பார்த்தான். கணேசன் அப்போதும் உறுதியாக நிற்கவே, ஒரு மாற்று வழியைக் கூட முன்வைத்தான்.

“ஏண்டா சொல்லச் சொல்ல  கேக்க மாட்டேங்குறே?  பேசாம நானே மொதல்  போட்டு பொள்ளாச்சீல ஒரு டீ.வி ரிப்பேருக்  கடை வச்சித் தாரேன். நீயே நடத்திக்க. பிப்டி பிப்டி பார்ட்னர்சிப். இது ஓக்கேவா?”

“டே.. டீ.வி,  ரேடியோ ரிப்பேருக்கெல்லாம் இப்ப பவுசில்லீடா. இப்பல்லாம் அவனவன் கம்ப்யூட்டருங்கறான். பிளாப்பி டிஸ்க்குங்கறான்.. ஒன்னும் புரியல. ஓட்ட டீ.வி.ய நோண்டி அம்பதும் நூறும் சம்பாரிச்சி என்னிக்கு ஆளாகறது? அதெல்லாம் வேலைக்காகாது. நீ செய்யற பிசினசுல என்னையும் சேத்துக்கடா… இல்லீன்னா என்ன செய்யலாம்னு ஒரு ரூட்டு குடு. என்ன பிரச்சினைன்னாலும் சரி பாத்துக்கறேன்” கணேசன் விடாப்பிடியாக நின்றான். கணேசனின் இறைஞ்சல்கள் ‘இவன் தோதுப்படுவான்’ என்கிற நம்பிக்கையை ரெங்கசாமியிடம் ஏற்படுத்தியது

“சொன்னாக்  கேக்க மாட்டே.. சரி ஒரு ஐடியா இருக்கு. யார்ட்டயும் மூச்சு விடக் கூடாது. என்ன?”

“கழுத்தறுத்தாலும் வெளிய சொல்ல மாட்டேன். சொல்லு”

“ம்ம்ம்.. நல்லா கெவனமா கேட்டுக்க. நான் வேற வேற பிசினசு பண்ணிட்டுருக்கேன். ஆனா அதெல்லாம் ரொம்ப ரிஸ்க்கு. இப்ப ஒரு புது பிசினஸ்ல எறங்கறேன். எனக்கு இதுக்கு ஆள் வேணும். இதுல அத்தினி ரிஸ்க்கு இல்ல. ஆனா கெவருமண்டுக்குத் தெரிஞ்சா சட்னி தான்…”

“டேய் என்னடா சொல்றே.. எதுனாச்சும் கள்ளக் கடத்தலாடா?” முடிந்தவரை பீதியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரித்துக்  கொண்டே கேட்பதைப்  போல் கேட்டான்.

“இல்லீடா.. காதக் கொண்டா இங்க. அதாவது, இந்த மண்ணுளிப் பாம்பு தெரியுமா? அதான் நம்மூர்ல ரெட்டத்தலை மணியன்னு சொல்லுவாங்களே.. அதோட ஒடம்புக்குள்ளே  ஏதோ  ரேடியம் மாதிரி பச்சக் கலருல இருக்குதாமா. அதுலேர்ந்து நம்ம சிட்டுக்குருவி லேகியமாட்டா  ஏதோ மருந்து செய்யறாங்க. அதுக்கு சீனாவுல நல்ல டிமாண்டாமா. இங்கேர்ந்து கப்பல்ல சீனாவுக்கு அனுப்பறாங்க. பாலக்காட்டுல எனக்குத் தெரிஞ்ச ஒரு சேட்டன் தான் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ஏஜெண்டு எடுத்துருக்காரு. அவரு கிட்டேருந்து நானும் ஏஜெண்ட் எடுத்துருக்கேன். தெக்க மதுரைக்கு அந்தால இருக்கற ஊருகள்ள கெடைக்கும்னு அவரு சொல்றாப்ல. அஞ்சி கிலோ அயிட்டத்துக்கு அம்பது ‘எல்’ நிக்கும். ஆளுக்குப் பாதியா பங்கிக்கலாம். என்ன?” சொல்லி முடித்து விட்டு, கணேசனின் முகத்தைக் கூர்மையாகக் கவனித்தான்.

கணேசன் திகைத்துப் போயிருந்தான். மண்ணுளிப் பாம்பை சின்ன வயதில் பார்த்திருக்கிறான். அதுக்குள் இப்படி ஒரு புதையலா?  திகைப்பெல்லாம் ஒரு சில நொடிகள் தான். உடனே தலையசைத்தான்.

“தலையாட்றதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன செய்யறேன்னு யாருக்கும் தெரியக் கூடாது. சரியா? அப்புறம் திருநெல்வேலில என்ர பிரெண்டு ஒருத்தான் இருக்கறான். அவனையும் தேடச் சொல்லிருக்கேன். ஆனா அவனுக்கு பங்கெல்லாம் கெடையாது. கமிஷன் தான். பத்து பர்சன்டேஜு. அவனோட நெம்பர் தர்றேன். சீக்கிரமா வேலைய ஆரம்ப்பிச்சிடு. முக்கியமா யாருக்கும் தெரியக் கூடாது. உங்க அப்பனாத்தாளுக்குமே சொல்லீறாத! சரியா?”

கணேசனின் வாழ்க்கை அன்றோடு மாறியது. முதல் காரியமாக வேலையை விட்டான். தனது லட்சியத்துக்கு அது ஒரு இடைஞ்சல் என்று கருதினான். நிறைய ஊர் சுற்ற வேண்டும். அதுவும் ரகசியமாகச் சுற்ற வேண்டும். ‘பொருள்’ கிடைத்து விட்டால் அதைப் பஸ்ஸில் கொண்டு வருவது ரிஸ்க் என்று கணக்கிட்டான் – அதற்காகவே ஒரு டீசல் புல்லட்டை கிணத்துக்கடவு மணி மெக்கானிக்கிடமிருந்து இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கினான். அந்த புல்லட்டை பொள்ளாச்சியில் உதைத்து ஸ்டார்ட் செய்தால் கோவையே நிலநடுக்கம் வந்தது போல் அதிரும். அதில் டீசலை நிரப்பிக் கொண்டு ஊர் ஊராய் அலையத் துவங்கினான்.

இரண்டு வருட தேடல் அது. சோறு மறந்து, தண்ணீர் மறந்து, தூக்கம் மறந்து, குடும்பம் மறந்து, நண்பர்களை மறந்து, ஊரை மறந்து ஒரு மோன நிலையில் தமிழகத்தின் தென்பகுதியைச் சுற்றி வந்தான். காசு தீரும் போது ஏதோ ஊரில் நிற்பான்; அங்கே கிடைத்த வேலையைச் செய்வான். டீசல் டாங்கை நிரப்பும் அளவுக்கும், ஓரிரு வேளை சோற்றுக்கும் காசு தேற்றியதும் திரும்பவும் தேடலைத் துவங்குவான்.

கணேசனுக்கு நல்ல களையான முகம் இருந்தது.  விளைந்த தக்காளி போல் பளபளவென்று இருப்பான் – இந்த இரண்டே வருடத்தில் வதங்கி வற்றிய கத்தரிக்காய் போலானான். மொழுக்கென்று வெளித்தள்ளி நிற்கும் கண்கள் பள்ளத்துக்குள் விழுந்தது போலானது. இரண்டு வருடத்தில் இருபது வயது கூடியவனைப் போலானான். தொடர்ச்சியாக அதிரும் புல்லட் மோட்டார் சைக்கிளில் சுற்றியதன் விளைவாக ஆசனவாயில் மூலம் வைத்திருந்தது. ஒவ்வொரு நாள் விடியலும் ஒரு நரகம். மலமே சிவப்பாய்க் கழியும். கணேசன் அத்தனை பாடுகளையும் தாங்கிக் கொண்டான். பணம்… பணம்… பணம்… அதற்காக நரகக் குழியின் ஆழத்துக்கும் கூடச் செல்லத் தயாராயிருந்தான்.

வாரம் ஒருமுறை ரெங்கானிடமிருந்து அழைப்பு வரும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மண்ணுளி ஏஜெண்டுகள் கட்டுக்கட்டான பணத்தோடு போலீசில் பிடிபட்ட தகவல்களைச் சொல்வான். எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுருத்துவான். அந்தந்த வாரத்திற்கான ‘சந்தை’ விலை நிலவரத்தைத் தவறாமல் தெரிவிப்பான். கடுமையாகக் கிராக்கி கூடுவதைச் சொல்வான். அவன் பேசி முடித்ததும் மொத்த சீனர்களும் ஆண்மையற்றுப் போய் விட்டார்களோ என்று கணேசன் நினைத்துக் கொள்வான். இதை அடுத்த முறை ரங்கானிடமே கேட்டு விடலாம் என்று நினைப்பான் – அந்த ‘அடுத்த முறை’ வரவேயில்லை.

நிரந்தரமாய்ச் சிவந்த கண்களையும், முன் மண்டை வழுக்கையையும் கணேசன் சம்பாதிக்கத் துவங்கிய மூன்றாம் வருடத்தின் துவக்கத்தில், காசு தீர்ந்து போன  நாளொன்றில் சிவகாசியில் இருந்தான். கைச்செலவுக்கும், பயணச் செலவுக்கும் ஏதாவது தேற்றுவதற்கு, பட்டாசுப் பெட்டிகள்  லோடு அடிக்கும் கலாஸி வேலையில் சேர்ந்திருந்த இரண்டாவது நாளில் தான் தம்புராசுவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணாச்சி எங்க இருக்கிய? சீக்கிரமா வாரும் வோய்.. இங்கன பொருள் அம்புட்டுகிடுச்சி” தம்புராசு தென் மாவட்டங்களுக்கான சப்-ஏஜெண்ட். திருநெல்வேலியை அடுத்த வள்ளியூரைச் சேர்ந்தவன்.

கணேசனின் காலுக்குக் கீழே பூமி நழுவியது. பணக்கட்டுகளின் மேல் விழுந்து புரள்வதைப் போன்றதொரு காட்சி கண்களுக்குள் ஒரு மின்னல் கீற்றைப் போல் தோன்றி மறைந்தது. அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அடுத்த நாளே வள்ளியூரில் இருந்தான். அதற்கடுத்த நாளே ‘பொருளோடு’ இரவோடு இரவாக பயணித்துப் பொள்ளாச்சியை அடைந்தான். பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ரங்கசாமி புதிதாய் வாங்கியிருந்த தென்னந்தோப்பு ஒன்றில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்த் தங்கினான்.

ஐந்தடிக்கு ஐந்தடி ஒரு குழிவெட்டி அதில் சகதியை நிரப்பி உள்ளே மண்ணுளியை விட்டான். அப்படித்தான் அதைப் பாதுகாக்க வேண்டுமென ரங்கசாமி தொலைபேசியில் வழிகாட்டியிருந்தான். அடுத்து ரங்கானின் வருகைக்குக் காத்திருந்தான் – காத்திருந்த நேரத்தில் கனவுகளில் மிதந்தான். ரங்கசாமி மூன்று நாட்கள் கழித்து வந்தான். வந்தவன் கணேசனின் கற்பனைகளில் வண்ண வண்ணமாய்ப் பறந்து கொண்டிருந்த பலூன்களில் கூர்மையான ஊசியால் ஒரே குத்தாக குத்தி விட்டான்.

“கெணேசா.. அஞ்சு கிலோவுக்கு மேல எடையிருந்தாத்தான் அந்த மருந்து உள்ள உருவாயிருக்கும்னு சொன்னனேடா.. இது மூணு கிலோவு தான் இருக்கு. இது ஆகாதுடா” அமிலத்தைக் காதில் கொட்டியது போல் இருந்தது. மீண்டுமொரு முறை காலுக்குக் கீழே பூமி நழுவியது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி நழுவுகிறது. கணேசனுக்குக் கண்ணில் நீர் கோர்த்தது. பூச்சியைப் போலும், புழுவைப் போலும் உணர்ந்தான். அவனது நிலை ரெங்கனிடம் பரிதாபத்தை வரவழைத்தது.

“சரி சரி உடு.. இதுக்கேன் அழற. ஆறு மாசம் பொறுத்தா எப்படியும் இது வளந்துடும். பொறகால வித்துப் போடலாம். இது சீக்கிறம் வளர என்ன செய்யோணும்னு சேட்டங்கிட்ட கேட்டுச் சொல்றேன். அதுவரைக்கும் நீ இங்கெயே தங்கிக்க. பண்ணையத்துக்கு இருக்கற ஆளுங்களை அனுப்பிடலாம். காவலுக்கு ஒரு கோம்பை நாய் இருக்கு. மத்தபடி வேற யாருக்கும் விசயம் தெரியக் கூடாது. காதும் காதும் வச்ச மாதிரி இருக்கோணும். என்ன?” கணேசன் தளர்வாய்த் தலையசைத்தான். மேலும் நான்கு நாட்கள் கழித்து சேட்டனின் ‘யோசனைகள்’ தொலைபேசி வழி வந்து சேர்ந்தது

அது மண்ணுளிப் பாம்பின் வளர்ச்சிக்கான ஒரு விநோதமான உணவுத் திட்டம். காலையில் சூரியன் உதிக்கும் முன் நேந்திரம் பழத்தை நெய்யில் வறுத்துப் போட வேண்டும். சூரியன் உச்சிக்கு வந்ததும் சீம்பாலை நன்றாகக் கட்டியாய்க் காய்ச்சித் தூவ வேண்டும். இரவு சூரியன் மறைவதற்கு முன் நாட்டுக் கோழி முட்டைகளை முழுதாகப் போட வேண்டும். முக்கியமான நிபந்தனை – உணவைப் போட்ட பின் அந்த இடத்திலிருந்து அகன்று விட வேண்டும். நம் கண்ணெதிரே மண்ணுளி எதையும் சாப்பிடாதாம்.

இந்த வினோதமான ‘உணவுத்’ திட்டத்தின் விளைவாய் ஆறு மாதத்தில் மண்ணுளிப் பாம்பு கால் கிலோவும், அதற்குக் காவலாக இருந்த கோம்பை நாய் எட்டு கிலோவும் கூடிய நிலையில், கணேசன் பத்து கிலோ குறைந்திருந்தான். அவன் தோல்வியெனும் பாதாளத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த போது தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி மொத்தமாகக் குப்புறத் தள்ளியது.

‘ரெங்கன் மோசடிப் புகார்களின் அடிப்படையில் கைது’  என்பதுதான் செய்தி. மண்ணுளிப் பாம்பு என்பதே ஒரு மோசடி என்பதை விவரித்த அந்தச் செய்தியை வாசிக்க முடியாத அளவுக்கு கண்ணீர் கட்டிக் கொண்டது. ஆட்டம் முடிந்தது.

இரண்டு நாட்கள் கணேசன் பித்துப் பிடித்தது போல் வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். மூடாத விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. ரெங்கனோடு கணேசன் கூட்டுச் சேர்ந்திருந்தான் என்பதை அவன் குடும்பத்தார் அரசல் புரசலாகக்  கேள்விப்பட்டிருந்தனர். பயந்து போய் ஊரெல்லாம் தேடி கடைசியில் தோப்பு வீட்டில் விட்டத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்த நிலையில் கண்டுபிடித்தனர். அவன் தம்பி தான் அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.

தோப்பு வீட்டிலிருந்து தளர்வாய் நடந்து செல்லும் போது கணேசன் கடைசியாய் ஒரு முறை அந்த மண்ணுளிக் குழியைத் திரும்பிப் பார்த்தான். பரிதாபமான அந்த ஜீவன் சகதியிலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தது. குழியின் பக்கத்திலேயே அமர்ந்திருந்த கோம்பை நாய் ஏக்கத்தோடு கணேசனைப் பார்த்து வாலாட்டியது.

000

இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் – என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆனந்தனை செல்பேசியில் அழைத்தேன்.

“ஆனந்தா.. அந்த மண்ணுளிப் பாம்பு மேட்டரு சொன்னியே! அதுக்கப்புறம் உன் அண்ணன் என்னவானார்?”

“அதையேண்டா கேக்கற.. இப்ப பழையபடி புல்லட்ட தூக்கிட்டுக் கௌம்பிட்டாண்டா”

“ஐயையோ.. திரும்பவும் முதல்லேர்ந்தா?”

“இல்ல இது வேற  மேட்டரு. அதாவது தன்னோட வாழ்க்கைல யாரையுமே கடிக்காத ராஜ நாகத்தோட விஷம் கெட்டிப்பட்டு இறுகி ஒரு மாணிக்கமா மாறுமாம். அது தான் நாக மாணிக்கமாம். வயசான பின்னாடி அந்த பாம்புக்குப் பார்வை குறையும் போது இரவு நேரத்துல அந்த மாணிக்கத்தை வெளியே துப்பி வச்சிட்டு அந்த வெளிச்சத்துல தான் நடமாடுமாம். இதை அந்தப் பாம்புக்குத் தெரியாம எடுத்து வித்தா லெச்ச லெச்சமா கிடைக்கும்னு எவனோ சொன்னான்னு தேடி அலைஞ்சிட்டிருக்காண்டா”

நான் செல்பேசியை வைத்து விட்டேன். கதை முடிந்துவிட்டதா, இல்லையா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

***

நன்றி : புதிய கலாச்சாரம், வினவு

பாலஸ்தீன மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது – அ. முத்துக்கிருஷ்ணன் நேர்காணல்

’சமநிலைச் சமுதாயம்’ இதழில் (May 2011) வெளிவந்திருந்த நேர்காணல் ’பழனிபாபா’  தளத்தில்  ஜூலை2011-ல் வெளிவந்துள்ளது. சுட்டி : http://www.palanibaba.in/2011/07/blog-post_4158.html . ’பாலஸ்தீனப் பயண அனுபவங்கள்’ என்ற தலைப்பில் நண்பர்அருள்மொழியின் தளத்திலும் இருக்கிறது.  கீழே பதிவிட்டிருப்பது ‘சமநிலைச்சமுதாயம்’ இதழில் வெளிவந்த நேர்காணலின் இமேஜ் கோப்புகள். ‘ஆபிதீன் பக்கங்களில் அவசியம் ஏற்று’ என்று அனுப்பிவைத்த ஹனீபாக்காவுக்கு  நன்றிகள்.

***


 

***

நன்றி : ’சமநிலைச் சமுதாயம்’ , அ.முத்துக்கிருஷ்ணன், எஸ்.எல்.எம். ஹனிபா காக்கா

***

தொடர்புடையவை :

கார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலி : கனன்றெரியும் கோடுகள்

மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தர்வீஷ்

அப்துல் வஹ்ஹாப் பாகவி – ஜே.எம்.சாலி

பொங்கட்டும் ஆன்மீகம், பொங்கலோடு. அப்படியே ஒரு ‘போர்ட்ரைட்’டோடும்…!

எங்கள் ஹஜ்ரத் பற்றிய ஜே.எம்.சாலியின் கட்டுரை – நான் வரைந்த ஓவியத்துடன் – சமநிலைச் சமுதாயம் இதழில் வந்திருக்கிறது. மகிழ்ச்சி. ‘ச.ச’வுக்கு தேங்க்ஸ். அந்த ஆறு பக்க கட்டுரையில் கடைசியாக ஒரே ஒரு சின்ன வரி – ‘ஓவியம் : ஆபிதீன்’ அல்லது, ‘ஆபிதீன் பக்கங்களிலிருந்து எடுத்தது’ என்று இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். வராது; அது எனது நஸீபு.  அவர்களைக் குறைசொல்லவும் கூடாதுதான். ஆபிதீன் பக்கங்களில் நுழைப்பதற்காக ஜெராக்ஸை ஸ்கேன் செய்தபோது என் பெயர் தேவையில்லை என்று அப்போது முடிவெடுத்தது நான்தான். இதனால் , ஓவியத்தின் கீழுள்ள ஹஜ்ரத்தின் கையெழுத்தும் இடம்பெறாது போய்விட்டது. இந்த ஓவியத்தைத்தான் ஹஜ்ரத்தின் சீடர்கள் அத்தனைபேரும் சிறு அட்டையாக வைத்திருப்பார்கள். ஹஜ்ரத்திற்கு பிடித்த ஓவியமும் இதுதான். சில சீடர்கள் , இங்கே இடம்பெற்றுள்ள ஓவியத்தை பிரிண்ட் செய்து அவர்களின் வீடுகளில் வைத்திருப்பதை அறிவேன். அவர்களுக்காக ஒரிஜினல் ஜெராக்ஸை முழுதாக – 600 dpi-ல் – விரைவில் இடுகிறேன், இன்ஷா அல்லாஹ். அதென்ன ‘ஒரிஜினல் ஜெராக்ஸ் என்றால்… ஒரிஜினல் ஓவியம் ஹஜ்ரத்தின் வீட்டில்தான் இருக்கிறது என்று அர்த்தம் (இப்போது யார்கையில் மாட்டியிருக்கிறது என்று தெரியவில்லை). எனது ஒவிய குரு ஆழி.ராமசாமி சார் ஸ்டைலில் ஒன்று புள்ளிகளாகவும், மற்றொன்று குறுக்குக்கோடுகள் கொண்டதாகவும் இரண்டு போர்ட்ரைட்கள் வரைந்து ஹஜ்ரத்திடம் கொடுத்து, கையெழுத்து வாங்கி, உடனே ஜெராக்ஸ் எடுத்துவிட்டு (எச்சரிக்கை!) திருப்பிக் கொடுத்துவிட்டேன் , 1990-ம் வருடம் . அந்த ஜெராக்ஸ்-ல் இருந்து எடுத்த காப்பிகள்தான் எல்லா சீடர்களிடமும் இப்போது உள்ளது. ஒரிஜினல் ஓவியத்தை ஒரு ‘ப்ரோமைட்’ பிரிண்ட் போட்டு நெகடிவ்வும் எடுத்துவைத்தால் நன்றாக இருக்குமே என்று ஹஜ்ரத்திடம்  கேட்டேன் ஒருநாள்.

‘ஆஹா, அந்த வேலையெல்லாம் வாணாம். இன்னோனு வரைஞ்சிக்குங்க!’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்கள்!

ஹஜ்ரத் அவர்களை இதுவரை ஏழெட்டு முறை வரைந்திருக்கிறேன். நாகூர் ரூமி போன்ற முக்கிய சீடர்கள் சிலரிடம் வண்ணத்தில் வரைந்தது இருக்கிறது. அவர்களைக் கெஞ்சி, ஸ்கேன் செய்து இங்கே இட வேண்டும். இதில் ஒரு தமாஷ் உண்டு. கலர்பென்சில் கொண்டு வெளிர்நிறத்தில் வரைந்த ஹஜ்ரத்தின் ஓவியம் நண்பன் நாகூர்ரூமி வீட்டில் – ஹாலில் – இருக்கிறது. பெருமையாக ஒருநாள் ‘இத கிட்ட போய் பார்த்தா நல்ல டீடய்ல் தெரியும்’ என்றேன் ரூமியிடம். ‘அதயும் ட்ராயிங் கீழேயே எழுதிவச்சிடுமேங்!’ என்றார் வாத்தியார். இவருடைய புகழ்பெற்ற  ‘அடுத்தவினாடி’ நூலுக்காக தனியாக வேறொன்று வரைந்து கொடுத்தேன். வாத்தியாருக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் வாத்தியாரின் வாத்தியார் ஜபருல்லா நானாவுக்கு பிடிக்கவில்லை. நிராகரித்து விட்டார் (காஃபிர்!). எனவே அங்கேயும் இதே ஓவியம்தான்.

ஹஜ்ரத்தின் ஆசை அது!

‘கூட்டாளிவளோடு மியாந்தெரு பக்கம் போவும்போது பாப்பேன். நீங்க சின்னப்புள்ள. உங்கவூட்டு வாசல் திண்ணையில உக்காந்து – வரைஞ்சிக்கிட்டிருப்பீங்க என்னமோ.. இந்த புள்ளைங்க எல்லாம் நம்மட்ட வந்தா நல்லாயிக்கிமேண்டு ஆசைப்பட்டேன். இப்ப வந்துட்டீங்க!’ என்றார்கள் ஹஜ்ரத் – நான் அவர்களின் சீடர்கள் குழுவில் இணைந்தபோது.

சொந்தக் கதை போகட்டும், ஜே.எம். சாலி அவர்களின் கட்டுரை , ‘நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை‘ என்ற வரியுடன் அழுத்தந் திருத்தமாக ஆரம்பிக்கிறது. எனி அப்ஜெக்சன்? அநேகமாக , எதிர்ப்புக்குரல் தமிழகத்தின் தக்கலையிலிருந்தும் இலங்கை ஓட்டமாவடியிலிருந்தும் சீக்கிரம் வரக்கூடும். எதிர்பார்க்கிறேன்!

ஆபிதீன்

***

ஆன்மீக எழுத்தாளர் நாகூர் அப்துல் வஹ்ஹாப் பாகவி

இலக்கிய இதழ் முன்னோடிகள் (64) – ஜே.எம். சாலி
சமநிலைச் சமுதாயம் (அக்டோபர் 2010 இதழ்) / பக்.38 – 43

*

நாகூர் தந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி. உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பபட்ட பேரறிஞர் கஸ்ஸாலியின் அறிவுக் கருவூலகமாகப் போற்றப்படும் ‘இஹ்யா உலூமித்தீன்’ வாழ்வியல் நூலை, அரபு மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957-இல் தொடங்கினார்.

*

நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை. அந்த நன்னகர் தந்த முன்னோடிகளின் பேரணியை நாடறியும். ‘நக்கீரர்’ குலாம் காதிறு நாவலர், ஆரிஃப் நாவலர், சித்தி ஜூனைதா பேகம், புலவர் ஆபிதீன்,  நீதிபதி மு.மு. இஸ்மாயில் முதலானோர் நாகூர் தந்த மூத்த தலைமுறை முன்னோடிகள்.

நமது தலைமுறையைச் சேர்ந்த முன்னணி படைப்பாளிகளின் பட்டியலும் பரவலானது. அவர்களுள் ஆன்மீக மெஞ்ஞானத்துறை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தடம் பதித்தவர் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி காதிரி.

எஸ். அப்துல் வஹ்ஹாப், நாகூரில் 8.10.1933இல் பிறந்தார். பெற்றோர் கே. எஸ். முஹம்மது கவுஸ் – செல்ல நாச்சியார் தம்பதியர். உள்ளூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், வேலூர் பாக்கியாத்துஸ் சாலிஹாத் கல்லூரியில் சேர்ந்து அரபுமொழி கற்றார். அங்கு மாணவராக இருந்த காலத்தில் எழுத்துத்துறையில் அடியெடுத்து வைத்தார்.

சில புனைப்பெயர்களையும் சூட்டிக்கொண்டார். விந்தியன். எஸ்.யே.பி முதலான பெயர்களில் அன்றைய தமிழ் வார மாத இதழ்களில் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். குறிப்பாக மணிவிளக்கு மாத இதழில் தொடர்ந்து அவருடைய கட்டுரைகள் இடம்பெற்று வந்தன.

‘பாகவி’ பட்டம் பெற்ற பிறகு எஸ்.அப்துல் வஹ்ஹாப் அரபு நூல்களை மொழிபெயர்க்கும் பணியில் முனைப்பாக ஈடுபடத் தொடங்கினார். ஞானமேதை அறிவுலகச் செம்மல் இமாம் கஸ்ஸாலி அவர்களின் மெய்ஞ்ஞானப் படைப்புகளில் ஏற்பட்ட ஈர்ப்பினால் அந்த மேதையின் அரபிமொழி நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957இல் தொடங்கினார்.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் வரலாற்றை உலகறியும். ஹிஜ்ரி 450ஆம் ஆண்டு தூஸ் நகரில் பிறந்து கல்வியாளராக விளங்கி, பின்னர் ஆன்மீக வித்தகரானார். 55 ஆம் வயதில் ஹிஜ்ரி 505-இல் உலகைத் துறந்த அவர்களின் சாதனை அரிய சரித்திரம்.

இமாம் அவர்களின் ‘பிதாயதுல்ஹிதாயா’ நூலை ‘நேர்வழியின் ஆரம்பம்’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான் கீழக்கரை ச.மு. செய்யிது முகம்மது ஆலிம் புலவர். 1913 இல் வெளிவந்த அந்த நூல், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் ஒட்டுமொத்த நூல்களையும் படித்துப் பயன்பெறும் ஆர்வம் வாசகர்களிடையே மேலோங்கியது. பல எழுத்தாளர்கள் கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்தார்கள். ஆயினும், இமாம் அவர்களின் படைப்புகள் பரவலாக நமது தலைமுறை வாசகர்களுக்கு எட்டவும் கிட்டவும் பாலம் அமைத்தவர் நாகூர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களே ஆவார்.

கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பேரறிவுப் பெட்டகமாகப் போற்றப்படும் ‘இஹ்யா உலூமித்தீன்’ தமிழ் மொழிப்பெயர்ப்பு வரிசையில் முதல் வெளியீடாக ‘பாவமன்னிப்பு’ நூலை 1957இல் வழங்கினார் அப்துல் வஹ்ஹாப் பாகவி.

நாயகத்தின் நற்பண்புகள்

அடுத்து வந்த நூல்களில் ஒன்று, ‘நாயகத்தின் நற்பண்புகள்’. “இமாம் கஸ்ஸாலி அவர்களின் ‘அக்லாகுன் நபி’ என்ற நூலின் விரிவான தமிழாக்கம் ‘நாயகத்தின் நற்பண்புகள்’ என்ற பெயர் தாங்கியிருக்கிறது. இந்நூலில் இமாம் கஸ்ஸாலி அவர்கள் பெருமானாரைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் கொடுக்கிறார். சமுதாயத்திற்கு இது பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். இதை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் ஆழ்ந்த நன்றி. – இஸ்லாமிய ஊழியன் எஸ். அப்துல் வஹ்ஹாப் , நாகூர்'”

நான்கே வரிகளின் முன்னுரை எழுதப்பட்ட இந்த 75 பக்க நூலை 1959 நவம்பர் மாதம் ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டது எம்.ஆர். எம். அப்துற்-றஹீம் அவர்களின் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகம். எஸ். அப்துல் வஹ்ஹாப் அவர்களின் இனிய எளிய தமிழ்நடை வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அண்ணல் நபிகாளின் அரிய பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் அவர் எடுத்துரைக்கும் முறை இயல்பானது. ஒரு சில வரிகள்:

‘உணவுக்காக அவர்கள அதிக நேரத்தை வீணாக்குவதில்லை. சில சமயங்களில் மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னால் அவரகள் சாப்பிட்டு முடித்து விடுவார்கள். செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வரிந்துக்கட்டிக்கொண்டு அவர்கள் மனைவியருக்கு ஒத்தாசை புரிவதும் உண்டு. சில சமயங்களின் இறைச்சியைத் துண்டுபோட்டுக் கொடுப்பார்கள். திருத்தூதர் அவர்களுக்கு இயற்கையிலே வெட்க மனப்பான்மை அதிகமாக இருந்தது. அவர்கள் யாரையும் நேர்ப்பட ஊடுருவிப் பார்த்தது கிடையாது. ஏழை-பணக்கரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருடைய விருந்தையும் ஏற்றுக்கொள்வார்கள். அன்பளிப்பை நிராகரிக்க மாட்டார்கள். சிறிதளவு அமுதமானாலும் முயலின் தொடைக்கறியானாலும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை, அது அன்பளிப்பாக இருக்க வேண்டும். தர்மமாக கொடுக்கப்படும் எதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏழை எளியோரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர்களின் அழைப்புக்குச் செவிமடுத்தார்கள்”.

நூல் பட்டியல்

மௌலவி எஸ்.அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்த அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ தமிழ்ப் பிரதிகளை, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் பதிப்புப் பரப்பியது. அந்த நூல்களின் பட்டியல் வெகுநீளமானது. பாவ மன்னிப்பு, நாயகத்தின் நற்பண்புகள், நாவின் விபரீதங்கள், விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும், இம்மையும் மறுமையும், இறைச் சிந்தனை, இறையச்சம், இறைதிருப்தி, இறையாதரவு, இறை நம்பிக்கை, இறைவணக்கம், சிந்தனையின் சிறப்பு, பொறுமையாயிரு, கோபம் வேண்டாம், உளத் தூய்மை, பொருளீட்டும் முறை, அறிவு எனும் அருள், அறிவோ அருட்பேறோ, அறிவும் தெளிவும், பொறாமை கொள்ளாதே, புறம் பேசாதே, திருமணம், திருந்துங்கள் திருத்துங்கள், நல்லெண்ணம், உள்ளத்தின் விந்தைகள், ஏகத்துவம், பயணத்தின் பயன், செல்வமும் வாழ்வும், நோன்பின் மாண்பு, இமாம் கஸ்ஸாலியின் கடிதங்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

இவற்றுள் 1962 இல் முதல் பதிப்பாக வெளிவந்த ‘இறைநம்பிக்கை’ அடுத்தடுத்து பல பதிப்புகளைக் கண்டது. அந்த நூலுக்கு 12.7.1962 இல் எஸ். அப்துல் வஹ்ஹாப் அவர்கள் எழுதிய முன்னுரை வரிகள் வருமாறு:

“இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதிய அத்தவக்குல் என்னும் நூல் இறைநம்பிக்கை என்னும் பெயரைத் தாங்கித் தமிழுக்கு வந்திருக்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளின் ஒன்று இறை நம்பிக்கை. இது ஆழம் காணமுடியாத பெருங்கடல் என்பது இமாமவர்களின் கருத்து. இது குறித்து அவர்கள் கொடுக்கும் விளக்கம் வாசகர்களின் உள்ளத்தில் குழப்பத்தைத் தூவிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அத்தௌஹீத் என்பது அதன் பெயர். இது தனிப்பட்டதொரு நூலாக இருந்தாலும், இமாமவர்களின் கருத்தோட்டத்தை வைத்துப் பார்க்கும்போது இறைநம்பிக்கை என்னும் நூலுக்கு அது ஒரு முன்னுரை என்றே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. இந்த நூலின் விரிவான தமிழாக்கம் ஏகத்துவம் என்ற பெயரில் வந்திருக்கிறது.

இமாமவர்களின் ஏகத்துவத்தைத் தொடர்ந்து தவக்குல் பற்றி எழுதியிருக்கிறார்கள். எனவே அத்தவக்குல் என்ற மூலநூலின் கருத்துக்களை இப்படியொரு நூலாகத் தயாரித்து உங்களுக்குக் கொடுப்பது குறித்து நான் பெருமகிழ்வு அடைகிறேன்.

பக்தர்களின் பாதை

இறைவணக்கம், பக்தர்களின் பாதை, தர்க்கத்துக்கு அப்பால் ஆகிய நூல்களும் பரவலான வாசகர் வட்டத்தைப் பெற்றவை. பக்தர்களின்  பாதை 1970 இல் முதற்பதிப்பாக வந்தது. 266 பக்கங்களைக் கொண்ட நூலுக்கு யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வரைந்த பதிப்புரை மறக்க முடியாதது; அந்த வாசகங்கள்:

“இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள், உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவார். ஒரு கட்டிடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பதைப் போன்று கனவு கண்டு நடுவே உள்ள தூண் வீண்தானே என்று கனவிலே நினைத்து விழித்தெழுந்ததும் தாம் ஐந்தாவது மத்ஹபை ஏற்படுத்த எண்ணியதும் வீண் என்பதை இறைவன் அக்கனவின் மூலம் தமக்கு உணர்த்தியிருப்பதாக உணர்ந்து அம்முயற்சிகளை அவர்கள் கைவிட்டனர். அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை 40 வால்யூம்களில் எழுதியிருப்பதாக கூறப்பட்டிருப்பினும் அவற்றில் ஒன்றேனும் தற்போது காணக்கிடைக்காதன் காரணமாக அது ஐயுறப்படுகிறது. எனினும் அவர்கள் குர்-ஆன், ஹதீஸ் ஆகியவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து, தித்திக்கும் தேன்பாகாக நமக்கு ஆக்கித்தந்திருக்கும் ‘இஹ்யா உலூமித்தீன்’ என்ற அவர்களின் இணணயில் பெருநூல் அவர்களை இறவா வரம்பெற்ற புகழுயருவினராக ஆக்கியுள்ளது. உலகிலுள்ள எல்லா அறிவியல் நூல்களும் அழிந்து போய்விடினும் அவற்றை ‘இஹ்யா’விலிருந்து உண்டுபண்ணிவிடலாம் என்ற ஒரு பழமொழியே ஏற்படும் வண்ணம் சிறப்புற்றும் விளங்கும் அச்சீரிய நூலின் சாற்றைப் பிழிந்தெடுத்து அதிலே வகைவகையான இன்னும் பல ருசிகளையும் சேர்த்து தந்தாற்போன்று ‘மின்ஹாஜுல் ஆபிதீன்’ என்ற இந்த ‘பக்தர்களின் பாதை’ அமைந்துள்ளது. இமாம் அவர்களின் இறுதி நூலாகிய இது , இமாம் அவர்கள் இவ்வுலக மக்களுக்கு இறுதியாக விட்டுச்சென்ற ‘வஸிய்யத்’ போன்று விளங்குகிறது.

இறையண்மையைப் பெறுவதற்கு எவ்வாறு பக்திப்பாதையில் அடியெடுத்து வைப்பது என்பதை அழகாக இந்நூலில் எடுத்துரைக்கும் இமாம் அவர்கள், நம் கைப்பிடித்து  வாழ்வின் இணையற்ற இறுதி லட்சியமாகிய அம்மகோன்னத உச்சத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்வது போன்று அமைந்துள்ளது இந்நூல். ஒன்பது உள்தலைப்புகளில் வரையப்பட்ட பக்தர்களின் பாதையில் இடம் பெற்ற ‘இடையிலே ஓர் எச்சரிக்கை’ வழங்கும் சிந்தனை :

“உங்கள் உறுப்புகளின் தக்வா மலர வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். அதனை அவற்றில் எப்படி மலர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். அவற்றில் அடுத்துவரும் இந்தப் பயிற்சிக்குரிய முக்கியத்துவத்தை நீங்கள் ஆழமாக உணரவேண்டும் என்பதற்காக அவற்றை இங்கே மற்றொரு கோணத்திலிருந்து விளக்கப் போகிறேன். மேலே இடம்பெற்ற உறுப்புகளில் உங்களுக்குப் பயிற்சியும் கட்டுப்பாடும் ஏற்படவேண்டும், அவற்றை முறைப்படி பண்படுத்தாத எவருக்கும் ஆத்மீகத்துறையில் வெற்றி கிடைக்க முடியாது.

கண்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். அந்தக் கட்டுப்பாட்டுக்குள் காதுகள் அடங்கிவிடும். கண்ணுக்கும் காதுக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. இந்த இரண்டும் சேர்ந்து உள்ளத்துக்குச் செய்தியனுப்புகின்றன. மனிதனின் உள்ளத்திற்குச் செல்கிற செய்திகளில் பெரும்பாலானவை கண்ணையோ காதையோ வழியாகக்கொண்டுதான் பிரயாணம் செய்கின்றன.

ஆத்மீகம் என்பது உள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. அது தெளிவாக இருக்க வேண்டும் என்றால் வெளியிலிருந்து அதற்குச் செல்லும் செய்திகள் தெளிவாக இருக்க வேண்டும். பெரும்பான்மையாக உள்ளத்தில் தோன்றும் கோளாறுகள் அனைத்தும் கண்களாலேயே உருவாகின்றன.

“ஒரு மனிதனால் தன் பார்வையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவனுடைய உள்ளத்திற்கு மதிப்பு கிடையாது’ என்று அலி (ரலி) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மனிதனின் புலன்கள் அத்தனையும் அவனது உள்ளத்துக்குத்தான் செய்தியனுப்புகின்றன. என்றாலும் பார்வையின் விழியில் உள்ளத்துக்குச் செல்லும் செய்திகள் வலிமையும் வேகமும் கொண்டவை’ . இதுபோன்ற ஆழ்ந்த சிந்தனைக் களஞ்சியமாக அமைந்துள்ளது ‘பக்தர்களின் பாதை’ நூல்.

தர்க்கத்துக்கு அப்பால்

எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி எழுதிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ நூலை 1984 மார்ச் மாதம் நாகப்பட்டினம் ஹுசைன் ஹோல்டிங்ஸ் நிலையம் வெளியிட்டது. பேரறிஞர் இம்மாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ஞானக் கருவூலத்திலிருந்து கிடைத்திருக்கும் இந்த நூல், அறிவுப்பசி கொண்டவர்களுக்கு நல்லதொரு நம்பிக்கை எனும் பதிப்புரையுடன் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு, இரண்டு பத்திகளில் பாகவி வரைந்த முன்னுரை:

“ஹுஜ்ஜத்துல் இஸ்லாம், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் கலாம்’ என்ற நூலிலிருந்து விரிந்து வந்திருக்கும் இந்நூல், திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் காணப்படுகிற மூலத்தத்துவக் கருத்துக்களைப் பாமரர்கள் எப்படியும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறது.

இந்த மூல நூலில் ஒரு சிறு பகுதி இறைவனைப் பற்றிச் சில வினாக்கள் என்ற பெயரில் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது. என்றாலும், தர்க்கத்துக்கு அப்பால் எனும் இந்நூல், மூலநூல் முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு ஞானத்துறையில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் பலரது நூல்களை ஆதாரங்களாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. வாசகர்களுக்கு சிறிதும் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டிருந்தாலும் இந்த நூல் முழுவதும் இமாம் கஸ்ஸாலி பேசுவதுபோலவே அமைந்திருக்கிறது. தர்க்கத்துக்கு அப்பாற் பட்ட அறிவுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த நூல் நல்வழி காட்டும் என்று எண்ணுகிறேன்.

உள்ளத்தையும் நாவையும் படைத்து முன்னதன் மூலத்துக்குப் பின்னதை மொழிபெயர்ப்பாக்கிய இறைவனே அனைத்துப் புகழுக்கும் உரியவன். தன் பெயர்களாலும் குணங்களாலும் அடியார்களுக்குத் தோற்றமளிக்கும் அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். மூலத்தத்துவ தர்க்கத்துக்கு கட்டுப்படாதவன். மூலத்தத்துவத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவன்.

மனித இதயங்களைத் தன் இரண்டு விரல்களுக்கிடையில் நிறுத்திவைத்து, தான் விரும்பியபடி எல்லாம் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் அவன், அருகிலிருப்பவர் அனைவரிலும் மிக அருகில் இருப்பவன். தெளிவு படைத்தவர்களுக்கு பிடரி நரம்பைவிட நெருங்கியிருக்கும் அவன் மார்க்கத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளாத பாமரர்களுக்கு மிகமிகத் தூரத்தில் இருக்கிறான்.

கற்பனைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட இறைவன் தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான். அவன் கூற்றுக்குப் பெருமானார் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். நபித்தோழர்களும் அவர்களை அடுத்து வந்த அறிஞர்களும் விரிவுரை அளித்திருக்கிறார்கள். இறைவனைப் பற்றிய சிந்தனை இஸ்லாத்தில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவை”

வழிகாட்டும் நன்னூலான ‘தர்க்கத்துக்கு அப்பால்’, இவ்வாறு தொடங்கி பரந்து விரிந்து செல்கிறது.

தனி நூல்கள்

மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி அவர்கள், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களுடன் பல தனி நூல்களையும் எழுதியுள்ளார்.

மகனுக்கு, மௌலானா ரூமியின் தத்துவம், அரேபியாவில் சிலநாள், இறைவனைப் பற்றிய சில வினாக்கள், ஏகத்துவமும் எதிர்வாதமும், தனிமை ஒரு விளக்கம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

‘இமாம் ஜாபர்சாதிக்’ அவர் வரைந்த வரலாற்று நூல். முதல் பதிப்பாக 209 பக்கங்களுடன் 165இல் இந்த நூலை வெளியிட்டு விற்பனை செய்வதில் சிரமங்களள எதிர்நோக்கியதாக எழுதியுள்ளார் அப்துல் வஹாப் பாகவி.

‘மகனுக்கு’ குறிப்பிடத்தக்க நூல். அலி (ரலி) அவர்கள் தமது புதல்வருக்கு எழுதிய கடிதங்களையும் கருத்துகளையும் ஆதாரமாகக் கொண்டு தமிழுக்கு தந்திருக்கும் முதல் அறிவு நூல் எனும் முகப்பு வரிகளுடன் 1963 ஆகஸ்ட் மாதம் முதல் பதிப்பாக வெளிவந்தது.

நெகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை இரண்டு பக்க முன்னுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நாகூர் பாகவியார். அதன் ஒரு பகுதி :

“மனிதனை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். உண்மை தனக்குத் தெரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டவன் ஒருவன். உண்மை தனக்கு தெரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாதவன் மற்றொருவன். உண்மை தனக்கு தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டவன் மூன்றாமவன். உண்மை தனக்கு தெரியவில்லை என்பதையே தெரிந்து கொள்ளாதவன் நான்காமவன்”

“காலுக்குச் செருப்பு இல்லையே என்று நான் கவலைப்பட்டேன், காலே இல்லாத மனிதனைப் பார்க்கும்வரை”

இப்படி வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளி இறைத்த அலியார் கஅபா எனும் தேவாலயத்தினுள் பிறந்தார்கள். ஏறத்தாழ பத்துவயதில் இஸ்லாத்தைத் தழுவிய அவர்கள் முதன்முதலில் இஸ்லாத்திற்கு வந்த சிறுவர் என்று பாராட்டப்பட்டிருக்கிறார்கள். பெருமானர் மீது பேரன்பு கொண்டிருந்த அலியார் இஸ்லாத்தின் முன்னேற்றத்துக்குத் தமது வாழ்வையே அர்ப்பணித்தார்கள். பெருமானார் மக்காவை விட்டு மதினாவுக்குப் புறப்பட்ட நேரத்தில் அலியார் செய்த தியாகம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

தமது இறுதிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோதுதான் அவர்களின் சிந்தனைத்திறனும் செயல்திறனும் தெளிவாக வெளிப்பட்டன. ஏறக்குறைய 5 ஆண்டுகள்தான் அவர்கள் ஆட்சி புரிந்தார்கள் என்றாலும், அந்த இடைக்காலத்தில் இஸ்லாமிய உலகத்திற்கு அவர்கள் செய்த அறிவுப்பணி அளவிடற்கரியது. அவர்கள் எழுதிய கடிதங்களும், பேசிய பேச்சுக்களும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை. உங்கள் கரத்திலிருக்கும் இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது”

இந்நூல் அலி(ரலி) தமது புதல்வருக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் வரைந்த அரிய அனுபவ உபதேச நல்லுரையாக அமைந்துள்ளது.

கட்டுரைகள்

மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி மணிவிளக்கு இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார். மக்கா யாத்திரை என்ற தலைப்பில் ஐரோப்பியப் பயனியின் அனுபவ வடிவில் அவர் எழுதிய கட்டுரைத் தொடர் , வாசகர்களின் வரவேற்பை பெற்றது. அதுவே பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

‘அரேபியாவில் சில நாள்’ கட்டுரைகளிலும் வாசகர் கடிதங்களிலும் கருத்து முரண்பாடுகள் இருந்ததால் உடனுக்குடன் உரிய விளக்கங்களுடன் பதில் எழுதி வந்தார் அப்துல் வஹ்ஹாப் பாகவி.

மணிவிளக்கு இதழில் 1987 ஜனவரி-பிப்ரவரி இதழ்களில் கடிதமும் கருத்தும் பகுதியில் -14 பக்கங்களில் – ‘அல்லாஹ் எங்கே இருக்கிறான்?’ எனும் தலைப்பில் அவர் எழுதிய விளக்கம் வாசகர்களைக் கவர்ந்ததது. மறக்க முடியாத அந்த விளக்கக் கடிதத்தின் ஒரு பகுதி :

‘இறைவன் எங்கும் நிறைந்தவன் அல்லன்’ என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. கடிதம் எழுதிய வாசகர் தம் கருத்துக்குத் தர்க்க ரீதியாக ஆதாரமும் காட்டியிருக்கிறார். அவர் எடுத்த எடுப்பிலேயே தம் கருத்தை இப்படிச் சொல்கிறார்.

இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது இஸ்லாத்திற்கு எதிரான கருத்து. இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வோர் இரவிலும் இறைவன் கீழ்வானத்திற்கு இறங்கிவருகிறான் என்று நபிக்கருத்துக்கு அர்த்தமே கிடையாது.

அதாவது இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பது உண்மையானால் அவன் உலகத்தில் எல்லா இடங்களிலும் இருப்பதோடு, மேல்வானத்திலும் கீழ்வானத்திலும் இருக்க வேண்டும். அப்படி மேல்வானத்திலும் கீழ்வானத்திலும் இருக்கிற இறைவனைப் பற்றி கீழ்வானத்திற்கு இறங்கி வருகிறான் என்று பெருமானார் கூறியிருப்பதில் அர்த்தம் இருக்க முடியும். எனவே இந்த நபி கருத்துக்கு அர்த்தம் தரவேண்டும் என்றால் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற கருத்து மறுக்கப்பட வேண்டும். இதுதான் நம் வாசகரின் கருத்து.

உண்மையில், இந்தக் கருத்து முற்றிலும் தர்க்க ரீதியானதுதான். ஆனால், அவர் ஏன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கும்போது எனக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. அக்டோபர் இதழில் அல்-கலாம் எழுதிய ‘இறை நெருக்கம்’ என்ற அந்தக் கட்டுரையை அவர் முழுமையாக படிக்கவில்லை; அல்லது படித்ததைப் புரிந்துகொள்ளவில்லை. எனவே, மேற்குறிப்பிட்ட நபிமொழிக்கு அவர் இப்படி பொருள் கொடுத்திருக்கிறார்:

சூரியின் மேற்கு திசையில் மறைந்ததும் இறைவன் ஏழாவது வானத்தில் அமைக்கப்பட்டிருக்கிற ‘அர்ஷ்’ எனும் சிம்மாசனத்திலிருந்து புறப்பட்டு தன் கல்யாண குணங்களையும் , மலக்குகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அல்லது அவற்றையும் அவர்களையும் ஏழாவது வானத்திலேயே விட்டுவிட்டு கீழ்வானத்துக்கு இறங்கி வருகிறான். பொழுது விடிந்ததும் ஏழாம் வானத்தை நோக்கி ஏறிச்சென்று, அர்ஷ் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறான்.

என் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். பெருமானாரின் கருத்தை இப்படித் தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் அவர் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற அறிவை ஏற்க மறுப்பதில் எப்படி வியப்பு இருக்க முடியும்?

இந்தக் கட்டத்தில் நான் எழுதிய ‘தர்க்கத்துக்கு அப்பால்’ என்ற நூலிலிருந்து ஒரு சிறிய பகுதியை உங்களுக்கு முன்னால் எடுத்து வைப்பது நல்லது என்று எண்ணுகிறேன்.

இந்த நூல் இல்ஜாமுல் அவாம் என்ற பெயரில் இமாம் கஸ்ஸாலி(ரஹ்)  அவர்கள் எழுதிய அரபி நூலை அடிப்படையாகக் கொண்டது.

மேலிருந்து கீழே இறங்குவதும் , கீழிருந்து மேலே ஏறுவதும் இறைத்தன்மைக்குக் கொஞ்சமும் பொருந்தாதவை. மேலே கீழே என்று குறிப்பிட்டு கூற முடியாதவாறு எங்கும் நிறைந்த இறைவன் எப்படி கீழே இறங்க முடியும்?”

இவ்வாறு அந்த நெடிய கடிதம் தொடர்கிறது…

அங்கீகாரம்

ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கிய அப்துல் வஹ்ஹாப், அறுபது வயதை எட்டிய நிலையில் எழுத்துப் பணியை நிறுத்திக்கொண்டு ஞான, ஆன்மீகப் பணியில் இறங்கினார்.

5-ஏ, தலைமாட்டுத் தெரு, நாகூர் முகவரியை உறைவிடமாகக் கொண்டு தம்மை நாடி வருவோர்க்கு ஆன்மீக ஆலோசனை சிகிச்சைகளை வழங்கி வந்தார்.

மௌலவி அப்துல் வஹாப் பாகவி அவர்கள் இறைநாட்டப்படி 9.9.2002 அன்று இவ்வுலகைத் துறந்தார்.

அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களும், சுய சிந்தனைப் பதிவுகளான மற்ற நூல்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு விரிவான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெற்றுள்ளது அவருக்கு சிறப்பு அங்கீகாரம்.

அரிய எழுத்துச் செல்வராகத் தடம்பதித்த நமது தலைமுறை முன்னோடிகளில் ஒருவராக விளங்குகிறார் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி.

பிறந்து வளர்ந்த நாகூருக்கு மட்டுமின்றி, பரந்த தமிழ்கூறும் நல்லுலகுக்கும் புகழ் சேர்த்தவர் நமது பாகவியார் என்பதை யாரால் மறுக்க முடியும்?

**

நன்றி : ஜே.எம். சாலி , சமநிலைச் சமுதாயம், நண்பன் ஹமீது (துரை)

« Older entries