ஒசாமாவை பேட்டி கண்டேன்

பேட்டி கண்டது நண்பர் தாஜ் அல்ல. தைஸீர் அலோனி (تيسير علوني).  அவர் (தாஜ்) அனுப்பிய ‘த சன்டே இந்தியன்’ கட்டுரையைப் பதிவிடுகிறேன்.’கவர் ஸ்டோரி’யின் இரு இமேஜ்கள் இங்கே இருக்கின்றன. ‘க்ளிக்’ செய்து பெரிதாக்கவும்.  இதையே – சில பின்குறிப்புகளுடன் – கவிஞரும் தட்டச்சு செய்து அனுப்பியிருந்தார். அதுவும் அடியில் உண்டு. பாருங்கள். நன்றி.

‘நாம் அனைவரும் அமைதிக்குத் தரவேண்டிய விலைதான் போரா?’

***

செப்டம்பர் 11 தாக்குதல் நடந்ததற்கு ஒரு மாதம் கழித்து, அப்போது உலகம் முழுவதும் தேடப்பட்ட ஒரு நபரை பத்திரிகையாளர் டைசீர் அலோனி பிரத்யேக நேர்காணல் செய்தார். அந்த நபர் ஒசாமா பின்லேடன். காபூலில் சி.என்.என். மற்றும் அல்ஜெசிராவின் செய்தியாளராக இருந்த இவர், சிரியாவில் பிறந்து ஸ்பெயினில் வாழ்பவர். அல்காயிதா அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு, மேட்ரிட் நீதிமன்றம் இவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை அளித்தது. எண்ணற்ற மனுக்களுக்குப் பிறகு 51 வயதான டைசீர், கொடும் சிறையான அல்காலா மெகாவிலிருந்து ஸ்பெயினில் கிரானடாவில் உள்ள தன் வீட்டுக்கு மாற்றப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இப்போதும் வீட்டுக்காவலில் இருக்கும் டைசிர் அலோனி, த.ச.இ.க்கு (த சன்டே இந்தியன்-க்கு) அரபியில் தனது நேர்காணலை எழுதி அளித்திருக்கிறார். இதில் அவர் இஸ்லாம், மேற்குலகம், சமாதானத்திற்கான தடைகள் குறித்துப் பேசுகிறார் –  இந்திரா

***

வீட்டுச்சிறை

பிப்ரவரி 2012 வரை நான் வீட்டுக் காவலில்தான் இருக்கவேண்டும். காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நான் வெளியே சென்றுவரலாம். ஆனால் கிரானடாவுக்கு வெளியே நான் செல்லமுடியாது. இதனால் பத்திரிகையாளராக பணிபுரிய இயலாது. அதற்கு நான் ஸ்பெயின் நாடு முழுவதுமாவது பயணிக்க இயலவேண்டுமே….

ஒசாமாவுடன் நேர்காணல்

நான் ஒரு பத்திரிகையாளராக அவரை பேட்டி கண்டேன். இதற்காக ஒருபோதும் வருத்தப்படமாட்டேன். மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை எழுந்தாலும், அந்த வேலையைச் செய்வதற்கு தயங்கமாட்டேன். பின்லேடன் , குரானுக்கு அவருக்கே உரியதான அர்த்தப்படுத்தலைச் செய்தார். அவரது கருத்துடன் அனைத்து முஸ்லிம்களும் உடன்பட வேண்டியதில்லை. ஒரு யூதராகவோ, கிறிஸ்துவராகவோ இருப்பதற்காக அவர்களுடன் முகமது நபி சண்டையிடவில்லை. ஆனால் நீங்கள் எப்படி அவர்கள் மீதான போரை நியாயப்படுத்துகிறீர்கள் என்றும் கேட்டேன். அவர் 1998 ஆம் ஆண்டில், தான் வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்ததாலேயே யூதர்கள் மற்றும் சிலுவைப் போராளிகள் மீது போரை அறிவித்ததாகக் கூறினார். ஆனால் இதற்கு முரணாக 2001 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ், தனக்கு கடவுளிடமிருந்து செய்திகள் வந்துகொண்டிருந்ததாகவும் ‘சிலுவைப் போரை’ தொடங்கியதாகவும் தெரிவித்தார். இது ஒசாமாவுக்கும் பொருந்துவதுதான் சோகமயமானது.

மேட்ரிட் குண்டுவெடிப்புகள்

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்ரிட் குண்டுவெடிப்புகள் பற்றி நான் செய்தி எழுதினேன். குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் மீதானவிசாரணையின் தகவல் அது. அவர்கள் வடக்கு ஸ்பெயினில் உள்ள சில சுரங்க உரிமையாளர்களிடம் வெடிமருந்துகளை வாங்கினார்கள். ஆனால் விற்றது வாங்கியதைத் தவிர அங்கு வேறு எதுவும் நடக்கவில்லை. சுரங்க உரிமையாளர்களுக்கு வெடிமருந்து எதற்காக வாங்கப்படுகிறது என்பது தெரியாது.

வேறு வழி உண்டா?

அல் காயிதா மற்றும் பிற அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் சேர காரணம், உலகின் பல இடங்களில் முஸ்லிம்கள் சந்திக்கும் அநீதிதான். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்குநாடுகளும் தங்கள்மீது இலக்கு வைத்துள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். அப்பாவிகள் கொல்லப்படுவதுதான் பயங்கரவாதம் என வைத்துக்கொள்வோம். அப்படிதான் பின்லேடன் பயங்கரவாதி ஆகிறான். ஆனால் அமெரிக்காவோ, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்றுள்ளது. இந்தக் கொலையில் இங்கிலாந்தும் பங்குபெற்றது. இந்தச் செயலை நாம் எப்படி பெயரிடப்போகிறோம்? பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது. போராட்டங்களின்போது காஷ்மீரிகளை இந்தியா கொல்கிறது. இதை என்ன பெயரிட்டு அழைப்பது? 60 ஆண்டுகள் ஆகியும் பாலஸ்தீனிய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவேயில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாலஸ்தீனியர்கள் கடும் கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் உதவி செய்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலுக்கு எதிராக எந்தத் தீர்மானத்தையும் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா அதை ரத்து செய்ய முயலும். மூன்றாம் உலகநாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக மேற்குநாடுகள் உள்ளன. இப்படியான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் மிகப் பாதகமானதாகவே தோன்றுகிறது.

அகிம்சை ஓரளவுக்கு உதவும்

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் போராட்ட வழிமுறைகள் வெற்றிக்கரமான பலன்களைத் தந்தன. ஆனால் தற்போதைய நிலைமை வித்தியாசமானது. காந்தி ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகவும் மண்டலா நிறவெறி பாகுபாட்டிற்கு எதிராகவும் போராடினார். தற்போது நாம் அரசியல்ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கிறோம். உதாரணத்துக்கு பாலஸ்தீனத்தில் ஆக்ரமிப்பை எதிர்க்கும் எந்த வன்செயலும் பயங்கரவாத நடவடிக்கையாக இனம் காணப்படுகிறது. ஆனால், இஸ்ரேலின் குற்றங்களை பாதுகாப்பு என்ற பெயரில் மேற்குநாடுகள் நியாயப்படுத்துகின்றன.

இஸ்லாம் – மறு கண்டுபிடிப்பு

அரசியல் லாபத்திற்காக இன்று இஸ்லாம் தாக்கப்படுகிறது. இஸ்லாம்தான் பயங்கரவாதத்தின் அச்சாக நமக்கு தொடர்ந்து கூறப்படுகிறது. பயங்கரவாதம் என்பதற்கான பொது வரையறை சர்வதேச சமூகத்தில் இல்லை. இஸ்லாமுக்கு வழிகாட்டுதல்கள் எதுவும் தேவையில்லை. அதற்குச் சொந்தமாக கோட்பாடுகள் உள்ளன. உலகம் முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்த அவசியமும் இஸ்லாமுக்கு இல்லை. இஸ்லாம் அமைதியின் மதம். முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகவே அம்மதம் ஜிகாத்தை வரவேற்கிறது. இச்செயலை எதிரிகள் தீவிரவாதம் என்று சொல்வார்கள் எனில், அது அவர்களுடைய பிரச்சனை. ஏனெனில் அவர்கள் இஸ்லாமை வெறுக்கிறார்கள். இரட்டை அளவுகோல்களையும், போலித்தனத்தையும் முடிவுக்குக்கொண்டு வந்தால் மட்டுமே தீர்வு சாத்தியம்.

***

நன்றி: த சன்டே இந்தியன்/ 04-17,Oct 2010

***

பின் குறிப்பு:

மேற்கண்ட தேதியிட்ட இதழில்,
‘போரும் சமாதானமும்’ என்கிற தலைப்பின் கீழ்…
‘நாம் அனைவரும் அமைதிக்குத்
தரவேண்டிய விலைதான் போரா?
தோட்டா நிரம்பிய துப்பாக்கி இல்லாத வேறொரு வழி இருக்கிறதா?
வாய்ப்புகளை அலசுகிறது த சண்டே இந்தியன்.’
என்கிற முழக்கத்தை முன் வைத்து…..
உலகம் தழுவிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுரைகள் 12 -ஐ
மாறுபட்ட எழுத்தாளர்களின் பார்வையில்
வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஒன்றுதான் இது!

*

தட்டச்சு & வடிவம்: தாஜ் | E-Mail : satajdeen@gmail.com
8:52 PM 10/25/2010

***

நன்றி : கநாசு. தாஜ்

***

மேலும் பார்க்க : A Discussion on the New Crusader Wars
Tayseer Allouni with Usamah bin Laden
  

பழி தீர்த்தல் – ஹத்தீப் சாஹிபின் பதில்

சகோதரர் ஹத்தீப் சாஹிபின்  ‘தேவை மனித நேயம்’ நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார் (மஞ்சக்கொல்லை) ஹமீதுஜாஃபர் நானா. அவருக்கு ஹத்தீப் சாஹிப் எழுதிய பதிலை – ஜாஃபர்நானாவின் அனுமதியுடன் – பதிகிறேன். 

**

அன்பு மஞ்சை ஜாஃபர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களது இ-மெயில் கண்டேன்.

2004-05 வாக்கில் உலகத்தில் தாக்கம் ஏற்படுத்திய தலைவர்களுள் புஷ், கண்டலிஸா, சத்தாம், ஒஸாமா, அய்மான் அல்-ஜவாஹிரி போன்றவர்கள் முதன்மையானவர்கள் மட்டுமல்ல; முக்கியமானவர்களும்கூட. இவர்களது கூட்டு முயற்சியால் உலகலாவிய பயங்கரவாதம்  இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஒழிக்கமுடியாத, குறைந்தபட்சம் கட்டுப்படுத்தமுடியாத ஒரு பூதமாக உருவெடுத்துவிட்டது. உலக அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் அரிய தொண்டாற்றிய அத்தகைய ‘சர்வ வல்லமை’ பொருந்திய சர்வதேசக் கதாநாயகர்கள் பற்றி ஒரு லவங்கம் அளவேனும் தமிழ் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலும் உந்துதலுமே ‘தேவை:மனிதநேயம்’ நூல். அதில் ‘கற்பனை’ என்று கணிக்கமுடியாத பல விஷயங்கள் இருப்பது போலவே உண்மை என்றும் விளங்கிக் கொள்ள முடியாத பல நிஜங்களும் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்கு: அமெரிக்கவினால் ஃபலூஜாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு ரசாயனத் தாக்குதலை ‘திக்ரித்’தில் என்று மாற்றியிருக்கிறேன். இடம் கற்பனை. நிகழ்ச்சி நிஜம். எந்தக் குற்றத்திற்காக சத்தாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டாரோ அதே குற்றத்தை அமெரிக்க செய்திருக்கிறது என்று பதிவு செய்வது எனது கடனாகத் தோன்றிற்று. மற்றவர்களை விசாரிப்பதற்கோ தண்டிப்பதற்கோ அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் சாலமன் அமைச்சரவை அல்ல.அமெரிக்காவுடனான முதல் யுத்தத்தில் மூத்த புஷ்ஷுக்கு வசமாகப் பாடம் கற்பித்த சத்தாமை, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இளைய புஷ் பழி தீர்த்துக்கொண்டார் என்பதே நிஜ வரலாறு.

ஆனால் ஒஸாமாவோ அய்மானோ மனிதகுலம் மன்னிக்க முடியாத மார்க்க மாமேதைகள் என்பதையும் நான் குறிப்பிடத் தவறவில்லை. “அமெரிக்கர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் ” என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு ஒஸாமா தகுதி படைத்தவரோ அல்லது மார்க்கத்தின் அனுமதி பெற்றவரோ அல்ல என்பதும் உலகத்துக்குச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு செய்தி. பழிக்குப் பழியை இஸ்லாம் அனுமதிக்கிறது என்றாலும், கொலையுண்டவரின் வாரிசுக்கும் கொலையாளிக்குமிடையேயுள்ள ஓர் உரிமைப் பிரச்னையை ஒஸாமாவோ அல்லது அவரது உத்தரவு பெற்றவரோ கையிலெடுத்துக் கொள்ளமுடியாது. கொலையுண்டவனின் வாரிசுக்காரன் கொலையாளியை மன்னிக்க விரும்பினால், இஸ்லாமிய அரசே அதில் தலையிட முடியாது என்பது சட்டம்.

அதுவே அந்தப் புதினத்தின் அல்லது வரலாற்றின் சிறப்பு என்று நான் கருதுகிறேன்.

அன்புடன்

ஏ.ஹெச்.ஹத்தீப்

E- Mail : hatheeb@gmail.com

*

நன்றி : ஹமீது ஜாஃபர், ஹத்தீப் சாஹிப்

ஹத்தீப் சாஹிபின் அரசியல் புதினம் : பொதுப்புத்திக்கு ‘செம அடி’ – கவிஞர் நந்தலாலா

‘உலக அமைதிக்காக – மனிதகுல சுபிட்சத்திற்காக’ என்ற பொய்ப் போர்வையில் தத்தமது இனங்களுக்காகவும் மதங்களுக்காகவும் இருட்டில் நிகழ்த்தப்பட்டு, இருட்டிலேயே புதைக்கப்பட்ட சில கோர சாகசங்களை இந்நூல் வெளிச்சமிடுகிறது’ என்று முன்னட்டையில் கூறப்படும் ‘தேவை மனித நேயம்’ (என்ன தலைப்பு இது!) உண்மையாகவே படு சுவாரஸ்யமாக இருக்கிறது. துரோகங்கள் விதைக்கப்படும், அமெரிக்க அதிபர்களை ஒஸாமா சந்திக்கும் , அந்த பத்தாம் அத்தியாய உரையாடலுக்காகவே ஒரு பரிசு உங்களுக்கு கொடுக்கலாம் ஹத்தீப் சாஹிப் அவர்களே… ‘மெய்யறிவு’ இதழால் சிறந்த புதினமாக 1000 ரூபாய் பரிசு பெற்று, மணிமேகலைப் பிரசுரத்தால் விரும்பி வெளியிடப்பட்ட நூலுக்கு கவிஞர் நந்தலாலா அளித்துள்ள அணிந்துரையை இப்போது பதிகிறேன். ஹத்தீப் சாஹிப் எழுதி , வெளியிடாமல் இன்னும் வைத்திருக்கும் எல்லா நாவல்களிலிருந்தும் (சத்யமேவ, மனிதம், ராஜமுத்திரை, இனிய பொய்க்காதல்,சொர்க்கம், ஆசிரமத்து தேவதை என்ற தலைப்புகளில் எழுதிக் குவித்திருக்கிறார் மனிதர்) சில சில பகுதிகளை விரைவில் இங்கே பதிய இயலும் என்றும் நம்புகிறேன். எழுதுவதையெல்லாம் இ-மெயிலில் அனுப்பி வைப்பதாக ‘ப்ராமிஸ்’ பண்ணியிருக்கிறார் ஹத்தீப் சாபு (‘Send’ பட்டனைத்தானே அழுத்த வேண்டும் ஆபிதீன்?). அது கிடக்கட்டும், ஈழம் பற்றி அவர் எழுதிய சமநிலைச் சமுதாயக் கட்டுரை என்னாச்சு என்கிறீர்களா? அடுத்த பதிவு அதுதான், இன்ஷா அல்லாஹ்.

***

தேவை மனித நேயம்  – ஏ.ஹெச். ஹத்தீப்

கவிஞர் நந்தலாலாவின் அணிந்துரை…

வரலாறு என்றாலே ராஜராஜ சோழனும் குதிரைகளின் காலடியும் கச்சையணிந்த பெண்களும் என்பதாகவே தமிழனின் பொதுப்புத்தி அமைந்துள்ளது. அந்தப் புத்தியியின்மீது விழுந்துள்ள ‘செம அடி’தான் இந்தப் புதினம். இந்த வரலாற்றுப் புதினம் தமிழுக்கு ரொம்ப புதுசு.

இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திர பூமி’ கூட இந்திய அரசியலைக் களமாகக் கொண்ட ஒரு நாவல். ஆனால் ஹத்தீபின் தேவை மனித நேயம்’ உலக அரசியல் தளத்தில் நிகழ்பவை. ஹத்தீபின் இந்தப் புதினவகை அல்லது புனைகதை முறை தமிழுக்கு ஒரு நல்வரவு என்றுதான் சொல்ல வேண்டும். 

உலக பயங்கரவாதமே இதன் பின்னணி. அமெரிக்க அதிபர் புஷ்ஷூம் அவரது அதிகாரக் காவலர்களும் சரிபாதிக் கதாபாத்திரங்கள். மீதிப் பாதியை அல்-காயிதாவின் ஒஸாமாவும் அவரது பரிவாரங்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். தத்தமது சாகஸங்களை நியாயப்படுத்துகிற இரு சாரருமே சுயநலம் கலந்த போலிகள் என்பது புரியும்போதுதான் மனிதகுலத்துக்கு விடிவுகாலம். புஷ்ஷின் வல்லரசு ஆணவமும், ஒஸாமாவின் மதவெறிப் பகையும் எவ்வளவு அறிவீனமானவை என்பதை உலகம் புரிய வேண்டிய காலம் இது.

இலட்சியத்திற்காக ஒருவன் சாகலாம். கொன்று குவிப்பதையே எவனாவது லட்சியமாகக் கொள்ள முடியுமா?

‘ஜனநாயகம்’,’அமைதி’,’பயங்கரவாதத்திற்கு எதிரி’ போன்ற சொற்களின் புனிதத்துக்குள் அமெரிக்க அதிபர் ஒளிந்து கொள்வதும்…’இறை ஆணை’,’இஸ்லாமியரின் வாழ்வுரிமை’, ‘கலாச்சாரப் பாதுகாப்பு’ – போன்ற பிரதிவாதப் பதுங்கு குழியில் ஒஸாமா மறைந்து கொள்வதும்..எவ்வளவு போலியானது என்பதை இந்தச் சிறிய புதினம் வெளிக் கொணரும்போது உண்மையிலேயே ஹத்தீப் என்கிற படைப்பாளி வென்று நிமிர்ந்து உயர்கிறார்.

பாத்திரங்களை உயிரோடும் உயிர்ப்போடும் படைப்பது வேறு; உயிருடன் இருப்பவர்களையே பாத்திரமாக்குவது வேறு. வாழ்பவர்களைக் கதாநாயகர்களாக்கும்போது மிகுந்த ஜாக்கிரதையுணர்வு வேண்டும். அதுவும் இந்த நூலில் இடம் பெறுபவர்கள் தினந்தோறும் மீடியாக்களில் உலா வருபவர்கள்.

ஏதோவொரு கிராமத்தில் வசிக்கும் அம்மாசிக் கிழவனைப் பாத்திரமாக்குவதற்கும் , புஷ் – ஒஸாமா போன்ற நிஜப்புருஷர்களைப் படைப்பதற்குமிடையே மிளிரும் வேறுபாட்டை, கஷ்டத்தை உணர்ந்த போதுதான் இந்தப் புதினத்தின் மீது எனக்கோர் ஈர்ப்பு ஏற்பட்டது.

பயங்கரவாதத்தில் பலவகை உண்டு. அரசு அங்கீகரித்தவை; ஐ.நாவின் ஆசி பெற்றவை; மதம் ஆதரித்தவை; இனத்தால் ஏற்கப்பட்டவை – இப்படி அநேக வகை. இவற்றினூடே ஒளிந்து கிடக்கும் ஒற்றுமையையும் வேற்றுமையையும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு என்னை ஆளாக்காமலேயே உங்களால உணர முடியும். ஆனால் எல்லா வன்செயல்களும் மனித குலத்திற்கு எதிரானவை என்பதை சுதந்திரச் சிந்தனையுள்ளவன் உரக்கச் சொல்லியே ஆகவேண்டும். ரொம்பவும் சத்தமிட்டுக் கூறும்போது பிசிரடிக்காமல், தெள்ளத் தெளிவாக, நம்பகத்தன்மை தகர்ந்து விடாதபடி எடுத்துரைப்பது முக்கியம். இந்த ஆழ்ந்த புரிதலுக்கு ஹத்தீப் பழக்கப்பட்டவராதலால், ‘மனிதம்’ மெல்ல, ஆனால் வலிமையாகப் பேசுகிறது. நிகழ்வுகள் உள்ளே இழுத்துக் கொள்கின்றன. படு சுவாரஸ்யமான உரையாடல்கள்.

திக்ரித்தில், அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையைக் கண்டு ‘ஐ விட்ன்ஸ்’ ஒருவர் – தாரீக் அல் தராஜி – குமுறுவதும் பின்னர் அவரே அல்-காயிதா பயங்கரவாதத்தை முறியடிப்பதும் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாத வன்செயல்கள் நிகழ்த்தப் படும்போதெல்லாம் அகிம்சாமூர்த்தி காந்தியின் முகம் உள்ளத்தில் நிழலாடுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பயங்கரவாதிக்குள்ளிருந்து அகிம்சாமூர்த்திகள் பிறக்க வேண்டும். அதுதான் உலகம் வெப்பமயமாவதைத் தடுக்கும் ஒரே வழி. ஒரே தீர்வு. ஒரே உபகரணம்.

ஏனெனில் எ·ப்.பி.ஐயும் சி.ஐ.ஏவும் தடுக்க முடியாததை , காப்பாற்ற முடியாததை, சாதிக்க முடியாததை ஓர் அன்புள்ளம் வெற்றி கொண்டதே என்பதே இந்நூலின் சாரம். நூலாரிசிரியர் நம்முன் வைக்கும் வாதம். இறுதியில் உலகம் ஏற்றுக் கொள்ளப்போகும் பிரத்தியட்ச நிஜமும் அதுதான்.

இந்தப் பேருண்மையை உலகின் இன்றைய நடப்பு விஷயங்களோடு இத்தனை நேர்த்தியோடும், நுட்பத்தோடும் விளக்கி ‘அன்பென்று கொட்டு முரசே’ என்று உரக்க முழங்கும் நூலாசிரியர் ஹத்தீபை என்ன சொல்லிப் பாராட்டுவது?

கவிஞர் நந்தலாலா / மாநில துணத் தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

**

புதினத்திலிருந்து கொஞ்சம் புதினா…

மன்னராட்சி நடைபெறும் அனைத்து அரபு நாடுகளிலும் கொகய்ன் போதைப் பொருள் கடத்துவதைவிடக் கொடுமையான, கடுமையான குற்றம் ‘வெளியாட்’களின் அரசியல் பார்வை. அரசியல் குறுக்கீடு. எல்லாவற்றையும் விட அரசியல் விமர்சனம். ஒருவகையில் இஸ்லாத்தில் இறைவனுக்கு இணை வைப்பது எவ்வளவு கொடுங்குற்றமோ, மகா பாவமோ அது போன்றே அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது அல்லது கிளர்ந்தெழச் செய்வது அல்லது இரண்டும்…ஒஸாமாவின் தந்தை முஹம்மது பின் லாடன் பிழைப்புத் தேடி ஏமனிலிருந்து சவூதிக்கு வந்தவர். பிழைப்புக் கிடைத்து விட்டால் சாப்பிட்டுக் கொழுக்க வேண்டியதை விடுத்து சிம்மானசனத்தை ஓரக்கண்ணால் பார்ப்பதெல்லாம் வந்தேறிகளுடைய வேலையல்ல. மண்ணின் மைந்தர்கள் அரசுக் கவிழ்ப்பு அல்லது அரசு விரோதச் செயல்களில் இறங்கும்போதுகூட மறைவான இடத்திலே, இருட்டிலே சத்தமில்லாமல் சிரச்சேதம் செய்யப்படுவது சர்வ சாதாரண நிகழ்வுகள்.’ (பக் : 69)

‘என்னுடைய இருபத்து நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஈராக் மக்களை உளப்பூர்வமாக நேசித்ததையும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் தலை வணங்க மறுத்ததையும் தவிர வேறொன்றும் குற்றம் புரிந்ததில்லை. நமது பிராந்தியத்தினுள் அமெரிக்காவை நுழையவிடுவதில்லை’ என்பது மட்டும் தான் எனது பிரதானக் கொள்கை. அதற்கு இடம் கொடுத்த குவைத்தை நாம் எதிரியாகக் கருதினோம். அமெரிக்கர்கள் உள்ளே நுழைந்தால், என்ன விளைவுகள் ஏற்படுமென்பதற்கு துருக்கி, சவூதி, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் அரபு மக்களிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரக் சீரழிவே முக்கிய சாட்சிகள். முதன் முதலில் கலாச்சார மாற்றம், அப்புறம் மதமாற்றம். இதுதான் அவர்கள் பாணி. உதாரணத்திற்கு ஸ்பெயின்… நமது மண் புனிதமானது. மார்க்கம் புனிதமானது. கொள்கை புனிதமானது. கலாச்சாரம் புனிதமானது. இவற்றை அழிக்க யார் முயற்சித்தாலும் முதற்போர் வீரனாக நான் உயிர் துறப்பேன். நமது சிறப்புகளைத் தியாகம் செய்துவிட்டு சுகபோகத்திற்காக உயிர் வாழ்வது முஸ்லீம்களின் அடையாளமல்ல. சகோதரர்களே, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ள நான் தீர்மானித்தால், இந்த மத்திய கிழக்குப் பகுதியிலேயே நான்தான் மாபெரும் சக்தியாக உருவாக்கப்படுவேன் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். சரணாகதி அடைபவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை’ – சதாம் (பக். 39).

பின்னிணைப்பில் உள்ள ஒரு டஜன் சுட்டிகளில் ஒன்றே ஒன்று :

http://www.hiddenmysteries.org/conspiracy/conspiracy/bushcocaine.html

 

**

தொடர்புக்கு (சதாமுடன் பேச அல்ல!) :

A. H. Hatheeb Sahib , 16  Mohideen Palli Street, Nagore – 611002

Tel : 0091 4365 250218, Mob : 0091 9944884080

**

வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம் – சென்னை 17

தொலைபேசி : 2434 2926, 2434 6082

**

நன்றி :

ஹத்தீப் சாஹிப், நந்தலாலா, மணிமேகலைப் பிரசுரம்