வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் – செ.திவான் முன்னுரை

முதலில் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள் !

வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப்… தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட வரலாறு. பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள் என்று சொல்லி வெளியிட்ட விகடன் பிரசுரத்தாருக்கு நன்றி (அப்படியே ‘ஏடகம்’ pdf சகோதரர்களுக்கும்!) சொல்லிப் பகிர்கிறேன்.- AB

*

எண்ண அலைகள் – செ.திவான்

‘ஒளரங்க’ என்ற சொல்லுக்கு ‘அரசு சிம்மாசனம்’ என்றும், ‘ஜேப்’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ என்றும் பொருள். இந்த இரு பாரசீகச் சொற்களுக்கும் ‘அழகிய அரசு சிம்மாசனம்’ என்று பொருள்*. ஆனால், ‘ஒளரங்கஜேப்’ என்று அழைப்பதற்குப் பதிலாக ‘ஒளரங்கஜீப்’ என்றே பலரும் கூறி வருகின்றனர். பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பெயரையே மாற்றி அழைத்தவர்கள், அவரது வரலாற்றை எப்படி எப்படியெல்லாமோ மாற்றியும் திரித்தும் இருக்கிறார்கள்.

தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்த இந்தப் பூமியில், தெரிந்தவற்றையும் மக்கள் மறந்துபோய்விடுகின்றனர். தெரியாமலேயே போகுமாறு பல உண்மைகள் இங்குச் சிதைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், பல வடிவங்களில், பல தளங்களில் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.*

ஒளரங்கஜேப்பின் உண்மை வரலாற்றை எழுதத் துவங்கிடும் வேளையில், ‘மரங்களை எழுத்தாணியாகவும் கடல் நீரை மையாகவும், வானத்தை ஏடாகவும் கொண்டு எழுதினாலும் தனது ஆசிரியரின் பெருமையை எழுதி முடித்திட இயலாது’ என்று தெலுங்குக் கவிஞர் வேங்கண்ணா , தனது குருவைப் பற்றி எழுதிய வைர வரிகள் எனது நினைவுக்கு வந்தது. மாமன்னர் ஒளரங்கஜேப் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதை, சரித்திரப்பூர்வமான ஆதாரங்களுடன் இறைவனின் கருணையோடு உங்கள் முன் வைக்கிறேன்.

முஸ்லிம் மன்னர்கள் மீது மாபெரும் பழி!

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில், ‘ஹிந்து கோயில்களை இடித்தார்கள். பள்ளிவாசல்களைக் கட்டினார்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்கப்பட்டு நாள்தோறும் நச்சு விதையை, மதத் துவேஷத்தை வளர்த்துவரும் இந்த வேளையில், ‘இந்திய நாட்டு முஸ்லிம் மன்னர்கள், பிற சமயங்கள்பால் வெறுப்புக் கொண்டதில்லை; குடிமக்களை அச்சுறுத்தி கட்டாயமாக மதமாற்றம் செய்ததில்லை என்றும் சொல்லும்போது, இந்த உண்மைகளுக்கு மாறான உதிரி நிகழ்ச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருக்கக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை’* என்றாலும், முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில் அப்படித் தவறுகளே நடந்திடவில்லையென்று சொல்லிடும் தற்குறியல்ல நான். ஆனால், வரலாற்று உண்மைகளை மறைத்திடும்போது, மறைத்திட முயலும்போது, திட்டமிட்டே மறைந்து வருகிறபோது, அதுகுறித்த உண்மைகளை வரலாற்றின் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஒளரங்கஜேப் மசூதி அருகே விஷ்ணு ஆலயம் |

தமிழ்நாட்டில், ஆற்காட்டில் முஸ்லிம் ஆட்சி. திருவலம் ஆலயம், வள்ளிமலை, திருத்தணி, காஞ்சிபுரம் அனைத்துமே ஆற்காட்டுக்கு அருகில்தான் உள்ளன. மதுரையிலே முஸ்லிம் ஆட்சி, அங்குதான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது; திருச்சியிலே முஸ்லிம் ஆட்சி, அங்குதான் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் இருக்கிறது**. காசியில் ஒளரங்கஜேப் மசூதிக்கு வட பக்கம் 50 அடி தூரத்தில் பிந்துமாதவர் விஷ்ணு சந்நிதி ஆலயம் இருக்கிறது***. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். இவை எல்லாம் இன்றும் நம்முன் கம்பீரமாக இருப்பதை எவர் மறைத்திட முடியும்? முஸ்லிம் மன்னர்கள், ஹிந்து ஆலயங்களை எல்லாம் இடித்துத் தகர்த்தார்கள் என்று சொல்பவர்கள் இதற்கு என்ன விளக்கம் தருவார்கள்? இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தமிழ்நாட்டில் சென்னை ஆவடி பட்டாபிராம், அண்ணாநகர் பள்ளிவாசல், 14.3.1985 வியாழக்கிழமை அன்று இடிக்கப்பட்டது.* *** அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ‘தாம்பரம் குரோம்பேட்டைப் பகுதியில் சானடோரியத்தில் 47 ஆண்டுகளாக இருந்து வந்த ஸ்ரீராம ஆஞ்சநேயர் திருக்கோயில் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டது. அதன் அருகிலிருந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தால் இடிக்கப்பட்டது** ***. 16.3.1994 அன்று ஆயுதம் தாங்கிய போலீசார் புல்டோசர் கொண்டு இவற்றை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். ஜெயலலிதா ஆட்சியின்போது ஆஞ்சநேயர் கோயிலும், பள்ளிவாசலும் இடிக்கப்பட்டது மதக்காரணங்களினாலா? இல்லையே!

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் ஜார் நைல்சிங் பிந்தரன்வாலேயின் தீவிரவாதத்துக்கு எதிராக பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஜூன் 15-ல் எடுத்த, ‘நீல நட்சத்திர நடவடிக்கை ‘ (Operation Blue Star) ** இந்திரா காந்தி, சீக்கியர்கள் மீது கொண்ட குரோதத்தால் எடுத்த நடவடிக்கை என்று யாராவது கூற முடியுமா?

இவைபோலவே, மாமன்னர் ஒளரங்கஜேப் ஆட்சியிலும் சம்பவங்கள் சில நடைபெற்றுள்ளன. ஆனால், அன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் கோயில்களும் மடங்களும், மத்திய காலத்தில் அந்தஸ்தும் கெளரவமும் பெற்ற அரசியல் அதிகார சூட்சமத்தின் மையமாகக் கருதப்பட்டன என்ற வரலாற்று உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது.*** தர்மதாஸின் புதல்வரான லாகூர், இந்துக் கவிஞர் சந்திரபான் பிராமின் வேதங்களிலும் உபநிடதங்களிலும் பாரசீக மொழியிலும் நல்ல புலமைப் பெற்ற தெய்வபக்தி உள்ளவர். ‘இவருடைய கொள்கைகளுக்குக் காரணம் இவருடைய ஹிந்து சமயமே!’ என்பதை உணர்ந்த ஒளரங்கஜேப், தம்முடைய தர்பாரில் இவரைப் பாராட்டியும் பேசியுள்ளார்.* * * *

ஒளரங்கஜேப்பின் உலக வாழ்வுக்குப் பின்னரும் செய்நன்றி மறவாது வீரசிவாஜியின் மகன் ஸாஹு, ஒளரங்கஜேப்பின் அடக்க இடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி வந்ததை வரலாற்றில் காண முடிகிறது. இவை போன்ற பல்வேறு உண்மைகளை ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப் நூலில் காண இருக்கிறீர்கள்.

கி.பி.8-ம் நூற்றாண்டு முதல் இந்தியாவின் மீது பல்வேறு இஸ்லாமிய வம்சத்தினரின் ஆக்ரமிப்புகள், ஹிந்து – முஸ்லிம் மக்கள் இணைந்து நின்றே வெள்ளையரை எதிர்த்தனர். 1857-ல் நடைபெற்ற படைவீரர்களின் புரட்சியில் மன்னர் பஹதூர்ஷா ஜஃபரையேத் தலைவராக ஹிந்து – முஸ்லிம் என்ற இருசாராரும் தேர்ந்தெடுத்தனர்.

ஹிந்து – முஸ்லிம் உறவை ‘வாள்’ கொண்டு பிரிக்க முடியவில்லை . எனவே, வெள்ளையர் ‘தாள்’ தூக்கினர். ரத்தக்கறையை நச்சுக்கறையாக மாற்றி, வரலாறுகளை எழுதத் துவங்கினர். அவர்களின் அடிவருடிகளையும் அவ்வாறே எழுதிடப் பணித்தனர்.

“பிரித்தாளும் சூழ்ச்சிக்கொண்ட வெள்ளையர்கள், இந்திய வரலாற்றைக் காலப் பாகுபாடு செய்யும்போது, ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’, ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே, ‘இந்து இந்தியா’ படையெடுப்பால் ‘முஸ்லிம் இந்தியா’ வாக்கப்பட்டது என்பதும், வெள்ளையர் ஆட்சியில் இது நவீன வளர்ச்சிகளைப் பெற்றன என்பதும் இதன் மூலம் பொருளாகிறது.

வெள்ளையர் எழுதிய வரலாற்றுக்கு எதிராக இந்திய தேசியவாதிகள் வரலாறு எழுதுகிறபோது, பழம்பெருமையைத் தூக்கிப் பிடித்தனர். உணர்வுரீதியில் இந்திய தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற உயர் சாதி இந்துக்கள் பண்டைய ‘இந்து’ இந்தியாவை லட்சியமாக முன்வைத்தனர். இந்தச் செயற்பாடுதான் இஸ்லாமியர் பற்றிய பல்வேறுவிதமான வரலாற்றுப் பொய்களுக்குக் காரணமாகி உள்ளன.

பெரும்பாலும், உயர் சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் கல்வித் துறை, பத்திரிகை, தொலைக்காட்சி முதலியவற்றில் இந்த நிலை தொடர்கின்றன. இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள்  குறித்த, முஸ்லிம் மன்னர்களைப் பற்றியப் பொய்கள் ஆழமாகப் பதிந்துள்ளன. ஜனநாயக, இடதுசாரி சிந்தனையுடைய வரலாற்று ஆசிரியர்கள், இத்தகைய வரலாற்றுப் பொய்களைத் தோலுரிக்கும் முயற்சிகளையும் செய்தே வந்திருக்கின்றனர்”* என்பர் அ.மார்க்ஸ் .

ஆரியர் வருகை… முஸ்லிம் படையெடுப்பு!

சம்பவங்கள் ஒன்றாக இருந்தபோதிலும் சொல்பவரின் விருப்பு -வெறுப்புக்கு ஏற்ப அவற்றில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்குடன் தொகுக்கப்படும்போது வெவ்வேறு வரலாறுகள் தோன்றிவிடுகின்றன.

இந்த நாட்டின் எல்லைக்குள் ஆரியர்களும் வந்தார்கள்; முஸ்லிம்களும் வந்தார்கள். இது, ஒரே மாதிரியான நிகழ்ச்சி. ஆனால், வரலாற்றுச் சம்பவங்களை வரைகிறபோது ‘ஆரியர் வருகை’ (குடிபெயர்ந்த து – Aryan immigration) என்றும், ‘முஸ்லிம் படையெடுப்பு’ (Arabs Invasion) என்றும் எழுதினர். அப்போதே பேதங்காட்டி வரலாற்றை எழுதத் துணிந்துவிட்டதற்கு இதுபோன்ற எண்ணற்ற சான்றுகளைக் காட்டிட முடியும்.

இவ்வாறு வரலாறு திரித்து எழுதப்பட்டும், பொய்யாக போதிக்கப்பட்டும் வருவதின் விளைவாகத் தொடரும் தீமைகளைத் துளியேனும் தடுத்து நிறுத்திட முயலும் எண்ணத்தில் பிறந்ததே இந்த நூல்.

ஸ்ரீநிவாஸ பிள்ளை

‘நான் தமிழ்ப் புலவன் அல்லேன். ஆயினும் தமிழின்பால் உள்ள மட்டற்ற அன்பு தூண்ட, தமிழ் அறிஞர்கள் பலரையும் அவ்வப்போது ஆராய்ச்சி செய்து வெளியிட்டு இருப்பவை நான் அறிந்த அளவையில் தொகுத்தும், எனது ஆராய்ச்சியின் பயனாக உள்ளவற்றைக் கூட்டியும் இந்தப் புத்தகத்தை எழுதுகிறேன்’ என்று தனது நூலின் முன்னுரையில் ஸ்ரீநிவாஸன் குறிப்பிடுவார்.*

அதுபோல நானும் வரலாற்று ஆசிரியன் அல்லன். ஆயினும், வரலாற்று ஆய்வு உணர்வில் ஆர்வமுற்று, ஒளரங்கஜேப் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் பலர் அவ்வப்போது வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் குறிப்புகளின் அடிப்படையில், எனது ஆய்வின் பயனாக கிடைத்தவற்றைச் சேர்த்தும் இறைவனின் அருளால் எழுதப்பட்டதே இந்த நூல்.

சுந்தரவரதாசாரியார்

“சரித்திரத்தை உள்ளவாறு கற்க விரும்பும் ஒருவன், அது சம்பந்தமான பல புத்தகங்களையும் படித்து உண்மையைக் கற்பனைகளினின்றும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளல் வேண்டும். சரித்திர ஆசிரியரும் நடுநிலைமையுடன் விஷயங்களை எடுத்துதெழுதினால், சரித்திர அறிவு பெருகிப் பல நன்மைகளையும் எய்துதல் கூடும்”** என்ற கருத்தின் அடிப்படையில் பிறந்தது இந்த நூல்.

கதே

“இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதன்றே சிறப்பு என்று எண்ணற்க. இதற்குமுன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பேயாகும்”*** என்ற ஜெர்மன் நாடகாசிரியர் ‘கதே’யின் கருத்திற்கேற்ப உருவாக்கப்பட்டது இந்த நூல்.

காஜீ மஹ்மூத் தரம்பால்

மெளலானா மௌலவீ காஜீ மஹ்மூத் தரம்பால் எழுதிய ‘குப்ருதோ’ என்ற உருது நூலின் முன்னுரையில், ‘இந்தப் புத்தகம் இஸ்லாத்தின் தற்காப்பு நிமித்தமாகவே எழுதப்பட்டிருக்கிறது. எனவே, எதிர்மதவாதிகளை ஏசவேண்டும் என்பதும், அவர்களைத் தூஷணை செய்ய வேண்டும் என்பதும் இதன் கருத்தல்ல’ என்று குறிப்பிடுவார். அதுபோன்றே ஒளரங்கஜேப் குறித்த உண்மை விவரங்களை வரலாற்றின் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டுமென்ற தற்காப்பின் நிமித்தமாக எழுதப்பட்டதே இந்த நூல். யாரையும் தாக்குவதற்காக எழுதப்பட்டதல்ல.

ஜோசப் கோயபல்ஸ்

சர்வாதிகாரி ஹிட்லரின் பிரசார மந்திரியும் ரைன் லாந்தைச் சேர்ந்தவருமான ஜோசப் கோயபல்ஸின், ‘ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது மெய்யாகிவிடுகிறது’ என்ற தத்துவப்படி, இந்த நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் வரலாற்றை எழுதினர். தங்களின் தயவை எதிர்பார்க்கும் இந்திய வரலாற்று ஆசிரியர்களைக்கொண்டு வரலாற்றை எழுதப் பணித்தனர். அதில் வெற்றியும் கண்டனர்.

‘பிற மத சுதந்திரத்தைப் பாதுகாத்தலே மன்னராகிய தமது கடமை’ என வாழ்ந்த ஒளரங்கஜேப் மாமன்னரை, ‘ஹிந்துக்களின் பரம் விரோதி’ என எழுதிட வைத்தனர். இத்தகைய தவறான வரலாற்றுச் செய்திகளை ஆய்வு செய்து, உண்மையை உரைக்கிறது இந்த நூல்.

பிரேம்நாத் பஜாஜ்

“ஒளரங்கஜேப் முஸ்லிம் அல்லாதவர்களைத் துன்புறுத்தினார் என்றும், அவர்களுடைய மத நிறுவனங்களை அழித்தார் என்றும் பல ஹிந்து எழுத்தாளர்கள் கூறவது ஒருதலைப்பட்சமானது. அவர்கள், பேரரசின் மேன்மையைப் புறக்கணிக்கவும், அவருடைய தோல்வியை ஊதி விரிவடையவும் செய்தனர்” என்ற பிரேம்நாத் பஜாஜின் கூற்றை மெய்ப்பிக்கப் பிறந்தது இந்த நூல்.

ஆச்சாரியா பிரபுல்லா சந்திரபாய்

“இந்த நாளில், ஒளரங்கஜேப் கசப்பான முறையில் விமர்சிக்கப்படுகிறார். ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள், அவர்மீது ‘இந்துக்களின் பகைவர்’ எனும் முத்திரையைப் பதித்துவிட்டனர். ஆனால், அது உண்மைக்குப் புறம்பானது” (இல்லஸ்ட்ரேட் வீக்லி 5.10.1975) ஆச்சாரியா பிரபுல்லா சந்திரபாயின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்த உதயமானது இந்த நூல்.

ஒளரங்கஜேப், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, அரசியல் காரணங்களுக்காக தனது தந்தை ஷாஜஹானை அரண்மனைக் காவலில் வைத்திருந்ததைப் பெரிதும் குறை கூறி வருகின்றனர்.

துவக்கம் முதல் முடிவு வரையில் ஷாஜஹானுக்கும் ஒளரங்கஜேப்புக்கும் இடையில் நிலவிய கருத்துவேறுபாடுகளை விளக்கி, அதற்குப் பிறகும் ஒளரங்கஜேப்பால் ஷாஜஹானுக்கு வழங்கப்பட்ட மரியாதைகள், வசதிகள் குறித்து ‘தந்தையைச் சிறையில் தள்ளியவரா?’ எனும் தலைப்பில் விளக்குகிறது இந்த நூல்.

‘ஒளரங்கஜேப், தனது அண்ணன் தாராஷக்கோ , சகோதரர்கள் ஷஜா, முராத்பசஷ் ஆகியோரைக் கொன்றுவிட்டு சக்கரவர்த்தியானார்’ என்பது, அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. ஒளரங்கஜேப்பின் அண்ணனும், சகோதரர்களும் எவ்வாறு மடிந்தார்கள்? அதற்கு ஒளரங்கஜேப் பொறுப்பாளியா… இல்லையா? பின் அவர்களது மரணம் எவ்வாறுதான் நிகழ்ந்தது? இவற்றை, ‘சகோதரர்களைக் கொன்றுவிட்டுச் சக்கரவர்த்தியா?’ எனும் தலைப்பில் விளக்குகிறது இந்த நூல்.

வீரசிவாஜி

ஒளரங்கஜேப் தனது ஆட்சியில் ‘ஜிசியா’ வரி விதித்து இந்துக்களைத் துன்புறுத்தியதாகச் சொல்லப்பட்டுவரும் விஷயங்களை, ‘ஜிசியா வரியால் இந்துக்களைத் துன்புறுத்தியவரா?’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து அதுகுறித்த உண்மை விவரங்களைத் தருகிறது இந்த நூல்.

ஒளரங்கஜேப்பின் ஆட்சியில், தம்மிடம் பணிபுரிந்த இதர மதத்தினரை, குறிப்பாக இந்துக்களை அரசாங்கத்தின் வேலைகளிலிருந்து விலக்கியதாகச் சொல்லப்பட்டுவரும் கருத்தின் உண்மை நிலை குறித்து, ‘இந்துக்களை வேலைநீக்கம் செய்தவரா?’ எனும் தலைப்பில் தருகிறது இந்த நூல்.

‘மராட்டிய வீரசிவாஜியை, ‘அப்ஸல்கான்’ என்ற தனது படைத்தளபதியை அனுப்பி அழிக்க முயன்றவர் ஒளரங்கஜேப்’ என்ற குற்றச்சாட்டை விரிவாக ஆராய்ந்து, நடைபெற்ற வரலாற்றுச் செய்திகளை ‘அப்ஸல்கானை அனுப்பி சிவாஜியை அழிக்க முயன்றவரா?’ எனும் தலைப்பில் விவரிக்கிறது இந்த நூல்.

குற்றச்சாட்டுகளும் பதில்களும்!

ஒளரங்கஜேப்பின் மீது சுமத்தப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ஒளரங்கஜேப், ‘இராஜபுத்திரர்களின் விரோதியா?’, ‘சீக்கியர்களின் விரோதியா?’, ‘இசைக் கலைஞர்களை இம்சித்தவரா?’, ‘செருப்புக்கு சிறப்புச் செய்திடச் சொன்னவரா?’, ‘இந்துக்களை இம்சித்தவரா?’, ‘மதவெறியரா?’ ஆகிய தலைப்புகளில் விளக்கம் தருகிறது இந்த நூல்.

இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவ ஒற்றுமை வளர வேண்டும் என்றும், அதனைத் தடுத்திட முயலும் தீயசக்திகளின் நாச நர்த்தனங்களை நாட்டுக்குப் படம்பிடித்துக் காட்டிட வேண்டும் என்ற அவாவிலும் பிறந்தது இந்த நூல்.

செ.திவான்
18-07-2013
ரெகான் சுலைமான் இல்லம்,
பாளையங்கோட்டை,

*

அடிக்குறிப்புகள் :

* வேலூர் மௌலானா அப்துல்பாரி அவர்கள், ஆசிரியருக்கு 8.3.1995-ல் எழுதிய கடிதம்.
* * *வீர சுதந்திரம் வேண்டி’ நூல் முன்னுரையில், சாத்தூர், 1997. * மு.அப்துல் கறீம், இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், திண்டுக்கல், 1996, பக்.149.
* * கா.மு.ஷெரீப், இஸ்லாம், இந்து மதத்துக்கு விரோதமானதா?, சென்னை 1989, பக்.65-66.
*** கே.எஸ்.முத்தையா, நமது புண்ணியபூமி அல்லது காசி, சென்னை . 1917, பக்.47-48.
**** மறுமலர்ச்சி , திருச்சி, 22.03.85, 29.03.85 இதழ்கள்.
** *** தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் செயலக வெளியீடு, 1994, தொகுதி 60, எண் 3, பக். 696-699.
*அல்ஷரீஅத்துல் இஸ்லாமியா, ஏப்ரல் 1994, பக்.32-37; ஆனந்த விகடன் 27-03-94. | +1+ The Best of India Today 1995 – 1990, P.134-136, மனோரமா இயர் புக் 1991, பக்.506.
*** டி.ஞானையா, மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம், சென்னை , 1993, பக்.20,
**** கலைக்களஞ்சியம், இணைப்புத் தொகுதி 10, சென்னை , 1948, பக்.237-238. *அ.மார்க்ஸ், இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், புதுவை, 1994, பக்.17-18.
* K.S. ஸ்ரீநிவாஸ பிள்ளை , தமிழ் வரலாறு, பிற்பாகம் – முற்பகுதி. கும்பகோணம், 1924, முன்னுரையில்.
* M.K. சுந்தரவரதாசாரியார், ‘சரித்திரக் கல்வி’ கட்டுரையில், மா.இராசமாணிக்கம், பா.பக்கிரி சுவாமி தொகுப்பு, செந்தமிழ்ச் செல்வம், இரண்டாம் புதையல், 1931, பக்.130.
**** பொ. திருகூடசுந்தரம், அறிவுக்கனிகள், சென்னை , 1952, பக்.165.

*

 

*

தொடர்புடைய பதிவுகள் :

SDPI விருதுகள் 2018 | கவிக்கோ விருது | செ. திவான்

இந்திய சுதந்திர போரில் மத்ரஸாக்கள், மௌலவிகள் – செ. திவான்

Man Thadpat Hari – Mohammad Rafi

ஈத் முபாரக்!

 

*

Thanks to : rafians74

ரம்ஜான் – சாமி கை விடல சின்னதாதாவின் சிறுகதை

இந்தச் சிறுகதையினை வாசித்து முடித்த இக்கணம், என்னால் எதையும் பேசமுடியாத நிலை. உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். சம்பவம் உண்மையைச் சார்ந்ததா.. அல்லது ஃபிக்ஸனா என்று நிச்சயமாக உணர முடியாவிட்டாலும்…, கதையின் மனித நேயம் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. வாழ்த்துக்கள் சின்னதாதா… வாழ்த்துக்கள். – தாஜ்

*

//அவரே தொடர்ந்தார், “சரியா சாப்பிடக்கூட மாட்டன். அப்ப கம்பெனி மெஸ் இல்ல. வெளில காசு கொடுத்துதான் சாப்பிடணும். டெய்லி குபூஸ் தான் சாப்பிடுவான். மாசத்துல ஒரு நாள் மட்டும்தான் நல்ல சோறு சாப்பிடுவான்”

அதைக் கேட்டவுடன் அபப்டியே இடிந்து போனேன். வாப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அது வாங்கிட்டு வாங்க இது வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிருக்கேனே.
// இந்த வரிகளை கடந்து போவது அவ்வளவு எளிதானதில்லை. இங்கே வயிற்றை கட்டி வாயை கட்டி ஊரில புள்ள அது கேட்டான் அத வாங்கணும்னா இதெல்லாம் கொஞ்சம் கொறச்சாதான் முடியும் என்ற தகப்பன்சாமிகளை சவூதி வாழ்வில் நிறைய சந்தித்திருக்கிறேன்..நிஜ வாழ்வின் என் அண்ணனிடமிருந்தும்.. – ஷேக் முஹம்மத்

*

நெகிழ வைக்கும் கதை. கண்களில் கண்ணீர் கட்டி நிற்கிறது என்பதை எழுத வெட்கமில்லை. சின்ன தாதா… நீங்கள் வாழ்க, உங்கள் குடும்பம் வாழ்க. அய்யனார் வாழ்க. – ஷாஜஹான்

*

மதங்களைக் கடந்த மனித நேயம்,முகங்களைப் பார்க்காமல் உண்டாகும் அன்பு,மனிதம் இன்னும் இருக்கிறது என உணர்த்தும் நிகழ்வு,…….. மேலே ஒன்றும் எழுத இயலாமல் பார்வையை மறைக்கிறது கண்ணீர்…..தகுந்த நேரத்தில் தகுந்த பதிவு.அய்யனாரை வாழ்த்த வயதில்லை.நன்றிகள் கோடி அய்யா. வாழ்க நீ எம்மான்…. – அஹ்மது சிராஜுதீன்

*

கண்களில் கண்ணீர் – ஆதிகா அஷ்ரீன்

*

சமீபத்தில் வாசித்ததில் மிகப்பிடித்தமான எழுத்து… கண் கலங்க வைத்தது…. – சென்ஷி

*

மாஷா அல்லாஹ்!! இந்த இணக்கமும் புரிதலும்தான் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமானது. – ஆசிப் மீரான்

*

ஆபிதீன் எழுதாமலிருந்தால் பாராட்டுகிறார்கள். இவர் எழுதினால் பாராட்டுகிறார்கள்! – ஆபிதீன்

*

ramadan-mubarak-

ரம்ஜான் – சாமி கை விடல

சின்னதாதா

அபு தாபியின் அரசு நிறுவனங்களில் ஒன்றான Abu Dhabi Gas and Oil Corporation (ADGOC) -ல் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆன நிலையில் அன்று இரவு இஃப்தார் பார்ட்டிக்காக Emirates Palace Hotel சென்றிருந்தேன்.

எங்களுடைய Operation Head ஷெரிஃப் ஒக்பா, என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

“He is Mansoor Hameed… New project manger for our onshore building division. He has more than 12 years of experience. Andddd….He has done his Bachelor of Mechanical Engineering and he is a charted engineer” என்று சுருக்கமாக அறிமுகம் செய்த பிறகு என்னை ஏதாவது பேசச் சொன்னார்.

என்னைப் பற்றி அல்லாது, பொதுவான விஷயம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசச் சொன்னார்.

நானும் ரம்ஜான் நோம்பினைப் பற்றி பேசினேன். அதனால் ஏற்படும் நன்மைகளையும், நோம்பு துறக்கும்பொழுது எப்படிப்பட்ட உணவுகளை உண்ணவேண்டும் என்பது பற்றியும் அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் பேசினேன்.

அதற்குப் பிறகு, அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது. ஒருவர் NPOC (National Petrolium and Oil Company)- யில் General Manager ஆக இருப்பதாக சொன்னார்.

இருபது வருடங்களுக்கு முன்பு வாப்பா வேலை செய்த கம்பனி. அது ஒரு Semi Government Organization. வாப்பா அங்கு staff ஆக வேலைப் பார்த்திருந்தார். உயிரோடு இருந்திருந்தால் இன்று அவரும் ஒரு General Manager அல்லது அதைவிட பெரிய பதவியில் இருந்திருப்பார்.

வாப்பாவின் நெருங்கிய தோழர் அய்யனார் மாமாவைப் பற்றி அவரிடம் விசாரிக்க நினைத்தேன். ஆனால் விசாரிக்கவில்லை

அடுத்த நாள், டிரைவரை அழைத்துக் கொண்டு அந்த கம்பெனிக்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.

யார் இந்த அய்யனார் மாமா?

நான் எட்டாவது படிக்கும்பொழுது வாப்பா ஊருக்கு வந்திருந்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். என் இரட்டை தங்கைகளுக்கு அப்பொழுது ஒன்றேகால் வயது. அவர்களை முதன்முதலில் அப்பொழுதுதான் பார்க்கிறார்.

இரண்டு மாதம் லீவ் முடிந்து திரும்ப போவதற்கு முதல் நாள் ராத்திரி திடீரென்று அவருக்கு ஏதோ ஞாபகம் வர என்னிடம், ‘நாளைக்கு காலைல முதல் வேலையாப் போய் நாலு பாக்கெட் திருநீர் வாங்கிட்டு வா’ என்றார்.

நானும் வாப்பா எழுவதற்கு முன்னே மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கடையில் போய் திருநீர் வாங்கி வந்தேன். அதைப் பார்த்த வாப்பா சிரித்தார்.

“ஏன் வாப்பா சிரிக்கிறீங்க” என்றேன்

“இந்தப் பேரப் பாத்தியா?”

“அய்யனார் திருநீர்”

“அய்யனார் மாமா திருநீர் வாங்கிட்டு வரச் சொன்னான். நான் மறந்துருவேன்னேன். அதுக்கு அவன் அய்யனார் சாமி உனக்கு ஞாபகப் படுத்திருவார் போ என்றான். பாத்தியா, அவன் சாமி அவனை கை விடல”

“சாமி நம்பிக்கை நமக்கு இல்லையே வாப்பா?”

“அல்லானா என்னன்னு தெரியுமா?”

“இறைவன்”

“சாமின்னா”

“ஹ்ம்ம்ம்.. இறைவன்” என்றேன் வாப்பா என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொண்டு.

அதற்கு மேல் வாப்பா ஒன்றும் சொல்லவில்லை.

*****
டிரைவர் என்னிடம் “சார், முஸ்ஸஃபா பிரிட்ஜ் வழியா போலாமா இல்லன்னா மக்தாப் பிரிட்ஜ் வழியா போலாமா?” என்றார்.

“எனக்கு தெரியாதுப்பா, எது ஈஸியோ அந்த வழில போ”
*****
நான் பத்தாவது படிக்கும்பொழுது, வாப்பாவின் வருகைக்காக காத்திருந்த வேளையில் வாப்பா இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அவரது உடல் இன்று வரும் நாளை வரும் என்று ஒரு மாதம் காத்திருந்தோம். கடைசியில் அவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அடுத்த தந்தி வந்தது.

உறவினர்கள் எல்லோரும் சென்று விட்டார்கள். உம்மா மட்டும் அழுகையை நிறுத்தவில்லை, எங்களுக்கு சாப்பாடு பக்கத்துவீட்டு ரஹீம் மாமா வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டுவந்து கொடுப்பார்கள்.

அன்று உம்மா என்னருகில் வந்து, “மன்சூர், நம்ம அல்லாட்ட போயிரலாமா” என்றார்.

உம்மா சொல்வதைப் புரிந்து கொண்டு சரி என்பதுபோல் தலையை ஆட்டினேன்.

உம்மா அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன், போஸ்ட் மேன் வீட்டிற்கு வெளியிலிருந்து அழைப்பது கேட்டது.

ஒரு Airmail கவரில் ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருந்தது. யாரோ கிருஷ்ணதாஸ் என்பவர் கேரளாவிலிருந்து அனுப்பியிருந்தார்.

பிரித்து சத்தமாக படித்தேன்..

அன்புள்ள தங்கைக்கு,

அண்ணன் அய்யனார் எழுதுவது. குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். மன்சூர் ஸ்கூலுக்கு போகிறானா?.ஹமீது இறந்ததை எண்ணி எப்பொழுதும் அழுதுகொண்டிருக்காதீர்கள். ஹமீது இறந்த கேஸ் இதுவரை முடியவில்லை. ஆகையால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்க இரண்டாண்டுகள் வரை ஆகலாம்.

என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு கடிதம் அனுப்புங்கள். இத்துடன் ஐயாயிரம் ரூபாய்க்கான டிடி அனுப்பியுள்ளேன்.

இப்படிக்கு,
அன்புடன்
சொ. அய்யனார்

இதைக் கேட்டவுடன் உம்மா, “அல்லா நாம சாகக் கூடாதுன்னு நெனைக்கறார். நீ நாளைக்கே ஸ்கூலுக்கு போ” என்றார்.

“வேண்டாம் உம்மா, நான் அண்ணாச்சி துணிக்கடைல வேலைக்குப் போறேன்”

“இல்ல, நீ படி. நான் வேலைக்குப் போறேன்”

“முடியாது உம்மா, அடுத்த வருஷம் தங்கச்சிகளையும் ஸ்கூலில் சேக்கணும். நீங்க வேலை செஞ்சாப் பத்தாது நான் போறேன்”

ஒருவழியாக அதற்கு உம்மா சம்மதித்தார்.

அடுத்தநாள் உம்மாவை அழைத்துக் கொண்டு நேரத்திலேயே அண்ணாச்சி வீட்டிற்கு சென்றோம்.

அண்ணாச்சி எல்லாம் கேட்டுவிட்டு, “ஏலே, ஸ்கூல்ல போய் டீசி வாங்கிட்டு வந்திடுலே. பின்னால சோலிக்காகும்” என்றார்.

அங்கிருந்து நேராக செயின்ட் ஜோசப் ஸ்கூலிற்கு சென்றோம். அதன் தாளாளர் ஃபாதர் செபாஸ்டியன் சரியான சிடுமூஞ்சி. ஃபீஸ் அடைக்க ஒருநாள் லேட் ஆனாக்கூட வீட்டிற்கு அனுப்பிவிடுவார். ஃபீஸ் கட்டாம டீசி தரமாட்டார் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவரிடம் சென்றோம்.

உம்மா, அவரிடம் எல்லா விவரங்களையும் சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட பிறகும் அவரது கண்களில் இறக்கம் என்பது துளிகூட வந்ததாக தெரியவில்லை.

“உன் கிளாஸ் டீச்சர் யார்” என்றார்

“ரெபேக்கா மிஸ்”

ப்யூனை, அவரை அழைத்து வரச்சொன்னார்.

மிஸ் வந்தவுடன் வெளியில் சென்று அவரிடம் என்னவோ பேசினார்.

பிறகு உம்மாவிடம் “உங்க பையன் பிளஸ் டூ வரை இங்கயே படிக்கட்டும். ஃபீஸ் ஒன்னும் கட்டவேண்டாம். உங்களுக்கு இங்க ஆயாவா வேலை தர்றோம். மாசம் ஐநூறு ரூபாய் சம்பளம்” என்றார்.

இதைக்கேட்டவுடன் உம்மாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் காலில் விழுந்து அவர் காலைப் பிடித்து கண்ணீர்விட்டார்.

அண்ணாச்சியிடம் விஷயத்தை சொல்ல சென்றோம்.

“தெரியும்லே, அதான் அவரப் போய் பாக்கச் சொன்னேன்” என்றார்
அண்ணாச்சி சிரித்துக்கொண்டே

****

ஒருவழியாக NPOC வந்து சேர்ந்தோம்.

டிரைவர், செக்யூரிட்டியிடம் எதோ அரபியில் சொல்ல அவர் எங்களை உள்ளே அனுமதித்தார். நாங்கள் சென்றபொழுது மணி இரண்டு இருக்கும். ரம்ஜான் என்பதால் பெரும்பாலானோர் வேலை முடிந்து அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது.

வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு நாங்களும் நடந்தோம்.தமிழில் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்த இளைஞர்களை நிறுத்தி விசாரித்தோம்.

“அய்யனார் என்ற பெயருள்ள staff யாராவது இங்க இருக்காங்களா?”

“இல்ல சார், அப்படி யாரும் இருக்கற மாதிரி தெரியலியே”

“மேனேஜர்?”

“இல்ல சார்.. அப்படி யாரும் இல்லியே”

“ஒரு 65 வயசு இருக்கும் அவருக்கு”

“இல்ல சார்.. அப்படி யாரும் இல்ல. இங்க அறுபது வயசுக்கு மேல விசா ரினியூ பண்ணமாட்டங்க சார்”

அதற்குள் வேறு ஒருவர் அங்கு செல்வதைப் பார்த்த அதில் ஒருவர், “சார், தா போறாரே. மாரிமுத்து சார் அவருக்கு ஒருவேளை தெரியலாம்” என்றார்.

அவரே, “மாரிமுத்து சார், உங்களுக்கு அய்யனார்னு அறுபத்தஞ்சு வயசுள்ள யாரையாவது தெரியுமா சார்” என்றார் சத்தமாக
திரும்பிப் பார்த்த மாரிமுத்து, “ஆமா. நம்ம பெருசு” என்றார்.

“சார், இவங்கள கொஞ்சம் அவரு ரூம்ல விட்டுருங்க”

அவருடன் எங்களை வரச் சொல்வதுபோல் சைகை செய்தார். நான் டிரைவரிடம், “நான் போய் பாத்துக்கறேன். நீ போய் வண்டில இருந்துக்கோ” என்றேன்.

நான் மாரிமுத்துவுடன் சென்றேன்.

அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை.

ஒரு பழைய பில்டிங்கிற்கு அழைத்து சென்றார். மாரிமுத்து first floor என்பதால் என்னிடம், “நேராப் போங்க.G18 அவர் ரூம்” என்றார்.

கதவை தட்டினேன்.
“ஆவ்.. தர்வாஸா குல்லா ஹே” என்று ஒரு சத்தம் மட்டும் கேட்டது.

கதைவை திறந்தேன். சிறிய அறை. அதில் நான்கு கட்டில்கள் இரண்டு அடுக்காக (bunk bed) இடப்பட்டிருந்தன. ஒரு கொடிக் கயிறு கட்டப் பட்டிருந்தது, அதில் அங்குமிங்குமாக அழுக்குத் துணிகள் கிடந்தன.

கீழே உள்ள கட்டிலில் சுவற்றைப் பார்த்து படுத்திருந்த அந்த முதியவரை ‘அய்யா’ என்று அழைத்தேன்.

அவரது லுங்கியை சரி செய்தவாறே என்னை திரும்பிப் பார்த்தார்.

“யார் சார் நீங்க?”

அவர் முகத்தில் இருந்த பெரிய மீசை, அது அய்யனார் மாமாவேதான் என்று உறுதிப்படுத்தியது.

“மாமா, நான் மன்சூர். ஹமீது வாப்பா …” என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டிலிலிருந்து சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

கட்டிப்பிடித்தவாறே, “உங்க அப்பன மாதிரியே நல்ல ஒசரமா இருக்கியேயா” என்றார்.

நான் ஒன்றும் பேசவில்லை.

என்னை விட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து “அம்மா எப்படி இருக்காக, தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆயிருச்சா” என்றார்.

“நல்லா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் நிக்காஹ் ஆயி கொழந்தைகள் இருக்கு”

“ஹ்ம்… உங்க அப்பனும் நானும் இதே ரூம்ல தான் இருந்தோம். அப்ப மூணு அடுக்கு இருக்கும். நாங்க ரெண்டு பேரும் மேலதான் படுப்போம். எள வயசு. இப்ப மேல ஏற முடியாது”

“ஏன் மாமா வாப்பா staff-ஆ இருக்கேன்னு பொய் சொன்னார்”

“உனக்கும், உங்க அம்மாவுக்காவும் தான். நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படுவீக. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான்யா அப்படி சொன்னான்”

அவரே தொடர்ந்தார், “சரியா சாப்பிடக்கூட மாட்டன். அப்ப கம்பெனி மெஸ் இல்ல. வெளில காசு கொடுத்துதான் சாப்பிடணும். டெய்லி குபூஸ் தான் சாப்பிடுவான். மாசத்துல ஒரு நாள் மட்டும்தான் நல்ல சோறு சாப்பிடுவான்”

அதைக் கேட்டவுடன் அபப்டியே இடிந்து போனேன். வாப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அது வாங்கிட்டு வாங்க இது வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிருக்கேனே.

நான் ஒன்றும் பேசமுடியாமல் கட்டிலில் அமர்ந்தேன்.

“ரம்ஜான் மாசம் வந்துச்சுனா மட்டும் டெய்லி காலைலயும் நைட்டும் நல்ல சாப்பாடு பக்கத்துல ஒரு மசூதில இலவசமா கெடைக்கும். அப்ப, உங்கப்பன் சொல்லுவான்; அய்யனாரே அல்லா இந்த ரம்ஜான் மாசம் நம்மள மாதிரி ஏழைகளுக்காக வெச்சிருக்கார்”

அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு தொண்டை அடைத்துவிட்டது. அது சரியாக சிறுது நேரம் ஆனது.

“மாமா, நீங்க ஏன் இந்த வயசுலயும் கஷ்டப்படுறீங்க?”

“மூணும் பசங்க. கடைசிப் பையனுக்கு போன வருஷம்தான் கல்யாணம் பண்ணுனோம். மூணு பேரும் அவங்ககூட வந்து இருக்க சொல்றாங்க. உங்க அத்தைக்கு ஒரு மாசம் கூட அவங்க யார் வீட்லயும் இருக்க முடியறதில்ல. அவ மேல தப்பில்ல. அவங்க சிலநேரங்களில் அவங்களை அறியாமல் எங்களைப் பாரமா பாக்கறாங்க. அதுதான்… கொஞ்சம் கடன் இருக்கு. அதை அடச்சுட்டு. கெடைக்கற செட்டில்மண்ட் பணத்த வெச்சு சின்னதா ஒரு கட வெச்சு பொழைக்கலாம்னு இருக்கேன்” என்றார்.

“எவ்வளவு கடன்”

“நாலு லட்சம் இருக்கும்யா”

“மாமா இன்னும் ஒரு மாசத்துல நீங்க இங்க இருந்து இந்தியாவுக்கு போறீங்க. நான் உங்க கடனை அடைக்கறேன். உங்களுக்கு ஒரு கடையும் வெச்சு தர்றேன்”

“ஐயோ, அதெல்லாம் வேண்டாம்யா. நீ சொன்னதே பெருசுயா”

“இல்ல மாமா, நான் ஒத்துக்கமாட்டேன். உங்களாலதான் நாங்க இன்னைக்கு உயிரோடு இருக்கோம்”

‘இல்லயா வேண்டாம். அது சரியில்ல.. நான் ஒருநாளும் அது வாங்க ,மாட்டேன். உன் அன்பு மட்டுமே போதும்’

‘முடியாது மாமா, ஒவ்வொரு வருஷமும் நமக்கு தேவை போக மீதம் உள்ள பணத்துல 2.5% ஏழைகளுக்கு ஸகாத் (zakat) கொடுக்கணும்னு இஸ்லாம் சொல்லுது. நான் ஒவ்வொரு வருஷமும் கொடுக்கிறேன். இந்த வருஷம் அதை உங்களுக்கு குடுக்கப் போறேன்”

“உங்க அப்பனும், அதை கரெக்ட்டா கணக்குப் போட்டு ஏழைகளுக்கு குடுப்பான்யா. எனக்கு வேண்டாம்யா”

“இல்ல மாமா, நீங்க வாங்கித்தான் ஆகணும். பெரிய பணக்காரங்க திருப்பதி உண்டியல்ல பணம் போடறது இல்லியா. அது மாதிரி நான் அய்யனார் சாமி கோவில் உண்டியல்ல போடறேன்”

அந்த அறையிலிருந்த ஒரு சின்ன ஷெல்ஃபில் அய்யனார் சாமி படம் வைத்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்தவாறே, “பாரு ஹமீது உன் பையனும் உன்னைய மாதிரியே இருக்கான். ஒரு உதவி செஞ்சா பத்து உதவி திரும்ப செய்யற உன் குணம் அப்படியே இருக்கு” என்றார்.

ஃபிரேம் செஞ்சிருந்த அய்யனார் படத்தை உத்துப் பார்த்தேன். வாப்பாவின் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ அந்த ஃபிரேமின் ஒரு மூலையில் சொருகிவைக்கபட்டிருந்தது.
———
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது

***

நன்றி : சின்னதாதா, தாஜ்

“நாம் எல்லோரும் ஒன்று!”

டெட்சுகோ குயோயாநாகி (Tetsuko Kuroyanagi) எழுதிய புகழ்பெற்ற குழந்தை இலக்கியமான ’TOTTO-CHAN : The Little Girl at the Window’’ நூலிலிருந்து மீண்டும் பதிவிடுகிறேன் (தமிழாக்கம் : அ. வள்ளிநாயகம், சொ.பிரபாகன்). இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமுமே வைரம்தான் என்றாலும் இந்த ’மாசோ-சான்’ மிகவும் அற்புதமானதாகப் படுகிறது – பிளவுபடுத்த வெறிகொண்டவர்கள் அலையாய் அலையும் இந்த சமயத்தில். வாசியுங்கள். நன்றி. –ஆபிதீன்

**

totto-chan1ஸ்டேஷனிலிருந்தும், ஸ்டேஷனுக்கும் டோட்டோ-சான் செல்லும்போது, கொரியன்கள் வாழும் ஒரு குடியிருப்பு வீட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. டோட்டோ-சானுக்கு அவர்கள் கொரியன்கள் எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களைப் பற்றி அவளுக்குத் தெரிந்தது எல்லாம், அங்கு ஒரு பெண்மணி இருக்கிறாள் என்றும், அவள் தனது தலைமுடியை நடுவில் இரண்டாகப் பிரித்துக் கட்டி கொண்டை வைத்திருப்பாள் என்றும், குண்டான அவள் படகு போல் முன் வளைந்த ஒரு வெள்ளை ரப்பர் ஷூவை அணிந்திருப்பாள் என்றும் அறிந்திருந்தாள். அந்தப் பெண்மணி நீள ‘ஸ்கர்ட்’டுடன் கூடிய ஆடையை அணிந்திருந்தாள். அதன் ‘ரிப்பன்’ அவளது சின்ன ‘ப்ளவுசின்’ முன்புறம் வளைத்துக் கட்டப்பட்டிருந்தது. அவள் எப்போதும் பரபரப்புடன் தனது மகனைத் தேடிக்கொண்டு, ‘மாசோ-சான்’ என்றழைப்பாள். பின்னர் தொடர்ந்து தனது மகனை அழைத்துக்கொண்டே இருப்பாள். எல்லோரும் அழைப்பது போல, ‘மசவா-சான்’ என அழைப்பதற்குப் பதில், இரண்டாவது எழுத்திற்கு அழுத்தம் கொடுத்து, “சானை’ உச்ச கட்டையில் அவள் அழுத்தி அழைப்பது டோட்டோ-சானுக்கு வருத்தம் தோய்ந்த குரலாய் ஒலிக்கும்.

அந்தக் குடியிருப்பு ஒய்மாச்சி ரயில் தடம் செல்லும் அந்தச் சின்ன கரையில் அப்படியே பின்னால் இருந்தது. டோட்டோ-சானுக்கு ‘மசவா-சான்’ யார் என்று தெரியும். டோட்டோ-சானை விட கொஞ்சம் பெரியவன். அவன் எந்தப் பள்ளிக்குச் செல்கிறான் எனத் தெரியாவிட்டாலும் அவன் இரண்டாம் கிரேடு படிப்பவனாக இருக்க வேண்டும். அவனது தலைமுடிகள் எப்போதும் கலைந்து கிடக்கும். அவனுடன் எந்த நேரமும் ஒரு நாய் சுற்றிக்கொண்டிருக்கும். ஒருநாள் டோட்டோ-சான் ரயில் தடக்கரை வழியாய் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது மசவா-சான் ரயில் தடக்கரையின் மேல் கால்களை விரித்துக்கொண்டு, கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு, வெறி பிடித்தாற்போல் நின்று கொண்டிருந்தான்,

“கொரியன்” என அவன் டோட்டோ-சானைப் பார்த்துக் கத்தினான்.

அவன் குரலில் புண்படுத்தும் நோக்கமும், வெறுப்பும் மண்டிக் கிடந்தது. டோட்டோ-சான் ரொம்பவும் புண்பட்டுப் போனாள். அவள் அவனுக்கு எதுவுமே செய்ததில்லை. ஏன் அவனுடன் பேசியதுகூட இல்லை. ஆகவே அவன் மேலேயிருந்து வன்மமாய் மொழிந்த போது திடுக்கிட்டுப் பார்த்தாள்.

அவள் வீட்டிற்கு வந்ததும் இது பற்றி அம்மாவிடம் சொன்னாள். “மசவா-சான் என்னைக் கொரியன் என்று அழைத்தான்” என்று அவள் சொன்னாள். அம்மா உடனே அவள் வாயைக் கைகளால் பொத்தினாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. என்னவோ மோசமாக நடந்திருக்கிறது என நினைத்து டோட்டோ-சான் பதறிப்போனாள். அம்மா இன்னும் தனது கண்களைத் துடைப்பதை நிறுத்தவில்லை. அவளது மூக்கின் நுனி கன்றிப் போய் சிவந்திருந்தது. “பரிதாபமான குழந்தை!” என அம்மா அனுதாபப்பட்டாள். “எல்லோரும் அவனைக் ‘கொரியன், கொரியன்’ என அடிக்கடி அழைத்து இம்சை செய்திருக்க வேண்டும். அதனால் அதை அவன் ‘மோசமான வார்த்தை’ என் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் இன்னும் சிறுவனாய் இருப்பதால் அப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்குப் புரிந்திருக்காது. யாராவது ஒருவனை ‘நீ முட்டாள்’ என்று சொல்வதற்கு, ‘பாகா’ என்று சொல்கிறார்களே, அப்படியொரு வார்த்தை என நினைத்திருப்பான். தன்னை நோக்கி, ‘கொரியன்’ என்ற பதம் அதிகமாக பிரயோகப்படுத்தப்படுவதைக் கண்டு, தானும் அந்த மாதிரியான ‘மோசமான வார்த்தை’யை யாரையாவது நோக்கி பிரயோகப்படுத்த வேண்டும் என நினைத்திருக்கிறான். அதனால்தான் அவன் உன்னை ‘கொரியன்’ என அழைத்திருக்கிறான். மக்கள் ஏன் இப்படிக் கொடுமையாக நடந்து அவனை வெறுப்பேற்றுகிறார்களோ?”

அம்மாவின் கண்கள் காய்ந்ததும், மெல்லிய குரலில் டோட்டோ-சானிடம் சொன்னாள், “நீ ஒரு ஜப்பானிச்சி. மசவா-சான் கொரியா என்ற நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறான். ஆனாலும் அவனும் உன்னை மாதிரி ஒரு குழந்தைதான். என்னருமை டோட்டோ-சான், நீ எப்போதும் மக்களுக்குள் பல வகைகள் இருப்பதாக நினைக்காதே.. ‘இவன் ஜப்பானியன்.. அல்லது இவன் கொரியன்’ என்று எண்ணாதே. மசவா-சானுடன் மென்மையாக நடந்து கொள். அவன் கொரியன் ஆனதால், அவன் மென்மையானவன் அல்லன் என்று மற்றவர்கள் நினைப்பது மிகவும் துக்ககரமானது.”

இதைப் புரிந்து கொள்வதற்கு டோட்டோ-சானுக்குக் கடினமாக இருந்தது. இருந்தாலும் அவள் புரிந்து கொண்டது என்னவோ மசவா-சான் என்ற சிறுவனிடம் எந்தவிதக் காரணமும் இல்லாமல் மக்கள் மோசமாக பேசுகிறார்கள் என்பது மட்டும்தான். அதனால்தான் அவன் அம்மா எப்போதும் ஆர்வத்துடன் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறாளோ, என டோட்டோ-சான் நினைத்தாள். அடுத்த நாள் காலை அந்த ரயில் கரைத்தடம் வழியாக அவள் கடந்து கொண்டிருந்த போது, அந்த அம்மாவின் கீச்சுக் குரலில் “மாசோ-சான்” என ஒலித்தது. அவன் எங்கே போயிருப்பான் என வியந்தாள். அவள் தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். அவள் கொரியச்சி இல்லை என்றாலும், அவன் அவளை அப்படி அழைத்தால் இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும். “நாம் எல்லோரும் குழந்தைகள்! நாம் எல்லோரும் ஒன்று!!”” பிறகு அவனுடன் நட்புறவு கொள்ள வேண்டும்..

மசவா-சானின் அம்மாவின் குரல், ஆவலும் அவதியும் கலந்து தனக்கேயுரிய இயல்புடன், காற்றுடன் நெடுநேரம் தங்கியிருக்கும்… அந்த வழியே கடக்கும் ரயில் சத்தத்தால் விழுங்கப்படும் வரைக்கும் அந்த குரல் அதிர்ந்து கொண்டிருக்கும்.

“மாசோ-சா………ன்”

நீங்களும் அந்தத் துக்ககரமான, கண்ணீர் நிரம்பிய குரலைக் கேட்டால் பிறகு மறக்கவே மாட்டீர்கள்…

**

நன்றி : Tetsuko Kuroyanagi , நேஷனல் புக் டிரஸ்ட் , இன்று இரவு மீண்டும் ’The King and the clown’ திரைப்படம் காணப்போகும் சென்ஷி

« Older entries