வண்ணநிலவனின் மறதியும் ஒரு கவிதையும் – ‘மறதி’யுடன் தாஜ்

இணையத்தில் தேட தாஜுக்கு இயலவில்லை போலும்! மறதி என்று இந்தக் கட்டுரையில் தாஜ் குறிப்பிடுவது மகா தவறு. நண்பர் பவுத்த அய்யனார் எடுத்த நேர்காணலில் வேண்டுமானால் வண்ண நிலவன் சொல்ல மறந்திருக்கலாம். ஜூன் 2002 ’ஜங்ஸன்’ இதழ் பேட்டியில் – ’கடல்புரத்தில் ’ நாவல் எழுதிய விதத்தைச் சொல்லும்போது –  குலசேகரன்பட்டினம் முஸ்லிம் பெரியவர் பற்றி சொல்கிறார். சுட்டி :  “நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்?’’  – வண்ணநிலவன் . வண்ணநிலவனை லேசாக யாராவது குறைசொன்னால் கொன்னுடுவேன் கொன்னு. தாஜ், அவர் துக்கம் என் துக்கம்.. ரொம்ப ’ஆராய்ச்சி’ பண்ணாதீர்! –ஆபிதீன்

***

அபூர்வக் கலைஞனின் ஒரு சின்ன மறதியும்  ஒரு சின்ன கவிதையும்

தாஜ்

nerkaanal-cover1b3இந்த வருட, சென்னை புத்தகக் காட்சியில், வாங்க விரும்பிய புத்தகங்களின் பட்டியல் நீளம். வாங்கியது ஒரு சில புத்தகங்கள் மட்டும்தான். கூடுதலாக ‘நேர்காணல்’ சிற்றிதழின் பழைய இதழ்கள் இரண்டு. வீட்டிற்கு வந்த நாழியில், முதலில் அந்தச் சிற்றிதழ்களைத்தான் வாசித்தேன்.என் வியப்பு விரிவடைந்து கொண்டே இருந்தது. அந்தச் சிற்றிதழை கொண்டு வந்திருப்பவர் பவுத்த அய்யனார்!

 பவுத்த அய்யனாரைப் பற்றி, இலக்கியச் சூழலில் நிறைய கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் சந்தித்ததில்லை. அவ்விதழை வாங்கிய தருணத்தில்தான் அவரை, அவரது ஸ்டாலில் வைத்து சந்தித்தேன். சுந்தரராமசாமியின் நட்பு வட்டத்தில் பவுத்த அய்யனாருக்கு தனித்த, தவிர்க்க முடியாத இடமுண்டு. சு.ரா.வோடு அவர் பழகத் துவங்கிய காலம் தொட்டு, சு.ரா. இறப்பைத் தழுவும்வரை (1986 – 2005) தான்கொண்ட நட்பை சிதையாமல் காத்து போற்றியவர்!

 பவுத்த அய்யனாருக்கும் சுந்தரராமசாமிக்கும் இடையே கடிதத் தொடர்பு துளிர்த்து, இவர் அவருக்கும் அவர் இவருக்குமென அந்தக் கடிதப் போக்குவரத்து நடந்தேறியிருக்கிறது! அவர்கள், தங்கள் கடிதங்களில் இலக்கியம் சார்ந்தும், சாராமலும் பலதரப்பட்ட செய்திகளை இருவரும் பறிமாறி கொண்டிருக்கிறார்கள். சு.ரா., அமெரிக்காவில் இருந்தப்படிக்கு கடைசியாக எழுதிய கடிதமும் கூட பவுத்த அய்யனாருக்கு எழுதியக் கடிதம்தான்! சு.ரா.வின் கடிதங்கள் மட்டுமென சுமார் 200 கடிதங்களை தொகுத்து, ‘அன்புள்ள அய்யனார்’ என்று புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார் அய்யனார்! வாசிக்கவும் வாசித்தேன். பெரிய அதிர்ஷ்டம்தான்!

 அந்தப் புத்தகத்தை வாங்க அய்யனாரின் ஸ்டாலுக்கு சென்ற போதுதான் ‘நேர்காணல்’ சிற்றிதழைக் கண்டேன். ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ / அந்த்வான் து செந்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ / ழாக் ப்ரெவெரின் ‘சொற்கள்’ / பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ / ழான்-போல் சார்தரின் ‘மீள முடியுமா?’ / பியரெத் ஃப்லுசியோவின் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ இப்படியான பிரெஞ்ச் இலக்கியப் படைப்புகளை தமிழுக்கு தந்த வெ. ஸ்ரீராமை   பேட்டிக்கண்ட ஓர் முழு இதழைக் கண்டமாத்திரத்தில் வியந்து வாங்கினேன். அதே மாதிரி இன்னொரு இதழாக, ‘அபூர்வக் கலைஞன்’ வண்ணநிலவன் என்று அட்டைப்படம் கண்ணில்பட அதனையும் வாங்கினேன்.

 குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும் இத்தனை நாட்களாகப் படித்து,  சமீபத்தில்தான் நிறைவு செய்தேன். அத்தனைக்கு, அந்தப் படைப்பாளிகளது செய்திகளின் அழுத்தங்கள் விசேஷம் கொண்டதாக இருந்தது.

 நிஜத்தில் வண்ணநிலவன், ‘அபூர்வக் கலைஞன்’தான். அவர் போற்றத்தக்க கலைஞன் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. அவரது நாவல்களான கம்பாநதி / கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு என்ற அத்தனையும் வளமான படைப்புகள். சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால், நாவல் வாசிக்கும் வாசகனை எந்த அளவுக்கு அவரது நாவல்கள் நெகிழ்வு கொள்ள வைத்தது என்பதை நான் அறிவேன். அது மாதிரியே அப்போது வாசித்த, அவரது  சிறுகதைகள் ‘எஸ்தர்‘ போன்றவைகளும் அதே அளவிலான தாக்கம் தந்தவைகள்தான்.

 இங்கே பிரசுரம் ஆகியிருக்கும் வண்ணநிலவனின் ‘மெய்ப்பொருள்:3’ என்கிற இந்தக் கவிதை, அவரை நேர்காணல் கண்டிருந்த இதழில் கண்டெடுத்தது. இதுவும் கூட சுமார் 33 வருட பழமைவாய்ந்த எளிய கவிதை!. வண்ணநிலவனின் படைப்புகளை, என்பதுகளின் பின்னாண்டுகளில், சௌதியில் வைத்து எனக்கு அறிமுகம் செய்துவைத்த என் நண்பர் ‘மர்ஹூம்’ கூத்தாநல்லூர் ஹாஜா அலி அவர்கள், இந்தக் கவிதையை மெச்சிப் பேசியதாகவும் நினைவு. தவிர, ஹாஜா அலி எழுதும் சில கவிதைகள் கூட இதே சாயல் கொண்டதாகவே இருக்கும்.

 hajaliimage3ஹாஜா அலி, வியந்து சொல்லித்தான் வண்ணநிலவனின் கடல்புரத்தில் / ரெயினீஸ் ஐயர் தெரு; ஜானகிராமனின் மரப்பசு, சு.ரா. / அம்பை / கி.ராஜநாராயணன் / மௌனி / எம்.வெங்கட்ராம் / அசோகமித்திரன் போன்ற மேதைகளை வாசித்தேன். ஏன்… சு.ரா.வின் ஜே.ஜே. சிலக் குறிப்புகளைக் கூட அவர்தான் எனக்கு தந்து வாசிக்கவும் ஆர்வம் உதவினார்!

 எழுதுவதென்பது அவருக்கு அத்தனை இஷ்டமில்லாதது. வாசிப்புதான் அவரது உலகம். அதுதான் அவரது சுவாசம்! கடைசி காலங்களில் தமிழ் இலக்கியம் அவருக்கு போதாதென்றாகி ஆங்கிலத்தில் தேர்வு செய்து வாசிக்கத் தொடங்கினார்.

 சொத்தை விற்று ஆர்வமாக புத்தககங்கள்  வாங்கிய ஒருவரை நான் கண்டேன் என்றால் அது இவர்தான். நாகூர் கடற்கரையில் அநாதைப் பிணமாக கிடந்த கிடப்புதான் இவரின் புரிபடாத முடிவாகிப் போனது. பொதுவில், சக மனிதர்கள்  அவரது பார்வையில் அர்த்தம் கொண்டவர்களாக தெரிந்ததில்லை என்பதை மட்டும் அறிவேன்.

 வண்ணநிலவனின் இந்தக் கவிதையை கூட, நண்பரின் நினைவாகவே இங்கே பிரசுரத்திற்கு தேர்வு செய்தேன்! எனக்கென்னவோ இக்கவிதை, என் ஹாஜா அலி எழுதிய எழுத்தாகவே தோன்றுகிறது. அட்சரம் பிசகாமல் அவரது கவிதை வரிகள் மாதிரியே இருக்கிறது. பவுத்த அய்யனாரும், வண்ணநிலவனும் என்னை மன்னிக்க வேண்டும். என் நண்பர் என்னை ரொம்பவும் பாதித்திருப்பதைதான் இப்படி சொல்கிறேன்.

 இந்த என் அலப்பறையை முடித்துக் கொள்ளும் முன், இன்னொரு சின்னச் செய்தி. 1

80-களில், ஒருவருடத்தின் ஜனவரி-15ல் , ‘துக்ளக் ஆண்டுவிழா’ எங்கள் பக்கத்து டவுனான சிதம்பரத்தில் நடந்தது. அந்த விழாவில் பேச விரும்புகின்றவர்களின் முகவரியும், கேட்க நினைக்கும் கேள்வி குறித்தும் பதினைந்து நாட்களுக்கு முன்னமே தகவல் செய்து பதிவு செய்ய வேண்டுமென முந்தைய துக்ளக் இதழில் அறிவித்திருந்தபடிக்கு, என் பெயர்/ முகவரி/ கேட்க இருந்த கேள்வி என்று அனைத்தையும் வழிமுறையாய் கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன்.

 அந்த 80- காலக்கட்டங்களில்தான் துக்ளக் ஆசிரியர் சோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலுக்கட்டாயமாக தமிழத்தில் தன் பத்திரிகையின் வாயிலாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். (இப்போதும் கூட அதுதான் நிலை!) ஆனால், அந்த இயக்கத்தின் சூழ்ச்சி நிறைந்த அரசியல் குறித்தான இன்னொரு பக்கத்தை அவர் எழுதுவதே இல்லை. (ஆனால்.. இன்றைக்கு அவ்வப்போது எழுதவும் எழுதுகிறார்!) அந்த முரண்பாட்டையொட்டிய கேள்வியாகவே அன்றைக்கு என் கேள்விகள் அமைந்திருந்தன.

 அந்த விழா நடந்த அன்று, என்னுடன் கல்லூரியில் படித்த, நண்பரான சுந்தரவடிவேலுடன் சென்றிருந்தேன். அவன் என் கேள்வியினை கேட்டறிந்த பின்,  “சோவை விடாதே” என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தான். விழா தொடங்கியதில் இருந்து சோவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அங்கே கூடியிருந்த பெரும்கூட்டம் ஆராவரித்துகொண்டு இருந்தது.

 நண்பனிடம் சொன்னேன். ‘சூழ்நிலையைப் பார்த்தால், எனது கேள்வியில் எத்தனை அர்த்தம் இருந்தாலும், இந்த மக்கள் சோ சொல்வதைதான் ஏற்பார்கள். இந்தக் கூட்டமே அவருக்காகத்தான் கூடியிருக்கிறது. மேடையில் கேள்வி எழுப்பும் அன்பர்களை, இடையிடையே நகைச்சுவை கிண்டல்களுடன் சோ  மடக்கும் தர்க்கத்தை காணுகிற போது, என்னை அவர், சட்டென ’சைபர்’ ஆக்கிவிடுவார். எதிர்த்தும் பேச அனுமதியும் கிடைக்காது. பிறகு நான் ஏன் மேடையேறனும்?’  என்றேன். விசயதாரியான அந்த நண்பன் என் கூற்றை ஏற்றுக் கொண்டான். இத்தனைக்கும் மேடை அருகில் நின்றபடிக்குதான் இந்த ‘வேண்டாம்’ ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் பணிபுரிய தொடங்கியிருந்தார். அந்தக் கூட்டத்திற்கும் வந்திருந்தார். அங்கே அவர்தான் விழா ஒருங்கிணைப்பாளராக பணியோடு ஓடியாடிக் கொண்டும் இருந்தார். மேடையில் பேச பெயர் கொடுத்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களை ஒவ்வொன்றாக வாசித்தார்கள். என் பெயரையும் அறிவித்தார்கள். வண்ணநிலவனிடம், ’நான் பேச விரும்பவில்லை; என்றேன். ஏன்? என்றார்! காரணத்தைக் கூறாது ‘இல்லை வேண்டாம் சார்’ என்றேன்.

 ‘நோ… நோ.. கட்டாயம் நீங்கள் பேசணும், எங்களுக்கு வந்திருந்த கேள்விகளில் உங்களது கேள்விதான் அர்த்தம் கொண்டது’ என்றார். அவர் சொன்ன பிறகு, மிகுந்த தைரியத்துடன் மேடையேறி, நான் பேசி முடிக்கும்வரை குறுக்கே நீங்கள் பேசக்கூடாது என்று ஆரம்பத்திலேயே சோவிடம் மிகுந்த தைரியத்துடன் கூறியவனாக, என் பேச்சைத் துவங்கி, எழுப்ப நினைத்த கேள்விகளை முழுவதுமாக கேட்டுத் தீர்த்தேன். எனக்கு சோ பதில் சொன்னார் என்பதைவிட, மழுப்பி சமாளித்தார் என்பதுதான் சரியாக இருக்கும்.

மேடையைவிட்டு கீழே இறங்கிய பிறகு, வண்ணநிலவன் என்னோடு மிகுந்த பிரியமாகப் பேசினார். அனேகமாக என் தைரியம் அவருக்கு பிடித்து போய் இருக்கலாம். அப்போதுதான் சொன்னார், ‘இளம் பருவத்தில் தானொரு இஸ்லாமியக் குடும்பத்தினரின் அரவணைப்பில், அவர்கள் காட்டிய பரிவில் படித்து வளர்ந்தவன் என்று சிலாகித்து சொன்னர். இப்போது நான் வாசித்த அவரது முழுமையான அந்த நேர்காணலில், குறிப்பிட்ட அந்தச் சிலாகிப்புச் செய்தி ஒரு வரி கூட இல்லை!

சிதம்பரத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் மேடையில் வைத்து சோவிடம், ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு பக்க அரசியல் சூழ்ச்சிகள் குறித்து, அன்றைக்கு கேள்விகள் எழுப்பியதை எப்படி என்னால் மறக்க முடியாதோ, அது போலவே அன்றைய தினம் வண்ணநிலவன் என்னுடன் அன்பு கொண்டு உரையாடியதையும், இஸ்லாமியக் குடும்பத்தினர் குறித்து குறிப்பிட்ட சிலாகிப்பையும் என்னால் மறக்க முடியாது. வயது பொருட்டு மறதி அவரை ஆண்டிருக்கலாம்! நான் மறந்துவிடவில்லையா எத்தனை எத்தனையோ கவிதை மணித்துளிகளை!

**

vannanilavan2sol

மெய்ப்பொருள்:3 – வண்ணநிலவன்

எல்லாம் விலை குறித்தனவே

எல்லாம் விற்பனைக்கே

ஹே, அர்ஜுனா,

விற்பனைத் துணை கொள்

காய்ந்த விறகோ, ஹரி கதையோ

பழைய ஹிந்து பேப்பரோ, மகளோ,

கலையோ, கருமாரியம்மனோ…

வேஸ்ட் பேப்பருக்கும்

வேசிக்கும் சமவிலைதான்.

சூரியனுக்குக் கீழுள்ள

சகலமும் விற்பனைக்கே,

விற்பனை செய்வாய், விற்பனை செய்வாய்.

மியூஸிக் அகாடமியில் கலை விற்பனை.

கந்த விலாஸ் கடையில் ஐவுளி விற்பனை

அரபு தேசத்தில் இளைஞரும்

சீரணி அரங்கில் அரசியலும்,

‘பாக்கு மன்னன் பூச்சி?’

டிரேட் மார்க்கில் கவனம் வை.

மரமும் மகனும்

காய்த்துக் கனி தருவர்.

உட்லண்ட்ஸ் ஹோட்டலில் டிபனுற்பத்தி

பழனியில் பஞ்சாமிர்த உற்பத்தி

கலைப் படம் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு,

கமர்ஷியல் படம் காரைக்குடிக்கு.

ஐயப்பசாமிக்கும், ஐயனார் காபிக்கும்

பிராஞ்சுகள் திற.

மாடர்ன் ஆர்ட்டுக்கு மார்க்கெட் தேடு.

ஓய்ந்த நேரத்தில்

நட்பு செய்தாலும்

நாய் வளர்த்தாலும் – நல்ல

லாபமுண்டு.

***

நன்றி: வண்ணநிலவன்,  ’நேர்காணல்’ இதழ் (செப்டம்பர்-நவம்பர் 2010 ) , தாஜ் ,  சொல்வனம்அழியாச் சுடர்கள்

மனசு சரியில்லை தலைவரே…. – தாஜ்

அன்புடன் ஆபிதீன்…
மனசு சரியில்லை தலைவரே….
மனம்விட்டு பெரிய கடிதம்
எழுதணும் எழுதணுமென்று
எழுதாது இருக்கிறேன்.

ஏதாவது இரவில் கிறுக்குவது ஒண்ணுதான்
இப்போதைக்கு ஆறுதல்.

எப்படி ஆபிதீன் வாழ்க்கையை
சமாளிக்கிறீங்க?
காசுபணத்தை முன்வச்சி இந்த கேள்வியை கேட்கலே..
என்னமோ போங்க.

– தாஜ் / 28th Oct’2010

*

கவலைப்படாதீர்கள் தாஜ்..

உங்கள் நிலையில்தான் நான் இருக்கிறேன். ஒன்றும் உருப்படியாகச் செய்ய வழியில்லை. உங்களுக்கு கிறுக்குவது ஆறுதலென்றால் அதைப் பதிவதுதான் எனக்கு ஆறுதல். ‘நான் சுட்ட அப்பத்தை நீங்களும் வலைச்சட்டியில் சுட்டுவைத்து அசத்திவிட்டீர்கள். நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி’ என்று தம்பி அறபாத் போன்றவர்கள் எழுதும்போது கொஞ்சம் சிரிப்பு. அவ்வளவுதான். நித்தமும் தொடரும் பிரச்சனைகள் என்னை அலைக்கழிக்கிறது. என்ன செய்வேன், எல்லாம் சரியாகும் என்று ‘அவனிடம்’ பாரத்தைப் போடுவதைத் தவிர? எழுதுங்கள். அது ஒன்றுதான் வழி – நாம் நினைக்கப்பட.

ஆபிதீன் / 30th Oct’2010

*

அன்புடன் ஆபிதீன்…

தமிழ்ப்பூக்கள் (மார்ச் -1982) இதழில் நண்பர் ஹாஜா அலி கைப்பட எழுதிய வடிவத்தை அனுப்புகிறேன். எழுத்துச் சிதறலான இந்த வடிவத்தை – முடிந்தவரை அப்படியே உபயோகிக்கலாமெனத் தோன்றுகிறது.
– தாஜ் / 30th Oct’2010

***

ஹாஜா அலி : மேலும் சில குறிப்புகள் – தாஜ்

பெயர்: ஹாஜா அலி / புனைப்பெயர்: ‘ராவுத்தன் ஹாஜா அலி’ / ஊர்: கூத்தாநல்லூர் / அத்தா: திருவாரூர் / அம்மா: ஜாவா (இந்தோனேசியா) / கணீர் தமிழ் பேசும் ஜாவா அம்மா! / பையனை தமிழ்ப் படிக்கவைத்த ஜாவா அம்மா! / ஆமாம்.. ஹாஜா அலி தமிழ் படித்தவர் / மதுரைப் பக்கம் கருத்தவாப்பா கல்லூரி / தமிழ் ஆசிரியர் : கவிஞர்(?) நா. காமராசன் / வயதில், நவீன இலக்கிய ஈடுபாட்டில்… என்னில் மூத்தவர் / சௌதி-அல்கோபர்-துத்பாவில் வைத்துப் பழக்கம் / புத்தகம் படிப்பதும், சிகரெட் புகைப்பதும் – அவர் விழித்திருக்கும் வேளையில் – அதிக நேரம் விழுங்கும் வேலை.

ரொம்ப வித்தியாசமான மனிதர்/ ‘ஹாஜாவா , யார்?’ – சொந்த ஊர் / தெருக்காரர்களே விழிக்க விளங்கிய மனிதர் / ஒருதரம், நானும் அவரும் புகைபிடித்தபடி பேசிக் கொண்டிருக்க, அவர் அடுத்த சிகரெட்டை பற்றவைத்துப் புகைத்தபடி, புகை எத்தனைக் கேடு என்றும், அது வேண்டாமென்றும் எனக்கு தீர அறிவுரை வழங்கினார்! / அவரது பொழுதுபோக்கு வேடிக்கையானது / சக நண்பர்களை, அவரது பார்வைக் குத்த பேசித் திரிபவர்களை (குறிப்பாய், தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சகோதரர்களை) கூர்ந்து வேடிக்கை பார்ப்பதுதான் அது. பல நேரம், அவர்களிடமிருந்து அவர் தள்ளிப்போய் முகம் மலர நமூட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு திரும்புவதை கண்டிருக்கிறேன் (நிஜத்தில், நம் சகோதர்கள் அத்தனைக்கு அப்படியா?).

அவருக்கு பொருளீட்டும் வித்தைக்காரர்களைப் பிடிக்கும் / அமெரிக்கர்களையும்,அமெரிக்காவையும் கேள்வியறப் பிடிக்கும்/ அவர்களது பரிபூர்ண சுதந்திரம்… ரொம்பப் பிடிக்கும் / ‘இஸ்லாம் , கேப்பிடலிசம் சார்ந்த மதம்’ என்பதைச் சுட்டிக்காட்ட ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற சிகப்புத் தலைவர்களை வரிசையாக அவர் அறிவார். அந்த இயக்கத்தின் எந்தவொரு பொலிட்பீரோ உறுப்பினரையும் தாண்டி, அவர்களின் சித்தாந்தங்களை அறிவார். அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் படித்தவர்.

என்றாலும்… புரட்சிகர சிந்தனைகளுக்கு… ‘நோ’!. ஜனநாயகம்தான் ‘எஸ்’! / அதுதான் சுதந்திரத்தின் திறவுகோல்/ சுதந்திரமே உரிமைகளின் கண்ணி / உரிமைகள்தான் உயிரின் உயிர் / அது அற்ற உயிர், உயிர் வாழ்வது வேஸ்ட் / இந்திய இடதுசாரிகள்? கடுமையான வேஸ்ட் / பெரியார்? கேள்வியே வேஸ்ட், முகத்தை திருப்பிக்கொள்ளத் தகுந்த வேஸ்ட் / தொடர்ந்தால்… கதவைச் சாற்றும் வேகமும், இரட்டைத்தாள் இடும் ‘கிறீச்’… ‘கிறீச்’சும் கேட்கும் / அவருக்கு அவர் விபரமானவர் / கொண்டதை மாற்றிக்கொள்ள மாட்டார் / வயதுக்கு மீறிய அறிவு அப்படித்தான் நர்த்தனமாடும்!

கொண்டதை, மாற்றிக் கொள்ள மாட்டார் என்பது நிஜமானாலும், ஓரேடியாய் தீர்மானமாய் அப்படிச் சொல்லிவிட முடியாது / எனக்குத் தெரிந்து துக்ளக் சோ, அவரது வெகுக்கால செல்லம் / தீர்மானமான அரசியல் விமர்சகர் , தீரர், மஹா புத்திசாலி , சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நேர்மை / அப்படித்தான் நம்பினார் / அப்படியே பேசினார்/ சோவை கேள்வியாக்கி அவரிடம் பலமுறை வாதாடி இருக்கிறேன் / ம்… ஹும் / அவர், தனது வட்டத்தை விட்டு வந்தது கிடையாது.

சோ குறித்த, அவரது இன்னொரு மதிப்பீடு அவரிடம் தகைத்தது / அது பிற்காலச் சங்கதி/ துக்ளக்கோடு எங்கே எப்போது மோதி காயம்கொண்டாரெனத் தெரியாது / நான் அவரைச் சந்தித்த ஓர் சந்திப்பில், சோ பற்றிய தடித்தச் சொல் அவரிடமிருந்து தெறித்தது / இடியட்! / தமிழில் முட்டாள் எனச் சொல்லலாம்/ தான் கொண்டதை, அவர் மாற்றிக்கொள்ள லேட்டானாலும்…. லேட்டஸ்ட் ‘ரைட்’!

வைத்தீஸ்வரன்கோயிலில் நாடிஜோசியம் பார்க்க, ஊரிலிருந்து அவர் நேரே சீர்காழி வந்து, வைத்தீஸ்வரன்கோயில்போக அழைத்தார் / நாடிஜோசியம் பார்க்கவேண்டிய அளவுக்கு வாழ்வில் அவருக்கு என்ன கஷ்டமோ, என்ன நஷ்டமோ/ அல்லது, எந்த அழுத்தத்திலான மனச் சங்கடமோ… எனக்குத் தெரியாது / அவர் பார்க்கணும் என்று கருதிவந்த நாடிஜோசியம் பார்க்கப்பட்டிருக்கும் பட்சம், அது அவருக்கு நிஜமாலுமே ஆறுதலை தந்திருக்கலாம் / புரிந்தே அவரை நான் மறுத்தேன் / அவரும் தன்னை மாற்றிக்கொண்டு ஊர் திரும்பிவிட்டார்/ இது எனக்குத் தெரிந்த இன்னொரு ‘ரைட்’!   

மறக்க முடியாத அவரது வித்தியாச சம்பவங்களும், நினைவுகள் ஏராளம் / கொஞ்சகாலமாக அவரே கூட, என்னில் வெறும் நினைவாக மட்டுமே வாழ்கிறார்! / எஸ்…/ அவர் இறந்து, அல்லது தற்கொலை செய்துக்கொண்டு (நிஜம் மறைக்கப்படுகிறது) பத்து வருஷம் ஆகிவிட்டது / 1.அவர் இப்படி திடுமென இறந்துப் போனதும், 2.பெரிதாக எதுவும் எழுதாது மறைந்துப்போனதும், அவர்மீது கோபத்தையே தருகிறது.

அபூர்வமாக எழுதக் கூடியவர் / கோடைக்காலத் தூறல் மாதிரி/ ‘எழுதணும் என்றில்லை தாஜ்…. நல்ல எழுத்தை தேடிப் படித்தாலே போதும், அதுவும் இலக்கிய ஈடுபாடுதான்’ என்பார் / தனக்குப் பிறகு, தான் கற்ற… வளர்த்தெடுத்த…. எழுத்து வாழணுமென அவர் நினைக்கவில்லை / இப்போது, அவரைக் காண… அவர் எழுதியதை தேடினால், சிலச்சில எழுத்துக்கள்தான் கிடைக்கிறது / அது கடுகு என்றாலும் வசீகரம் / கீழே அவரது கடுகானதோர் எழுத்துண்டு. இருபத்தி எட்டு வருடக் கடுகு! / ஓர் கோட்டோவியம் மாதிரியான கடுகு!/ வாசிக்கும் நாம்தான் தோணும் காட்சிகளையும், உருவங்களையும் அதில் ஏற்றிப் பார்த்துக் கொள்ளணும் / இது, நவீன எழுத்தின் இன்னொருமுனை! / அபூர்வரகம்!

ஆன்மீகத்தில் அபார நம்பிக்கை உடையவர் / அம்மா, மாமியார், மனைவி இவர்களோடு சச்சரவு என்றால்… அடுத்த அவரது நடவடிக்கை ஆன்மீக ரீதியகத்தான் இருக்கும்! மாதக் கணக்கில் ‘தப்லிக்’ புறப்பட்டுவிடுவார் / இடைக்கால, நவீன சந்நியாசம் மாதிரி! / மத அரவணைப்பிலான தப்பித்தல் என்றும் சொல்லலாம் / ஒரு ரம்ஜான் காலத்தின் முப்பது நாளும், நோன்போடு அவர், பள்ளிசாலை புகலிடமாக்கிக் கொண்டு பக்கா ‘இபாதத்’துடன் காலம் கழித்ததை நான் கண்டிருக்கிறேன்/ அவர், தீரா நேசித்த இறைவன்… அவருக்கு, ‘கபரின்’ கஷ்டத்தை இலேசாக்கியிருப்பானா? சொர்க்கத்தை காட்டுவானா? தெரியவில்லை.

சொல்ல மறந்துவிட்டேன்… மது அவருக்கு இஸ்டம். உயர்வகை மது, தீர இஸ்டம். சரியாகச் சொன்னால்… அதற்கு அவர் அடிமை! 

– கநாசு.தாஜ்

*

இந்திய….
சுதந்திர….
ஜனநாயக…
குடியரசு… முகங்கள்.

 
– ராவுத்தன் ஹாஜா அலி

இவ்வருஷமும்
இந்தியாவின்   ஆட்டு மந்தைகளுக்கு   பழக்கமும்
வழக்கமும்   இரும் பெரும்  தளைகள்.
சட்டை போடாத  ஜாதிகள்   இப்பவும்  
    சாகாவரம்      பெற்றிருக்கின்றன.
இந்த வருஷமும்   சுண்ணாம்புக் கட்டியிலிருந்து 
    சூரியன்வரை    சகலமும்   கோயில்   தெய்வங்களே.
அட,  புது வருஷமென்று  காந்தி சிலைப் பார்த்து 
            காகங்கள்  எச்சமிடாமல்
இருக்கப் போவதில்லை.  அரசியல்வாதி 
           குறைச்சலாய்  போய்விடப்போவதில்லை.
2010  நூற்றாண்டிலும்  இந்திய  இலக்கியங்களெல்லாம்  
                              சடாரென்று

தூக்கத்திலின்றும்   விழித்ததுபோல்  சுதாரித்துக் கொண்டு  திசை
            திரும்பப்போவதில்லை.

பழம்பெருமைகள் நிறைய பேச,   புதுக் கண்டுபிடிப்புகள்  
                              மௌனம்.

‘ரொபோட்’  யாருக்கும்   தெரியவராது.
ராக்காயி வயசுக்கு வந்தது  தெரியாதவனெல்லாம் 
          இத்தடவை அவசியம் தெரிவர்.

இன்னும்   தெரிந்த முனியாண்டி  
           தெரியாத முஸ்தபாவாக  உருவெடுப்பான். 

               மூன்லைட்டில்     கூட்டாஞ்சோறு
               நியான்லைட்டில்      ஊதாரி
               நக்ஸலைட்டில்     பட்டதாரி
                               
                           மேலும்
                   
                  சாதுகள்     சம்சாரித்து
                      சம்சாரி      சன்யாசித்து
                   ரவுடிகள்    சட்ட சபையில்
                ரயில்கள்  விபத்தில்   – நான் தனியே  விட்டுவந்த
                         தங்கச்சி   ஆபத்தில்.
மீந்து கிடக்கும்   கிழங்கட்டைகள்   பார்க் பெஞ்சிலும்,  பீச் மணலிலும்
பழசு  பேசி   வெத்திலை   மெல்லலாம்.     அதோடு…

யுகத்துக்கு முந்தி   எழுதிப்பெற்ற    வேய்ங்குழலுடன்
இடையனின்   மேய்ப்பு.   வழக்கமே  இந்திய   சிங்கங்கள் கத்த
இந்தியக்   கழுதைகள்   கர்ஜிக்கும்.  இந்த   நாதத்தின்   பேதமறியா
அவசரமாய்   மானிடர்   அலைவர்.

                 
                  அவன்   அரிசிக்காய்.
       இவன்  பருப்பிற்காய்.  தின்று கொழுத்த எவனோ ஒருத்தன்
                  பாவாடை   மீறிய   பருவத்துக்காய்.

எனக்கும்   உனக்கும் மட்டும்   திரும்பவும்   டூரிங் டாக்கீஸ் பார்த்து
சக்கை   போடு  போடும்       எம்ஸியாண்டை  போதும்.
எழுதிப்  படிக்க  வேண்டிய     வயதுகளுக்கு    ரஜினிகாந்த்.
    
   
     இந்த லட்சணத்தில்    இனி ஒரு   மாடலாய்   நாற்பது பக்க
     கணக்கு நோட்டு புக்கின்   அட்டையில் சரிதா   சிரிக்கலாம்.
அவதி அவதியாய்  கட்டப்பட்ட  அணைகள் 
                    திரும்பவும்  உடையலாம்.
திரும்பத் திரும்ப   பஸ்கள்  
                    பாதசாரிகளை   பதம் பார்க்கலாம்.

இருநூற்றி   எழுபத்தெட்டாவது  தடவையாக 
                     வரிகள்   ஏறலாம்.
முன்னூற்றி   நாற்பதாவது முறையாக  
                   அரசியல் சாசனம்  திருத்தலாம்.

அங்கே   ‘அந்துலே’ சைஸில்     இன்னொரு   ‘பொந்துலே’
முதன் மந்திரியாகி   பணம்   பண்ணலாம்.

ஏழைகளுக்கும்   ஏமாந்தவனுக்கும்   இப்பவும்  இருக்கவே
                                      இருக்கின்றன,  

                 ஈரத்துணிகளும்
                        நீண்ட   நீண்ட    கியூக்களும்.

அத்தனைக்   கியூவிலும்  நின்று  பார்த்துவிட்டு   இந்த முறையும்
எந்த   கவிஞனாவது   “இன்று  என்னிடம்   பீரங்கி   இருந்தால்”
என்று     புதுக் கவிதை    எழுதலாம்.
காக்காக்கடிப்   போட்டு   சின்னப் பயல்கள் விளையாட்டில்  
                         திண்ணை     ரெண்டுபடுவது போல 
பெரிய   மனுஷன்கள்  வினையால்  அரசியல்  கூறுபடும்.  
          
       டை கட்டி   நகரத்தார்   பூரிகிழங்கு  தின்க,   மிஞ்சியபேர்
             புது   கடன்காரர்கள்.
         புது   கவிஞர்கள்.

            உழைப்பும்    உரிமையும்     ஊரான் சொத்து
அதில்     மறந்தும்கூட   இந்த   வருஷமும்   கைவைக்கவேண்டாம்.

           ரௌத்திரம்   பழகச்   சொன்னது   பாரதிதான்.
அதனால்    என்ன?     அவன்தான்    இல்லையே.

        சாதுவாயிரு ! 
        இவ்வருஷமும். . . .
        புண்ணிய    பாரதத்தில்
        திரும்பத். . . . பம்ருதி
        கத்தரிச் செடி
               வளர்ப்போம். . . .  வா. 

***

நன்றி: கநாசு. தாஜ் | E-Mail : satajdeen@gmail.com

ஒரு கோபம், இரண்டு ராவுத்தர்கள்

முதல் ராவுத்தர், ‘ராவுத்தன்’ என்று தன்னைச் சொல்வதில் பெருமை கொண்ட கூத்தாநல்லூர் ஹாஜாஅலி. இரண்டாமவர் , அப்படிச் சொன்னாலே கடுப்பாகும் சீர்காழி தாஜ். பதியும் நாகூர்க்காரனான நான் யாரென்று தெரியவில்லை. வாப்பா – ராவுத்தர் , உம்மா வகை – மரைக்காயர் என்பதால் ராவுக்காயனாக இருக்கலாம். அதுபோகட்டும், ராவுத்தர்களைப் பற்றிய அரிய செய்திகள் தெரிந்துகொள்ள சகோதரர் சடையன் அமானுல்லாவின் (சாபு) ‘மரத்தடி’ கட்டுரையை முதலில் வாசியுங்கள். பிறகு ‘ராவுத்தன்’ ஹாஜா அலியின் கோபத்தை கீழே பார்க்கலாம். ‘என்ன நானா… வேலைவெட்டி இல்லை போலக்கிது… அதான் எதாச்சும் ‘நெட்’டுல அப்பப்ப போட்டுக்கிட்டிக்கிறீங்க…’ என்று சவுதி தம்பிகள் என்னை வெடைக்கும்போது ‘பொருளற்ற’ கோபம் எனக்கும் வருகிறது. ஆமாம் ஹாஜா, கோபத்தின் பொருள்தான் என்ன?

***

ஹாஜா அலி: நினைவுகளும் பதிவுகளும்

தாஜ்

அன்புடன்
ஆபிதீன்…..
வெள்ளைத் தாளில்
எழுதி மறந்த
வெள்ளைக் கவிதை
குப்பை கிளரும் தருணம்
வெற்றுத் தாளாய்
கீழே வார்த்தைகள் சிதற
கறுத்துக் கிடந்தது!
சூழ வலம்வருவோர்
வளர எடுத்தடுக்கி
மக்கி மங்கித் தெரியும்
ஆதாரத்தைக் கண்டு தெளியாது 
வலிய ஆளாளுக்கு
அர்த்தம் களிக்கும் நாழியில்
முனைகள் இடர விளித்தார்கள்.
பெருவெளி மரங்கள்
இடம் தப்பாது வளர்ந்தோங்க
காண வியந்தவனாய்
காலமாகிவிட்டது என்றேன்!

[‘துரத்தும் இறந்த காலம்’ – தாஜ்]

*

இருபத்தியாறு ஆண்டுகளுக்குப் பிறகு
இன்றைக்கு….
ஹாஜா அலியின் எழுத்துக்களை
மீள் வாசிப்பு செய்கிற போது – அவர்
இன்னும் வாழ்ந்திருக்கலாமென்றும்
கூடுதலாய் இன்னும் கொஞ்சம்
எழுதியிருக்கலாமென்றும்….
கசிய சுரக்கிறது ஆதங்கம்!

அவரது கடைசி காலக்கட்டம் சிக்கலானது!
அதில் இரண்டு கருத்திருக்க முடியாது.
அந்தச் சிக்கல்…
அவரே தேடிக் கொண்டது!
எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும்
அது அப்படித்தான்!
தேடிக் கொண்டதேதான்.
என் அனுமானமும் அதுதான்!

அனுபவச் செருக்கு திரளும் போது
முளையின் அமர்வை
இடம் தப்பாமல்
பார்த்துக் கொள்வதென்பது
மனிதர்களால் பெரும்பாலும்…
முடியாமல்தான் போகிறது.
கற்றவர்களும்
நடை முறுக்கி பின்னிக் கொள்ள
குப்புறவே வீழ்கிறார்கள்!
குறிப்பாக
கலை சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம்
இப்படியாகத்தான் வீழ்கிறார்கள்!

*
வாழ்க்கை = பேய்த்தனம்!
அதன் அட்டகாசம் சொல்லி மாளாது.
இந்தப் பேயிடம் அறைபடாத
மனிதனே கிடையாது! 
மனிதர்களை அதீத
அர்த்தம் கொண்டவராக்கி
யதார்த்தத்தில்
அர்த்தமற்றவர்களாக்கி
சபித்துக் கைக் கொட்டும்.
ஹாஜா அலி
இந்தக் கைகொட்டலில்
மிரண்டிருக்கலாம்!

பருவத்தில்
ஒருவன் காணும்
கனவுகளுக்கு பஞ்சமில்லை!
வானம்/ சூரியன்/ சந்திரன் தாண்டி
நட்சத்திரங்கள் கூட
அவனின் கைக்கெட்டும் தூரம்தான்!!

நடைகள்…
கடக்கும் பாதைகள்…
மேலே ஏறப் போகும்
மலை முகடுகள்/ சிகரங்கள்
தாண்டப் போகும் கடல்கள் குறித்தெல்லாம்
கூட்டிப் பெருக்கி வகுத்து…
எண்ணங்கள் ரொம்பவே வாழ்கிறான்.
காலத்தில்…
நில்லாது சுழலும் உலகம்
அவனை கலைத்துப் போட்டுவிடுகிறது.
கனவுகள் அத்தனையும்
அவன் கண் எதிரேயே வீழ்ந்து
தூள் தூள்!
தருணம் பார்க்க அவனது சுய சக்திகள்
வெப்பக் காற்றாய்
வெளிப்படவும்….
இன்னொரு சராசரி என்ற நிலை!
அவனை அது வெட்கப்படுத்தும்.
அது குறித்தெல்லாம் சொல்லி
ஆறுதலும் கொள்ளவும் முடியாது.
சொன்னாலும் சபையேறாது.
அவன் ரணம் கொள்ளலாம்.
அது நடக்கும்.

விதிவிலக்காய்…
மரங்களை ஒத்த எத்தனையோ பேர்கள்
வளையாது நிற்கக் காண்பதும் வியப்புதான்!
மேலே நான் பதிந்திருக்கிற
என் கவிதை மாதிரி!
ஹாஜா அலி
துரத்தப்பட்டதில் கூட
ரணம் கொண்டிருக்கலாம்.
மறுப்பதற்கு இல்லை.
அவரது சாவு..
இத்தனைச் சுளுவில் என்பதற்கு
வேறு என்னதான்
காரணங்களாக இருக்க முடியும்?
  
*
ஆபிதீன்…
சென்ற பதிவில் பதியப்பட்ட
‘பயல்கள்’ குறித்து…

ஹாஜா அலியின்
தேர்வில்/ பார்வையில்
பதியப்பட்ட அந்தக் கட்டுரைக்கு
அவர் உரிமை கொள்ளவில்லைதான்.
‘யாரோ’ என்றே குறிப்பிட்டிருந்தார்!
போறபோக்கில் நான்
அவரது நழுவல்களில்…
இதுவும் ஒன்றாக இருக்குமென
கருதிவிட்டேன்.

அவரது எழுத்தின்
சாயலும்/ லாவகமும்
கொஞ்சம் அறிந்தவன்.
அந்த எழுத்தும்
அப்படியோர் மயக்கம் தர
கொஞ்சம் மயங்கிவிட்டேன்.
அவரது கூச்சங்களும்
கணக்கில் கூடிக்கொள்ள
அவரே அதை எழுதியிக்கக் கூடுமென
நிறுவி விட்டேன்.

அவருடன்…
ஆண்டுகள் பழகிய
நட்பும்
அப்படியோர் முடிவுக்கு வித்திட்டுவிட்டது.

என் அனுமானம் வீழட்டும்.
‘பயல்கள்’ வழியேயான புகழ்
உரியோனுக்கே சேரட்டும்.
அதுவே மகிழ்ச்சி.

*

ரௌத்திரம் பழகச் சொன்ன
பாரதி நூற்றாண்டின்
புகழ்பாடிய
தமிழ்ப்பூக்கள் சிறப்பிதழ் – 1ல்
‘கோபமே நின் பொருள் என்ன?’ என்று
கட்டுரைக்குள் கேள்வி எழுப்பி இருந்தார்….
ஹாஜா அலி என்கிற
ராவுத்தன் ஹாஜா அலி!
காலம்: ஜனவரி – 1982
தமிழ்ப் பூக்கள்-5
பதிப்பு: சௌதி அரேபியா – ரஸ்தனூரா.

கோபமே நின் பொருள் என்ன? என்கிற
இந்தக் கட்டுரையின் வடிவம்…
‘பயல்கள்’ குறித்த சர்ச்சையை
மீண்டும் எழுப்புவதாக இருக்கிறது.
இதன்….
வார்த்தைகளும்
வாக்கியங்களும்
பயல்களின் மினுக்கிற்கு
கொஞ்சமும் குறைந்ததல்ல.

ஆபிதீன்…
நீங்கள் கணித்த மாதிரி
பயல்கள்….
ஹாஜா அலியினுடையதாக
இல்லாதிருக்கலாம்!
ஆனால்…
அத்தகையதோர் எழுத்து
அவரின் அருகாமையில்
இருந்ததென்பது நிஜம்!

எல்லா நிஜங்களையும்
எதிர் கொள்வதை விட்டும்
பாவி மனிதன்…
தப்பித்து விட்டாரே!  

*

கோபமே நின் பொருள் என்ன?
– ராவுத்தன் ஹாஜா அலி


என்னைச் சாடவேண்டாம். ப்ளீஸ்….
என் கோபத்தைச்சாடு – ஏனெனில்
நீ நிற்கவும் நான் இருக்கவும் விடா
இக் கோபத்தின் முன்
நாம் க்ஷணநேரப் பம்பரங்கள்.
ஒரு கோபத்தில்
கண் சிவக்கிறது
முகம் வெளுக்கிறது.
பிற நிகழ்ச்சிகள் யாவும் கறுக்கின்றன.

கோபம்தானே…
முட்டாளின் தூக்கு
புத்திமான் கவசம்.
ஆடிக் குதிக்கும்
ஓர் அவசரக்காரன் வாயினின்றும்
அது வார்த்தை வீழ்ச்சி.
மூடனின் கோபம் மூக்கில்
முனிவன் கோபம் சாபம்.
முதிர்ந்த வயதுக்கு…
முன் நிற்கும் அது!

ஒரு கோபத்தின் முன்னிலையில்
விளக்கங்கள் எல்லாமே மௌனம்.
விபரங்கள் அனைத்துமே ஊமை.
ஒவ்வோர் இதயத்துள்ளும்
கோபமே தூங்கும் புலி.
அதை இடறியவன் பாடே இடர்ப்பாடு.
சம்ஸாரம் துறந்த சன்யாசியும்
சங்கடம் பார்க்காமல்
கோபத்தை மட்டுமே
உடன் எடுத்துச் செல்கிறான்.

ஒரு கோபத்தில்தான்…
சூரியனும் உச்சிக்குப் போகிறான்.
அலைகளும் ஆள் உயரம் எழுகின்றன.
ஒரு கோபம் கண்டதும்
குழந்தைகள்கூட கப்சிப்.
வானத்தின் கோபமே இடி மின்னல்.
வருணனின் கோபமே புயல்.
வாயுவின் கோபம் சூறாவளி!

பருவம் கூட வருடத்தின் ஒருதரம்
மரத்தின் இலை உதிர்த்து
தன் கோபம் காட்டுகிறது.
பணமும் தன் கோபத்தாலேயே
பாதாளம் வரையிலும் பாய்கிறது.

பதிவிரதா கோபம்…
மதுரையை மட்டும் எரிக்குமெனில்
பசியின் கோபம் பத்தும் செய்யும்!
சில மலைகளும்..
மில்லியன் ஆண்டு கோபங்களையே
நெருப்பாகக் கக்குகின்றன.
சில மலர்களும் கோபத்தினாலேயே
வாசமற்று சிரிக்கின்றன!

மனிதர்களுள் கோபப்படாதவர்கள்
ஒன்று செத்துப்போய்விட்டார்கள்
அல்லது…
உயிரோடு பைத்தியமாய் அலைகிறார்கள்.
அன்றியும்…
உனக்கு கோபமே வராதெனில்
நீ வாழ்ந்து பார்க்கவில்லை.

ஒரு கூட்டைப் பிரித்தால்
குருவியும் கோபப்படும்.
வீட்டுப் பூனையும் விரட்டிப் பிடிக்கையில்
கோபத்துடன் திரும்பிப் பாயும்.
விதி மீது பழியிடாத..
அனைவரும் கோபக்காரர்களே

சிவன் கோபப்படவே
நெற்றிக்கண் வைத்துக் கொண்டான்.
கோபத்தின்போதுதான்
பரந்தாமன்
கௌரவர்கள் முன்
வானுக்கும் பூமிக்குமாக
எழுந்து நிற்க முடிந்தது.
ராகவன் ஒரு கோபத்தோடுதான்
ராவணனை மாய்க்க முடிந்தது.
ஒரு கோபத்தை வைத்தே
மைதி’லீ’ தீ புகத் துணிந்தாள்

நேச நாடுகள் கோபப்பட்ட பிறகே
ஹிட்லரும் தூங்கப் போனான்.
ஆரம்பத் தொழிலாளியின்
கோபம் வளர்ந்தே
‘மே’ தினம் கிடைத்தது.
ஒவ்வொரு காலனியும்
கோபத்திற்குப் பிறகே
சுதந்திரம் வாங்கிக் கொண்டன.

கோபத்தில் அழகு இருக்கிறது.
அது தாம்பத்யம் புரியும் ஊடல்.
கோபத்தில் வீரியம் இருக்கிறது.
அது காந்தி செய்த சத்யாகிரஹம்.
கோபம் நன்றாய் வேர்விட்ட பிறகே
புரட்சிப் பூக்கள் பூக்கின்றன.
கவிதைகள்கூட
கோபத்தின் நிறம் காட்டும்.
அல்லது….
கோபத்தின் வாசனை வீசும்.

முதல் கோபம்…
இறைவனிடமிருந்தே வந்தது.
தப்பாய் கனி தின்ற பெரியப்பனை
ஸ்வர்க்கத்தை விட்டும் நிர்வாணமாக்கியது.
பூமியில் பார்க்கத் தூக்கி வீசியது – நாளை…
நீ,  நான்,
நத்தை,  வண்ணத்துப் பூச்சி
அவள்,  அது,
கடல்,  கட்டிடம்,
மொழி,  நினைவு,
உணர்ச்சி,  உயிர்,
இன்னும் பெயரிடாத நட்சத்திரங்களும்
முடியப் போகிற நாடகமாய்
இறுதிக் கோபமும்
இறைவனிடமிருந்தே வரும்!

எப்படி எனில்…
கோபங்கள் புராணத்தில் நிகழ்ந்தன
பின் சரித்திரத்தில் படைத்தன
இன்றும் யதார்த்தத்தில் இருப்பன
மேலும் நவீனமாய் நுழைவன.

இடையில்…
நிஜக் கோபங்களாய் தீவிரவாதிகள் பரவ
காதலின் கண்களில் மட்டும்
பொய்க் கோபம் வாழும்.
ஆனால்….
எனக்கும் உனக்குமோ
ஓர் ஆழ அகலமும்
கன பரிமாணமுமற்ற
தானே அழியும் மழைக் காளான்களென
வெறுமனே உதவா
வீண் கோபங்களும்…
முன் கோபங்களும்…
ஏன் இப்படி….?
எதற்கு இப்படி….?

என்னைச் சாட வேண்டாம். பிளீஸ்….
என் கோபத்தைச் சாடு – ஏனெனில்
நீ நிற்கவும் நான் இருக்கவும் விடா
இக் கோபத்தின் முன்
நாம் க்ஷணநேரப் பம்பரங்கள்…
நம் கோபத்தில்
கண் சிவக்கிறது.
முகம் வெளுக்கிறது…. புற
நிகழ்ச்சிகள் யாவும்
கறுக்கின்றன.

***   ***

நன்றி :  தாஜ் ( தமிழ்ப்பூக்கள்)
E- Mail : satajdeen@gmail.com

பெண்களூரும் ‘பயல்கள்’ பற்றிய சந்தேகமும்

‘பெண்களூர்’ – எழுத்தாளர் ரவிச்சந்திரன் (1001வது சுஜாதா!) எழுதியது. அதில் சந்தேகமில்லை. ஆனால் அட்டகாசமான இந்தப் ‘பயல்கள்’ பற்றித்தான் சந்தேகம். நண்பர் தாஜ் , ‘பயல்கள்’ எழுதியது ஹாஜாஅலியாகத்தான் இருக்க முடியும் என்று 95% நம்புகிறார். நான் 5%தான் நம்புகிறேன். ஏனெனில் ‘பயல்கள்’ஐ நான் எப்போதோ படித்த ஞாபகம் – வேறு ஒரு எழுத்தாளரின் பெயரில். அது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையாகவும் இருந்த ஞாபகமும் கூட. ஹாஜாஅலி விதவிதமான புனைபெயர்களில் எழுதியிருக்கிற (‘சில சமயம் சம்ஸ்கிருதத்திலேயும் பெயர் வச்சுக்குவார்!’ – தாஜ்) காரணத்தாலேயே ‘பயல்கள்ஐயும் அவர்தான் எழுதியிருக்கக்கூடும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? அதுவும் , ஹாஜாவே ‘பயல்கள்’ எழுதியவரின் பெயரை குறிப்பிடாதிருந்தபோது என் சந்தேகம் அதிகமாகிறது. இன்னொருத்தர் ‘ஹக்’கை தனதாக ஏற்றுக்கொள்ள ஹாஜாஅலி விரும்ப மாட்டார் தாஜ். இன்னொருத்தருடையதுதானா? யாராவது சந்தேகம் தீருங்களேன் ப்ளீஸ்..

***

hajaliimage3

ஹாஜா அலி: நினைவுகளும் பதிவுகளும் – 3

தாஜ்

 

அன்புடன்..
ஆபிதீன்….
நினைவுகளும் பதிவுகளுமென
ஹாஜா அலியை
தொடர்ந்து நான் எழுப்பிக் கொண்டிருக்க
தட்டாது பதிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவர் உயிர் பெற்று எழுந்தால்…
என்னைவிட்டு
உங்களிடம்தான் நாணிக் கோணி
கைக் குலுக்குவார்!
என்னை…
தனியே அழைத்துப் போய்
தாஜ்….
“ஏன் இந்த வேலை?”யென
சிரிப்பார்.
அந்தச் சிரிப்புக்கு
பல அர்த்தம் இருக்கும்.
என்னைச் செல்லமாக
கடித்துக் கொண்டதையும் தாண்டி!  

உலகம் காசை நோக்கி
நாலுகால் பாய்ச்சலில்
பாய்ந்து கொண்டிருக்க….
நமது உலமும், தேடலும்
வேறாக இருப்பதில்
அலுக்கவே மாட்டேன் என்கிறதே ஆபிதீன்…
ஏன்?

இந்தப் பதிவில்
இரண்டு கட்டுரை பதிந்திருக்கிறேன்.
இரண்டும் ஹாஜா அலியின் தேர்வு.
தமிழ்ப் பூக்கள் இதழில் வெளிவந்தது.
காலம்: 1982

1. பயல்கள்
2. பெண்களூர்

பெண்களூர் / இரவிச்சந்திரன் /
குங்குமம் – 1980-ல் பிரசுரமானதுயென
தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஹாஜா அலி.
இரவிச்சந்திரன்…
கடந்த இருபது ஆண்டுகளாக
எழுத்தின் பக்கம் காணாமல்போன வசீகரம்!
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்
R.P.ராஜநாயஹம் ப்ளாக்கில்
இரவிச்சந்திரன் குறித்த
செய்திகள் காண
ஆவலாகப் படித்தேன்.
இரவிச்சந்திரன் காணவில்லை என்பதைதான்
அவரும் முத்தாய்ப்பாக எழுதியிருந்தார்.
பயல்கள் குறித்து…
இப்படித் தெளிவான குறிப்புகள் எதுவும் இல்லை.
‘யாரோ’ எழுதியதாக மட்டும்
குறிப்பிட்டவராக ஹாஜா அலி நகர்ந்து இருக்கிறார்.
அது ‘யாரோ’ எழுதியது அல்ல.
சுவைத்து சுவைத்து
வார்த்தைகளைக் கூட்டி எழுதப் பழகிய
ஹாஜா அலியின் எழுத்தே அது!!

இரண்டு வரி நேர்சீராய் எழுதி
அது பத்திரிகையில்
பிரசுரமும் ஆகிவிட்டால்…
‘நானும் என் எழுத்தும்’ என
அவனே அவனைக் குறித்து
புராணம் பாடத் தொடங்கும் காலத்தில்
தன் எழுத்தை வெளிக்காட்ட
அச்சப்படும்
ஹாஜா அலியை மாதிரி
இன்னொருவரைக் காண முடியாது.

தன் எழுத்தை
சொந்தம் கொண்டாட
அவர் இப்படி
பயப்படவும் காரணமுண்டு.

அவரது விரல் நுனியில்
எழுத்து பூத்து மணக்கிற தருணத்தில்
சௌதியில் பஞ்சம் பிழைக்கும்
பணியில் இருந்தார்.
ரொம்பவும் சாதாரண பணி.
பத்தோடு பதினொன்னு!
அவர் பணியெடுத்த
அமெரிக்கன் கேம்பில்
அவரையும் சேர்த்து சுமார்
முன்னூற்று சொச்சம்
தஞ்சை மாவட்டத்து ராவுத்தர்கள்.
அத்தனைப் பேர்களும்
கிட்டத்தட்ட
செக்குமாட்டுத் தனத்தை
சுவீகரித்தவர்கள்.
இவர்கள் யாரையும்
நிமிர்ந்து கூட
பார்க்கமாட்டார் ஹாஜா அலி!
பணி முடிந்த நேரத்தில்
கைலி சகிதமாய்
தொப்பியோடு திரியும் காட்டு ஜந்துக்கள்!
அதுமாதிரியே அவர்களும்!
அவர்களுக்கு ஹாஜா அலி
வினோதமான ஐந்து.

ஹாஜா அலியைப் பார்க்க
ஒரு தரம்…
அவரது கேம்பிற்கு போய் இருந்தபோது
என்னைவிட வயதில் மூத்த
ஓர் தஞ்சை மாவட்ட ராவுத்தர்
மெதுவாய் என்னிடம் வந்து…
தூர எனக்கு காப்பி கலக்கிக் கொண்டிருந்த
ஹாஜா அலியைக் காட்டி
“எப்படி இந்தப் பைத்தியத்தோடு
பழகுகிறீர்கள்?” என்றார்.
அப்படியான
சகஜங்கள் வளையவந்த
பணியிடத்தில்தான் அவர் காலம் கழித்தார்.
இன்னொரு விசயம்…
அந்த ராவுத்தர்
தொடர்ந்து அரை மணி நேரமாவது
என்னிடம் பேசி இருந்தால்….
ஹாஜா அலியிடமே போய்
“எப்படி இந்தப் பை……”
வியப்பை வெளிப்படுத்தி இருப்பார்!

அவரிடம் மொழி ஆளுமை
பூத்து, மணம் பரப்பி
‘என்னைக் கோர்த்து அழகுபாரேன்’
என்ற நாட்களில்
எப்போதேனும் ஏதேனும் எழுதுவார்.
அதை கணையாழிக்கோ/
போட்டிகள் வைக்கும் வாராந்திரிகளுக்கோ
அனுப்பியும் வைப்பார்.

ஒரு தரம்…
தகவல் குறிப்புகள் பகுதிக்கு
நாலுவரி எழுதினார்.
‘சௌதியில்
பிறமதத்தினர் பிராத்தனை செய்ய
ஆலயம் இல்லை!
அவர்கள் தங்களின் ஆன்மீக
கடனைக் கழிக்க என்ன செய்வார்கள்?’
– இதுதான் அவர் எழுதிய தகவல் குறிப்பின் சாரம்.
அந்த நான்குவரியைக் கண்டுக் கொண்ட
முன்னூற்று சொச்ச ராவுத்தர்களும்
ஹாஜா அலியை
உண்டு இல்லையென்று பண்ணிவிட்டார்கள்.
ஒரு துலுக்க ராஜ்ஜியத்தில்…
ஒரு துலுக்கன் கொள்கிற சிந்தனையா இது?
வெலவெலத்துப் போய்விட்டார் மனிதர்!

எழுதுவதை வெளிப்படுத்தவும்
அதில் தன் சொந்தப் பெயரை
போட்டுக் கொள்ளவுமே
தயக்கம் கொள்ளும் அவருக்கு
வலிய
இப்படியொரு சங்கடம்.
அதனால்தான் என்னமோ
தன் எழுத்தை
தன் எழுத்தென்று சொல்லிக் கொள்ளவே
நிரந்தரமாக பயந்தவரானார்.

ஆக…
பயல்கள்
ஹாஜா அலியின் எழுத்தே.
ஏதோ ஒரு வாராந்திரிக்கு
அவர் எழுதி வெளிவந்த கட்டுரையே அது.

ரெட்டைவால் ரெங்குடு
சுட்டிப் பயல்
குட்டீஸ் – என்றெல்லாம் நாம்
செல்லமாக அழைக்கும்
பயல்களை…..
ஹாஜா அலி
பார்த்திருக்கும் அழகு விசேசமானது.
கவிதையும்/
வார்த்தை மிடுக்கும் கொண்டது.
அதன் நடை நடையால் ஆனதல்ல!
பாய்ச்சல் தனம் கொண்டது!
ஒரு வார்த்தையில் இருந்து
இன்னொரு வார்த்தைக்கு தாவுகிறபோது
இடையில்…
இரண்டு மூன்று வரிகளே நழுவி விடுகிறது!

கொஞ்சம் அதிகமாகத்தான்
சொல்கிறேனோ என்னமோ!
சரியாகச் சொன்னால்…
வார்த்தைகளைச் சீவி/ கூர் மழுங்க தேய்த்து
லாவகமாகச் செப்பனிட்டு
கட்டுரையென
பளிங்குத் தரையில்
உருட்டிக் காண்பித்திருக்கிறார்.
அது தாண்டிக் குதித்து
உணர்வில் ‘கல கலா’ சப்தம்!

நான் பல முறை படித்த
இந்த ‘பயல்கள்’ அபூர்வத்தை
உங்கள் முன் வைப்பதில் மகிழ்வுண்டு.
இன்னொரு ‘குட்டி இளவரசன்’
நீங்களே சொல்லக் கூடும்!

தாஜ்
 
*
 
பயல்கள்

பயல்!
ஒரு ஆனந்தமான ஐந்து.
பயல்கள்…
பல சைஸ்களில் கிடைக்கிறார்கள்.
ஆனால்…
எல்லாப் பயல்களுக்கும்
ஒரே ஒரே குணம் பொது.
ஒவ்வொரு நாளின்
ஒவ்வொரு மணியின்
ஒவ்வொரு நிமிடத்தின்
ஒவ்வொரு வினாடியையும் அனுபவிப்பது.

நாளின் கடைசி நிமிடம் வந்ததும்
படுக்கப் போகும்படி
பெரியவர்கள் விரட்டும் போது
சப்தத்துடன்
ஆட்சேபம் செய்வது.
கத்தல்!
அதுதான் அவர்களின்
ஒரே ஆயுதம்.

பயல்கள் எங்கு பார்த்தாலும்
காணப்படுவார்கள்.
உயரத்திலே, அடியிலே
உள்ளுக்குள்ளே,
ஏறிக்கொண்டு,
தாவிக்கொண்டு,
ஓடிக்கொண்டு,
குதித்துக்கொண்டு….

பயல்களைத்
தாயார்கள் நேசிக்கிறார்கள்.
சின்னப் பெண்கள் வெறுக்கிறார்கள்.
அக்காக்களும் அண்ணன்களும்
பொறுத்துக் கொள்கிறார்கள்.
பெரியவர்கள்
அலட்சியப்படுத்துகிறார்கள்.
தெய்வங்கள் பாதுகாக்கிறார்கள்.

பயல் என்பவன்…
முகத்திலே
அழுக்குப்படிந்த சத்தியம்;
விரலிலே
காயம்பட்டுக் கொண்டிருக்கும் அழகு;
முடியிலே
சர்க்கரை பிசுபிசுக்கும் அறிவு;
பையிலே
தவளை வைத்துக் கொண்டிருக்கும்
நம்பிக்கை நட்சத்திரம்.

பயல்,
பல பொருட்களின் கதம்பம்.
குதிரையின் பசி,
கத்தி விழுங்குகிறவனின்
ஜீரண சக்தி,
பாக்கெட் சைஸ்
அணுகுண்டின் வீரியம்,
பூனையின் துறுதுறுப்பு,
சர்வாதிகாரியின் சுவாசப்பை,
கனகாம்பரத்தின் கூச்சம்,
இரும்புப் பொறியின் திமிர்,
மாதா கோவில்
மெழுகுவத்தியின் உற்சாகம்
இவ்வளவும் சேர்ந்த பயல்,
ஒரு வேலையில்
முழுமூச்சாய் இறங்கும் போது
அவனுக்கு ஒவ்வொரு கையிலும்
ஐந்து பெருவிரல் முளைக்கிறது.

பயலுக்குப் பிடித்தமானது…
ஐஸ்கிரீம், கத்தி, வாள்,
காமிக் புத்தகம்,
அடுத்த தெரு பையன்,
கட்டை, தண்ணீர்,
பெரிய சைஸ் பிராணிகள், அப்பா,
ரயில்,
தீயணைப்பு இஞ்சின்.

பயலுக்குப் பிடிக்காதது…
கையைப் பிடித்துக் கொண்டு கூட வருவது,
தினம் தினம் ஸ்கூல்,
படமில்லாத புத்தகம்,
சங்கீதப் பாடம்,
வெள்ளைச் சட்டை,
சலூன், சிறுமிகள்,
பெரியவர்கள், பாடுகிற நேரம்.

பயலைப் போல் சீக்கிரமாய்
எழுந்துக் கொள்கிறவர்களும் கிடையாது
லேட்டாய்
சாப்பிட வருகிறவர்களும் கிடையாது.
மரங்களையும், நாய்களையும்,
காற்றின் அசைவுகளையும்
அவனைப் போல்
ரசிக்கிறவர்களும் கிடையாது.

ஒரு துருப்பிடித்த கத்தி,
பாதி சாப்பிட்ட ஆப்பிள்,
மூன்றடி நீள நூல்,
இரண்டு பபுள்கம்,
மூன்று ஒரு பைசாக் காசு,
ஒரு கவண்கல், இன்னதென்று
கண்டுபிடிக்க முடியாத
ஏதோவொரு கட்டி,
ரகசிய அறைகளும்
ரகசிய எண்களும் கொண்ட
சூபர்ஸானிக் மோதிரம் – இவ்வளவையும்
அவனைப் போல
ஒரே ஒரு சட்டைப் பைக்குள்
திணித்துக் கொள்ள
யாராலும் முடியாது!

பயல்,
மாயாஜால சக்தி கொண்டவன்.
அவனை நீங்கள்
சமையல் அறையிலிருந்து
விரட்டி வெளியேற்றலாம்…
இதயத்திலிருந்து
விரட்டி வெளியேற்ற முடியாது.
அவனை நீங்கள்
முன்னறையிலிருந்து துரத்தலாம்
மனசிலிருந்து துரத்த முடியாது.
சரணாகதி செய்வதே மேல்.

பயல்,
உங்களை வெல்கிறவன்.
உங்கள் சிறை அதிகாரி.
உங்கள் எஜமான்.
உங்கள் குரு.
பூனையைத் துரத்தும்
ஆழாக்கு சைஸ்
சத்த மூட்டை!

இருந்தாலும்,
ஒரு நாளின்
பொழுதெல்லாம் கழித்து,
உங்கள் எதிர்பார்ப்புகளும்
கனவுகளும்
துண்டு
துண்டாக
சிதறிச் சோர்வுடன்
வீடு திரும்பும்போது
பயல்…
ஜிவ்வென்று உங்களைக்
குஷிப்படுத்தி விடுவான்!
இரண்டே இரண்டு
மந்திர வார்த்தைகள் மூலம்!!
‘ஹை அப்பா….’

***

பெண்களூர்!
இரவிச்சந்திரன்

பெங்களூரின் விசேஷமே பெண்கள்.
ஏரியாவிற்கு ஏரியா
இந்த ஜெண்ட’ரின்’ வடிவம்
வேறுபடுகிறது.

குடகுப் பெண்கள்
மகா சோஷியல்.
உடம்பு அற்புதமாக இருந்தாலும்
முகத்தில் நந்தித்தனம்,
ஓடிப்பிடித்தே விளையாடலாம்.

மல்லேஸ்வரத்தில்
மாமிகள் அதிகம்.
முக்காடு குறையாக
முழுக்கப் போர்த்தி இருந்தாலும்
வனப்பு தெரிகிறது
நேர்த்தியான புடவையில்.

தாவணி என்பது
வசீகர உடை.
நான் சர்வாதிகாரி ஆனால்
“தாவணியே தேசிய உடை.”

மகத்துவம் அறியாத
கன்னடக்கிளிகள்
பெட்டிகோட் – ஜம்பரில் இருந்து
சொய்யாவென்று
புடவைக்குள் புகுந்துவிடுகிறார்கள்.

மவுண்ட்கார்மல் –
மஹாராணி ஊர்வசிகள்
என்ன கண்டிஷன் போட்டாலும்
கல்யாணம் செய்துகொள்ள
ரெட்டை ரெடி!

தியேட்டர்களில்
பெண்களுக்கு உடன் டிக்கட்?
அந்த பிசினஸே இங்கில்லை.
வாடி க்யூவில்.
லேடீஸ் சீட்டில்
ஒற்றைக்கன்னி இருந்தால்
ஜோராய்
தொடை ஸ்பரிசிக்க உட்காரலாமே.
பத்தினித்தனத்தைக் காட்ட
பஸ்ஸைத்
தேர்ந்து எடுக்கிற
மதராஸ்தனம் இங்கில்லை.

சிக்பெட்டில் நுழைந்ததும்
“சூடா ஆந்திரா,
கேரளா, தமிழ்நாடு” என்று
விபசாரத்திற்கு ஏக உபசாரம்.

செகண்ட் ஷோ முடிந்து
திரும்புகிற கும்பலில்
HouseWives என்கிற
தனிவர்க்கம். ஹ!
என்ன அழகான
யாரோ மனைவிகள்.
‘மாற்றான் மனைவியை
ரசிப்பதில் பரமசுகம் இருக்கிறது’
என்றெழுதிய
தி.ஜானகிராமன் ஞானி.

சகல மனித ஜாதிகளும்
தென்படுவது ப்ரிகேட் ரோடில்.
அனாடமி செய்ய
வாகாய்க் குறைந்த துணி.
ஏராள முதுகு.
பாளமாய் இடுப்பு.
தாராள மார்புகளில்
இளமை ஊஞ்சலாடுகிறது;
பிரேசியர் மைனஸ்.

ஆயிரம் பெண்கள்
அரை விடியலில்
விட்ட தொட்ட குறை
மேக்கப்பில்
விரைவது ஃபாக்டரிக்கு.
அவர்களிடம் இருக்கிற
சொந்தக் கதையோ
மஹா சோகக் கதை.

தனித் தமிழிலில் விளையாடும்
அல்சூர்ப் பெண்களைத்
தத்தம் தாய்மார்கள்
பொத்தி வளர்க்கிறார்கள்.

செலவு செய்ய தயார் எனில்
கேர்ள் ஃபிரெண்ட்ஸ்
கிடைக்கிற நகரம்.

கமர்ஷியல் தெருவில்
போவது ஆணா, பெண்ணா?
தடவினால் ஒழியத்
தெரியாது.

ஜெயநகர் வசதிப் பெண்கள்
புஷ்பவதி ஆனதுமே
புருஷன் கிடைத்துப்
போய்விடுகிறார்கள்.

கண்டீரவா ஸ்டேடியம்;
ஆலிலை அடிவயிற்றுப் பெண்கள்
ஐஸோமேட்ரிக்
பயிற்சி செய்து
உடலைச் சுடச்சுட
வைத்திருக்கிறார்கள்.

மான் ஜாதி, மயில் ஜாதி,
குதிரை & பத்மினி ஜாதி என்று
சூத்திரம் வகுத்த
வாத்ஸ்யாயன் புண்ணியவான்
பெங்களூர் வந்தால்…
ஆயிரம் உண்டிங்கு
பெண் ஜாதி என்று
மாற்றி எழுதிவிட்டு
ஓடியே போய்விடுவான்.

– இரவிச்சந்திரன் / குங்குமம் – 1980

***

தொகுப்பும் / தட்டச்சும்:  தாஜ் ( தமிழ்ப்பூக்கள்)

E- Mail : satajdeen@gmail.com

***
ஒரு சுட்டி : சுரேஷ் கண்ணனின் பதிவில் இரவிச்சந்திரன் சிறுகதை (சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே)

« Older entries