அம்மாசி – வலம்புரி ஜான்
குடிமகன் (நாவிதன்) கிழக்கே கல்லறைத் தோட்டம் முதற்கொண்டு மேற்கே முள்ளிக்கரை வரை டமாரம் அடித்துவிட்டான். நாளை மாலை ஐந்து மணிக்கு ஊர்க் கூட்டம். பள்ளி மாணவர்கள் கழிவறைகளில் படம் வரைவது போல சிலவேளைகளில் தங்கள் பெயர்கள் சக மாணவிகளோடு எழுதப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போகிறவர்களும் உண்டு. அதைக்கண்டு குதூகலம் அடைகிறவர்களும் உண்டு. அந்த ஊரில் இந்த பெயர் எழுதும் விவகாரத்தில் சின்னதான அடிதடி முதல் கொஞ்சம் பெரிதான கலவரம் வரை வந்திருக்கிறது.
இப்போது முதல் முறையாக அந்த ஊர் பங்குத் தந்தை பிரான்சிஸை ஒரு கன்னியாஸ்திரியோடு இணைத்து சுவர்களில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலானாவர்கள் என்ன இருந்தாலும் ஒரு சாமியாரை ஒரு கன்னியாஸ்திரியோடு இணைத்து எழுதியதை விரும்பவில்லை. நாளைய ஊர்க் கூட்டத்தில் எல்லாம் முடிவாகிப் போகும். ஜோசப்பின் என்ற இந்த கன்னியாஸ்திரிதான் முதன் முறையாக அந்த ஊருக்கு வந்த டாக்டர் கன்னியாஸ்திரி. அடிக்கடி அவர்களை அழைத்து தனது தீராத ஒரு நோய் பற்றி கூறிக்கொண்டு இருப்பார் சாமியார். பக்கத்து ஊர்களில் ஆண் டாக்டர்கள் இருக்கிறபோது இவர் ஏன் எப்போது பார்த்தாலும் படுக்கையில் கழிந்து போகிற வெள்ளை வேர்வை பற்றி, டாக்டராக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் பேசுகிறார் என்று ஸிஸ்டர் ஜோசப்பினுக்கு விளங்கவில்லை.
சாமியாரையும் கன்னியாஸ்திரியையும் இணைத்து எழுதியதே அம்மாசிதான் என்பதில் சாமியார் உறுதியாக இருந்தார்.
ஒருநாள் வாலிபர் கூட்டத்தில் அசிஸ்ட பண்டம் (புனிதப்பொருள்) என்றால் என்ன என்று அம்மாசி சாமியாரைக் கேட்டான். புனிதர்கள் பயன்படுத்துவது அச்சிஸ்ட பண்டம் என்று சாமியார் சொன்னார். உடனே அம்மாசி போப் அச்சிஸ்டவரா என்று கேட்டான். சாமியார் ஆம் என்றார். அப்படி என்றால் அவர் மூத்திரத்தைப் பிடித்து அச்சிஸ்ட பண்டம் என்று ஊருக்கு ஊர் விற்பனை செய்யலாமா? என்று அம்மாசி கேட்டதும் எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.
வேறு ஒரு நாள் ஞான உபதேச வகுப்பில் சாமியார் பாவிகள் எல்லாம் நரகத்த்துக்குப் போவார்கள், அங்கே சாத்தான்கள் ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றுவர் என்றார்.
உடனே அம்மாசி நமது ஊரில் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் தருகிறார்கள், நரகத்துக்குப் போனால் எளிதாக வியாபாரம் நடக்குமே என்று கேட்டான். வேறு சில கேள்விகளும் கேட்டான். அவைகள் எழுதுகிற மதிரி இல்லை.
இது மாதிரி நினைவுகளை சாமியார் அசைபோட்டுக்கொண்டிருந்தார். கூட்டம் தொடங்கியது. பங்கு குருவானவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து இருந்தார்கள். நல்லவேளை கன்னியாஸ்திரியை அழைக்கவில்லை. அம்மாசி நின்று கொண்டு இருந்தான். கூட்டம் கலவரத்தில் முடியுமோ என்ற அச்சம் இருந்தது. ஏன் என்றால் அம்மாசிக்கு தாய்மாமன்களே பத்து பேர் இருந்தார்கள். என்ன இருந்தாலும் சாமியாரை கன்னியாஸ்திரியோடு இணைத்து சுவரில் எழுதியிருக்கக்கூடாது என்று வருத்தப்பட்டார்.
முதலாவதாக உபதேசியார் எழுந்தார். சாமியாருக்குக் திக் என்றது. உபதேசியார் நன்றாகக் குடித்துவிட்டு வந்திருந்தார். தலைகிறங்க குடித்து வந்தாலும் நிதானத்தை இழகாத நீதிமானவர்.
“முந்தாநாள் இரவு உங்களுக்கு எத்தனை பெண் குழந்தைகள் என்று சாமியார் என்னைக் கேட்டார். அதுகளுக்குக் திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு என்றார். பத்து பைசா தருமம் செய்ய பத்து நாள் யோசிக்கிற சாமியாருக்கு என் மேல் திடீர் அக்கறை எதற்காக, கொஞ்சம் சிந்திக்கனும்.
‘மே தினம் கொண்டாடுறீங்க, போப்பாண்டவர் பதிமூன்றாம் சிங்கராயரின் தொழிலாளர் சாசனம் பற்றி எல்லாம் பேசுறீங்க, ஆனா பதினைந்து வருஷமா எனக்கு மாதம் ஆயிரம்தான் சம்பளம் தரீங்க’ன்னு கேட்டேன். அதுக்கு சாமியார், ‘அடுத்த மாச்த்திலிருந்து உனக்கு மூனாயிரம் சம்பளம்’ என்றார். என் மீது இந்த திடீர் அக்கறை எதற்காக? கொஞ்சம் சிந்திக்கனும்.
முந்தாநாள் இராத்திரி சாமியார் பெயரையும் கன்னியாஸ்திரி பெயரையும் எழுதிட்டாங்க. சாமியார் அம்மாசியை குற்றம் சொல்றாரு. அவனுக்கு எழுதவே தெரியாது. இத சொன்னா அவன் வேறு ஆள வெச்சு எழுதிட்டான்னு சாமியார் சொல்லலாம். அந்த ஆள் யாருன்னுதான் கேள்வி. கொஞ்சம் சிந்திக்கனும்.
நேற்று காலையிலேயே ஆளுக சுவத்துல எழுதியிருந்தை பாத்துட்டாங்க. இத உடனே அழிக்கிறதுதானே சரி. ஏன் சாமியாரு அழிக்க மாட்டங்காரு. கொஞ்சம் சிந்திக்கனும்.
‘சாய்ங்காலம் கூட்டத்துக்கு வராதே, வெளியூர் போய்டு’ன்னு சொல்லி எனக்கு முன்னூறு ரூபாய் கொடுத்தாரு ஊர்ல கொலை பாதகம் நடந்துரக் கூடாது என்றதுக்காக நான் வெளியூர் போகல. நான் எதுக்காக வெளியூர் போகணும். கொஞ்சம் சிந்திக்கனும்.
கடந்த பத்து வருசமா எனக்கு ராத்தி தூக்கம் கிடையாது. ராத்தி முழுவதும் ஊரை சுத்திகிட்டு இருப்பேன். இவுங்க எல்லாருக்கும் தெரியும். கொஞ்சம் சிந்திக்கணும். நான் நல்லததான் சொல்றேன். இதுக்கு மேல சொன்னால் நல்லா இருக்காது. கொஞ்சம் சிந்திக்கனும்.”
கூட்டத்தில் சர்வ நிசப்தம் நிலவியது. கூட்டத்தில் குடித்திருந்த ஒருவன் அப்போது எழுந்து “அப்ப உபதேசியாரே, சாமியாரே அவர் பேரையும் கன்னியாஸ்திரி பேரையும் எழுதிட்டாரா”ன்னு கேட்டான். பதில் சொல்லாத உபதேசியார் கள்ளுக்கடைக்கு விரைந்து கொண்டிருந்தார். பதிலேதும் பேசாத சாமியார் வியர்க்க விருவிருக்க கோவிலுக்குப் போனார்.
மறுநாள் காலை அந்த சாமியாரின் வீட்டுச் சுவர் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.
சாமியார் பெட்டி படுக்கைகளோடு ஜீப் ஒன்றில் தூத்துக்குடி பயணமாகிக் கொண்டிருந்தார். அந்தப் பங்கின் நூற்றி ஐம்பது வருட வரலாற்றில் சாமியாரே இல்லாமல், அந்த விசுவாசிகள் ஆராதனையைத் தொடங்கினார்கள்.
இதுவெல்லாம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன. அந்த பங்கிற்கு சாமியார் இப்போது இல்லை. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஊர் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.
*
நன்றி புதிய கோடாங்கி இதழ் (ஆகஸ்ட் 2004)