லா.ச.ரா.வுக்கும் சுஜாதாவைப் பிடிக்கும்!

சொல்பவர் நம்ம ஹனீபாக்கா.  அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙂

***

தம்பி ஆபிதீன்,

நேற்று சும்மா இருந்தாப்ல கணையாழிக் கட்டொன்றை எடுத்துப் புரட்டினேன். 1966 தொடக்கம் 70 வரையுமான தொகுப்புகள். உள்ளே சுஜாதா அவர்களின் கடைசிப் பக்கக் குறிப்புகளில் சிலது என் கண்களில் பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தன. தமிழ் எழுத்துலகில் நுட்பமாக அவதானித்து படிமமாக வெளிக்கொண்டு வருவதில் அவருக்கு நிகராக யாரைச் சொல்ல முடியுமோ நானறியேன். லா.ச.ராவைச் சந்தித்த நேரம் அவரின் மேசையில் சுஜாதாவின் நைலோன் கயிறு நாவல் கிடந்தது. நான் கண்ணைக் காட்டி வியந்த போது, சுஜாதாவின் நடை எனக்குப் பிடிக்குமென்றார். இதோ அவர் எழுதிய நான்கு பத்திகள். – எஸ்.எல்.எம்,ஹனீபா

sujatha-kanayali3

ஆகாசவாணி

ஆகாசவாணி பற்றி சென்ற இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதராஸ் நிலையத்தில் சங்கீதக் கச்சேரி எனக்கு மிகவும் பயம். நல்ல ச, கச்சேரியாக இருக்கும். மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். பட்டென்று மென்னியை நெரித்து “இதுவரை பாடினார்கள். இனி மாட்டுத் தீவனத்தைப் பற்றி அகில பாரத உரை நிகழ்ச்சியில் விவசாய அதிகாரி ஒருத்தர் பேசுவார்” என்பார்கள். பேச்சு என்றால் என்ன? சரசரசர என்று பேப்பர் புரட்டும் சப்தம்… இரைக்க இரைக்க பதினைந்து நிமிஷ விஷயத்தைப் பத்தே முக்கால் நிமிஷத்தில் படித்து முடிப்பார். அதற்கப்புறம் நிலைய வித்வான் நொந்து போய் ஸாக்ஸபோன் வாசிப்பார்.

ஆகாசவாணியின் வெளிநாட்டுக்கான காலைத் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி:-

“ஆகாசவாணி” ‘சலம்’ – நாடகம்… இதை எழுதியவர் ஆர்.ஜி. கோவிந்தன்… இதில் நடிப்பவர்கள் ஆர்.ஜி. கோவிந்தன், ஆர்.ஜி. ஜனஜகுமாரி, ஆர்.ஜி. உஷா, தயாரிப்பு ஆர்.ஜி.ஜி. விந்தன்… “இதுவரை சலம் நாடகம் கேட்டீர்கள். நடித்தவர்கள் ஆர்.ஜி…” அறிவிப்பாளர் யார் என்கிறீர்கள்? ஆர்.ஜி. கோவிந்தனே!

ஈப்போவிலிருந்து இந்த நிகழ்ச்சிகளைத் தினம் தவறாமல் 3 வருஷம் கேட்டு வந்த நைனார் முகம்மது என்கிற கடல் கடந்த தமிழர் ஒருவர் தற்போது பேப்பர் துணி கிழிக்கிறார் என்று கேள்வி.

பெப்ரவரி 1966

**

ஒரு டெலிபோன் சம்பாஷணை

“ஹலோ”
“ஹலோ”
“யார் பேசுறது?”
“நான்தான்”
“நான்தான்னா யார்?”
“நான்தான் ரேவதி”
“ரேவதி! அப்பா இல்லையா?”
“இல்லை”
“அம்மா?”
“இல்லை”
“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா?!”
“யாரு?”
“ராமன், எழுதிக்கோ ரா-ம-ன்”
“ரா எப்படி எழுதுவது?”
“சரிதான்! பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா?”
“சேகர் இருக்கான்”
“சரி சேகரைக் கூப்பிடு”
“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.

**

அச்சுப்பிழைகள்

அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. சம்போ கந்தா என்பதை சம்போகந் தா என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டு கொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டு கொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது.

நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதிலுள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் என்னை மன்னிக்கவும். அவர்கள் தொழிலிலுள்ள கடினத்தை நான் அறிவேன்.

**

என்ன செய்கிறாய்?

லேய்ட்ம்டன் என்கிற கனடா தேசத்துக் கவிஞரை அறிமுகப்படுத்துகிறேன்:-
“பதினான்கு வருஷ
மண வாழ்க்கையில் நான் ஒரு தடவை
கூட
என் மனைவிக்குத் துரோகம் நினைத்ததில்லை.
நீ, நான் கேள்விப்பட்டேன், இன்னும்
கன்னி என்று.
உனக்குச் சம்மதமானால்
உன் கன்னிமையையும்
அபூர்வமான என் கற்பையும் பண்ட
மாற்றிக் கொள்ளலாம்,
நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்துக்குள்
என்ன செய்கிறாய்

ஏப்ரல் 1970

***

நன்றி : ஹனீபாக்கா (E-Mail : slmhanifa22@gmail.com)

லா.ச.ரா. : ‘என்னைப் பற்றி என்னைவிட அதிகம் அறிந்தவர் அபி’

கவிஞர் அபியின் நேர்காணலிலிருந்து… (தீராநதி – ஆகஸ்ட் 2009).

***

தீராநதி : லா.ச.ரா. படைப்புகள் குறித்து முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தீர்கள். கவிஞரான நீங்கள் வசனப் படைப்பாளியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதன் காரணம் என்ன? அவரோடு நீங்கள் நெருங்கிப் பழகியிருப்பீர்கள். அவரைப் பற்றியும் சொல்லுங்கள்.

கவிஞர் அபி: பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரை என் ஆய்வுத் தலைப்பு தொடர்பாகச் சந்தித்தேன். அவர் என் விருப்பத்தைக் கேட்டார். ‘லா.ச.ரா. படைப்புகள்’ என்று சொன்னேன். ‘வேண்டாம் அது புரியாது, வேறு தலைப்பு சொல்லுங்கள்’ என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பக்கத்திலிருந்த என் நண்பர் பாலசுந்தரம் , ‘இவர் லா.ச.ரா.வை உன்னிப்பாகப் படித்து வைத்திருக்கிறார்’ என்றார். பல்கலைக்கழகத் தமிழுக்கு இலக்கியத் தமிழின் மீதிருந்த அறியாமை – அக்கறையின்மை வருத்தம் தந்தது. ‘புரியாது’ என்று பேராசிரியர் சொன்னதில் தொடங்கி ‘என்னைப் பற்றி என்னைவிட அதிகம் அறிந்தவர் அபி, அவரளவுக்கு ஆழம் என்னால் போக முடியாது’ என்று லா.ச.ரா. என்னைக் குறித்து வேறொருவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுவரை  எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். வாசகன் மீது நம்பிக்கை வைப்பவர் லா.ச.ரா. நேர்ப்பழக்கத்தில் லா.ச.ரா. மிகவும் இனியவர். முதல் தொடர்பிலேயே உடனடி நெருக்கத்துக்கு வந்து விடுவார். அவருடைய துணைவியாரும் பிள்ளைகளும் என்னைத் தங்கள் குடும்ப உறுப்பினன் போலவே நடத்தினார்கள். பல வருஷ இடைவெளிக்குப் பின் 90 வயதை அவர் தாண்டியபோது பார்க்கப் போனேன். அவரைப் பொறுத்தவரை விடுபட்ட இடைவெளி குறித்த பிரக்ஞையே இல்லை. எங்கள் தொடர்பு குறித்து என் நினைவில் இல்லாததுகூட அவர் நினைவில் இருந்தது. பிறப்பதும் இறப்பதும் வேறுவேறல்ல என்று அவர் நம்பி வந்ததற்கு ஏற்றார்போல , அவரது மரணம் சரியாக அவரது பிறந்த நாளிலேயே நேர்ந்தது. எப்போதோ எழுதிய என் கவிதையொன்றில் வரும் சில வரிகள் இந்தச் சந்தர்ப்பத்தில் லா.ச.ரா.வுக்கு அதிசயமாகப் பொருந்துகின்றன.

LAA-SA-RAA-Andhimazhai

‘முதலும் முடிவும் மூச்சொன்றிக்
கூம்பிச் சேர்ந்த அம்பு நுனியில்
தேம்பி அடங்குகிறது
தேடல்’

கவிதை தன் இருப்பிலேயே நிலைத்து வருவதில்லை. அது சைகையாகி உலவிக் கொண்டிருக்கும், எதையதையோ தொட்டுத் திறக்கும் என்று நான் சொன்னதற்கு இதுவும் ஒரு உதாரணம். அதற்கப்புறம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் துணைவியார் கண்ணில் நீருடன் சொன்னார். மரணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு ‘நான் போய்விடுவேன். அதற்காக நகை, பட்டுப்புடவை, குங்குமம் எதையும் நீ துறந்துவிடக்கூடாது’ என்றாராம் லா.ச.ரா. எழுத்தைத் தாண்டிப் பார்க்க லா.ச.ரா. பின்னும் மேலானவர்.

தீராநதி : லா.ச.ரா. எழுத்துக்களை எப்போது படிக்கத் தொடங்கினீர்கள்?

கவிஞர் அபி: முதலில் நான் படித்த லா.ச.ரா. புத்தகம் ‘இதழ்கள்’ தொகுப்பு. மாணவ நிலையில் நான் அவரைப் படித்ததில்லை. ஆசிரியப் பருவத்தின் முதல் ஆண்டில் என் மாணவ , வாசக நண்பர் சீனிவாசன் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து தந்தார். அதற்கப்புறம் அவர் படைப்புகளைத் தேடித்தேடிப் படித்தேன். எல்லா வாசகர்களையும் போல நான் முதலில் மயங்கியது அவரது கவித்துவத்தில்தான். ‘கவிதை எனக்குப் பிடிக்காது, ஓரளவுக்கு மட்டும் பாரதி பிடிக்கும்’ என்றார் லா.ச.ரா. ஒருமுறை. அவர் கவிதை வாசகர் இல்லை என்று எனக்குத் தெரிந்தது. அவர் எழுத்தில் கவிதை இருக்கிறது என்று பலரும் சொல்லக்கேட்டு ஆச்சரியமடைந்திருக்கிறார். அந்திவான அழகில் சொக்கி ‘உமை கவிதை செய்கின்றாள்’ என்று பாரதி சொன்ன மாதிரி, லா.ச.ரா. குன்றின் மீது தவழும் மேகப் பொதிகளைப் பார்த்து, ‘அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்து கொண்டிருக்கின்றன’ என்று எழுதியிருக்கிறார். கவிதை பிடிக்காது என்றாலும் ‘கவிதை’ என்பதிலேயே ஒரு மயக்கம் இருந்திருக்கிறது. அதனால் எழுத்து அல்லாத வகைகளில் உள்ள கவிதையை அவரால் பார்க்க முடிந்திருக்கிறது. அவர் நடையில் கவிதை இருக்கிறது. சிந்தனைப் பாங்கிலும் அவரிடம் கவிதை இருக்கிறது. மொழியில் சோதனை செய்து வெற்று பெறுகிற எந்தக் கலைஞனும் கவிஞனே. நான் மட்டுமல்ல. பல கவிஞர்கள் லா.ச.ரா.வின் கவித்துவத்தின்மீது ஈர்ப்புடையவர்களாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

***

நன்றி : கவிஞர் அபி, தீராநதி

***

சுட்டிகள்:

லா.ச.ரா. – விக்கிபீடியா

கவிஞர் அபி நேர்காணல் (சமரசம் – ஜனவரி 2000)