“மறக்காமலிருந்தா அடிபடுவே!” – மா. அரங்கநாதன்

‘ஞானக்கூத்து’ நூலிலுள்ள ‘முதற்தீ எரிந்த காடு’ சிறுகதையில் இந்த உரையாடல் வருகிறது. வைத்தீஸ்வரன்கோயில் நண்பர் சாதிக்கிற்கு ரொம்பப் பிடித்தது. இந்தப் பத்திக்கு முன்பாக ‘அந்தக் கடவுளைக் கும்பிடாதே என்னைக் கும்பிடு அப்படின்னு ஒரு கடவுள் சொல்லும். கடவுளுக்கிருக்கிற கவலை அப்படி’ என்றொரு வரி – முத்துக்கறுப்பன் சொல்வதாக – வருமே என்றேன் ஞாபகமாக. ஆமாம்நாநா என்றார். பகிர்கிறேன். – AB

*

“சார் – ஒரு கருத்தரங்கத்திலே நண்பரொருவர் கேட்டார் – ரொம்ப நல்லாயிருந்தது. ஆபாசம் – ஆபாசம்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே, கடவுளை விட எது ஆபாசம்? அப்படின்னு.”

“ஐயையோ.”

“அது கேள்வியில்லை சார் – பதிலுக்குப் பதில் – நினைச்சுப்பாருங்க – இந்த இடத்தையே பாருங்க. இதெல்லாம் இத்தனை குடியிருப்புக் கொண்டதாகவா இருந்திருக்கும். எல்லாம் வயல்களுக்கு மத்தியிலேயிருக்கும் பத்து பதினைஞ்சு குடியிருப்பாத்தானே இருந்திருக்கும். அதுக்கு முன்னாலே இங்கே எத்தனை எத்தனை மிருகங்களை விரட்டியிருக்கணும் – எத்தனை தடவை அதுக எல்லாம் இடத்தை மறக்காம வந்து திரும்ப திரும்ப சுத்தியிருக்கணும். அதுகளின் பொந்தும் புதரும் எத்தனை தீயில் பொசுங்கிப் போயிருக்கும். அதுக திரும்பவும் இங்க வந்தா விரட்டலாம். அல்லது வரக்கூடிய நேரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு தீயைக் கொளுத்தி மேளத்தைக் கொட்டி பயமுறுத்தலாம். அதெல்லாம் செய்து மறந்தும் போச்சு – மேளம் கொட்டற நேரத்தை மட்டும் மறக்காம கொட்டறோம். மிருகங்கள் இல்லே இப்போ – எல்லாம் மாறிப் போச்சு – மறந்து போச்சு – இன்னொண்ணு – மறக்காமலிருந்தா அடிபடுவே அப்படின்னு சொன்னான் ஒருத்தன் – அவன் பலசாலி. மத்தவங்க பணிஞ்சாகணும் – இனிமே தீயை வயல் வெளிலே மூட்ட வேண்டாம் நிரந்தரமா என்னுடைய இடத்திலேயே வைச்சுடலாம் – நீங்க வந்து கும்பிடலாம் அப்படிண்ணும் சொன்னான் – நல்லதுதானே – கும்பிடு போட்டுக்கிட்டேயிருந்தா நெல் விளையாது – வேலை நடக்கணும் – பயிர் உண்டாகணும் – வேலையைப் பாருங்க அப்படின்னான். இந்த இடம் அப்படி உண்டாச்சுது மிருகங்களும் இந்த இடத்தில் குறைஞ்சு போச்சு. சிலது வேறே இடத்துக்கு ஓடிப் போச்சு. அங்கேயும் தீ இருக்கும் – நேரத்திற்கு மேளம் கேட்கும் – இந்த மாதிரி இடமும் உண்டாகும்.”

*
நன்றி : http://www.maaranganathan.com/

அம்மரம் இம்மரம் – கம்பாரின் கவிதை

ஞானபீட விருது பெற்ற கன்னடப் பேராசிரியர் சந்திரசேகர கம்பார் எழுதிய இந்தக் கவிதை , கணையாழியில் (oct’2011) வெளியாகி இருந்தது. தமிழாக்கம் : கே. மலர்விழி. கம்பார் பற்றி ‘தமிழ்ச்சூழலிலிருந்து ஒரு பார்வை’ பார்த்த தமிழவனின் கட்டுரையை விரைவில் இணைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். கவிதையைப் பார்க்குமுன் , ‘சிற்றிதழ்களில் வருகின்ற கவிதைகள் மாணவர்களுக்குப் புரியல்ல, இதை நாங்க எப்படி கவிதைன்னு ஏத்துக்கிறதுன்னு அவங்க கேக்கிறாங்களே..’ என்ற கேள்விக்கு மா. அரங்கநாதன் அவர்கள் சொன்னதைப் பார்ப்போம் (இவரது தீராநதி நேர்காணலை நம் ஹனீபாக்கா தன் முகநூலில் போட்டிருந்தார்) :

‘வாஸ்தவம்தான்.  எனக்குப் புரியக்கூடிய ஒண்ணு என் பேரனுக்குப் புரியாமல் இருக்கும். என் மகனுக்குப் புரியாமலிருக்கும். என் அப்பாவுக்குப் புரிஞ்ச ஒண்ணு எனக்குப் புரியாமலிருக்கும். இப்படி எல்லோருக்கும் புரியும்படியா எழுதணும்னு எழுதறவனுக்கு என்ன தலையெழுத்தா?’

அதானே..? ரொம்ப ரசித்தேன்.  அதைவிட முடிவில் , ‘ கவிஞன் இதுவரைக்கும் சொல்லாத விஷயத்தை அல்லவா  சொல்கிறான். அது அவனுக்கே கூடப் புரியாமல் போகலாம்’ என்று சொல்லியிருந்தது பிரமாதம் –  ‘ பழங்கள் /கொட்டிக்கொண்டே இருந்தாலும் / பரந்த மண்ணில் / விழுந்தால் பயனில்லை..!  / ஒரு / சின்னக்கூடை / சேமித்து விடுமே..!’ என்று ‘புரியாமல்’ எழுதும் நம் ஜபருல்லாநானாவுக்கு சொன்னது மாதிரி –  சீர்காழிக் கவிஞருக்காக அல்ல! – இருந்தது. கம்பீரமான கம்பாரின் கவிதை இனி…

chandrashekar-kambar2

அம்மரம் இம்மரம்

நதிக்கரையிலொரு மரம்
நதியில் ஒரு மரம்

நிஜமான மரம் மேலே
பிம்பமான மரம் கீழே

மேலிருக்கும் மரத்தில் கீசு கீசு பிரபஞ்சம்
கீதங்கள் பாடிக்கொண்டு

இறக்கை நுனிகளால் இலைகளின் மேலே
கனவுகளைக் கிறுக்குகையில்

கீழே வேர்களில்
துள்ளும் மீன்கள் ஆழத்தில் போய்
நிழல் வெளிச்சத்தின் வலையில் நீந்தியவாறு
நினைவுகளைத் தூண்டும்.

நீரலை எழும்போது
ஒன்று நடுங்கும்
மற்றொன்று நகைக்கும்

என்றாலும் ஞாபகமிருக்கட்டும்
மரங்கள் இரண்டானாலும்
வேர் ஒன்றே.

நீ ஒரு மரம் ஏறினால்
மற்றொன்றில் இறங்குவாய்
தலை மேலாக ஏறுகிறாய்
தலை கீழாக இறங்குகிறாய்

மேலே நீல வானம்
கீழே அதனுடைய நகல்
இரு வானங்களிலும் மௌனம்

ஏற ஏறக் காற்றாவாய் என்றறிவாய்
என்றாலும் நினைவிருக்கட்டும்
கீழிறங்கும் விதி தப்பாது.

ஏறுவது உன் கையிலிருந்தாலும்
இறங்குவது உன் கை மீறியது

ஏறியவர் சொர்க்கம் சேருவார்களாம்
நமக்கது உறுதியில்லை
மூழ்கியவர்க்கு பாதாளம் நிச்சயம்
வேண்டுமெனில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்

இக்கதையின் சோக தோஷம் என்னவெனில்
நிஜமான மரம் மற்றும்
நீரிலுள்ள மரம்
இவ்விரண்டும் ஒன்றான இடம்
மாயமாக இருப்பது.

அதற்காகத்தான் சொல்கிறேன் நண்பா!
மேலே ஏறினாலும்
தலை கீழாகத் தொங்குவது தப்பாது.

மேலிருந்து குதித்துத்
தளம் தொட்டு
மாயமான நிலத்தை
தேடனுமடா! தேடி வாழணும்.

***

நன்றி : சந்திரசேகர கம்பார் , கே. மலர்விழி, கணையாழி, தீராநதி, மா. அரங்கநாதன், இஜட். ஜபருல்லா

எஸ். ஆல்பர்ட் சார் – ‘முன்றில்’ உரை

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்களின் கவிதைகள் கிடைக்குமா என்று கேட்டபோது,   ‘எஸ். ஆல்பர்ட் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார். ‘இல்லாத கிழவியின் கதை’ என்ற தலைப்பில். அந்த கவிதையை முழுவதுமாக நகுலன் தன்னுடைய ‘ நாய்கள்’ நாவலில் முதல் அத்தியாயத்தில் முதல் பத்தியாக மேற்கோள் காட்டியிருப்பார். ‘நாய்கள்’ கைவசம் இருந்தால் பாருங்களேன்’  என்று பதில் தந்திருந்தார் நண்பர் எம்.டி.எம் . ‘நாய்கள்’ ஊரில் இருக்கு, பார்க்கிறேன்  என்று எழுதிவிட்டு அன்போடு அஸ்மாவை விசாரித்தால்… குலைநடுங்குமாறு குலைக்கிறாள்! என் சுபாவம் ஒட்டிக்கொண்டது போலும். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆல்பர்ட் சாரின் பிரியத்திற்குரிய மாணவராக இருந்த நம்ம நாகூர்ரூமி சாரிடமும் கேட்டேன். நவீன இலக்கியத்தையும் சினிமாவையும் நாகூர் ரூமிக்கு அதிகமாகவும் ஆபிதீனுக்கு  ரொம்பக் கொஞ்சோண்டும் அறிமுகப்படுத்திய ஆளுமையாயிற்றே ஆல்பர்ட்சார்… ( மிக முக்கியமான இன்னொருவரின் பெயரையும் இங்கே அவசியம்  குறிப்பிடவேண்டும்; ஆனால் அவர்  , ஆல்பர்ட்சாருக்கே இலக்கியம் போதித்தவன் நான், தெரியுமா? என்று அலட்ட ஆரம்பித்துவிடுவார். வேண்டாம்).   கவிதையை  இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கிறார் ரூமி. ‘ஆல்ஃபார்ட் சார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறாரோ ஆல்ஃபா மன்னர்? சரி, அதுவரும்வரை , சத்யஜித்ராய் பற்றி ஆல்பர்ட்சார் எழுதிய கட்டுரையை இங்கே மீள்பதிவிடலாம் என்று யோசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருந்தபோதுதான் கிடைத்தன மா.அரங்கநாதனின் அவர்களின் தளத்தில் இருக்கும் பொக்கிஷங்கள் (MP3). என் சந்தோசத்தைச் சொல்ல வார்த்தையில்லை போங்கள். மா.அரங்கநாதன் அவர்களுக்கு நன்றி.

1980 என்று நினைக்கிறேன், ‘சென்னையிலிருந்து ’பிரக்ஞை’ ரவிஷங்கர் வந்திருக்கிறார்.. வாருங்கள் பொன்மலைக்கு..’ என்று நாகூர்ரூமியுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போய் உரையாடிக்கொண்டிருந்த எங்கள் ஆல்பர்ட்சாரின் குரலை மீண்டும் இப்போது கேட்டதும் உற்சாகமாகிவிட்டேன்.  ஆல்பர்ட்சார் சென்னையில்தான் இருக்கிறாராம். ரூமி சொன்னார். ஊர் சென்றால் அவசியம் பார்ப்பேன் (ரூமியை அல்ல, ஆல்பர்ட் சாரை!) . 1991-ல் நடந்த இந்த ‘முன்றில்’ கருத்தரங்கத்தில் பேசும் அசோகமித்திரன் அவர்கள் , தனக்கு எஸ். ஆல்பர்ட்டை 22 வருடங்களாகத் தெரியும் , தமிழ் சிறுகதைக்காக நிறைய உழைத்திருக்கிறவர்’ என்று சொல்கிறார். சிறுகதை வடிவம் பற்றிய ஆல்பர்ட் சாரின் உரையை டைப் செய்து இரண்டொருநாளில் பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ். அதுவரை ’தமிழின் ஆகச்சிறந்த மற்ற படைப்பாளிகள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளின்’ குரலையும் கேளுங்கள்.

மா.அரங்கநாதனின் அற்புதமான ’முன்றில் நினைவுகள்’ சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன். அவசியம் வாசியுங்கள். அவ்வளவு சீரியஸான ஆளுக்கு ஹாஸ்யமும் பிய்த்துக்கொண்டு வருகிறது. அவர் ஓய்வு பெற்ற நாளில் – பெற்றுக்கொண்டே இருக்கும்போது – அலுவலகத்திற்கு எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் வந்தாராம். அன்று முதல் முதலாக அரங்கநாதனைப் பார்த்தவர் அரண்டுபோய் கவலையுடன்  நெருங்கியிருக்கிறார். ’வேறு ஒன்றும் இல்லை ஓய்வு பெறும் நாளன்று அலுவலகத்தில் மாலை ஒன்று போட்டு. நாற்காலியில் என்னை உட்கார வைத்து இருந்தபடியால் என்னமோ ஏதோ என்று எண்ணி பதறிவிட்டார்’ என்கிறார் மா. அரங்கநாதன்! சாதாரண கோலத்திலேயே அப்படித் தோன்றும் நான் வெடித்துச் சிரித்துவிட்டேன். –  ஆபிதீன்

***

நன்றி : மா.அரங்கநாதன் ( முன்றில் நினைவுகள்)