2G : இதெல்லாம் யாரைக் காப்பாற்ற? – மாலன்

 தாஜ் குறிப்புகள் :

திசைகள் , இந்தியா டுடே , தினமணி போன்ற சஞ்சிகைகளில் ஆசிரியராக இருந்து, இன்றைக்கு ‘புதிய தலைமுறை’ என்கிற புத்தி ஜீவிதமான இதழ் ஒன்றுக்கு ஆசிரியராக இருக்கும் திரு. மாலன் அவர்களது எழுத்தின் எளிமையில் எனக்கு எப்பவும் ஈர்ப்புண்டு. தவிர, வண்டி வண்டியான விசயத்தைக் கூட இரண்டு பக்க அளவில் தெளிவுடன் கூற வல்லவர் அவர். அவரது பார்வையில் காழ்ப்புணர்ச்சியைப் பார்ப்பது அரிது. என்றாலும், முற்றாய் அது இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

இந்தக் கட்டுரை, மாலன் அவர்களின் குறிப்பிடத் தகுந்த நேர்த்திகள் கொண்டது. பெரியதோர் விசயத்தை கையடக்கமாக தந்திருக்கிறார். சில இடங்களில் ’லாஜிக்’ சரிவர பொருந்திப் போகவில்லையோ என்றும் தோன்றுகிறது. 2ஜி வழக்கில் ஆ.ராசாவும் கனிமொழியும் வெவ்வேறு முகாந்தரங்களின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்கள். மாலன் எழுதி இருப்பதைப் பார்த்தால் கனிமொழி ராசாவிற்கு கீழ் துணை மந்திரியாக இருந்து, ஒரே ஊழல் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் போல் எதிரொலிக்க எழுதி இருக்கிறார்.

2ஜி விவகாரம் வெடித்த நேரத்தில் நம் பிரதமர் , ராசா இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றுதான் சொன்னார். எதிர் கட்சிகள் மாதக் கணக்கில் பாராளுமன்றத்தை முடக்கிய போது, அவர் வாய் மூடிக் கொண்டார். இன்றைக்கு கோர்ட்டில் அதே தகவலை ராசா சொல்கிறபோது மாலன் அதனை வேறு அர்த்தத்துடன் நோக்குகிறார்.

அது மாதிரியே, மத்தியில் ஜனநாயகக் கூட்டணி நடந்தபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறு நடந்ததா? என்பதை விசாரிக்க இந்த வழக்கு தொடங்கிய நாளிலேயே உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. அது குறித்து இன்றையச் செய்திகளாக ‘அன்றைக்கு நிதிஅமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த அருண்ஷோரி ஆகியோரை விரைவில் சிபிஐயால் விசாரிக்கப்படுவார்கள்’ என்கிற போது, அதனை வேறு அர்த்தத்தில் பார்க்கிறார் மாலன்.

ஆளும் அரசை முடக்க, அரசியல் சங்கதிகள் கொண்டு எதிர்க் கட்சிகள் மறைமுகமாக காய் நகர்த்துவதை கண்டுகொள்ளாத மாலன் அவர்கள், ஆளும் காட்சி மறைமுக அரசியல் காய் நகர்த்தலை ஏதோ கூடாதது போல மாய்ந்து மாய்ந்து எழுதி இருக்கிறார்.

இந்த 2ஜி ஊழல் விவகாரத்தில் கை நனைத்த எவரையும் விடக் கூடாதுதான். அது போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் பல கட்சிகளின் பல ஊழல் சங்கதிகளையும் மாலன் விடவே கூடாது. இதே விசேச வீரியத்தோடு வீச்சாய் எழுத வேண்டும்.   

***

மாலன் கட்டுரை :

பலவீனமாகும் 2ஜி வழக்கு யாரைக் காப்பாற்ற?மாலன்

நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன் 2ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங்கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊடகங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர்தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத்தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்(CAG).

அதையடுத்து அரசியல் அரங்கம் பரப்பரப்பானது. ஊடகங்கள் உரத்து முழங்கின. நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் நாள் கணக்கில் முடக்கப்பட்டது. தொலைத் தொடர்புத் துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குத் தொடர பிரதமர் அனுமதி அளித்தார். ராசா ராஜினாமா செய்தார். மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவாயிற்று. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சாதிக் பாட்சா என்ற அவரது நண்பர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார். சதியில் கூட்டு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முக்கியமான தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதல் நிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு அனைவரும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் இன்னும் நாடு மறந்து விடவில்லை. இதற்கெல்லாம் ஆதாரமான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் மறந்துவிடவில்லை. அதிலும் முக்கியமாக, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதே தவிர அரசியல்வாதிகள், அவர்களது நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன என்பதை மக்கள் மறந்து விடவில்லை.

ஆனால்…

வரும் செப்டம்பரில் 15ம் தேதி சிபிஐ 2ஜி வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருக்கும் நேரத்தில், இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் (டிராய்) ஓசைப்படாமல் ஒரு குண்டை வீசி இவை அனைத்தையும் அர்த்தமில்லாததாகச் செய்திருக்கிறது.

அது என்ன அணுகுண்டு?

‘அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று துல்லியமாகச் சொல்வதற்கில்லை’ என்கிறது டிராய். அது மட்டுமல்ல, ராசா அரசின் கொள்கைகளைத்தான் கடைப்பிடித்தார் என்றும் சொல்கிறது.

அப்படி நினைப்பதற்கான காரணங்கள் என்ன?

ஒருவர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதைச் சட்டம் இரண்டு அம்சகளின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. குற்ற நோக்கம் (mens rea), குற்றச் செயல் (actus reua) என்பவை அந்த அம்சங்கள். இந்த இரண்டையும் சந்தேகத்திற்கு இடமில்லாத சாட்சியங்கள் மூலம் நிரூபித்தால்தான் சம்மந்தப்பட்டவர் குற்றம் புரிந்தார் எனக் கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும். ராசா, அரசின் கொள்கைகளைத்தான் பின்பற்றினார் என்றால் அவருக்கு குற்ற நோக்கம் இல்லை என்று கருதப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் அவரது நோக்கம் அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது. குற்றம் செய்வதல்ல. அப்படி நடைமுறைப்படுத்தியதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றால் அங்கே குற்றச் செயலும் நடைபெறவில்லை என்றுதான் கருதப்படும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைத்தான் ராசா, தான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ராசா, மற்றும் கனிமொழியின் வழக்கறிஞர் சுஷீல் குமார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி முன் வைத்த வாதங்கள் இவை: 2ஜி அலைக்கற்றையை ஏலம் விட வேண்டாம் என்பது அரசின் கொள்கை முடிவு; அதனால்தான் ஏலம் விடவில்லை; எனவே ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு பணம் வந்திருக்கும், விடாவிட்டால் அது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது இன்னொரு வாதம்; அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிட்டெட், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை விற்கவில்லை, தங்கள் நிறுவனங்களின் பங்குகளை அரசின் அனுமதி பெற்று அயல்நாட்டு நிறுவனங்களான எடிஸாலட், டெலினார் நிறுவனங்களுக்கு விற்று தங்கள் மூலதனத்தை விரிவுபடுத்திக் கொண்டன. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை.

ஏறத்தாழ இதே குரலில் பேசுகிறது டிராய். தவறேதும் நடக்கவில்லை, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அன்று ஏன் அரசு, ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத்தது? ஏன் அவரைப் பதவி விலகச் சொன்னது? அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது? அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது? அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து வழக்காடியது? இதையெல்லாம் செய்த அரசு இப்போது ஏன் குரல் மாற்றிப் பேசுகிறது?

அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இன்னொரு செய்தியைக் கவனிக்க வேண்டும்.

ராசாவும் கனிமொழியும் ஏலம் விட வேண்டாம் என்ற முடிவை எடுத்தது நாங்களல்ல என்ற வாதத்தை மட்டும் வைக்கவில்லை. அதை எடுத்தது பிரதமரும் மற்ற அமைச்சர்களும்தான் என்று பிரதமரையும் வழக்கிற்குள் இழுத்தனர்.

“நான் உங்களுக்குக் காண்பிப்பது பிரதமர், அன்றைய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம், மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்ட கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பு (minutes) இந்தக் கூட்டத்தில் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடவோ, விற்கவோ கூடாது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்” என்று நடவடிக்கைக் குறிப்பை நீதிபதி முன் வைக்கிறார் சுஷீல் குமார். “உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் விஷயம் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தெரியும். அன்றைய நிதி அமைச்சர், இன்றைய உள்துறை அமைச்சர், பங்குகளை விற்பது 2ஜி உரிமங்களை விற்பதாகாது என்று பிரதமரின் முன்னிலையில் கூறினார். முடிந்தால் இதை பிரதமர் மறுக்கட்டும்” என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் அதை பிரதமர் ஒரு அமைச்சர் குழுவை அமைத்து விசாரித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை என்பது இன்னொரு வாதம்.

ராசாவும், கனிமொழியும் சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இதெல்லாம் நடந்தது ஆகஸ்ட் 23ம் தேதி. பிரதமர், சிதம்பரம், ஆகியோரது பெயர்கள் இழுக்கப்பட்டதற்கு ஒரு வாரத்திற்குப் பின் டிராய், அணுகுண்டைப் போடுகிறது.

டிராய் அறிக்கை வெளியான அதே செப்டம்பர் 1ம் தேதி சிபிஐயிடமிருந்து வேறு மூன்று தகவல்கள் வெளிவருகின்றன.

ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தற்போதைய நிலவரம் பற்றி அது தாக்கல் செய்த அறிக்கை. அதில் ஏர்செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு தயாநிதி மாறன் வற்புறுத்தியதாகவோ, நெருக்கடி கொடுத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனச் சொல்லியிருக்கிறது.

மற்ற இரண்டு தகவல்களும் அலைக்கற்றை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டவை அவை; அம்பானியோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும், உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ்-ஏடிஏஜிக்கு எந்தச் சதியிலும் பங்கில்லை என்பது ஒன்று. மற்றொன்று, அலக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்ததாகக் கூறப்படும் யூடெக் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது.

லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையானால் லஞ்சம் பெறப்படவில்லை என்பதும் உண்மையாகி விடுமல்லவா?

இவை எல்லாம் எதைக் காட்டுகிறது?

2ஜி வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் பலர் எவ்விதத் தண்டணையும் இன்றி விரைவிலேயே வெளியில் வந்து விடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதைத்தான். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 2ஜி வழக்கு தீபாவளிக்கு முன்னரே கூட புஸ்வாணமாகலாம்.

ஆனால், இன்னொரு புறம் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருப்பதால், அரசு இந்த வழக்கில் தீவிரமாக இருப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருக்கிறது. 2ஜி ஊழல் புகாரில் தொடர்புள்ள பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலவாணி விதிகளை மீறியிருப்பதாக அமலாக்கப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதில் 200 வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், ஆறு கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், கள்ளப் பணத்தை ‘சலவை’ செய்வதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் சொத்துக்களை முடக்கப்போவதாகவும் அது தெரிவிக்கிறது. சைப்ரஸ், சிங்கப்பூர், சானல் தீவுகள், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து ஆகிய ஆகிய நாடுகளில் பணம் பதுக்க/ முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவதாகவும் அது கூறியிருக்கிறது.

அதாவது, அரசின் ஒரு துறையான டிராய் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரம் இன்னொரு அரசுத் துறையான அமலாக்கப் பிரிவு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்கிறது!

அன்னா ஹசாரேயின் அறப்போராட்டம் அரசுக்குப் பல விதங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருந்த விவாதம், மக்கள் மன்றத்திற்கு வருவதற்கு அந்தப் போராட்டம் காரணமாயிற்று. அந்தப் போராட்டம் அத்தனை பெரிய அளவில் எழுச்சி பெற, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் குறித்த செய்திகள் மக்கள் மனதில் இருந்து ஒரு மறைமுகக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு புறம் நீர்த்துப் போகச் செய்துகொண்டிருக்கும் வேளையில், அன்னா ஹசாரேவையும் கட்டுக்குள் வைக்க அரசு முனைந்திருக்கிறது. அவருக்கு வலதுகரமாக இருந்து போராட்டத்தை கட்டமைக்க உதவிய கிரண்பேடி, பிரசாந்த் பூஷன், அரவிந் கெஜரிவால் ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் உரிமைகளை மீறியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதாகப் புகார். உரிமை மீறல் நிகழ்த்தப்பட்டதா இல்லையா என்று முடிவு செய்வது நீதிமன்றம் அல்ல. நாடாளுமன்றம்தான். எனவே அந்த முடிவு என்னவாக இருந்தாலும் அவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. 

இன்னொரு புறம் தன் மகன் பிரசாந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை விலைக்கு வாங்கலாம் என சாந்தி பூஷன், அமர்சிங்கிடம் நடத்திய உரையாடல் கொண்ட சிடி போலியானதல்ல என டெல்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது. ‘இந்த உரையாடல் போலியானது, வெட்டி ஒட்டப்பட்டது’ என பிரசாந்த் பூஷன் முன்பு மறுத்திருந்தார்

முன்பு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வருமான வரித்துறையில் பணியாற்றியபோது சில விதிமுறைகளை மீறிவிட்டார் என அரவிந்த் கெஜரிவாலுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சமூக ஆர்வலர்களுக்கு சங்கடங்கள் ஏற்படுத்தும் அதே நேரம், கவனத்தை எதிர்க்கட்சிகள் மீது திருப்பவும் முயற்சிகள் நடக்கின்றன. செப்டம்பர் 1ம் தேதி சிபிஐயின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், “மத்தியில் ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்றபோதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதி மீறல்கள் நடந்துள்ளன. அது தொடர்பாக அந்த அரசில் நிதிஅமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த அருண்ஷோரி ஆகியோர் விரைவில் சிபிஐயால் விசாரிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு புறம் இன்றைய அமைச்சர்களின் கைகள் சுத்தமானவை எனக் கூறாமல் கூறுவதற்காக மத்திய அமைச்சர்களின் சொத்துக் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒருபுறம் 2ஜி வழக்கின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் தகவல், இன்னொரு புறம் குற்றச் சாட்டுக்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம் சமூக ஆர்வலர்களைக் களைத்துப் போகச் செய்யும் முயற்சி, வேறொருபுறம் கவனத்தை எதிர்க்கட்சிகள் மீது திருப்புதல் என மிகச் சாமார்த்தியமாக 2ஜி விவகாரத்தில் காய்களை நகர்த்தி வருகிறது. அரசு. இவற்றைப் பார்க்கும்போது நம் மனதில் எழும் கேள்வி ஒன்றுதான்.

இதெல்லாம் யாரைக் காப்பாற்ற?

***

நன்றி: மாலன் / புதிய தலைமுறை – 15 செப்டம்பர் 2011
தட்டச்சு: தாஜ்

கடவுளாகி விடுவானா மனிதன்? – மாலன்

மனித ஜீன்-இல் சில மாற்றங்கள் செய்து , முட்டாளை புத்திசாலியாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மாற்றலாமாம். ‘உங்களுக்கும் அந்த எண்ணம் உண்டா?’ என்று தாஜ் என்னைக் கேட்டிருக்கிறார். விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றாலும் அஞ்ஞானி ஆபிதீனை மாற்றவே இயலாது! போகட்டும், ‘ஒரே… இலக்கியம், ஆன்மீகம் என்று இருக்கிறதே..  அறிவியல் செய்திகள் அறவே இங்கு இல்லையே’ என்று நான் ஏங்கியதற்காக மெனக்கெட்டு ஒரு  கட்டுரையை  தட்டச்சு செய்து அனுப்பிய தாஜுக்கு நன்றி. என்ன ஒன்று, மரைக்கார் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; மாலன் எழுதியதில் வருத்தமே! ம்ம்…, நம்ம ‘சீயாழி ராவுத்தர்’ சில குறிப்புகள் தருகிறார். அதைப் படித்துவிட்டு நண்பர் மாலனின் கட்டுரையை வாசியுங்கள். நன்றி.

இன்னொன்று…

‘இயற்கைக்கு மாறாக இன்றுள்ள புதினங்கள்
இருந்தாலும் ஒரு செய்தி; இனியேனும் சிந்திப்பீர்
செயற்கைப் பயன்கண்டு செருக்குற்ற ஆணினமே!
சேய்களை ஈன்றெடுக்க சாலுமோ உன்னாலே?’ என்று
புலவர் ஆபிதீன் காக்கா கேட்டிருக்கிறார் – ‘விஞ்ஞான விளையாட்டு’ பாடலில். ஆண்டு 1949.

முடியும் காக்கா, இன்று முடியும்! விபரமறிந்தவர்கள் வி/இடலாம். எனக்கு அனுபவம் பத்தாது!

***

முதலில் சில வார்த்தைகள் – தாஜ்

அன்புடன்
வாசக நண்பர்களுக்கு….

‘புதிய தலைமுறை’ ஆசிரியரான
நண்பர் மாலனின்
‘படைப்பதனால் என் பேர் இறைவன்?’ என்கிற
இந்தக் கட்டுரையினை
உங்களின் பார்வைக்கு வைப்பதில்
மிகுந்த மகிழ்ச்சியுண்டு.

ஜீன் ஆய்வு குறித்த
செய்திகள் அறிய
ஏக்கம் கொண்டவனாகவே இருந்து வருகிறேன்.

உலகில் உள்ள பெரும்பான்மையான மதங்கள்
இந்த ஆய்விற்கு முட்டுக்கட்டை போடுகிறது.
பல நாடுகள்…
இந்த ஆய்வை தங்களது நாட்டில் நிகழ்த்த
அனுமதிப்பதும் இல்லை.
வாடிகன் தலைமை போப்பும் கூட
‘இதெல்லாம் வேண்டாம்.
ஆண்டவனுக்கு மாறான செயல்.’
என சொல்லி விட்டார்.

இப்படிதான்…
கலிலியோ,
‘உலகம் உருண்டை /
பிரபஞ்சத்தில் சுழன்றபடி
சூரியனை அது சுற்றிவருகிறது’ என்றபோது…
‘மதத்திற்கும், கடவுளுக்கும் மாறாக
கலிலியோ பேசுகிறார்.
வேதம், உலகை தட்டை என்கிறபோது
கலிலியோ எப்படி உருண்டை என கூறலாம்?’
என்கிற கொதிப்பில்
அன்றைய வாடிகன் போப்
விஞ்ஞானி கலிலியோவுக்கு
சிரச்சேத தண்டனை வழங்கினார்.

காலம் மாறியது…
உலகம் உருண்டையென
கலிலியோ கூறிய கருத்தை
விஞ்ஞானம் ஒப்புக் கொண்டது,
உலக மக்கள் எல்லோரும்
ஒப்புக்கொண்டார்கள்!
இன்றைய போப்பிற்கு முந்தைய போப்,
தங்களின் முந்தைய போப்பாண்டவரும், அவரது சபையும்
கலிலியோவுக்கு வழங்கிய தண்டனைக்காக
பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்!
இவர்கள்தான் இன்றைக்கு
ஜீன் ஆராய்ச்சிக்கு எதிராக கொடி தூக்குகிறார்கள்.

உயிரைப் படைப்பதில்
இறைவனின் கீர்த்திகள் குறித்து
பேசாத மதங்களே இல்லை.
அத்தகைய மகத்துவம் பொருந்திய ‘உயிரை’
இன்றைய விஞ்ஞானிகள் சிலர்
தங்களது ஆய்வுக்கூடங்களில்
செய்பொருளாக தயாரிக்க துவங்கிவிட்டார்கள்!
இன்னும் முழுமைகூடிய
உற்பத்திப் பண்டமாக அதைப் பெருக்க
தீவிர முயற்சியிலும் இருக்கிறார்கள்.
 
மதவாதிகளுக்கு
இது குறித்த செய்திகள்
பேரதிர்வுகளைத் தரும் என்பதில்
இரண்டு கருத்து இருக்க முடியாது.!
அவர்களின் சொல்லை மீறி / தடைகளை மீறி
இந்த ஆய்வு நடப்பதால்
சகிக்கவும் முடியாதுதான்!
அவர்களது கடவுளர்களிடமிருந்து
‘பேட்டர்ன் ரைட்ஸ்’ வாங்காமல்
இந்த விஞ்ஞானிகள் தன்னிச்சையாக முயல்வது
எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்?
எந்த மதத்துக்காரர்கள்தான் ஒப்புக்கொள்வார்கள்?

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள்
பூரண வெற்றிகொண்டபின்
‘எங்க வேதத்தில்…
இது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது’ என்று
வேத வரிகளில் சிலவற்றிற்கு
புதிய விளக்கங்களைச் சொல்லியபடி
கொல்லை வாசல் வழியாக
இந்த மதவாதிகள் உள்ளே வந்து
புதிய உயிரை
செல்லம் கொஞ்சுவார்கள்….
அங்கீகரிக்கவும் செய்வார்கள் என்பது வேறு செய்தி!
இவர்கள் தங்களது வேதத்தில்
ஒரு எழுத்துப் பிசகாது பாதுகாப்பார்கள் என்பது நிஜம்தான்.
ஆனால், புதுப் புது உரைகள் என்று எழுதி
வேத அர்த்தங்களைப் புதுப்பித்துக் கொண்டேயும் இருப்பார்கள்!

*

இந்தக் கட்டுரையில்
ஜீன் ஆய்வு பற்றி
மாலன் வழங்கியிருக்கும் தகவல்கள்
மிகவும் குறைவென நினைக்கிறேன்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்
இந்த ஆய்வு , எட்டி இருக்கிற உயரத்தைவிட
சில விஞ்ஞானிகள் தனிப்பட்ட முறையில்
‘ஸ்பான்ஸர்’களின் உதவியோடு
பிரச்சனையற்ற தீவுகளில் ரகசியமாக
நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆய்வின்
வெற்றிச் செய்திகள்
இன்னும் கூடுதலானதென்றும் தகவல்!

ஜீன் ஆய்வுகளைக் கொண்டு
மனித உறுப்புகள் ஒரு சில
உயிர்ப்போடு தயாரிக்கப்படுவதையும்,
தேவைப்படுபவர்களுக்கு
அதைப் பொருத்த முடியுமென்றும்
நான் வாசித்த கூடுதல் தகவல்கள் சொல்கின்றன.

இந்த ஆய்வின் இன்னொரு கூற்றாய்…
மனிதனை, முன்னூற்றுக்கும் அதிகமான வருடங்கள்
இளமை மாறாமல் வைக்க முடியும் என்றும்
மனித வாழ்வை
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீட்ட முடியும் என்றும்
மனிதனின் ஜீனில் சில திருத்தங்களைச் செய்து
கெடுமதிக் கொண்டவனை நல்லவனாகவும்
திருடனை போலீஸ்காரனாகவும்
மன்னிக்கவும்…
திருடனை உபகாரியாகவும்
முட்டாளைப் புத்திசாலியாகவும்
மாற்ற இயலும் என்கிற செய்திகளையும்
வாசித்திருக்கிறேன்.

மனித ஜீனில் சில திருத்தங்கள் என்கிற சங்கதி
விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சம்…
அதன் உதவி கொண்டாவது
புத்திசாலியாகவும் / நல்லவனாகவும்
ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க
ஆசையுண்டு!
ஆபிதீன்…
உங்களுக்கு அப்படி ஏதேனும்
எண்ணம் உண்டாயென்ன?
முன் பதிவு செய்துவிடலாமா?!

*

நிலவில் மனிதன் கால்வைத்தபோது
அமெரிக்க வானொலி
உலகம் தழுவ ஒலிபரப்பிய
நேரடி செய்தி நிகழ்ச்சியை
தமிழக மக்கள் எல்லோரும்
கேட்டறியவேண்டும் என்கிற சிந்தனையில்….
‘வீடுகளில் ரேடியோ வைத்திருக்கும்
கட்சிக்காரர்கள் அத்தனைபேர்களும்
தங்களது ரேடியோவை
வீட்டு வாசலில் வைத்து
அந்த நேரடி ஒலிபரப்புத் தகவல்களை
பொதுமக்கள் அறியச் செய்யுங்கள்’
என தனது கட்சிக்கார்களுக்கு உத்தரவு இட்டவரும்
‘மனிதனை நினை’ என
அழுத்தம் தந்து போதித்தவருமான
பெரியார்
ஜீன் ஆய்வின் இந்த வெற்றியைக்
காணவும் / கொண்டாடவும்
உயிரோடு இல்லை என்பது
காலச் சதியின் கோரமாக இருக்கிறது.

கநாசு.தாஜ்

***   

படைப்பதனால் என் பேர் இறைவன்?
மாலன்

முதன் முறையாக
செயற்கை உயிரினம் ஒன்றை
மனிதன் படைத்திருக்கிறான்.
இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
கடவுளாகி விடுவானா மனிதன்? – மாலன்
*

மே 20, 2010.

கண்ணகல, புருவங்கள் உயர அறிவியல் உலகம் சற்றே அவநம்பிக்கையுடன் அந்தச் செய்தியை வாசித்தது. வாசித்தவர்களில் சிலர் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்கள். கலிலியோ வானை நோக்கி டெலஸ்கோப்பைத் திருப்பியதற்கு நிகரான கண்டுபிடிப்பு என்று குதூகலித்தார்கள். அணுகுண்டு வெடிப்பிற்குப் பின் மேற்கொள்ளப்பட்டுள்ள அபாயகரமான முயற்சி என்று சிலர் உதட்டைச் சுழித்தார்கள்.

அப்படி என்ன நடந்து விட்டது?

அமெரிக்காவில் உள்ள கிரேய்க் வெண்டர் என்ற விஞ்ஞானியும் அவரது குழுவினரும் (அவர்களில் மூவர் இந்தியர். ஒருவர் தமிழ்ப் பெண். ராதா கிருஷ்ணகுமார் என்ற அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்). செயற்கை உயிரை உருவாக்கியிருப்பதாகச் சொன்னது செய்தி.

என்னது, உயிரைப் படைப்பது கடவுள் என்றல்லவா நம்பிக் கொண்டிருக்கிறோம். அதை மனிதன் படைக்கிறானா?

ஆம்! மனிதன் உயிரைப் படைக்கிறான். அதுவும் சில வேதிப் பொருட்களைக் கொண்டு, சோதனைச் சாலையில்!

அதை விளக்கிக்கொள்ள வேண்டுமானால், முதலில் உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்குப் போக வேண்டும்.

இந்தக் கேள்வியைப் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித குலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பல சிந்தனையாளர்கள் பல கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள். பஞ்ச பூதங்களையும் சேர்த்து கடவுள் உயிரைப் படைத்ததாக மதங்கள் சொல்கின்றன. ஆனால், அறிவியல் சொல்வது இதுதான்:

எது தனக்கு வேண்டிய சக்தியை உணவின் மூலம் பெற்றுக் கொள்கிறதோ – மெட்டபாலிசம் என்று  ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் – எது தன்னைப் பிரதி எடுத்துக்கொள்ளும் சாத்தியங்கள் கொண்டதோ, அதை உயிர் என்கிறது அறிவியல். மனிதன், யானை, கொசு, தென்னை மரம், பாக்டீரியா எல்லாம் செய்வது இதுதான். அதனால், அவை உயிருள்ளவை. மேஜை, குக்கர், பாத்திரம், கணினி, புத்தகம் இவற்றிற்கு இந்தச் சக்தி கிடையாது. அதனால், அவை உயிரற்றவை.

இந்தத் தன்னைத் தானே பிரதி எடுத்தல்தான் இயற்கையின் ஆச்சரியமும் கூட! தாவரங்களுக்கு அவை உருவாக்கிக் கொள்ளும் விதை போதும். பல விலங்குகளுக்கு (மனிதனையும் சேர்த்து) ஒரு தாயும் தந்தையும் தேவைப்படுகிறது.

வேப்பங்கொட்டையிலிருந்து தோன்றும் வேப்பமரம், வாழை மரம் போல் இருப்பதில்லை. இன்னொரு வேப்பமரம் போல்தான் இருக்கிறது. எப்படி? பசு மாட்டின் கன்று, யானைக் குட்டி போல் இருப்பதில்லை. ஏன்? மனிதர்கள் தாயின் ஜாடையில் அல்லது தந்தையின் சாயலில், தாயின் கண், தந்தையின் உயரம் என்று பிறக்கிறார்கள். எப்படி? அங்குதான் மரபணுக்கள் என்று நாம் தமிழில் சொல்லும் ஜீன்கள் வருகின்றன.

மரபணு என்றால் என்ன? புரத அமிலங்களின் தொகுப்பு என்று சிம்பிளாகச் சொல்லலாம். இந்தப் புரத அமிலங்களில் முக்கியமானது டி.என்.ஏ. (டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் – Deoxyribonucleic acid) எங்கே இருக்கின்றன இந்த டி.என்.ஏ.க்கள்? எல்லா இடத்திலும் நம் தலை முடியில், நகத்தில், தோலில், உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் ஒவ்வொருவரின் டி.என்.ஏ.யும் தனித்துவமானவை. உங்களுடையதைப் போல என்னுடையது இருக்காது. என்னுடையதைப் போல இன்னொருவருடையது இருக்காது. நம் கைரேகையைப் போல நம்முடைய அடையாளமே அதுதான்.

இந்த டி.என்.ஏ.வின் முக்கிய வேலையே தகவல்களை நீண்ட காலத்திற்குச் சேமித்து வைத்துக்கொள்வதுதான். பாரம்பரியமாகத் தகவல்களைச் சேமித்து வைத்துக் கொள்ளும் பகுதியை ஜீன் என்று சொல்கிறோம். டி.என்.ஏ.வின் வேறு பகுதிகள் செல்களை அமைக்கும் தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

செல்கள் என்றால்?

உயிரினங்களின் அடிப்படையான அமைப்பு இதுதான். பல செங்கற்கள் சேர்ந்து ஒரு சுவராகிறது. பல சுவர்கள் சேர்ந்து அறைகளாகின்றன, அறைகள் சேர்ந்து வீடாகிறது அல்லவா. அதுபோல செல்கள் சேர்ந்து திசுக்கள் ஆகின்றன, திசுக்கள் சேர்ந்து உறுப்புகள் ஆகின்றன. உறுப்புகள் சேர்ந்து ஒரு சிஸ்டம் ஆகின்றன. பல சிஸ்டம்கள் கொண்டது நம் உடம்பு.

அமெரிக்க விஞ்ஞானிகள் செய்தது செயற்கையாக ஒரு செல்லை உருவாக்கியதுதான். அதாவது, உயிரினங்களின் ஆதாரமான ஒன்றை உருவாக்கிவிட்டார்கள்.

இதில் என்ன புதிதாக இருக்கிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் குளோனிங் என்றெல்லாம் அமர்க்களப்பட்டதே? அது வேறு சமாச்சாரம். அது ஏற்கனவே இருக்கும், ஓர் உயிரிலிருக்கும் மரபணுக்களைக் கொண்டு அதைப் போன்ற ஒரு நகலை உருவாக்குவது. ஓர் ஆவணத்தை ஜெராக்ஸ் செய்வதைப் போல்.

ஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை உயிர் இரண்டு வகையில் வித்தியாசமானது.

1. இந்த உயிருக்கு ‘முன்னோர்’கள் கிடையாது. அதாவது, முன்பிருந்த எந்த மரபணுவிலிருந்தும் இது உருவாக்கப்படவில்லை.
2. இது ஒரு சோதனைச் சாலையில் சில வேதிப் பொருட்கள் கொண்டு (வெறும் 4 பாட்டில்களில் இருந்தவை) தயாரிக்கப்பட்டது.

இப்போது தயாரிக்கப்பட்டிருப்பது ஒரு சிறு நுண்ணுயிர்தான். ஆனால், இது இனி நமக்கு வேண்டும் உயிரை(தாவரமோ, விலங்கோ), நமக்கு வேண்டும் பண்புகளோடு ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரையும் சில பாட்டில் ரசாயனங்களையும் கொண்டு தயாரித்துக் கொள்ளும் சாத்தியத்தை உறுதி செய்திருக்கிறது.

அதாவது, கடவுளின் வேலையை மனிதன் செய்யமுடியும் என்பதற்கான ஆரம்ப அறிகுறி இது.

அப்படியானால், செயற்கையாக ஒரு மனிதனைத் தயாரித்து விட முடியுமா? இன்று முடியாது. ஒரு மனிதனை மட்டுமல்ல, ஒரு குருவியை, கன்றுக்குட்டியைக் கூட இன்று தயாரித்துவிட முடியாது. காரணம், மனிதர்கள் பலவித செல்களால் ஆனவர்கள். (மனித உடலில் 100 டிரில்லியன் செல்கள் இருக்கின்றன (அதாவது 10க்குப் பின் 14 பூஜ்யங்கள்). ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பலவிதமான டி.என்.ஏ. அமைப்புகள் கொண்டவர்கள். அவற்றில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எக்கச்சக்கமானவை. 

அதனால், இன்று செயற்கை மனிதனைத் தயாரிப்பது சிரமமானது. ஆனால், இன்று சிரமமானது எதுவும் நாளை சாத்தியமாகலாம். மனிதன் நிலவில் கால் வைக்க முடியும் என்பதை நம் தாத்தாக்களின் அப்பா நினைத்துப் பார்த்திருப்பாரா?

ஆனாலும், இந்தச் செயற்கை நுண்ணுயிரைத் தயாரிக்க முனைந்த கிரேய்க் வென்டர் மிகக் கவனமாகத்தான் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார். கிரேய்க் வென்டர் (ஹாமில்டன் ஸ்மித் என்ற இன்னொரு விஞ்ஞானியுடன் சேர்ந்து) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு (1995ல்) முதன் முதலாக வாழும் உயிரினம் ஒன்றின் டி.என்.ஏ. தொடரைக் கண்டுபிடித்தவர். 2003ல் ஒரு புது வைரஸை (செயற்கை வைரஸ் அல்ல) உருவாக்கியவர். ஆனாலும் முதலடியை மிகக் கவனமாகத்தான் எடுத்துவைத்தார்.

செயற்கை உயிரினம் ஒன்றை உருவாக்குவது என்று தீர்மானித்த அவர், அந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், அது ஒரு மிகச் சிறிய நுண்ணுயிராகத்தான் இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டார். அதற்கான ஒரு முன் மாதிரியாக மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம் என்ற பாக்டீரியாவை எடுத்துக் கொண்டார். அது, பிறப்புறுப்பின் பாதையில் வாழ்கிற ஒரு மிகச் சிறிய பாக்டீரியா. 485 ஜீன்கள் மட்டுமே கொண்டது.

சில ஜீன்களைக் கழித்துவிட்டு அதை இன்னும் எவ்வளவு சின்னதாக ஆக்க முடியும் என்று பார்த்தார் வென்டர். 100 ஜீன்கள்வரை நீக்க முடிந்தது. ஆனால், அதையும் ஒரே நேரத்தில் நீக்க முடியவில்லை. அதற்கு நிறைய காலம் பிடித்தது. ஏனெனில், ரொம்ப மெதுவாக வளரக்கூடிய உயிரினம் மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம்.

ஆனால், அதற்குள் அறிவியல் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. டி.என்.ஏ.. தயாரிக்கும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கான செலவும் குறைந்துகொண்டே வந்தது. அதனால், ஜீன்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியைக் கைவிட்டு நேரடியாக மை.ஜெனிடாலியத்தின் சாயலில் ஒரு செயற்கை உயிரினத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர் கிரேய்க் வென்டரும் அவரது குழுவினரும்.

கிரேய்க் குழுவினரைப் போன்று பலர் செயற்கை உயிரியல் சோதனைகளில் இறங்கி உள்ளனர். அநேகமாக அமெரிக்காவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்களில் பல முக்கியமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஹார்வேர்ட் மருத்துவக் கல்லூரியில் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

டி.என்.ஏ.க்களில் தகவல்கள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தகவல்களை எடுத்துச் சென்று ரிபோசம்ஸ் என்பவைகளிடம் எடுத்துச் செல்பவையாக ஆர்.என்.ஏ. என்ற இன்னொரு அணுக்கூட்டம் இருக்கிறது. இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி ஹார்வேர்ட்-ல் நடக்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி தகவல்களைக் கையாள்வது போல் செல்களை தங்களிடம் உள்ள மரபு சார்ந்த தகவல்களைக் கையாளச் செய்ய முடியுமா என்ற கோணத்தில் ஆராய்ச்சி நடக்கிறது.

செயற்கை உயிரியல் என்பது ஒரு தனித் துறையாக வளர்ச்சி அடைந்து வருவதைத்தான் இது காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக டி.என்.ஏ. தயாரிப்பிற்கான செலவு குறைந்து வருவதும், அதில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இது எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் போல உலகை ஆளப்போகிற ஒரு துறையாக இருக்கப்போகிறது என்று கோடிகாட்டுகிறது.

ஆனால், இதுவே பலரது கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதும் உண்மை. அறிவியலாளர்கள் நல்ல நோக்கத்தோடேயே இந்த ஆராய்ச்சிகளைச் செய்யட்டும். ஆனால், தவறுதலாக அல்லது ஒரு விபத்து போல் ஏதாவது நடந்து விட்டால்? ஜுராசிக் பார்க் சினிமாவில் வருவது போல் ஏதாவது பூதம் கிளம்பிவிட்டால்? இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மனிதனைச் சுரண்டி, காசு பார்க்கும் புதிய வியாபாரம் முளைத்து விட்டால் என்பதெல்லாம் அவர்களது கவலைக்குக் காரணம்.

இந்தக் கவலைகள் நல்ல எண்ணத்தோடும் சில ஆதாரங்களோடும் முளைக்கிற கவலைகள் என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால், மனித குல வரலாற்றைப் பார்க்கும்போது ஆங்காங்கே சில இடறல்களும் தவறுகளும் நடந்திருந்தாலும் அறிவியல் பெரும்பாலும் நன்மையே செய்து வந்திருக்கிறது. அறிவியலை நம்பாதவர்கள் வரலாற்றையாவது நம்பலாம், அதற்கும் மனம் இல்லையென்றால், கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

இப்போது அவரது வேலையில் கொஞ்சத்தை மனிதன் எடுத்துக் கொண்டு விட்டால், இது போன்ற பிரார்த்தனைகளுக்கு காது கொடுக்க, அவருக்கு கூடுதலாகச் சற்று நேரம் இருக்கும்.

***


நன்றி: மாலன் / புதிய தலைமுறை (10 ஜுன், 2010)
தட்டச்சி , வடிவம் அளித்த தாஜுக்கும் நன்றி!
Taj’s E-Mail : satajdeen@gmail.com